Saturday, January 26, 2019

கற்பனை ஊற்றுக்கண்ணின் அடைப்பு ---ச்சி



 
— முனைவர் ச.கண்மணி கணேசன்


அறியாப் பருவத்தில் பாட்டிகள் சூட்டிய  பட்டம் 
அறிந்தபின்னரோ அண்ணன்தம்பிகள் தட்டிய  மட்டம்
நாற்றாய் நடப்பட்டபின் நாயகரின் அரட்டல் 
நாற்காலி வீற்றிருக்கும் தலைமுறையின் மிரட்டல் 

                மாறி மிஞ்சுநரை எய்திவிட்டால்- அதுவரை

கொஞ்சிநின்ற பாலகரின் மீசைமுறுக்கும் உருட்டல் 
கிழடுகட்டை திட்டுஒன்றே வயோதிகம் வந்து கிட்டல்
இடைஞ்சல்பிறவிகள் இவரென்று முகம்திருப்பும் முட்டல் 
வாரிசாய் வந்துசேரும் வளைக்கரத்தார் சுட்டல்

வேராயிருந்து உயிர்ப்பித்த விழுதுகளை வேண்டாமெனும் கட்டம்
கோரப் பார்வைதான் சமூகத்தின் சட்டம் 
பொருந்தாத உறவுகளாய்ச் சதுரத்துக்குள் வட்டம்
திருந்தாத மனங்களுக்குச் சொல்வதென்ன திட்டம்! 

பிஞ்சுப் பருவமுதல் இவரென்றும் சினம்தாங்கித் தவிக்கிறாரே ஏன்?
பஞ்சுமனமென்றும் ஆறாமல் பற்றி எரிவதும் ஏன்?
விஞ்சும் அன்பிற்கென்றும் வேதனையே பிரதியாவது ஏன்?
தஞ்சமெனச் சென்றுஎன்றும் சுமைதாங்கி ஆனாரே ஏன்?

முட்களாய்த் தைக்கும் கேள்விக்குறி முனைகள் 
இதயச்சுவரில் ஏற்படுத்தும் இடைவிடாத ரணங்கள் 
ராஜாங்கம் நடத்தவந்த ராணியர் சோர்ந்துபோய்
தாஜாங்கம் செய்துசெய்தே தான்தேய்ந்தார் வாழ்க்கையிலே

மகிழ்ச்சிப் பால்வீதியில் பந்தங்களுடன் பவனிவரத் துடித்தவர்
நிகழ்ச்சி மாறிவிட்டதில் - விழிகளைமட்டும் விண்மீன்களில் சிக்கவிட்டு 
உறவுக்கும்பலுக்கு இடையில் ஒன்றியும் தனியாகவே தவிக்கிறார்
பிரச்சினைச் சுழிகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட படகானார்

               விடிவுக்கரை காணத் தீர்ப்பொன்று தீட்டுகிறார்!!



தொடர்பு: முனைவர் ச.கண்மணி கணேசன் (kanmanitamilskc@gmail.com)


              

No comments:

Post a Comment