Tuesday, July 10, 2018

உலகத் தமிழர் மாநாடு - கம்போடியா

முனைவர்.க.சுபாஷிணி





முதலாம் உலகத் தமிழர் மாநாடு கம்போடியா நாட்டில் நடந்து வெற்றித் திருவிழாவாக அமைந்ததில் உலகத் தமிழர் பெருமை கொள்ளத்தான் வேண்டும். ஒரு அரசால், ஒரு அமைப்பால், ஒரு சங்கத்தால், ஒரு கல்விக்கழகத்தால் மாநாடுகள் கூட்டப்படுவதுதான் இயல்பு. ஆனால் இதற்கு மாற்றாக, வாட்சப் எனும் கைத்தொலைப்பேசி கணினி தொழில்நுட்பத்தின் துணையுடன், ஐவர் இணைந்து, தமிழ் உலகில் வணிகர்களாகவும், சமூக சேவையாளர்களாகவும், கல்வியாளர்களாகவும், அரசியல்வாதிகளாகவும், ஆய்வாளர்களாகவும் செயல்பட்டு வருவோரை இணைத்து இந்த மாநாட்டினைச் செய்து முடித்திருக்கின்றார்கள். இந்த மாநாட்டுக்கான அடிப்படை கருத்தினை உருவாக்கி இயக்கிய ஐவர் - ஒரிசா பாலு, திரு.சீனிவாசராவ், திரு.ஞானம், திருமதி தாமரை சீனிவாசராவ், மருத்துவர் க.தணிகாசலம் மற்றும் அவர்களோடு கம்போடிய தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு.ராமசாமி ஆகியோர். இந்த மாபெரும் கருத்துக்கு உயிர்கொடுத்துச் செயல்படுத்திய இந்த ஐவரைப் பாராட்டி வாழ்த்துவது உலகத் தமிழரின் கடமையாகும்.

இந்த மாநாடு குறிப்பாக இரண்டு பெரும் துறைகளில் தன் கவனத்தைச் செலுத்தும் வகையில் அமைந்திருந்தது. மே மாதம் 19ம் தேதி அமர்வுகளும் மே மாதம் 20ம் தேதி அமர்வுகளுமாக இரண்டு நாட்கள் உரை நிகழ்ச்சிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

கம்போடிய அரசின் முழு ஒத்துழைப்பு இந்த மாநாட்டிற்கு இருந்தது என்பது பெருமைப்பட வைக்கின்றது. நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் கம்போடிய நாட்டின் செயலாளர் மாண்புமிகு சாவ் சிவோன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியைக் குத்து விளக்கேற்றித் தொடங்கி வைத்தார். அவருடன் கம்போடிய அரசின் கல்வி அமைச்சின் துணைச்செயலாளர் மாண்புமிகு பாவ் சோம்செரெ, கம்போடிய அரசின் கனிமவளம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்தின் முதன்மை இயக்குநர் மாண்புமிகு விக்டர் ஜோனா, கம்போடிய அரசின் சியாம் ரீப் மாவட்ட துணை ஆளுநர் மாண்புமிகு தியா செய்ஹா ஆகியோரும் கலந்து நிகழ்ச்சிக்குப் பெருமை சேர்த்தனர்.

தமிழ்த்திரையுலகின் பிரபலங்களான திரு.சரத்குமார் இந்த நிகழ்வில் ஒரு தமிழ் உணர்வாளராகக் கலந்து சிறப்பித்தார். அவருடன் தமிழ்ச்சினிமா இயக்குநர் திரு.தங்கர்பச்சான், தெருக்கூத்து கலைஞரும் திரைப்பட இயக்குநருமாகிய சங்ககிரி ராஜ்குமார் மற்றும் அவரது தெருக்கூத்துக் கலைஞர்களும் கலந்து நிகழ்ச்சிக்கு மேலும் சுவை கூட்டினர்.

இன்றைய கணக்கெடுப்பின் படி உலக நாடுகளின் எண்ணிக்கை 195 ஆகும். இதில் ஏறக்குறைய 160க்கும் மேற்பட்ட நாடுகளில் இன்று தமிழர் வாழ்கின்றனர் என்பதற்கான தரவுகள் நமக்குக் கிடைத்த வண்ணம் இருக்கின்றன. தமிழர்கள் காலம் காலமாகக் கடலில் தூரப் பயணம் மேற்கொண்டு பல புதிய நாடுகளைக் கண்டு அங்கு வாழ்ந்தும் பெயர்ந்தும் தன் சுவடுகளைப் பதிந்திருக்கின்றனர். கடலைக் கண்டு அஞ்சும் பண்பு தமிழர்களுக்கில்லை. எல்லைகளற்ற நிலப்பரப்பிற்குச் சொந்தக்காரர்களாகத் தம்மை நிலைப்படுத்திக் கொண்டவர்கள் தமிழர்கள்.

முன்னர் தமிழர் வாழ்கின்ற நாடுகள் என்றால் அவை இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கை பர்மா என்று மட்டுமே நம் சிந்தனை செல்லும். இன்றோ நிலமை மாறிவிட்டது. ஆசிய கண்டத்தைத் தவிர்த்து லட்சக்கணக்கான தமிழர்கள் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, மற்றும் அமெரிக்க கண்டங்களில் இன்று வாழ்கின்றனர். தைவான், வியட்நாம், சீனா, கம்போடியா, மொரிஷியஸ், அந்தமான், நிக்கோபார் தீவுகள் மட்டுமல்ல; வரைபடத்தில் தேடினால் மட்டுமே கிடைக்கக்கூடிய கூடலப், மார்ட்டினிக், பாப்புவா நியூ கினி போன்ற தீவுக் கூட்டங்களிலும் தமிழர் வாழ்கின்றனர் என்பதை இந்த மாநாடு நிரூபித்தது. பாப்புவா நியூ கினி நாட்டின் ஆளுநரின் துணைவியார் மாண்புமிகு சுபா அபர்ணாவின் வருகை இந்த மாநாட்டிற்குப் புத்துணர்ச்சி கொடுப்பதாகவே அமைந்தது.

இந்த மாநாட்டில் தமிழ் மொழி, வரலாறு, பண்பாடு, சமூகவியல் தொடர்புகளான ஆய்வுகள் பற்றிய உரைகள் முதல் நாள் நிகழ்ந்தன. இரண்டாம் நாள் நிகழ்வு முற்றும் முழுவதுமாக தமிழர் வணிகம் பற்றியதாக அமைந்தது. இது தமிழ் உலகிற்கு ஒரு புதிய முயற்சி என்றே கூறலாம். வெவ்வேறு தளங்களில் இயங்கும் வர்த்தகத்துறையினர், அதிலும் தமிழர்கள், தங்கள் துறை சார்ந்த செயல்பாடுகளை விளக்கி எவ்வாறு ஏனைய தமிழர்களும் இத்தகைய வணிக முயற்சிகளில் பங்கெடுத்துக் கொள்ளலாம் என புதிய செய்திகளை வழங்கிச் சென்றனர். எல்லோருக்குமே தம் கருத்துக்களைப் பேசுவதற்குக் கொடுக்கப்பட்ட நேரம் மிகக் குறைவாக இருந்தது என்றாலும் அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் தங்கள் கருத்துக்களைச் சொல்லி உலகளாவிய தமிழர்களின் செயல்பாடுகளைப் பதிந்த ஒரு சிறப்பு மிக்க நிகழ்வாக இந்த மாநாடு அமைந்தது.

இந்த மாநாட்டில் தமிழ் மரபு அறக்கட்டளை திரு.ஒரிசா பாலசுப்பிரமணி அவர்களை “தமிழ்க்கடலோடி” என்ற விருதளித்து பொன்னாடை போர்த்திச் சிறப்பித்து வாழ்த்தினோம். தனது இடைவிடாத முயற்சிகளினாலும், தொடர்ந்த பயணங்களினாலும் உலகின் பல மூலைகளில் வாழும் தமிழ் மக்களின் திறனைக் கண்டறிவது, அவர்களை வாட்சப் குழுமத்தின் வழி ஒன்றிணைப்பது எனச் செயல்பட்டு வருபவர் இவர். கடல் வழிப் பயணத்தினூடாக பண்டைய தமிழர் உலகின் பல பகுதிகளுக்குச் சென்று திரைமீளர்களாகத் திகழ்ந்தனர் என்ற செய்தியை தொடர்ந்து கூறி இளம் சமுதாயத்தினரிடையே புத்துணர்ச்சியும் தன்னம்பிக்கையும் ஊட்டி வரும் சிறந்த பண்பாளர் திரு.ஒரிசா பாலுவை இந்த நிகழ்வில் கவுரவிப்பதில் தமிழ் மரபு அறக்கட்டளை பெருமை கொண்டோம்.

தனது நெடுநாளைய அரசுப்பணி அனுபவம், ஆழ்ந்த தமிழ்ப்புலமை, சிறந்த வர்த்தக மேளாண்மைத்துறை அனுபவங்களின் வெளிப்பாடாக இருநாட்கள் மாநாட்டிலும் தனது கருத்துக்களால் சிந்தனைக்கு விருந்தளித்தவர் திரு.பாலச்சந்தர் ஐஏஎஸ் அவர்கள். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்காகப் பல வழிகளில் சேயையாற்றிய நற்பண்பாளர். திருக்குறள் உலகப்பொதுமறை என்ற கருத்தை தனது ஆழ்ந்த தமிழறிவினாலும் சமூக நலச்சிந்தனையினாலும் தமிழ் மக்கள் அறிந்து மேம்படத் தொடர்ந்து கூறிவரும் இவரது பங்கெடுப்பு இந்த மாநாட்டிற்கு வளத்தைச் சேர்த்தது.

தமிழ் மரபு அறக்கட்டளையின் உலகம் தழுவிய தமிழ் ஓலைச்சுவடி, கல்வெட்டு மற்றும் பழம் ஆவணப் பதிவு முயற்சிகள் பற்றியதாக இந்த மாநாட்டில் எனது உரை அமைந்திருந்தது. தமிழகம் மட்டுமன்றி, மலேசியா, ஐரோப்பாவின் குறிப்பிட்ட சில நாடுகளில் தமிழ் மரபு அறக்கட்டளை இதுகாறும் நிகழ்த்தியுள்ள ஆவணப்பாதுகாப்பு மற்றும் மின்னாக்க முயற்சிகள் பற்றி எனது உரையில் குறிப்பிட்டேன். இன்னும் ஏராளமான ஓலைச்சுவடிகள் தனியார் வசமும், ஆவணப்பாதுகாப்பகங்களிலும் உள்ளமையை விவரித்து இவை வாசிக்கப்பட்டு இவற்றில் உள்ள செய்திகள் தமிழ் மக்கள் பார்வைக்குக் கொண்டு வரப்படவேண்டியதன் அவசியத்தையும் எனது உரையில் விவரித்தேன்.

இந்த மாநாட்டில் சிறப்பு அம்சமாகத் தொடக்க விழாவில் நூல்கள் வெளியிடப்பட்டன. முனைவர் சுபாஷிணியின் ”உ.வே.சாவுடன் ஓர் உலா”, பேரா. நா. கண்ணனின் ”கொரியத் தமிழ் தொடர்புகள்”, நாவலாசிரியை மாயாவின் ”கடாரம்”, எச்.எச்.விக்கிரம்சிங்கேவின் ”பத்திரிக்கையாளர் எஸ்.எம்.கார்மேகம், வாழ்வும் பணியும்”, முனைவர். மலர்விழி மங்கையின் ”உதயணன் காவியம்", தனுசு இராமச்சந்திரனின் ”அருளாளர்கள் அருளிய சிந்தனைகள்” ஆகிய நூல்கள் இந்த வெளியீட்டில் இடம் பெற்றன.

தமிழர் கூத்துக்கலை நலிந்து வரும் ஒரு கலையாகி விட்டது. இதற்குப் புத்துயிர் கொடுக்கும் வகையில் இந்த மாநாட்டில் சங்ககிரி ராஜ்குமாரின் “நந்திக்கலம்பகம்” தெருக்கூத்து அமைந்திருந்தது. தமிழகத்திற்கும் கம்போடியாவிற்குமான பல்லவர் தொடர்பை மிகத் திறமையாக வெளிப்படுத்தும் வகையில் இந்த 90 நிமிட நாடகம் வந்திருந்த எல்லோரையும் கவர்ந்திழுத்து ரசிக்க வைத்தது.

கம்போடியாவில் நடந்து முடிந்த இந்த உலகத் தமிழர் மாநாடு உலகம் முழுமைக்கும் வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கச் செய்த அரும் முயற்சி என்பதில் ஐயமில்லை. இந்தக் கூட்டமைப்பு தொடர்ந்து சீரிய முறையில் உலத் தமிழர்களை ஒன்றிணைத்து வர்த்தகத்திலும், தமிழர் வாழ்வியல் வரலாறு தொடர்பான ஆய்வுகளிலும், உலகளாவிய அரசியல் தளத்திலும் தமிழர் வெற்றிக் கொடி நாட்டப் பாதை அமைக்கும் என நான் திண்ணமாக நம்புகின்றேன்.

வாழ்க தமிழ். ஓங்குக தமிழர் ஒற்றுமை!

No comments:

Post a Comment