Sunday, September 10, 2017

"பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி"

 -- ருத்ரா இ பரமசிவன்.


 


 "பாலை பாடிய பெருங்கடுங்கோ" அகநானுற்றில் "பாலை"பற்றிய காட்சிகளை மிக நுண்ணிய அழகுடன் பாடியிருக்கிறார். ஒரு பாடலில் (பாடல்  எண்  5) "பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி," என்று கொத்துக்கொத்தாய்  கண்ணாடி (கோலிக்குண்டு)போலக்  காய்த்திருக்கும் அந்த அழகை அப்படியே படம்பிடித்திருக்கிறார்.


நான் கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்றுக்குக் குளிக்கச்செல்லுகையில் வழியில் உள்ள திருவாவடுதுறை "ஆதீன"த்தோப்பில் உள்ள நெல்லி மரத்தின் நெல்லிக்காய் கொத்துக்களைக்கண்டு கிறங்கிப்போய் நின்றிருக்கிறேன். "கோலி" விளையாடும் பருவம் அது. அந்த ஒவ்வொரு நெல்லிக்காயும் பளிங்கு கோலிக்காய் போலத்தோன்றும். கடைகளில் கண்ணாடி சீசாவில் அழகு அழகு வண்ணங்களில் பளிங்குக்கோலிக்குண்டுகள் விற்பார்கள். அதில்  ஆறேழு குண்டுகளை வாங்கி என் கால் சட்டைப்பைக்குள் பதுக்கிய பின் தான் நிம்மதி பெறுவேன்.


முளிந்த ஓமை முதையல் அம் காட்டுப்    
பளிங்கத்தன்ன பல் காய் நெல்லி    
மோட்டு இரும் பாறை ஈட்டு வட்டு ஏய்ப்ப    
உதிர்வன படூஉம் ....................

[அகநானுறு 5, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை, தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது]

"அந்த அழகிய பழங்காட்டின் பட்டுப்போன ஓமை மரங்களிடையே நெல்லி மரத்தின்  பளிங்கு போன்ற நெல்லிக்காய் கொத்துகள் அங்குள்ள உயர்ந்த பாறையில் சிறுவர்கள் விளையாடும் கழற்காய்கள் போல உதிர்ந்து கிடக்கும்" என்பதே அவ்வடிகளின் பொருள்.

ஆம் இதை  என்னைப்போன்ற சிறுவர்களுக்காகவே பாடியிருக்கிறார்.

அன்று அந்த அகநானூற்றுப்பாடலில் "பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி," வரிகளைப்பார்த்ததும் "பாலைபாடிய பெருங்கடுங்கோ" எனக்காகவே அந்த வரியை மின்னலாய் பாய்ச்சியதாய் உணர்ந்தேன். அப்போது உடனே "பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி," என்ற தலைப்பில் எழுதிய சங்கநடைச்செய்யுட்  கவிதையே இது. இதில் தலைவிக்கு அந்த பளிங்கத்துக் காய்கள் ஒவ்வொன்றிலும் தலைவனின் அன்புமுகம்  சுடர் விடுவதாகத் தோன்றுகிறது என்று தோழி சொல்லுகிறாள்.



பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி

-- ருத்ரா இ பரமசிவன்.

     வேழம் பிழிதர புடை பெயர்ந்து
     நீள் குடுமிப்பெருங்கல் சிவணிய வீழ்ந்து
     புல்லிய பாசிலை இன்  நீர் தடவ
     சுரும்பும் மாந்தி மடி கொண்டாங்கு
     அடுத்த வேழம் தூம்புக்கை நீட்டும்
     சிறு கண் வியப்ப அதிர வியர்க்கும்
     கான் மலி இருளிடை அவன் முகம் ஒளித்த
     "பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி"
     ஊழ் ஊழ் உகுக்கும் வால் நுதல் மழைக்கும்!
     உன்னுள் ஒலிக்கும் மணி நா நடுங்கும்
     அவன் அணித்தேர் ஆண்டு அசைஇ  வருமென
     மென் பூஞ்சேக்கையும் புண் ஆகியதோ
     புரள் தரு புரள்  தரு நின் பெயர்ச் செயலால்.
     நாகம் தந்த பாலிழை கலிங்கமும்
     சுடு நிலை தாளா வெம்மையூட்டிய
     நோவு நுடங்கி அறைபடு அறையில்
     ஆயிரங்கண்  காட்டிய கிழி மை  வானென
     ஆற்றாது கிடந்தாள் அளியள் ஆங்கே.




பொழிப்புரை:

     வேழம் பிழிதர புடை பெயர்ந்து
     நீள் குடுமிப்பெருங்கல் சிவணிய வீழ்ந்து
     புல்லிய பாசிலை இன்  நீர் தடவ
     சுரும்பும் மாந்தி மடி கொண்டாங்கு
     அடுத்த வேழம் தூம்புக்கை நீட்டும்
     சிறு கண் வியப்ப அதிர வியர்க்கும்


தலைவன் பொருள்தேடி செல்லும் காட்டுவழியில் குத்துக் குத்தாய் முளைத்திருக்கும் கரும்புகள் அருகில் உள்ள ஒரு நீண்ட திரண்ட பெருங்கல் ஒன்று இடம் பெயர்ந்து அவற்றின் மேல் விழுந்து பொருந்தி நசுக்கியதால் அருகில் உள்ள இலை தழைகளில் எல்லாம் இனிய நீர் இழைந்தோடியது. அதை வண்டுகள் அருந்தி மயங்கின. அருகில் வந்த ஒரு யானை தன் தும்பிக்கையை நீட்டிச் சுவைக்க முற்பட்டது. அந்த அடர்ந்த இருட்டு சூழ்ந்த காட்டில் அது தன் சிறுகண் கொண்டு வியந்து நோக்கி விதிர் விதிர்த்தது.


     கான் மலி இருளிடை அவன் முகம் ஒளித்த
     "பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி"
     ஊழ் ஊழ் உகுக்கும் வால் நுதல் மழைக்கும்!


பொருள் தேடிச்செல்லும் தலைவனைக் கற்பனையில் இக்காட்சிகளிடையே காணும் தலைவி அங்கே உள்ள ஒரு நெல்லிமரத்துக்கிளையில் பளிங்கு உருண்டைகள் போல் தோன்றும் அந்தக் கொத்து கொத்தான நெல்லிக்காய் ஒவ்வொன்றிலும் தலைவனின் சுடர் பூத்த முகத்தைக்கண்டாள். அவளது நெற்றி முத்து முத்தாய் வியர்வைத்துளிகளை மழைபோல ஒவ்வொரு கணம் தோறும் உதிர்த்துப்பொழியும்.


தோழி இப்படிச் சொல்லிக்கொண்டே போகிறாள்.  மேலும் தலைவியிடம் கேட்கிறாள்.

     உன்னுள் ஒலிக்கும் மணி நா நடுங்கும்
     அவன் அணித்தேர் ஆண்டு அசைஇ  வருமென
     மென் பூஞ்சேக்கையும் புண் ஆகியதோ

 
"உன் உள்ளத்துள் உன் தலைவன் திரும்பி வருவது கேட்கிறதோ? தேரின் மணியின் நாவொலி நடுங்க இதோ வந்து விட்டான் என்று காதல் நோயால் நீ புரண்டு புரண்டு படுத்து மெல்லிய பூங்கட்டிலும் புண்ணானதோ?"


மேலும் அவள் நிலை கண்டு துயரத்துடன் கூறுகிறாள்.

     புரள் தரு புரள்  தரு நின் பெயர்ச் செயலால்.
     நாகம் தந்த பாலிழை கலிங்கமும்
     சுடு நிலை தாளா வெம்மையூட்டிய
     நோவு நுடங்கி அறைபடு அறையில்
     ஆயிரங்கண்  காட்டிய கிழி மை  வானென
     ஆற்றாது கிடந்தாள் அளியள் ஆங்கே.


"கப்பலில் தருவிக்கப்பட்ட பால்போன்ற  அவள் மெல்லிழைப்பட்டாடையும்  காதல் வெப்பம் தாங்காது துவளுகின்றதோ? அத்துணி பாறையில் அறைந்து துவைக்கப்படும்போது கந்தல் கந்தலாய் எப்படி ஆயிரம் கண் கொண்டு கிழிந்த கரும் வானத்தைப்போலக் கிடக்குமோ அது போல‌அவள் நைந்து கிடந்தாள்" 


படங்கள்: இணையத்திலிருந்து
______________________________________________________
 

கவிஞர் ருத்ரா இ.பரமசிவன்
ruthraasivan@gmail.com
______________________________________________________

No comments:

Post a Comment