Wednesday, August 16, 2017

கோர(க்)ப்பூர்

-- ருத்ரா இ பரமசிவன்


 

இது என்ன கோரம்?
சில லட்சங்கள் பாக்கி
என்பதற்கா
இந்த மனிதப்பிஞ்சுகளின்
குரல் வளைகள்
திருகப்படவேண்டும்?

மார்க்ஸ் சொன்னார்
லாபம் ..லாபத்திற்கு மேல் லாபம்
(சூப்பர் ப்ராஃபிட்) தான்
இந்த அசுர முதலாளித்துவத்தின்
ரத்தம்.
அதற்கு
மனித  ரத்தம் குடிப்பதே
தாராளமய பொருளாதாரம்.
மனிதர்கள் என்ன‌
சமுதாயங்கள் என்ன‌
எல்லாவற்றையும்
உறிஞ்சிவிடும் இந்த மிருகம்.
உலகத்து நகரங்களின்
பளபளப்பான கட்டிடங்கள்
கூட‌
அழகிய படமெடுத்த‌
பிரம்மாண்டமான
இந்த நாகப்பாம்புகள் தான்.

முதலாளித்துவம்
எவ்வளவுக்கு எவ்வளவு
அழகாயிருக்கிறதோ
அவ்வளவுக்கு அவ்வளவு அது
மானிட ஜனநாயகத்தின் நஞ்சு.
மனிதர்களே
உங்கள் மதங்கள் எல்லாம்
இந்த நச்சுப்பைகளைத்தான்
கர்ப்பப்பைக்குள் வைத்திருக்கின்றன.
காவி மதங்களும்
அதில் தள்ளுபடியில்லை.

இந்தியாவின் பெரிய மாநிலத்தில்
நிகழ்ந்த
எவ்வளவு பெரிய கேவலம் இது?
கொத்து கொத்தாய்
ஏழு எட்டு பத்து என்று எழுபதுக்கும் மேல்
பிஞ்சு உயிர்கள் பலியாகினவே!
இந்த எழுபத்திஒண்ணாவது
சுதந்திர தினத்தைக்கொண்டாட‌
இப்படி ஒரு குரூரமான‌
நிகழ்வு தான் நடக்க வேண்டுமா?
(இப்போது  நூற்றுக்கும் மேல்  பலி )
தினந்தோறும்
எமனின் பாசக்கயிறு
அந்த ஆக்சிஜன் சிலிண்டர்களின்
கழுத்துக்களிலா வீசப்படவேண்டும்?
அந்த டாக்டர் கஃபீல் அகமது
தனி முயற்சி எடுத்து
எத்தனை உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார்!
காழ்ப்புணர்ச்சியில்
அவருக்கும் கூட எத்தனை தொந்தரவுகள்?
அவர் முன்
உங்கள் பாரத ரத்னாக்கள் எல்லாம்
வெறும் கண்ணாடிக்கற்கள்.

மாய பிம்பம் பார்த்து
ஓட்டுகளை
மெட்ரோ நகரத்து "கம்போஸ்ட் குப்பை" போல‌
குவிக்கும்
இந்திய குடிமகன்களே!
மத சாராயத்தைக் குடித்து
நீங்கள் மதி மயங்கியது போதும்.

______________________________________________________
 

கவிஞர் ருத்ரா இ.பரமசிவன்
ruthraasivan@gmail.com
______________________________________________________

No comments:

Post a Comment