Wednesday, June 14, 2017

சிறீபெரும்புதூர் அருகே அமரம்பேட்டில் இருக்கும் வழிப்போக்கர் மண்டபக் கல்வெட்டு

-- யுவராஜ் அமிர்தபாண்டியன்





காஞ்சிபுரம் மாவட்டம் சிறீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பேட்டையில் அமரம்பேடு என்ற ஊருக்கருகில் சாலையோரத்தில் வழிப்போக்கர்கள் தங்குவதற்காகக் கட்டப்பட்ட பழங்காலக் கற்றளி மண்டபம் காணப்படுகிறது. இடிந்து சிதைந்த நிலையில் கொடுங்கை, சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படும் இக்கட்டுமானத்தில்  பிற்கால நாயக்கர்கள்  காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று உள்ளது.  இதனிலிருந்து தெரிவது பழங்கால சாத்து, வணிகப்பாதைகள், சிறுபாதைகள் மற்றும் கோயில்களை இணைக்கும் பாதைகளைக் கொண்டே நவீன சாலைகளும் கட்டமைக்கப்பட்டுள்ளன என்பதே...!



கல்வெட்டின் பாடம்:
1    சாலிவாகன
2    ன் பிறந்த ௲
3   ௬ ௱ ௪ ௰ ௩ ௵
4    த்தைக்கு செ
5    ல்லும் பலவ
6    வருஷம் அர்
7    ப்பசி மாசம்
8   ௨ ௰ ௯ ௳ சோ
9    மவாரம் யிப்
10   படி கொத்த
11   சுப தினத்தில்
12   சவள வேளா
13   ளரில் அமரம்
14   பேட்டு மூறத்திய
15   ப்ப முதலியார்
17   குமாரன் நயினி
18   யப்ப முதலியார் அ
19   வர் குமாரன்
20   ராசப்ப முதலியார் செ
21   ய்வித்த தற்மம்
22   மண்டபம் ௳

 சாலிவாகன  வருஷம் 1643 (௲ ௬ ௱ ௪ ௰ ௩ ௵) என்பது ஆங்கில ஆண்டு  1721. இவ்விரு ஆண்டுகளும்  "பிலவ" என்னும் தமிழ் ஆண்டோடு பொருந்துகிறது. 

ஐப்பசி = அர்ப்பசி (என எழுதப்பட்டுள்ளது). ஐப்பசி மாதம் 29 ஆம் தேதி திங்கட்கிழமை  (௨ ௰ ௯ ௳ சோமவாரம் ), என்பது  ஆங்கில ஆண்டின்  பொது ஆண்டு  1721 - நவம்பர் - 10-ஆம் நாள்.

சவுளி விற்கும் வேளாளர் எடுத்த மண்டபம். சவளி (> ஜவுளி) தமிழ்ச்சொல் எனக் காட்டும் அரிய கல்வெட்டு. மூர்த்தியப்பன் என்ற பெயர் மூறத்தியப்ப என எழுதப்பட்டுள்ளது, ரகரம் றகரமாக எழுதுதல் உண்டு. புள்ளி (விராமம்) மெய்களின் மேல் உள்ள கல்வெட்டு.

கல்வெட்டு தரும் செய்தி:  சாலிவாகன சகாப்தம் 1643 பிலவ ஆண்டு ஐப்பசி 29 ஆம் நாள் திங்கட்கிழமை என்னும் சுபதினத்தில் சவள வேளாளர் குல அமரம்பேட்டு மூர்த்தியப்ப முதலியாரின் குமாரன் நயினியப்ப முதலியார் என்பவரது குமாரன் ராசப்ப முதலியார் செய்வித்த தர்ம மண்டபம்.

கல்வெட்டுப் படங்கள் கொடுத்தவர் சென்னை சேவாஸ் திரு.பாண்டியன், தகவல் தந்தவர்  திரு. யுவராஜ் அமிர்தபாண்டியன். கல்வெட்டு விளக்கங்கள் அளித்தவர்கள் திருவாளர்கள் து. சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை;  மயிலை நூ.த.லோக சுந்தரம்; முனைவர் கணேசன் ஹூஸ்டன்.






---




No comments:

Post a Comment