Thursday, November 17, 2016

பட்டம் பற... பற... காத்தாடி வெங்கடேசன்

--கோ.செங்குட்டுவன்




பட்டம் பறக்க விடுவது என்பது சிறுவயதில் நமக்குக் கிடைத்தச் சுகமான அனுபவம். இந்த அனுபவத்துக்காக நாம் பட்டபாடு... அப்பப்பா சொல்லி மாளாது. நம் ஒவ்வொருவருக்குள்ளும் அந்த அனுபவங்கள் ஒளிந்திருக்கின்றன. அவையெல்லாம் நம் குழந்தைகளுக்கு இன்றும் கிடைக்கின்றதா? முழுமையாக என்று இல்லாவிட்டாலும்கூட, இன்றும் குழந்தைகள் பட்டம்விட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

திருச்சியிலோ அல்லது கோவையிலோ வானில் பட்டங்கள் பறந்து கொண்டிருந்தால், அவை விழுப்புரம் பட்டங்களாகத்தான் இருக்கும் என மகிழ்ச்சியுடன் சொல்கிறார் வெங்கடேசன் (வயது 48). விழுப்புரம் வடக்கு ஐயனார் குள வீதியில் 40 ஆண்டுகளாகப் பட்டம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருபவர் இவர். பட்டம் என்று சொல்கிறோமே இந்தக் காத்தாடிக்குப் பேர் போனது கொல்கத்தா தானாம். அங்கு மக்களின் மகிழ்ச்சி பட்டங்களாகப் பறந்து கொண்டிருக்கும். இதற்காக, கொல்கத்தாவுக்குச் சென்று சிலநாட்கள் தங்கியிருந்து தொழில்முறை குறித்து வெங்கடேசன் கற்று வந்திருக்கிறார். 





பட்டம் செய்வதற்கு முக்கியத் தேவையான அந்தக் குச்சி(பேம்)கூட கொல்கத்தாவிலிருந்து விழுப்புரத்துக்கு வரவழைக்கப் படுகிறது. பட்டம் செய்யும் தொழிலானது தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக விழுப்புரத்தில்தான் நடக்கிறது என்று சொல்லும் வெங்கடேசன், ‘இப்போதும்கூட திருச்சிக்கு அனுப்புவதற்காகப் பட்டங்களை செய்து கொண்டிருக்கிறேன்’ என்கிறார். இப்படியாகத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புதுவையில் இருந்தும் இவருக்கு ‘ஆர்டர்’கள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்தத் தொழிலில் வெங்கடேசனின் மிகப்பெரிய மூலதனமே அவரது உழைப்புதான். காலை ஏழு மணிக்கே தனதுப் பணியைத் தொடங்கிவிடுகிறார். இரவு வரை இது தொடர்கிறது.

‘கொஞ்சம் சோர்ந்துவிட்டால் அவ்வளவுதான்’ என்று சிரித்துக் கொண்டே சொல்லும் போது, அவரது உதடுகள்தான் அசைகின்றனவே தவிர, அவரது கைகளும் கண்களும் வேலையின் மீதே கவனமாக இருக்கின்றன. ‘இப்படி சோம்பல் இல்லாமல் உழைத்தால், எப்படியும் மாதம் ஒன்றிற்கு 3ஆயிரம் பட்டங்கள் வரை செய்து விடலாம்’ என்கிறார் வெங்கடேசன்.

‘சரி. குழந்தைகளின் அன்றாட நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் வந்துவிட்டச் சூழலில், இந்தத் தொழிலில் பாதிப்பு இல்லையா?’ கேட்டேன்.

‘இல்லை’ என்று சொல்லும் அவர், ‘தமிழ்நாட்டின் எங்கோ ஒரு மூலையில் பட்டங்கள் பறந்து கொண்டுதான் இருக்கிறது’ என்கிறார். அதே நேரம் பட்டம் தொழில் முன்பு போல இல்லை எனும் உண்மையையும் அவர் ஒத்துக்கொள்கிறார். இதற்கு வெங்கடேசன் சொல்லும் காரணம், ‘மாஞ்சா நூலுக்கு விதிக்கப்பட்டத் தடைதான்’.

சென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாஞ்சா நூல் ஏற்படுத்திய பாதிப்புகள், இந்தத் தொழிலையும் கடுமையாகப் பாதித்துள்ளது. அப்போதெல்லாம் பட்டம் விடுவது, போட்டிக்கான ஒரு விளையாட்டாக, ஒருவரதுப் பட்டத்தை இன்னொருவர் வானத்திலேயே வெட்டுவது, வீரவிளையாட்டாக இருந்தது. இதற்கு முக்கியத் தேவை, மாஞ்சா ஏற்றிய நூல். இப்போது மாஞ்சா நூல் பயன்படுத்தப்படுவதில்லை. அப்படிப் பயன்படுத்தினால் காவல்துறை நடவடிக்கைக்கு ஆளாக வேண்டும்.

இதனால், வெங்கடேசன் பயன்படுத்தி வந்த, மாஞ்சா போடும் 2 இயந்திரங்கள் ஓரங்கட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. பட்டம் பறக்க விடுவது, இப்போது பொழுது போக்குக்கான நிகழ்ச்சியாக மாறிவிட்டது. ஆனாலும், பட்டங்கள் பறந்து கொண்டு தான். இந்தத் தொழிலின் எதிர்காலம்?

‘உடலில் தெம்பு இருக்கிறவரை இதில் என் உழைப்பு இருந்து கொண்டிருக்கும்’ என்று உறுதியுடன் சொல்லும் வெங்கடேசன், ‘இதைக் கற்றுக்கொள்ள முன்வருபவர்களுக்குச் சொல்லித் தரவும் தயாராக இருக்கிறேன்’ என்கிறார்.

நீண்ட நேரம் ஆகிவிட்டது. அவரதுப் பணியில் மேலும் குறுக்கிட விரும்பவில்லை. அவரிடமிருந்து விடை பெற்றேன்.




நீங்களும் ‘காத்தாடி’ வெங்கடேசனுடன் பேச விரும்பினால், 9677559979 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்..! 



_____________________________________________________
 

கோ.செங்குட்டுவன்
ko.senguttuvan@gmail.com
_____________________________________________________

1 comment: