Sunday, November 13, 2016

காகித பாரதம்

 - ருத்ரா இ பரமசிவன்



காகித பணங்களா?
காகித பிணங்களா?   
குப்பைக்காடு ஆனது
நம் பொருளாதாரம்.
கண்டெய்னரில்
கிடந்து நாறும்
ஊழல் இங்கே
மறந்து போனது!
சொத்து குவித்தவர்கள்
ஆற்றுமணல் தின்றவர்கள்
மலைகளை உடைத்து
டிஃபன் சாப்பிட்டவர்கள்
பொய்மைப்பலூனில்
ஊதி ஊதி
"மெய்மை எஸ்டேட்"டில்
கரன்சி குவித்தவர்கள்
எத்தனை எத்தனை
இங்கே நிழல் அரக்கர்கள்!
நம் மூவர்ண வெளிச்சம் எல்லாம்
இருட்டுத் தார் பூசி
திருட்டுச் சொத்துகள்
திசை தோறும் திசை தோறும்
பதுக்கி நின்றவர்
பாரத புத்திரர் வேடம் புனைந்தனர்!
அன்னியப் பகைவர்
அச்சடித்த பணங்கள்
அணுகுண்டுகளாய் நம்மை
சிதைத்து விட்டனவே!
கறுப்புப்பணப்பெரும்பூதம்
கஜானாவுக்குள்
கர்ப்பம் தரித்ததோ!
தாராளமய உலகப்பொருளாதாரம்
சுவாசம் செய்த
சூறாவளிகளே நம்மைச்சூழ்ந்தது.
பணம்!பணம்! பணம்!
எங்கும் பணம் எதிலும் பணம் என‌
கொள்ளை ஆசையின்
கோரப்பற்கள் குருதி குடித்தன.
தேர்தல் எனும் பருவக்காற்று
வீசிய போதெல்லாம்
வீதியெலாம் வீடுகள் எல்லாம்
காந்திப்புன்னகையின்
கசாப்பு ரத்தம்!
கண்டு கொள்ளவில்லை!
ஆட்சி எந்திரம்.
சீட்டுகள் பிடிப்பதும்
நாற்காலி ஆள்வதும்
மட்டுமே இங்கு குறியாச்சு!
இன்று கரன்சி வெள்ளம்
கூவம் ஆக
மக்கள் எல்லாம் கூளங்கள் ஆக‌
கூவுகின்றார்!கூவுகின்றார்!
வங்கிகள் யாவும்
வழிகள் அடைத்தன.
எந்திரப்பணங்களும்
எங்கோ போயின!
ஐநூறு ஆயிரம் நோட்டுகள் எல்லாம்
காகித மலங்கள் ஆகிப்போயின!
பொருளாதார சுகாதாரம்
நாறிப்போச்சு!நாறிப்போச்சு!
சீப்பை எடுத்து
ஒளித்து வைத்தால்
கல்யாணம் நின்றுபோகும் என‌
துக்ளக் தர்பார் நடக்குது இங்கே!
ஐநூறு கோடிகள் வாரியிறைத்து
கல்யாணங்கள் நடத்தும்
காட்சிகளுக்கும் குறைவில்லை!
கோடி கோடி ஏப்பம் விட்டவன்
விமானமேறி தப்பிப்போன‌
காட்சிக்கும் இங்குக் குறைவில்லை.
மக்கள் குமுறி வரமாட்டார்!
டிவிப் படங்கள் பார்த்தால் போதும்
விட்டில் பூச்சிகள் குவிந்து கிடக்கும்.
இந்தக் காகித பாரதம்
கத்தி தூக்கியா
பகைவரை அழிக்கும்? நம்
மண்ணைக் காக்கும்?


______________________________________________________
 

கவிஞர் ருத்ரா இ.பரமசிவன்
ruthraasivan@gmail.com
______________________________________________________
 

No comments:

Post a Comment