Thursday, July 14, 2022

தமிழி எழுத்து மற்றும் வாசிப்பு பயிலரங்கம்

தமிழி எழுத்து மற்றும் வாசிப்பு பயிலரங்கம்  - ஜூன் 2022 

 -- முனைவர் மு. பாமா


இன்றிலிருந்து சுமார் 2500 ஆண்டுகள் பழமையானதாகக் கணிக்கப்படும் எழுத்து வரிவடிவமான தமிழியில் அன்று பாறைகளில் செய்திகள் கீறிப் பதிந்து வைக்கப்பட்டன. அப்படிப்பட்ட தொல் தமிழ் எழுத்தான தமிழியில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிடைக்கின்றன.  இவற்றைப் பொதுமக்களான நாமும் வாசிக்க முடியுமா என்றால், தகுந்த பயிற்சியின் வழியாக நிச்சயம் வாசிக்க முடியும்.


இதனைக் கருத்தில் கொண்டுதான் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு, கடிகை இணைய வழி பல்கலைக்கழகப் பிரிவின் கீழ்     2022 ஆண்டு ஜூன் மாதம் 18-ஆம் தேதி ஜூம் வழியாகத்  தமிழி எழுத்து மற்றும் வாசிப்பு பயிலரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்து இருந்தோம்.  இந்த பயிலரங்கில் மொத்தம் 78 பங்கேற்பாளர்கள்  பல்வேறு நாடுகளிலிருந்து  கலந்து கொண்டு  பயன் அடைந்தார்கள். இதில் 32 மாணவர்கள், 46 பேராசிரியர்கள்  மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றார்கள்.   பயிற்சிக் கட்டணமாக ரூபாய் 500க்கு பதிலாக  மாணவர்களுக்கானப் பயிற்சி  200 ரூபாய் சலுகை கட்டணத்தில் வழங்கப் பட்டது. மேலும் பத்து மாணவர்களுக்கு இலவசமாகவும்  பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிலரங்கத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் முனைவர் சுபாஷிணி, மற்றும் குந்தவை மகளிர் கல்லூரி உதவி பேராசிரியர்  முனைவர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் பாடங்கள் நடத்தினர்.   ஜூம் செயலிலுள்ள எழுது பலகை கொண்டு ஒவ்வொரு தமிழி எழுத்துக்களாக முனைவர் சுபாஷிணி  அறிமுகப்படுத்தினர். உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து என்று வரிசையாக நடத்தியது மட்டும் இல்லாமல், பங்கேற்பாளர்களை அவர்களது குறிப்பு ஏட்டில்  எழுதிப் பழகவும் ஊக்கமளித்தார். இந்தப்  பாடத்தின் இறுதியில் தமிழி மொழியால்  வாக்கியங்களும் அமைத்து பங்கேற்பாளர்களை வாசிக்கச் செய்யும் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

பேரா. சிவராமகிருஷ்ணன் அவர்கள் தமிழி கல்வெட்டு வாசிப்புப்  பயிற்சி என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். எழுத்துகளின் தோற்றத்தில் பெண்களின் பங்களிப்பு முக்கியமானது என்பதை உலகம் எங்கும் உள்ள பல்வேறு சிற்ப சான்றுகளுடன் நிறுவினார். தொல்லியல் ஆய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளில் உள்ள தமிழி எழுத்துகள் காண்பித்து அவற்றை வாசிக்கவும் செய்தார். அவர்களுடைய உரையின் இறுதியாக தமிழி எழுத்துகளின் வளர்ச்சி வட்டெழுத்துக்கள் என்பதைக்  குறிப்பிட்டு, இந்த வட்டெழுத்தின் பரிணாம  வளர்ச்சிக்குச் சோழர்கள் அளித்த பங்களிப்பை  விளக்கினார்.  நிகழ்ச்சியின் இறுதியாக நடந்த கலந்துரையாடலில் பங்கேற்பாளர்கள் உற்சாகமாக தங்களின் கேள்விகளைக் கேட்டுத் தெளிவு பெற்றார்கள்.  

இந்த பயிலரங்கத்தை  திரு. எழுமாத்தூர் கார்த்திக் நெறியாள்கை செய்து வைத்து செவ்வனே நிகழ்ச்சியை நடத்தினார்.  நிகழ்ச்சியின் இறுதியாக, கடிகை இணைய வழி பல்கலைக்கழகத்தின் பொறுப்பாளர்,  முனைவர் மு. பாமா அனைவருக்கும் நன்றியுரை கூறினார். பயிலரங்கத்திற்குரிய அறிவிப்பு  பதாகையை எழுத்தோவியர் நாணா என்ற நண்பர்  திரு. நாராயணன்  செய்து தந்தார்கள். நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை மரபு பயணக் குழு பொறுப்பாளர் திரு. மணிவண்ணன் மற்றும்  கடிகை இணைய வழி பல்கலைக்கழகத்தின் பொறுப்பாளர்,  முனைவர் மு. பாமா செய்தார்கள்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மின்-சான்றிதழ் அவர்களுடைய  மின்னஞ்சல் முகவரி அனுப்பி வைக்கப்பட்டது. கூகுள் படிவம் வழியாகப் பெறப்பட்ட பின்னூட்டம் மூலம் நாம் அறிவது,  தமிழி எழுத்துகள் மற்றும் கல்வெட்டுகள் பற்றிய தகவல்கள் பலரையும் சென்று அடைந்துள்ளது.   தமிழி கல்வெட்டுகளை வாசிக்க மற்றும் பாதுகாக்க, வரலாற்றைப் பாதுகாக்கப் பல தன்னார்வலர்களை இந்தப்  பயிலரங்கம்  தயார் செய்துள்ளது. நம் தமிழ் மரபு வளரும் என உறுதியாக நம்புகிறோம்!  

அடுத்த பயிலரங்கம் வரும் அக்டோபர் மாதம் 29ம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. வாய்ப்புள்ளோர் கலந்து கொள்ளுமாறு தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.

வணக்கம்
முனைவர் மு. பாமா,
பொறுப்பாளர்,
கடிகை இணைய வழி பல்கலைக்கழகம்.

No comments:

Post a Comment