Saturday, December 5, 2020

நிறைவான ஒரு ஒரு நிகழ்வு

-- மாரிராஜன் 


நேற்று ( 4.12 .2020 ) நடைபெற்ற ஐரோப்பாவில் நிறுவப்பெற்ற  திருவள்ளுவர் சிலைகளின்  ஓராண்டு நிறைவு நாள்.  இந்நாளை ஐரோப்பியத் தமிழர் நாளாக ஏற்றுக்கொண்ட நாள்.  கடந்த வருடம் சரியாக இந்நாளில்தான் ஜெர்மனி அருங்காட்சியகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை சார்பாக ஐயன் திருவள்ளுவரின் இரண்டு வெண்கலச் சிலைகள் இடம்பெற்றன.


தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு நிகழ்வுகளில்.. மகுடமாகத் திகழ்வது இந்நிகழ்வு..


கனவுகள் காண்பது எல்லோருக்கும் எளிது. கண்ட அக்கனவை நிஜமாக்கும் பாக்கியம் ஒரு சிலருக்கு மட்டும் கிடைக்கும்.  அந்த பாக்கியத்தை சற்று அதிகமாகப் பெற்றவர்தான் தமிழ் மரபு அறக்கட்டளைத் தலைவர் முனைவர். சுபாஷிணி அவர்கள்.

ஐரோப்பா..ஜெர்மனி..

லிண்டன் அருங்காட்சியகத்தில் ஐயன் திருவள்ளுவரின் சிலையை நிறுவ வேண்டும் என்பது சுபாஷிணி அவர்களின் கனவு. இக்கனவு நிஜமாவது அவ்வளவு எளிதான ஒன்று அல்ல.

தமிழகத்தில் சிலை செய்து, தமிழக அரசின் அனுமதி பெற்று, ஜெர்மனி கொண்டுவந்து, அருங்காட்சியகத்தின் வழிகாட்டுதல் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்து சிலையை நிறுவி, அதை ஒரு மாபெரும் விழாவாக எடுத்து...எளிதான ஒரு செயல் அல்ல..

எத்தனையோ தடைகள்..... 

ஏராளமான பிரச்சனைகள். கடும் மன உளைச்சல். வீண் வம்பர்களின் விமர்சனங்கள்.

தடைகள் அனைத்தையும் உடைத்து, அருங்காட்சியகத்தில் சிலையை நிறுத்தி  தான் கண்ட கனவை நிஜமாக்கினார். இவரது இந்த சாதனை மூலம் சரித்திரத்திலும் இடம்பெற்றார்.

சிலை நிறுவிய ஓராண்டு நிறைவு விழாதான் இந்நிகழ்வு.

ஏறக்குறைய மூன்று மணிநேரம், வள்ளுவன் காட்டிய வழியை நினைவு கூர்ந்த நிகழ்வு.

நிகழ்வின் துவக்கமே அசத்தல். திருக்குறள் சிலவற்றுக்கு இராகம் கொடுத்து இசையுடன் பாடி அபிநயம் பிடித்த அற்புதமான நிகழ்வு. 

குறளுக்குப் பரதம் ஆடிய அந்த தமிழ் பெண். ஆடலும், பாடலும் பரவசம். இது முன்னமே பதிவு செய்த ஒன்றுபோல் தெரிகிறது. முழுவதையும் பார்க்க ஆவல். 

நிகழ்வின் முன்னோட்டமாக சுபாவின் முன்னுரையைத் தொடர்ந்து..அருங்காட்சியக் காப்பாளர் டாக்டர். ஜார்ஜ் நோவாக் அவர்களின் அருங்காட்சியகத்தில் வள்ளுவர் சிலை நிறுவப்பட்ட நிகழ்வை நினைவு கூர்ந்தார். வணக்கம் என்று அவர் ஆரம்பித்தது சிலிர்ப்பு.

முன்னாள் மொரிஷியஸ் துணைஅதிபர் திரு.வையாபுரி பரமசிவம் பிள்ளை அவர்களின் உரையும் சிறப்பான ஒன்று.

குறள் பற்றி பேசும் இடத்தில் அவசியம் நான் இருப்பேன் என்ற கொள்கையுடன் இருக்கும் திரு.பாலகிருஷ்ணன். இ.ஆ.ப. அவர்களின் பொழிவு வழக்கமான வள்ளுவத்தைப் பகிரும் அவரின் உரை. தயவு கூர்ந்து வள்ளுவனுக்கு  எந்த ஒரு சமய மத போர்வையும் போர்த்தாதீர்கள். வேட்டி கட்டிய தமிழனின் தோழன்தான் வள்ளுவன்.  அருமையான சொல்லாடல். நோபல் விருதைவிட நான் ஒரு தமிழ் மாணவன் என்பதே எனது மகுடம் என்ற அவரது கருத்திடல் இளம் தலைமுறையினரிடம் சேரவேண்டிய ஒன்று.

திருக்குறளுக்கு ஏராளமான விளக்கவுரை எழுதியாகிவிட்டது. திருக்குறளை திறனாய்வு செய்யவேண்டும் என்று திரு.பாலசந்திரன் இ.ஆ.ப அவர்களின் கோரிக்கை சரியான ஒன்று. 

திருவள்ளுவர் சிலையின் உருவாக்கம் குறித்த திரு. சன்னாவின் சுருக்கமான உரை.

அப்புறம்..

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய .. மலர்விழி, குமரன் மற்றும் கார்த்தி.

மிகையில்லா ஆளுமை. அருமை. வாழ்த்துகள்.

மழலைக் குரலில் திருக்குறளைக் கேட்க அவ்வளவு ஆனந்தம்.

அந்தத் தமிழ் பிள்ளைகள் தமிழுடன் வளர்வார்கள். வரும் காலம் அவர்களுக்கே.

மொத்தத்தில்..

உலகத்தமிழர்கள் ஒன்று கூடி வள்ளுவனை ஆராதனை செய்த நிகழ்வு..

" வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு .... " என்ற பாரதியின் வரிகளுக்குப் பொருத்தமானது நேற்றைய நிகழ்வு.






No comments:

Post a Comment