Saturday, December 12, 2020

எல்லை தருவான் கதிர் பருகி ஈன்ற கார்

எல்லை தருவான் கதிர் பருகி ஈன்ற கார்

-- தேமொழி 


திருப்பாவை கூறும் அறிவியல் என்ற கருத்தில் ஆண்டாளின் பாடல் மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டப்பட்டு வருவது வழக்கம். "ஆழிமழைக் கண்ணா", "அறிவியல்" என்ற ஒரு கூகுள் இணையத் தேடலில் 300க்கும் மேற்பட்ட முடிவுகள் கிடைக்கின்றன என்பதே, அது எந்த அளவு பண்டைய தமிழர் கொண்டிருந்த அறிவியல் அறிவிற்குச் சான்றாக,  பரவலாக மக்களிடம் சென்று சேர்க்கப் படுகிறது என்பதை அறியலாம். அடுத்து வருவது அது போன்ற ஒரு பதிவில் கொடுக்கப் பட்டிருந்த விளக்கம். 

            ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்
            ஆழியுள் புக்கு முகந்து கொடு, ஆர்த்து ஏறி
            ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்து
            பாழியந்தோள் உடைப் பற்பநாபன் கையில்
            ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
            தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்
            வாழ உலகினில் பெய்திடாய்; நாங்களும்
            மார்கழி நீராட மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய் 
                      (திருப்பாவை-4)

மழைக்கு தலைவனே! நீ சிறிதும் உன் வள்ளன்மை ஒன்றையும் மறைக்காதே! நீ கடலுள் ஆழப் புகுந்து நீரை முகந்து பெரு முழக்கோடு வானில் ஏற வேண்டும். உலகுக்கு காரணனான உன் மேனி போல் கறுத்து, வலிய தோள்களையும் உந்தியில் தாமரையையும் உடைய வலக்கையில் உள்ள, சக்ராயுதம் போல் ஒளிவிட்டு இடக்கையிலுள்ள வலம்புரி சங்கு போல முழங்கி உலகிலுள்ளார் அனைவரும் வாழும்படி நோன்பு நிற்கும் நாங்களும் நீராடவும் காலம் கடத்தாமல் பெருமான் கையிலுள்ள சார்ங்க வில்லில் ஏவிய அம்பு மழை போல் பெய்வாயாக. (உரை-வைணவச் செம்மல் டாக்டர். எஸ். ஜெகத்ரட்சகன்) [1] 

‘திணைமாலை நூற்றைம்பது’ என்ற நூலின் முல்லைத் திணை குறித்த  அகப் பாடல்களிலும் கடல் நீர் சூரியனின் வெப்பத்தால் ஆவியாகி மேலெழுந்து மேகமாகி, பின்னர் குளிர்ந்து மழையாகப் பொழிகிறது என்ற கருத்து இடம் பெறுகிறது [2].   

திணைமாலை நூற்றைம்பது:
எளிய வழியில் அகப் பாடல்கள் கூறும் அன்பின் ஐந்திணை ஒழுக்கம் குறித்து அறிய ‘திணைமாலை நூற்றைம்பது’ நூலின் பாடல்கள் உதவுகின்றன. மதுரைத்தமிழாசிரியர் மாக்காயனார் மாணாக்கர் கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது என்ற நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. ‘ஏலாதி’ நூல் இயற்றிய அதே கணிமேதாவியார் இயற்றிய நூல் இது. இவர் கி.பி.5 - ஆம் நூற்றாண்டினர் [3].  இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்பதையும், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர் என்ற செய்தியையும் ஏலாதி நூலின் முகவுரையின் மூலம் நாம் அறிய முடிகிறது. இந்நூலில், அகத்திணை ஒழுக்கம் குறித்த வெண்பாக்கள் குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம் என்ற வரிசையில் அமைந்துள்ளன.

ஐந்திணை ஒழுக்கங்களைக் கோவையாக அமைத்து மாலை போலத் தொடுத்துள்ள மையால் ‘திணைமாலை’ என்றும், நூலில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கையின் அளவினால் ‘திணைமாலை நூற்றைம்பது’ என்றும் இந்நூல் பெயர் பெற்றது என்ற விளக்கம் கொடுக்கப்படுகிறது. இருப்பினும், ஒவ்வொரு திணைக்கும் 30 பாடல்கள் என மொத்தம் 150 பாடல்கள் இருக்க வேண்டிய நிலைக்கு மாறாக, இந்நூலில் குறிஞ்சி, நெய்தல், முல்லை திணைகள் மூன்றும் 31 பாடல்களைப் பெற்றுள்ளதால் மொத்தம் 153 பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. நூலின் இறுதியிலே காணப்பெறும் பாயிரச் செய்யுள் ஒன்றையும் கணக்கில் கொண்டால் இந்நூல் மொத்தம் 154 பாடல்களைக் கொண்டதாகும். 

முல்லை திணைக்குரியதாக இந்த நூலில் இடம்பெறும்  31 பாடல்களின்  7 பாடல்களில் (பாடல் எண்கள்: 93, 95, 100, 104, 105, 109,114) மழை உருவாகும் அறிவியல் உண்மை இடம் பெறுகின்றது.  அதாவது, முல்லைத் திணைக்கான 31 பாடல்களைக் கணக்கில் கொண்டால், சற்றொப்ப ஐந்து பாடல்களுக்கு ஒரு பாடல் என்ற கணக்கில் மழை தோன்றும் அறிவியல் உண்மை விரவிக் கிடக்கக் காணலாம்.  இங்கு அப்பாடல்கள் திணைமாலை நூற்றைம்பது நூலில் இடம் பெரும் அதே வரிசையில் கொடுக்கப்படுகிறது [2]. 

(1)
            கருங் கடல் மாந்திய வெண் தலைக் கொண்மூ
            இருங் கடல் மா கொன்றான் வேல் மின்னி, பொருங் கடல்-
            தன்போல் முழங்கி......  (பாடல்:  93) 

விளக்கவுரை: கருமையான கடலிலிருந்து நிறைய நீரினை அருந்திய வெண்மையான தலையைக் கொண்ட முகில்கள், பெரிய கடலினில் புகுந்து மாமர வடிவுகொண்ட சூரபன்மனைக் கொன்ற முருகனின் வேலினைப் போன்று மின்னும் மின்னல்களுடன், அலைகள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வதால் பொருமும் கடல்தனைப்  போல இடிகளை முழக்கி ஆரவாரிக்கின்றன. 

(2)
            மேல் நோக்கி வெங் கதிரோன் மாந்திய நீர் கீழ் நோக்கி,
            கான் ஓக்கம் கொண்டு, அழகா-காண், மடவாய்!......  (பாடல்:  95) 

விளக்கவுரை: மேல்முகமாக வெப்பத்தைக் கொண்ட கதிரவன் முகந்து உட்கொண்டதால் நீர் நிறைந்த முகிலானது, கீழுள்ள புவியை நோக்கி மழையாகப் பெய்த படியினாலே, முல்லை நிலத்தின் காடுகளெல்லாம்  தழைத்தோங்கி அழகாக மாறியுள்ளதைக் காண்பாயாக  பெண்ணே!. 

(3)
            ...... ...... ...... ......  மாக் கடல்
            கண்டு இயைய மாந்தி, கால்வீழ்த்து, இருண்டு, எண் திசையும்
            கார் தோன்ற, காதலர் தேர் தோன்றாது ......  (பாடல்:  100) 

விளக்கவுரை: பெருங்கடலினைக்  கண்டு தன்னை நிரப்பிக் கொள்ளும்படி கடல்நீரைக் குடித்து, மழைபொழியத் தாழ்ந்து, நிறம் கருத்து,  எட்டுத் திக்குகளிலும் முகிற் கூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. கார்காலம் துவங்கிவிட்டது. ஆனால், கொடுத்த உறுதிமொழியின்படி தலைவனின் தேர் இங்கு வரவில்லை. 

(4)
            ஐந்து உருவின் வில் எழுதி, நால் திசைக்கும், முந்நீரை,
            இந்து உருவின் மாந்தி, இருங் கொண்மூ, முந்து உருவின்
            ஒன்றாய், உரும் உடைத்தாய், பெய் வான்போல்.......  (பாடல்:  104) 

விளக்கவுரை: ஐந்து நிறங்களையுடைய வானவில்லை வரைந்து வைத்து, நான்கு திக்குகளுக்கும் கடல் நீரைக் கொண்டு சென்று கொடுக்க விரும்பிய, ஈச்சம் பழத்தின் நிறங்கொண்ட மேகமானது நீரை அள்ளிக் குடித்து பெரிய மேகமானது.  பழைமையான உருவாகிய வானின் நீல நிறத்தைப் போன்று அதனுடன் ஒன்றாகப் பரவி,  இடிகளைக் கொண்டதாக மழையாகப் பொழிகின்ற வான் வெளியின் தன்மை போல,... 
(குறிப்பு: இப்பாடலில் வானவில்லிற்கு ஐந்து நிறம் என்று கூறுவதைக் காணலாம், ஒரு வேளை புலவர் கணிமேதாவியாருக்கு 'நிறக்குருடு' (Red-green color blindness ) என்று கூறப்படும் பார்வைக் குறைபாடு இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது) 

(5)
            எல்லை தருவான் கதிர் பருகி ஈன்ற கார்,
            கொல்லை தரு வான் கொடிகள் ஏறுவ காண்........  (பாடல்:  105) 

விளக்கவுரை:  பகற் பொழுதினைத் தரும் கதிரவனின் கதிர்களால் குடிக்கப்பட்ட நீரைக் கொண்ட மேகம் அதை மழையாக வழங்கியதாலே,  முல்லை நிலத்தில் வளர்ந்த நெடிய கொடிகள் மரங்களிற் படர்ந்து கொண்டிருப்பதைக் காண்பாயாக!! 

(6)
            என்போல் இகுளை! இருங் கடல் மாந்திய கார்........  (பாடல்:  109) 

விளக்கவுரை:  எனது உயிர் போன்ற இனிய தோழியே! பெரிய கடலின்  நீரை அருந்தி மழை மேகங்கள் உருவாகின. 

(7)
            பாத்துப் படுகடன் மாந்திய பல்கொண்மூக்
            காத்துக் கனை துளி சிந்தாமைப் - பூத்துக்
            குருந்தே!.........  (பாடல்:  109) 

விளக்கவுரை:  ஒலிக்கின்ற கடலின் நீரைக்  குடித்துப் பல முகில்களில் பகுத்தெடுத்து, அந்த நீரைப் பாதுகாத்துக் கொண்டு வந்து, செறிவான மழைத்துளிகளை முகில்கள் நன்கு  சிதறி பெய்யாத போதும், செழித்துப் பூத்துள்ள குருந்த மரமே!

முல்லைத்திணைக்குரிய பெரும்பொழுது கார் என்பதால், திணைமாலை நூற்றைம்பது நூலின் முல்லைத்திணைப் பாடல்களில் மழைகுறித்து பல பாடல்கள் குறிப்பிடுகின்றன. இருப்பினும்,  மேற்காட்டிய ஏழு திணைமாலை நூற்றைம்பது பாடல்களில் கடல்நீர் கதிரின் வெப்பத்தால் முகிலாக  மாறி மழையாகப் பொழிவது விளக்கமாகவும், சிலபாடல்களில் அவை நன்கு அறியப்பட்ட உண்மை என்பதால் ஓரிரு வரிகளில் சுருக்கமாகக் கொடுக்கப்படுவதையும் காண முடிகிறது. இதன் மூலம்  கி.பி.5 - ஆம் நூற்றாண்டில்  மழை பொழியும் அறிவியல் அடிப்படையைத் தமிழர் பலர் நன்கு அறிந்திருந்தனர் என்பது இதனால் தெளிவாகிறது.  

"ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்து கொடு" என்று திருப்பாவையில் மழை குறித்து ஆண்டாள் குறிப்பிட்டது  கணிமேதாவியாருக்கும் பிற்பட்ட காலம்.  ஆழ்வார்களின் காலம் என்பது ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 8ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை என்று வரையறுத்தவர்  மு.இராகவையங்கார்.   'வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று' என்ற ஒரு குறிப்பு (திருப்பாவை 13:3-5) கொண்டு, ஆராய்ந்த மு. இராகவையங்கார் கி.பி. 716 ஆம் ஆண்டு திருவாடிப்பூரத்தில் ஆண்டாள் அவதரித்தாள் என்று கூறுகின்றார்[4].  ஆகவே அதற்கும் முன்னர் ஐந்தாம் நூற்றாண்டிலேயே மழை குறித்த அறிவியல் தமிழகத்தில் அறியப்பட்டிருக்கிறது என்பதைத் திணைமாலை நூற்றைம்பது மூலம் அறிய முடிகிறது.  தமிழிலக்கியங்களைக் கற்றுத் துறைபோகிய  அறிஞர்கள் பண்டைய தமிழ் இலக்கியங்களில் காணப்பெறும்  மழை அறிவியல் குறித்து மேலும்  பல மேற்கோள்களைக்  காட்ட வாய்ப்பிருக்கலாம். 

எல்லாவற்றுக்கும் மேலாக, மழை தோன்றும் முறையை, அதன் அறிவியல் பின்புலத்தை, ஐந்தாம் நூற்றாண்டிலேயே (அதாவது, இந்தக் கட்டுரையின் அடிப்படையில் எனக் கொள்க) அறிந்திருந்த தமிழக மக்களின் வழிவந்தோர்,  இன்று வருணபகவான் மழை தருவார் என்று நீர் நிரம்பிய பெரிய பெரிய அண்டாவிற்குள் அமர்ந்து பஜனை பாடுவதையும்,  கழுதைக்கும் கழுதைக்கும் திருமணம் செய்து வைப்பதையும், பெண்ணை ஆடையின்றி தீவட்டியுடன்  ஊர்சுற்ற வைக்கும் சடங்கு செய்வதையும், இடி மின்னல் என்றால் அர்ஜுனன் தேர் ஓடுகிறது என்று 'அர்ஜுனா' 'அர்ஜுனா' என்று கன்னத்தில் அடித்துக் கொள்வதைச் செய்யும் மூடநம்பிக்கை கூட்டத்தினராக மாறியதைக் கண்டு நாம் தலைத் தலையாக அடித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. 



உதவிய தளங்கள்: 
[1] ஆண்டாளின் மழை அறிவியல்! – https://minnambalam.com/k/2017/04/26/ad3

[2] கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
விளக்க உரை – தமிழ்ப் புலவர் திரு. அ. நடராச பிள்ளை
http://www.tamilvu.org/library/l2F00/html/l2F00ind.htm

[3] தமிழ் இலக்கிய வரலாறு, ரா. சீனிவாசன், 3-சங்கம் மருவிய காலம், எட்டாம் பதிப்பு : 1997
https://ta.wikisource.org/s/99ul

[4] ஆண்டாள், முனைவர் சி. பாலசுப்பிரமணியன், முதற் பதிப்பு : மார்ச், 1994. பக்கம் 34 
https://ta.wikisource.org/s/1321

நன்றி: சிறகு 
____________________________

No comments:

Post a Comment