Monday, May 11, 2020

பண்ணின் சுவையும் படமாக்கப்பட்ட திணை மரபும்

பண்ணின் சுவையும் படமாக்கப்பட்ட திணை மரபும்

-  தமிழிசை ஆய்வாளர் நா. மம்மது  

            இசை என்பது உலகப் பொதுமையாக உள்ள அதேநேரம், அது உருவான நிலத்தின் / திணைக் கூறுகளின் தன்மையினை அடிநாதமாகக் கொண்டதே. அவ்வகையில் தமிழ்த்திரைப்படப் பாடல்களின் பண்களும் அவை படமாக்கப்பட்ட திணைகளின் ஒத்திசைவு கொண்ட பாங்கினையும்  விளக்குகின்ற விதமாக, ஆய்வு நோக்கில் அணுகும் சிறு முயற்சியே இக்கட்டுரை. 
      
            ஒவ்வொரு திணைக்கும் ஒரு பெரும்பண்ணும், ஒரு சிறுபண்ணும் என்பதாகப் பகுத்து உருவாக்கிய பண்பாடு தமிழர்களின் பண்பாடு ஆகும். 
       
            பண்டைய நாளில் பண், பெரும்பண், யாழ், பாலை, தாய்ப்பண் என்றும்;  இக்காலம் மேளம், மேளகர்த்தா, சம்பூரணம் என்று வழங்கப்படுவது ஏழுசுரப்பண்.    திறம், குழல், பாணி என்று முன்னாளிலும் ஒளடவம் என்று இந்நாளிலும் வழங்கும் பண், ஐந்து சுரப்பண் (சிறுபண்). 
       
            நெய்தல் நிலம் இரண்டு பாலைகளுக்கு உரிமை பெறுகின்றது. செவ்வழிப்பாலை மற்றும் விளரிப்பாலை. இந்த விளரிப்பாலை குறித்து நாம் இக்கட்டுரையில் பார்க்க இருக்கிறோம். 

விளரிப்பாலை:       
            விளர், விளரி, விளரிப்பண், விளரியாழ் என்றெல்லாம் பண்டை நாளில் பெயர் பெற்றிருந்த பண், இக்காலத்தில் ‘தோடி’ இராகம் என்றாகியுள்ளது. 
       
இப்பண்ணின் சுரங்கள் 
வளர் எனில் இளமை, மென்மை என்று பொருள். விளரி (த) என்ற சுரத்தால் பண்ணின் பெயர் ‘விளரி’. 
      
            அனைத்துச் சுரங்களும் மென் சுரங்களாக இருப்பதால் இயல்பாகவே இப்பண் அவலச்சுவை (சோகம்) தரும் பண் ஆகிறது. கடற்கரை நிலமான நெய்தல் நிலத்திற்குரிய பண்ணாகத் ‘தோடியை’ தமிழர்கள் பண்டைக் காலங்களில் அமைத்துக் கொண்டதற்கு இப்பண் தரும் அவலச்சுவையே காரணமாகிறது. தமிழரின் இலக்கண மரபு தொகுத்துச் சுட்டும் முறைமையில், நெய்தல் நிலத்தின் உரிப்பொருளானது, ‘இரங்கலும், இரங்கல் நிமித்தமும்’ ஆகும்.

            உலக இலக்கியத் தர வரிசையில், முதல் வரிசையினுள் இடம்பெறும் காப்பியம் சிலப்பதிகாரம். உலகப் பெரும் இலக்கியப் படைப்பாளிகளில் முதல் வரிசையினில் இடம்பெறும் பெரும்புலவர் இளங்கோவடிகள். சிலப்பதிகாரத்தில், நிலத்திற்குரிய (திணை) பெரும்பண்  (ஏழுசுரப் பண்), மற்றும் சிறுபண் (ஐந்துசுரப்பண்) ஆகியவற்றை அந்தந்த நிலங்களிலேயே அமைத்துக் காட்டியுள்ளது அடிகளாரின் தனிச் சிறப்பாகும். 

            கடற்கரை (நெய்தல்) நிலத்தைச் சேர்ந்த மக்கள் நுளையர். அவர்களுடைய பண் விளரி. இதனை, ' நுளையர் விளரி நொடி தரும் தீப்பாலை '  ( சிலப்பதிகாரம்: புகார்க்காண்டம், கானல்வரி - 48 ஆம் பாடல்) என்று அடிகளார் பதிவு செய்துள்ளார். கானல் என்பது கடற்கரைச் சோலை. அவ்வாறே நொடியானது துன்பம், அவலம் என்றும் பொருள்படும் (விரிவுக்குப் பார்க்க: தமிழிசைப் பேரகராதி, பக். 460,461).

            நுளையர் என்பதில் திணையினையும், விளரி என்பதில் அத்திணைக்குரிய பண் என்ற இராகத்தையும், 'நொடி' என்பதில் அப்பண் தரும் அவலச்  சுவையையும், (தீம்) பாலை என்பதில் அது ஏழுசுரப்பண் என்பதையும் மிக நுட்பமாக அடிகளார் ஆவணப்படுத்துகிறார்.

            மாமன்னர் அக்பரின் அவைக்களப் பாடகர் தான்சேன். அவர் மறைந்த பொழுது அவருடைய மகன் பிலாசுகான் மிகுந்த அவலத்துடன் துன்பச்சுவைப் பாடல்களைப் பாடியதாக ஒரு செய்தி மரபினில் உண்டு. பிலாசுகான் (Tansen's son Bilas Khan)அப்போது பாடிய பண்ணின் பெயர் 'பிலாசுகானி தோடி'(Bilaskhani Todi). இந்தப் பண்ணின் சுரங்கள் பின்வருமாறு:

இந்துத்தானி இசைமரபின் பண்ணிற்கும், தமிழ்மரபின் பண்ணிற்கும் சில வேறுபாடுகள் இருப்பினும் சுரங்கள் பொதுவானவையே; மேலும் மென்மையானவை. எனவே  இரண்டு பண்களும் அடிப்படையில் அவலச்சுவைப் பண்களாகும். அதாவது கடற்கரை நிலமான நெய்தல் நிலத்திற்கு உரியவை.
         
            நமது தமிழ்ப்படங்களில் சில பாடல்கள் கடற்கரை நிலத்தில் பாடப்படுவதாகப் படமாக்கப்பட்டுள்ளன. மேலும் அப்பாடல்கள் அவலச்சுவைப் பாடல்களாகவும் உள்ளது கவனிக்கத்தக்கதாகும். சான்றாகச் சில படங்களைப் பார்ப்போம்: 
            'ஆலயமணி', படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் 'சட்டிசுட்டதடா' என்பதாகும். இந்த சோகப்பாடல் நமது நினைவினில் ஒலிக்கத் தொடங்கியதும் மனத்திரையில் அதன் காட்சிப் பின்புலம் மெதுவாக நகராத தொடங்கும். அந்தப் படிமமானது கடலிலும் கடற்கரையிலுமாக விரிவதைக் காண முடியும். 

            'பார் மக்களே பார்', என்ற படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல், 'அவள் பறந்து போனாளே, எனை மறந்து போனாளே' என்பதாகும். ஒரு தலைமுறை இளைஞர்களின் சோக கீதமாகத் தொடர்ந்து உலுக்கிய அந்தப்பாடலின் ஒரு பகுதி படத்தில் முத்துராமன் பாடுவது போலக் காட்சிப்படுத்தப் பட்டிருக்கும். சோகத்தில் அமிழ்த்துகையில் சற்று நிதானித்தால் அந்தப் பாடலின் பின்புலக் காட்சி கடற்கரையாக உள்ளதை அறியமுடியும். இந்த இரண்டு பாடல்களும் பிலாசுகானி தோடியில் அமைந்தவை.  

            தமிழரின் திணைமரபுடன்  தமிழிசை மரபு குறித்த பயிற்சியும் இருந்தால் மட்டுமே இதனை இணைத்து விளங்கிக் கொள்ளமுடியும். அவ்வாறிருக்க, மேற்குறிப்பிட்ட படங்களில் இத்தகைய காட்சிகளும் காட்சிப்படுத்தல்களும் இடம்பெற்ற நிலையானது புரிந்து நடந்த ஒன்றா என்ற கேள்வி எழும். அப்படியும் இருக்கலாம். அல்லது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது திணை மரபும் இசைமரபும் நம் இயல்பினில், மரபீனியில் பதிவு பெற்றுள்ளதோ என்கிற எண்ணம் எழுதலும்  இயற்கை. 

            நெய்தலின் பண் கொண்டு அணுகியதுபோல மற்ற திணைகளின் பண்கள் கொண்டும் அணுகுகையில் பல பாடல்களைச் சுட்டிக் காட்டமுடியும். இருப்பினும் ஆய்வின் திறப்பாக இக்கட்டுரையானது ஒரு திணையினை மட்டும் அடிப்படையாக எடுத்துக் கொண்டு விளக்க முயன்றுள்ளது; தொடர்வோம்.
         
            "எவ்வகை அறிவும், தொன்மத்தை விட்டுவிட்டு இயங்குவதில்லை".






No comments:

Post a Comment