Tuesday, January 28, 2020

தஞ்சைப் பெரியகோவிலைக் கட்டியவர் யார்?

தஞ்சைப் பெரியகோவிலைக் கட்டியவர் யார்?

——   மா.மாரிராஜன்



          இது என்ன கேள்வி???!!!

          பேரரசர் இராஜராஜர் என்பது யாவரும் அறிந்த ஒன்றுதானே.

          ஆம்...   இன்று நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால்,  இக்கேள்விக்கு இன்றிலிருந்து 133 ஆண்டுகளுக்கு முன்பு யாருக்கும் பதில் தெரியாது. சற்று பின்னோக்கிச் சென்றால்; 1858 ல்... ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி இந்தியாவில் முடிவுக்கு வந்து, பிரிட்டனின் நேரடி ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் ஏற்பட்டது. அப்போதைய ஆங்கில அரசால் 1886 ல் இந்தியத் தொல்லியல் துறை உருவாக்கப்பட்டது (Archaeological survey of india - ASI).  இத்துறையின் சென்னை மாகாண  கல்வெட்டியல் துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஹூல்ஸ் (Dr. Euger julius theodor Hultzsch).

          ஹூல்ஸ் 1886 ல் அசோகரது கல்வெட்டைப் படியெடுத்தார், 1886 டிசம்பரில் மாமல்லபுரம் கல்வெட்டைப் படித்தார், 1887 டிசம்பர் மாதம் தஞ்சை பெரியகோவிலுக்கு வருகிறார்.கோவிலைக் கட்டியது கரிகால் சோழன், தனக்கு வந்த வியாதி தீர கைங்கரியமாய் கோவிலைக் கட்டினான். மோர் விற்ற அழகி என்னும் மூதாட்டி கதை என்று செவிவழிச் செய்திகள் வழக்கத்திலிருந்த நேரம் அது.

          பெரிய கோவிலுக்கு வருகிறார் ஹுல்ஸ். கோவிலின் அமைப்பும் பிரம்மாண்டமும் அவரை உறைய வைத்தது. தன்னிச்சையாக அவரிடமிருந்து வெளிப்பட்ட வார்த்தை...

"The great temple"

          கோவிலின்  வாயில் முதல் கொண்டு எங்கெங்கு பார்த்தாலும் கல்வெட்டுகள். அழகான தமிழ் எழுத்துக்களில் அமைந்த கல்வெட்டுகள். தனக்கு இங்கு நிறையவே வேலை இருக்கிறது என்று முடிவு செய்கிறார் (பிற்பாடு அவர் எழுதிய கட்டுரை ஒன்றில் இத்தகவல்களை விவரிக்கிறார்).  பொறுமையாகக் கல்வெட்டுகளை வாசிக்கத்தொடங்கிய அவர், கல்வெட்டுகளின் தொடக்கத்தைத் தேடினார். மிகச்சரியாக ஸ்ரீ விமானத்தின் வடப்புறம் சென்றடைந்தார். சண்டிகேசர் கோவிலுக்கு எதிரே விமானத்தின் வடப்புற அதிட்டானத்துப் பட்டிகை, அங்குதான்... அந்த வரிகள் இருந்தன.

          இராஜராஜனின் மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் அக்கல்வெட்டில்,
"பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர் கூற்றத்து தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி இராஜராஜீவரம்"



          இந்த வரிகளை வாசித்த பிறகு கோவிலைக் கட்டியது பேரரசன் இராஜராஜன் என்று வெளியுலகிற்கு முதன் முதலாக அறிவிக்கிறார்.

          அப்போது இராஜராஜனை இவ்வாறு அழைத்தார்.

"The great king"

          பிறகு, தனது பரிவாரங்களுடன் கோவிலில் முகாமிட்டு அனைத்து கல்வெட்டுகளையும் படியெடுத்து அச்சு நூலாக வெளியிடுகிறார். இவரது பணிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் இவரது உதவியாளர் வெங்கையா.  1887 - 1891 வரை நான்கு ஆண்டுகள் கோவிலில் உள்ள கல்வெட்டுகளைப் படியெடுக்கும் வேலை நடந்தது.  தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி எண் 2 ல் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் அச்சு நூலாக வெளிவரத் தொடங்கியது.

          இராஜராஜேச்சரமும், இராஜராஜனும், பெருவுடையாரும், அனைத்து மக்களின் இதயங்களை ஆக்கிரமித்தார்கள்.

"The great temple"
     
"The great king"




தொடர்பு: மாரிராஜன் (marirajan93@gmail.com)

No comments:

Post a Comment