Wednesday, May 24, 2017

ஜனன மரண ரிஜிஸ்திரார் ஆபிஸ்

ஜனன மரண ரிஜிஸ்திரார் ஆபிஸ்

ஆசிரியர்: செங்குட்டுவன்


19ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் என்பது, விழுப்புரம் நகரத்தில் வளர்ச்சி எட்டிப் பார்த்த நேரம் என்று சொல்லலாம்.


இந்த காலக்கட்டத்தில்தான் முன்சீப் கோர்ட், தாலுகா அலுவலகம், டவுன் போலீஸ் ஸ்டேஷன், சிறைச்சாலை மற்றும் ரிஜிஸ்திரார் ஆபிஸ் ஆகியவை விழுப்புரத்தில் தோன்றின.


இவற்றிற்கானக் கட்டடங்கள் ஒரே வளாகத்திற்கும் அமைக்கப்பட்டன என்பதும் கூடுதல் சிறப்பாகும்.


இதில் குறிப்பிடத்தகுந்தது "சப் ரிஜிஸ்திரார்" ஆபிஸ்.


தற்போது திரு.வி.க. சாலை என்றழைக்கப்படும், அப்போதைய கச்சேரி சாலையில்  1888இல் இந்த அலுவலகம் தொடங்கப்பட்டது.


நில ஆவணங்கள் தொடர்பானப் பதிவு என்பதெல்லாம் பின்புதான் இங்கு நடந்துள்ளன. தொடக்கத்தில் இந்த அலுவலகத்தின் பணி பிறப்பு இறப்புகளைப் பதிவு செய்வதாகத்தான் இருந்திருக்கிறது.


இதற்கு இப்போதும் அலுவலக வாயிலின் இருபுறமும் காணப்படும் கல்வெட்டுச் சான்றாகும்.


ஒருபுறம் உள்ள கல்வெட்டில் "சப் ரிஸ்திரார் ஆபிஸ் விழுப்புரம்" என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளது.


இன்னொருபுறம் இருக்கும் கல்வெட்டில், "ஜனன மரண ரிஜிஸ்திரார் விழுப்புரம்" என தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளது.


காலப்போக்கில் எவ்வளவோ மாற்றங்கள்!


பிறப்பு இறப்புப் பதிவை நகராட்சி நிர்வாகம் ஏற்றுக் கொண்டது.


சப் ரிஜிஸ்திரார் அலுவலகம் நில ஆவணங்களைப் பதிவு செய்தது.


விழுப்புரம் சார் பதிவாளர் அலுவலகம் 21ஆம் நூற்றாண்டில் இணை சார் பதிவாளர் அலுவலகமாகத் தரம் உயர்ந்தது.


கட்டடத்தில் முகப்பிலும்கூட மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. வெளியில் இருந்துப் பார்த்தால் ஆங்கிலேய கட்டடப் பாணி தெரியாது.

(இணைப்பில் உள்ள கட்டடப் புகைப்படம் 2010ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்)


ஆனால், அந்தக் காலத்தைத் தெரிந்து கொள்ள உதவும் அந்த இரண்டு கல்வெட்டுகள், இணை சார் பதிவாளர் அலுவலகத்தின் வாயிலில் இப்போதும் நமக்குக் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.






No comments:

Post a Comment