Sunday, October 30, 2016

நூல் விமர்சனம் - தென்னிந்திய சமூகப்புரட்சியின் தந்தை அயோத்திதாசப் பண்டிதர்

முனைவர்.சுபாஷிணி


தென்னிந்திய சமூகப்புரட்சியின் தந்தை 
அயோத்திதாசப் பண்டிதர் 

தொகுப்பாசிரியர்: கௌதம சன்னா 

கடந்த சில ஆண்டுகளில் அயோத்திதாசப் பண்டிதர் பற்றிய தகவல்களைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்தமிழ் மடலாடற் குழுமத்தில் அவ்வப்போது ஒரு சில உறுப்பினர்கள்  பகிர்ந்து வருவதை வாசித்திருக்கின்றேன். அதில் மிக முக்கிய விசயமாக அமைவது பண்டிதரின் பெருமுயற்சியில் தொடர்ச்சியாக வெளிவந்த ஒரு பைசா தமிழன் பத்திரிக்கையின் முழுமையான மின்னூல் நம் சேகரத்தில் இணைந்த நிகழ்வு எனலாம். அவ்வப்போது அவரது ஆக்கங்களை வாசித்தறிய  வேண்டும் என நான் முயன்றாலும் தொடர்ச்சியான பல பணிகள் எனது கவனத்தை வேறு வகையில் செலுத்தியது என்பதை மறுப்பதற்கில்லை. அண்மையில் ஒரு குறிப்பைத்தேட எனது இல்ல நூலகத்தை அலசியபோது நண்பர் ஒருவர் வழங்கிய "தென்னிந்திய சமூகப்புரட்சியின் தந்தை - அயோத்திதாசப் பண்டிதர்" என்ற நூல் கிட்டியது. சென்ற வாரம் பாரிஸ் பயணத்தின் போது தொடங்கி பின் முடிக்க இயலாமல் சென்ற நிலையில் இன்று ஏனைய பக்கங்களை வாசித்தேன். 

நூலின் தொகுப்பாசிரியர் திரு.கௌதம சன்னா இரு பகுதிகளாக இந்தத் தொகுப்பு நூலைப் பிரித்து வாசிப்புக்கான தகவல்களைத் தொகுத்திருக்கின்றார். முதல் பாதி, பண்டிதரின் எழுத்துக்களாகப் பரவலாக வெவ்வேறு விசயங்களைத் தொட்டுச் செல்வதாக அமைந்திருக்கின்றது. மறுபாதி அயோத்திதாசப் பண்டிதரைப்பற்றியும் அவர் நடத்திய தமிழன் பத்திரிக்கை பற்றியும், தமிழ் பௌத்தம் பற்றியும், பண்டிதரின் மறைவுக்குப் பின்னர் தொடரப்பட்ட முயற்சிகளைப்பற்றியும் என அமைந்துள்ளது. 

"அயோத்திதாசப் பண்டிதர் என்பவர் யார்" என அறிந்து கொள்ள விரும்புவோருக்கு அறிமுகமாக அமைவதுடன் 19ம் நூற்றாண்டின் இறுதி தொடங்கி தமிழ்ச் சமுதாயத்தின் சீர்திருத்த முயற்சியில் அவரது பங்கு எத்தகையது என்பதைத் தெளிவு குறையாது விளக்கும் ஆதாரச்சான்றுகள் நிறைந்த தரமான நூலாகவும் அமைந்துள்ளது இந்த நூல். அதில் குறிப்பாக பண்டிதரின் எழுத்துக்களின் வழியே வாசகர்களை, அவரை அறிந்து கொள்ள செய்த முயற்சி வரவேற்கத்தக்கது. 

வாழ்க்கை குறிப்பு, எங்குப் பிறந்தார்.. என்ன செய்தார். என்றெல்லாம் நூலைக் கொண்டு செல்லாமல், பண்டிதரின் வாழ்க்கை நோக்கமாக அமைந்திருக்கின்ற அவரது சமூகச்சீர்திருத்தக் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அனைத்துக் கட்டுரைகளும் இடம்பெற்றிருக்கின்றன என்பது மிகச் சிறந்த ஒரு விசயம் என்றே கருதுகிறேன். பண்டிதரின் தமிழன் பத்திரிக்கையிலிருந்து சிறு கட்டுரைகளின் தொகுப்பாக முதற்பகுதியில் இணைந்திருப்பவை சொல்லும் செய்திகள் பண்டிதரின் சிந்தனையில் முழுமையாக ஒடம்பெற்றிருந்த சமூக நிலையை வெளிக்காட்டுவதாக அமைந்திருக்கின்றன. உதாரணமாக, 
  • அக்கால பெண்களின் கல்வி அபிவிருத்திக்கு யார் தடையாக இருக்கின்றனர் என்ற அலசல் 
  • மக்களிடையே கல்வி அறிவு பெருகுவதால் நன்மையா அல்லது சாதிப்பற்று பெருகுவதால் நன்மையா என்ற அலசல் 
  • விதவைப் பெண்களின் துன்பங்கள், அவர்களை மறுமணம் செய்து கொடுக்காமல் துன்பத்தில் ஆழ்த்தும் ஆண் சமூகத்தின் மீதான தனது கண்டனம் 
  • சாதிபேதம் ஏற்படுத்தும் சமூகச்சீரழிவு 
  • சமயக்கூடங்களில் சாதிகளும் வேஷங்களும் 
  • மனிதன் தன்னை எப்படி உயர்த்திக் கொள்ள வேண்டும் 
  • சாதிகளற்ற சமுதாயம் 
...என அமைந்திக்கும் கட்டுரைகளைக் குறிப்பிடலாம். 

இதன் தொடர்ச்சியாக அமைந்திருக்கும் புத்தரைப்பற்றியும் பௌத்தத்தைப் பற்றியும் பண்டிதர் எழுதிய நீண்ட கட்டுரை ஒன்றும் இடம்பெறுகின்றது. இது புத்தரின் வரலாற்றை விரிவாக எடுத்துரைப்பதோடு பௌத்த கொள்கைகளை விளக்கும் வாசிப்புப்பொருளாகவும் அமைந்துள்ளது. 

அயோத்திதாசப் பண்டிதரைப்பற்றிய அறிஞர் அன்பு.பொன்னோவியம் அவர்களின் விரிவான கட்டுரை இந்த நூலுக்குத் தனிச்சிறப்பினை வழங்குகின்றது. காரணம், பகுதி பகுதியாக சில கட்டுரைகளின் வழி பண்டிதரைப்பற்றிய அறிமுகத்தை முதல் பகுதியில் பெறும் வாசகர்களுக்கு ஒரு தொகுப்பாக இக்கட்டுரை அமைந்திருப்பதே எனலாம். இக்கட்டுரையில் தமிழன் பத்திரிக்கையில் பல பகுதிகளிலிருந்து தகவல்களைப் பதிந்து அதற்கான தனது கருத்துக்களையும் வழங்கி சீர்திருத்தக்கருத்துக்கள் அக்கால கட்டத்திற்கு எத்தகைய தேவையாக அமைந்தன என்று வலியுறுத்துவதோடு அச்சீர்திருத்தக்கருத்துக்கள் தொடர்ந்து ஒரு சிலரால் பிற்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அயோத்திதாசர் அம்முயர்சிகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தமையின் முக்கியத்துவத்தைப்பதியும் ஆவணமாக இக்கட்டுரை அமைகின்ரது எனலாம். 

இந்த நூலில் தொகுப்பாசிரியர் புகைப்படங்களோடு வழங்கியிருக்கும் சில நூல்களைப் பற்றிய தகவல்கள் சுவாரசியமாக உள்ளன. பண்டிதர் எழுதிய "தென்னிந்திரர் தேச புத்த தர சாஷியக்காரர்கலில் ஒருவளாகிய பாரதமாதா ஔவையார் எனும் ஸ்ரீ அம்பிகையம்மன் வரலாறு", "அரிச்சந்திரன் பொய்கள்" என்பனவற்றோடு திரிசிரபுரம் ஆ.பெருமாள் பிள்ளை எழுதிய "ஆதி திராவிடர் வரலாறு" (1922) ஆகியவற்றைக்குறிப்பிட்டுச் சொல்லலாம். நான் தேடி மின்னாக்கம் செய்ய நினைக்கும் நூற்களின் பட்டியலில் இவையும் இப்போது அடங்கும். 

தென்னிந்திய ஆதிதிராவிட அமைப்புக்கள் பற்றிய செய்திகளும் "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற கருத்தியலின் ஆரம்பக்கால முயற்சிகளைப்பற்றிய தகவல்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 

கல்வி அறிவு ஒன்று மட்டுமே மனிதக்குலத்தை உயர்த்தக்கூடியது. அந்தக்கல்வி என்பது ஒரு நாட்டின் மக்களுக்கு எந்தப்பாரபட்சமும் இல்லாமல் வழங்கப்படவேண்டும் என்ற கருத்தினை அயோத்திதாசார் தனது காலத்தின் தேவையறிந்து வலியுறுத்தியிருக்கின்றார். அந்த வேண்டுகோள் இன்னமும் முழுமையாக நிறைவடையவில்லை என்பது கசப்பான உண்மையாகத்தான் உள்ளது. 

  • மக்களும் அவர்களின் நோக்கமும், என ஆராயும் போது,  
  • அறிவாளிகள் தாம் தங்கள் அறிவால் மக்களையும் நாட்டையும் வழி நடத்த வேண்டும், 
  • ஆட்சியிலுள்ளோர் ஆளுமையில் அறத்தைக் கடைபிடித்தலின் அவசியம், 
  • வணிகர் எத்தன்மைகளுடன் வணிகம் செய்யவேண்டும் 
  • வேளாளர் நிலத்தின் தன்மைக்கேற்ற விவசாயத்தை எவ்வாறு திட்டமிட்டுச் செயல்படுத்த வேண்டும் 
..என விவரிக்கும் பண்டிதரின் கருத்துக்களும், புராணக்கதைகள் என்பன மக்களை மூடர்களாக்காமல் மக்களின் அறிவு விருத்திக்கு உதவுவனவாக இருக்க வேண்டும் என விவரிக்கும் பகுதிகளும் ப்ளேட்டோவின் "தி ரிப்பப்ளிக்" நூலில் சாக்ரட்டீஸ் அடிமண்டீசுடன் பேசும் உரையாடல்களைத்தான் எனக்கு  நினைவுறுத்தின. 

சமூக சீர்திருத்தம் என்பது எல்லா மக்களுக்கும் சமதர்மமாக, எல்லோரும் குடிமக்களே என்ற பார்வையுடன், மக்களுக்கான நீதி குறையாது அமைந்திருக்க வேண்டியது அரசின் தலையாய கடமை . அதனை வலியுறுத்தும் பண்டிதரின் எழுத்துக்கள் முக்கியமானவை. அதிலும் குறிப்பாக இன்றைய நடைமுறையில் மிக மிகத் தேவை என்று நான் கருதுகிறேன். 

எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய பண்டிதரின் முயற்சியைச் சொல்லும் தொகுப்பாசிரியரின் கட்டுரை மிக அருமை. 

நூலில் இடம்பெற்றிருக்கும் தகவல்களுக்கு இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் ஒவ்வொன்றும் சிறப்பு சேர்க்கின்றன. நல்லதொரு முயற்சி. அயோத்திதாசர் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோர் அனைவருக்கும் மட்டுமல்லாது சமூக நீதி, சமூக நலன் என்ற வகையிலான ஆய்வுகளில் ஆர்வம் காட்டுவோருக்கும் இது நல்ல நூலாக அமைகின்றது. நல்லதொரு நூலை வாசித்த திருப்தியை இந்த நூல் வழங்கியிருக்கின்றது! 

நூல் கிடைக்குமிடம்;
கரிசல் பதிப்பகம்
வேளச்சேரி, சென்னை.
தொடர்புக்கு 04422451444
+919445376080
விலை ரூ 150/-

1 comment:

  1. அரிய நூல்களை தேர்ந்து விமர்சனம் செய்கின்றீர்கள் வாழ்த்துக்கள்.
    முனைவர் க. ஜெயபாலன்

    ReplyDelete