Friday, October 21, 2016

இது என் முதல் கொலை..

இது என் முதல் கொலை.. 

துரத்தி துரத்தி பெண்களை வெட்டுகிறாய்
வெட்டு வெட்டு
இரத்தத்தில் ஊறி சரியட்டும் உனது ஆண்மை..

குத்தி குத்தி பிய்த்து சதையுண்ணும்
மிருகத்தைவிட நீதான் பெரிய படைப்பில்லையா
மனிதனாயிற்றே சும்மாவா; குத்திப் போடு..

சாதியில் ஒரு குத்து
மதத்தின் மீது ஒரு குத்து
இந்த தேசத்தின் நெற்றியில் ஒரு குத்து குத்து..

ஒரு உயிர் இந்த தேசத்து மக்கள்முன்
பட்டப்பகலில் வெட்டவெளியில் கொன்று பறிக்கப்படுமெனில்
மடிவது பெண்ணல்ல, எம் தேசத்தின் மாண்பு;

அதனாலென்ன நீ குத்து 
அவள் இன்னொருவனின் தங்கை
வேறொருவனின் மகள், எமது தாய்மையின் ஒரு பெருந்துளி

அதனாலென்ன நீ குத்து 
நீ குடித்த பால்நாற்றம்
அவள்மீது கூட அடித்துவிடலாம்,

காலகன்று உனை ஈன்றப்
பெண்மை வயிறுபிடித்துனக்கு
சாபமிட்டிருக்கலாம்;

அதனாலென்ன நீ குத்து
ஒன்று இரண்டு மூன்று என இருபத்தைந்து முறை
ஒரு பெண்ணைக் கத்தியால் குத்துகிறாய்,

உன் பெருமை உன்மீதே யுனை காரி உமிழ்ந்திருக்கும்
நீ கண்டிருக்கமாட்டாய், உனது கண்களின் வெறித்தீக்கு
அதெல்லாம் இரையாகிப் போயிருக்கும்..

எனக்குப் போகாது..
அவள் கத்தியது எனது காதுகளை மௌனமாய்க்
கொல்கிறது; கண்களுள் தீயாய் எரிகிறது..

ஒவ்வொரு பெண் மடிகையிலும்
எனது அறம் எனை அறுக்கிறது
உயிருக்குள் அழுகிறேன் நான்; உனக்கெங்கே போனது உன் ஈரம்?

உனக்கு ஈரம் இல்லை
ஆண் எனில் தாயின் இன்னொரு பக்கம் என்பது
உனக்கில்லை; நீ கொல்.. குத்து.. மனிதமரு.. மாய்ந்து போ..

எங்கே போக.. உன்னை விடுவதாயில்லை
எனது கைகளை இதோ உயர்த்திப் பிடித்திருக்கிறேன்
எழுத்துக்களை எடுத்தெடுத்து அரிவாளாக வீசுகிறேன்

வீசி வீசி உனை வெட்டுகிறேன்
வெட்ட வெட்ட சரிவது – உனது உடலாகவோ
உதிரமாகவோவெல்லாம் இருந்துவிடவேண்டாம்

அந்த ஆண் திமிராக
உன் அறியாமையாக இருந்துபோகட்டும் போ..

போடா போ..
--------------------------------------------------
வித்யாசாகர்



No comments:

Post a Comment