Wednesday, December 9, 2015

ஆறுகள் எழுதிய ஆற்றுப்படை

-- கவிஞர் ருத்ரா.



கூவம் என்றாய்.
"நடந்தாய் வாழி கூவம்"
என்று பாடாவிட்டாலும்
படர்ந்து ஓடும் என் இடம்
மறைத்தாய்.
மலஜலம் கழித்த
முகவரி தந்தாய்.
கட் அவுட் வைத்து
கனவுகள் வளர்த்தும்
உன் கனலின் தாகம்
அவிந்து கிடந்தாய்.

நீர் எனும் உயிரின்
அடையாளம் அழிந்த‌
அடையாறு அங்கே
சாக்கடைச்சங்கமம்.
முகம் பார்த்து பூரித்த
கட்டிடக்காடுகள்
பிம்பம் காட்டியதோ
சமுதாய அழிவின் விளிம்பில்
நிகழ்ந்து கொண்டிருக்கும்
கருச்சிதைவு.

ஆசை பணமாகி
பேராசையின் வேதாளமாய்
தெறிக்க வைத்த
அலங்கோலம்
அழகு காட்டியதே நம்
பொருளாதாரம்.

வானம் "சிப்பைக்கிழித்து"
ஊழி பிழிந்து
ஊர்த்துவ தாண்டவம்
ஆடுகின்றது.
ஆறுகள் தன் ஆறுகள் கண்டன.
ஏரிகள் தன் கரைகள் தேட‌
ஏறி மிதித்தன.
வெள்ளம் வெள்ளம் வெள்ளம்
எங்கும் வெள்ளம்.
வங்காள விரிகுடா
கேட்டது பலிகடா.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்
தாழ்ந்து தவழ்ந்து
காதில் ஒலித்தது கேட்டிலையோ?
இயற்கையோடு கை குலுக்கு?
இயற்கை கை முறிக்கும்
உன் பேராசையின்
மொழிபெயர்ப்பே
இங்கு பேரிடர் ஆனது.
இங்கு பேரழிவு ஆனது.

எத்தனை வெள்ளம் வந்தாலும்
அதையும் மூழ்கடிக்க‌
உன்னிடம் உள்ளது அறிவாயோ?
அதுவே இங்கு மானிடம் ஆனது.
குப்பைகள் மூடி
அழிவு உன்னை ப‌யமுறுத்திய போதும்
நிவாரணங்கள் குவியும்..
மனிதம் எனும்
நம்பிக்கை இமயங்கள்
எங்கும் முளைக்கும்.
அச்சமில்லை அச்சமில்லை
அந்த‌
உச்சி எல்லாம்
உருகி உருகி வழிந்தாலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பதில்லையே!

பாடம் இதனைக்கற்று விட‌
உன் பள்ளிக்கூடங்கள்
கொஞ்சம் மூடிக்கிடந்தாலும்
கவலையில்லை.
புதிய சிலேட்டில்
புதிதாய் "அகர முதல.."
எழுதித் தொடங்கு.
அ..என்று
அணில் விளையாட்டு போதும்.
அ..என்பது
இன்றும் என்றும்
இனி
"அறச்சீற்றம்" மட்டுமே!




 
 
கவிஞர் ருத்ரா இ.பரமசிவன்

ruthraasivan@gmail.com
 

No comments:

Post a Comment