Sunday, December 27, 2015

கல்வெட்டுகள் உதிர்க்கும் செய்திகள்

--து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.


பேரிடர்கள் நிகழும்போது துயர் துடைக்கத் தொண்டுள்ளங்கள் இணைவதை நாம் கண்கூடாகப் பார்த்துவருகிறோம். அண்மையில் வெள்ளம் நிகழ்த்திய அழிவுத் தாக்கத்தின்போதும் அவ்வாறுதான் நடந்தது. களத்தில் நேரடியாக இறங்கி உயிர் காத்தும், உணவும் நீரும் அளித்தும் மனிதத்தை மலையளவு உயர்த்தினர். அடுத்து அழிவிலிருந்து மீளும் முயற்சிகளில் கைகொடுக்க நிதிக் கொடை தொடர்கிறது. சமுதாயத்தின் எல்லா நிலையினரிடமிருந்தும் நிதிக்கொடை. இவ்வகையில், பணியிலுள்ளோரும், பதவியிலுள்ளோரும் தங்களது ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியைக் கொடையாக அளிப்போர் பற்றிய செய்திகளைப் பார்க்கிறோம். ஒரு மாதம் அல்லது ஒரு நாள் ஊதியம் கொடையாகச் செல்கிறது. இவ்வகைச் செய்திகளை நாளிதழில் காண்கையில், கோவை-பேரூர் பட்டீசுவரர் கோவிலில் உள்ள கல்வெட்டு ஒன்று நினைவுக்கு வந்தது. அதில், ஒரு நாள் ஊதியம் கொடையாக அளிக்கப்பட்ட செய்தி தற்போதைய நிலைமையோடு இயைந்து நிற்பதைப் பார்க்கிறோம்.

கல்வெட்டு தொடர் எண் : 122 / 2004 (கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி-1)         

கல்வெட்டுப் பாடம்:

1.  ஸ்வஸ்திஸ்ரீ விக்கிரமசோழ தேவற்கு யாண்டு 2-ஆவது ஆளுடையார் இடங்கை நாயகீஸ்வரமுடையார் நடுவிற்சமக்கட்டோமும் அம்மன
2. க்காறரோமும் சேனாபதிகளோமும் நாயகஞ்செய்வா
3. ர்களோமும் மற்று இத்தந்திரத்தில் கொற்றுண்ண கடவாரெல்லாம் ஆட்டொரு நாளை படி குடுத்தோம் சந்திராதி
4. த்தவர் செல்வதாக கல்வெட்டிக் குடுத்தோம் நடுவிற்சமக்கட்டோம் பந்மாஹேஸ்வர ரக்‌ஷை


கல்வெட்டில் வருகின்ற கொங்குச்சோழ அரசன் இரண்டாம் விக்கிரம் சோழன் ஆவான். அவனுடைய இரண்டாம் ஆட்சியாண்டில் – கி.பி. 1258-இல் – கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. அவனது படைகளில் ஒன்றான நடுவிற்சமக்கட்டார் என்னும் படைப்பிரிவைச் சேர்ந்தவர்களும், அம்மனக்காறர் என்னும் பதவியிலுள்ளோரும், சேனாபதிப் பதவியிலுள்ளோரும், படைகளின் நிர்வாக மேற்பார்வை செய்யும் நாயகம் செய்வார் என்பவரும், அந்தத் தந்திரத்தில் (படைத்தளத்தில்) கொற்றுண்ணக்கடவாரும் (படைப்பிரிவின் ஊழியர் தொகுதி) ஆகிய எல்லாரும் ஆண்டுக்கொருமுறை (ஆட்டொரு) ஒரு நாள் வருவாயைக் கோவிலுக்கு அளிப்பதாகக் கல்வெட்டிக் கொடுத்துள்ளார்கள். இக்கொடைச் செயல் நிலவும் கதிரும் உள்ளவரை (சந்திராதித்தவர் செல்வதாக) நடக்கட்டும் என உறுதி ஏற்கிறார்கள். இக்கொடைச் செயல் தவறாது நடப்பதைப் பந்மாஹேச்வரர் என்னும் அதிகாரிகள் கன்காணித்துக் காப்பார்களாக என்னும் காப்புறுதியோடு கல்வெட்டு முடிகிறது.

பெரும்பதவிகளில் இருந்த பலர் கொடையளித்துள்ளது போலவே, அப்படையில் சிற்றாள் பணியில் இருந்த ஊழியர்களும் கொடையளித்துள்ளது வேறுபாடில்லா ஒற்றுமையைச் சுட்டி நிற்கிறது.  கல்வெட்டில் நாம் கண்டது மகேசன் தொண்டு. இந்நாளில் நாம் கண்டுகொண்டிருப்பது மக்கள் தொண்டு.





து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156
 
 
 

No comments:

Post a Comment