Sunday, December 27, 2015

மண்டிக்கிடக்கும் நினைவுப்புதர்கள்


கண்ட கனவுகள்
கொண்ட நினைவுகள்
மண்டிக்கிடக்கும் நிகழ்வுப்புதர்கள்
மனமெனும் காட்டிடத்தே!        {மலர்விழி}

​மனப்புழுக்கத்துக்கு​
உடல் வியர்க்கிறது
உடல் புழக்கத்துக்கு
மனம்  அயர்கிறது
இரண்டையும்  குழைத்தே
கட்டிய  கட்டிடம்                {தமிழ்த்தேனீ}

கட்டிய கட்டிடம்
பூட்டிய அறைகள்
புழங்காத உறவுகள்
படியாத பேரங்கள்
உரிமைச் சாளரங்கள்
உண்மை உணரா
உன்னதப் பாழ்வெளி            {மலர்விழி}

பாழ்வெளியின் சூழ்வெளிகளால்
ஊழ்வலியின் சூழ் வலிகளால்
ஆழியும் புகுந்தே பாழ்பட்டே போனது
கோழிமேடும் குப்பைமேடும்        {தமிழ்த்தேனீ}

குப்பைமேடும் கோபுரமும்
தப்பைத் தானுணர்ந்து
நட்டாத்தில் போனகதை நாடறிய
ஒப்புமோ நட் (ஷ்) டக்கணக்கு        {மலர்விழி}

கணக்கெல்லாம் எழுதினாலும்
பிணக்குதான் தீரவில்லை
மக்களுக்கும்  அரசுக்கும்
எக்கணக்கும் இல்லை நேர்மையாய்     {தமிழ்த்தேனீ}

நேர்மையாய் நேரியதாய்
தார்மீகமாய் செய்யாததை
பார்மீது காட்டிடவே மண்மீது
பிராண்டியதோ பேய்மழையே!?        {மலர்விழி}

பேய் மழையும் பேரிடராய்
ஆனதற்கு காரணமே
பாய்முதல் படுக்கை வரை
சுருட்டியதன் காரணமே
செத்துப்  போன  மனிதத்துக்கு
சொத்து சேர்க்கவே            {தமிழ்த்தேனீ}

சொத்துச்சேர்க்கவேதான்
வெத்துவேட்டுகளைக்கூட்டிகிட்டு
மொத்துமொத்தாய் மொடாமொடாவாய்
கொத்துக்கொத்தாய் கொள்ளைக்கூட்டமாய்
ஏத்திவச்சிவினைதானே அரசியல் கட்சிகளால்
ஆனதுவே ஆனதுவே கபளீகரம்!?        {மலர்விழி}

கபளீகரம் செய்ததெல்லாம் போதாதா
கடல் வழியே​ சுனாமியாய்
பூமிக்குள்ளிருந்து பூகம்பமாய்
இன்னும் தொடர்கிறீர் நடிப்பின் உச்சம்
அடுத்து  ஆட்சியைப் பிடிக்க        {தமிழ்த்தேனீ}

அடுத்து ஆட்சியைப் பிடிக்க
அரசியல்வாதிகள் போடுவர் திட்டம்
இவரது குட்டை அவர் உடைக்க
அவரது முகத்திரையை இவர் கிழிக்க
குப்பையைக் கிளறி கிளறி
தாங்கவியலாத முடை நாற்றம்
கிடைப்பதென்னவோ மக்களுக்கு
நிரந்தரமாக என்றுமே பட்டை நாமம்     {தேமொழி}

பட்டையும் நாமமும் நெற்றியில் மட்டுமே
மொத்த உடலும் மனமும் குப்பைதான்
சட்டை செய்யாத  மனிதரிவர்
குட்டையும்  குளமும் ஆக்ரமித்தாலும்
வாக்கு வேட்டை மட்டுமே குறி
முடை நாறாமல் என்ன செய்யும்        {தமிழ்த்தேனீ}

என்ன செய்யும் எப்படிச்செய்யும்
இன்னபிறயாரரிவார் காலமகள்
தின்னமாய் பதிலுரைப்பாள் அவருந்தான்
திருந்துவரோ மனதுள்ளும் மனிதராய்?     {மலர்விழி}

மனிதராய்ப் பிறக்கவே
மாதவம் செய்தோமென்றார்
மனிதராய் வாழ்ந்திட
மா மாதவம் வேண்டுமன்றோ!        {அன்பு ஜெயா}

மா மாதவத்தை மன்பதையில் ஈண்டு
மாமாதவம் என்றே மாறியுணர்ந்தார்
மாமாவேலைக்குப் பலர்வந்ததாலே
மா மாதவத்தோர் மறைத்தனர் நொந்து     {மலர்விழி}

நொந்து போன மக்களுக்கு ஆதரவாய்
மா  மா   பெரும்  சேவைக்கு
மனிதம்  துணை வந்ததால்
பேரிடர் மா மதயானையும்
மறைந்தே   நொந்ததே            {தமிழ்த்தேனீ}

நொந்ததே என்று தளர்பவருக்கும்
வந்திடும் ஓர் நாள் புது வாழ்வு
கடந்ததை எண்ணிக் கலங்காது
இழந்ததை எண்ணிப் புலம்பாது
வருவதை எதிர்கொள்வோருக்கு
வாழ்வில் என்றுமே தாழ்வில்லை         {தேமொழி}

தாழ்வில்லை என்றே உணர்ந்து
தளராது முயல்வோரே
தரமான  தருணம் இது
தலைதூக்கி எழுந்து வாரும்
மனிதம்  தலை தூக்கினால்
மற்றவை   தலை கவிழும்            {தமிழ்த்தேனீ}

கவிழும் தலை காசினியில் நிமிர்ந்திடவே
கங்கணம் கட்டி வந்திடும் உள்ளங்கள்
கணக்கின்றி உள்ளனவே காண்போம்,
கண்குளிர்வோம், கவலை அகற்றிடுவோம் {அன்பு ஜெயா}

அகற்றிடுவோம் குப்பை நினைவுகளை
கூடவே   குப்பை  மலைகளைகளையும்
நாடு செழிக்கட்டும்  நாற்றம் ஒழியட்டும்
பீடு நடைபோடுவோம்     காசினியிலே    {தமிழ்த்தேனீ}

காசினியிலே கரங்கள் பலவுண்டு
மாசில்லா மனங்கொண்டு நெகிழ்ந்து
பாசிபடியா பளிங்கு உணர்வதுகொண்டு
வாசமலராய் வந்தாரே உதவிக்கரங்களாய் {மலர்விழி}

உதவிக் கரங்களாய் நிதமும் வாழ்ந்திடுவீர்
மதமான பேய்தனையே மன்பதையில் நீக்கிடுவீர்
இதமான இன்சொற்கள் என்றும் பேசிடுவீர்
எதுவுமில்லை இவ்வாறு வாழ்வதற்கு ஈடு! {மேகலா}

ஈடு இணையற்ற மானுடப் பிறவியிலே
தேடு நல்லோரின் நட்பினையே நீஎன்றும்
கூடு அறவோர்கள் அவைக்களம் தன்னிலே
ஓடாதோ தீமை உனைவிட்டு வெகுதூரம்?! {மேகலா}

வெகுதூரம் சென்றாலும் அருகினிலே நின்றாலும்
மிகுந்த அன்பினையே நம்மீது பொழிந்துநிற்கும்
அன்னை அவள்தானே நமக்கெல்லாம் ஆதாரம்
என்றும் அவளைநாம் போற்றிடுவோம் பொன்போலே! {மேகலா}

பொன்போலே  மனமிருக்க பேராசை
செம்பு கலந்து   கனமாக ஆக்கி
விற்று பொருளீட்டி சேர்த்து வைத்தால்
மண்ணாகும்  கடலில் கலந்து        {தமிழ்த்தேனீ}

கலந்து மகிழவே கண்கொண்டு போற்றவே
நொந்து நூலானார் காரணிகளானாரே
வெந்த மனவேக்காடுகள் வெருண்டோடியதே
வசந்தமெனவந்தாரைவருடிநிற்போம்வாஞ்சையாய் {மலர்விழி}

வாஞ்சையாய் வருடி நிற்க
நாம் தயார்  வருடலை
பூஞ்சையாய்  மனம் கொண்டோர்
ஏற்பரோ  வாஞ்சையென்றே         {தமிழ்த்தேனீ}

வாஞ்சையென்றே எண்ணி ஏமாறாதீர்
கொஞ்சமேனும் கருணையற்ற பிள்ளை
நெஞ்சமதில் அன்பின்றி துரத்தியதால்  
பஞ்சைப் பராரியாய் அலையும் பெற்றோரே
நஞ்சு தோய்த்து அவர் உதிர்க்கும் இன்மொழியை 
வாஞ்சையென்றே எண்ணி ஏமாறாதீர்     {தேமொழி}

ஏமாறாதீர்​  வஞ்சப் புகழ்ச்சியினை
அள்ளித் தெளிப்போரிடம் ஏமாறாதீர்
அழ அழச் சொல்வோர்  தமர்
அதிகமாய்ப் புகழ்வோர்  அளிக்கும்
விஷப் போதை தலைக்கேறும்
ஆயினும்  உயிர்  குடிக்கும்        {தமிழ்த்தேனீ}

உயிர் குடிக்கும் துணிவு பெற்றது
போலி மதவாதிகளின் கூட்டம்
கடவுள் எமக்கே உடைமை என்றே
கூசாது பொய்யுரைத்து போராட்டம்
மாந்தர் யாவரும் சமம் என்றாலோ
சகித்திடாது செய்வர் ஆர்ப்பாட்டம்
உண்மையை மறைத்து பழியுரைத்து
நன்றே நடத்திடுவர் பித்தலாட்டம்        {தேமொழி}

பித்தலாட்டம் செய்கின்ற
எத்தருக்கே   பித்தலாட்டம்
நன்கு வரும் மாந்தரெல்லாம்
சமம் என்றே வாய் வீச்சு
அதிகம்  வரும்  மேடைப்
பேச்சு வீரர்கள் கீழே இறங்கினால் 
கடவுளுக்கும்   மனிதனுக்கும்
பணம்தானே  சமம்
எல்லாமே  பணம்            {தமிழ்த்தேனீ}

எல்லாமே பணம் எல்லாமே பணம்
பிச்சாண்டியை மதிப்பவருண்டோ
பெருமைமிகு பெரியகோவிலில்
சொக்கரும் மீனாளின் கருணை வேண்டி
சிறப்பு தரிசனம் செய்யச் சென்றால்
சொக்கருக்கும் வேண்டுமந்த பணம்
காசு பணம் துட்டு மணி மணி        {தேமொழி}

மணிமணியாய் பிள்ளைகள்
பிணியற்ற பெருஞ்செல்வம்
துணிவான மனச்செல்வம்
கனிவான வாழ்க்கைத் துணை
அத்துணையும் துணையிருந்தால்
பணம் என்னடா பணம் பணம்
குணம்தானடா நிரந்தரம்            {தமிழ்த்தேனீ}

நிரந்தரம் ஏதெனத்தேடித்தேடியே
பம்பரமாய்ச் சுற்றியே வந்திடினும்
தம்புராக்கொண்டே மீட்டியே அலைந்தாலும்
தம்பிரானருள் தேடிவரும் நல்லான்மாவிடத்தே {மலர்விழி}

மாவிடத்தே கைக்கொள்ளினும்
பூநாகமாயினும் பூவிடத்தே
உள் கொள்ளினும் ஆவிடத்தே
கொள்கின்ற பாலாயினும்
திரியும் தீயோர் கண்பட்டால்        {தமிழ்த்தேனீ}

கண்பட்டால் வருந்தீங்கைக் காட்டிலுமே பிறர்மனந்தான்
புண்பட்டால் பெருந்தீங்கு வந்திடவே காண்கின்றோம்
பண்பாட்டால் நற்பண்பைப் பாங்கோடு காத்துநின்றால்
மண்வந்த பயனைத்தான் மானுடமும் எய்தாதோ? {மேகலா}

எய்தாதோ  மானுடம் உய்யும்
இலக்கு  தீயவை கண்டால்
விலக்கி மானுடம் வென்றிடவே
மனதை   இளக்கி மனிதம்
போற்றினால் மண் வந்த பயன்        {தமிழ்த்தேனீ}

பயனை நாடாது தொண்டு செயும் உள்ளத்தார்
தயவு பூமிக்குத் தாராளமாய்க் கிடைத்தால்
உலகம் உய்வடையும் மக்களும் உயர்வடைவர்
கலகம் ஒழிந்தேதான் குவலயமும் சிறந்தோங்கும்! {மேகலா}

சிறந்தோங்கும் என்றெண்ணி
சீர்மைப்படுத்தும் போதெல்லாம்
அறந்தாங்கி ஆன்மபலம்  பெற்றே
பிறந்தோங்கி நிற்கும்  மனிதம்        {தமிழ்த்தேனீ}

மனிதம் மலர்ந்திடவே மதவெறியும் ஒழிந்திடவே
புனிதம் அடைந்துவிடும் நம்புவியும் ஓர்நாளில்
கனிபோல் நல்லவைகள் நம்முன் குவிந்திருக்க
இனியும் அல்லவையாம் காய்கவர்வ தெதற்காக? {மேகலா}

கவர் தெதற்காக  பாடுபட்டு
உழைத்து சேர்த்த  அடுத்தவர்
செல்வத்தை ஈடில்லா உயிரையும்
போக்கி  கேடு விளைவிக்கும்
தீச்செயலாம்  இழிவான பாவங்கள்
சேர்த்து   மனசாட்சியியையும்
சேர்த்தே அழித்து நீதியின் முன்னால்
பதுங்கவா மாட்டியபின் கயவராய்க்
கூண்டில்  நின்று தலைகுனிந்து
குற்றம்  இழைத்தவராய்
வெதும்பவா   மன்னிப்பு கேட்டு        {தமிழ்த்தேனீ}

மன்னிப்பு கேட்பவன் மனிதனென்றால்
மன்னிப்பவன் மாநிலத்தில் மாமனிதன்
எண்ணிப் பார்த்தால் இப்புவியல்
கண்டிடலாம் மனவமைதி மாந்தர்களே     {அன்பு ஜெயா}

மாந்தர்களே தவறிழைப்பார்
மன்னித்தால் மகேசனாகிறார்
கண்ணி வைக்கும்  குணத்தோரே
எண்ணிக்  குமைந்து  மந்தராகிறார்     {தமிழ்த்தேனீ}

எண்ணிக்  குமைந்து  மந்தராகியவரும்
பண்பினில் சிறந்தால் மாந்தராகிடுவார்
அன்பில் திளைத்துப் புனிதராகியே
மன்பதை காத்திடும் தன் மனச்செல்வம்    {தேமொழி}

மனச்செல்வமே மிகுபெருமை என்றும்
தனச்செல்வமே செருக்குடைத்து ஞான்றும்
தினஞ்செல்லுமே ஊசலாட்டமாய்த் தோன்றும்
கனம்விலகுமே மாயைத்திரை         {மலர்விழி}

மாயத்திரை விலகினாலே
மாயவனை அடைந்திடவே
மங்கலமாய் வழிபிறக்கும்
சங்கமமா குமான்மாவே             {அன்பு ஜெயா}

ஆன்மாவே ஆனந்தங்காணும்
ஆன்மத்தேடலை ஆரம்பித்துவைக்கும்
ஆன்மநிவேதனமாய் ஆராய்ந்துணரும்
ஆன்மாவே தானாய் ஆடியடங்கும்    {மலர்விழி}

ஆடியடங்கும் ஆன்மாதான்
அவனடியைச் சேர்ந்தபின்னே
நாடியே அனுபவிக்கும்
நாதனின் அருளைத்தான்            {அன்பு ஜெயா}

​அருளைத்தான் தேடியே அவன்தாள்​
பணிந்தோர்க்கு  அவன் கருணை
முழுவதுமாய் கிடைத்தே தீரும்
அவநம்பிக்கை தவிர்            {தமிழ்த்தேனீ}

தவிர்ப்பன தள்ளி நாமும்
ஏற்பன ஏற்போம் எப்போதும்
சேர்ப்பன சேர்ப்போம் நிதமும்
பார்ப்பனவெல்லாம் பண்புடனாகட்டும்    {மலர்விழி}

பண்புடனாகட்டும் என்று முடிவெடுத்து
நல்லன சேர்த்து அல்லவை தவிர்த்தாலே
பண்புடன்  ஆகும் முடிவிலே 
நிச்சயம் அறம் பெருகும்            {தமிழ்த்தேனீ}

பெருகும் தண்ணீரைத் தக்கவண்ணம் காத்திட்டால்
கருகும் பயிர்காத்து வேளாண்மை செய்திடலாம்
விரும்பி இப்பணியை அரசுந்தான் ஏற்றிட்டால்
அருகிடுமே பஞ்சமும் பசிப்பிணியும் மாநிலத்தே!    {மேகலா}

பசிப்பிணியும் மாநிலத்தே ஒழிந்திடுக 
பல்லுயிரும் இன்புறவே நல்லறம் ஓங்கிடுக
பாரெல்லாம் அன்புநெறி தழைத்திடுக
பாங்குடனே சிறந்தென்றும் வாழ்ந்திடுக     {தேமொழி}

வாழ்கவே வளர்கவே மனிதநேயம்
வாழ்வாங்கு நம்மினம் வாழ்ந்திடவே
தாழ்கவே தருக்கரின் சூழ்ச்சிகள்
வாழ்கவே தமிழென்றும் நலமுடனே        {அன்பு ஜெயா}

நலமுடனே மாந்தரெலாம் வாழ்தல் வேண்டும்
பலகலைகள் பாரினிலே செழிக்க வேண்டும்
கலகங்கள் இல்லாத வையம் வேண்டும்
திலகமாய்த் தமிழதிலே திகழ வேண்டும்!        {மேகலா}

வேண்டும் என்றே வேண்டிக் கேட்போர்க்கு
விருப்பமானதை அளித்திடவே அவர் தகுதி
ஆராய்ந்து அதற்கேற்ப  அளிப்பவள்தான் சக்தி
ஆகவே பெண்களெல்லாம் சக்தி வடிவே        {தமிழ்த்தேனீ}

சக்தி வடிவென்றே பாடலெழுதுவார் ஒரு சிலர்
மறைப்போசைப் பாடலெழுதுவார் மறு சிலர்
பெண்ணுக்குப் பரிந்து பாடலெழுதினார்
இது பொல்லாத உலகம் புள்ள
இத புரியாட்டா வாழ்வே இல்ல
அடி அம்மாடி சின்ன பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு
என்றார் சொல்வித்தகர் தந்தை அன்று
பெண்ணை அவமதிக்கும் பாடலெழுதுகிறார் 
அவர் வளர்த்த அருமை மகனார் இன்று
பீப் பீபீப்  ... பீப்  பீபீப் ... பீப்  பீபீப் ...
இது பொல்லாத உலகம் புள்ள
இத புரியாட்டா வாழ்வே இல்ல
அடி அம்மாடி சின்ன பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு
பீப் பீபீப்  ... பீப்  பீபீப் ... பீப்  பீபீப் ...             {தேமொழி}

பீப்பீ  என்றே நாதஸ்வரம் ஒலிக்க
கோப்பிலே கையெழுத்திட்டு 
உறுதி செய்த திருமணம்
பதிவு அலுவலகத்துக்கு பக்கத்தில் கோயிலாம்    {தமிழ்த்தேனீ}

கோயிலில்லா ஊரில் குடியிருந்தால்
கோலாகல மாய்மண முடிக்க
வாயிலேது பதிவு இல்லையேல்
வாழ்நாளில் மனமொத்தல் போதுமே!        {அன்பு ஜெயா}

போதுமே என்று நினைத்தாலே
பொன்னாகும் வாழ்க்கை மீறுவோர்
வீழுவார் வஞ்சகர் வலையிலே
ஆழுவார் எப்போதும் துயரிலே            {தமிழ்த்தேனீ}

துயரிலே உறுதியிழப்பார் நட்பாம்
பயிரிலே செழித்து எழுவார்
கயறிலே தொங்கிமாய நினைத்தாரும்
அயர்வினின்றும் மீள்வர் எழுந்து            {மலர்விழி}

எழுந்து நடக்கும் குழந்தை கீழேயும்
விழும் விழுந்தாலும் மீண்டும் எழுந்து
ஓடும் இடறினாலும் எழும் திறமை
பெறும் அதுதானே  வெற்றி            {தமிழ்த்தேனீ}

வெற்றி கொண்டாலும் தோல்வியே கண்டாலும்
சற்றும் தங்குணத்தில் மாறாது நின்றிடலே
கற்றோர்க்கு அழகாகும் கவின்மிகு பண்பாகும்
சுற்றமாய் அவர்தம்மை இப்புவியும் சுற்றிநிற்கும்!     {மேகலா}

நிற்கும்  என்றும் நிற்கும் நிரந்தரமாய்
வெற்றி எப்போதும்  நம்முடனே
கற்கும்  கல்வியினால் பெறும்
வித்தையினால் நிற்கும் வெற்றி            {தமிழ்த்தேனீ}

வெற்றியை அழைத்துவரும் அரிய முயற்சியினைப்
பற்றிக் கொண்டவர்தாம் பாரிலே உயர்ந்திடுவார்
புகழும் பதவியுமே அவர்வாசல் வந்துநிற்கும்
சகமும் அவர்சொல்லைத் தட்டாமல் கேட்டுநிற்கும் {மேகலா}

நிற்கும் போட்டியில் அனைவரும்
ஜெயித்தால் அதென்ன போட்டியா 
அதற்கொரு பேட்டியா  ஊடகம்
நினைத்தால் நிற்காததும் நிற்கும்             {தமிழ்த்தேனீ}

நிற்கும்  தானாய் நிற்கும் என்றே
அநியாயங்களைக் கண்டும் காணாமலும்
போனதால்  வந்த  வினை
அறம் பாடினால் நிச்சயம்  நிற்கும்              {தமிழ்த்தேனீ}



1 comment:

  1. நானும் மலர்விழி அவர்களும் விளையாட்டாய் போட்டி போட்டுக்கொண்டு எழுதிய கவிதகள் இந்தக் கவிதைகள் உடனடிக் கவிதைகள்

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

    ReplyDelete