Wednesday, November 10, 2021

புத்தகம்


-- கி.ரமேஷ்


books.jpg
சாய்வு நாற்காலியில்
தலைசாய்த்து
சுகமான தூக்கம்

நாஞ்சில் மணம் பரப்பி
மார்பில் கிடக்கிறார்
நாஞ்சில் நாடன்
 
லேசாய்ச் சாய்ந்த முகத்தில்
சரிந்து கிடக்கிறது
மூக்குக் கண்ணாடி.

படித்த புத்தகம்
மனதில் பேசியதில்
மெல்லிய புன்னகை

என் முறை எப்போது
என்று தவம் கிடக்கும்
அலமாரி புத்தகங்கள்

கிடக்கும் நிலைகண்டு
மெலிதாய் சிரிக்கிறார்
பொக்கைவாய் கி.ரா
 
சிறு வயதில்
சின்னதாய் தொடங்கி
நிறுத்த முடியாது போனது

மேசையிலும் கட்டிலிலும்
எங்கெங்கு நோக்கினும்
விரிந்து கிடக்கும் புத்தகங்கள்

மேலதிகமாய் வாங்கி விட்டோமென
திருப்தி கொள்கிறதா
மனசு?

புத்தகக்கடையைக்
கடந்து செல்ல முடிகிறதா
கால்கள்?

பார்த்துத்தான் வைப்போமென
இழுத்துச் சென்றன
கண்கள்

வாங்கித்தான் வைப்போமென
கைகள் நீண்டபோது
தடுக்கத்தான் ஆளில்லை

வைக்க இடமில்லையென
மனைவி புலம்புவாள்
ஏமாற்றத்தான் வேண்டும்.

எத்தனை எத்தனை கோடி
இன்பமாய் வைத்தாய் இறைவா
புத்தகமாய்!

எத்தனை ஜென்மம்
கடந்தாலும்
முடிக்க முடியாத முடிச்சுடன்!

சாய்ந்தால் 
தலை சாய வேண்டும்
மடியில் புத்தகத்தோடு

வேண்டேன் ஒருபோதும்
இனி ஒரு வரம்
போதும் இந்தப் புத்தகம்!

-- கி.ரமேஷ்








No comments:

Post a Comment