Tuesday, February 23, 2021

நான் அனுப்புவது ... உள்ளம்

போதுமே போதையே! 

--- சொல்லாக்கியன்


சந்தனக் கட்டிலா பட்டின்  மெத்தையா?
நின்றொருக் கட்டில் பட்டாலே போதுமே!

கோரைப் பாயா இலவம் அணையா?
முன்னம் தானை முள்ளும் போதையே!

கம்பளிப் போர்வையா தோகைத் துகிலா?
சிலிர்மயிர்க் கால்கள் நீவ்விரல் தனலே!

வானின் இரவா நிலவின் பிறையா?
கூந்தல் கருமை நுதலே நிறையே!

சிமிட்டும் மீன்களா சீண்டிடும் தென்றலா?
சிரிக்கும் கண்களும் சுவாசமும் கன்னலே!

பவழச் சிப்பியா பவள முத்தமா?
குவளை இதழிடை மொத்த சொத்துமே!

பலவின் சுளையா குளவியின் அலைவா?
அமிழ்தின் சுவையே அதரமே நாவே!

கொய்யாக் கனியா கொஞ்சும் கிளியா?
நெய்யாய்ப் பொலியும் கெஞ்சும் கன்னமே!

குடவறைச் சிற்பமா கருவறைக் கற்பமா?
மௌனியாய்த் துடிக்கும் மோகனச் செவ்வியே!

மாவின் கனியா திராட்சைப் பழமா?
இரண்டும் இணைந்த அழகின் அணியே!

இனியும் சொல்லல் கவிதைக்கு அழகா?
தனியாய் அள்ளல் கொள்ளல் இனிதே!

---

அமைதிப்பெண் 

அடியும் முடியும் அறியா பயணமே
இடையில் நெஞ்சில் மூழ்கும் சலனமே.

நித்தியப் பிரணவமே சத்தியப் பிரமாணமே
நித்தில முகிழ்மனமே கத்தூரி புகழ்மணமே

சிந்தா மணியே நந்தா ஒளியே
தண்மைக் கதிரே தாரகைக் குதிரே

ஆன்மமே அண்டமாய் அகலும் அற்புதமே
அனைத்தும் தானாய் உணரும் கற்சிலையே

அன்பும் காதலும் அருளும் பொழிவதே
என்பும் ஆனந்த ஊற்றாய் வழிவதே

அசைவிலா இசையே நசையிலா பசையே
இமையிலா கண்ணே அமைதிப் பெண்ணே!

---

ஐந்திரம் 

நின்
விழி நோக்கு 
குறிஞ்சி இலக்கியம்

மென்
இமை சிமிழ்ப்பு
முல்லை இசைப்பண்

புல்
கண் நகைப்பு
மருத ஓவியம்

கொல்
கடைக் கூர்ப்பு
பாலைக் கூத்து

நில்
நேர்ப் பார்வை
நெய்தல் சிற்பம்

உன்
பெயர் என்ன தமிழியோ?
நிலை
உயிர் அன்ன தமிழமோ? 

---

மடல் 

தாழம் மடலதை விரித்து
நீவிடப் பன்னீர் தெளித்து
பீலியால் தடவி இறுத்து 

செஞ்சாதி மொக்கை எடுத்து
அகிற்கோல் பட்டுவளை தொடுத்து
சந்தனக் கத்தூரி தோய்த்து

தமிழக் காதல் வரையவா
அமிழ்தும் தேனும் உறையவா
இடமும் பொழுதும் மறையவா

உடலடங்க உயிர்துலங்க 
ஒளிவிளங்க களிசுரக்க 
வெளிமுயங்க தூங்கலாமே!

---




No comments:

Post a Comment