Saturday, February 20, 2021

"கரிகாலக் கண்ணன்"

"கரிகாலக் கண்ணன்"

-- மா.மாரிராஜன் 


யார் இவர்?
ஆதித்தக் கரிகாலனின் மகன்.

என்னது?
ஆதித்தக் கரிகாலனுக்கு மகனா..?
அவருக்குத் திருமணம் ஆகிவிட்டதா..?

பலருக்கும் இச் செய்தி அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது..
காரணம்...
பொன்னியின் செல்வன் தாக்கம் அப்படி..
பொன்னியின் செல்வனைச் சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, வரலாற்றுத் தரவுகளை மட்டும் பார்ப்போம்.
அவசியம் நந்தினியையும்,  ஆதித்தக்கரிகாலனின் ஒருதலைக் காதலையும் ஒதுக்கிவிட்டு, நிஜ வரலாற்றுத் தரவுகளை அறிவோம்.

ஆதித்தக் கரிகாலன்... 
சுந்தரச் சோழனின் மூத்த மகன். இராஜராஜசோழனின் உடன் பிறந்த சகோதரர்.
தனது தந்தை சுந்தரச் சோழனின் காலத்திலேயே இளவரசராகப்  பரகேசரி பட்டம் பெற்று, 
பாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி என்ற விருதுப்  பெயருடன் இணையரசராக இருந்துள்ளார்.
ஐந்து ஆண்டுகள் தனக்கான ஆட்சியாண்டுடன் சோழ தேசத்தின் இணையரசராக இருந்துள்ளார்.
இவரது ஆட்சிக்காலம் கி.பி 966 - 971.

இவர் திருமணம் ஆனவரா?
மரபுப் படியும், நியதிப்படியும், கிடைத்திருக்கும் தரவுகளைக் கொண்டும் இவர் திருமணம் ஆனவர்தான்.
அரச பதவியேற்பு  மரபுப்படி; ஒருவர் அரசனாகவோ அல்லது இணையரசனாகவோ பதவி ஏற்கவேண்டுமெனில் அவர் நிச்சயமாய் திருமணம் செய்திருக்க வேண்டும். 
அதாவது தனது மனைவியுடனேயே பதவி ஏற்பு சம்பிரதாயங்கள் நடைபெறும். ஆகவே, இணையரசனாய் இருந்த ஆதித்த கரிகாலன்  திருமணம் செய்தவராக இருக்க வேண்டும்.
ஆதித்த கரிகாலன் இறக்கும் போது அவருக்கு தோராயமாக வயது 27க்கு மேல் இருக்க வேண்டும். அவரது தம்பி இராஜராஜருக்கே திருமணம் ஆகியிருப்பதால், ஆதித்தருக்குத் திருமணம் ஆகியிருக்க வேண்டும்.

கிடைத்திருக்கும் தரவுகள்:
---
---

---





திருவண்ணாமலை -அண்ணாமலையார் கோவில் கருவறை தெற்குச்சுவற்றில் கோப்பரகேசரி வர்மனின் ஆறு சாசனங்கள் உள்ளன. 
அனைத்தும் மூன்று மற்றும் நான்காம் ஆட்சியாண்டுகள் (ஆதித்தரின் ஆட்சிக் காலத்திற்குள்) காலத்திற்குட்பட்டவை. 
இவற்றில் நான்கு சாசனங்கள் கோப்பரகேசரி என்றும், மூன்று சாசனங்கள் வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி என்றும் தொடங்குகின்றன  [1902.. no. 469 - 474]. 
இவற்றில்,  470,  471, 472 இம்மூன்றும் ஒரே எழுத்தமைதியில் ஒரே காலத்தில் வெட்டப்பட்டுள்ளது.

முதல் சாசனம் ( 470)
கோப்பரகேசரியின் மூன்றாம் ஆண்டில் சேரமனார் தேவியார் ஒருவர் நிவந்தம் தருகிறார்.

இரண்டாம் சாசனம் ( 471)
வீரபாண்டிய தலைகொண்ட கோபரகேசரியின் மூன்றாம் ஆண்டு. வாணன் மணிகண்டன் என்பவர் நிவந்தம் தருகிறார்.

மூன்றாம் சாசனம் ( 472)
கோப்பரகேசரி சாசனம்.. பெருமானடிகள் தேவியார் நிவந்தம் தருகிறார்.

பெருமானடிகள் தேவியார் என்றால், கோப்பரகேசரியின் மனைவி.. அந்த கோப்பரகேசரி ஆதித்த கரிகாலனாகவே இருக்க வேண்டும். மூன்று சாசனங்களும் ஒரே எழுத்தமைதியில் இருப்பதாலும்,  இரண்டாம் சாசனம் ஆதித்தகரிகாலனுடையது என்பது உறுதி செய்யப்படுவதாலும், ஆதித்த கரிகாலனின் ஆட்சியாண்டிற்குள்ளே இவை இருப்பதாலும், இம்மூன்றும் ஆதித்த கரிகாலனின் சாசனங்களே எனக் கொண்டால் மூன்றாம் சாசனத்தில் வரும் பெருமானடிகள் தேவியார் என்பவர் ஆதித்தகரிகாலனின் மனைவிதான் என்பது உறுதியாகிறது.

இப்போது,  கரிகாலக்கண்ணன் யார்?
இராஜராஜனது ஆட்சிக்காலத்தில் சோழநாட்டின் ஊர் பகுதிகள் வளநாடுகளாகப்  பிரிக்கப்பட்டன. வளநாடு என்பது தற்போதைய மாவட்டம் போன்றது.  இந்த வளநாடுகளின் பெயர்கள்  அரசன் அல்லது இளவரசனின் பெயராலோ அல்லது அவர்களின் விருதுபெயராலோ அழைக்கப்பட்டது.  அருமொழி தேவ வளநாடு, இராஜராஜ வளநாடு, இராஜேந்திர சிம்ம வளநாடு இவ்வாறு பெயர்கள் இருக்கும்.

தஞ்சை பெரியகோவிலில் உள்ள இராஜராஜனின் கல்வெட்டில், "கரிகாலக் கண்ண வளநாடு " என்ற ஒரு வளநாடு இருக்கிறது. யார் இந்தக் கரிகாலக் கண்ணன். நிச்சயமாய் இவர் ஓர் அரசகுமாரன்தான். அப்படி இருந்தால்தான் அவர் பெயரை வளநாட்டிற்குச் சூட்டமுடியும்.

யார் இந்த அரசகுமாரன் கரிகாலக்கண்ணன்?
சோழர் வரலாற்றைத் தெளிவான சான்றுகளுடன் தொகுத்த திரு. நீலகண்ட சாஸ்திரி அவர்கள் கரிகாலக் கண்ணன் என்பவர் ஆதித்தக்கரிகாலனின் மகன்தான் என்கிறார். தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதிகள் 2 ஐ பதிப்பித்த வெங்கையா போன்ற தொல்லியல் அறிஞர்களும்,  கரிகாலக் கண்ணன் என்பவர் இராஜராஜனின் மூத்த சகோதரனான ஆதித்தக் கரிகாலனின் மகனாக இருக்க வாய்ப்பு அதிகம் . இவர் இராஜராஜன் காலத்தில் வாழ்ந்தார் என்று எழுதியுள்ளார்கள்.

முடிவாக, ஆதித்தக் கரிகாலன் திருமணமானவர். அவருக்கு ஒரு மகன் உண்டு.  அவர் பெயர் கரிகாலக் கண்ணன்.
  


Refrences:
S.i.i.vol 2 page 460.
The cholas.pa..163
S.i.i. vol 8.
No 58,59,60.






No comments:

Post a Comment