Sunday, February 28, 2016

குறுந்தொகையில் புதுக்கவிதை - பாட்டுக்குப் பாட்டு

-- துரை.ந.உ.



இருள் திணிந்து அன்ன ஈர்ம் தண் கொழு நிழல்
நிலவு குவித்து அன்ன வெண் மணல் ஒரு சிறை
கரும் கோட்டு புன்னை பூ பொழில் புலம்ப
இன்னும் வாரார் வரூஉம்
பன் மீன் வேட்டத்து என் ஐயர் திமிலே
-- குறுந்தொகை 123

நடுஇரவின் மைஇருளுள் நீளும் நிழலாய்
நெடுநிலவின் பால்ஒளியில் வெள்ளை மணலாய்
புன்னைமர மத்தியில் பூத்திருந்தேன் நான்உனக்கு
என்எண்ணம் ஏன்இன்னும் இல்லை உனக்கு
அண்ணன்மார் வந்ததுதான் தப்புக் கணக்கு​





பைம் கால் கொக்கின் புன் புறத்து அன்ன
குண்டு நீர் ஆம்பலும் கூம்பின இனியே
வந்தன்று வாழியோ மாலை
ஒரு தான் அன்றே கங்குலும் உடைத்தே
-- குறுந்தொகை 122

நீள்பசுங்கால் கொக்கின்பின் வெண்முதுகை ஒத்திருக்கும்
ஆழ்குளத்தின் ஆம்பலும் கூடக் குவிந்துவிட
நீள்இரவும் வந்துவிட நான்இனி என்செய்வேன் 
வீழும்இம் மாலைக்கென் வாழ்த்து





யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறை கேளிர்
யானும் நீயும் எ வழி அறிதும்
செம் புல பெயல் நீர் போல
அன்பு உடை நெஞ்சம் தாம் கலந்தனவே   
-- குறுந்தொகை  40

என்தாயும் உன்தாயும் யாருக்கு யார்சொந்தம்
என்தந்தை உன்தந்தைக்கு எவ்வழி யில்பந்தம்
என்னைநீ உன்னைநான் எவ்வாறு தான்அறிந்தோம்
செம்மண்ணுள் பெய்தமழை நீர்போலச் செம்மையாய்
அன்பினுள் நம்முள்ளம் ஒன்றாய்க் கலந்தனவே





யானே ஈண்டையேனே என் நலனே
ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇ
கான யானை கை விடு பசும் கழை
மீன் எறி தூண்டிலின் நிவக்கும்
கானக நாடனொடு ஆண்டு ஒழிந்தன்றே   
-- குறுந்தொகை 54

மதிமட்டும் இங்கிருக்க., மீந்திருக்கும் பெண்மையோ....
கதிர்காப்பான் கூட்டும் கவண்ஒலிக்கு அஞ்சி
மதயானைக் கைவிட்ட மூங்கிலைப் போல,
புதுமீனைக் கைப்பற்றும் தூண்டிலைப் போல,
பொதிகாட்டின் வேந்தனைத் தேடும் வெடுக்கெனவே !





பூ இடைப்படினும் யாண்டு கழிந்து அன்ன
நீர் உறை மகன்றில் புணர்ச்சி போல
பிரிவு அரிது ஆகிய தண்டா காமமொடு
உடன் உயிர் போகுக தில்ல கடன் அறிந்து
இருவேம் ஆகிய உலகத்து           
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே 
-- குறுந்தொகை 57

மலர்நடுவே ஓர்நொடியே வந்தாலும் ஆண்டு
பலபோல் உருகும்நீர் வாழ் *மகன்றில் போல ..
அரிதாய்ப் பிரிவைக் கருதும் எமக்குள்
பிரிவுவந்தால் சேர்ந்தெம் உயிர்போகும் ....இப்பிறப்பில்
ஈருயிருர் ஓருயிராய் ஆனபிறகு இவ்வுலகில்
ஓருடலாய் வாழவைக்கும் துன்பத்தை வெல்வதற்கே.

மகன்றில் = இணைபிரியாமல் வாழும் நீர்வாழ் பறவை இனம்





இடிக்கும் கேளிர் நும் குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்று-மன் தில்ல
ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில்
கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போல           
பரந்தன்று இ நோய் நோன்று கொளற்கு அரிதே 
-- குறுந்தொகை 58

இடித்துரைக்கும் நட்பே! உமக்கு முடிந்தால்.,
வெடிக்கும்எம் காமத்தை எம்விருப்பம் போல்நிறுத்து.
ஞாயிறு சுட்டெரிக்கும் வெம்பாறை உச்சியில்
வாயில்லான் கையில்லான் காவல்கீழ் உள்ள 
உருகிய வெண்ணையைப் போல்-பரவும் காமம்
பொறுத்துப்பின் நீக்குவது என்பது அரிதே !





கடும் புனல் தொடுத்த நடுங்கு அஞர் அள்ளல்
கவிர் இதழ் அன்ன தூவி செ வாய்
இரை தேர் நாரைக்கு எவ்வம் ஆக
தூஉம் துவலை துயர் கூர் வாடையும்
வாரார் போல்வர் நம் காதலர்
-- குறுந்தொகை  103

ஆற்றின் சுழல்பல சூழ்ந்தகுளிர்ச் சூழ்நிலையில்
சேற்றில்செம் மீனுக்குக் காத்திருக்கும் வேளையதில்.....
முள்முருங்கைப் பூதோற்கும் மெல்லிறகும், கூரிய
வில்தோற்கும் செவ்வலகும் கொண்டுள்ள நாரைக்கு....
நேர்இன்னல் உண்டாக்கச் சாரலுடன் சேர்ந்தடிக்கும்,
கூர்வாடைப் போதினிலும்...வாராரோ நம்தலைவர் !
கூறவர்க்கு தோழி_நான்என் வாழ்வழிப்பேன் என்றே !!



















கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவு முளவோநீ யறியும் பூவே.                       
-- குறுந்தொகை  2

மகரந்தம் தேன்நாடி நாளெல்லாம் தேடி ,
நுகர்ந்துண்டு , பூக்களுக்குள் வாழ்ந்து வரும்வண்டே..!
என்எண்ணம் சொல்லாமல் , கண்டதைச் சொல்வாயா ,,,
என்இணையாள் , கொள்ளும் உறவில் மயிலியல்பாள் ,
பின்வரிசைப் பல்போல் மிகநெருக்கம் கொண்டிருப்பாள் ,
பெண்ணவளின் கூந்தலைக் காட்டிலும் நன்மணம்
கொண்டது எதுவுமுண்டோ நீஅறிந்த பூவினிலே...!




No comments:

Post a Comment