Wednesday, March 9, 2022

ஓர் உள்ளூர் வணிகவழி



  ஆ.சிவசுப்பிரமணியன்


ஒரு நாட்டின் சமூக வளர்ச்சியில் குறிப்பாக அதன் பொருளியல் பண்பாட்டு வளர்ச்சியில் வாணிபத்தின் பங்களிப்பு அளப்பரியது. வாணிபத்தின் வளர்ச்சியானது வேளாண்மை உற்பத்திப் பொருட்களுக்கும், கைவினைப் பொருட்களுக்கும் இடையிலான பரிவர்த்தனை முறையை. நெருக்கமாக்கி உழுகுடிகள், கைவினைஞர்கள், நுகர்வோர் என்ற முத்திறத்தாரையும் ஒருங்கிணைக்கும் தன்மை கொண்டது.  இதன் வளர்ச்சி நிலையே ஒரு நாட்டில் நகரங்களின் எண்ணிக்கையை மிகுதிப்படுத்தும். வணிகர் களைத் தனி மனிதர்கள் என்ற அடையாளத்தில் இருந்து விடுவித்து வணிகக் குழுக்களாக மாற்றி அமைக்கும். அத்துடன் நகர நாகரிகம் என்ற அடைமொழி உருவாக்கித் தரும்.

நகரங்கள் என்பன உள்நாட்டு நிலப்பகுதியில் மட்டுமின்றி கடற்கரைகளிலும் உருவாகி கடல்கடந்த நாடுகளுடனும் வாணிப இணைப்பை உருவாக்கும். இம்முயற்சியில் நிகழும் வாணிபமானது ஏற்றுமதி வாணிபம் இறக்குமதி வாணிபம் என இருதரத்தது. இவை இரண்டும் வளர்ச்சியுற கடற்கரை நகரங்களும், உள்நாட்டு நகரங்களும், பரந்துபட்ட உள்நாட்டுப் பகுதிகளைக் கொண்டிருத்தல் அவசியமான ஒன்று. ஏன் எனில் வாணிபத்திற்கான உற்பத்திப் பொருளையும், கைவினைப் பொருட்களுக்கான மூலப் பொருட்களையும் வழங்க உள்நாட்டுப் பகுதியின் பங்களிப்பு மிகவும் தேவை. இதுபோல் பொருட்களை வாங்கிப் பயன்படுத்தும் நுகர்வோர்கள் வாழும் தளமாகவும் உள்நாட்டுப் பகுதி விளங்கியது.

இவ்வாறு நகரம், உள்நாட்டுப்பகுதி என்ற இரண்டின் இணைப்பு தமிழர்தம் வரலாற்றில் தொன்மையான ஒன்றாக விளங்கியுள்ளது. 'மதுரைக்காஞ்சி' 'பட்டினப்பாலை என்ற இரு சங்க இலக்கியங்களும், சிலப்பதிகாரம் மதுரைக் காண்டத்தில் இடம் பெற்றுள்ள 'ஊர்காண் காதை'யும் பண்டைத் தமிழரின் வாணிபச் சிறப்பிற்குச் சான்று பகர்கின்றன.

வாணிபமும் சாலையும் :
வாணிபச் செயல்பாட்டில் மிக முக்கியமான ஒன்றாக அமைவது பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்வதாகும். தொடக்கத்தில் விலங்குகளும் பின்னர் விலங்குகளால் இழுக்கப்படும் வண்டிகளும் சுமைகளைக் கொண்டு செல்லப் பயன்பட்டுள்ளன. எருதுகள் பூட்டப்பட்ட வண்டிகள் வாணிபப் பொருட்களைச் சுமந்து செல்லப் பயன்படுத்தப்பட்டதைச் சங்க இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம்.

இவை கடந்து செல்லப் பாதைகள் புதிதாக உருவாக்கப்பட்டன. வாணிபத்திற்காக மட்டுமின்றி, மன்னர்கள் நிகழ்த்திய படையெடுப்புகள், கலைஞர்களின் கலைப்பயணம், பண்ணியத் தலயாத்திரை என்பனவற்றிற்கும் இவை  பயன்பட்டன என்றாலும், வாணிபப் பயன்பாடே இவற்றின் அடிப்படை நோக்கமாக இருந்தது. இதன் அடிப்படையிலேயே வாணிபப் பெருவழி (Trade Route) என்று அழைக்கப்பட்டன. சாலைகளின் வளர்ச்சி ஏற்படுத்திய விளைவுகள் குறித்து மோதிசந்திரர் (1907), 'நாட்டில் சாலையமைப்புகளின் வளர்ச்சிஅந்தநாட்டின் நாகரிக வளர்ச்சியின் அளவு கோலாகும். நெடுஞ்சாலைகளில் இருந்து கிளைச்சாலைகள் பெருகப் பெருக நாகரிகமும் நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் பரவத் தொடங்கியது.' என்று கூறியுள்ளார்.

தமிழ்க் கல்வெட்டுக்களில் இத்தகைய வணிகப் பெருவழிகள் குறித்த பதிவுகள் உள்ளன. இவை குறித்த, புதிய கண்டு பிடிப்புகளைத் தொல்லியல் அறிஞர்கள் செ. இராசு,  ர.  பூங்குன்றன்,  ந. அதியமான்,  கா. இராஜன்,  வெ. வேதாச்சலம் ஆகியோர் வெளிப்படுத்தி உள்ளனர்.  பாவெல் பாரதி வைகைப் பெருவழி தொடர்பான செய்திகளைத் தமது இரு கட்டுரைகளின் வாயிலாக வெளிப்படுத்தி உள்ளார்.

இவர்களது ஆய்வின் அடிப்படை ஆதாரங்களாகக் கல்வெட்டுக்கள் அமைத்துள்ளன. ஆனால் இக்கட்டுரை கல்வெட்டுச் சான்றுகள் இன்றி வாய்மொழிச் சான்றுகளின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் திகழ்ந்த பண்டமாற்று வாணிபம் குறித்த வாய்மொழி வழக்காறுகளை அடிப்படைச் சான்றுகளாகக்கொண்டு எழுதப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு வகையில் உள்ளூர் வரலாறு (local history) என்ற வரலாற்று வகைமைக்குள் அடங்கும் தன்மைத்தது.

உள்ளூர் வரலாறு:
உள்ளூர் வரலாறு என்பது ஒரு கிராமத்தையோ அல்லது சில கிராமங்களையோ மையமாகக் கொண்டது. துறைமுக நகரம்,  தலை நகரம் என்பனவற்றில் இருந்து தொலைவில் உள்ள சிறிய அல்லது நடுத்தர நகரமும் பொதுவான புவியியல் அமைப்பை விடச் சிறிய நில அமைப்பைக் கொண்ட நிர்வாகப் பகுதியும் உள்ளூர் வரலாற்று வரைவுக்கான களமாகும் என்பது பியர் கூபர் (1915- 2012) என்ற பிரஞ்சு வரலாற்றுப் பேராசிரியரின் கருத்தாகும்.

இவரது இவ் வரையறையை மையமாகக் கொண்டு கருப்புக்கட்டி என்றழைக்கப்படும் பனைவெல்லம் உற்பத்தி செய்வோர் நிழத்திய பண்டமாற்று வாணிபம், பயன்படுத்திய பாதை, சுமைகளைக் கொண்டு செல்ல உதவிய வாகனம் விலங்கு என்பன குறித்த செய்திகளை வாய்மொழித் தரவுகளாகத் திரட்டி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வாய்மொழி வரலாறு (Oral History) என்ற வகைமைக்குள்ளும் இக்கட்டுரை அடங்குகிறது.

வாய்மொழி வரலாறு:
வாய்மொழி வரலாறு என்ற வரலாற்றியல் கலைச்சொல் 1948 ஆவது ஆண்டில் ஆலம் நீவின் என்ற கொலம்பியாப் பல்கலைக் கழகப் பேராசிரியரால் உருவாக்கப்பட்டதாகும். வாய்மொழி வரலாறு என்பது குறித்துப் பல்வேறு வரையறைகள் வரலாற்றியலிர்களிடம் உள்ளன. வாய்மொழியாக வழங்கப்படும் வழக்காறுகளின் தொகுப்பே வாய்மொழி வரலாறு என்று எளிதாக, வரையறை செய்வது இதை மலினப்படுத்தும் செயலாகும்.

ஒரு குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வில் பங்கு கொண்டோரின் வாய்மொழிச் சான்றுகளைப் பயன்படுத்துதலே வாய்மொழி வரலாறு என்று சுகோவ் என்பவர் குறிப்பிடுகிறார். ஜான் வான்சினா என்பவரோ ஒரு குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வை நேரில் கண்டவர்களின் கூற்றை வாய்மொழி மரபாக ஏற்றுக் கொள்ளவில்லை. அவரது கருத்துப்படி அதைக் கண்டறியாத ஒருவர் செவிவழியாகக் கேட்டறிந்ததைக் கூறுவதுதான் வாய்மொழி மரபாகும். இதன்படி வாய்மொழிப் பரவல் (Oral Transmission) முக்கியத்துவம் பெறுகிறது. லுமிஸ் என்பவர் வரலாற்றின் ஒரு வகைமையாக வாய்மொழி வரலாற்றைக் கருதவில்லை . அவரது கருத்துப்படி இது ஒரு வரலாற்று முறையியல் (Methodology) ஆகும்.

இக்கட்டுரை வாய்மொழி வரலாறு தொடர்பான இவ்விவாதங்களுக்குள் நுழையாது ஜான்வான் சினாவின் வரையறையை அடியொற்றி எழுதப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் ஊரில் ஓடும் பொருநை ஆற்றின் தென்கரைப் பகுதியில் உள்ள தேரிக்காடு என்றழைக்கப்படும் பனைமரக்காடுளில் வாழ்ந்தோர் ஆங்கில ஆட்சியின்போது நிகழ்த்திய பண்டமாற்று வாணிபம் இக்கட்டுரையின் மையப் பொருளாகும். இவ்வகையில் வாய்மொழிச் செய்திகளின் துணையுடன் எழுதப்பட்ட உள்ளூர் வணிக வரலாறு எனலாம்.

தேரிக்காடு:
இன்றையத் தூத்துக்குடி மாவட்டத்தின் தென்பகுதியில் உள்ள திருச்செந்தூர், சாத்தான்குளம் வட்டங்களும் திருநெல்வேலி மாவட்டத்தின் தென்பகுதியில் உள்ள நாங்குனேரிஇராதாபுரம் வட்டங்களும் செம்மண் மேடுகளையும் சிறிய பள்ளத்தாக்குகளையும் கொண்டவை. இந்நிலப்பகுதி தேரி என்று குறிப்பிடப்படுகிறது. மேடான நிலப்பகுதியைக் குறிக்க, தெற்றி என்ற சொல்லாட்சி கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. ஒருவேளை தேரி என்ற சொல் தெற்றி என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம். இதன் ஆங்கில ஒலிமொழி பெயர்ப்பாகவே Teri என்ற சொல்லாட்சி உருவாகியுள்ளது. தேரி நிலப்பகுதியில் நெருக்கமாக வளர்ந்து நிற்கும் பனை மரங்களை அடிப்படையாகக்கொண்டு பனைமரக்காடு என்ற பொருளைத்தரும் ஆங்கிலச் சொல்லை ஆங்கில அதிகாரிகளும், கிறித்தவ மறைப்பணியாளர்களும் பயன்படுத்தியுள்ளனர். ஆங்கில ஆட்சியின்போது திருச்செந்தூர் வட்டம் 'பனைமரத் தாலுகா' என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. 

தேரியின் பொருளாதாரம்:


தமிழ்நாட்டின் பெருவாரியான கிராமங்களைப் போன்றே தேரிநிலப் பகுதியும் காலனிய ஆட்சியின்போது வேளாண் பொருளாதாரத்தையே மையமாகக் கொண்டிருந்தது. இப்பகுதியின் பொருளாதாரத்தில் பனைமரத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாய் இருந்தது. பனைமரத்தில் இருந்து நேரடியாகப் பெறும் நொங்கு, கள், பதநீர், ஓலை என்ற நேரடியான பொருள்கள் மட்டுமின்றி அவற்றின் துணைத் தயாரிப்பான, பலவகைக் கருப்புக்கட்டிகள் (பனை வெல்லம்), கற்கண்டு, பனங்கிழங்கு என்பன முக்கிய விற்பனைப் பொருட்களாயின. இவற்றுள் கருப்புக்கட்டி, கற்கண்டு, பனங்கிழங்கு என்பன தவிர ஏனையவை இருப்பு வைத்து விற்கமுடியாத பொருட்களாகும். இவை தவிர கட்டிடங்களுக்குத் தேவையான பனைச் சட்டங்கள், ஓலைகள், பனை நார், ஈர்க்கு, கருக்கு மட்டை என்பனவும் விற்பனைப் பொருட்களாயின. இவை  அனைத்தும் இன்றுவரை விற்பனைப் பொருள்களாகத் தொடர்கின்றன.


ஆனால் இவை தவிர வேறுவகையான வேளாண் பொருள்களும் தேரிக்காட்டுப் பொருளாதாரத்தில் இடம் பெற்றிருந்தன. தேரிக்காட்டு மக்களின் கடந்தகாலப் பாண்டமாற்று வாணிபத்தில் இவை முக்கிய பங்களிப்பைச் செய்துள்ளன.  தேரிக்காட்டுப் பொருளாதாரத்தில் பனைபடு பொருள்களும் வேளாண் உற்பத்திப்பொருட்களும் இடம் பெற்றிருந்தது என்பதை மேலோட்டமாகப்  பார்த்தோம். அடுத்து,  இவை வாணிபப்பொருளாக விளங்கியமை குறித்த செய்திகளைக் காண்போம்.

கருப்புக்கட்டி:


பனைமரத்தில் இருந்து பெறும் பதநீரைக் காய்ச்சி உருவாக்கப்படும் கருப்புக்கட்டியானது இனிப்புப் பொருளாக மட்டுமின்றி. நம் பாரம்பரிய மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வுண்மையை., வங்கவிரிகுடாவின் முத்துக்குளித்துறையில் அரசியல் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும் முன்னரே போர்ச்சுக்கீசியர்கள் அறிந்திருந்தனர் - பொ.ஆ.1511-1662 வரையிலான காலத்தில் அவர்கள் அறிந்திருந்த நம்பாரம்பரிய மருத்துவமுறைகள் குறித்துத் தமது நூல் ஒன்றில் பேரா.ஜெய சில ஸ்டீபன் (2015:358-361) குறிப்பிட்டுள்ளார். அதில் சளித்தொல்லைக்கான மருந்தாக சுக்கும் கருப்புக்கட்டியும் கலந்த மருந்து இடம் பெற்றுள்ளது. சுக்குடன் அதைவிட ஐந்துமடங்கு அளவு கருப்புக்கட்டி இம் மருந்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

தமது மற்றொருநூல் ஒன்றில் (1999: 124) தூத்துக்குடிக்கும் அருகில் உள்ள பழையகாயல் துறைமுகத்தில் நிகழ்ந்த கருப்புக்கட்டி ஏற்றுமதி குறித்த செய்தி ஒன்றையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி வாஸ்கோடாகாமாவின் மகனான மானுவல்காமா ஒரு பலம் ஏழு ரூபாய் என்ற விலையில் கருப்புக்கட்டி வாங்கி 1525 மார்ச் 7இல் போர்ச்சுக்கலுக்கு ஏற்றுமதி செய்துள்ளார். இச் செய்திக்கும் மேலே குறிப்பிட்ட மருந்துக்கும் இடையே ஓர் இயைபு இருக்க வாய்ப்புள்ளது. எப்படியோ கருப்புக்கட்டி ஏற்றுமதிப் பொருளாக விளங்கியுள்ளது என்பது உண்மை. 

நாசரேத் என்ற தேரிக்காட்டு ஊரைத் தம் பூர்வீக ஊராகக்கொண்ட டாக்டர். சசிகரன் தங்கையா தாம் எழுதிய நாசரேத் வரலாறு குறித்த நூலில் (2012: 112) நாசரேத்தில் இருந்து கருப்புக்கட்டி ஏற்றுமதி ஆனதாகக் குறிப்பிட்டுள்ளார். நாசரேத் ஊரைச் சுற்றியுள்ள தேரிக்காட்டுப் பகுதிகளில் இருந்து இவை சேகரிக்கப் பட்டிருக்கலாம்.

வேளாண்மை உற்பத்தி: 
கருப்புக்கட்டி உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் சொற்ப அளவிலேயே தேரிக்காட்டுப் பகுதியில் முன்னர் வேளாண்மை நிகழ்ந்துள்ளது. இன்று இப்பகுதியில் நிலவும் வேளாண் தொழிலுடன் ஆங்கில ஆட்சியின் போது நிகழ்ந்த  வேளாண் நடவடிக்கைகளை ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. பனைமரக்காடுகளாகவே தேரிப்பகுதி இருந்துள்ளது. இதனை ஊடறுத்துச் செல்லும் வண்டித்தடங்கள், ஒற்றையடிப்பாதைகள் வாயிலாகவே பயணங்கள் திகழ்ந்துள்ளன. இப்பகுதிக்கு வரும் புதியவர்கள் தடம் மாறி வழிதப்பிப் போகும் வாய்ப்பிருந்தமையால் வழிகாட்டிகள் அழைத்துச் சென்றுள்ளனர்.

வழிகாட்டிகளுக்கு ஊதியம் வழங்கும் வழக்கமும் இருந்துள்ளது. தேரிக்காட்டுப் பகுதியில் 19 ஆவது நூற்றாண்டுக் காலத்தில் உபதேசியாராகப் பணியாற்றிய சவரிராயபிள்ளை (1901-1834) என்பவர் 1805 செப்டம்பர் 25 ஆம் நாள் எழுதிய நாட்குறிப்பில் நாசரேத் ஊரில் முதல்நாள் இரவில் தங்கிவிட்டு அதிகாலையில் புறப்பட்டுச் சென்றதைபரஞ்சோதி யென்றவனைக் கூடப்போய் வழி பிசகாமல் கொண்டுவந்துவிட அனுப்பினார்.  ...... அவன் வராவிட்டால் பலப்பல வழிகளில் அலைந்தும் விடிய மட்டும் வருத்தப்பட நேரிடும்' என்று எழுதி உள்ளார். மற்றொரு குறிப்பில் 22-2 விடியக்காலம் புறப்படத் துணையாள் சம்பளத்துக்குக் கிடைக்கவில்லை' என்று எழுதியுள்ளார்.

இவ்வாறு சரியானசாலைகள் இல்லாதது மட்டுமின்றி,  கிணறு குளம் என நேரடி நீர்ப்பாசன வசதிக்குறைவும் பல பகுதிகளில் இருந்துள்ளது. இருப்பினும் பனை மரங்களுக்கு ஊடாக வேளாண்மையும் திகழ்ந்துள்ளது.

பதநீர் இறக்கும் பருவம் தேரிக்காட்டுப் பகுதிகளில் பிப்ரவரித் திங்களில் தொடங்கி மே இறுதியில் அல்லது ஜூன் தொடக்கம் முடிவடையும். பதநீர் இறக்கும் இப்பருவத்தில்தான் கருப்புக்கட்டித் தயாரிப்பும் நிகழும். இப்பருவகாலத் தயாரிப்பு மட்டுமே அவர்களின் வாழ்வாதாரமாக அமையவில்லை. துணைத் தொழிலாக வேளாண்மையும் இருந்துள்ளது. 

ஒப்பீட்டு அளவில் தோக்கும் போது பனங்காட்டு வேளாண்மையைப் புன்செய் வேளாண்மை எனலாம். ஏனெனில் இரண்டும் நேரடிப்பாசனமின்றி "வானம் பார்த்த விவசாயம்" (மழையை எதிர் நோக்கி நிகழும் விவசாயம்) இது பின் வரும் முறையில் நிகழும். 

பனங்காட்டு வேளாண்மை:
பனைமரம் செழித்து வளர்ந்துள்ள தேரிநிலப்பகுதி சமதளமாக இல்லாது மேடும்பள்ளமுமாக அமைந்தது. வடகிழக்குப் பருவமழையினால் கிடைக்கும் நீரே இதற்கு ஆதாரம் என்ற நிலையில் இதில் பெய்யும் மழைநீரினை அதிக அளவில் நிலத்தில் சேமிப்பதும் உரச்சத்தைப் பனைகளுக்குத் தருதலும் அவசியம். இவை இரண்டு பயன்களுக்காக வ.கி. பருவமழை தொடங்கும் முன்னர் பனங்காட்டை பத்து முறை உழுவர். இதில் முதல் உழவு முடிந்ததும் ஆட்டுக்கிடை (பட்டி)  போடுவர். கிடைபோட்டு முடிந்த பின்னர் நன்றாக உழுது விடுவர். இதற்கடுத்து வரும் உழவில் (ஒன்பது அல்லது பத்தாவது)  விதைகளைத் தூவி உழுதுவிடுவர்.

உளுந்து,  பாசிப்பயறு,  தட்டாம் பயறு (காராமணி), மொச்சை போன்ற பயறுவகைகளும் தினை, வரகு, சாமை ஆகிய புன்செய்த் தானிய வகைகளும், பருத்தியும் முக்கியப் பயிர்களாக அமைந்தன. மழை பெய்தவுடன் இவை முளைத்துவிடும்.  இடையிடையே பெய்யும் மழை இவற்றை வளர்த்துப் பலன்தரச் செய்து விடும். எள், மழையைத் தாக்குப்பிடிக்காத பயிர் என்பதால் மழைக்காலம் முடிந்தபின்னர் ஈரப்பதத்தில் உழுது விதைத்துவிடுவர். கிணற்றுநீரின் துணையால் ஆங்காங்கே நடைபெற்ற வேளாண்மையில் வெங்காயம் பயிராகி குலசேகரன் பட்டிணம் துறைமுகம்வழி இலங்கைக்கு ஏற்றுமதி ஆகியுள்ளது.

பருவமல்லாத காலத்தில் பெய்யும் மழை எள் பயிருக்கு ஆகாது என்பதால் தண்ணீர் தேங்காத சரிவான நிலப்பகுதியையே எள் பயிரிடத் தேர்வு செய்வர். (தேரிக் காட்டு ஊர் ஒன்றின் பெயர் எள்ளுவிளை என்பதாகும். விளை - தோட்டம்) பனங்காட்டில் நிகழ்ந்துவந்த கடந்தகால வேளாண்மை குறித்த இச்செய்திகள் பனைப் பொருளாதாரத்துடன் வேளாண் பொருளாதாரமும் இணைத்தே இருந்துள்ளதை உணர்த்துகின்றன. அத்துடன் தேரிக்காட்டுப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாகப் பனைமட்டும் இருக்கவில்லை என்ற உண்மையும் வெளிப்படுகிறது.

பனைகளுக்கிடையே உழுவதால் உருவான சால்களில் (கலப்பையின் கொழு பதிந்து சிறு ஓடை போல் உருவாகும் பகுதி) மழை நீர் தேங்கி நிலத்துக்குள் இறங்கிவிடும். நிலத்தைவிட்டு மழைநீர் வழிந்து போகாது. அத்துடன் ஆட்டுப்புழுக்கைகள் கரைந்து மண்ணுடன் இரண்டறக் கலந்துவிடும். அத்துடன் உழும்போது பனையின் வலுவிழந்த சல்லிவேர்கள் அறுந்து போய் புதியவேர்கள் தோன்றும். ஆணிவேர் இல்லாத பனைமரம் உரிய அளவு நீரைப்பெற இப்புதிய சல்லிவேர்கள் துணை புரியும். பயறுவகைகளைப் பயிரிட்டதானது இரண்டு வகையான நன்மைகளை வழங்கியுள்ளது. பனையைச் சுற்றிலும் மழைக்காலத்தில் வளரும் முரட்டுக்களைகளின் வளரச்சியை இவ் வேளாண்மை கட்டுப்படுத்தி உள்ளது. வேர் முடிச்சுப் பயிர்களான பயறுவகைகள் தழைச்சத்தை நிலத்தில் நிறுத்தி உதவி உள்ளன.

இவ்வாறு பனைத்தொழிலுடன் இணைந்த வேளாண்மையானது ஊடுபயிர் போன்று காட்சி அளித்தாலும் ஓர் உபரிவருமானத்தை வழங்கும் தொழிலாக இது இருந்துள்ளது. பனைத்தொழில் செய்து வந்தோரைப் பணப்பயிர் வேளாண்மையின் பக்கம் திருப்பியதில் ஐரோப்பியக் காலனியவாதிகளுக்கு முக்கியப்பங்கு இருந்துள்ளது. இவர்களுள் முதலாவதாக வருபவர்கள் போர்ச்சுக்கீசியர்கள்.

16-ஆவது நூற்றாண்டின் தொடக்கத்தில் வங்கவிரிகுடாவின் முத்துக்குளித்துறைப் பகுதியின் கடலுக்குள் இவர்கள் ஆதிக்கம் செலுத்திவந்தனர். பின் 1533வாக்கில் முத்துக்குளித்துறையின் தூத்துக்குடி உள்ளிட்ட கடற்கரைப்பகுதியில் அரசியல் ஆதிக்கம் செலுத்துவோராக மாறினர். இவர்களுடனான மிளகு வாணியப்போட்டியில் டச்சு நாட்டினரின் கை ஓங்கியநிலையில் தமிழகத்தின் உள்நாட்டுப் பகுதிகளில் மிளகாய், புகையிலை விதைகளை அறிமுகம் செய்ததுடன் அவற்றைத் தங்களுக்கே விற்கும்படி மக்களை வலியுறுத்தினர்.  மிளகுக்கு மாற்றாக மிளகாய் அறிமுகமான நிலையில் அதை மக்களிடையே பரவலாக அறிமுகம் செய்யும்படி இங்குப்பணிபுரிந்த கத்தோலிக்கச் சமயக்குருக்களை போப் வலியுறுத்தியுள்ளார். ஒரு கத்தோலிக்க நாடு என்பதன் அடிப்படையில் போர்ச்சுக்கல் மன்னர் போப்பிடம் வைத்த வேண்டுகோளே இதற்குக் காரணமாக இருந்துள்ளது. இதன் காரணமாகவே போர்ச்சுக்கீசியரின் துணையுடன் கத்தோலிக்க சமயத்தைத் தழுவிய வீரபாண்டியன் பட்டிணம், மணப்பாடு, உவரி, விஜாயபதி, கூட்டப்புளி ஆகிய கடற்கரை ஊர்களைச் சேர்ந்த பரதவர்கள் வேளாண்மையிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இதுபோன்றே பனைத்தொழிலை மேற்கொண்டிருந்த கத்தோலிக்க சமயத்தைத் தழுவியிருந்த நாடார்கள் தம் உணவுத் தேவைக்காக மட்டுமே வேளாண்மையில் ஈடுபட்டு வந்த நிலைக்கு மாறாக மிளகாய், புகையிலை ஆகிய பணப்பயிர்களைப் பயிரிடும்படி போர்ச்சுக்கீசியக் காலனியம் மாற்றிவிட்டது.

இச் செய்திகளை வரலாற்றுப் பேராசிரியர் கதிர்வேல் தமது கட்டுரை ஒன்றில் (1983)குறிப்பிட்டுள்ளார். புவியியல் அடிப்படையில் பொதுவெளியில் இருந்து ஒதுங்கியிருந்த மக்கள் பிரிவை வேளாண்மை உற்பத்தியிலும், அவ்வாறு உற்பத்திசெய்த பொருட்களை வாணிபம் செய்வதிலும் ஈடுபடும்படி போர்ச்சுக்கீசியக் காலனியம் செய்துவிட்டது.

ஆங்கிலக் காலனியம்:
தேரிக்காட்டுப்பகுதியில் நிகழ்ந்துவந்த பனங்காட்டு வேளாண்மையானது பனைமரக்காடுகளில் வாழ்ந்தோரின் சுயதேவைப் பூர்த்திக்கான ஒன்றாக இருந்து பின்னர் பண்டமாற்று வாணிபத்திற்கான மூலப்பொருளாக வளர்ச்சி அடைந்துள்ளது. வாணிபத்தில் பொருள்களின் சுழற்சி முக்கியமான ஒன்றாகும். இச் சுழற்சியில் பாரம்பரியமான நம் சந்தைகள் முக்கியப் பங்காற்றியுள்ளன. இச் சந்தைகள் குறித்த மேலோட்டமான பதிவுகளை மேலே குறிப்பிட்ட உபதேசியார் சவரிராயனின் நாட்குறிப்புகள் வழங்குகின்றன.

இச் சந்தைகளில் பொதுமக்கள் வணிகர்களிடம் இருந்து நேரடியாகத் தமக்கு வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டார்கள்.  சந்தை நடைபெறாத நாட்களில் நுகர்வோரைத்தேடி வணிகரும் வணிகரைத்தேடி நுகர்வோரும் சென்று பொருட்களைப் பண்டமாற்று செய்துகொண்டனர் அல்லது நாணயங்களைக் கொடுத்துப் பெற்றுக்கொண்டனர். இது சுருங்கிய அளவிலேயே பொருட்களின் இடப்பெயர்ச்சிக்கு உதவும் தன்மையது. எனவே வேளாண் உற்பத்தியும் ஒரு கட்டுக்குள்தான் இருந்தது.

ஆனால் ஆங்கிலக் காலனியம் இப்பகுதியில் அறிமுகமான பின்னர் இந்நிலை மாறத் தொடங்கியது. பனைத்தொழில் மேற்கொண்டு வாழ்ந்து வந்த நாடார் சமூகத்தில் சில உட்பிரிவினரே நில உரிமையாளராக இருந்த நிலையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. நாடார்கள் தம் உபரியை நிலங்களில் முதலீடு செய்யத் தொடங்கினர். இது குறித்து 1947 இல் வெளியிட்ட திருநெல்வேலி மாவட்டத்தின் விவரச்சுவடி/ கெசட்டியார்) நூலில் பேட் ஒரு செய்தியைப் பதிவிட்டுள்ளார். அதன்படி, 1917க்குமுன் நடந்த நில உரிமை தொடர்பான மறு ஆய்வில் (Resettlement and Resarityதிருநெல்வேலி மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நாடார் சமூக நிலவுடைமையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. (இவ் ஆய்வின் சிறப்பதிகாரியாகப் பணியாற்றியவரும் இவர்தான்). திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி, திருச்செந்தூர் தென்காசி ஆகிய வட்டங்களில் உள்ள பனை விளைஞர்கள் தம்சேமிப்பை நிலங்களில் முதலீடு செய்ததாகவும் பேட் (1917:128) குறிப்பிட்டுள்ளார்.  இவர் குறிப்பிட்டுள்ள நாங்குநேரி, திருச்செந்தூர் வட்டங்கள் தேரிக்காட்டுப்பகுதிகள் என்பது குறிப்பிடத் தக்கது.

நிலங்கள் கிடைக்காவிடில், போக்குவரத்துக்கான வண்டிகள், கருப்புக்கட்டி விற்பனை, இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்காக வெள்ளாடு, செம்மறி ஆடு, கோழி வளர்ப்பு என்பனவற்றில் ஈடுபட்டனர். சிலர் குறைந்த அளவு கைமுதலுடன் இலங்கையின் நகரங்களுக்குச் சென்று எழுத்தர்களாகவும் சிறிய அளவிலான கடை வியாபாரிகளாகவும் செயல்பட்டனர். தேயிலை, ரப்பர் தோட்டங்களின் கண்காணிகளாகவும் சிலர் பணியாற்றினர். கிறித்தவ மிஷனரிகளின் துணையால் கல்விகற்ற நாடார்கள் அரசு, ரயில்வே, வணிக நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றனர். சட்டம், இறையியல், மருத்துவம், பயின்ற கிறித்தவ சமயம் தழுவியோர் மடகாஸ்கர்நேட்டால், மொரிஷியஸ் நாடுகளுக்குக் கிறித்தவ மிஷனரிகளால் அனுப்பிவைக்கப்பட்டனர். பேட் (1917:128-129) குறிப்பிட்டுள்ள இச் செய்திகள் பொருளியல் நிலையில் உபரியை நோக்கி இச்சமூகம் பயணித்ததை நாம் அறியும்படிச் செய்கின்றன.

மேலும் பனைமரத்தின் பயன்பாடுகளை மட்டுமே நம்பியிருந்த வாழ்க்கை முறையில் இருந்து தேரிக்காட்டு மக்கள் தங்களை விடுவித்துக் கொண்டு முன்னேறத் தொடங்கியதை பேட் எழுதியுள்ள இக்குறிப்புகள் உணர்த்துகின்றன. இருந்தபோதிலும் போக்குவரத்திற்கான சாலைகள் தரம் குறைந்தே இருந்துள்ளன. அப்போதைய திருநெல்வேலி மாவட்டத்தின் வருவாய் வட்டங்களில் இம் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள தென்காசி அம்பாசமுத்திரம் வட்டங்கள் நல்ல சாலைகளைக் கொண்டிருந்ததாகவும் தேரிக் காட்டுப் பகுதிகள் மோசமான சாலை அமைப்பைக் கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் (pate 1917:240-241).தேரி நிலப்பகுதியிலும் இதனை அடுத்திருந்த மணல் நிறைந்த கடற்கரைப்பகுதியிலும் வண்டிகளுக்குப் பதிலாகப் பொதிமாடுகள் சரக்குகளைச் சுமந்து செல்லப் பயன்படுத்தப்பட்டன. சற்று எடை குறைந்த சுமைகள் தலைச் சுமையாகவும் காவடி போல் கம்பின் இருமுனைகளிலும் கட்டப்பட்டு தோள்ச் சுமையாகவும் ஓட்டமும் நடையுமாகச் சுமை கூலிகளால் சுமந்து செல்லப்பட்டன (மேலது:241).

வாணிபப்பயணம்:
போக்குவரத்து வசதியும் நீர் வளமும் குறைந்திருந்தாலும் தேரிக்காட்டுப் பகுதியானது தன் வேளாண் பொருள் உற்பத்தியை மையமாகக்கொண்ட வாணிபத்தைக் கொண்டிருந்தது. இது குறித்து இனி இங்கு குறிப்பிடும் செய்திகள் வாய்மொழி வழக்காறுகளின் வழிப் பெறப்பட்டவை. சாத்தான்குளம் என்ற தேரிக்காட்டூர்ப் பகுதியில் இருந்து நாசரேத் வழியாக ஆழ்வார்திருநகரி ஊர் சென்று அங்கு ஓடும் பொருநை ஆற்றைக் கடந்து சென்று வாணிபம் செய்து திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தமை குறித்த செய்திகளைக் 'கர்ணபரம்பரையாகக்' கேட்டறிந்தவர்கள் கூறிய செய்திகளே இங்கு இடம் பெற்றுள்ளன.

தன் பெயரால் அமைந்த ஒரு வட்டத்தின் தலைநகரமாக சாத்தான்குளம் என்ற ஊர் தற்போது உள்ளது. இதைச் சுற்றி உள்ள சிறிதும் பெரிதுமான கிராமங்கள் தேரிக்காட்டுக்கே உரித்தான பனைமரங்களை மிகுதியாகக் கொண்டவையாக இருந்துள்ளன. இப்பகுதியில் இருந்து பொதி மாடுகளில் சுமை ஏற்றிச் சென்று வாணிபம் திகழ்ந்துள்ளது. இதன் அடிப்படையில் இவ்வாணிபம் பொதிமாட்டு வியாபாரம் என்றழைக்கப்பட்டது. இவ் வாணிபத்தில் கருப்புக் கட்டி, தேரிக்காட்டில் பயிரிடப்பட்ட தானியங்கள் பயறுவகைகள் பருத்தி, வெங்காயம் என்பன பொதிமாடுகளின் துணையுடன் பயணித்துள்ளன.

இக் குழுவினர் சுற்று வட்டாரக் கிராமங்களில் இருந்து மாலையில் புறப்பட்டு இரவு தொடங்கும் நேரத்தில் சாத்தான்குளம் வந்து சேர்வர். இங்கு இரவு தங்குவதால் குழுவினருக்கும் மாடுகளுக்கும் நல்ல ஓய்வு கிடைக்கும். மாடுகளில் இருந்து சுமைகளை இறக்கி ஒரே இடத்தில் வைத்துவிட்டு அதைச் சுற்றிலும் படுத்து உறங்குவர். திருடர்களிடம் இருந்து பொருளைக் காப்பாற்றும் வழிமுறைகளில் இதுவும் ஒன்று. சிலம்புக் கம்புகளுடன் முறைபோட்டுக் காவல் காத்தலும் இருந்துள்ளது. அதிகாலையில் மூன்று அல்லது நான்கு மணி அளவில் கண்விழித்து பொழுது புலரும் முன்பே தம் பயணத்தைத் தொடங்கிவிடுவர். சாத்தான்குளத்தை விட்டு பன்னம்பாறை விலக்கு, பழங்குளம் பிடாதேரி, தைலாபுரம், ஆனந்தபுரம்சடையங்கிணறு, தோப்பூர் விலக்கு, வாழையடி ஆகிய ஊர்களைக் கடந்து நாசரேத் நோக்கி வருவர். வரும் வழியில் சிறு விவசாயிகளிடம் வேளாண் விளை பொருட்களைப் பண்டமாற்று முறையில் கொள்முதல் செய்துகொள்வதுமுண்டு - நாசரேத் ஊரைக் கடந்ததும் ஆழ்வார்திருநகரி வந்து சேர்வர்.

பொருநை ஆற்றின் தென்கரையில் உள்ள ஊர் ஆழ்வார்திருநகரி. 1838க்கு முன்னர் இது தென்கரைத் தாலுகா என்ற பெயரில் ஒரு வட்டத்தின் தலைநகராக இருந்துள்ளது. பதநீர் இறக்கும் பருவம் முடியும் மே இறுதி அல்லது ஜூன் தொடக்கக் காலத்தில் பொருநை அற்றில் அதிக அளவில் தண்ணீர் ஓடாது. எனவே மாடுகளுடன் ஆற்றைக் கடந்து எதிர்க்கரையில் உள்ள ஆழ்வார் தோப்பை வந்தடைவர்.   அங்கு சரக்குகளை இறக்கி ஆற்றில் நீராடி, உணவு உண்டு பயணக் களைப்பைப் போக்கிவிட்டு மீண்டும் பயணத்தை ஆழவார் தோப்பிற்குக் கிழக்கே உள்ள ஏரல் என்ற ஊரை நோக்கித் தொடர்வர்.

பொருநை ஆற்றின் வடகரையில் உள்ள ஏரல் ஒரு முக்கிய வாணிபத்தளம். இங்கு சில்லறை வாணிபம் மட்டுமின்றி மொத்த வாணிபமும் நிகழும் - தாம் கொண்டுவந்த பொருட்களில் பெரும்பகுதியை இங்கு விற்றுவிட்டு சிறு பகுதியுடன் கிழக்கே உள்ள புன்னைக்காயல்பழையகாயல் என்ற கடற்கரை ஊர்களை நோக்கிப் பயணிப்பர். இங்கு பண்டமாற்றாக உப்புக் கருவாடு என்பனவற்றையும் ஏரல், ஆழவார்திருநகரி ஆகிய ஊர்களில் அரிசியையும் பெற்றுக்கொண்டு திரும்புவர். மழைக்காலம் தொடங்கும் முன் மூன்று அல்லது நான்குமுறை இவ் வாணிபப் பயணம் நிகழ்ந்துள்ளது. இவ் வாணிபம் நிகழ்ந்த காலம் குறித்து சிறிது மாறுபட்டக் கருத்துக்கள் கூறப்பட்டன. இருப்பினும் தகவலாளர்கள் கூறிய வாணிபம் நிகழ்ந்த காலமாக இருபதாம் நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகள் என்று கொள்ள முடியும். இவ் வாணிபமானது பண்டமாற்று முறையிலும் பணவடிவிலும் ஒரு சேர நிகழ்ந்துள்ளது. பனைத் தொழிலுடன் இணைந்து நடந்த வேளாண்மைப் பொருட்கள் முக்கிய வாணிபப் பொருட்களாக மாறி இருந்துள்ளன. இது உழுதொழிலையும் வாணிபத்தையும் இணைக்கும் சரடாக இருந்துள்ளது. 

எச்சங்கள்:
தேரிக்காட்டினரின் வாணிபப் பயணத்தின் போது, பாதுகாப்பு நோக்கில் சிலம்பப் பயிற்சி மேற்கொண்டதன் எச்சமாக தேரிக்காட்டுப் பகுதியில் சிலம்பம் பயின்றோரும் சிலம்ப ஆசான்களும் குறிப்பிடத் தக்க எண்ணிக்கையில் வாழ்ந்துள்ளனர். இப்பகுதி மக்கள் மத்தியதர வர்க்கமாக மாறிய பின்னரும் சிறிது காலம் வரை ஏதேனும் ஒரு பயற்றைக் காலை உணவாகக் கொள்ளும் பழக்கம் இருந்துள்ளது. தற்போது இது பெரும்பாலும் மறைந்துவிட்டது.


துணை நூற்கள்:
தங்கசாமி சசிகரன் (2002),  நாசரேத் வரலாறு (1880-2002). 
மோதி சந்திரர் (1970), இந்திய வணிக நெறிகள்
Jeyaseela Stephen (1998), Portguess in the Tamil Coast. 
Jeyaseela Stephen (2016), A Meeting of the Minds. 
Kadhirvel.S (1983), Portuguese Colarial Impact on Agriculture and Trade. Tamil Coast, Westem Colonial Policy. NR.Ray Ed.  
Pale.H.R. (1917), Tinnevelly District Gazetteer. 
Pierre Coubert (1972),  Local History - Historical Studies Today. Felix Gilbert Ed.


கட்டுரை:
"ஓர் உள்ளூர் வணிகவழி"
கட்டுரையாளர்: மூத்தப் பேராசிரியர்  ஆ.சிவசுப்பிரமணியன் (sivasubramanian@sivasubramanian.in)
நாட்டாரியல் ஆய்வாளர்

நன்றி - காக்கைச் சிறகினிலே: ஜனவரி - பிப்ரவரி,  2022. 





No comments:

Post a Comment