Sunday, July 26, 2020

தமிழர்களின் மாதப்பெயர்கள் தமிழா?

தமிழர்களின் மாதப்பெயர்கள் தமிழா?

-- திருத்தம் பொன். சரவணன்


முன்னுரை:
            தமிழர்களின் காலக்கணக்கு மிகப்பழமை வாய்ந்தது. ஒருநாளின் உட்கூறுகளைச் சிறுபொழுது என்றும் ஏனையவற்றைப் பெரும்பொழுது என்றும் ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முன்பாகவே இலக்கணம் வகுத்துக் கூறியது தொல்காப்பியம். அதுமட்டுமின்றி, நாள், பொழுது, ஆண்டு எனக் காலம் தொடர்பான அனைத்துப் பெயர்களையும் கூட விதிமுறைக்கு உட்பட்டே தமிழர்கள் அமைத்தும் இருந்தனர். 

            இந்நிலையில், தமிழர்கள் பின்பற்றி வருவதான சித்திரை முதல் பங்குனி வரையிலான பன்னிரண்டு மாதப்பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் அல்ல என்றும் அவை சமற்கிருத சொற்களை அடியொட்டியே அமைக்கப் பெற்றவை என்றும் சிலர் வாதிட்டு வருகின்றனர். தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் மற்றும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் இந்த மாதப் பெயர்கள் எவையும் இல்லை என்ற ஒரு காரணத்தை அடிப்படையாகக் கொண்டு இவர்கள் செய்யும் வாதம் தவறானது என்றும் இந்த மாதப் பெயர்கள் அனைத்தும் தமிழ்ச் சொற்களே என்றும் இக் கட்டுரை நிறுவுகிறது.

தமிழரின் மாதப்பெயர்கள் தமிழே !
            தமிழர்கள் பின்பற்றி வருகின்ற சித்திரை முதலான 12 மாதப் பெயர்களும் தமிழே ஆகும். பழந்தமிழ் இலக்கியங்களில் இந்தப் பெயர்கள் இல்லை என்பதால் இவை தமிழ் அல்ல என்று ஒதுக்கிவிட முடியாது. காரணம், இன்று நாம் புழங்கி வரும் ஏராளமான தமிழ்ச்சொற்கள் பழந்தமிழ் இலக்கியங்களில் இல்லை. இவையெல்லாம் சங்ககாலத்திற்குப் பின்னால் வந்த புலவர்கள் காலந்தோறும் உருவாக்கிய புதிய தமிழ்ச் சொற்கள் ஆகும். அப்படி உருவாக்கப்பட்டவை தான் இந்த பன்னிரண்டு தமிழ் மாதப் பெயர்களும். இந்த தமிழ்மாதப் பெயர்களின் மூலமாக விளங்கிய தமிழ்ச் சொற்கள் எவை என்று கீழே உள்ள அட்டவணையில் காணலாம்.



            இனி ஒவ்வொரு மாதத்திற்கும் உரிய மேற்காணும் மூலத் தமிழ்ப்பெயர் தோன்றிய முறையினையும் அவற்றின் பொருளையும் விரிவாகக் கீழே காணலாம்.

சித்திரை:
            இது தமிழ்ப் புத்தாண்டின் முதல் மாதமாகக் கருதப்பட்டு வருகிறது. இதனை மறுத்துத் தை மாதமே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க மாதமாகும் என்று கூறுவோரும் உளர். இந்த மாதத்திற்கு 30 நாட்கள் உண்டு. முதுவேனில் காலத்தின் துவக்கமான இம்மாதத்தில் வெயிலானது அதிக ஒளியுடன் கடும் வெப்பத்துடன் சுட்டெரிக்கும். இந்த மாதத்தின் பெயர் தோன்றிய விதத்தைக் கீழே காணலாம்.

            சீ (=ஒளி) + தெறு (=மிகு, சுடு) + ஐ = சீத்தெறை >>> சித்திரை = மிகுதியான ஒளியுடன் கூடிய வெப்பம் சுடுகின்ற காலம்.

வைகாசி:
            இது தமிழ்ப் புத்தாண்டின் இரண்டாவது மாதமாகக் கருதப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கு 31 நாட்கள் உண்டு. முதுவேனில் காலத்தின் இறுதியான இந்த மாதத்தில் சூரியன் தனது கூர்மையான வெப்பக் கதிர்களால் சினங்கொண்டு எரிக்கும். இந்த மாதத்தின் பெயர் தோன்றிய விதத்தைக் கீழே காணலாம்.

            வை (=கூர்மை) + காய் (=சின, எரி) + இ = வைகாயி >>> வைகாசி = சூரியன் கூரிய கதிர்களால் சினந்து எரிக்கும் காலம்.

ஆனி:
            தமிழ்ப் புத்தாண்டின் மூன்றாவது மாதமே ஆனி மாதமாகும். இந்த மாதத்திற்கும் 31 நாட்கள் உண்டு. இளவேனில் பருவத்தின் முதலாவதான இம்மாதத்தில் வெயிலின் தாக்கம் வெகுவாகக் குறைந்து அடங்கத் தொடங்கும். இந்த மாதத்தின் பெயர் தோன்றிய விதத்தைக் கீழே காணலாம்.

            ஆன் (=குறை, அடங்கு) + இ = ஆனி = வெப்பம் குறைந்து அடங்கும் காலம்.

ஆடி:
            தமிழ்ப் புத்தாண்டின் நான்காவது மாதம் ஆடி மாதமாகும். இந்த மாதத்திற்கும் 31 நாட்கள் உண்டு. இளவேனில் பருவத்தின் இறுதியாக வரும் இந்த மாதத்தில் காற்று அதிகமாகவும் மிகுந்த பலத்துடனும் வீசும். இந்த மாதத்தின் பெயர் தோன்றிய விதத்தைக் கீழே காணலாம்.

            அடி (=வீசு, தாக்கு) >>> ஆடி = காற்று வேகமாக வீசித் தாக்கும் காலம்.

ஆவணி:
            இது தமிழ்ப் புத்தாண்டின் ஐந்தாவது மாதம் ஆகும். இந்த மாதத்திற்கும் 31 நாட்கள் உண்டு. கார்காலத்தின் துவக்கமாக வரும் இந்த மாதத்தில் மழை குறைவாகப் பெய்து பூமியை மேற்புறமாக நனைத்து நெகிழ்க்கும். இதனால், உழவர்கள் காளைமாடுகளைக் கொண்டு தமது வயல்களை உழுது விதைப்புக்குத் தயார் செய்வர்.  இந்த மாதத்தின் பெயர் தோன்றிய விதத்தைக் கீழே காணலாம்.

            ஆ (=காளை) + பணி (=வேலை) = ஆபணி >>> ஆவணி = காளைகளைக் கொண்டு வேளாண் பணியைத் தொடங்கும் காலம்.

புரட்டாசி:
            தமிழ்ப் புத்தாண்டின் ஆறாவது மாதம் புரட்டாசி ஆகும். இந்த மாதத்திற்கு 30 நாட்கள் உண்டு. கார்காலத்தின் இறுதியாக வரும் இந்த மாதத்தில் மழை நன்றாகப் பெய்து குளம், குட்டை, ஏரி போன்ற நீர்நிலைகளை நீரால் நிரப்பும். இந்த மாதத்தின் பெயர் தோன்றிய விதத்தைக் கீழே காணலாம்.

            பூரணம் (=நிறைவு) + அயம் (=நீர், நீர்நிலை) + இ = பூரணாயி >>> புரடாசி >>> புரட்டாசி = நீர்நிலைகள் நீரால் நிறையும் காலம்.

ஐப்பசி:
            தமிழ்ப் புத்தாண்டின் ஏழாவது மாதம் ஐப்பசி ஆகும். இந்த மாதத்திற்கு 29 நாட்கள் உண்டு. கூதிர்காலத்தின் முதலாக வரும் இந்த மாதத்தில் மழையானது தொடர்ந்து விடாமல் மிகுதியாகப் பெய்து வெள்ளம் ஏற்பட்டுச் சிதைவினை உண்டாக்கும். மழை பெய்துகொண்டே இருப்பதால் குளிர்ச்சியும் மிகுதியாக இருக்கும். இந்த மாதத்தின் பெயர் தோன்றிய விதத்தைக் கீழே காணலாம்.

            அழி (=பெருகு, சிதை) + மழை = அழிமழை >>> அயிமயை >>> ஐபயி >>> ஐப்பசி = மழையின் பெருக்கத்தால் வெள்ளம் ஏற்பட்டுச் சிதைவு உண்டாகும் காலம்.

கார்த்திகை:
            இது தமிழ்ப் புத்தாண்டின் எட்டாவது மாதம் ஆகும். இந்த மாதத்திற்கும் 29 நாட்கள் உண்டு. கூதிர்காலத்தின் இறுதியாக வரும் இந்த மாதத்தில் மழை குறையத் தொடங்கும். இந்த மாதத்தின் பெயர் தோன்றிய விதத்தைக் கீழே காணலாம்.

            கார் (=மேகம், மழை) + திகை (=அடங்கு, முடிவுறு) = கார்த்திகை = மேகங்கள் மழையைக் குறைத்து முடிவுறும் காலம்.

மார்கழி:
            இது தமிழ்ப் புத்தாண்டின் ஒன்பதாவது மாதம் ஆகும். இந்த மாதத்திற்கும் 29 நாட்கள் உண்டு. முன்பனிக் காலத்தின் துவக்கமாக வரும் இந்த மாதத்தில் குளிர்ந்த காற்று வீசும். இந்த மாதத்தின் பெயர் தோன்றிய விதத்தைக் கீழே காணலாம்.

            மருக்கம் (=காற்று) + அளி (=குளிர்ச்சி) = மருக்களி >>> மார்கழி = குளிர்ந்த காற்று வீசும் காலம்.

தை:
            இது தமிழ்ப் புத்தாண்டின் பத்தாவது மாதம் ஆகும். ஆனால் இதுதான் தமிழரின் உண்மையான புத்தாண்டு துவக்கம் என்று பல ஆதாரங்களுடன் அறிஞர்கள் கூறி வருகின்றனர். இந்த மாதத்திற்கும் 29 நாட்கள் உண்டு. முன்பனிக் காலத்தின் இறுதியாக வரும் இந்த மாதத்தில் தான் மக்கள் புத்தாடை அணிதல், மாலைசூடுதல், அலங்கரித்தல், திரளாகச் சூழ்தல், மரக்கன்றுகளை நடுதல், புதியதில் புகுதல், உருவாக்குதல் போன்ற பல மங்கல வினைகளைச் செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. காரணம், தை என்ற ஒற்றைத் தமிழ்ச் சொல்லுக்கு மேற்காணும் வினைகள் அனைத்தையுமே பொருட்களாகத் தமிழ் அகராதிகள் காட்டுகின்றன. இனி, இந்த மாதத்தின் பெயர் தோன்றிய விதத்தைக் கீழே காணலாம்.

            தை (=உடு, சூடு, அலங்கரி, சூழ், மரக்கன்று, நடு, புகு) = புத்தாடை உடுத்தி மாலைசூடி அலங்கரித்த பலர் சூழ்ந்து மரக்கன்றுகளை நட்டுப் புத்தாண்டில் புகுகின்ற காலம்.

மாசி:
            இது தமிழ்ப் புத்தாண்டின் பதினொன்றாவது மாதம் ஆகும். இந்த மாதத்திற்கும் 29 நாட்கள் உண்டு. பின்பனிக் காலத்தின் துவக்கமாக வரும் இந்த மாதத்தில் தான் கல்வி கற்பதற்கான தொடக்க வேலைகள் நடைபெற்றன. இந்த மாதத்தின் பெயர் தோன்றிய விதத்தைக் கீழே காணலாம்.

            வாசி (=கல், பாடு, இசை) >>> மாசி = புதிதாகக் கற்றலும் பாடுதலும் இசைத்தலும் ஆகிய வினைகள் செய்யும் காலம்.

பங்குனி:
            இது தமிழ்ப் புத்தாண்டின் பன்னிரண்டாவது மாதம் ஆகும். இந்த மாதத்திற்கு 30 நாட்கள் உண்டு. பின்பனிக் காலத்தின் இறுதியாக வரும் இந்த மாதத்தில் தான் நீர்நிலைகளில் உள்ள நீரெல்லாம் ஆவியாகி வற்றத் தொடங்கும். இந்த மாதத்தின் பெயர் தோன்றிய விதத்தைக் கீழே காணலாம்.

            வறம் (=வற்றுகை, நீரில்லாமை) + குளம் (=நீர்நிலை) = வறக்குளம் >>> பாற்குணம் + இ >>> பக்குணி >>> பங்குனி = நீர்நிலைகள் நீரின்றி வற்றும் காலம்.

முடிவுரை:
            இதுவரை கண்டவற்றிலிருந்து, தமிழரின் மாதப் பெயர்கள் பன்னிரண்டும் தமிழ்ச் சொற்களை அடிப்படையாகக் கொண்டே தோன்றின என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி, தை என்ற தமிழ்ச் சொல்லுக்குத் தமிழ் அகராதிகள் கூறியுள்ள பல்வேறு பொருட்களை நோக்குங்கால், பழந்தமிழர்கள் தை மாதத்தில்தான் தமிழ்ப்புத்தாண்டைக் கொண்டாடி இருக்க வேண்டும் என்று தெரிய வருகிறது.





No comments:

Post a Comment