Monday, July 13, 2020

வையத்தலைமை கொள்

வையத்தலைமை கொள்

-- முனைவர். ஆ. பாப்பா

தமிழ் மரபு அறக்கட்டளை - கடிகையின்
வையத்தலைமை கொள் - பெண்கள் விழிப்புணர்வுக் கருத்தரங்கம்

துணிந்து சொல் (08-07-2020)
            ஐந்து நாட்கள்  கருத்தரங்கின் முதல் நாள் நிகழ்வு அலிகார் பல்கலைக்கழகப் பேராசிரியர் சாந்தினி பீ அவர்களின் வரவேற்புரையுடன் தொடங்கியது. தமிழ் மரபு அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் சுபாஷிணி அன்றைய நிகழ்வுக்கான நோக்கவுரையில் வீடு, வெளி இரண்டிலும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை, பெண் ஒரு கருத்தினைக் கூறும்போது உடன் வெளிப்படுகின்ற எதிர்க் கருத்தினை எதிர் கொள்கின்ற சக்தி பெண்களுக்குத் தேவை, பொருளாதாரத்தில் உயர்வு மற்றும் பிறருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் கொண்ட பெண்களும் வேண்டும் என்கிற நோக்கங்களை முன் வைத்ததோடு தமிழ் மரபு அறக்கட்டளையின் செயல்பாடுகளைக் களங்கப்படுத்தும் வகையில் பலர் பேசி வருகிறார்கள். அப்பேச்சுக்கள் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் என்று நம்புவோம் எனவும் பேசினார். 
            பல்வேறு தளங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆறு ஆளுமைகள்  தாம் படித்ததை, தள்ளி நின்று தாம் பார்த்ததை மட்டுமோ பேசாமல் தங்கள் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.
            ஊடகங்களில் பெண்கள் எதிர் நோக்கும் சிக்கல்களைத் திருமிகு கிருத்திகா தரன் இணையத்தின் மூலம் பெண்கள் தம்மை உயர்த்திக் கொள்ளுவது சாத்தியமா? என்கிற வினாவுடன் தொடங்கி இணையம் பெண்ணினது அடையாளத்தை அழிக்கிறது, இணையத்தில் பயன்படுத்தப்படும் வசைச்சொற்கள் பெண்பாலைச் சார்ந்தவை, பெண்கள் இணையத்திற்கு இரையாவது, நண்பர்களை நம்ப முடியாமலும் செய்ய வைக்கும் இணையம் போன்ற கருத்துக்களை முன்வைத்ததோடு இணையம் பாலினமற்ற இணையமாக மாறவேண்டும், பாலினமற்ற சமூக மாற்றத்திற்குப் பெண்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
            ஆசிரியரான முனைவர் செந்தமிழ்ச்செல்வி; குடும்பங்களில், பணிபுரியுமிடங்களில், வெளியிடங்களில் நிகழும் வன்முறையைப் பெண்களால் துணிந்து சொல்ல முடியவில்லை.  என்றும் பள்ளிகளில் பெண்களும் சிறுமிகளும் படும் துன்பங்களையும் எடுத்துரைத்தார்.
            ஆணவப்படுகொலைகள் பற்றிப் பேசிய முனைவர் சத்யாதேவி இது அதிகம் பேசப்படுவது கடந்த பத்து ஆண்டுகளாகத்தான். பெண் உடல் முதன்மைப்படுத்தப்படுவதும் உடைமை பொருளாகக் கருதப்படுவதும் அவளுக்கென மனம், அறிவு, வெளி இருக்கிறதென்று நினைக்காததும் இதற்குக் காரணம். சாதி குறித்த சிந்தனை படித்தவர்களிடம் அதிகம் காணப்படுகிறது, தனி மனித மாற்றம்தான் இதற்குத் தீர்வு என்றும் கூறினார்.
            குடும்ப வன்முறை பற்றிப் பேசிய முனைவர் அனுசுயா வன்முறை என்பது அடிப்பது மட்டுமல்ல. உடல், உளம் மற்றும் பொருளாதாரம் ஆகிய மூன்று நிலைகளில் பெண்களுக்குக் குடும்ப வன்முறைகள் நடைபெறுகின்றன. 80% பெண்கள் இதை வெளியில் சொல்வதில்லை என்பதோடு சில கணக்கெடுப்புகளைக் கூறி அந்தக் கணக்கெடுப்புகளிலும் வேறுபாடுகள் காணப்படுவதைச் சுட்டிக் காட்டினார். 
            சமுதாயத்தில் சாதீயச் சிக்கல்கள் பற்றிய தனது கருத்துக்களை முன்வைத்த வழக்கறிஞர் சினேகா சிறுவயதில் அவரது தந்தை பள்ளிப் படிவத்தில் சாதி சமயமற்றவர் என்று நிரப்பிச் சமர்ப்பித்ததையும் அதனால் அவரது குடும்பம் சந்தித்த அனுபவங்கள், கலப்புத் திருமணம் என்று கூறாமல் சாதி மறுப்புத்திருமணம் என்று கூறவேண்டும், சாதி என்பது பிறப்பு தொடங்கி இறப்பு வரை அனைவரிடத்திலும் இருக்கிறது என்பதோடு ஒவ்வொரு பிரச்சனைக்கும் பெண்களாகிய நாம் ஒன்றிணையவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
            மாற்றுத்திறனாளியாகத் தான் எதிர்கொண்ட சிக்கல்களைப் பள்ளி தொடங்கி கல்லூரி, பணியிடம், பொதுவெளி எனப் பேசிய உலகம்மாள் அரசுப் பள்ளியில் படித்தது வாழ்க்கையைக் கற்றுத்தந்ததாகப் பெருமையாகக் கூறினார். சுதந்திரம் நமக்குள்ளிருந்தே வரவேண்டும், அதைச் சரியான வழியில் கொண்டு செல்ல வேண்டும். நம்மையே முதலில் முன்மாதிரியாகக் காண வேண்டும், கட்டுப்பாடுகளை எப்படி உடைக்க வேண்டும் என்பதில் தெளிவும் அதில் முட்டி நிற்காமல் பாதையை உருவாக்கிக் கொள்ள வேண்டும், நமக்கான பொறுப்பை எப்படிக் கையாளுகிறோம் என்பது முக்கியம் என்று தெரிந்தாலே தடைகளிலிருந்து வெளிவர முடியும் என்று கூறினார்.
            முதல் நாள்  நிகழ்வு மூன்று மணிநேரம் மலர்விழியின் சிறப்பான நெறியாள்கை மற்றும் பங்கேற்பாளர்களின் வினாக்கள் மற்றும் கலந்துரையாடலோடு தொய்வின்றி நடந்து முடிந்தது.

நெசவு போற்றுவோம்  (09-07-2020)
            இரண்டாம் நாள் கருத்தரங்கு நெசவு போற்றுவோம் என்கிற தலைப்பில் பருத்தி, நெசவு – நம் பண்பாடு என்று நெசவுக்கலையின் இன்றைய நிலை மற்றும் அதனை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்தது. இன்றைய கருத்தரங்கு ஓசை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வி அகிலா செழியனின் வரவேற்புரையுடன் தொடங்கியது.
            தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவனர் முனைவர் சுபாஷினி, சேலம் ஆரண்யா அல்லி இயற்கை பண்ணை உரிமையாளர் ஆரண்யா அல்லி மற்றும் அமெரிக்கா 'டிரடிஷனல்  இந்தியா' நிறுவனத்தின் புஷ்பா கால்டுவெல் ஆகிய மூவரும் இந்த  நிகழ்வின் சிறப்புரையாளர்கள். மூவரும் நெசவுத் தொழிலை மீட்டெடுப்பதற்கு முழு மூச்சுடன் இயங்கிக் கொண்டிருப்பவர்கள்.
            சுபாஷிணி அவர்கள் தமது நோக்கவுரையோடு கைத்தறித் தொழில், தொழிலாளர் நிலை, தங்கள் குழு சென்ற மரபுப்பயணம், களப்பணி பற்றிப் பேசினார். கைத்தறி குறித்துத் தம் அமைப்பின் ஆவணங்களான ஒலி, ஒளிப்படக் காட்சிகளையும் ஒளிபரப்புச் செய்தார். இக்காட்சிகள் நெசவுத் தொழிலாளர்களின் இன்றைய வாழ்க்கை நிலையைப் பிரதிபலிப்பதாக இருந்தது.
            வேளாண்மைக் குடும்பத்தைச் சேர்ந்த ஆரண்யா அல்லி அவர்கள் நெசவுத் தொழிலாளர்களுடன் வாழ்ந்தும் தொழில் செய்வதோடு இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தும் வருபவர். நெசவுத் தொழில், தொழிற்கருவிகள், தொழிலாளர்கள், சேலை வகைகள், வடிவமைப்புகள், உற்பத்தி, சந்தைப்படுத்துதல்,  காலந்தோறும் நெசவுத்தொழில் சந்தித்த சிக்கல்கள், சவால்கள், அரசுச் சட்டங்கள், இன்றைய மாற்றங்கள், அனைத்திற்கும் மேலாகத் தமது அனுபவங்களையும் எடுத்துரைத்தார். இவரது நிறுவனம் இரண்டு முறை தேசிய விருது பெற்றிருக்கிறது.
            சேலத்தில் பிறந்து இன்று அமெரிக்காவில் வசித்துவரும் புஷ்பா கால்டுவெல் அவர்கள் தம் சகோதரியுடன் இணைந்து இந்தியாவில் 40 தமிழ்க்குடும்பங்கள் உள்பட 100 நெசவாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கையிலெடுத்துச் செயலாற்றுகிறது இவரது டிரடிஷனல்  இந்தியா என்கிற அமைப்பு,  உழவும் நெசவும் அவருக்கு  இரு கண்கள். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆதரவுடன் தாம் செயல்பட்டு வருவதையும் கூறினார். தமிழகத்தில் கல்லூரிகளில் கைத்தறி விழிப்புணர்வு முகாம்கள் நடத்திவருவதையும், தமிழ் மரபு அறக்கட்டளையுடன் இணைந்து சென்னை எத்திராஜ்  கல்லூரியில் நடத்தப்பட்டது பற்றியும், தன்னோடு தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இப்பணியில் ஈடுபட்டிருப்பது, கைத்தறி உடுத்துவதன் நோக்கம் போன்ற கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
            திருவள்ளுவர், தமிழ்த்தாய் உருவங்கள் மற்றும் தமிழ் எழுத்துக்கள் வரையப்பட்ட கைத்தறிச் சேலைகள் உருவாக்கப்பட்டு அமெரிக்கா மற்றும் ஜெர்மனியில் நடைபெற்ற தமிழ் விழாக்களில் விற்பனை செய்யப்பட்டது. இன்றைக்கு நெசவுத்தொழில் செய்து வருபவர்கள்தான் கடைசித் தலைமுறை.  மக்கள் ஆர்வம் குறைந்து கொண்டே வருவது, இதனை அழியாமல் காப்பது நமது கடமை, நாம் செய்ய வேண்டியவை போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. நிகழ்வின் பங்கேற்பாளர்கள் நெசவுத் தொழிலை நசிய விடாமல் செய்யவேண்டும் என்று கூறியதோடு நிறைய வழிமுறைகளையும் சொல்லியது கருத்தரங்கின் நோக்கத்தைப் பாதி வெற்றி பெறச் செய்ததாகவே நினைக்கமுடிகிறது. இந்த  நிகழ்வு முனைவர் பாப்பா அவர்களின் ஒருங்கிணைப்புடன் இனிதே முடிவடைந்தது.   

செம்மை மாதர் (10-07-2020)
            பல்துறைப் பெண்ணாளுமைகள் என்கிற பொருளிலமைந்த மூன்றாம் நாள் கருத்தரங்கிற்குத்  திருமிகு தர்மசீலி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். திருமிகு வசந்திரவி அவர்களின் நெறியாளுகையுடன் இன்றைய நிகழ்வு கல்வியில் பெண்கள் அன்றும் இன்றும், இலக்கியத்தில் பெண்கள், தொழில் நுட்பத்தில் பெண்கள், வரலாற்றில் முதன்முதலில் தடம் பதித்த பெண்கள் என்கிற நான்கு தலைப்புகளில் நான்கு ஆளுமைகளால் நிகழ்த்தப்பெற்றது.
            பெண் கல்வி கற்பது சுயமாக முடிவெடுக்கும் வாய்ப்புகளை உருவாக்கும், அதிகமான வாசிப்பு திறந்த மனப்பான்மையை வளர்க்கும், அது ஆரோக்கியமான சமுதாயத்திற்கு வழி வகுக்கும் என்கிற தனது நோக்கவுரையை முனைவர் சுபாஷிணி முதலில் முன்வைத்தார்.
            தமிழ் மரபு அறக்கட்டளையின் செயலர் முனைவர் தேமொழி ஒவ்வொரு கால கட்டத்திலும் பெண் கல்வியின் நிலை, பெண் கல்விக்கான தடைகளும் காரணங்களும் குடும்பம் மற்றும் சமூகத்தில் பெண் கல்வி குறித்த சிந்தனைகள், இன்றும் பெண் கல்வியின் நோக்கத்தில் ஒன்றாக நல்ல மணமகனைத் தேர்ந்தெடுத்தல் என்பது அமைந்திருப்பதையும், இந்தியாவில் இந்திராகாந்தி மற்றும் காமராசர் காலத்தில் கல்வியில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் பெண் கல்வி வளர்ச்சிக்குக் கொஞ்சம் உதவியமை போன்றவை பற்றிப் பேசினார். இன்றும் கல்லூரிகளில் பெண் துறைத்தலைவர்கள், இருபாலரும் இணைந்து செயல்படும் விழாக்கள், பணியிடங்களில் சமவிகித வாய்ப்பு கிடைக்காமை, நடத்தப்பெறும் கருத்தரங்குகளில் பேசுவதற்குப் பெண்களுக்குத் தரப்படும் முன்னுரிமை குறித்த கணக்கெடுப்புகளையும்,   அரசு கொண்டு வந்த நுழைவுத் தேர்வு மாறுதல்கள் ஒடுக்கப்பட்ட பெண்களின் தொழிற்கல்விக்குப் போடும் தடை,  அதனால் அவர்கள் கனவு  கனவாகவே இருப்பது ஆகிய கருத்துக்களைச் சான்றுகளுடன் பேசினார்.
            இலக்கியங்கில் பெண்கள் பற்றிப் பேசிய முனைவர் மஞ்சுளா அவர்கள் சங்ககாலத்தில் கல்வி பரவலாக்கப்பட்டிருந்தது, கருத்துச்சுதந்திரம் இருந்தது, பெண்கல்வி மறுக்கப்படவில்லை என்றும்  சங்கப்புலவர் வெண்ணிக்குயத்தியார், வெளிப்படையாகத் தன் காதலைக் கூறிய ஆண்டாள், சமையலறைதான் உன் அதிகாரம் என்று சொல்லிக் கொடுக்கப்பட்ட அடிமைத்தளையிலிருந்து வெளிவரக் கதை எழுதிய அம்பை, பெண் உடல் அரசியலைக் கவிதையாக்கிய சல்மா ஆகியோரது படைப்புகளை விளக்கியதோடு அப்படைப்புகள் அவ்வக் காலகட்டத்தைப் பிரதிபலிப்பதோடு காலத்தின் கலகக் குரல்களாக ஒலித்தவை என்றே பார்க்க வேண்டும் என்றும் பேசினார்.
            அறிவியல் சிந்தனை அக்காலத்திலிருந்தே பெண்களுக்கு இருந்திருக்கிறது என்று வரலாற்றடிப்படையில் துவங்கிய பேராசிரியர் மாலா நேரு தொழில் நுட்பத்துறையில் பெண்களுக்கான நிலை குறித்துப் பேசினார். உலக அளவில் பார்க்கும்போது இந்தியாவில் அறிவியலில் பெண் பங்களிப்பு குறைவுதான், தொழில் நுட்பத்தில் பெண்கள் தலைமை ஏற்காததற்குக் காரணம் குடும்பச்சூழல், பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் மற்றும்  பெண்களின் திறமைகள் முடக்கப்படுவதும் என்று கூறியதோடு, பெண்களின் துறைசார் திறமைகளை முதலில் உலகிற்கு அறிமுகம் செய்ய வேண்டும், பெண்கள் ஒருங்கிணைந்து கருத்தரங்குகள், மாநாடுகளை நடத்த வேண்டும், சில தொழில் நிறுவனங்கள் செய்வது போலப் பெண்களுக்கென சிறப்பு வேலை நேரம், காலத்தை உருவாக்க வேண்டும் என்று வழிமுறைகளையும்,  பெண்களுக்குத் தன்னார்வமும் இலக்கும் இருந்தாலே சாதிக்கலாம், அறிவுசார் சமூகமே இன்றைய தேவை, அதற்குப் பெண் கல்வி இன்னும் பெண் தொழில் கல்வி அவசியம் என்றும் கூறித் தனது உரையை முடித்தார்.
            சரித்திரம் பேசாமல் விட்ட பெண்கள் பற்றி வரலாற்றாளர் நிவேதிதா லூயிஸ் பேசினார். பொதுவுடைமையைப் பொதுவாக்கப் பாடுபட்டவரும் அரசியலில் திருப்பங்களை உருவாக்கியவருமான மணலூர் மணியம்மா, இந்தியாவின் முதல் பெண் பொறியாளர் ஏ. லலிதா, இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு அரசியலில் திருப்பங்களை உருவாக்கிய கதீஜா யாகூப் ஹாசன், இசைக்கு மதமில்லை என்று கூறிய இசுலாமிய நாதஸ்வரப் பெண் கலைஞர் காலிஷாபீ மெகபூப், சென்னைப் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண் மீனாட்சி, தமிழகத் தொல்லியல் துறையில் பணி செய்த மார்க்சிய காந்தி உள்ளிட்ட எட்டு பெண்கள் பற்றிப் பேசினார். பெண்கள் பற்றிய வரலாறு அதிகம் எழுதப்படவில்லை, சிறுபான்மையினப் பெண்களின் வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும், தொழில்நுட்பம் மிகுந்த இன்றைய காலகட்டத்தில் நாம் இன்றைய பெண்களின் வரலாற்றை நாம் ஆவணப்படுத்திவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.   

தளை தகர்ப்போம் (12-07-2020)
            பெண்களுக்கெதிரான வன்முறை பற்றிய நான்காம் நாள் கருத்தரங்கு எழுத்தாளர் மலர்விழி அவர்களின் நெறியாளுகையில் தமிழ் மரபு அறக்கட்டளையின் செயலர் முனைவர் தேமொழியின் வரவேற்புரையுடன் தொடங்கியது. 
            கடந்த சில நாட்களாகப் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதை ஊடகங்கள் வாயிலாகப் பார்க்கிறோம். ஊரடங்கு நேரத்தில் குடும்ப வன்முறைகள் அதிகமாகியுள்ளன. ஆகவே பெண்கள் தங்களுக்கெதிரான பிரச்சனைகளை மனம் மற்றும் சட்ட ரீதியாக எதிர்கொள்வதற்கு வழிமுறைகளை அமைத்துத் தரும் வகையில் இன்றைய அமர்வுகள் நடத்தப்படவேண்டும் என்கிற தமது அவாவை நோக்கவுரையாகத் தலைவர் சுபாஷிணி வைத்தார். 
            உளவியல் மருத்துவ நிபுணரும் சமூக ஆர்வலருமான ஷாலினி அவர்கள் உள அடிப்படையில் பெண்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ளுதல் குறித்துப் பேசினார். அனைத்து உயிரினங்களிலும் பெண் உயிரினம் மட்டுமே வலிமை மிகுந்தது. ஆரம்பக் காலத்தில் முதலில் இடம்பெயர்ந்த மக்கள் தாய்வழிச் சமூகமாக எந்தப் பிரச்சனையுமின்றி வாழ்ந்தனர். இரண்டாவதாக வந்தவர்களே தந்தைவழிச் சமூகமாகப் பெண்களை அடிமைப்படுத்தும் சமூகமாகப் பல கட்டுப்பாடுகளைக் கொணர்ந்தனர். பெண்கள் தங்கள் வலிமையை மறந்து ஆண்களைப் போற்றத் தொடங்கியதோடல்லாமல் தங்கள் வழித்தோன்றல்களையும் அப்படியே வளர்த்து அதுவே இன்று இயலாமையாக உருவெடுத்திருக்கிறது என்பதைச் சமயங்கள், வழிபாடு, மணமுறைகள், சடங்குகள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் போன்ற ஆதாரங்களுடன் வரலாறு, பண்பாட்டு  ரீதியாகவும் தெளிவாக விளக்கினார். இன்னும் பெண் என்பவள் இருவித மனநிலையினை உடையவள். இதை ஆண்கள் பயன்படுத்திக் கொள்ளுகின்றனர். சிந்தனையே இல்லாமலும் அதே நேரம் மிக அதிகப்படியான சிந்தனையும் கூடாது. படித்தவர்களிடம்தான் அதிகம் தயக்கமும் பயமும் காணப்படுகிறது. இந்நிலை மாறவேண்டும். சூழ்நிலைக்குத் தகுந்தவாறு பிரச்சனைகளை எதிர் கொள்ளும் மனம் வேண்டும் என்றும் கூறினார். 
            வழக்கறிஞர் கிருபா முனுசாமி பெண்கள் தங்கள் பிரச்சனைகளைச் சொல்வதற்கு இங்கு தளமே இல்லை என்று தொடங்கி வரலாற்றடிப்படையில் சட்டம் குறித்துப் பேசினார். முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சி வரைக் குற்றங்கள் மட்டுமே சட்ட அடிப்படையில் பார்க்கப்பட்டன. அவர்கள் சமயம் மற்றும் பண்பாட்டு விசயங்களில் தலையிடக்கூடாது என்று நினைத்தனர். பாலியல் வன்கொடுமைச்சட்டம், பெண்கள் சொல்வதை நம்பவேண்டும் என்கிற நிலைப்பாடு போன்றவை   கொண்டுவரப்பட்டதன் பின்னணியினைப் பாப்ரிதேவி, மதுரா, சக்தி வாஹிணி போன்ற வழக்கு விவரங்களை அடிப்படையாகக் கொண்டு விளக்கினார். இன்றும் நீதி மன்றங்கள்,  பிற இடங்களிலும் பாலினம், சாதி குறித்த பாகுபாடுகள் இருப்பதைத் தன் அனுபவங்களின் வாயிலாக எடுத்துரைத்தார்.  பெண்களுக்குப் பெண்களே எதிரிகளாகவும் உதவும் மனப்பான்மை இல்லாதிருப்பதும் மாறவேண்டும். நாமனைவரும் ஒரே குரலாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் சட்டம், நீதிமன்றம் இன்னும் பிற அமைப்புகள் எல்லாம் நமக்குப் பயனுள்ளவையாக அமையும். நீதி மன்றங்களில் சாட்சி என்பது மிகவும் முக்கியம். பெண்கள் அதற்கு முன்வருவதில்லை. மூன்றாம் நபராக முகத்தைக் காட்டாமல் பாதிக்கப்பட்டவருக்கு உதவிசெய்யலாம். நாம் ஒற்றுமையாக முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 
            பள்ளிகளிலேயே குழந்தைகளுக்குத் தற்காப்புக் கலையையும் உடல் தொடர்பான விசயங்களைச் சொல்லித்தருவதுமே பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பாக அமையும் என்று தலைவர் சுபாஷிணி அவர்கள் கூறப் பின் பங்கேற்பாளர்களின் வினாக்கள், கலந்துரையாடலுடன் கருத்தரங்கம் நிறைவுபெற்றது.   

முந்நீர் மகடூஉ (12-08-2020)
            கடல் தாண்டித் தடம் பதித்த பெண்கள் எதிர் கொள்ளும் சிக்கல்கள் குறித்து வெளிநாடுகள், மாநிலத்தில் வாழ்ந்து வரும் பெண்கள் ஏழுபேரும், சிறப்புச் செய்ய ஒருவருமாக ஐந்தாம் நாள் நிகழ்வு செல்வி ப்ரீத்தியின் வரவேற்புரையுடன் தொடங்கியது. இன்றைய நிகழ்வு எழுத்தாளர் மலர்விழி பாஸ்கரனின் நேர்த்தியான நெறியாளுகையுடன் நடைபெற்றது. 
            தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவனர் சுபாஷிணி அவர்கள் ஊரடங்கு நேரத்தில் தமது நிறுவனம் நடத்திய, இனி நடத்தப்போகிற நிகழ்வுகள், செயல்பாடுகள் பற்றியும் இன்றும் பெண்கள் இரண்டாம் தரத்திலேயே மதிக்கப்படுகிறார்கள், ஆண், பெண் சமம் என்பதே போலித்தனமானது, பெண்களின் ஆரோக்கியமான உணவு, தானாக முடிவெடுத்தல், பொருளாதாரச் சுதந்திரம் போன்றவை நிறைந்த சமூகமே முன்னேற்றமான சமூகம் என்றும் தமது நோக்கவுரையில் கூறினார். 
            ஆஸ்திரேலியாவில் வசிக்கும் வழக்கறிஞர் சந்திரிகா சுப்ரமணியம் புலம்பெயர் பெண்கள் சந்திக்கும் சிக்கல்களைக் கலாச்சாரம், கல்வி, வேலை, குடும்பம், மொழி, பொதுவெளியாகிய சமூகம் ஆகிய நிலைகளில் விளக்கினார். நமது மற்றும் புலம்பெயர் கலாச்சாரம் ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தல், சொந்த நாட்டில் கற்ற கல்வியின் மதிப்பீடு, மீண்டும் படித்தல், அனைத்து வேலைகளையும் தாமே செய்வதால் ஏற்படும் மன அழுத்தம், விளைவாகக் குடும்பப் பிரச்சனை, புலம் பெயர் நாட்டின் சட்டங்களை அறிய வேண்டிய கட்டாயம், பாலியல் துன்புறுத்தல் அனைத்திற்கும் மேலாக அந்நாட்டுச் சொந்தக்காரர் நம்மை நடத்தும் விதம் என்று விரிவாக எடுத்துரைத்தார். நேர நிர்வாகம் தானாகவே வந்துவிடும் என்றும் கூறினார். 
            அமெரிக்காவில் Reaction Team என்கிற அமைப்பின் மூலம் சமூகத் தொண்டாற்றி வரும் திருமிகு ப்ரவீணா அவர்கள் புலம்பெயர் பெண்களின் பொருளாதாரம் பற்றிப் பேசும்போது திருமணமாகி இங்கு வரும் படித்த / படிக்காத பெண்கள் கணவனைச் சார்ந்தவர்களாகவும் வீட்டு வேலைகளைப் பார்ப்பதே போதும் என்றும் நினைக்கிறார்கள். பணியிலிருந்தாலும் தமது மற்றும் கணவரது வங்கிக்கணக்கு, சொத்து, பொருளாதாரம் பற்றிய சிந்தனை இல்லாமலும்  இருக்கிறார்கள். ஆணை வீட்டுச் சார்புடையவனாகவும் பெண்ணைப் பொருளாதாரச் சார்புடையவளாகவும் வளர்க்கவேண்டும். பெண் கல்வியினால் பயனொன்றுமில்லை, அக்காலத்தில் பாட்டிமார் தம் அஞ்சறைப் பெட்டியில் பணம் சேர்த்து வைத்த புத்திசாலித்தனம் கூட இன்றைய படித்த பெண்களிடத்தில் இல்லை, அசாதாரணச் சூழலில் கையற்று நிற்கும் பெண்களே அதிகம். இந்நிலை மாறவேண்டும் என்பதைத் தம் அனுபவத்தின்வழி எடுத்துரைத்தார். 
            ஐரோப்பாவில் பெண்களுக்கான வாய்ப்புகள் பற்றிப் பேசிய ஜெர்மனியின் செல்வி கார்த்திகா அவர்கள் கலாச்சாரங்கள் கலந்த சமூகம் இது, அந்நிய தேசம் என்பதால் பெரியவர்கள் இளையோரை வெளியில் அனுப்ப யோசிக்கிறார்கள், அவர்கள் நம்பிக்கையோடு எங்களை வெளியில் அனுப்புவதற்கு ஏற்ற வகையில் திடமான மனதோடு அந்நியச் சவால்களை எதிர்த்து நிற்கும் மனத்தோடும் தமிழ்ப் பெண்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்யவேண்டும் என்கிற முயற்சியில் இருப்பதாகக் கூறினார்.
            மலேசியாவில் ஆசிரியர் பணியிலிருக்கும் திருமிகு சரஸ்வதி ஜகதீசன் அவர்களின் மலேசியாவில் பெண் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த உரை ஆய்வாகவே இருந்தது. இங்கு B40 குழுவினர்தான் அதிகம் சவால்களை எதிர்கொள்பவர்கள். இதற்குப் பொருளாதாரத்தில் பின்தங்கிய இவர்கள் கல்வி பயிலுதல், வீட்டுப்பாடம் செய்வதில் சிக்கல், சின்னத்திரை மோகம் அதிகம், தாய்மார்கள் தங்கள் பெண் பிள்ளைகளைச் திரைப்பட நடிகர் போலக் காட்டுவதால் மனப்பிறழ்வு, உருவம், நிறம், மொழி என்கிற வகையில் மற்றவர்களோடு ஈடுகொடுக்க முடியாமல் மனப்பிறழ்வு, வெளியிலுள்ள படிப்பைக் கைவிட்ட ஆண்களால் தடம் மாறுதல், மதுப்பழக்கத்திற்கு உள்ளாதல் போன்ற காரணங்களைச் சுட்டியதோடு மலேசியப் பெண்கள் சவால்களை எதிர்கொள்வதில் சிறப்பாகச் செயல்படுவதாகவும் கூறினார். 
            சிங்கப்பூர்ச் சூழலில் சமூகத் தொண்டாற்றுதல் குறித்துப் பேசிய திருமிகு வசந்தி அவர்கள் பெண்களுக்குப் பாதுகாப்பான நாடு இது என்பதால் தனது பெற்றோர் தனக்கு அனுமதி அளித்ததாகக் கூறிய இவர் சமூகத் தொண்டாற்றுவது தனியாகவா, அமைப்புடன் சேர்ந்ததா, தொண்டாற்றக்கூடிய துறையைத் தேர்தல், அத்துறையறிவு பெறுதல்,  தொண்டு அமைப்புகளின் சட்டதிட்டங்களை அறிதல், அந்நிறுவனங்களின் பயிற்சிக்குட்படுதல், தமது பாதுகாப்பு, பொருள், நேரம் செலவிடல், திறன் போன்ற உதவிகளை முடிவு செய்தல் ஆகிய வழிமுறைகளையும்  இத்தகைய தொண்டுகளின் மூலம் நேர மேலாண்மை, புத்தாக்கச்சிந்தனை, திட்டமிடல், ஒருங்கிணைப்பு போன்ற திறன்களைத் தான் கற்றதையும் நெஞ்சுரம், உறுதி, நன்றியுணர்வு, தோல்வி கண்டு துவளாமை போன்ற குணங்களைப் பெற்றதையும் கூறியதோடு ஒவ்வொருவரும் இன்னொருவர் வாழ்வில் தன்னால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று உறுதியாக நம்புகிறோம் என்றும் முடித்தார்.
            உத்திரப் பிரதேசம் அலிகார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் சாந்தினிபீ அவர்கள் உத்தரப்பிரதேச படித்த பெண்கள் பற்றிப் பேசினார். சாதி, மதம், நிறம், ஊர் பற்றிய விவரங்களெல்லாம் தெரியாமல் இவர்கள் பேசுவதேயில்லை. கலப்புத் திருமணத்தை இன்றும் வியப்பாகத்தான் பார்க்கிறார்கள். பெண்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் இல்லை, அரசியல் பேசும் பெண்களோடு பேசுவதும் பழகுவதும் தப்பு என்று ஆண்கள் கருதுவது, ஆணின் முன்னேற்றத்திற்குப் பெண்ணின் பழக்கவழக்கங்கள் தடையாக இருப்பதாகச் சாடுவது போன்ற தமது கருத்துக்களை எடுத்துரைத்தார்.  
            பப்புவா நியூ கினியாவிலிருந்து பேசிய சுபா அபர்ணா சசீந்திரன் அவர்கள் வரலாற்றுப்படையில் உலக அளவில் சாதனைப் பெண்கள் பற்றிப் பேசினார். பெண்களின் பயம் மிகப்பெரிய வைரஸ், பெண்கள் தடைக்கற்களை மட்டும் பார்க்காமல் வெற்றியை, சாதனைகளை மட்டுமே பார்க்கவேண்டும், தம் தனித்துவத்தைக் கண்டுபிடித்து அதை வளர்த்தெடுக்கவேண்டும், பப்பு கினியாவில் பெண்கள் முழுப் பொருளாதாரச் சுதந்திரம் பெற்றவர்களாக இருக்கிறார்கள், பெண்கள் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும், பெண்கள் இயல்பிலேயே தன்னாற்றல் மிக்கவர்கள், அதை வளர்க்க வேண்டும் என்று கூறுவதே தப்பு, உந்து சக்தி உள்ளே இருக்கிறது அதை வெளியே தேட அவசியமில்லை என்று முடித்தார்.     
            எல்லாவற்றிற்கும் தாய் பெண் மட்டுமே என்கிற மூதாதையரின் பாடல் வரிகளோடு தனது உரையைத் தொடங்கிய இன்றைய நிகழ்வின் சிறப்புரையாளர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் அரிஸ்டாட்டில் பெண்கள் குறித்துக் கீழான கண்ணோட்டம் கொண்டவர் என்றும் இந்த நூற்றாண்டில்தான் பெண்கள் சாதனை படைத்ததாகக் கூறப்படுகிறது, வரலாற்றைப் பார்த்தால் உலகளவில் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பண்டைக்காலத்திலிருந்தே சாதனை படைத்திருப்பதையும் பட்டியலிட்டுக் காட்டினார்.  
            பெண்கள் பற்றிய பொய்யான கருத்தாக்கங்கள் இந்த நூற்றாண்டில்தான் அதிகம். தமிழ் இலக்கியங்களில் பெண்கள் வேள்விகளில் கலந்து கொண்டமைக்கான குறிப்பு இருப்பதையும் வாழ்க்கைத் துணைநலம் என்கிற அதிகாரத்தை எடுத்துவிட்டே திருக்குறளைப் பாடமாக வைக்கவேண்டும் என்று பெரியார் கூறியதையும் சுட்டிக்காட்டிய அவர் பகுத்தறிவு அறிவுசார் சமூகத்திற்குத் தேவை, கல்வி மட்டுமே நமக்கான அடையாளமல்ல, வாழ்க்கை அனுபவம் மிக அவசியம், அதிகாரத்திற்கு முன்பாகப் பெண்கள் தைரியமாகப் பேசுவது முக்கியம் என்றும் கூறினார். உலகம் அனைவருக்குமானது என்கிற புரிதலோடு செயல்படுவோம் என்று முடித்தார்.  






No comments:

Post a Comment