Saturday, June 27, 2020

கடிகை வழங்கிய "சோழர்காலத் தமிழ்க் கல்வெட்டுக்கள்" பயிலரங்கம்

கடிகை வழங்கிய "சோழர்காலத் தமிழ்க் கல்வெட்டுக்கள்"  பயிலரங்கம்

--முனைவர் தேமொழி



            தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின்,  `கடிகை` - தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக் கழகம்,   ஜூன் 2020இன்  மூன்றாம் வார இறுதியில் ( ஜூன் 19-21, 2020 ஆகிய நாட்களில் ) ஏற்பாடு செய்திருந்த "சோழர்காலத் தமிழ்க் கல்வெட்டுக்கள்" என்ற இணையவழிக் கல்வெட்டுப் பயிலரங்கம் (Webinar) பொது முடக்கக் காலத்தில்  சோழர்காலத் தமிழ்க் கல்வெட்டுக்கள்  குறித்து அறிந்து கொள்ள நல்ல ஒரு வாய்ப்பாக உலகத் தமிழர்களுக்கு அமைந்தது. 

பயிலரங்கின் நோக்கம்: 
சோழர்காலக் கல்வெட்டுகள்  குறித்த தொல்லியல் தரவுகளை அறிவது,
சோழர்கால கல்வெட்டுத் தமிழ் எழுத்துகளை அடையாளம் தெரிந்து கொள்வது,
சோழர்காலம் குறித்து அறிய உதவும் முக்கியமான கல்வெட்டுகளையும் அவை தரும் வரலாற்றுச் சிறப்புமிக்க செய்திகளையும் அறிந்து கொள்வது, 
சோழர்களுக்குப் புகழ் சேர்த்த சோழர்கால  கோயில்களின் செயல்பாடு, கட்டடக் கலை, ஓவியங்கள் குறித்துத் தெரிந்து கொள்வது,
கோயில் கல்வெட்டுகள் தரும் சோழ மன்னர்கள் குறித்த செய்தி, சோழர் கால அரசியல், வணிகம், சமூக நிலை முதலியவற்றை அறிந்து கொள்வது
எனத் தமிழர் வரலாற்று பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஆர்வம் உள்ள அனைவரும் முறையான கற்றல் என்பது வரலாற்றை அறிந்துகொள்ள மிக அவசியம் என்ற குறிக்கோளில் சோழர் கால தொல்லியல் தடயங்கள் குறித்து அறிந்து கொள்வது.

            நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுவினர்களான  முனைவர் க. சுபாஷிணி அவர்களின் வழிகாட்டலில், திரு. கதிரவன், தமிழ் மரபு அறக்கட்டளை பயிலரங்கம்  ஒருங்கிணைப்பாளர் மற்றும் திரு. கிரிஷ், நிகழ்ச்சி தொகுப்பாளர்  ஆகியோர்  பயிலரங்கம் நடந்த நாட்களில் மாணவர்களை வரவேற்றுப் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தினர்.  பயிற்சி செயல்திறன் மதிப்பீட்டைத் திரு. பாலா லெனின் அவர்களும்  நிகழ்ச்சியின் நெறியாள்கையை திரு. பிரபாகரன்  அவர்களும் முன்னின்று சிறப்பாக  நெறிப்படுத்தினர். கருத்தரங்க தொலைத்தொடர்பு தொழில்நுட்ப உதவியைத் திரு. மு. விவேகானந்தன்  அவர்களும் மாணவர்களின் பதிவு மற்றும் சான்றிதழ் ஏற்பாடுகளை சிவக. மணிவண்ணன் அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். 


முதல்  நாள் பயிலரங்கம்:
(ஜூன் 19, 2020 - வெள்ளிக்கிழமை) 
            நிகழ்ச்சியின் முதல்நாள் பொது  அறிமுகமாகச் சோழர்களையும், அவர்கள் செயல்பாடுகளையும், சோழர்காலக் கல்வெட்டுகளையும் குறித்த ஒரு  நிகழ்ச்சியாகத் திட்டமிடப்பட்டிருந்தது.
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவரும்,  அதன் கடிகை தமிழ் மரபு முதன்மை நிலை இணையக் கல்விக் கழகத்தின் இயக்குநருமான  டாக்டர் க.சுபாஷிணி "சோழர்கள் ஓர் அறிமுகம்" என்ற தலைப்பில் அறிமுக உரையாற்றி நிகழ்வைத் துவக்கி வைத்தார்.  அவரைத் தொடர்ந்து தொல்லியல் அறிஞர் டாக்டர். சிவராமகிருஷ்ணன்   சோழர் கால கல்வெட்டுக்களின் பன்முகத் தன்மைகள்  குறித்த சிறப்புரையை ஆற்றினார்.  பங்கேற்பாளர்களின் கேள்வி-பதில் மற்றும் கலந்துரையாடலுடன் முதல்நாள் நிகழ்வு நிறைவுற்றது.


இரண்டாம் நாள் பயிலரங்கம்: 
             (ஜூன் 20, 2020 - சனிக்கிழமை)
இரண்டாம் நாள் பயிலரங்கம்  "சோழர்காலத் தமிழ்  கல்வெட்டுப் பயிற்சி" என்ற நோக்குடன் தொல்லியல் அறிஞர் டாக்டர் சு.ராஜவேலு (மேனாள் துறைத் தலைவர், கடல் தொல்பொருள் துறை, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம், சிறப்புப் பேராசிரியர் , வரலாற்றுத் துறை, அழகப்பா பல்கலைக்கழகம்) அவர்களின் உரை, இரு நீண்ட அமர்வுகளாகச் சோழர்கால கல்வெட்டுகள் குறித்து சோழர்கால கல்வெட்டு எழுதத்தின் வரலாற்றில் துவங்கி, தமிழக வரலாறு அறிவதில் அக்கல்வெட்டுகளின் பங்களிப்பு என்று  எண்ணிறைந்த தகவல்களை அள்ளித் தந்தது . பங்கேற்பாளர்களின் கேள்வி-பதில் மற்றும் கலந்துரையாடலுடனும் மற்றும் திரு. பிரபாகரன் சிறப்பான நெறியாள்கையுடன் முதல்நாள் நிகழ்வு நிறைவுற்றது.


நிறைவுநாள் பயிலரங்கம்:
(ஜூன் 21 , 2020 - ஞாயிற்றுக் கிழமை)
            நிறைவுநாள் பயிலரங்கம் சோழர்களுக்குப் புகழ் சேர்த்த சோழர்கால  கோயில்களின் செயல்பாடு, கட்டடக் கலை, ஓவியங்கள் குறித்தும்;  கோயில் கல்வெட்டுகள் தரும் சோழ மன்னர்கள் குறித்த செய்தி, சோழர் கால அரசியல், வணிகம், சமூக நிலை முதலியவற்றைக் குறித்தும் அறிந்து கொள்ளும் வகையில் டாக்டர் சு.ராஜவேலு அவர்களால் இரு நீண்ட அமர்வுகள்  கொண்ட உரைகளாக வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து டாக்டர் க.சுபாஷிணி அவர்கள்  பாராட்டி நன்றி கூறும் உரையுடனும், வெற்றிகரமாகப் பயிலரங்கை முடித்த மாணவர்களுக்கு இணையம் வழி எண்ணிமச் சான்றிதழ் வழங்கலுடன் இனிதே நிறைவுற்றது.

 

            நிகழ்ச்சி குறித்துக் குறிப்பிட்ட டாக்டர் சுபாஷிணி, "19ம் தேதி தொடங்கி 21 வரை, 3 நாட்களும் ஒவ்வொரு நாளும் 4லிருந்து 5 மணி நேரங்கள் பொறுமையாகப் பாடத்தைக் கேட்டு பயிலரங்கில் பயின்று கொண்ட மாணவர்களின் ஆர்வம் தமிழ் வரலாற்றை அறிந்து கொள்வதில் உலகத் தமிழர்களுக்கு இருக்கும் உறுதியான ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. இந்த முயற்சிக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு மேலும் பல பயிலரங்கங்களை நிகழ்த்துவதற்கான ஆர்வத்தை எங்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது.  உலகத் தமிழர்களின் வரலாற்றுத் தேடலுக்குத் தரமான கல்வியை வழங்கும் முயற்சியில் நிச்சயம் தமிழ் மரபு அறக்கட்டளை பங்களிப்போம்" என்று உறுதியளித்தார்.

            "கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற இப்பயிலரங்கம் சோழர் காலத் தமிழ்க் கல்வெட்டுகளைப் பற்றிய மிகச் சிறந்த கற்றல் அனுபவத்தை வழங்கியது. அனுபவக் கல்வியே சிறந்தது என்ற வகையில் ஆய்வாளர் தன்னுடைய ஆராய்ச்சி அனுபவத்தை எங்களுக்கு வழங்கிக் கற்பித்துள்ளார். தங்களின் அயராத உழைப்புக்கும் அனுபவப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.  --- நாகை கா. சுகுமாரன் (இயக்குநர், ஆஸ்திரேலிய தமிழ்க் கலாசாலை, வள்ளுவர் அறக்கட்டளை, மெல்பேர்ன் ஆஸ்திரேலியா) பங்கேற்பாளரும் பயிலரங்கம் குறித்த தனது மதிப்பீட்டை நல்கினார்.

            தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் 'கடிகை' - தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக் கழகத்தின் ஏற்பாட்டில்  முதல் இணையவழி பயிலரங்கம் -'சோழர்காலத் தமிழ்க் கல்வெட்டுக்கள்` பயிலரங்கிற்குக் குறைந்த அளவு 14 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களும் பயிலரங்கத்தில் பங்கு பெற அனுமதிக்கப்பட்டனர். பயிலரங்க வகுப்புகள் இந்திய நேரம்  மாலை 6:30க்குத் தொடங்கி  இரவு 9:30 வரை சொற்பொழிவுகள், கேள்விகள், கலந்துரையாடல்கள்  என்று தொடர்ந்தது.  மாணவர்களுக்குச் சலுகைக் கட்டணமும் ஏற்பாடு செய்யப்பட்டது.  உலகெங்கிலுமிருந்தும்  169 மாணவர்கள் பதிந்து பயன்பெற்றனர். இவர்களில் மூன்று செயல் குழு உறுப்பினர்களும்,  பொதுப்பிரிவில் 96 ஆர்வலர்களும், மாணவர்கள் பிரிவில் 70 மாணவர்களும் பயிலரங்கில் பங்கு பெற்றனர்.  இதில் 16 கல்லூரி மாணவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளை இலவச பயிற்சியாகப்  பயிலரங்கை வழங்கியது சிறப்பினும் சிறப்பு. மாணவர்கள் சார்பில் எனது மனமார்ந்த நன்றி.




No comments:

Post a Comment