Monday, March 30, 2020

நூல் விமர்சனம் - ராகுல் சாங்கிருத்யாயன்

முனைவர்.க.சுபாஷிணி

 ​சில ஆண்டுகளுக்கு முன்னர் வால்காவிலிருந்து கங்கை வரை நூலை வாசித்தபோது மிகப்பெரிய பிரமிப்பு. எப்படி இந்த நூலாசிரியரால் இவ்வளவு செய்திகளை இவ்வளவு சுவார​சியமாக​த்​ தர முடிகிறது என்ற வியப்பு அது. ​நான் மிக ​அண்மையில் வாசித்த நூல் அதே நூலாசிரியர் எழுதிய ​மற்றுமொரு நூல் `​ஊர்சுற்றிப் புராணம்​`​. என்னுடைய ஆழ்மனதின் ஆர்வத்தோடு இணைந்து செல்வதால் இந்த ​நூலாசிரியரை​ப்​ பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்று தேடியதில் ஒரு நூல் கிடைத்தது.
​​ராகுல் சாங்கிருத்யாயன்​ - சாகித்ய அகாதமி வெளியீடாக பிரபாகர் மாச்வே என்பவரால் ஆங்கில மொழியில் எழுதப்பட்டு 1986ஆம் ஆண்டு வெளியீடு கண்டது​ இந்த நூல்​. இதனை​த்​ தமிழாக்கம் செய்து திரு.வல்லிக்கண்ணன் தமிழ் வாசகர்களுக்காக வழங்கியிருக்கின்றார்.

இந்த நூலில் ஐந்து பகுதிகள் இருக்கின்றன. ​முதலில் வருவது ​ராகுல் சாங்கிருத்யாயன் பற்றிய ஒரு அறிமுகம். இது ஆரம்பம் தொடங்கி இறுதிவரை அவரது வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை மட்டும் மையப்படுத்தி அவரது சிறப்பு​த்​ தன்மையை வெளிப்படுத்தி விவரிக்கும் ஒரு பகுதி​. ​ இரண்டாம் பகுதி வாழ்க்கை என்ற தலைப்பில் பண்டிதர் ராகுல் சாங்கிருத்யாயனின் வாழ்க்கை குறிப்பாகவும் அவரது கல்வி​த்​ தேடல், அவர் செய்துகொண்ட பெயர் மாற்றங்கள்​ அப்போதைய நிகழ்வுகள்​, திருமணம்​,​ வாழ்க்கைத் துணை பற்றிய செய்திகள், மற்றும் விரிவான அவரது பயணங்கள்​,​ திபெத்​,​ ரஷ்யா​,​ இலங்கை​,​ ஆகிய நாடுகளில் அவர் நீண்ட காலம் தங்கியிருந்து பணியாற்றிய அல்லது ஈடுபாடு கொண்ட செயல்பாடுகளைப் பற்றி விவரிக்கும் பகுதி.

மூன்றாவதாக வருவது படைப்புகள் என்னும் பகுதி. ராகுல் சாங்கிருத்யாயன் ஒரு துறையில் மட்டுமே திறன் பெற்றவர் அல்ல. பல துறைகளில் ஈடுபாடு கொண்டு​,​ அதிலும் குறிப்பாக​,​ ஆழமான ஈடுபாடு கொண்டு வெவ்வேறு துறைகளை​ப்​ பற்றி தனது ஆய்வுகளையும் சுய அனுபவங்களையும் கருத்துக்களையும் அவர் நூலாக வடித்திருக்கிறார்​.​ அந்த வகையில் இந்தப் பகுதியில் அவரது ​எழுத்தாக்கத்தில்​​ வெளிவந்த கற்பனை படைப்புகள், வாழ்க்கை வரலாறு​ -​ சுயசரிதை, பயண விவரிப்புகள் அல்லது பயணக்குறிப்புகள் என்ற வகையிலான செய்திகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இதற்கு அடுத்து வருவது நான்காவது பகுதி​.​ இது அவரது இலக்கிய சாதனைகளை விவரிக்கும் ஒரு பகுதி. இன​.​ மத பேதமற்று​.​ அறிவு ஒன்றை மட்டுமே தேடுவதை​க்​ குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர் ராகுல் சாங்கிருத்தி​யா​யன்​ என்கின்றார் நூலாசிரியர்​. இந்தப் பகுதியில் அவரது முக்கிய நண்பர்களைப் பற்றிய தகவல்களை நூலாசிரியர் வழங்குகின்றார். நூலாசிரியர் பிரபாக​ர் அவர்களும்​ ராகுல் சாங்கிருத்யாய​னுக்கு ​உற்ற நண்பராக இருந்தவர் என்ற​ கருத்துக்களையும் நூலில் அறியமுடிகின்றது​ என்பதோடு ஒரு​சில இலக்கியப் பணிகளில் ​ராகுலுடன் நூலாசிரியர் பிரபாகர் ​இணைந்து செயலாற்றி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
​நூலின் ​இறுதி​ப் பகுதியில்​ ​இரண்டு​ குறிப்புகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. அதில் முதலாவது ராகுலின் வாழ்க்கையில் நிகழ்ந்த மிக முக்கிய நிகழ்ச்சிகளின் பட்டியல். இரண்டாவது பண்டிதர் ராகுல் சாங்கிருத்யாயன்​னின் படைப்புகள். இந்த​ப்​ பட்டியலைப் பார்க்கும்போது வாசிக்கும் நமக்கே திகைப்பு ஏற்படுகின்றது. நாவல்கள்​,​ சிறுகதைகள்​,​ சுயசரிதை நூல்கள்​,​ வாழ்க்கை வரலாறு நூல்கள்​,​ பயணநூல்கள்​,​ கட்டுரைகள் என 74 இலக்கிய நூல்கள் இந்த​ப்​ பட்டியலில் இடம் பெறுகின்றன. இதற்கடுத்து​,​ இதர நூல்கள் என்ற தொகுப்பில் அறிவியல்​,​ சமூகவியல்​,​ அரசியல்​,​ தத்துவம்​,​ சமயம்​,​ பயண நூல்​,​ அகராதி மற்றும் லெக்சிகன்​,​ இலக்கிய வரலாறு​,​ நாட்டார் பாடல்​,​ ஆய்வு​,​ வரலாறு​,​ தொகுப்பு​,​ மொழிபெயர்ப்பு​,​ சமஸ்கிருத பதிப்பித்தல் அல்லது மொழிபெயர்ப்பு என 72 நூல்கள் பட்டியலில் இடம் பெறுகின்றன.
1893 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தின் அசாம்கார்க் மாவட்டத்திலுள்ள கனிலா சர்க்கார் பன்னூர் என்னும் கிராமத்தில் பிறந்தார். அவரது இளமைப் பருவம் துயரம் நிறைந்த அனுபவ​த்தையே அவருக்கு வழங்கியது. மிக இளம் வயதிலேயே தனது அன்னையையும் சகோதரியையும் இழந்தார். அவருக்கு மிகச் சிறிய வயதிலேயே திருமணம் நடைபெற்றிருக்கின்றது. ஆனால் யாருடன் நடைபெற்றது என்பதை அறியும் முன்னரே அவர் தனது பயணத்தைத் தொடங்கி விட்டதால் அந்த​த்​ திருமணம் அவரது வாழ்க்கையில் முக்கிய இடம் பெறவில்லை.

ராகுலின் வாழ்க்கையில் 1915 முதல் 1922 வரையிலான காலகட்டம் முக்கியத்துவம் பெறுகின்றது. இளம் வயதிலேயே உலகத்தை அறிந்து கொள்ள வேண்டும் என ஓரிருமுறை வீட்டிலிருந்து வெளியேறி பிறகு மீண்டும் வீட்டுக்குத் திரும்பி வந்தவர் தனது தேடலுக்கு எல்லை இல்லை என்பதை உணர்ந்து கொண்டு இயல்பான வாழ்க்கையிலி​ருந்து புரட்சிகரமான ஒரு வாழ்க்கையை முன்னெடுத்த காலகட்டமிது.
ராகுல் தன் கைப்பட எழுதிய அவரது குறிப்புகள் 3000 பக்கங்களுக்கு மே​லாகும். அவரது படைப்புகளும் குறிப்புகளும் இந்தி​,​ சமஸ்கிருதம்​,​ பாலி, திபெத், போஜ்புரி ஆகிய மொழிகளில் எழுதப்பட்டவை. அவரது நூல்கள் இன்று தமிழ் உட்பட பல்வேறு இந்திய மொழிகளிலும் ஆங்கிலம் மற்றும் ரஷ்ய, பர்மிய மொழிகளிலும் வெளிவந்துள்ளன.ராகுல் சாங்கிருத்யாய​னின் வாழ்க்கைக் குறிப்பை கூறும் இந்த நூலை எழுதிய நூலாசிரியர் பிரபாகர் 1948ஆம் ஆண்டு அலகாபாத் இந்தி சாகித்திய சம்மேளனத்தில் அவரோடு இணைந்து 16​,000 வார்த்தைகள் கொண்ட அலுவலக​காரியத்திற்கான சொற்களை விளக்கும் ஆங்கில​-​இந்தி அகராதி ​நூல்​தயாரிப்பதில் பணியாற்றியிருக்கின்றார்​ என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் சாங்கிருத்யாய​னி​ன் வாழ்க்கையில் பயணங்களே முக்கிய இடம் பெறுகின்றன. ஊர் ஊராக​ச்​ சென்று கொண்டே இருக்க வேண்டும்​.​ ஒவ்வொரு ஊரிலும் அங்குள்ள சூழலுக்கேற்ப மக்களையும்​.​ ஊர்களின் சிறப்பையும் புரிந்துகொண்டு வாழ்க்கை​ பயணத்தைச்​ செலுத்த வேண்டும். புதிய செய்திகளை​க்​ கற்கவேண்டும்​.​ புதிய அனுபவங்களை​த் தேடிப்​ பெற வேண்டும் என்ற நோக்கத்துடனேயே அவரது முழு வாழ்க்கையும் அமைந்தது. முழுமையான பள்ளிக் கல்வி என்பது அவரது வாழ்க்கையில் இடம்பெறவில்லை என்றாலும் அவரது தீவிர தேடுதலும் கற்றலும் அவர் ரஷ்யாவின் லெனின்கிராட் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பேராசிரியராக​ப்​ பணியாற்றும் வாய்ப்பையும்​,​ இலங்கையில் வித்யாலங்காரா பல்கலைக்கழகத்தில் ​பௌத்த தத்துவவியல் ​பேராசிரியராக​ப்​ பணியாற்றும் வாய்ப்பினையும் அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தது என்பது வியக்க வைக்கிறது.

தனது வாழ்க்கையில் அவர் நான்கு முறை திபெத் நாட்டிற்குச் சென்றிருக்கின்றார். இறுக்கமான கெடுபிடிக​ளை சந்தித்த போதும் பல்வேறு வகையில் தான் சந்தித்த தடைகளையெல்லாம் கடந்து அவரது ஒவ்வொரு பயணங்களும் அமைந்திருக்கின்றன.

ராகுல் சாங்கிருத்யாயன் பிறந்தபோது அவருக்கு இட்ட பெயர் கேதார்நாத் பாண்டே. தனது பத்தொன்பதாவது வயதில் அவர் ராகுல் பராசா ​மடத்தில் முறையாக சாதுவாகச் சேர்ந்தபோது அவரது பெயர் ராம் உதார் தாஸ் என மாற்றப்பட்டது. அந்த மடத்தின் வருங்கால வாரிசாக​வும்​ தலைவராக வருவதற்கு வாய்ப்பிருந்தும்​,​ சடங்கு சம்பிரதாயங்களில் ஈடுபாடின்றி அவர் அங்கிருந்து வெளியேறி​னார். வெளியேறினார் என்று சொல்வதற்கு பதில் ஓடிப்போனார் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.








No comments:

Post a Comment