Wednesday, December 25, 2019

கல்வெட்டில் தனிப்பாடல் திரட்டு

கல்வெட்டில் தனிப்பாடல் திரட்டு

——   மா.மாரிராஜன்


          சங்க இலக்கிய தமிழ்ப் பாடல் வரிகள் கல்வெட்டுகளில் இடம் பெறுவது சற்று அபூர்வமான ஒன்றாகும். சிற்றிலக்கியத் தமிழ்ப்பாடல்கள் கல்வெட்டில் இடம்பெறுவது  சிறப்பு. அப்பாடல் வரலாற்றுச் செய்திகளை ஒட்டி இருந்தால் அது இன்னும் சுவாரசியம். 

          பிற்காலச்சோழ இலக்கிய வரலாற்றில் ஒட்டக்கூத்தரின் பங்கு அபரிதமானது. விக்ரமச்சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜன் என்று மூன்று சோழ அரசர்களின் காலத்திலும் இருந்தவர். இவர் எழுதிய மூவருலா, தக்காயப்பரணி போன்ற நூல்கள் தனித்தமிழ் இலக்கியச்சுவை வாய்ந்தவை. சோழர் குலப் பெருமையைப் போற்றி பாடுவதில் வல்லவர்.

          ஒட்டக்கூத்தரின் சமகாலத்தைச் சேர்ந்தவர் புகழேந்திப்புலவர். பாண்டியனது அவைப்புலவர். ஒட்டிப் பாடுவதிலும் வெட்டிப்பாடுவதிலும் இவரது தனிச்சிறப்பு. பாண்டிய குலப் பெருமையைப் போற்றிப் பாடுவதில் புகழேந்திப்புலவர் பெரும் சமர்த்தர்.

          சோழர்களின் பெருமையை ஒட்டக்கூத்தர் பாட, அதை வெட்டி பாண்டியர் பெருமையைப் புகழேந்தி பாட என அமைந்த பாடல்கள் வெகு பிரசித்தம். இருவரியும்  விடாக்கண்டன், கொடாக்கண்டன் என்பார்கள்.

          ஒருபாடலைப்பாருங்கள்;  ஒட்டக்கூத்தர் இவ்வாறு பாடுகிறார், 
                    “இன்னம் கலிங்கத்தில் வேந்தர் உண்டென்றோ
                    தென்னவன் தமிழ்நாட்டை சீறியோ - சென்னி
                    அகளங்கா உன் தன் அயிராவதத்தின்
                    நிகளங்கால் விட்ட நினைவு”

          புகழேந்திப் புலவர் இப்பாடலை அப்படியே வெட்டிப்பாடுகிறார்.
                    “தென்னவன் தென்னர்பெருமாள் திறல்மதுரை
                    மன்னவன் கோக்களிற்றின் வல்லிக்கும் - பொன்னிநா
                    டாலிக்கும் வேந்தாம் அபய குலமகளிர்
                    தாலிக்கும் ஒன்றே தளை”

          அதாவது, சோழனது பட்டத்து யானையின் காலில் கட்டியுள்ள சங்கிலி அவிழ்க்கப்பட இரண்டு காரணம் உண்டு. கலிங்கத்தில் பகை இன்னும் மிச்சமிருக்கலாம் அல்லது பாண்டிய நாட்டை சீரழிக்கும் முடிவாக இருக்கலாம் என்று ஒட்டக்கூத்தர் பாட;

          இதற்குப் பதிலாகப் புகழேந்தி, தெற்குப் பகுதி மக்களின் தலைவனான பாண்டியனது மதுரையில் இருக்கும் பாண்டிய பட்டத்து யானையின் காலில் உள்ள கயிற்று முடிச்சும், பொன்னி நாட்டில் இருக்கும் கற்புடைய சோழ மகளிரின் கழுத்தில் உள்ள தாலி முடிச்சும் ஒன்றேயாகும் (பாண்டியனது யானையின் காலில் உள்ள முடிச்சு அவிழ்ந்தால், சோழப் பெண்களின் தாலி முடிச்சு அவிழும் என்பது இப்பாட்டின் பொருள் ஆகும்) அதாவது, போரில் சோழ வீரர்கள் இறந்து அவர்களது தேவியர் தாலியை இழப்பார்களாம்.

          இம்மாதிரியான பாடல்கள் ஏராளம். இப்பாடல்கள் தனிப்பாடல் திரட்டு என்னும் சிற்றிலக்கியமாகத் தொகுக்கப்பட்டுள்ளது. தனிப்பாடல் திரட்டில் உள்ள புகழேந்தியின் பாடல்கள், அப்படியே குடுமியான் மலையில் கல்வெட்டாகவும் உள்ளது. தென்னவன் செய்யப் பெருமாள் என்று தொடங்கும் புகழேந்தியின் பாடலை கல்வெட்டில் காணலாம்.






நன்றி:  படம் உதவி - திருச்சி பார்த்தி. 



தொடர்பு: மாரிராஜன் (marirajan93@gmail.com)

No comments:

Post a Comment