Friday, September 16, 2016

மறைமலை அடிகள்

-- மாயோன் .டி. எஸ். 



வேதாசலம் சுவாமி என்ற பெயரை மறைமலை அடிகள் என தனித்தமிழில் மாற்றியவர்.

தமிழ், சமசுகிருதம், ஆங்கில மொழிகளில் புலமை பெற்றவர். அன்றைய காலத்தில் தமிழில் பிறமொழிச் சொற்கள் கலந்து, தமிழ்ச் சொற்கள் வழக்கொழிந்து போன நிலையில் தனித்தமிழ் இயக்கம் கண்டு தமிழையும், தமிழ்ச்சொற்களையும் மீட்டெடுத்தவர்.

இயற்கை மொழியான தமிழில், பிறமொழிகளைக் கலப்பதை, உடலுறுப்புகளை வெட்டிவிட்டு அவ்விடங்களில் செயற்கையான மண்ணாலும், மரத்தானாலும் ஆன உறுப்புகளை வைப்பது போன்றது என எளிய முறையில் விளக்கி, பிறமொழிச் சொற்களை விலக்கியவர். சங்க இலக்கியங்கள் எல்லாம் படிக்கச் சொல்லியவர்; குறிப்பாகத் தொல்காப்பியத்தை அறியாமல் இருப்பது தமிழருக்கு மானக்கேடு என்றவர். உலகில், முதன்முதலில் மொழியின் எழுத்துகளை உயிர்,மெய் எனப் பகுத்தது தமிழரே என விளக்கியவர்.

தமிழர் யாரும் இந்துக்கள் இல்லை என விளக்கியவர். உயர்தனிச் செம்மொழி எனத் தமிழின் பெருமைகளை, அருமைகளைத் தமிழர் அறியச் செய்தவர். இன்று மக்களை முட்டாளாக்கும் "இந்தி பொது மொழி" என்ற பொய்யுரையை அன்றே உடைத்தவர். தமிழிசையை மீட்டெடுக்க விரும்புவர். ஆலயங்களில் தமிழை வழிப்பாட்டு மொழியாக்க விரும்பியவர்.

1902'இல் தமிழ் வடமொழியில் இருந்து பிறந்ததா என்ற கட்டுரையில்  சமசுகிருதம் தமிழுக்கு தாய் என்ற பொய்யுரையை உடைத்தவர். ஆரியர் வேறு, தமிழர் வேறென்று 1904'இல் பேசி, தமிழரே இந்நாட்டின் பூர்வகுடி மக்களென்றும் மக்களுக்கு விளக்கியவர். ஆரிய எதிர்ப்பு என, தமிழரிடத்தில் ஆரிய வெறுப்பை விதைக்காமல், வெறுப்பில்லாமல் சமசுகிருதத்தை நன்கு கற்ற பிறகு  ஆரியத்தை எதிர்த்தவர். 1913'இல் சாதி வேற்றுமையை எதிர்த்துப் பேசியவர்.  மக்கள் யாவரும் கல்வி கற்க வேண்டும் என வலியுறுத்தியவர்.

‘ஆங்கிலமும், சமசுகிருதமும் கட்டாயம் படிக்க வேண்டும். தாய்மொழிப் பாடத்தை விருப்பப்பாடமாக கற்றால் போதும்’ என்று சென்னைப் பல்கலைக்கழகம் தீர்மானம் போட்டபோது, 11 ஆண்டுக் காலம் பணியில் இருந்த மறைமலை அடிகளார், அதை எதிர்த்துத் தன்னுடைய பணியில் இருந்து விலகினார். ஆங்கிலம்,  சமசுகிருதம் போன்ற மொழிகள் தமிழில் பரவிக் கிடந்ததை உணர்ந்து வருந்தியவர், அதிலிருந்து தமிழை மீட்க முடிவெடுத்தார். வெறும் பேச்சால் மட்டுமே கொள்கைகளைப் பரப்பிவிட முடியாது என்ற தெளிவும் அவரிடம் இருந்ததால்தான் அதற்கு ஒரு முன்னுதாரணமாகச் செயல்படவும் தொடங்கினார். 1916-ல் தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கினார்.

தமிழ்க்கடல்,தனித்தமிழ்த் தந்தை  என்றழைக்கப்பட்டவர். ‘‘அடிகளே தென்னாடு... தென்னாடே அடிகள்’’ என்று தமிழ்த்தென்றல் திரு.வி.க-வால் புகழப்பட்டவர்.

இன்றும், தமிழின் தூய்மை கெடாமல் இருக்க, மறைமலை அடிகளாரின் முயற்சிகள் தான் முக்கிய காரணம்.  மெய்யாகத் தமிழை வளர்க்க அரும்பாடு பட்ட மறைமலை அடிகளார் தனது 75'ஆவது அகவையில் 15-09-1950'இல் மறைந்தார்.

தமிழகத்தில் தமிழில் பேசினால் இழிவு, தமிழ் ஏன் கற்க வேண்டும்,தமிழ் கற்றால் பயனில்லை,தமிழில் பிறமொழிச் சொற்கள் கலந்து பேசுவது என்றெல்லாம் பலர் மயக்கத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம் மறைமலை அடிகளின் வரலாறு அறியாமல் இருப்பதே. அவரது நினைவு நாளில் அவராற்றிய அரும்பணிகளை நம்மால் முடிந்தவரை மயக்கத்தில் இருப்போருக்கு எடுத்துரைப்போம்.




______________________________________________________
 
Maayon TS
ts.maayon@gmail.com
______________________________________________________

No comments:

Post a Comment