Friday, June 10, 2016

கல்மரப் பூங்கா காவலாளியுடன் ...

 --கோ.செங்குட்டுவன்.
இரண்டாண்டு இடைவெளியில் திருவக்கரை கல்மரப் பூங்காவிற்கு இன்று மீண்டும் பயணம்.


தந்திடி.வி. செய்தியாளர் திரு.கோபிநாத்- உடன். சிறப்புச் செய்திக்காகச் சென்றிருந்தேன்.


கடந்தமுறை சென்றபோது அங்கு பரந்து விரிந்து விழுதுகளுடன் காட்சியளித்த 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த அந்த ஆலமரம் என்னை மிகவும் கவர்ந்தது. இப்போது தான் கவனித்தேன், அருகிலேயே ஐயனார் கோயில் கொண்டிருப்பதை!
திருவக்கரை காவல் தெய்வமாக எல்லையில் அவர் வீற்றிருக்கிறார். இந்த ஆலமரம் கூட அவருக்குத்தான் சொந்தம்.
கிராம மக்கள் பலரும் வந்து வழிப்பட்டுச் செல்கின்றனர்.
கல்மரப் பூங்கா வளாகத்தில் இப்படி ஒரு காட்சி.
மகிழ்ச்சி..!




தந்தி டி.வி. செய்தியாளர் கல் மரங்களைப் படம் பிடித்துக் கொண்டிருந்தார். நான் அங்கிருந்தக் காவலாளியிடம் பேச்சுக் கொடுத்தேன்.
பெயர் டி.ராமச்சந்திரன். மத்திய அரசின் புவியியல் துறையால் நியமிக்கப்பட்டவர். விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தயம் பகுதியைச் சேர்ந்தவர்.
29 ஆண்டுகள் இந்தக் கல்மரப் பூங்காவில் பணியாற்றிவிட்டார். இம்மாதத்தோடு ஓய்வு பெறுகிறாராம்.
இந்த இடத்தை சொந்த வீடுபோல் பாவித்து வந்தவர். ஏதாவது சுத்தம் செய்ய வேண்டும் என்று அவசர வேலை வந்துவிட்டால் மனைவி, மகன் ஆகியோரையும் அழைத்து வந்துவிடுவாராம்.
முன்னாள் பிரதமர் சந்திரசேகர்-பிரதமவராவதற்கு முன்பு மூன்று முறை இந்தக் கல்மரப் பூங்காவுக்கு வந்துசென்றிருக்கிறார்.
திருவக்கரைக்கு வருகைதந்த நீதியரசர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கல் மரங்களுடன், ராமச்சந்திரனையும் சந்தித்துவிட்டுச் சென்றிருக்கின்றனர்.
“மறக்க முடியாத நிகழ்வு ஏதாவது இருக்கா? ராமச்சந்திரனிடம் கேட்டேன்.
“உம் அப்படியொன்னும் இல்ல என்றவர், நீண்ட யோசனைக்குப் பின்னர், “ஒருமுறை காதலர்கள் கூட்டம் ஒன்று இங்கு வந்து லூட்டி அடித்தனர். அவர்களை வெளியே போகச்சொன்னேன். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், வேப்பங்குச்சியால் பயங்கரமாக அடித்துவிட்டு ஓடிவிட்டனர் என்றனர்.
கல்மரப் பூங்காவிலும் காதலர்க்கு எல்லையுண்டு என்பதை அந்தக் கும்பல் மறந்து விட்டது போலும்.  
அடிபட்டதன் காயத்தையும் வலியையும் அவர் மறந்தாலும், அந்த வடு அவருக்குள் மாறா சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
எப்போதும் காலை 10மணிக்கெல்லாம் பணிக்கு வந்துவிடும் ராமச்சந்திரன், நேற்று காலை சிலநிமிடங்கள் தாமதமாகத்தான், ஓட்டமும் நடையுமாக வந்தார். இதற்குக் காரணத்தையும் அவரே சொன்னார்,
“இன்னிக்கு எனக்கு 60ஆவது பிறந்த நாள்.
அட. எவ்வளவு பெரிய விசயம். அவரிடம் வாழ்த்துப் பெற்றேன்.
ராமச்சந்திரன் ஒருவயது குழந்தையாக இருந்தபோது திருவக்கரை கல்மரப் பூங்கா தொடங்கப்பட்டது. இன்று அவரது 60ஆவது வயதையும் இந்தப் பூங்காவில் அடைந் திருக்கிறார்.
கல்மரங்கள் அவருடனும்,
கல்மரங்களுடன் அவரும்
இத்தனை ஆண்டு காலம் நிறையவே பேசியிருப்பார்கள்.
இனி நேரம் கிடைக்கும் போது கல்மரங்களுடன் ராமச்சந்திரன் நிச்சயம் பேசுவார்..! 



_____________________________________________________

கோ.செங்குட்டுவன்
ko.senguttuvan@gmail.com
_____________________________________________________

துரும்பு

-- ருத்ரா இ.பரமசிவன்



வாழ்க்கை என்றால் என்ன‌
என்று கேட்டால்
கடவுளைக்காட்டுகிறீர்கள்.
கடவுளைக்காட்டுங்கள்
என்றால்
வாழ்ந்து பார் என்கிறீர்கள்.
முட்டி மோதி
கடைசி மைல்கல்லில்
ரத்தம் வழிந்த போது
சத்தம் வந்தது
உள்ளேயிருந்து.
இதயத்துடிப்பின் ஒலியில்
கேட்டது தானே
முதல் மொழி.
அதன் சொல் ஜனனம் என்றால்
அதன் அர்த்தம் மரணம் என்றார்கள்.
மனிதனா?இறைவனா?
அது
"மெய் பொய்"த்துகளின்
குவாண்டம் மீனிங்.
அன்னிஹிலேஷனும்
அது தான்.
கிரியேஷனும்
அது தான்.
அழித்து அழித்து ஆக்குவதே
அணு உலைக்கூடம்.
ஃபீல்டு எனும்
வெறுமைப்புலத்தில்
எது
முதலில்
நுழைந்தது?
ஆற்றலா?
நிறையா?
"ஹிக்ஸ்போஸன்"
புதிர் அவிழ்த்தது!
கடவுள் எனும்
கற்பனையை முதலில்
படைத்தான்.
அக்கற்பனையைப்படைத்த‌
மனிதனை
அப்புறம் படைத்தான்
என்பதில்
லாஜிக் இல்லையே!
லாஜிக் இல்லாத கடவுளுக்கு
லாஜிக் தருவதே 
மனிதன் தான்.
பிரம்ம சூத்ரமும் பாஷ்யங்களும்
உடைந்து போகிற‌
சோப்புக்குமிழிகளைத்தான்
ஊதித்தள்ளியிருக்கிறது.
எத்தனை வயதுகள் வேண்டும்
உனக்கு?
இந்த பிரபஞ்சத்தின்
வயதையும் சேர்த்தே
எடுத்துக்கொள்.
அது யார்?
அது எது?
இந்த கேள்வி
அந்த வயதுகளையும் விட நீளம்.
ப்ளாங்க் கான்ஸ்டன்ட்
என்று 
இரண்டு சொல்லில் தான்
அந்த சாவியும் பூட்டும்.
அது என்ன?
பல்கலைக்கழகங்களின்
அடுக்குப்பாறைகளின் அடியில்
அந்த கீற்று
கிசு கிசுக்கிறது.
புரிந்தால்
புரிந்துகொள்.
இல்லையென்றால்
குடமுழக்கு நீராட்டில்
நனைந்து கொண்டே இரு.
அஞ்ஞானங்களின் பிரளயத்தில்
அமிழ்ந்து போ.
விஞ்ஞானத்துரும்பு
விடியல் காட்டும் வரை...
மூளையின் 
அந்த‌இருட்டுமூலைக்குள்
ஒரு நூல் படிக்க கிடைக்கும்வரை
நூலாம்படையாய்
படர்ந்திரு.
 
 


______________________________________________________
 

கவிஞர் ருத்ரா இ.பரமசிவன்
ruthraasivan@gmail.com
______________________________________________________
  

Sunday, June 5, 2016

சென்னையின் நீர்வழித்தடங்கள் - இந்திய ராணுவமும் கடலூரும்

-- கே.ஆர்.ஏ. நரசய்யா



காலனி ஆட்சியில் சென்னையின் நீர்வழித்தடங்கள் பெற்ற முக்கியத்துவத்தை  முன்னர் கண்டோம். தொடர்ந்து, மற்ற வகைகளிலும் இத்தடங்கள் சென்னையின் வரலாற்று நிகழ்வுகளில் நெருங்கிய தொடர்புள்ளவை. அவற்றுள் முன்னதாகக் கருதப்படுவது, அடையாறு போர். 18ம் நூற்றாண்டின் மத்திய காலத்தில், அடையாற்றின் வடகரையில் நடந்த இந்தப் போர், இன்றைய பரிமாணத்தின் படி ஒரு யுத்தமாகவே கணக்கில் வராது எனினும், சில நிகழ்வுகளால் முக்கியத்துவம் பெற்றது மட்டுமின்றி, போர் யுக்திகள் கற்பிக்கப்படுகையில், இன்றும் ராணுவக் கல்லூரிகளில் ஒரு முன்னுதாரணமாக இப்போர் எடுத்துக் காட்டப்படுகிறது. இதைப் பற்றிச் சரியாகப் புரிந்துகொள்ள சென்னையின் 18ம் நூற்றாண்டின் வரலாற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாகப்பட்டினம் போர்கிழக்கிந்தியக் கம்பெனியைப் போன்று பிரெஞ்சுக் கம்பெனியொன்றும், 1720ல் நிறுவப்பட்டது. இந்தியக் கடலோரப் பகுதிகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட அது எடுத்துக்கொண்ட முயற்சிகளில் ஒன்று, கோரமண்டலக் கரையில் ஒரு துறைமுகத்தைத் தனதாக்கியது. அப்படித்தான் பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரியை வந்தடைந்தனர். ஐரோப்பாவில் ஆங்கிலேயர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் குழப்பம்  ஏற்பட்டால், அது காலனி நாடுகளிலும் எதிரொலிக்கும். ஆஸ்திரிய நாட்டின் தலைமுறை விவகாரத்தில் இருவரும் தலையிட்ட போது, அதன் எதிரொலியாக, தென்னிந்தியாவில் இருவரும் தாக்கிக் கொண்டனர்.

அப்போது டூப்ளே புதுச்சேரியில் பிரெஞ்சுக் கவர்னராக இருந்தார். ஆங்கிலேயரின் கப்பற்படை, பிரெஞ்சுக் கப்பல்களை, 1745ல் கோரமண்டல் கரையருகில் தாக்கியது. அதை முறியடிக்கத் திட்டமிட்ட டூப்ளே, 1746, ஜூலையில், லா போர்ட்னாயிஸ் என்ற கடற்படைத் தளபதியின் தலைமையில் ஒரு கடல் தாக்குதலை நாகப்பட்டினம் அருகில் நடத்தினார். அதில் சரியான முடிவு கிடைக்கவில்லை. ஆங்கிலேயர்கள், அட்மிரல் எட்வர்ட் பேடன் என்பவர் தலைமையில் கடற்போர் செய்தனர்.ஜார்ஜ் கோட்டை முற்றுகை தமது குறைகளை அறிந்து கொண்ட பிரெஞ்சுக் கப்பல்படைத் தளபதி, லா போர்ட்னாயிஸ் தமது கப்பல்களை, புதுச்சேரித் துறைமுகத்திற்குக் கொண்டு சென்று புதுப்பித்து, அவற்றில் புதிய பீரங்கிகளையும் ஏற்றிக்கொண்டு சென்னையை நோக்கித் தனதுப் பயணத்தைத் தொடங்கினார். விவரம் அறிந்த அட்மிரல் பேடன், அந்த படையை சமாளிக்க முடியாதெனத் தெரிந்து கொண்டு, தமது கப்பல்களுடன் வங்கத்திற்கு சென்று விட்டார்.

கடந்த, 1746, செப்., 4ம் தேதி, லா போர்ட்னாயிஸ், அடையாறு கடலில் சங்கமிக்கும் இடத்திற்குக் கிழக்கே, அதாவது சாந்தோமில் தமது கப்பல்களை நிறுத்தினார். ஆங்கிலப் படை அங்கில்லை என தெரிந்து கொண்டு, கோட்டையை முற்றுகையிட திட்டமிட்டார். அன்றைய தேதியில் அவர் தரையிறங்கி, 800 காலாட்படைகளுடன் தாக்குதலைத் தொடர்ந்தார். 5ம் தேதி அன்று, சிந்தாதிரிப்பேட்டையை அடைந்தார். பின் கோட்டையை முற்றுகையிட்டார். ஆங்கிலேயர்களால் வெளியில் வர
இயலவில்லை. அவர்களுக்கு குடிநீர் கூட வெளியில் இருந்து கிடைக்காத நிலையில், அவர்கள் சரணடைந்தனர். மதராஸ், பிரெஞ்சுக்காரர்கள் கீழ் வந்தது. அன்றைய ஆங்கில கவர்னர் மோர்ஸ் என்பவர், சரணாகதிக்கு அடையாளமாக தமது உடைவாளை லா போர்ட்னாயிசுக்கு அளித்தார். இந்த விவரங்கள் எல்லாம், 'ஆனந்தரங்கம் பிள்ளையின் தினப்படி சேதிக்குறிப்பு சொஸ்தலிகிதம்' என்ற தலைப்பில் அவரது நாட்குறிப்புகளின் மூன்றாம் புத்தகத்திலுள்ளன.

டூப்ளேக்கு எப்படியாவது மதராசைத் தனது ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்துவிட வேண்டுமென்ற ஆசை இருந்தது. கோட்டையிலிருந்த எல்லா ஆங்கிலேயர்களையும், 'பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிராகப் போரிட மாட்டோம்' என்ற எழுத்து வடிவ உறுதிமொழி அளிக்க வேண்டும் என, டூப்ளே உத்தரவிட்டார்.சிலர் அதற்கு இணங்கவில்லை. அவர்களுள் முக்கியமானவர் ராபர்ட் கிளைவ். அவர் மூன்று ஆங்கிலேயர்களுடன் இந்தியர்கள் போல வேடமணிந்து கோட்டையிலிருந்து தப்பிக் கடலூரில், அப்போதிருந்த செயின்ட் டேவிட் கோட்டைக்கு ஓடி விட்டனர்.மதராசைப் பிடித்த உடன், ஊரையும் கோட்டையையும் கர்நாடக நவாப் அன்வருதீன் முகம்மது கானுக்கு அளித்து விடுவதாக தான் அளித்த உறுதிமொழியை, டூப்ளே காற்றில் பறக்கவிட்டார். அதன் விளைவாக நடந்தது தான், அடையாறு போர். இது, முதல் கர்நாடகப் போரின் ஒரு பகுதி என்றும் அறியப்படுகிறது.

அடையாறு போர்ஆற்காடு நவாப், 1746, அக்., 15ம் தேதி அன்று, ஆங்கிலேயரின் உதவியுடன் பிரெஞ்சுப் படையைத் தாக்க முற்பட்டார். ஆற்காடு நவாப் மகன் மாபூஸ்கான், 10,000 காலாட்படையினருடன், தெற்கு நோக்கி வந்து சாந்தோமைக் கைப்பற்றிய பின்னர் அடையாற்றின் வடகரையில், பிரெஞ்சுப் படையைத் தாக்க, தயாராக இருந்தார். பிரெஞ்சுப் படையினர், அடையாற்றின் தென்கரையில் முகாமிட்டிருந்தனர். அவர்கள் மொத்தமே 200 பேர் தான். சுவிட்சர்லாந்துக்காரரான கேடன் பாரடிஸ் தான் அவர்களுக்கு தளபதி.

அக்., 22ம் தேதி அந்த படை ஒரு யுக்தியைக் கையாண்டது. மாபூஸ்கானுக்கு பீரங்கிகளைப் பற்றி அதிகம் தெரியாது. ஆகையால் வடகரையிலிருந்து அப்படை சுட்டதெல்லாம் வீணாகவே போயிற்று. ஆனால் பாரடிஸ் படைவீரர்கள் நன்கு போர்ப் பயிற்சி பெற்றவர்கள். ஒரே நாளில் முடிந்ததுஇப்போது கிரீன்வேஸ் தெருவில் இருக்கும் க்வீபிள் தீவு (இப்போது இது கிறிஸ்தவர்களின் கல்லறை பகுதியாக உள்ளது. 200 ஆண்டுகளுக்கும் மேலாக இங்குதான் கிறிஸ்தவர்களின் சவ அடக்கம் நடந்து வருகிறது. இங்கு நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் கல்லறையும் உள்ளது) பாரடிசுக்கு ஒரு சிறந்த மறைவிடமாக தெரிந்தது.

தமது படையினரை அங்கே இருக்கச் சொல்லி, அவர் நவாப் படை மீது சுட்ட போது அந்த படை சிதறியது. பின் மிக சாமர்த்தியமாக சுற்றி வளைத்து, நவாபின் படையைச் சரணடையச் செய்தார் பாரடிஸ். போர் தொடங்கியது அதிகாலையில். அன்று மாலைக்குள் போர் முடிந்தே விட்டது. படைபலம் என்பது எண்ணிக்கையில் இல்லை; யுக்திகளிலும் சிறந்த பயிற்சியிலும் தான் என்பதைக் காட்ட இன்றும் ராணுவப் பயிற்சிப் பள்ளிகளில் இக்கதை கூறப்படுகிறது.இந்த போரை அடுத்து, ஆங்கிலேயர்
தமக்கு மதராஸ் திருப்பித் தரப்பட்டவுடன், முதற்காரியமாக இந்திய ராணுவத்திற்கு அடித்தளம் அமைத்தனர். அப்படித்தான் இந்திய ராணுவத்தின் முதல்படியாக மதராஸ் ரெஜிமெண்ட் கடலூரில் ஆரம்பிக்கப்பட்டது.

நன்றி: தினமலர் 


___________________________________________________________
  

Mr. K R A Narasiah
narasiah267@gmail.com 
___________________________________________________________
 

Thursday, June 2, 2016

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல்கலைக்கழக தமிழ்க் கல்வியின் நிலை

-- தேமொழி


யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த  'ஆதிரை'  என்ற இதழில் (Vol. 1, 3 - ஆவது இதழ்) வெளியான தமிழ்க் கல்வியின் நிலையைப் பற்றிய  செய்தியைத் தொடர்ந்து  தமிழறிஞர்கள் செய்த கருத்துப் பரிமாற்றங்கள், சர்ச்சைகள் விளைவாக  அன்றையத் தமிழகத்தின் தமிழ்க் கல்வியின் நிலை தெரிய வருகிறது.

பண்டிதமணி 
மகிபாலன்பட்டி பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார்  அவர்கள் "தென்னிந்தியாவில் உள்ள பார்ப்பனர்கள் சென்னை, அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களில்  செல்வாக்குள்ள நிலையில் இருப்பதாலும்,  அவர்கள் வடமொழிப் பற்று அதிகம் கொண்டிருப்பதாலும் தமிழைத் தலையெடுக்கவிடாது செய்கின்றனர்" என்று கூறிய கருத்தும்;   அதற்கு உ.வே. சா. மற்றும் எஸ். சத்தியமூர்த்தி ஆகியோரின் மறுமொழிகளும்;   உ. வே. சா தனது கருத்திற்கு சான்று கொடுத்ததாக  பண்டிதமணியார் அவர்கள் கொடுத்த  மறுமொழி ஆகியவற்றால் அன்றைய தமிழகத்தில்  தமிழ்க் கல்வியின் நிலை பற்றிய ஒரு   வரலாற்றுப் பார்வை நமக்குக் கிடைக்கிறது. 
உ. வே. சா.


யாழ்ப்பாணத்தின்  ஆரிய திராவிட பாடாபிவிருத்தி சங்கத்தின் பதினோராவது  ஆண்டுவிழாவிற்குத் தலைமையேற்று பண்டிதமணி உரை நிகழ்த்தியுள்ளார்.  ஆதிரை இதழின் ஆசிரியர் என். நாராயணய்யர் என்பவரால்  இந்த உரையின் முழுச்செய்தியும் கொடுக்கப்படாது, உரையின் சிற்சிலப் பகுதிகளை மட்டும் தேர்வு செய்யப்பட்டு, உண்மைக்குப் புறம்பாகத் திரிக்கப்பட்டு, அச்செய்தி தமிழகத்தின் தமிழ் அறிஞர்களுக்கு அனுப்பப்பட்டு, அவர்கள் மறுமொழி பெறப்பட்டு அவையும்  ஆதிரை பத்திரிக்கையால்  வெளியிட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து, இச்செய்திக்கு எதிராக, இந்த உண்மை அல்லாத  திரிப்பு வேலையை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் மற்றொரு பத்திரிக்கையான "ஈழகேசரி சீமுக" என்ற பத்திரிக்கை சுட்டிக் காட்டுவதுடன்,   நிகழ்ச்சி நடத்திய யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாடாபிவிருத்தி சங்கத்தின் கண்டனத்தையும் தனது இதழில் (ஜூன் 1933) வெளியிட்டுள்ளது.

இந்த நிகழ்வினையொட்டி தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் 'தமிழ்ப்பொழில்' இதழும் விரிவான  தனது கண்டனத்தை "ஆதிரை" இதழின் மீது பதிவு செய்துள்ளதுடன், இந்நிகழ்விற்காக  பண்டிதமணி அவர்களுக்கு  வருத்தமும் தெரிவித்துள்ளது. இக்கண்டனச் செய்தியில் காணப்படும் செய்திகளின்  வழி தெரிய வருவது...
சென்னைப் பல்கலைக்கழகத்தில்  முன்னர் தமிழ்ப் பண்டிதர் தேர்வுக்குப் படிப்போருக்கு கட்டாய வடமொழிப் பாடம் தேவை என்ற விதியும், வடமொழி பயில்வோருக்கு தமிழ்ப் புலமை வேண்டுமென்பதை விதிக்காத ஒரு நேர்மையற்ற நிலையும் இருந்துள்ளது. 

வடமொழி பயில்வோருக்கு சாகித்தியம், வியாகரணம், நியாயம், மீமாம்சம், வேதாந்தம் ஆகியவற்றில் 'சிரோமணி', 'வித்துவான்'  ஆகிய படிப்புகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டும்; ஆனால் தமிழில் இவற்றுக்கு இணையான நூல்கள் இருந்தும், தமிழறிஞர்கள்  வேண்டுகோள் விடுத்தும், தமிழுக்கு 'தமிழ் வித்துவான்' என்ற ஒரேயொரு பாட வாய்ப்பை மட்டும் சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகங்கள்  வழங்கியுள்ளன.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் வடமொழியில் B. A. Honours படிப்பு அனைத்துக் கல்லூரியிலும் இருந்திருக்கிறது.  சிக்கனம் காரணமாக சென்னை அரசர் கல்லூரியில் (பிரசிடென்சி கல்லூரி) அந்தப் பாடவகுப்பை நீக்கலாம் என்ற கருத்தை முன்வைத்த பொழுது பார்ப்பனர்களால் ஊர் தோறும் மறுப்புக் கூட்டங்கள் போடப்பட்டு கண்டனங்கள் வைக்கப்பட்டன. 

ஆனால், தமிழில் B. A. Honours படிப்பிற்கு ஏற்பாடு செய்ய வேண்டிய பொழுது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அப்பாடம் இருக்கும் பொழுது சென்னையில்  அதற்குத் தேவையில்லை  என்று S. சத்தியமூர்த்தியய்யர் மறுப்புக் கூறியதாகவும் தெரிகிறது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக B. A. Honours படிப்பிற்குத் தேவையான நூல்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. துணையாசிரியர்கள் (Reader) தேவை என்ற நியாயமான கோரிக்கையும் புறக்கணிக்கப்பட்டது.  மேலும், பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களின்  எண்ணிக்கை பலமடங்கு அதிகமிருந்தும் வடமொழியைவிடக் குறைந்த ஆசிரியர் எண்ணிக்கையும், குறைந்த அளவு நிதியும் ஒதுக்கப்பட்டிருந்திருக்கிறது. தமிழில் தேர்ச்சி பெறாதவர்களைத் தமிழ் கற்பிக்க நியமிக்கப்பட்ட நிலையும்  இருந்து  (வீட்டில் தமிழ் பேசுவதால் தமிழில் தேர்ச்சி என்பது அவசியமற்றது  என்ற காரணம் காண்பிக்கப்பட்டிருக்கிறது) அதற்கு எதிர்ப்பு தோன்றியதால் ஒரு ஆராய்ச்சிக் குழு அமைக்கப்பட்டு அந்த நிலைமை சீர் செய்யப்பட்டுள்ளது. 

சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆளுகை நிலையில் இருந்தோர்  தமிழறிந்தவர்கள் அல்ல. மறைமலையடிகள், உ.வே. சா. போன்ற தமிழறிஞர்களுக்கு  அக்குழுவில் இடமிருந்திருக்கவில்லை. சென்னைப் பல்கலைக்கழகத்தால் தமிழ் சிறப்புடன் போற்றப்படவில்லை, சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆளுகையில் இருந்தோரில் பெரும்பாலோர் தமிழ் ஆர்வலரும் அல்லர்.

எனவே, இக்கருத்தை பண்டிதமணியார் சுட்டிக் காட்டியதில் இழுக்கொன்றுமில்லை, மேலும் இது உ. வே.சா பண்டிதமணியாரிடம் பகிர்ந்து கொண்ட ஒரு கருத்தே என்பதால் அதில் தவறேதுமில்லை  எனவும்  தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப் பொழில் குழுவினர் கருதியுள்ளனர்.

மேலும், இது போன்று தமிழ் அறிஞர்களின் எதிரெதிர் கருத்துக்களை வெளியிட்டு,  அவர்களிடையே (பண்டிதமணி, உ. வே. சா. போன்றோரிடையே) தகராறு கிளப்பிவிட எண்ணும்  இலங்கை பத்திரிக்கையின் நோக்கமும்  கண்டிக்கப்பட்டுள்ளது. 

"சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்."
என்று ஆதிரை இதழின் ஆசிரியர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.


குறிப்பு:
இது தமிழ்ப் பொழில்  (1933-1934) துணர்: 9 - மலர்: 3 மலரில் காணப்படும் ஒரு தமிழ்ச் செய்தியின் சுருக்கம், தமிழ்க் கல்வியின் வரலாறு என்ற நோக்கில் கொடுக்கப்படுகிறது. 

______________________________________________________________________
தேமொழி
themozhi@yahoo.com
______________________________________________________________________

Wednesday, June 1, 2016

பெண் எனும் நுட்பம்

-- ருத்ரா இ.பரமசிவன்



பெண்ணே
உன் நெருப்பு பார்வைக்குள்
ஒரு குளிர்ந்த‌
காஷ்மீர்ச்சோலையையும்
பொதித்து வைக்கும்
நுட்பம் தெரிந்தவள் நீ.
ஈடன் தோட்டத்து
ஆப்பிளும் நீயே!
இலவங்காட்டு
பஞ்சடைத்த பழமும் நீயே.
அகரமுதல என்று
நீ ஆரம்பித்தாலும்
அதில்
இவர்கள்
காமத்துப்பாலை மட்டும்
எதிர்பார்த்து
பேசிக்கொண்டிருப்பார்கள்.
ஜெயகாந்தனிலிருந்து
ஸ்டீஃபன் கிங் வரை
நீ நாவல்கள் அளப்பாய்.
இவர்களும்
எமிலி சோலாவையும்
ஹெரால்டு ராபின்ஸையும்
தொட்டுக்காட்டுவார்கள்.
குறுந்தொகையிலிருந்து
"கல்பொரு சிறு நுரையை"
நீ ஓவியம் தீட்டுவாய்.
சிலபேர் மட்டும்
"முளிதயிர் பிசைந்த‌
மென்காந்தள் விரல்"
என்று
உன்னுடன் மல்லாடுவார்கள்.
சமூக அரசியல்
காட்டுக்குள் நீ சென்றால்
அந்த‌
நிர்பயாவைத்தொடாமல்
இருக்கமாட்டாய்.
இவர்களும்
அந்த ஆண்களுக்கு
தூக்குக் கயிறு சகிதம்
கோபக்கனல் காட்டுவார்கள்.
அப்போது
"என்னம்மா! பேசிகிட்டே இருக்கியே
எனக்கு பசிக்குது அம்மா"
என்று
எட்டு வயது குறும்பெண்
குட்டைப்பாவாடையில்
உன் எதிரே வந்து நிற்பாள்.
நீயோ
அப்போதும்
பெர்னார்ட் ஷாவின்
ஆர்ம்ஸ் அண்ட் தி மேன் ல்
வரும்
கேப்டன் ப்ளண்ட்ச்லி எனும்
சாக்கலேட் கிரீம் சோல்ஜரைப்பற்றி
நையாண்டித்தனம்
செய்து கொண்டிருப்பாய்.
அப்போது தான் தெரிந்தது
இவர்கள் கையில் எல்லாம்
லாலி பாப் என்று.



______________________________________________________
 

கவிஞர் ருத்ரா இ.பரமசிவன்
ruthraasivan@gmail.com
______________________________________________________