Showing posts with label பவள சங்கரி. Show all posts
Showing posts with label பவள சங்கரி. Show all posts

Friday, August 1, 2014

சிம்ம சொப்பனம்


பவள சங்கரி

தீரன் சின்னமலை

images (1)
நம் பாரத நாட்டில் கி.பி.17ஆம் நூற்றாண்டிலிருந்து அந்நியரின் தலையீடு துவங்கியது. தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்க வந்தவர்கள் நம் நாட்டின் இயற்கை வளங்கள் கண்ணை உறுத்த, அன்றிருந்த குறுநில மன்னர்களின் ஒற்றுமையின்மையால் ஏற்பட்ட  குழப்ப நிலையை சாதகமாக்கிக்கொண்டு ஆட்சியமைக்க எத்தனித்தனர். விடுதலை வேட்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட வீரமறவர்கள் பலர். இவர்களுள் முன்னோடியாகத் திகழ்ந்தவன் கொங்கு நாட்டு மாவீரன் தீரன் சின்னமலை. தன்னைப் போன்ற  சுதந்திர வேட்கை கொண்டோரை ஒன்று திரட்டி, மும்முறை படையை வழிநடத்தி எதிரிகளை நடுநடுங்கச் செய்தவன். எவரையும் வியக்கவைக்கும் வீர வரலாறு.  தம்பாக் கவுண்டர், தீர்த்தகிரி சின்னமலை என்ற பெயர்கள் கொண்ட இவர் பிறந்தது, 07.04.1756. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், கிழக்கிந்தியக் கம்பெனியாருக்குக் கோவை, ஈரோடு மாவட்டப் பகுதியில் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் தான் மாவீரன் தீரன் சின்னமலை (1756-1805). வட தமிழ்நாட்டின் சுதந்திர வேள்வியின் நாயகனாகத் தலைநிமிர்ந்து நின்று கிழக்கிந்தியக் கம்பெனியாரின் அட்டூழியமான வீரப்போரில் கலந்து கொண்ட மாவீரன் கொங்கு நாட்டு தீரன் சின்னமலை.
 18-ஆம் நூற்றாண்டு இறுதியில்  கொங்கு நாட்டில்,காவிரியின் மேற்கே உள்ள கொங்குப் பகுதியில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கத்தைத்  தடுத்து நிறுத்துவதற்காக கடும்போர் புரிந்து அதனால் வெள்ளையரால் தூக்குக்கயிற்றை முத்தமிட்டவன் மாவீரன் தீரன் சின்னமலை.
 images
போர்வீரர்கட்குப் பயிற்சி கொடுக்கவும், போர் ஆயுதங்கள் செய்யவும் சிவன்மலை காட்டுப் பகுதியில் போர்ப் பாசறை அமைத்தார். சிவன்மலையின் வடமேற்குப்புறம் அடிவாரத்தில் அடர்ந்த காட்டிற்குள் சின்னமலை அமைத்த அனுமந்தராயன் கோயிலின் வடபுறம் போர்ப்பாசறை அமைத்திருந்த இடம் இன்றும் அடையாளச் சின்னங்களுடன் காணமுடிகிறது.
 சின்னமலையின் இளம்பருவத்திலேயே, சிலம்பப் பயிற்சி, தடிவீச்சு, வாள்வீச்சு, புலிப்பாய்ச்சு, மற்போர் முதலிய கலைகளைக் கற்று, வீரத்திலும், கொடையிலும் சிறந்து விளங்கினான். கொங்குநாடு மைசூர் உடையார்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. மைசூர் மன்னருக்கு உட்பட்ட திண்டுக்கல்லில் குதிரைப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்த மாவீரன் ஐதர் அலி. தம் அறிவுக் கூர்மை மற்றும் ஆற்றலால், மைசூர் உடையார் மரபு அரசரிடம் ஆளும் உரிமையைப் பெற்றான். கொங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரி வசூல் செய்யப்படும் பணம் அனைத்தும் சங்ககிரிக் கோட்டைக்கு வந்து, அங்கிருந்து சீரங்கப்பட்டணம் ஐதர் கருவூலத்திற்குச் சென்று சேரும். சின்னமலை வேட்டைக்குச் சென்று திரும்பும் வழியில் ஐதர் அலியின் ஆட்கள் வரிப்பணம் வசூல் செய்து கொண்டு போவதைக் கண்டு வெகுண்டு, ’மைசூரார் நம்மை ஏன் ஆள வேண்டும்’ என்ற கேள்வியை எழுப்பி அந்தப் பணத்தைப் பெற்று வந்து ஏழை எளியோருக்குப் பிரித்துக்கொடுத்துவிடுகிறான். இப்படி பலமுறை நடந்தது. சங்ககிரி திவான் மீரா சாகிப் சின்னமலையை கைது செய்து கொண்டுவருவதற்காக 100 குதிரை வீரர்களை அனுப்பினான். ஊர் பொது மக்கள் மற்றும் சிலம்பக்கூட வீரர்கள் சண்டையிட்டு அவர்களை விரட்டியடித்தனர்.
தீரன்07.12.1782ல் ஐதர் அலியின் மரணத்திற்குப் பின் திப்பு சுல்தான் கர்நாடகத்தின் தலைமைப் பொறுப்பேற்று  கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிரான போரை  தீவிரப்படுத்தினார். கொங்குநாடு அப்போது  மைசூர் உடையார்களின் ஆட்சிக்குட்பட்ட திப்புவின் வசத்தில் இருந்தது. திப்புவின் படையில் சேர கொங்கு வீரர்கள் அழைக்கப்பட்டனர். சின்னமலையின் ஆற்றல் மற்றும் வீரம் மைசூர் முழுதும் பரவியிருந்தது. திவான் கிரிமிரே சாயபுவிடமிருந்து சின்னமலைக்கு உதவி வேண்டி ஓலை வந்தது அதனால் சின்னமலையின்  ஊக்குவிப்பினால் கொங்கு வீரர்கள் பலரும் சீரங்கப்பட்டணம் சென்று திப்புவின் படையில் சேர்ந்து பயிற்சி பெற்றனர்.  1799 இல் நடந்த நான்காம் மைசூர் போரின்போது,  சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் ஆகிய போர் முனைகளில் சின்னமலையின் கொங்குப்படை திப்புவிற்காகச் சிறப்பாக போரிட்டது. குறிப்பாக மழவல்லிப் போரில் 40000 வீரர்களுடன் போரிட்டு, ஆங்கிலேயருக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது இந்த கொங்குப்படை.
’கன்னட நாட்டின் போர்வாள்’ திப்பு, 04.05.1799ல் போர் முனையில் வீரமரணமடைந்ததால்,  அந்த பேரிழப்பினால் வேதனை கொண்ட சின்னமலையும் அவர் தம் கொங்குப்படையும் ஊர் திரும்பியது. திப்புவின் மைசூர் ஆங்கிலேயரின் உடமையானது.   அதற்குப் பின்னர் ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் வலிமையான கோட்டை ஒன்றைக் கட்டி அதில் சின்னமலை படை பலத்தைப் பெருக்கியபோது, திப்புவின் படைவீரர் சிலரும் வந்து ஓடாநிலையில் தங்கிவிட்டனர். திப்புவின் வீழ்ச்சிக்குப் பின்னர் கோவை மண்டலம் ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்ததாக சீரங்கப்பட்டணம் உடன்படிக்கை அறிவித்தது. அதன்படி  கொங்கு நாடு ஆங்கிலேய ஆட்சிக்கு உட்பட்டாலும், கோவைக்கும், சங்ககிரிக்கும் இடைப்பட்ட பகுதி அவர்கள்  வசப்படவில்லை. சின்னமலையின் கண்காணிப்பிலும் அவருடைய ஆதரவாளர்களின் ஆதிக்கத்திலுமே  இருந்தது. ஆனால்  ஆங்கிலேயர் அதைத் தன்வசமாக்க விரும்பினர்.
திப்பு சுல்தானின் வீரத்தளபதி மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக் ஆங்கிலேயரின்  எதிர்ப்பாளர்களுக்கிடையே பெரும் ஆற்றல்  மிக்கவராக விளங்கினார். காவிரிக்கு மேற்கில் சின்னமலையும் காவிரிக்குக் கிழக்கே ஓசூர் கானி ஜாகானையும் தலைவராக ஏற்றுக் கொள்ளுமாறு தூண்டாஜி வாக் பணித்ததை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.கோலாப்பூரில் தங்கியிருந்த தமிழக விடுதலைக்குழு ஆங்கிலேயே எதிர்ப்புக்காரர்களை ஒன்று சேர்ந்து எதிர்க்க உதவி பெற விரும்பியது. திப்புவின் எஞ்சிய படைத் தலைவர்கள் உதவியைக் கொங்குப் போராளிகள் பெற விரும்பினர்.  சிலர் ஆதரவளிக்க முற்பட்டனர்.  சிலர் தேவைப்படும் போது படையுடன் வருவதாகக் கூறினர். மருது சகோதரர்கட்கும், கொங்குத் தலைவர்கட்கும் தொடர்பை ஏற்படுத்த விருப்பாட்சிப் பாளையக்காரர் கோபால் நாயக்கர் விரும்பினார். இவர்கள் சேர்ந்து சின்னமலையின் தலைமையில் போராட முயற்சி செய்ததே ‘கோவைப்புரட்சி” என்று அழைக்கப்படுகிறது.
கோவைக் கோட்டை ஆங்கிலேயர் வசம் இருப்பது தங்களுக்கு ஆபத்து என்பதனை விடுதலைப் போராளிகள் உணர்ந்ததால்,  கோவைக் கோட்டையை மீட்டாக வேண்டும் என்று முடிவு செய்தனர்.  திண்டுக்கல் கூட்டமைப்பினர் அதற்கான  பணியைச் செய்வதெனவும், கோட்டைமீட்பு முயற்சிக்குத் தீரன் சின்னமலை தலைமை தாங்குவது எனவும் தீர்மானம் செய்யப்பட்டது. கோவைப் புரட்சி,  ஜூன் 3.1800 அன்று நடத்துவது என்று உறுதி செய்யப்பட்டது. கோவைக் கோட்டையில் ஆங்கிலேயர் படையில் முஸ்லீம் வீரர்கள் கனிசமான அளவு இருந்தனர். அதே நாளில் மொகரம்  நோன்பும் வந்ததால், முதிய முஸ்லீம் வீரர்கள் தொழுகைக்குச் சென்றுவிடுவர். இளைய முஸ்லீம் வீரர்கள் விருந்திற்கும், கேளிக்கைகளுக்கும் சென்றுவிடுவர். இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டால் எளிதாக கோட்டையை மீட்டு விடலாம்  என்று கருதினர்.  விடுதலை  வீரர்கள் பலர் சில நாட்களுக்கு முன்னரே கோவை  சென்று மக்களின் ஆதரவுடன், மக்களோடு மக்களாகக் கலந்தனர். மக்களிடமிருந்து எல்லாவகையான உதவிகளையும் பெற முடிந்தது.
ஆனால் சின்னமலை தலைமை தாங்கித் திட்டமிட்டு நடத்திய கோவைப்புரட்சி சிலரின் தவறான நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களால், நடைபெறாமலே தோல்வி அடைந்தது. இரண்டு மாத்திற்கு மேல் செய்த முயற்சிகள் வீணாயின. விடுதலை வீரர்கள் பின்வாங்கினர். பலர் தத்தம் பகுதிகட்குத் திரும்பிச் சென்றனர். ஒரு வேளை இப்புரட்சி வெற்றி பெற்று இருந்தால் அது ஆங்கிலேயேரை எதிர்த்து நடத்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின்  ஒரு  திருப்புமுனையாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. கோவைப்புரட்சிக்குப் பின்னரும் அந்த மாவீரன் சின்னமலை சோர்ந்துவிடவில்லை. தன்னுடைய ஓடாநிலைக் கோட்டையைப் பலப்படுத்தினான். இந்திய சுதந்திரப் போர் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மூன்று பெரும் போர்கள் நடைபெற்றுள்ளன. பலம் வாய்ந்த கிழக்கிந்தியப் படையை சின்னமலை சிறுபடை கொண்டும், தன்னந்தனியனாகவும் போரிட்டு வெற்றி பெற்றது வரலாறு. காவிரிப் போர் – 1801, ஓடாநிலைப் போர் – 1802, அறச்சலூர்ப் போர் – 1804, ஆகியன. இப்படி மூன்று முறை ஆங்கிலேயர் சின்னமலையிடம் படுதோல்வியுற்ற அவமானம் தாங்கமுடியாமல், அவனை எப்படியும் வீழ்த்தவேண்டும் என்று உறுதிபூண்டு, படைபலத்தை மேலும் அதிகரித்தனர். ஐதர், திப்புவை வெற்றி பெற்று, நிஜாமைப் பணியவைத்ததைக் காட்டிலும், ஆர்க்காடு, தஞ்சை அரசர்களை அடிமைகளாக்கியும், தீரன் சின்னமலை மட்டும் சவாலாகவே இருந்து வந்தான். தமிழ்நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கப் போகிறவனாகவேக் கருதப்பட்டான்.
1805ம் ஆண்டில் ஒரு நாள் சின்னமலையில் ரகசிய உளவாளியான, ஆங்கிலேயப் படையில் பணிபுரிந்த வேலப்பனிடமிருந்து வந்த இரகசியத் தகவல் மூலமாக, 2 பெரும் பீரங்கிகளுடன் ஓடாநிலை கோட்டையை தகர்க்க ஆங்கிலேயப் படை புறப்பட இருப்பதாகவும், அதை எதிர்ப்பது சாத்தியமற்றது என்று கிடைத்த தகவலால், ஓடாநிலையை விட்டு வெளியேறி, பழனிமலை தொடரில் உள்ள கருமலையில், சமையல் செய்ய நல்லப்பன் என்பவனை உடன் அழைத்துக்கொண்டு மறைந்து வாழ முடிவு செய்தார். குறிப்பிட்ட நாளில் கள்ளிக்கோட்டையிலிருந்து ஆங்கிலேயேரின் பீரங்கிகள் ஓடாநிலைக்கு மூன்று கிலோ மீட்டர் மேற்கேயுள்ள ஓலவலசு கிராமத்தில் வந்து காத்திருந்தபோது,  சின்னமலை தப்பிய செய்தி அறிந்து கோட்டைக்குள் தேடல் நடத்தியபோது, ஆங்கிலேயர்களின் கைகளில் வேலப்பன் எழுதிய கடிதம் கிடைத்தது. கோட்டை வாயிலில் வேலப்பன் சுடப்பட்டதோடு,  பீரங்கிகள் ஓடாநிலை கோட்டையை மண் மேடாகும் அளவிற்குத் தகர்த்தெரிந்தன.  செய்தி அறிந்த , கருமலையில் தங்கியிருந்த சின்னமலை துடி துடித்துப்போனார். வேலப்பனின் இழப்பு பெரும் வேதனையானாலும், அங்கேயே தங்கி , கள்ளிவலசு, விருப்பாட்சி, பழனியில் இருந்து பாளைய ஆட்கள் உதவியுடன் பீரங்கிகள் செய்ய ஆயத்தமானார்.
தனது கவலையை மறைக்க சின்னமலை விவசாயப் பணிகளிலும் ஈடுபட்டிருந்த சின்னமலையின் வீர வரலாற்றில் விதி விளையாடியது. ஆம், பணத்தாசையால் சமையல்காரன் நல்லப்பன் காட்டிக்கொடுத்துவிட்டான்.  கொங்கு நாடே கதறியழ, முன்னும், பின்னும் பீரங்கி வண்டிகள் புடைசூழ,  சின்னமலையும் அவரது சகோதரர்களும் கைது செய்யப்பட்டு சங்ககிரி கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தங்கள் படையுடன் சேர்ந்து கொண்டால் விடுதலை செய்வதாக,  ஆங்கிலேயே தளபதி மார்ஷல் கூறிய ஆசை வார்த்தையை துச்சமென மதித்து , காரித்துப்பி கடுமையாக மறுத்தான்.
ஆடிப் பதினெட்டுப் பண்டிகை நாளான ஜூலை மாதம் 31ம் நாள் 1805ம் ஆண்டு கொங்கு நாட்டு வரலாற்றின் மோசமான நாள் என்பது போல, சங்ககிரியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பத்து வாயில்களும் மூடப்பட்டு, தமிழ் வீரர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.  சங்ககிரி மலையின் உச்சியில், பொழுதுகாண்பாழிக்குக் கிழக்கில், ஆலமரத்தின் வடக்கே தயாராக இருந்த நான்கு தூக்கு மரங்கள், சின்னமலை, பெரியதம்பி, கிலேதார், கறுப்பசேர்வை ஆகிய நால்வருக்காகக் காத்திருந்தது. அங்கு மேடையேற்றப்பட்டனர். சின்னமலையின் கண் சைகையை உணர்ந்து விலகினர் தூக்கிலிடும் ஆட்கள்.  வீரமறவர்கள் நால்வரும் தங்கள் கழுத்தில் தாங்களே  தூக்குக் கயிற்றை மாட்டிக் கொண்டனர். கொங்கு நாட்டு சுதந்திரச் சுடர் அந்த வினாடி அழிந்தது.
 நன்றி : புதிய தலைமுறை, வல்லமை


பவள சங்கரி: coraled@gmail.com

கால காலேசுவரர் சன்னதி

பவள சங்கரி

1
நோயுற்று அடராமல் நொந்துமனம் வாடாமல்
பாயிற் கிடவாமல் பாவியன் காயத்தை
ஓற்நொடிக்குள் நீக்கியெனை என் போரூரா
நின் சீறடிக்கீழ் வைப்பாய் தெரிந்தே
_ மத் சிதம்பர சுவாமிகள்
2

பூமாதேவி செய்த தவம்



4
3
avRyBTlPmXDDsMri6FN1YlZC7b3aLOFuWSB8Ecs4uZE,af3F0NtqlJGUJMRoxBVR5Fi3re3dp0db8wrAoyrfJS4
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்து கட்டிடக்கலை அமைப்பில் கட்டப்பட்டுள்ளதுதான், கால காலேசுவரர் சன்னதி. இன்று மிகவும் சிதிலமடைந்த நிலையில் அற நிலையத்துறையின் பொறுப்பில் ரூ. 45 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் செப்பனிடப்படுகிறது. ஆளுயர நடராசர் திருவுருவம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிராமணர் அல்லாத, தேசிகர் வகுப்பைச் சேர்ந்த ஒரு 90 வயது மூதாட்டியே இக்கோவிலுக்குத் தன்னால் இயன்ற வகையில், அவ்வப்போது வரும் பக்தர்களின் சிறு காணிக்கைகள் மூலம் பூசைகள் செய்து வந்திருக்கிறார். மழையும் பொய்த்துப்போனதால் ஊரில் விவசாயமும் நலிந்து போய், மக்கள் தங்கள் பாடே திண்டாட்டம் என்கிற நிலையில், சுவாமியை கவனிக்க முடியாமல் விட்டிருக்கிறார்கள். நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடவூரிலிருந்து தரங்கம்பாடி செல்லும் சாலையில் உள்ள, அனந்தமங்கலம் ஆஞ்சேநேயர் சுவாமி கோவிலிலிருந்து ஒரு கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது கால காலேஸ்வரர் சன்னதி.
என்றும் பதினாறு என்று வரம் பெற்ற மார்கண்டேயனைக் காக்கும் பொருட்டு, சிவபெருமான் எமனை வதம் செய்து காலசம்கார மூர்த்தியாக விளங்கும் திருத்தலமே, திருக்கடவூர். அப்படி வதம் செய்தபோது எமனின் தலை தெரித்து விழுந்த இடம்தான் எருக்கட்டாஞ்சேரி என்கிறார்கள். ஐயனின் திருவருளால் அந்தத் தலை மீண்டும் உயிர் பெற்று எழுந்த இத்தலம் ‘எழுப்பி விட்டான் சேரி’ எனப் பெயர் பெற்று பின்னர் மருவி ‘எருக்கட்டாஞ்சேரி’ என ஆகியுள்ளது.
சிவபெருமானார் எமனை வதம் செய்ததால், மக்களுக்கு எமபயம் முற்றிலும் நீங்கிவிட்டது. அதனால் இறைபக்தி குறைந்ததோடு அதர்மங்கள் பெருகியுள்ளன. நாட்டில் அக்கிரமங்களும் அதிகரித்துள்ளன. பூமித்தாய் பாரம் தாங்காமல் மனம் நொந்து, சிவபெருமானை நோக்கி தவம் செய்து பெற்ற வரத்தின் மூலமாக மீண்டும் எமனுக்கு உயிர் பெற்றுத் தருகிறாள். சினம் தணிந்த சிவபெருமான் எமனுடைய தலையை இத்தலத்தில் பொருந்தச் செய்து உயிர் கொடுத்தார்.எமனுக்கே உயிர் கொடுத்த இத்தலத்தில் வழிபடுபவர்களுக்கு, மரணபயம் நீங்கி, நோய், நொடியில்லாமல் வாழ்வார்கள் என்பது ஐதீகம். திருக்கடவூர் சென்று வழிபடும் பக்தர்கள் எருக்கட்டாஞ்சேரி கால காலேசுவரரையும் அன்னை கருத்தடக்கன்னியையும் வழிபட்டு வருவது வழக்கம். இதனால் நோய் நொடியின்றி ஆரோக்கியத்துடன் தீர்க்காயுளுடனும் வாழலாம் என்ற நம்பிக்கையும் மக்களிடம் பரவலாக இருக்கிறது. விரைவில் இக்கோவிலின் திருப்பணி நிறைவேறி ஐயனின் அருளொலி பூரணமாக பிரகாசிக்க நம்மால் ஆனதையும் செய்யலாமே..


நன்றி: வல்லமை
பவள சங்கரி: coraled@gmail.com

புன்னைநல்லூர் முத்துமாரியம்மன்

-- பவள சங்கரி

புன்னைநல்லூர் முத்துமாரியம்மன்

DSC00268

மூலவர்   : முத்து மாரியம்மன், துர்க்கை
தல விருட்சம் : வேம்பு மரம்
தீர்த்தம் : வெல்லகுளம்
பழமை : 500 ஆண்டுகள்
புராணப் பெயர் : புன்னைவனம்
ஊர் : புன்னைநல்லூர்
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
தல சிறப்பு :  இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக, புற்று வடிவில் அருள் மழை பொழிகிறார்.
DSC00277
தல வரலாறு : நம் இந்தியத் திருநாட்டில் அமைந்திருக்கும் ஒவ்வொரு ஆலயத்திற்கும் அதன் அதிசயத்தின் அடிப்படையில் ஒரு வரலாறு இருக்கத்தான் செய்கிறது. சில நேரங்களில் இது புராணக்கதை என்ற குறுகிய வட்டத்தில் சென்றாலும், வரலாற்றில் நீங்காத இடம் பெற்றுள்ள மன்னர்களால் எழுப்பப்பட்ட ஆலயங்கள் என்ற ஆதாரங்கள் ஓரளவிற்கேனும் அதன் நிலைப்பாட்டை உறுதி செய்யக்கூடியதாகவே உள்ளது. அந்த வகையில் இத்தலமும் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது என்ற சிறப்பைப் பெறுகிறது.
DSC00287
தண்ணளி வீசும் பசும் வயல்வெளிகளுக்கிடையே புன்னைநல்லூர் மாரியம்மன் எழுந்தருளியிருக்கிறார். ஆலயத்தை அடைந்தவுடன் முதலில் தென்படுவது, மராத்திய மன்னர்களின் தனிப்பட்ட பாணியில் அமைந்த பரந்த மண்டபம். கோபுரம், மகா மண்டபம், நர்த்தன மண்டபம் மற்றும் இரண்டாம் பெரும் சுற்றுச்சுவர் போன்றவை சரபோஜி மன்னர் தஞ்சை மண்ணை ஆட்சி செய்த காலத்தில், கட்டப்பட்டு திருப்பணிகள் நிறைவேறியுள்ளன. இந்த ஆலயத்தின் மூன்றாவது சுற்றுச்சுவர் மராட்டிய மாமன்னர் சிவாஜியால் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ராணி காமாட்சியம்பா பாயி சாகேப் அவர்களால் உணவுக் கூடம் மற்றும் வெளிமண்டபமும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
DSC00297
இத்தலம் அமைந்த வரலாறு சுவையானது. வெறும் புற்று வடிவமாக அன்னை அருள்பாலித்துக் கொண்டிருந்த சமயம் அது. மகான் சதாசிவ பிரம்மேந்திர சுவாமிகளின் கனவில் அம்மன் தோன்றி தனக்கு ஆலயம் எழுப்ப வேண்டி கட்டளை பிறப்பிக்கிறாள். இவரே அம்மனுக்கு மாரியன்னை வடிவமும் கொடுத்து ஸ்ரீசக்கரமும் உருவாக்கம் செய்தார். பின் ராஜஸ்ரீ சிவாஜி மகாராஜாவின் மூலம் ஆலயம் அற்புதமாக எழும்பியது. தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின் முக்கியமான எண்பத்தி எட்டு திருக்கோவில்களில் புன்னை மாரியம்மன் கோவிலும் ஒன்று. கோவிலின் உட்பிரகாரத்தில் விநாயகர், முருகன், காத்தவராயன், மதுரைவீரன், லாடசன்னாசி, பேச்சியம்மன், அய்யனார் சன்னதிகள் அழகே உருவாக அமைக்கப்பட்டுள்ளன.

சதாசிவ பிரமேந்திரர்
சதாசிவ பிரமேந்திரர்
DSC00282
கீர்த்தி சோழன் என்னும் மன்னன் அம்மனின் அருளால் பெற்ற ஆண்மகவிற்கு தேவசோழன் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தார்கள். அவன் நன்முறையில் வளர்ந்து பல ஆண்டுகள் சோழ சாம்ராஜ்யத்தை ஆண்டு வந்தான். அப்போது தஞ்சையை ஆண்டுவந்த வெங்கோஜி மகாராஜா 1680 ம் ஆண்டில் திருத்தல யாத்திரை மேற்கொண்டிருந்தபோது கண்ணபுரம் என்னும் சமயபுரத்தில் தங்கி வழிபாடு செய்தார். அன்றிரவு அம்மன் அரசனின் கனவில் தோன்றி, தஞ்சைக்கு கிழக்கே 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள புன்னைக் காட்டில் புற்று உருவாய் எழுந்தருளியுள்ள தன்னை தரிசிக்க வருமாறு கட்டளையிடவும், அரசனும் தம் தலைநகராகிய தஞ்சைக்கு வந்து அங்கிருந்து புன்னைக் காட்டிற்குச் செல்ல வழியமைத்து, அம்மனின் இருப்பிடத்தைக் கண்டறிந்து அங்கு சிறிய கூரையும் வேய்ந்து, புன்னைநல்லூர் என்று பெயரிட்டதோடு அந்த கிராமத்தையே ஆலயத்திற்காக வழங்கினார். மேலும் 1728 -1735 ஆண்டுகளில் தஞ்சையை ஆண்ட துளஜா என்ற மன்னனின் புதல்வி வைசூரி நோயால் கண்கள் பாதிக்கப்பட்டு இருந்தாள். அச்சமயம் அம்மனின் கீர்த்தியை அறிந்து ஆழ்ந்து வழிபட்டதால் பூரண குணம் பெற்றாள். இதனால் அம்மனின் திருவருளை எண்ணி பெரிதும் வியந்த அம்மன்னன் அம்பிகைக்கு சிறிய கோயிலாக கட்டினார். காலப்போக்கில் அது பெரும் கோவிலாக மாறியுள்ளது என்று வரலாறு கூறுகிறது.
சண்டி
சண்டி
ஆறடி உயரமுள்ள அம்மனின் முகத்திலும், சிரசிலும் கோடைக்காலத்தில் முத்து முத்தாக வியர்வைத் துளிகள் தென்படுவதைக் காணலாம். இதன் காரணமாகவே ஆலயத்தின் அருகில் உள்ள, உள்தொட்டி என்று அழைக்கப்படும் தொட்டியிலும், வெளித்தொட்டி என்றும் அழைக்கப்படும் பிரகாரத்தைச் சுற்றி உள்ள தொட்டிகளிலும் , அம்மை நோய்கண்டவர்கள் குடம் குடமாக தண்ணீர் ஊற்றுகின்றனர். இவ்வாறு செய்வதால் அம்பாளின் உஷ்ணம் தணிக்கப்படுகிறது. மனம் குளிர்ந்த அம்மன் பக்தர்களின் வேண்டுதலுக்கு செவி சாய்க்கிறாள். அதனால் அம்மை நோய் முதல், தோல் வியாதி, கண் நோய் , வயிற்று வலி, உடம்பில் சொறி, சிரங்கு, கட்டிகள் ஏற்படுதல், போன்றவற்றால் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவரால் கூட கைவிடப்பட்டவர்கள் இந்த அம்மனிடம் மனமுருகி பிரார்த்தனை செய்து கொண்டால் கட்டாயம் குணமடைவதாக நம்பிக்கை வலுவாக இருக்கிறது. மேலும் வேலை வாய்ப்பு, பணியிடம் மாற்றம் , தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் அம்மன் அதனை நிறைவேற்றி கொடுக்கிறார் என்பதால் கோவிலில் எந்த நேரமும், குறிப்பாக சனி, ஞாயிறு நாட்களில் அதிகமாக பக்தர்கள் வந்து வழிபடுவதைக் காண முடிகிறது.
DSC00271
அம்மனுக்கு மாவிளக்குப் போடுதல் என்பதே இங்கு முக்கியமான பிரார்த்தனையாக உள்ளது. அம்மை நோய் கண்டு குணமடைந்தவர்கள் அம்மனுக்கு மாவிளக்கு போட்டு நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். உடம்பில் கட்டிகளால் பாதிக்கப்பட்டு குணமானவர்கள் வெல்லக்குளத்தில் வெல்லம் வாங்கிப் போட்டும், சொரி சிரங்கினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் உப்பு வாங்கிப் போட்டும் நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். கணவரின் நலனுக்காக நேர்ந்து கொண்ட பெண்கள் திருமாங்கல்யம் சாத்துதலையும் நேர்த்திகடனாக செய்கின்றனர். அம்மனுக்கு நிலைமாலை சாத்துவதால் தடைபட்ட திருமணங்கள் விரைவில் நடப்பதாகவும் நம்பிக்கை உள்ளது. பால்குடம் எடுத்தல், பால்காவடி, அக்னி சட்டி எடுத்தல் போன்றவையும் இத்தலத்தின் முக்கிய நேர்த்திகடன்கள் ஆகும்.
DSC00278
அம்மன் புற்று வடிவில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்து வருவதால் கருவறையில் உள்ள அம்மனுக்கு அபிடேகங்கள் செய்யப்படுவதில்லை. தைலக் காப்பு மட்டுமே சாற்றப்படுகிறது. விட்டிணு துர்க்கை அம்மன் மற்றும் உற்சவ மூர்த்திக்கும் அன்றாடம் அபிசேகம் நடைபெறுகிறது. 5 ஆண்டிற்கு ஒரு முறை, ஒரு மண்டலம் தைல காப்பு அபிசேகம் நடைபெறுகிறது. அந்த காலத்தில் ஒரு மண்டலத்திற்கு அம்மனை ஒரு வெண் திரையில் வரைந்து, அதில் ஆவாகனம் செய்து, அந்த அம்மனுக்கே அர்ச்சனை மற்றும் ஆராதனைகள் நடைபெறுகிறது. அப்போது கருவறையில் உள்ள அம்மனுக்கு 48 நாட்களிலும் அன்றாடம் இரு வேளைகளிலும் சாம்பிராணி தைலம், புணுகு, போன்ற வாசனை பொருட்களால் அபிசேகம் நடைபெறுகிறது.
DSC00273
தைலாபிடேகம் செய்யும் காலங்களில் அம்மன் அதிகமான உக்கிரத்துடன் இருப்பதால், அதைத் தவிர்க்கும் பொருட்டு அம்மனுக்கு தயிர் பள்ளயம், இளநீர் போன்றவைகள் வைத்து நைவேத்தியம் நடைபெறுகிறது. ஆகம விதிப்படி அம்மனுக்கு நான்கு காலங்களும் பூசைகள் நடைபெறுகின்றன. ஆடி மாதம் , முத்துப்பல்லக்கு ஆவணி மாதம் , கடைசி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம், புரட்டாசி மாதம் , தெப்ப உற்சவம் மற்றும் நவராத்திரி திருவிழா போன்றவைகள் வெகு சிறப்பாக நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது. மாசிமகத்தன்று 1008 பால் குடங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று உற்சவ மூர்த்திக்கு அபிசேகம் செய்கிறார்கள். ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமையன்று மிகச் சிறப்பான பூச்சொரிதல் நடத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திருக்கோவில் இருக்கும் ஊரின் பெயரே ‘மாரியம்மன் கோவில்’தான்.
இங்கு அனைத்து மதத்தினரும் வந்து வழிபடுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அன்றாடம் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் விடியற்காலை 3 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.
முகவரி: அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், புன்னைநல்லூர் – 613 501,  தஞ்சாவூர் மாவட்டம்.



நன்றி: வல்லமை
பவள சங்கரி: coraled@gmail.com