Showing posts with label செல்வன். Show all posts
Showing posts with label செல்வன். Show all posts

Sunday, January 28, 2018

அட்லாண்டிக் கடலைக் கடந்த தமிழ்க்கப்பல்


——   செல்வன் 


    அட்லாண்டிக் கடலைக் கடந்து இலங்கையில் இருந்து பாஸ்டன் வரை ஒரு தமிழ்க்கப்பல் சென்றுள்ளது. அட்லாண்டிக் கடலை கடந்த கடைசி பாய்மரக்கப்பல் இதுவே எனத் தெரிகிறது.

    1938ம் ஆண்டு வல்வட்டித்துறையில் செட்டியார்கள் பெரும் அளவில் பாய்மரக்கப்பல் வணிகம் செய்து வந்தனர். கொச்சின், ரங்கூன் முதல் அரபு நாடுகள் வரை அவர்களின் பாய்மரக்கப்பல்கள் சென்று வந்தன.

    1938ல் வளவை மாரியம்மன் தீர்த்தத்திருவிழாவில் கலந்துகொண்ட அன்னபூரணி எனும் கப்பலின் அழகில் மயங்கிய வில்லியம் ராபின்சன் எனும் அமெரிக்கர் அந்தக் கப்பலை விலைக்கு வாங்கினார். அதை பாஸ்டன் துறைமுகத்துக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பு ஐந்து தமிழ் மாலுமிகளுக்கு வழங்கப்பட்டது

    கனகரத்தினம் தம்பிப்பிள்ளை தலைமையில் கிளம்பிய அக்கப்பல் மாலுமிகள் யாருமே அமெரிக்காவை முன்னர் கண்டதில்லை. சூயஸ் கால்வாய் வழியாகச் சென்று ஐரோப்பா வழியே அமெரிக்கா செல்லவேண்டும். கொலம்பஸின் கடல்பயணத்தை மிஞ்சிய தூரம். கொலம்பஸிடம் மூன்று கப்பல்களும் நூற்றுக்கணக்கான மாலுமிகள் இருந்தனர். இவர்கள் ஐந்தே பேர்.

படத்தில்: அன்னபூரணி கப்பலில் தமிழ் மாலுமிகள்

    அத்தனை தடைகளையும் தாண்டி பாஸ்டன் துறைமுகத்துக்கு மூன்று மாதத்தில் கப்பலை கொண்டு சென்றுவிட்டனர். சட்டை அணியாமல் திருநீறு, குடுமியுடன் கூடிய ஐந்து பேர் பாஸ்டன் துறைமுகத்தில் பாய்மரக் கப்பலில் இறங்கிய காட்சியை காண பாஸ்டன் நகரமே கூடியது. பனிமூட்டம், காற்று வீசாத கடல் எனப் பல தடைகளைத் தாண்டி இந்தச் சாதனையை அவர்கள் செய்தார்கள்.

    அதன்பின் அந்த ஐந்து மாலுமிகளும் பாஸ்டனில் தங்கிவிட்டதாகத் தெரிகிறது. 



தகவல் உதவி: 

(1) வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டிய தமிழர்கள் - ராஜகோபால்
http://www.noolaham.org/wiki/index.php/வல்வெட்டித்துறையிலிருந்து_அமெரிக்கா_வரை_கப்பலோட்டிய_தமிழர்கள்

(2) அமெரிக்க கடற்படையில் வல்வெட்டித்துறை அன்னபூரணிஅம்மாள் கப்பல் ! - பொன்.சிவா(சிவகுமாரன்)
https://eelamaravar.wordpress.com/2017/03/12/annapoorani-ship/

(3) “Westward ho!”
http://www.sundaytimes.lk/090419/Plus/sundaytimesplus_01.html







________________________________________________________________________
தொடர்பு:  செல்வன் (holyape@gmail.com)










Saturday, October 22, 2016

கவுதம் சன்னாவுடன் ஓர் நேர்காணல் - 15


- செல்வன்

கவுதம் சன்னாவுடன் பேட்டி. பேட்டி எடுப்பவர் எடின்பர்க் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஹ்யூகோ கொரிங்கே ...

பேரா யூகோ: ஆனால் அந்த வேலை நடக்கவில்லையெனில் அவர்களால் அதன்பின் ஜெயிக்க முடியாது. அதுதான் பிரச்சனையே.

சன்னா: அது உண்மைதான். அதனால் தான் ஒரு குழுவே வேலைசெய்கிறது என நான் சொன்னேன். இதில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று என்னவெனில், கட்சியாக எங்களுக்கு ஒரு கூடுதல் தடையும் உள்ளது. அதாவது விடுதலைச் சிறுத்தைகளை பொறுத்தவரை நாங்கள் ஜெயித்த எம்பி அல்லது எம்.எல்.ஏ தொகுதியைத் தாண்டியும் மாநில அளவில் எங்கெல்லாம் தலித்துகள் பாதிக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் நாங்கள் பணியாற்றவேண்டிய நிலை உள்ளது.

பேரா யூகோ: உண்மை. ஆனால் இது நீங்கள் ஒரு கட்சியாக என்ன சாதித்துள்ளீர்கள் என்ற கேள்வியை எழுப்புகிறது. என்ன மாற்றங்களை உருவாக்கியுள்ளீர்கள்? ஒரு இயக்கமாகப் பல மாற்றங்களை உருவாக்கியுள்ளீர்கள். அடிக்கு அடி என்ற முழக்கம் மக்களின் மனதில் பதிந்து விழிப்புணர்வை உருவாக்கியுள்ளது. ஆனால் கட்சியாக மக்களிடம் என்ன மாற்றத்தை உருவாக்கியுள்ளீர்கள்?

சன்னா: நான் முன்பே சொன்னதுபோல், ஒரு கட்சியாக சமூகத்தில் எழும் பிரச்சனைகளில் மட்டுமே கவனத்தை செலுத்த முடியும். அப்பிரச்சனைகள் சமுதாயத்தை பிரதிபலிக்கின்றன. திருப்பி அடிக்க நாங்கள் சொல்கையில் முக்குலத்தோரும், வன்னியரும் மிகக் கடுமையான முறையில் தலித்துகளுக்கு எதிராக இருந்தார்கள்.தலித்துகள் திருப்பி அடிக்கத் துவங்கியதும் அந்த மனப்போக்கு மாறிவிட்டது. இப்போது அவர்கள் கலவரத்தை உருவாக்குவதில்லை, சேரிகளைக் கொளுத்துவதில்லை, தலித்துகளைத் தாக்க மக்களைத் தூண்டுவதில்லை. சிறுஅளவிலான வன்முறைகள் பல இடங்களில் நடந்தாலும், பெருமளவில் மோதல்களைத் தூண்டும் மனப்போக்கு மாறிவிட்டது. ஆக நாங்கள் எதற்காக 'திருப்பி அடி' எனும் தந்திரோபாயத்தை இன்னமும் கடைப்பிடிக்கவேண்டும்? தேவை ஏற்பட்டால் மட்டுமே கடைப்பிடிக்கவேண்டும் எனச் சொல்லலாம். இப்போது அவர்கள் அமைதியாக இருக்கையில்- அதாவது போருக்கு பின் அமைதி என்ற சூழல் உருவான நிலையில், அமைதியே ஒரே வழி. அவர்கள் அமைதியைக் கடைப்பிடிக்க முயலும் நேரத்தில் நாமும் அப்பாதையைக் கடைப்பிடிப்பதே சரி. ஆனாலும், எப்போது அடக்குமுறை மீண்டும் துவங்குகிறதோ அப்போது 'திருப்பி அடி' எனும் முழக்கம் மீண்டும் தேவைப்பட்டு பயன்படுத்தப்படும்- அது இப்போதும் நடைபெறுகிறது. நாங்கள் அதைக் கைவிடவில்லை

பேரா யூகோ: ஆனால் ஒரு கட்சியாக என்ன மாற்றங்களை நீங்கள் கொண்டுவந்துள்ளீர்கள்?

சன்னா: ஆம். அந்தக் கேள்விக்கு தான் வருகிறேன். நாங்கள் இயக்கமாக இருக்கையில் மக்கள் உணர்வின் அடிப்படையில் திரட்டப்பட்டு அரசியல் சக்தியாக மாறினார்கள். நான் முன்பே சொன்னதுபோல் இந்த அரசியல் உணர்வை ஒரு இயக்கமாக மாற்றிப் பயன்படுத்தும் அவசியம் இருக்கிறது. அரசியல் அதிகாரத்தை பெறவேண்டுமெனில் நாம் அரசியல் கட்சியாக மாறவேண்டும். இயக்கமாக அரசியல் சக்தியை அடையமுடியாது. இதுவரை எங்களுக்கு ஏராளமான சுதந்திரம் இருந்துள்ளது. யாரை எதிர்க்க நினைக்கிறோமோ அப்போது எதிர்க்கலாம், யாரைக் கண்டிக்க நினைக்கிறோமோ அப்போது கண்டிக்கலாம், யார் நம்மைக் கண்டிக்கிறார்களோ அவர்களை நம்பும் அவசியம் இல்லை. எங்கள் கொள்கை அடிப்படையில் அனைவரையும் கண்டித்தோம்.  கட்சியாக ஆனபின் தேர்தல் கமிஷன் விதிமுறைகளைப் பின்பற்றவேண்டிய அவசியம் உள்ளது. இது ஒரு ஒழுங்குமுறையை விதித்து, யாரைக் கண்டிக்கவேண்டும், எப்படிக் கண்டிக்கவேண்டும் என்பதற்கான ஒழுங்குமுறையை எங்களைப் பின்பற்ற வைக்கிறது. இந்த வரம்புகளுக்கும் செயல்பட்டு அரசியல் கலாச்சாரத்துடன் பரிச்சயமாகும் சூழலில் இருக்கிறோம். இதுவரை தலித்துகள் அதிலிருந்து விலக்கப்பட்டு இருந்தார்கள். ஆனால் அது கடந்த பத்தாண்டுகளில் உருவாகத் துவங்கியுள்ளது. தேர்தல்  பாதையில் நுழைந்தபின் இந்த அரசியல் கலாச்சாரத்தை நாங்கள் வளர்த்து வருகிறோம்

பேரா யூகோ: ஆனால் அடிமட்ட அளவில் இருக்கும் வாக்காளர்கள் அதை எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் எதிர்பார்ப்பது வேலைவாய்ப்பு, வீடுகள், இலவசங்கள் ஆகியவற்றையே. ஒரு கட்சியாக, குறிப்பாக ஆளும்கட்சி கூட்டணியில் இருக்கையில், மக்களுக்கு இந்த வாய்ப்புக்களை நீங்கள் வழங்கமுடியாதா?

சன்னா: நாங்கள் ஆளும்கட்சி கூட்டணியில் இருக்கையில் ஒரு குறுகிய எல்லைக்குள் மட்டுமே அதை எங்களால் செய்யமுடிந்தது. ஏனெனில் விடுதலைச் சிறுத்தைகளை பொறுத்தவரை நாங்கள் ஆளும்கட்சிக் கூட்டணியில் இருப்பது இதுவே முதல்முறை. அது புதிதாக இருந்ததால் ஆளும்கட்சியை எப்படிப் பயன்படுத்துவது என்பதை நாங்கள் அறிந்திருக்கவில்லை. அது தெரியாமல், நடக்கவேண்டிய வேலைகளுக்காகப் போராட்டம் நடத்தினோம். ஆனால் இதில் முழுமையாக வெற்றிகண்டதாக நாங்கள் நினைக்கவில்லை. ஏனெனில் திமுகவும், அதிமுகவும் 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்ததால் அரசை நடத்திப் பழகிவிட்டன. அவர்களிடமிருந்து வளங்களைப் பெற்று மக்களுக்கு வழங்குவது ஒரு மிகப்பெரிய முயற்சி. அதில் எங்களால் முழுமையாக வெற்றி காணமுடியவில்லை. இது வருங்காலத்திற்கான ஒரு குறிக்கோளாகும். இதை எப்படிச் செய்வது என்பதை நாங்கள் கண்டறியவேண்டும். நாங்களும் இன்னமும் கற்றுக்கொள்ளும் நிலையில் தானே இருக்கிறோம்? அந்த வழிமுறையைக் குறித்த புரிதலை உருவாக்கியுள்ளோம். ஆளும்கட்சியை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்பதை இப்போது அறிந்துள்ளோம்.

பேரா யூகோ: பல இடங்களில் மக்களுக்கு வேலைகளையும் உருவாக்கியுள்ளீர்கள்

சன்னா: ஆம். அது நடந்துள்ளது. பல இடங்களில் அது நடந்துள்ளது. ஆயிரக்கணக்கான வேலைகளை உருவாக்கியதாகக் கூற இயலாது, ஆனால் நூற்றுக்கணக்கான வேலைகளை உருவாக்கியுள்ளோம்.

பேரா யூகோ: துவக்கத்தில் இது ஒரு கொள்கையால் உந்தப்பட்ட இயக்கம் எனக் கூறினீர்கள். என்ன கொள்கைகள் எனில் பெண்ணுரிமை, நில உரிமை, பொருளாதார சமத்துவம், சாதி ஒழிப்பு ஆகியவை. இவற்றை அடைய என்ன முயற்சிகளை மேற்கொண்டுள்ளீர்கள்?

சன்னா:  எங்கள் ஐந்து முக்கிய கோரிக்கைகளா?

பேரா யூகோ: ஆமாம். இப்போது என்ன நடக்கிறது என்றால் எங்காவது வன்முறை வெடித்தால் நீங்கள் அங்கே விரைந்து அதைத் தீர்க்க பாடுபடுகிறீர்கள். இது ஒருபக்கம் நடக்கிறது. மறுபுறம் இந்தக் கொள்கைகள் உள்ளன. இவற்றை அடைய என்ன முயற்சிகளை மேற்கொண்டுள்ளீர்கள்?

சன்னா: நீங்கள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். தலித் அரசியலுக்கு ஒரு அஜெண்டாவும் குறிக்கோளும் உள்ளது. ஆனால் இந்தக் குறிக்கோளை அடைய மட்டுமே 100% சதவிகித நேரமும் முயற்சி செய்யமுடியாது. அவற்றை அடையும் விருப்பம் உள்ளது, முயற்சிகளைச் செய்கிறோம், தீட்டங்களையும், செயல்திட்டங்களையும் வகுக்கிறோம். ஆனால் இவற்றை அடைய முயல்கையில் இவற்றை அடைந்தால் இயக்கம் பெரிதாக வளர்ந்துவிடும் என்கிறார்கள். சிறுத்தைகளைப் பற்றி மட்டும் சொல்லவில்லை, இந்தியா முழுவதும் இருக்கும் தலித் இயக்கங்களைப் பற்றியும் தான் பேசுகிறேன். ஆளும் வர்க்கம் என்ன நினைக்கிறது என்றால் இந்தக் குறிக்கோளை நாங்கள் அடைந்தால் மிகப்பெரும் சமுதாய மாற்றம் உருவாகிவிடும் என நினைக்கிறது. அதனால் அதற்குத் தடைகளையும், மடைமாற்றும் செயல்களையும் அவர்கள் உருவாக்குகிறார்கள். கட்சித்தொண்டர்களுக்கு எதிராக வழக்குகள் போடப்படுகின்றன, வன்முறைகள் தூண்டப்படுகின்றன. ஊடகங்களும் மற்ற இயக்கங்களும் இத்தகைய மோதல்களைத் தூண்டுகையில் குறிக்கோளை நோக்கிய எங்கள் முன்னேற்றம் தடைப்படுகிறது. தலித் இயக்கங்களின் நோக்கம் எதுவாக இருப்பினும், அவற்றை நோக்கி நாங்கள் முன்னேறுகையில் இப்பிரச்சனைகள் எங்களைப் பின்னுக்கு இழுத்து இவற்றை முதலில் தீர்க்கவேண்டும் எனும் சூழலை உருவாக்கிவிடுகின்றன. 10 ஆண்டுகளில் தீர்க்கவேண்டிய பிரச்சனைகளைத் தீர்க்க 30 ஆண்டுகள் ஆகிறது. விடுதலைச் சிறுத்தைகளுக்கும் இதுவே நிகழ்வதால் அவர்களும் இவ்விதியில் இருந்து மாறமுடிவதில்லை. விடுதலைச் சிறுத்தைகள் ஒரு கொள்கையில் உறுதியாக இருந்தாலும்- நீங்களே பரளிப்புத்தூரை பற்றிக் குறிப்பிட்டீர்கள், அதனுடன் சேதுசமுத்திரம் மற்றும் இதுபோன்ற கணக்கற்ற கிராமங்கள் உள்ளன- எங்கள் நோக்கங்களை நோக்கி முன்னேறுகையில் இதற்கும் முக்கியத்துவம் அளிக்கவேண்டி உள்ளது.

பிரச்சனைகள் உடனடியாக தீர்ந்துவிடும் என நாங்கள் ஒருபோதும் கூறியதில்லை. ஆனால் அவற்றைத் தீர்க்க நாங்கள் உறுதியுடன் உள்ளோம். இது ஒரு பாயிண்ட். அடுத்த பாயிண்ட் என்னவெனில் கட்சி தமிழ்த்தேசியத்தைப் பற்றி புரட்சிகரமாக உரையாடுகிறது. இதைச் செய்கையில் இதுபோன்ற ஒத்த நோக்கங்களை முன்வைத்துப் பணியாற்றும் கட்சிகள் மற்றும் இயக்கங்களுடன் பணியாற்றியும் கொண்டிருக்கிறோம். சமூக இயக்கங்கள், தமிழ்த் தேசிய இயக்கங்களுடனும் இனைந்து பணியாற்றுகிறோம். அவர்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் அவர்களுக்குத் தேர்தலால் எந்த நன்மையும் இல்லை. குறிக்கோள்களை அடைய அவர்களுடன் ஒவ்வொரு கோரிக்கையை முன்வைத்தும் பணியாற்றுகிறோம். பொருளாதார சமத்துவத்தையும் முன்னெடுத்துப் போராடுகிறோம். பொருளாதார சமத்துவமற்ற நிலையை எதிர்த்து போரிடுகையில், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒரே வகுப்பு என நாங்கள் கூறினாலும் இடைநிலை சாதிகள் இதை ஏற்பதில்லை. ஆனால் இது எல்லாமிருந்தும் நாங்கள் இடைநிலை சாதிகளை எதிரிகளாகக் கருதவில்லை. ஒரே நோக்கத்தை நோக்கி முன்னேறுவதாகக் கருதி அவர்களுடன் போராட்ட களங்களில் இணைந்து செயல்படுகிறோம். சுரண்டலுக்கு எதிராகப் போராடுகையில் தமிழ்த்தேசிய இயக்கங்களுடனும், இடைநிலை சாதி அமைப்புகளுடனும், பிற ஜனநாயக சக்திகளுடனும் இணைந்து செயல்படுகிறோம். பெண்ணுரிமையைப் பொறுத்தவரை இந்த இயக்கங்கள் பெண்விடுதலையை முன்வைக்கின்றன. அவர்களுடன் அந்த நோக்கிலும் இணைகிறோம். அடுத்ததாகச் சாதிய ஒழிப்பும் உள்ளது. எந்தக் கட்சிக்கும் இது நோக்கமாக இருப்பதில்லை. விடுதலைச்சிறுத்தைகளுக்கு மட்டுமே இந்த நோக்கம் உள்ளது. இந்தக் கொள்கையை பொறுத்தவரை விடுதலைச்சிறுத்தைகள் தனியாக மட்டுமே அந்த நட்புசக்தியும் இன்றி செயல்படவேண்டி இருக்கிறது. சாதியை ஒழிக்கப் பிற இயக்கங்களுக்கு எந்த அவசியமும் இல்லையென்பதுடன் அவர்களுக்குத் தனியாக ஒரு அஜெண்டாவும் இருக்கிறது. எங்கள் ஐந்து முக்கிய நோக்கங்களைப் பார்க்கையில், மற்ற கட்சிகளுடன் பணியாற்றி அவற்றில் நான்கு நோக்கங்களை அடைய முயல்கிறோம். ஆனால் இறுதிநோக்கம் என வருகையில் தனியாக மட்டுமே நாங்கள் போராடவேண்டியுள்ளது. இந்த ஐந்து நோக்கங்களையும் உடனடியாக அடையமுடியும் என நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் இவற்றை நோக்கி நாங்கள் வேலைசெய்து வருகிறோம். இந்த ஐந்து நோக்கங்களையும் அடிமட்ட அளவில் கொண்டுசென்றுள்ளோம். சேரிகளில் இருக்கும் யாருக்கும் தமிழ்த்தேசியம் தெரியாமல் இருந்தது, யாருக்கும் பெண்விடுதலை என்றால் என்ன எனத் தெரியாமல் இருந்தது, அடக்குமுறைக்கு எதிராக எப்படிப் போராடுவது என்பது தெரியாமல் இருந்தது. இப்போது சேரிகளில் எல்லாம் இது பேசப்படுகிறது என்றால் அதற்கு விடுதலைச்சிறுத்தைகளின் முயற்சியால் மட்டுமே.

பேரா யூகோ: அவர்களை அதைப்பற்றிப் பேசலாம். ஆனால் சாதியொழிப்பு அடிமட்ட அளவில் நடக்கவேண்டி இருக்கிறது. அதனால் தான் பள்ளர், பறையர், அருந்ததியர் ஆகியோரிடையே...

சன்னா: இவர்களிடையே பிரச்சனை எழுவது உண்மை

பேரா யூகோ: இவர்களுக்கும் ஒற்றுமை இல்லை, கலப்புமணங்கள் நடைபெறுவதில்லை. அவர்களுக்கிடையே திருமணங்கள் நிகழ்ந்தால் அவர்கள் குடும்பங்கள் அவற்றை ஏற்பதில்லை. ஆக எப்படி இந்தக் கொள்கைகளை நாம் மக்களிடம் கொண்டுபோவது?

சன்னா: நான் இதைத்தான் சொல்லிவருகிறேன். சாதியொழிப்பை எடுத்துக்கொண்டால் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி துவக்கியே 22 ஆண்டுகள் தான் ஆகிறது. அதிலும் அரசியலில் 12 ஆண்டுகள் மட்டுமே இருந்துள்ளோம். 2000 ஆண்டுப்பிரச்சனையை எப்படி எங்களால் 12 ஆண்டுகளில் தீர்க்கமுடியும்? இதைப்பொறுத்தவரை நாங்கள் ஒரு தளத்தை உருவாக்கியிருக்கிறோம். அருந்ததியினர், பள்ளர்கள் மற்றும் பிறசாதியினர் எங்கள் கட்சியில் சேர்வதை நாங்கள் முன்பே எதிர்பார்க்கவில்லை. கட்சியால் ஒரு தளத்தை மட்டுமே உருவாக்கமுடியும். இதை மட்டுமே காரணமாக வைத்து நீங்கள் எங்களைக் குற்றம் சொல்லமுடியாது.

பேரா யூகோ: நான் அதை முழுமையாக ஏற்கிறேன். ஆனால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பதுதான் என் கேள்வி. இவற்றை அடைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் எதை எடுக்கிறீர்கள்? இதை நீங்கள் கட்சியுடன் பேசி முன்னேற்றம் காணமுயலவேண்டும்

சன்னா: இதுவரை நாங்கள் தலைவர் மக்களை நேரடியாகச் சந்தித்து பொதுக்கூட்டங்களை நடத்தும் முயற்சிகளைக் கடைப்பிடித்து வந்தோம். இப்போது தொழில்நுட்பம் மாறிவிட்டது. தொழில்நுட்பம் மாறிய சூழலில் அதைப் பயன்படுத்தாமல் மக்களை அடிமட்ட அளவில் அடையமுடியுமா  என்கிற கேள்வி இருக்கிறது. இப்போது நான் ஒரு கிராமத்திற்கு போய் ஒருமணிநேரம் பேசினால், நான் போனபின் மக்கள் தொடர்ந்து  து 10 மணிநேரம் டிவி பார்க்கிறார்கள். ஆக நான் ஒருமணிநேரம் பேசியதை அவர்கள் ஒருமணிநேரத்திற்குள் மறந்துவிடுகிறார்கள். தொடர்ச்சியாக அந்தச் செய்தி அவர்களுக்குப் போய்க்கொண்டே இருந்தால் தான் அவர்கள் சந்தேகங்களும், எண்ணங்களும் மாறும். அதன்பின் தான் பெண்விடுதலையும், சாதியொழிப்பும் அவர்கள் மனதில் பதியும். மக்கள் இயக்கத்தின் நோக்கங்களை விளம்பரப்படுத்துகையில் சிறுத்தைகளின் அடுத்தகட்ட முயற்சியானது ஊடகங்களை தம் கையில் எடுத்து இந்த விஷயங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதாக இருக்கும். பிற சானல்களுடன் நாங்கள் போட்டியிட முடிந்தால் ஊடகங்களை ஜனநாயக சக்தியாக மாற்றமுடியும் என நம்புகிறோம். தற்போதைய நிலையில் நாங்கள் ஊடகங்களை எங்கள் கையில் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

பேரா யூகோ: சரி. வேறு விஷயம் ஒன்று. இரு மாதங்களுக்குமுன்பு நான் கர்நாடகத்தில் இருக்கையில் நான் தலித் இயக்கத் தலைவர் எம்.சி. ராஜ் அவர்களைச் சந்தித்தேன். அவர் விகிதாச்சார  பிரதிநிதித்துவத்தை முன்வைத்துப் போராடிக்கொண்டிருக்கிறார். அவர் தேர்தல் வழிமுறையைக் கோளாறுடையதாக கருதுகிறார். இந்த விவாதங்களில் நீங்களும் பங்கேற்றுள்ளீர்களா?

சன்னா: நிச்சயமாக. இலங்கையில் அரசு கடுமையான ஒடுக்குமுறையைக் கையாண்டு வருகிறது. ஆனால் அதே சமயம் தமிழர்களுக்குத் தேவையான பிரதிநிதித்துவமும் இருக்கிறது. ராஜபக்சே அரசு பெரும் மெஜாரிட்டியில் வெற்றிபெற்றாலும், எதிர்க்கட்சி எம்பிகளும் பாராளுமன்றத்தில் நுழைய முடிகிறது. அங்கே விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை இருப்பதே காரணம். இங்கே நம்மிடம் அம்முறை இல்லை. இங்கே எண்ணிக்கை அடிப்படையிலான முறை மட்டுமே இருக்கிறது. தேர்தல் நடக்கிறது. 100 ஓட்டுக்கள் இருந்தால் 51 ஓட்டு வாங்கியவர் வெற்றியாளர். ஒரு சின்ன உதாரணம் தருகிறேன். 100 ஒட்டுக்கள் இருக்கின்றன என வைத்துக்கொல்Vஓம். 3, 4 கட்சிகள் கூட்டணியாக போட்டியிடுகின்றன. இந்தியாவைப் பொறுத்தாரை 70% ஓட்டுப்பதிவே கூட நடப்பது கிடையாது. 68 அல்லது 65% மட்டுமே ஓட்டுப்பதிவு நிகழ்கிறது. ஆக 30% மக்கள் தேர்தலில் ஓட்டுப்போடுவதில்லை. இந்த 70% ஓட்டில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி மற்றும் மூன்றாவது அணிகளும் ஓட்டுக்களைப் பெறுகின்றன. தேர்தல் முடிந்ததும் ஓட்டுக்களை எண்ணுகையில் ஆளும்கட்சி 25 முதல் 30% வரை ஓட்டுக்களைப் பெறுகிறது. ஆக இதன் பொருள் என்னவெனில் இந்தியாவில் அரசு என்பது ஒரு சிறுபான்மை அரசாகவே இருக்கிறது. அவர்கள் 30 முதல் 40% ஓட்டுக்களைப் பெற்றாலும் 60% மக்கள் அவர்களுக்கு எதிரானவர்களாகவே இருக்கிறார்கள். பின் எப்படி நாம் இதை ஒரு ஜனநாயக நாடு என அழைக்கமுடியும்? அதனால் தான் இந்த வாக்களிப்பு முறையை எதிர்க்கிறோம். எம்பிகளும், எம்.எல்.ஏக்களும் கட்சிகள் பெறும் ஓட்டுக்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டால் தான் அனைவரும் பாராளுமன்றத்தில் நுழையும் வாய்ப்பைப் பெறமுடியும். அதனால் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை முழுமனதுடன் ஆதரிக்கிறோம். இதை முன்வைத்து ஒரு பிரச்சாரமும் துவக்கவுள்ளோம். இதுகுறித்த பிற பிரசாரங்களில் நாங்கள் பங்கேற்றிருந்தாலும் இதைநோக்கிய எங்களின் பிரச்சார இயக்கத்தையும் துவக்கவுள்ளோம்.

பேரா யூகோ: இது மிக முக்கியமானது. ஏனெனில் இது நடந்தால் அதன்பின் நீங்கள் கூட்டணிகளை நம்பியிருக்கவேண்டியதில்லை.

சன்னா: ஆமாம். அதன்பின் அதற்கான தேவை இருக்காது

பேரா யூகோ: நான் உங்களின் நிறைய நேரத்தை எடுத்துக்கொண்டேன். உங்களிடம் இருந்து பல விசயங்களையும் கற்றுக்கொண்டேன். நன்றி

(முற்றும்)

மொழியாக்கம்: செல்வன்

___________________________________________________________
 

 செல்வன்
 holyape@gmail.com
___________________________________________________________

Thursday, May 12, 2016

கவுதம் சன்னாவுடன் ஓர் நேர்காணல் - 14

- செல்வன். 

பேரா யூகோ: அத்துடன், மக்கள் பிறரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்ற கேள்வியும் இருக்கிறது. உதாரணமாக, பரளிபூதூரில் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் சேரிக்குள் நுழைந்து வீடுகளைக் கொளுத்தி, மக்களைத் தாக்கினார்கள். நான் அங்கே சென்றபோது மக்கள் "விடுதலைச் சிறுத்தைகள் எங்களுக்கு எதுவுமே செய்யவில்லை" என்றார்கள். நான் மேலும் விசாரிக்கையில் அவர்கள் "கட்சியினர் வந்து இங்கே ஒருவாரம் தங்கியிருந்து எங்களுக்கு உணவும், பாதுகாப்பும் அளித்தார்கள். ஆனால் இவ்விஷயத்தை அவர்கள் சரியாக கையாளவில்லை" என்றார்கள். "இதன் பொருள் என்ன?" என நான் கேட்டபோது "எந்தத் தலைவர்களும் வரவில்லை" என்றார்கள். அதன்பின் விசாரித்ததில் பாண்டியம்மாள் மற்றும் எல்லாளன் (மதுரை மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் செயலாளர்கள்) மற்றும் ஆற்றலரசுவும் வந்திருப்பது தெரிந்தாலும் அவர்களைப் பொறுத்தவரை திருமாவளவன் வரவில்லை என்பதே குறையாக தெரிந்தது. ஆற்றலரசு ஒரு மாநில தலைவர் (சன்னா: ஆம்) பாண்டியம்மாளும், எல்லாளனும் பிராந்திய தலைவர்கள் (சன்னா: ஆம்). ஆனால் இவர்கள் வந்தும் திருமாவளவன் வரவில்லையென்பதால் மக்கள் விடுதலைச் சிறுத்தைகள் எதுவும் செய்யவில்லை எனச் சொல்லி கட்சியின் போர்டைக் கூட மாட்டாமல் இருக்கிறார்கள்.

சன்னா: ஆம். மக்கள் இன்னும் இரண்டாம் நிலை தலைவர்களை ஏற்கும் மனப்பக்குவத்தில் இல்லை. அதைக் கொஞ்சம், கொஞ்சமாக நாம் மாற்றவேண்டும். இது கட்சியின் ஒரு குறைபாடு என்பதை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும். பிரச்சனை என்னவெனில் எல்லாரும் எப்போதும் தலைவரை எதிர்பார்ப்பதே.

பேரா யூகோ: நான் அப்போது நினைத்தது என்னவெனில் இந்த மூவரும் கட்சியினருக்கு உள்ளூர் அளவில் நன்கு அறிமுகமானவர்கள். ரவிகுமார் (அன்றைய விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ), சிந்தனை செல்வம் (பொதுச் செயலாளர்) போன்றோர் அன்று வந்திருந்தால் "மாநிலத்தின் வடபகுதியிலிருந்து சிலர் வந்திருக்கிறார்கள்" என்ற அளவில் தலைவர் வரவில்லையெனும் போதும் கூட அவர்களுக்கு அது ஒருவித உத்வேகத்தை அளித்திருக்கும். (சன்னா: ம்ம்ம்). நீங்கள் இதுபோல கூட செய்யலாமே (சன்னா: கட்டாயமாக) நீங்கள் ஆற்றலரசை கடலூருக்கும், சிந்தனை செல்வத்தை மதுரைக்கும் அனுப்பலாம். அவர்களை மாநில அளவில் இப்படி அனுப்புகையில் மக்களிடையே கட்சி தம் பிரச்சனைகளை முக்கியமாகக் கருதி மேல்மட்ட தலைவர்களை அனுப்புகிறது எனும் நம்பிக்கை பிறக்கும்.

சன்னா: உண்மை. நாங்கள் அப்படிச் செய்திருக்கவேண்டும். அந்த வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டோம். வரும்காலத்தில் அதை மாற்ற முயல்கிறோம்

பேரா யூகோ: சரி. தொடர்புடைய இன்னொரு கேள்வி. நீங்கள் எப்படி வேட்பாளர்களைத் தேர்வு செய்கிறீர்கள்? 2011ல் உங்களுக்கு 10 சீட்டுகள் கிடைத்தன. பத்தில் ஒருவர் மட்டுமே பெண். இருவர் தலித் அல்லாதவர்கள். (சன்னா: ஆம்). யாருக்குச் சீட்டு என்பதை நீங்கள் எப்படி முடிவு செய்கிறீர்கள்?

சன்னா: தேர்தல்களில் வேட்பாளர்களை முடிவுசெய்கையில் முதல் விஷயம் என்னவெனில் நாங்கள் கூட்டணி வைத்துள்ள கட்சி தான் நாங்கள் எந்தத் தொகுதியில் போட்டியிடுகிறோம் என்பதை முடிவு செய்யும்.

பேரா யூகோ: அம்முடிவில் உங்களுக்குப் பங்கு இல்லையா?

சன்னா: கூட்டணிக்கட்சிகள் தான் சீட்டுகளை முடிவு செய்கின்றன.

பேரா யூகோ: உண்மை. அந்தத் தொகுதிகள் வேண்டாம் என உங்களால் சொல்ல முடியாதா?

சன்னா: ஆம். நாங்கள் ஒரு பட்டியலை கொடுப்போம். 40 தொகுதிகளின் பட்டியலை கொடுத்தால் அதிலிருந்து 10 தொகுதிகளைக் கொடுப்பார்கள். இப்படித்தான் நடந்து வருகிறது. இதில் ஒரு ஐந்து தொகுதி வேண்டும் என நாங்கள் போராடி வாங்கலாம். ஆனால் முதல் முடிவை அவர்கள் தான் எடுக்கிறார்கள். இப்படி முடிவெடுக்கையில் திமுகவும், அதிமுகவும் நாங்கள் உள்ளூர் வேட்பாளர்களையே நிறுத்தவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இதன் பொருள் என்னவெனில் ஒரு தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள சாதியை சார்ந்தவரையே வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்பதே. இந்த இரண்டுக்கும் பின், அடுத்ததாகப் பார்க்கும் விஷயம் என்னவெனில் அவர்களுக்குப் போட்டியிடும் அளவு பணபலம் இருக்கிறதா என்பது. வேட்பாளர்கள் இந்த மூன்று விஷயங்களின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். விடுதலைச் சிறுத்தைகள் நிலையும் இதுவே. ஆனால் இதை நாங்கள் சரியாக சில சமயம் பின்பற்றியும், சில சமயம் சரியாகப் பின்பற்றாமலும் இருக்கிறோம். இந்த முறை ஓரளவே பின்பற்றப்படுகிறது. எங்கள் கட்சிக்குள்ளாக சீட்டை ஒதுக்குகையில் வேட்பாளர்கள் மக்களிடையே ஓரளவு அங்கீகாரம் பெற்றிருக்கவேண்டும், கட்சிக்காக நீண்டகாலம் உழைத்திருக்கவேண்டும், சட்டசபையில் அவரதுச் செயல்பாடு எப்படி இருக்கும் - இதுபோன்ற விஷயங்களைக் கருத்தில் கொண்டே முடிவெடுக்கிறோம். இறுதி முடிவு தலைவர் கையில் என்றாலும் அவர் முடிவெடுக்குமுன் விரிவான அளவில் விவாதங்களை நடத்தியே முடிவெடுக்கிறார். இதன் அடிப்படையிலேயே தலைவர் வேட்பாளர்களை அறிவிக்கிறார். கடைசி இரண்டு,மூன்று தேர்தல்களில் இதுதான் நடந்தது. இம்மாதிரி அறிவிப்புகளில் நிச்சயமாக ஒரு பெண்ணும், ஒரு தலித் அல்லாதவரும் இருப்பார்கள், எங்களுக்கு 10 சீட்டுகள் கிடைத்தால் அதில் இரண்டு தலித் அல்லாதவர்கள், ஒரு பெண் இப்படித்தான் சீட்டு கொடுக்கிறார்கள். அது தலித்துக்கான சீட்டு எனில் அதன்பின் தலித்களிடையே அது ஒரு பெண்ணாக இருக்கவேண்டும். இந்த அடிப்படையில் ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு பெண்வேட்பாளர் ஒரு தொகுதியிலாவது போட்டியிட்டுள்ளார். தலித் அல்லாதவர்களும் முஸ்லிம் அல்லது பிற சமூகமாக இருக்கலாம். அவர்களுக்குச் சீட்டுக்கள் ஒதுக்கப்பட்டு அந்த அடிப்படையில் நியமனங்கள் நடைபெறுகின்றன. இதில் சிக்கலான விஷயம் என எதுவுமில்லை.

பேரா யூகோ: திருமாவளவன் வேட்பாளராக இருக்கவேண்டும் என நினைக்கிறீர்களா? திருமாவளவனால் தன் தொகுதிக்கு அடிக்கடி செல்ல முடியாது. அவர் உறங்கக்கூட நேரமின்றி எப்போதும் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். முன்பு தமிழகம் முழுக்க சுற்றினார், இப்போது டெல்லி. ஆக அவரால் தொகுதி வேலையைச் செய்யமுடியாது என்கையில் தொகுதியை அவர் இல்லாத சூழலில் யார் கவனிக்கிறார்கள்?

சன்னா: இந்தக் கேள்வியே எழக்கூடாது. நாட்டுக்குப் பிரதமர் இருக்கிறார். அவர் தன் தொகுதிக்குச் செல்கிறாரா? (யூகோ: இல்லை). ஜெயலலிதா தொகுதிக்கு செல்கிறாரா? தலைவர்களால் மக்களுக்கு அரசியல் அடிப்படையிலேயே பிரதிநிதித்துவம் கொடுக்க முடியும். இதனால் தொகுதி பாதிக்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு எல்லா இடத்திலும் உண்டு. திருமாவளவனுக்கு மட்டுமல்ல, எல்லாத் தலைவர்களுக்கும் உண்டு. சாதாரண எம்பி, எம்.எல்.ஏவால் தொகுதியில் அதிக கவனம் செலுத்த முடியும். ஆனால் தலைவர்களால் அப்படிச் செய்யமுடியாது. அந்த வேலையைக் கட்சியின் இரண்டாம் நிலை தலைவர்களே எடுத்துச் செய்யவேண்டும். இந்த அடிப்படையில் சிதம்பரம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு என்ன வேலையைச் செய்யவேண்டும், எப்போது செய்யவேண்டும் என்பதை முடிவெடுக்க ஒரு பெரிய குழுவே உள்ளது. அக்குழு எந்த இடத்தில் என்ன பிரச்சனைகள் உள்ளன, எங்கே சாலைகள் போடவேண்டும், எங்கே தொட்டிகள் அமைக்கப்படவேண்டும், எங்கே சமூகநலக் கூடங்களும், நூலகங்களும் அவசியம், பள்ளிகள் அவசியம் என்பதைச் சரிபார்த்து தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ஐந்துகோடியை அதற்கு அளித்து, அதைச் செலவு செய்கிறார்கள். ஆகத் தொகுதி வேலைகள் நடக்கின்றன. அது புறக்கணிக்கப் படுவதில்லை, ஆனால் பத்திரிக்கைகள் இதை வெளியிடுவதில்லை. ஆகத் தலைவர்களை பொறுத்தவரை அவர்கள் தேர்தலில் நிற்பதா, வேண்டாம் எனும் கேள்வியே எழுவதில்லை. கட்சித்தலைவர்கள் கட்டாயமாக தேர்தலில் நிற்கவேண்டும். அப்போதுதான் மக்களுக்கு அவர்கள் மேல் நம்பிக்கை பிறக்கும்.

பேரா யூகோ: ஆனால் அந்த வேலை நடக்கவில்லையெனில் அவர்களால் அதன்பின் ஜெயிக்க முடியாது. அதுதான் பிரச்சனையே.

சன்னா: அது உண்மைதான். அதனால் தான் ஒரு குழுவே வேலைசெய்கிறது என நான் சொன்னேன். இதில் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டிய விஷயம் ஒன்று என்னவெனில், கட்சியாக எங்களுக்கு ஒரு கூடுதல் தடையும் உள்ளது. அதாவது விடுதலைச் சிறுத்தைகளை பொறுத்தவரை நாங்கள் ஜெயித்த எம்பி அல்லது எம்.எல்.ஏ தொகுதியைத் தாண்டியும் மாநில அளவில் எங்கெல்லாம் தலித்துகள் பாதிக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் நாங்கள் பணியாற்றவேண்டிய நிலை உள்ளது.



[தொடரும் ... ]

___________________________________________________________
 

 செல்வன்
 holyape@gmail.com
___________________________________________________________

கவுதம் சன்னாவுடன் ஓர் நேர்காணல் - 13

- செல்வன். 

பேரா யூகோ: உங்கள் இயக்கம் இப்போது ஒரு அரசியல் கட்சியாக மாறிவிட்டது. அரசியல் கட்சியாக மாறியபின் உங்கள் கொள்கைகளும், நோக்கங்களும் மாறிவிட்டனவா?

சன்னா: எங்கள் தலைவர் திருமாவளவன் கூறியதுபோல் எங்கள் உத்திகள் மாறினவே ஒழியக் கொள்கைகளில் மாற்றம் எதுவுமில்லை. கட்சியின் ஐந்து குறிக்கோள்கள் தொடர்ந்து எங்கள் இலக்காக நீடிக்கின்றன. இவற்றை அடைய நாங்கள் கடைபிடிக்கும் உத்திகள் காலப்போக்கில் மாறுதல் அடையலாம். எந்த இயக்கமும் ஒரே உத்தியை எல்லாக் காலத்திலும் பின்பற்றிக்கொண்டிருக்க முடியாது. ஆகத் தேர்தல் களத்தில் இறங்கியபின் எங்கள் கொள்கைகளில் சமரசம் செய்துகொண்டோம், அல்லது கொள்கைகளை நீர்த்துப்போக விட்டோம் எனும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த அடிப்படை முகாந்திரமும் கிடையாது. எங்கள் கொள்கைகள் நிலையாக மாற்றமின்றி உள்ளன. அவற்றை அடையத் தொடர்ந்து போராடி வருகிறோம்

பேரா யூகோ: சரி கொள்கைகளில் மாற்றமில்லை என்றால் கட்சியின் கட்டமைப்பில் மாற்றம் நிகழ்ந்துள்ளதா? கட்சியின் இரண்டாம்
ட்ட தலைவர்கள் இன்னமும் தமிழக அளவில் பெரியதாக அறியப்படவில்லை என நான் கருதுகிறேன்

சன்னா: இது பரவலாக சொல்லப்படும் குற்றச்சாட்டேயாகும். ஊடகங்கள் யாருக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனவோ, அவர்களே இரண்டாம்
ட்ட தலைவர்கள் ஆகிறார்கள் என நினைக்கப்பட்டாலும், உண்மை என்னவெனில் கட்சியின் தலைவர் யாரை அங்கீகரிக்கிறாரோ அவர்களே இரண்டாம் கட்ட தலைவர்கள் ஆகிறார்கள். நான் யாரையும் குறிப்பிடாமல் பொதுவாகச் சொல்கிறேன். ஒருவர் நேற்றுவரை சினிமா நடிகராக இருப்பார். இன்று கட்சியை துவக்குவார். ஊடகங்கள் உடனே ஒன்றுசேர்ந்து அவரைப் பெரிய தலைவராகச் சித்தரிக்கும். இதுநாள்வரை அவர் மக்களுக்கு என்ன செய்தார், எத்தகைய போராட்டங்களை நடத்தினார் என்பது போன்ற கேள்விகள் எதுவும் எழாது. ஊடகங்கள் தான் இங்கே தலைவர்களை உருவாக்குகின்றன. விடுதலைச் சிறுத்தைகளை பொறுத்தவரை இத்தனை நாள் மக்களுக்காகப் போராடியவரையே தலைவராக ஏற்கிறோம். அவரே திருமாவளவன்

பேரா யூகோ: பிரச்சனை ஊடகங்கள் மட்டுமல்ல

சன்னா: ஆம். ஊடகங்கள் மட்டுமில்லை. நான் ஒவ்வொன்றையும் படிப்படியாக விளக்குகிறேன். ஊடகங்கள் ஒருவருக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் அவர் முகம் மக்களிடையே பிரபலமாகிறது. அதே சமயம் ஒவ்வொரு கட்சியிலும் மக்களுக்கு அறிமுகமான பிரபல தலைவர் என ஒருவரே இருப்பார். இரண்டாம்
ட்ட தலைவர்கள் கட்சிக்குள் அங்கீகாரம் பெற்றால் தான் ஊடகங்களில் கவனம் பெறுவார்கள். நாங்கள் அடிமட்ட அளவிலிருந்து எழும் கட்சி என்பதால் எல்லாரும் தலைமை வகிக்க ஆசைப்படுவார்கள். அதனால் ஒவ்வொரு பதவிக்கும் கடும் போட்டி உருவாகும். அத்தகைய போட்டியின் மூலமே இரண்டாம் கட்டத் தலைமை உருவாகும். அடுத்ததாக இப்போது இரண்டாமிடத்தில் உள்ளவர்களை மக்கள் இரண்டாம் கட்ட தலைவர்களாக ஏற்கிறார்களா என்றால் இல்லை. தமிழக அளவில் சிந்தனையாளராக அறியப்பட்ட என்னைப் போன்ற ஐந்தாறு பேரை ஏற்கவே எதிர்ப்பு இருக்கிறது.

இந்த எதிர்ப்பை எப்படிச் சமாளிப்பது? அது நேருக்கு நேர் நின்று போராடி மாற்றக்கூடிய விஷயமல்ல. மக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வித கருத்து இருக்கும். அவர்கள் திருமாவளவனை ஏற்றதே மிகப்பெரிய விஷயம். இப்போது அவர்கள் "நாங்கள் மற்ற இரண்டாம் கட்ட தலைவர்களையும் ஏற்றுக் கட்சியை வளர்க்க வேண்டுமா" என தங்களுக்குள் விவாதிக்கிறார்கள். ஆக இதில் தலித் அல்லாதவர்களால் பிறரை ஏற்பதில் பலருக்கு தயக்கம் உண்டாகிறது. இந்த இரு பிரச்சனைகளுக்கு மத்தியில் விடுதலைச் சிறுத்தைகளின் இரண்டாம் கட்ட தலைவர்களுக்குச் சரியான முறையில் அங்கீகாரம் கிடைப்பதில் சிக்கலேற்படுகிறது

பேரா யூகோ: ஆனால் கட்சியால் அவர்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் வகையில் செயல்பட முடியும் அல்லவா? (சன்னா: ஆம்). இப்போது மதிமுகவை எடுத்துக்கொண்டால் நாஞ்சில் சம்பத் நட்சத்திர பேச்சாளராக இருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகளில் திருமாவை தவிர்த்து அப்படி யாரும் இல்லை. (சன்னா: ஆம்). திருமாவை தவிர்த்து இன்னொருவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டால் அவரும் மக்கள் மனதில் பதிந்துவிடுவார்

சன்னா: இது உண்மையே. ஆனால் பேச்சாளர்கள் இல்லை எனச் சொல்ல முடியாது. இருக்கிறார்கள்

பேரா யூகோ: நட்சத்திர பேச்சாளர்கள் இல்லை

சன்னா: நட்சத்திர பேச்சாளர்களும் இருக்கிறார்கள்.

[தொடரும் ... ]

___________________________________________________________
 

 செல்வன்
 holyape@gmail.com
___________________________________________________________

Friday, May 6, 2016

கவுதம் சன்னாவுடன் ஓர் நேர்காணல் - 12

- செல்வன்.



பேரா யூகோ: இப்போது தலித் தொண்டர்கள் இதனால் சிறிதளவு அச்சம் கொண்டிருக்கிறார்கள். கட்சியில் தலித் அல்லாதவர்கள் பெருமளவு இருப்பது ஜாதிக்கலவரம் வராது என தலித் அல்லாதவர்கள் பெருமளவு நம்புவதைக் காட்டுகிறது. ஆனால் இதுகுறித்து தலித் தோழர்கள் கருத்து என்னவெனில் "எதாவது பிரச்சனை என வந்தால் நாம் சமரசம் செய்துகொள்ளத் தூண்டப்படுவோம். முன்பு எடுத்த உறுதியான நிலைப்பாட்டில் இருந்து மாறி தலித்துகளை கைவிட்டுவிடுவோம்" என. கட்சியின் வேர்களான அடிமட்ட தொண்டர்களும், கிராமப்புற தலித்துகளும் இந்த அச்சத்தையே கொண்டுள்ளார்கள். இது குறித்து என்ன கருதுகிறீர்கள்?

சன்னா: இது ஒரு நியாயமான அச்சமே. விடுதலைச் சிறுத்தைகள் அடித்தட்டு மக்களின், குறிப்பாகத் தலித்துகளின் பிரச்சனைகளை முன்னெடுத்த இயக்கம். கட்சியில் தலித் அல்லாதவர்கள் சேர்கையில், அவர்கள் இதன் பலனை அறுவடை செய்வதாகவும் ஒரு புகார் கூறப்படுகிறது. இப்படி ஒரு சந்தேகம் இருப்பதை நாம் மறுக்கமுடியாது. நாம் கேட்கவேண்டியது என்னவெனில் இவர்கள் கட்சியில் சேர்ந்ததால் விடுதலைச் சிறுத்தைகளுக்கு என்ன நன்மை ஏற்பட்டது என்பதே. அந்தக் கோணத்தில் பார்த்தால் சில நன்மைகளே ஏற்பட்டிருப்பதை அறியமுடியும். நாம் ஒரே ஒரு எம்பி சீட்டை மட்டுமே வென்றிருக்கிறோம். 10 எம்.எல்.ஏ சீட்டுக்களை இழந்திருக்கிறோம். நாம் அரசியல்ரீதியாக வென்றிருந்தால் அடிமட்ட அளவில் நிலவும் இம்மாதிரி பிரச்சனைகளை தீர்த்து இவற்றை விவாதித்திருக்கலாம். தலித் கட்சியாக மட்டும் நின்றிருந்தால் தலித் அல்லாதவர்களின் ஆதரவு இன்றி வெல்வதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகவே இருந்திருக்கும். பிரச்சனைகள் எழுகையில் நீங்கள் சொல்வதுபோல கட்சிக்குப் புகார்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இன்று நடந்த ஒரு பிரச்சனை கூடப் புகாராக நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சேஷசமுத்திரத்தில் கோயில் தேரை இழுக்கும் விஷயத்தில் சேரியில் இருக்கும் மக்களுக்கும், ஊரில் இருக்கும் மக்களுக்கும் இடையே பிரச்சனை உருவானது. பிரச்சனை வந்தபின் 44 தலித்துகள் கைது செய்யப்பட்டார்கள். ஆனால் ஒரு வன்னியர் கூட கைது செய்யப்படவில்லை. இந்தப் பிரச்சனைகளை உருவாக்கியவர்கள் அப்பகுதியில் வசிக்கும் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த சிலர், ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் தலித்துகள். இம்மாதிரி பிரச்சனை வருகையில் அதைக் கையிலெடுத்து தீர்வு காணமுயல்வது யார்? விடுதலைச் சிறுத்தைகள் தான். இதேபோல நாமக்கல்லில் உள்ள மூஞ்சானூரில் தலித்துகளுக்கு மயானத்துக்கான பாதை 20 ஆண்டுகளாக அடைபட்டுக் கிடக்கிறது. அப்போதும் இதை விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பே கையில் எடுத்துத் தீர்வு காணவேண்டி இருந்தது. அவ்வூரில் பாதிக்கப்பட்டோர் அருந்ததியர்கள். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் இதைக் கையில் எடுத்ததும் எந்தச் சமரசமும் இன்றி இதற்குத் தீர்வு கண்டது. நாங்கள் சமரசம் செய்யாமல் போராடியதால் அவ்வூர் அருந்ததியர்களுக்கு மயானத்துக்குச் செல்ல வழி கிடைத்தது. இதேபோல பல உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் அதே சமயம் சில ஊர்களில் சின்ன, சின்ன பிரச்சனைகள் உள்ளன. அது பெரிதாகி பெரிய ஜாதிக்கலவரமாக ஆகாமல் தடுக்கும் கடமை நமக்கு உள்ளது. சிறுத்தைகள் ஒரு ஊருக்குப் போய் பிரச்சனை செய்துவிட்டு வெளியே போய்விடலாம். ஆனால் அவ்வூரில் மக்கள் அமைதியாகத் தொடர்ந்து வாழவேண்டும் அல்லவா? சிலர் ஏற்படுத்தும் பிரச்சனைகள் ஒட்டுமொத்த கிராமத்தையும் பாதிக்கவிடக்கூடாது. இம்மாதிரி சூழலில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்ப்பது தவிர வேறு வழி கிடையாது. இதுபோன்ற சூழலில் நாம் சமரசம் செய்துகொண்டதாக ஓரிருவர் வந்து புகார் சொல்லுவார்கள். ஆனால் மக்களைக் காப்பாற்றுவதற்காக இம்மாதிரி சமரசங்கள் அவசியமாகின்றன.

நாம் எதற்காகப் போராடுகிறோம்? அமைதியும், நல்லிணக்கமும் நிலவவே போராடுகிறோம். ஆக சில கிராமங்களில் அமைதி நிலவ சில சமரசங்களைச் செய்துகொள்ளவேண்டி உள்ளது. அதை சிலர் பெரிதுபடுத்தி புகார் சொல்கிறார்கள்.

பேரா யூகோ: இது முக்கியமான குறிப்புதான் எனினும் போராட்டம் என்பது முழுக்க அமைதியை ஏற்படுத்தமட்டுமே செய்யப்படுவதாக இருக்கமுடியாது அல்லவா? (சன்னா: ஆம்) போராட்டங்கள் நீதியை நிலைநாட்டவும் நடத்தப்படுபவை. நீதி கிடைக்கவில்லையெனில் போராட்டத்தின் பலன் என்ன எனும் குற்றச்சாட்டும் இருக்கிறது. உதாரணமாக மதுரையில் வண்டியூர் தீர்த்தக்காடு இருக்கிறது. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவை உத்தரவிட்டும் மேல்சாதியினரே அந்நிலத்தை ஆக்கிரமித்துள்ளார்கள். அவ்வூர்  மக்கள் என்ன சொல்கிறார்கள் எனில் ஏதோ சமரசமின்றி இது நடந்திருக்காது என்கிறார்கள்

சன்னா: அவர்கள் அப்படிக்கூறினாலும் விடுதலைச் சிறுத்தைகள் அப்பகுதியில் உயர்சாதியினருக்கு ஆதரவாகச் செயல்படுவதாக நீங்கள் கருதவில்லை அல்லவா? (பேரா யூகோ: நிச்சயமாக இல்லை) . ஆனால் உயர்சாதியினருக்கு ஆதரவாக ஒட்டுமொத்த அரசின் அமைப்புகளும் இருக்கின்றன

பேரா யூகோ: ஆமாம். ஆனால் தொடர்ந்து போராடினால் நிலத்தை உங்களால் மீட்கமுடியுமல்லவா?

சன்னா: நிச்சயமாகத் தொடர்ந்து போராடினால் நிலத்தை மீட்கமுடியும். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் வெறும் முழுநேர போராட்ட இயக்கம் மட்டுமல்லவே? நாங்கள் மக்களுக்காகப் போராடும் அதே சமயம் அரசியலில் காலூன்றவும் முயல்கிறோம். அதற்காக இக்கோரிக்கையைக் கைவிட்டுவிட்டோம் என்று பொருள் அல்ல. எங்களால் முடிந்தவரைப் போராடுகிறோம். நேற்றுகூட முகநூலில் ஒருவர் செருப்பை கையில் ஏந்தவேண்டி வந்ததைக் குறித்து பதிந்திருந்தேன்

பேரா யூகோ: எங்கே நடந்தது இது?

சன்னா: திண்டுக்கல் அருகே உள்ள ஒருகிராமத்தில். இதுபோன்ற பிரச்சனைகள் பல இடங்களில் இருந்தாலும் எங்கள் பார்வைக்கு இவை வந்தபின்னரே பலருக்கும் இப்படிப்பட்ட பிரச்சனைகள் இருப்பதே தெரியவருகிறது. மக்கள் கவனத்துக்கே வராத பலகிராமங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி என்ன சொல்லமுடியும்? சிறுத்தைகளான நாங்கள் நீதிமன்ற  வழக்குகள், போராட்டங்கள், சாதி இந்துக்களை எதிர்த்தல், சுரண்டல்காரர்களை எதிர்த்தல், போலீசை எதிர்த்தல், கட்சித்தொண்டர்களின் பிரச்சனைகளைக் கவனித்தல், கட்சியில் உள்ள தலித் அல்லாதவர்களின் பிரச்சனைகளை கவனித்தல் எனப் பலவற்றைச் செய்யவேண்டி உள்ளது. இத்தகைய சூழலுக்கு ஊடாகவே இம்மாதிரி பிரச்சனைகளை கவனிக்கவேண்டியுள்ளது. நேரடியாக ஒரு பிரச்சனையை தீர்க்க முடியாமல் போகையில் இவற்றை மனதில் கொண்டே தீர்வுகாணவேண்டியுள்ளது. சில விசயங்களில் உடனடியாக தீர்வு கிடைக்கிறது, சிலவற்றில் (நாமக்கல் மாவட்டம் மூஞ்சானூர் போல) 20 ஆண்டுகள் கழித்தே தீர்வு கிடைக்கிறது. இந்த 20 ஆண்டுகளில் அவ்வூர் மக்கள் என்ன பேசிக்கொண்டிருந்திருப்பார்கள்? யாராரோ வருகிறார்கள், போகிறார்கள் ஆனால் தீர்வுமட்டும் வந்தபாடில்லை எனத்தானே பேசியிருப்பார்கள்? இன்று தொடர்போராட்டங்களின் விளைவாகவே வெற்றியடைந்துள்ளோமே ஒழிய ஏதோ ஓரே நாளில் நடந்த நடந்த ஒரு மறியல் மூலமாக மட்டுமே நாங்கள் வெற்றியடையவில்லை. சாதி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கும் ஒரு விசயம். அதை இரண்டு அல்லது மூன்றுநாளில் ஒழிக்க முடியாது. ஆண்டுக்கணக்கில் நடக்கும் தொடர்போராட்டங்கள் அதற்கு அவசியம். சிறுத்தைகள் அப்படிப்பட்ட போராட்டங்களில் இருந்து பின்வாங்கினால் நீங்கள் எங்கள் மேல் புகார் கூறலாம். ஆனால் போராட்டம் நடக்கையிலேயே சமரசம் செய்துகொண்டதாக எங்கள் மேல் புகார் கூறப்பட்டால் கள நிலவரத்தை அவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் எடுத்துரைப்பது எங்கள் கடமையாகும்.

[தொடரும் ... ]

___________________________________________________________
 

 செல்வன்
 holyape@gmail.com
___________________________________________________________

Sunday, March 6, 2016

கவுதம் சன்னாவுடன் ஓர் நேர்காணல் - 11

- செல்வன்.



பேரா யூகோ: ஆனால் அவர்கள் கட்சியில் சேர்ந்ததாலும், நீங்கள் பா.ம.க, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், கொங்குநாடு முன்னேற்றக்கழகம் மாதிரியான கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்ததாலும் ஜாதி வன்முறை குறைந்துள்ளதா? (மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தென் தமிழகத்தை சேர்ந்த தேவர் கட்சி, கொங்குநாடு முன்னேற்றக்கழகம் மேற்குப்பகுதி தமிழகத்தின் கவுண்டர் இனமக்களின் கட்சி)

சன்னா: நிச்சயமாகக் குறைந்துள்ளது. இதை இன்னொரு கண்ணோட்டத்தில் பார்ப்பதானால் நாங்கள் தலித் அல்லாதவருக்குக் கட்சியில் பதவிகளைக் கொடுப்பது பிற கட்சிகளுக்கும், சாதியினருக்கும் "நீங்களும் இக்கட்சியின் ஒரு அங்கம்" எனும் செய்தியை அளிக்கிறது. இதுவரை மற்ற சாதியினர்க்கும், கட்சிகளுக்கும் நெருக்கமாகும் வாய்ப்பு எங்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே இருந்துவந்தது. பிற சாதிக்கட்சி தலைவர்களுடன் எங்களால் நேரடியாகப் பேச முடியவில்லை. அந்தத் தலைவர்களுக்கும் தலித் தலைவர்களுடன் பேசும் மனநிலையும் இல்லை. இத்தகைய மனத்தடை நீடித்து வந்தது. ஆக இம்மாதிரி சமயங்களில் கூட்டணி பற்றி பேசுவதற்கும், தொகுதிகளைப் பற்றி பேசுவதற்கும் எங்கள் கட்சியில் உள்ள தலித் அல்லாதோர் பெருமளவு உதவியாக இருக்கிறார்கள். இதன் இன்னொரு பலனும் என்னவெனில் எங்காவது ஜாதிக்கலவரம் நிகழ்ந்தால் எங்கள் கட்சியில் உள்ள தலித்-அல்லாத தலைவர்கள் களத்தில் உள்ள தலித் அல்லாதவருடன் எளிதில் பேச முடிகிறது. இது அமைதியை உருவாக்கவும், பிரச்சனைகளைத் தீர்க்கவும் உதவுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் உள்ள தலித் அல்லாதோர் இதில் பெரும்பங்கு வகித்துள்ளார்கள். அவர்கள் பங்கை அங்கீகரிப்பதன் மூலமும், மதிப்பதன் மூலமும் இதுவும் ஒற்றுமை நிலவும் சமூகத்தை உருவாக்கும் முயற்சியே என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பேரா யூகோ: சரி.நல்லது. ஆனால் அதே சமயத்தில் பரமக்குடியில் நிகழ்ந்தது என்ன என்பதைப் பார்த்தோமெனில் (பரமக்குடியில் செப்டம்பர் 2011ல் போலிஸ் துப்பாக்கிச்சூட்டிலும், லத்திசார்ஜிலும் ஆறு தலித்துகள் உயிரிழந்தார்கள்) அந்தக் கலவரத்தின் காரணமே தலித்துகள் குருபூஜை மற்றும் தெய்வமகான் என்ற சொற்றொடர்களை பயன்படுத்தக்கூடாது என்ற கோரிக்கையே ஆகும். அவர்கள் அந்தச் சொற்றொடர்கள் தம் தலைவரை குறிக்க மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் எனக் கருதினார்கள். இம்மானுவேல் சேகரனைக் குறிக்க இந்த வார்த்தைகள் எப்படி பயனாகலாம் எனக் கேட்டார்கள். இம்மாதிரி சூழலில் கட்சியில் உள்ள தலித் அல்லாத தலைவர்கள் குறுக்கிட்டு இதைச் சரிசெய்திருக்க முடியாதா?

சன்னா: நீங்கள் சொல்வது சரிதான். இது திடீரென எழுந்த பிரச்சனையோ, எதிர்பாராது எழுந்த பிரச்சனையோ அல்ல. அந்தப் பகுதியில் முக்குலத்தோர் குருபூஜை என்பதி முத்துராமலிங்கத் தேவரை மட்டுமே குறிக்க பயன்படும் சொல் என்பதில் மிகத் தீவிரமாக இருக்கிறார்கள். இம்மானுவேல் சேகரனின் குருபூஜை அவர்களது குருபூஜைக்கு போட்டியாக எழுந்ததும் பிரச்சனை துவங்கியது. பரமக்குடி துப்பாக்கிச் சூடு பிரச்சனை அன்றைய தினம் மட்டும் நிகழ்ந்த பிரச்சனையல்ல. இதன் விதை இம்மானுவேல் சேகரனின் குருபூஜை நிகழ்ந்த அன்றே விதைக்கபட்டுவிட்டது. அவர்கள் இதை ஒரு போட்டியாக நினைத்து நிறுத்த முனைகிறார்கள். இது ஒரு உணர்ச்சிகரமான விஷயமாகும். இம்மாதிரி விவகாரங்களை இரண்டு-மூன்று தலைவர்கள் உட்கார்ந்து பேசி சரிசெய்துவிட முடியாது. இது இம்மானுவேல் சேகரனுக்கும்,. முத்துராமலிங்கத் தேவருக்கும் 1950ல் நிகழ்ந்த மோதலின் தொடர்ச்சியாகும். அவர்கள் இருவரும் இன்று இல்லையென்றாலும், பிரச்சனை தொடர்கிறது. இதில் நாம் தலையிட்டு உடனடியான தீர்வைக் காணமுடியும் என எதிர்பார்க்க இயலாது. இதை நிறுத்தக்கூடிய வாய்ப்புள்ள தலைவர்கள் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியிலேயே இருக்கிறார்கள். இதனால் தான் 2011ல் நாங்கள் மதுரை மேயர் சீட்டை (பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனர் மற்றும் தேவர் சமுதாய தலைவர்) மூக்கையா தேவரின் மகன் கணேசனுக்கு கொடுத்தோம். கட்சியில் அவர் பெயர் திருமா பசும்பொன் என்பதாகும். இதில் திருமா என்பது கட்சித்தலைவர் திருமாவளவனின் பெயரில் ஒரு பகுதி. மற்றும் பசும்பொன் என்பது முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த ஊர். அவர் இன்று கட்சியில் இல்லை. அது வேறு விஷயம். ஆனால் அவர் எங்கள் பக்கத்தில் அன்று இருந்ததால் பரமக்குடிக்கு வெளியே இருந்த முக்குலத்தோர் விடுதலைச் சிறுத்தைகளிடமிருந்து ஜாதிவன்முறை துவங்காது எனவும், விடுதலைச் சிறுத்தைகளால் அவர்களுக்குப் பிரச்சனை வராது எனவும் நம்பினார்கள். அவர் கட்சியை விட்டுப் போனபின்னும் பலரும் அதற்குள் மனம் மாறியிருந்தார்கள். எனக்குத் தெரிந்து ஒரு கிராமத்தில் பிள்ளை சமுதாயத்தை சேர்ந்த 500 பேர் ஒட்டுமொத்தமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்தார்கள். இது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர்சேர்ப்பு முகாமில் நிகழ்ந்த சம்பவமாகும்.

கட்சித்தலைவர் தொல்.திருமாவளவனின் அறிவுரைப்படி நாங்கள் 2009லும், 2011லும் உறுப்பினர் சேர்க்கை முகாம்களைத் தமிழகத்திலும், புதுவையிலும் நடத்தி நடத்தி 45 லட்சம் உறுப்பினர்களை இரண்டு ஆண்டுகளில் சேர்த்தோம். இத்தகைய சிறப்புள்ள இந்த முகாமின் ஒருங்கிணைப்பாளராக நான் இருந்து வருகிறேன். இது தொடர்ந்து நல்லபடி நடந்து இயக்கத்தின் நோக்கத்தை வலுப்படுத்தி வருகிறது. இந்த முகாமில் பல முக்குலத்தோர்களும், நாயுடுக்களும், பிள்ளைமார்களும், கவுண்டர்களும் கட்சியில் சேர்ந்தார்கள். இது இந்த உறுப்பினர் சேர்ப்பு முகாம் மற்றும் தலித்துகள் அல்லாதவருக்குக் கட்சியில் தலைமைப்பொறுப்பு அளித்ததாலும் நிகழ்ந்ததாகும். ஆக வி.சி கட்சியில் உள்ள தலித் அல்லாதவர்கள் ஜாதி கலவரத்தையும், மோதலையும் கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறார்கள்.





---..(திரு. சன்னா அவர்களின் நேர்காணல் தொடரும்...)..---
 
 
 

___________________________________________________________
 

 செல்வன்
 holyape@gmail.com
___________________________________________________________
 

Sunday, February 28, 2016

கவுதம் சன்னாவுடன் ஓர் நேர்காணல் - 10

-செல்வன்.


சன்னா: வேளச்சேரி பிரகடனம் தான். அந்தப் பிரகடனத்தை சிறுத்தைகள் 2007 செப்டெம்பரில் கொண்டுவந்தார்கள். இந்தப் பிரகடனத்திற்கு பின் கட்சியில் உள்ள அனைத்துப் பதவிகளும் கலைக்கப்பட்டன. புதியதாக இப்பதவிகளுக்கு விண்ணப்பம் செய்ய அனைத்துப் பகுதி மக்களும் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். இதன்பின் 2008 மார்ச் 21 முதல் தலித்துகள், முஸ்லிம்கள், தலித் அல்லாதவர்கள் உட்பட புதிய நிர்வாகிகள் பதவியேற்றார்கள். தலித் அல்லாதவர்கள் கட்சியில் சேர்க்கப்படுவதற்கான ஒரு காரணம் தமிழ்த் தேசியமாகும். கட்சியை ஜனநாயகமயமாக்கவும் இது உதவியது

பேரா யூகோ: இது வரவேற்கத்தகுந்த மாற்றமாகும். ஆனால் கட்சி தொண்டர்கள் சொல்வது என்னவெனில் "20 வருடங்களாகக் கட்சிக்கு உழைத்தோம். கட்சிக்காக அடிபட்டோம். சிறைச்சாலைக்குச் சென்றோம். இப்போது கட்சியாக மாறியவுடன் தலித் அல்லாதவர்கள் பதவிக்காக கட்சியில் சேருகிறார்கள்" என்கிறார்கள். கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் தலித் அல்லாதவர்களை ஏற்றுக்கொண்டார்களா?

சன்னா: தலித் அல்லாதவர்கள் தலித்துகளை ஏற்றுகொள்ளாமல் இருப்பது போல தலித்துகள் மத்தியிலும் தலித் அல்லாதவர்கள் மேல் அதே போன்ற தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. அத்தகைய தயக்கம் இல்லாமல் இருக்காது. அது இல்லையெனச் சொல்லி நாம் உண்மையை மூடி மறைக்கவும் முடியாது. நான் இதை ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு கட்சி என்பது ஒரு சமூகத்தின் கருத்துக்களின் வெளிப்பாடே ஆகும். உங்கள் கட்சிவேலை முடிந்தபின் நீங்கள் வீட்டுக்குத் தான் செல்லவேண்டும். வீட்டுக்குப் போனாலும் கட்சிவேலையை செய்வதை நிறுத்த முடியாது. கட்சியும் சமூகமும் ஒன்றே. ஆக சமுதாயத்தில் என்ன பிரச்சனைகளை சந்திக்கிறோமோ அதைக் கட்சியிலும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதை வேறுபடுத்திப் பார்க்க முடியாது. தலித் ஒருவரின் வீட்டருகே உள்ள இன்னொருவர் தலித்தை புறக்கணித்து, தலித்தின் வீட்டை எரித்து, சாதிமோதலை உருவாக்குவது போன்ற சம்பவங்களில் ஈடுபடுகையில் தலித்துகளுக்கு தலித் அல்லாதவர்கள் மேல் சந்தேகம் வரத்தான் செய்யும். சமுதாயம் மாறினால் தான் இத்தகைய தயக்கமும், சந்தேகமும் கட்சிக்குள்ளும் நீங்கும். சமுதாய இயக்கங்கள் இத்தகைய கோணத்தில் சிந்தனைகளைக் கொண்டிருக்கையில் சாதிய வழி கண்ணோட்டங்களும் நீடிக்கவே செய்யும். ஆக தலைமை பதவியில் இருப்பவர்கள் இதை உணர்ந்து சமுதாய மனமாற்றத்துக்கான வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும்.

ஒரு இயக்கமாக நாம் அந்த நோக்கத்தை முன்னிறுத்தி பயிற்சிகளைக் கொடுக்க வேண்டும். அதை நாங்கள் செய்து வருகிறோம். அத்துடன் நில்லாது அதை மேலும் துரிதப்படுத்தவும் இருக்கிறோம். அப்படிச் செய்கையில் "நான் கட்சியில் 20 ஆண்டுகளாக இருக்கிறேன். நான் ஏன் அங்கீகரிக்கப்படவில்லை" என்பது போன்ற கேள்விகளை எதிர்கொள்ள நேரும். அந்தக் கேள்வி ஏன் தவறானது எனில் தலித் அல்லாதவர்கள் தலித்துகளின் தலைமையை ஏற்றுக் கட்சியில் இணைகையில் அது தலித்துகளுக்கு கிடைக்கும் ஒரு அரசியல் அங்கீகாரமே ஆகும். இந்தக் கோணத்தை நாம் பரவலாக புரியவைக்க வேண்டும். ஆனால் அதற்குக் காலம் பிடிக்கும் என்பதை உணர்ந்தே இருக்கிறோம்.

பேரா யூகோ: தலித் அல்லாதவர்கள் கட்சியில் சேர்கையில் தனிநபர்களாக சேர்கிறார்களா அல்லது அவர்களது இனக்குழுவின் சார்பில் இணைகிறார்களா?

சன்னா: தற்போதைய நிலையில் அவர்கள் தனிநபர்களாக தான் இணைகிறார்கள்.

பேரா யூகோ: அப்படியானால் இது தேர்தல் ரீதியாகக் கட்சிக்கு பெரிய அளவிலான வலுவை அளிக்காது. ஆனால் தேர்தல் அரசியலைக் கூட ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் தலித் அல்லாதவர்கள் கட்சியில் இணைவதால் சமூகரீதியான பயன்பாடுகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா?

சன்னா: நாங்கள் அரசியலில் இறங்கி ஜனநாயக பாதைக்கு திரும்பிய பின்னரே இத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தேர்தல் புறக்கணிப்பை நாங்கள் தொடர்ந்திருந்தால், இத்தகைய வாய்ப்புக்கள் மிகக் குறைந்திருக்கும். ஏனெனில் தலித் அல்லாதவர்கள் எங்கள் கட்சியில் இணைந்தாலும் அவர்கள் புரட்சிகர மனப்பான்மையுடன் எங்கள் கட்சியில் இணைகிறார்கள் எனக் கூற இயலாது. அவர்கள் ஒரு ஜனநாயக சக்தி என வேண்டுமானால் கூறலாம். புரட்சிகர நோக்கம் கொண்ட இடைநிலை சாதிகள் நாங்கள் தேர்தல் புறக்கணிப்பைத் தொடர்ந்தபோதும் எங்களுடன் இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள். பதவிகளை எதிர்பார்த்து அவர்கள் எங்களுடன் இணையவில்லை. இப்போதும் அவர்களுக்கு அந்த நோக்கம் இல்லை. அவர்கள் கட்சிக்குள்ளும், அடிமட்ட அளவிலும் அமைதியாக அதிகம் வெளித்தெரியாமல் இயங்கி வருகிறார்கள். அவர்களைக் கட்சியின் தூண்கள் எனலாம். ஆனால் புதிதாக கட்சியில் சேரும் தலித் அல்லாதவர்களை வெறுமனே ஜனநாயக சக்திகள் என்றே கூற இயலும். கட்சிக்கு அவர்களால் பலனுண்டு. கட்சியால் அவர்களுக்குப் பலனுண்டு. இத்தகைய புரிதலுடனே இந்த உறவு தொடர்கிறது எனினும் காலப்போக்கில் இது மாறும் என எதிர்பார்க்கலாம்.


---..(திரு. சன்னா அவர்களின் நேர்காணல் தொடரும்...)..---
 
 
 

___________________________________________________________
 

 செல்வன்
 holyape@gmail.com
___________________________________________________________
 

Monday, February 1, 2016

கவுதம் சன்னாவுடன் ஓர் நேர்காணல் - 9

-செல்வன். 





பேரா யூகோ: வெற்றிபெற மற்ற சாதியினரின் ஓட்டுக்களும் வேண்டும். அது விடுதலைச் சிறுத்தைகள் அல்லது புதிய தமிழகம் என எக்கட்சியாக இருப்பினும் சரி. நீங்கள் இப்போது தமிழ் தேசியத்தைப் பற்றி அதிகம் பேசி தலித் அல்லாதவர்களைக் கட்சியில் சேர்த்துப் பொறுப்புக்களை வழங்குகிறீர்கள். இது குறித்து கொஞ்சம் கூறமுடியுமா?

சன்னா: நீங்கள் சொன்னதுபோல தமிழகத்தில் மக்கள் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே சிந்திக்கிறார்கள். விடுதலைச் சிறுத்தைகள் என்றால் தலித் கட்சி என மட்டுமே நினைக்கிறார்கள். அம்பேத்கரின் எழுத்தைப் பார்த்தால் அவர் தலித்துகளை "பெரும்பான்மை, ஆனால் சிதறிய பெரும்பான்மை" எனக் குறிப்பிடுகிறார். நாடு முழுக்க பார்த்தால் அவர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். ஆனால் (தொகுதி, ஊர், நகரம்) என்பது போன்ற சிறிய வட்டங்களில் பார்த்தால் அவர்கள் சிறுபான்மையாக இருக்கிறார்கள். ஆகத் தொகுதி என வருகையில் அவர்கள் சிறுபான்மையாகவே இருக்கிறார்கள். இந்திய அளவில் தலித்துகள் மிகப்பெரும் எண்ணிக்கையில் இருந்தாலும் ஒவ்வொரு பகுதியிலும் அவர்கள் சிறிய கட்சிகளாகவே இருக்கமுடியும். இத்தகைய ஒட்டுவங்கியை வைத்துக்கொண்டு தலித் கட்சிகள் ஆட்சியைப் பிடிக்க முடியாது. இது நடக்கவேண்டுமெனில் மேலும் பல வேலைகளை நாம் செய்யவேண்டும். அதே சமயம் தலித்துகள் பெரும்பான்மை சமூகத்தில் அங்கீகாரத்தைப் பெற்றால் அவர்கள் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. உதாரணமாக அம்பேத்கர் துவக்கிய "சுதந்திர தொழிலாளர் கட்சியில்" தலித்துகளும், தலித் அல்லாதவர்களும் இருந்தார்கள். அதன்பின் அவர் அதை "எஸ்.சி தொழிலாளர் அமைப்பாக" மாற்றுகிறார். எஸ்.சி அரசியல் செய்யவேண்டும் என்ற நிலை வந்தவுடன் அவர் தலித்துகளை ஒரு அரசியல் சக்தியாக மாற்றியபின்னரே மற்றவர்களுடன் அவர்களை இணைந்து பணியாற்றவைக்க முடியும் என நம்பினார். இதன்பின் இந்திய குடியரசுக் கட்சிக்கான ஆலோசனையை அவர் முன்வைக்கிறார்.

இந்த வேறுபாடுகளைப் பார்க்கவும்: முதலில் சுதந்திர தொழிலாளர் கட்சி. அதன்பின் எஸ்.சி தொழிலாளர் அமைப்பு, அதன்பின் இந்திய குடியரசுக்கட்சி. ஆக அவர் முதலில் ஒரு பொதுவான அடையாளத்தை அமைக்க முயன்றார். அது வெற்றியடையவில்லை. அதன்பின் சாதி அடையாளத்தை உருவாக்குகிறார். அது ஒரு அளவு வெற்றியும் பெறுகிறது. ஆனால் சாதிய அடையாளத்தை மட்டும் வைத்துக் கொண்டிருந்தால் அதுவே ஒரு தடைக்கல்லாக மாறும் என்பதை உணர்ந்து இந்திய குடியரசுக்கட்சி எனும் ஜனநாயக அமைப்பை உருவாக்குகிறார். இதுபோன்ற சிந்தனைகளை அனைத்து இந்திய கட்சிகளிலும் காணலாம். பலவிதங்களில் அவர்கள் இதேபோன்ற உத்திகளைக் கையாண்டார்கள். தமிழ்நாட்டில் முதலில் ரிபப்ளிக்கன் கட்சி உருவானது, அதன்பின் ஆதிதிராவிடர் கட்சிகள் உருவாகின, அதன்பின் பள்ளர்களுக்கான இயக்கம், பறையர்களுக்கான இயக்கம், அருந்ததியினருக்கான இயக்கம் ஆகியவை உருவாகின. இப்படி உருவானபின் கொஞ்ச காலம் இயக்கங்களாக அவை தொடர்கின்றன. ஆனால் சாதி அடிப்படையும் மட்டுமே அவற்றால் இயங்கமுடியாது என வருகையில் அவை விடுதலைச் சிறுத்தைகள். புதிய தமிழகம், பாட்டாளி மக்கள் கட்சி என்பது போன்ற கட்சிகளாக உருவெடுக்கின்றன. பொதுவான பெயர்களில் கட்சிகளைத் துவக்கி, பொதுமக்களைத் திரட்ட முயலுகையில் பொதுவான ஒரு காரணியை வைத்தே அணுக முடிகிறது. இதுவே நல்ல வாய்ப்பு என்பதால் தமிழ் தேசியம் என்பது மக்களைத் திரட்டும் மிக நல்ல ஒரு அடித்தளமாக அமைகிறது. இதனால் பல தலித் கட்சிகள் தமிழ்த் தேசியத்தை முன்வைக்கின்றன. பொதுவான அடையாளத்தைத் தேடும் முயற்சியின் ஒரு பகுதியே இது எனக் கூறலாம். அதே சமயம் இலங்கையில் தமிழர்கள் ஒடுக்கப்பட்ட போது அனைவரும் அவர்களுக்காகக் குரல் கொடுத்தாலும், ஒடுக்கப்பட்டவர்கள் எனும் அடிப்படையில் தலித்துகள் அவர்களுக்குக் குரல் கொடுத்தபோது அதில் இருந்த உணர்ச்சிகரமான பிணைப்பு மற்ற கட்சிகள் குரல் கொடுத்தபோது இல்லாமல் போனது. இங்கே ஒடுக்குமுறையை அனுபவித்தவர்கள் தலித்துகள், அங்கே ஒடுக்குமுறையை அனுபவித்தவர்கள் தமிழர்களில் 80% எனக் கூறலாம்.புலிகள், புலிகள் அல்லாதவர்கள் என அனைத்துத் தமிழருமே அங்கே ஒடுக்குமுறையை அனுபவித்தார்கள்.

சிங்கள ஒடுக்குமுறைக்கு எதிராக அவர்கள் பொதுவான தமிழ் அடையாளத்தை முன்வைத்தபோது அதேபோன்ற ஒரு பொதுவான அடையாளத்தை தமிழ்த்தேசியம் இங்கேயும் பெற்றுக்கொடுக்கும் என நம்புகிறோம். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் தலித்துகள் தமிழ் தேசியத்தைக் கையில் எடுக்கிறார்கள். தமிழ்த் தேசியம் தலித்துகளுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுக்குமா என்ற கேள்வி இருந்தாலும் அது பொதுவான அடையாளத்தை நோக்கி நகரும் ஒரு முயற்சியே ஆகும். இது ஒப்புக்கொள்ளப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டால் சாதி உணர்வுகள் குறைந்து, சாதிய அரசியலும் குறைந்து உண்மையான ஜனநாயகம் மலரும். இந்த அடிப்படையிலேயே தமிழ் தேசிய அரசியலை நாங்கள் கையில் எடுத்துள்ளோம்.

இதைச் சொல்கையில் தமிழ்த் தேசியம் பேசும் பிற அமைப்புகளைச் சந்தேகத்துடன் பார்த்து அவை எந்த அளவு இதில் ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கவேண்டி உள்ளது. அவ்வமைப்புகள் அரசியலில் இறங்கியபின்னரும் தமிழ் தேசியம் பேசுகிறார்கள். அரசியலில் இறங்கியபின்னர் தமிழ்த் தேசியம் பேசும் அவசியம் இல்லை எனும் நிலையிலும் அவர்கள் இதைப் பேசுவது நம்பிக்கையை அளிக்கிறது. தமிழ்த் தேசியம் விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒரு அங்கீகாரத்தையும் மக்களின் ஏற்பையும் பொதுவான அரசியல் தளத்தில் பெற்றுத் தந்திருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இது அங்கீகாரமும் பெற்றுள்ளது.

1998ல் இருந்து 2008ம் ஆண்டுவரை அவர்கள் தமிழ்த்தேசியத்துடன் ஒடுக்கப்பட்டவருக்கான தலைமையைக் குறித்தும் பேசினார்கள். தொழிலாளர் இயக்கங்கள் எப்படிப் பிற தொழிலாளரைத் தலைமை தாங்க அழைத்தார்களோ அதே போல ஒடுக்கப்பட்டவரே ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தலைவராக இருந்து தமிழ் தேசியத்தை வழிநடத்த முடியும். அந்தக் காலகட்டத்தில் சில இடைநிலை சாதிகளும் இவ்வாதத்தை ஏற்றுக்கொண்டார்கள். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் தலித் தலைமையை பற்றிப் பேசினாலும் கட்சியில் தலித் அல்லாதவர்கள் இல்லை. இதைப்பற்றிப் பேசினாலும், பேசாவிட்டாலும் கட்சியில் தலித்துகளே தலைமை பொறுப்பில் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் கட்சியை ஜனநாயகப்படுத்தி, தமிழ்த் தேசியத்தில் நம்பிக்கை உள்ள தலித் அல்லாதவர்களைக் கட்சிக்கு கொண்டுவந்தாலே தலித்களின் தலைமை என்பது சாத்தியப்படும். இந்த அடிப்படையில் தான் அவர்கள் 2008ம் ஆண்டு ஒரு கொள்கையை முன்வைக்கிறார்கள்

பேரா யூகோ: வேளச்சேரி (விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைமையகம்) பிரகடனமா?

---..(திரு. சன்னா அவர்களின் நேர்காணல் தொடரும்...)..---
 
 
 

___________________________________________________________

 செல்வன்
 holyape@gmail.com
___________________________________________________________
 

Wednesday, January 13, 2016

கவுதம் சன்னாவுடன் ஓர் நேர்காணல் - 8


-செல்வன். 

பேரா யூகோ: அவர்களது ஓட்டு விடுதலை சிறுத்தைகளுக்கு விழுகிறதா? கடந்த தேர்தலை எடுத்துக்கொள்வோம். 2011ல் விடுதலை சிறுத்தைகள், திமுக, புதிய தமிழகம் எல்லாமே ஓரணியில் இருந்தன. வட மாவட்டங்களில் வன்னியர்கள் ஒன்று திமுகவில் இருக்கிறார்கள் அல்லது பாமகவில் இருக்கிறார்கள், தலித்துகள் விடுதலை சிறுத்தைகளில் இருக்கிறார்கள். மூன்று கட்சிகளை சேர்ந்தவர்களும் இதன் அடிப்படையில் வாக்களித்திருந்தால் நீங்கள் குறைந்தது 2 அல்லது 3 தொகுதியிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டுமல்லவா?

சன்னா: ஆம்

பேரா யூகோ: ஆனால் நீங்கள் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்கவில்லை

சன்னா: ஓட்டு வங்கிகளை பற்றி பேசினால், குறிப்பாக 2011 என எடுத்துக்கொண்டால் பலரும் நினைப்பது என்னவெனில் பாமக ஒட்டுமொத்தமாக வன்னியர் கட்சி என நினைக்கிறார்கள். ஆனால் வன்னியர்கள் அந்த அளவுக்கு ஒற்றுமையாக இருந்து பாமகவை ஆதரிக்கவில்லை. இது முக்கியம். வன்னியரில் இருவகை உண்டு. ஒன்று தமிழ் பேசும் வன்னியர். இன்னொன்று தெலுங்கு பேசும் வன்னியர். தமிழ் வன்னியர்க்ள் ராமதாசுடன் இருக்கிறார்கள். தெலுங்கு பேசும் வன்னியர்கள் தனியான அரசியல் சக்தியாக இருக்கிறார்கள். தெலுங்கு பேசும் அக்கினி குல வன்னியர்கள்- நாயுடுகள், ரெட்டியார்கள் இதர தெலுங்கு பேசும் சாதிகளுடன் இணைகிறார்களே ஒழிய ராமதாசின் தலைமையை ஏற்கவில்லை. இது ஒன்று. அடுத்து திமுகவில் உள்ள தெலுங்கு பேசும் வன்னியர்க்ளை எடுத்துக்கொண்டால், அதிகாரம் தெலுங்கு பேசும் வசதியான வன்னியர் வேட்பாளர்களிடையே உள்ளது. அதனால் தான் அவர்கள் அக்கட்சியில் இருக்கிறார்கள். 2011ல் தேமுதிக திமுகவின் தெலுங்கு வன்னியர் ஓட்டை பிரித்தது. அத்துடன் பாமகவின் வன்னியர் ஓட்டும் குன்றியது. இந்த சூழலில் தெலுங்கு பேச்ம் வன்னியர் விடுதலை சிறுத்தைகளுடன் சேரவேண்டும் என்ற அவசியம் இல்லையே? மேலும் பாமகவில் உள்ள தமிழ் பேசும் வன்னியரும் விடுதலை சிறுத்தைகளை முழுமையாக ஆதரிக்கும் வாய்ப்பு குறைவே. நேற்றுவரை அவர்களை எதிர்த்த ஒருவர் இன்று அவர்களுக்கு எதிராக நிற்கையில், அவரை அவர்களுக்கு சமமாக பார்க்கமுடியாமல் அவர்கள் தம் ஆதரவை அளிப்பதில்லை.

தலித்துகளை எடுத்துக்கொண்டால் ஓட்டுபோடுவது தம் கடமை என கருதுகிரார்களே ஒழிய தம் இனத்தை சேர்ந்த இன்னொரு தலித்துக்கு ஓட்டுபோடுவதே நேர்மை என அவர்கள் கருதுவதில்லை. அதனால் அவர்களது ஓட்டு பல கட்சியினரிடையே பிரிகிறது. தலித் ஓட்டு தலித் அல்லாதாருக்கு விழுகிறது. ஆனால் தலித் அல்லாதார் ஓட்டு தலித்துகளுக்கு விழுவதில்லை. இந்த பிண்ணனியிலேயே விடுதலை சிறுத்தைக்ள் பத்து தொகுதிகளில் அடைந்த தோல்வியை புரிந்து கொள்ள வேண்டும். வன்னியர் ஓட்டும், இடைநிலை சாதி ஓட்டும் விடுதலை சிறுத்தைகளுக்கு விழவில்லை. என்ன நடந்திருக்கவேன்டுமெனில் அக்கட்சி தலைவர்கள் தம் தொண்டர்களுக்கு சரியான பயிற்சி கொடுத்திருக்கவேண்டும் என்பதே. அப்படி நடந்திருந்தால் திமுக கூட்டணியின் தோல்வி தவிர்க்கபட்டிருக்கலாம்
பேரா யூகோ: நான் இதிலுள்ள உண்மையை ஒப்புகொள்கிறேன். ஆனால் அதே போன்ற பயிற்சியை விடுதலை சிறுத்தைகளும் கொடுக்கவேண்டும் என கருதுகிறேன். ஏனெனில்..

சன்னா: உண்மை. அம்மாதிரி பயிற்சிகள் தேவைபடுகின்றன

யூகோ: உதாரணத்துக்கு சோழவந்தான் தொகுதியில், கள அளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் அதிமுகவுக்காக பணியாற்றினார்கள். காரணம் கேட்டதற்கு அத்தொகுதியின் பாமக வேட்பாளர் பள்ளர் என்றும் அதிமுக வேட்பாளர் பறையர் என்பதால் தம் தொகுதியில் பறையருக்கு வாய்ப்பளிக்கவேண்டும் எனக் கருதுவதாகவும் கூறினார்கள். பலர் தம் கூட்டணி வேட்பாளரை ஆதரித்தாலும் மற்றவர்கள் எதிர்கட்சியான அதிமுகவையே ஆதரித்தார்கள்

சன்னா: நீங்கள் சொன்னதுபோல விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களுக்கும் அப்பயிற்சி அவசியமாகிறது. சாதிய உணர்வு தலைதூக்குகையில் அனைத்து இடங்களிலும் இம்மாதிரி பிரச்சனைகள் எழுகின்றன. உள்ளூர் அரசியலையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். உள்ளூர் அரசியல் பிரச்சனைகள் இருக்கையில் கட்சி தொண்டர்கள் எதிரணி வேட்பாளருக்கு சாதகமாக வேலைபார்க்கும் வாய்ப்புகள் அதிகம். நாம் இம்மாதிரி பயிற்சியை வருங்காலத்தில் கொடுக்கவேண்டும் என்பதையும், நம்மிடம் அப்பகுதியில் குறைகள் உள்ளன என்பதையும் மறக்க கூடாது. விடுதலை சிறுத்தைகளில் ஜாதி இல்லை என நாம் கூற முடியாது. அம்மாதிரி எதிர்பார்க்கவும் முடியாது என்பதால் விடுதலை சிறுத்தைகளிடமும் இவ்விஷயத்தில் மாற்றம் வரவேண்டும்

பேரா யூகோ: சரி..உங்கள் கட்சி இப்போது ஒரு அரசியல் கட்சியாகிவிட்டது. தலித் ஓட்டுக்களை மட்டுமே வைத்து எந்த தலித் கட்சியும் தேர்தலில் வெற்றி பெற முடியாது அல்லவா?

சன்னா: நிச்சயமாக முடியாது என உறுதியாக கூறலாம்






---..(திரு. சன்னா அவர்களின் நேர்காணல் தொடரும்...)..---


 
   
செல்வன்

 
holyape@gmail.com





 

 

கவுதம் சன்னாவுடன் ஓர் நேர்காணல் - 7


-செல்வன். 
பேரா: ஹ்யூகோ: ஆனால் விழிப்புணர்வை ஏற்படுத்த அவை உதவின அல்லவா?

சன்னா: ஆமாம், ராஜதந்திர ரீதியில் மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஊட்ட அவை உதவின. இதற்கு அடுத்தகட்டம் தலித்துகளை அரசியல் ரீதியாக அதிகாரத்தை அடையவிடாமல் தடுப்பவர்கள் யாரோ அவர்களிடமிருந்து அதிகாரத்தை கைப்பற்றுவதே ஆகும். அரசியல் வளர்ச்சியின் இயல்பான பரிணாமமே இது. தேர்தலை புறக்கணித்து வந்த தலித் கட்சிகள் அதிகாரத்தை தாமே கையில் எடுப்பது அல்லது அதிகாரம் உள்ளவர்களிடமிருந்து அதிகாரத்தை பறிப்பது எனும் தேர்வுகளில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு ஆளாகின. விடுதலை சிறுத்தைகள் அமைப்பில் இணைந்தவர்களின் அரசியல் வலு குறைவதை இது தடுக்கும் என்ற நோக்கில் அவை தேர்தலில் பங்கெடுக்க முன்வந்தன. இப்படி முடிவெடுத்ததும் அரசியல் கூட்டணிகள், தேர்தல் வேலைகள் போன்றவற்றை செய்யும் அவசியம் உருவானது. அனால் நான் முன்பே சொன்னதுபோன்ற 30 வருட காலசுழற்சியை அவை மிக சிறப்பாக பயன்படுத்தி மக்களைத்திரட்டி போரிட தயார் செய்தன

பேரா ஹ்யூகோ: சரி 1999 வரை நீங்கள் "தேர்தல் பாதை திருடர் பாதை" எனவும் "அரசியல் ஒரு சாக்கடை" என்றும் கூறீவந்தீர்கள். இப்போது சாக்கடையில் புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இறங்கிவிட்டன. இதன்பின் தலித் அரசியலை எப்படி முன்னெடுக்கிறீர்கள்?

சன்னா: தேர்தலில் இறங்கியபின் தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாருடன் கைகோர்த்து மூன்றாவது அணியை அமைத்தோம். இதன் நோக்கம் திமுக, அதிமுக அல்லாத புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை உள்ளிட்ட இடைநிலை சாதிகளின் அமைப்பை உருவாக்குவதே. ஆனால் மூப்பனார் இதற்கு இணங்காமல் 1999க்கு பிறகு அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார். அதன்பின் 2001, 2011, 2006 என அனைத்து தேர்தல்களிலும் திராவிட கட்சிகள் இல்லாத மாற்று அமைப்பை உருவாக்குவதே விடுதலை சிறுத்தைகளின் நோக்கமாக இருந்தது. இதை நிறைவேற்ற இக்கட்சி கடுமையாக முயன்றாலும் வெற்றி கிட்டவில்லை. இது அரசியல் நிலையில் மாற்றம் வருவதற்கான சிறந்த வாய்ப்பாகும். விடுதலை சிறுத்தைகளுக்கு மாற்றம் வேண்டும் எனும் ஆர்வம் இருந்தாலும் மற்ற கட்சிகளின் மனதில் அப்படிப்பட்ட விருப்பம் இல்லை. உதாரணமாக மருத்துவர் ராமதாஸை எடுத்துக்கொள்வோம். ராமதாஸ் எளியவர்களை ஒருங்கிணைக்க முயன்றார். மீனவர்கள், முஸ்லிம்கள் முதலானோரை இடைநிலை சாதியினருடன் ஒருங்கிணைக்க முயன்றார். அவர் எங்களுடன் சேர்ந்து தமிழ் பாதுகாப்பு அமைப்பை துவக்கி ஈழம் முதலான போராட்டங்களில் பங்கெடுத்தாலும் இதுவரை மூன்றாம் அணியாக எங்களுடன் இணைந்து தேர்தலை சந்திக்க அவர் முன்வரவில்லை. 2009ல் மூன்றாவது அணியை அமைக்க முயன்றோம். எங்கள் தலைவர் தொல். திருமாவளவன் மாற்று அணியை அமைக்க மிகுந்த முன்னேற்பாட்டுடன் முயற்சிகளை எடுத்தார். அதே சமயம் 2007ல் ஒரு தலித் சித்தாந்தம் உருவானது. இதன்படி தமிழகத்தில் தலித்துகள், கிறிஸ்துவர்கள், மீனவர்கள், முஸ்லிம்கள், ஆதிவாசிகள் மற்றும் பிற சிறுபான்மை சமூகத்தினர் ஆகியோர் பாமகவுடன் இணைந்தால் அது தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பினோம். அரசியல்ரீதியாக இத்தகைய அமைப்பு திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு சமமான மாற்று அமைப்பாக இருக்கும். 1996 தேர்தலில் இது ஒரு புரட்சிகர மாற்று சித்தாந்தமாக முன்வைக்கபட்டது. 1996 தேர்தலில் இதை ஓரளவு நிறைவேற்ற முயன்றார்கள். தலித்துகள் இதை செய்ததும் உடனே தலித் அல்லாத சாதிகளும் அரசியல் கட்சிகளை உருவாக்கினார்கள். உருவாக்கி திமுகவுடன் கூட்டணி சேர்ந்தார்கள். கூட்டணி சேர்ந்ததும் பெரும்தோல்வியை அடைந்தார்கள். இந்த அனுபவத்திற்கு பின் சாதிகட்சிகளுடன் கூட்டணி அமைக்க 1996க்கு பிறகு திமுக முன்வரவில்லை. ஆக அச்சமயத்தில் மாற்று அமைப்பை உருவாக்க இச்சாதிகட்சிகள் முயன்றாலும் திமுக அதை தன் அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்திக்கொண்டது.

இது நிகழ்ந்தபின் சிறுகட்சிகளின் மேலான மக்களின் நம்பகதன்மை குறைந்து மூன்றாவது அணிக்கான வாய்ப்பு மங்கியது. இச்சயமத்தில் தான் புதிய தமிழகம் அரசியலில் நுழைந்தது, விடுதலை சிறுத்தைகள் அமைப்பும் தன் அரசியல் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்தது.அதன்பின் 1999, 2001 தேர்தல்களில் ஜாதிகட்சிகளுடன் சேரமாட்டோம் என அறிவித்த திமுக ஜாதிகட்சிகள் என தங்களை வெளிப்படையாக அறிவிக்காத கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தது. இதனால் விடுதலை சிறுத்தைகளுக்கு அதில் சேர வாய்ப்பு கிடைக்காமல் அதிமுகவுடன் சேரும் நிலை உருவானது. ஆனால் மாற்று அணி என அந்த சமயம் உருவான திட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய செயல்திட்டமாகவே இருந்து வருகிறது. அன்றிலிருந்து 2011 வரை அத்தகைய அணியை உருவாக்கவே முனைந்து செயல்பட்டு வருகிறோம். ஆனால் அந்த முயற்சிகள் எல்லாமே தோல்வியையே சந்தித்துள்ளன.ஆக இதன் அடிப்படை உண்மை என்னவெனில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அரசியலில் நுழைந்தாலும் தன் கொள்கையில் உறுதியாகவே இருந்து வருகிறது. ஆனால் அதை நிறைவேற்றுவதில் அவர்கள் வெற்றி பெறவில்லை

பேரா ஹ்யூகோ: சரி, இப்போது திராவிட கட்சிகளுடன் இணைந்து செயல்படவேண்டியது அவசியம் ஆகிவிட்டது. அவர்கள் தங்கள் கூட்டணியில் உங்களுக்கான அங்கீகாரத்தை வழங்குகிறார்களா? தேர்தல் சமயம் களத்தில் இறங்கி உங்களுக்காக அடிமட்ட அளவில் பணியாற்றுகிறார்களா? உங்களுக்கு ஓட்டு போடுகிறார்களா? உங்கள் தலைவருக்கு மேடையில் மரியாதை கொடுக்கிறார்களா? கூட்டணியில் உங்கள் நிலை என்ன?

சன்னா: இரு கட்சிகளையும் பார்த்தால் அதிமுக இப்போது ஒரு தேவர் கட்சியாக- அதாவது முக்குலத்தோர் கட்சியாக மாறிவிட்டது. ஜெயலலிதா என்று சசிகலாவுடன் சேர்ந்தாரோ அன்றே அது முக்குலத்தோர் கட்சியாக மாறிவிட்டது. வடக்கே வன்னியர் ஓட்டுக்கள் பாமக, திமுக என இரண்டாக பிரிந்துள்ளன. அதிமுகவை பொறுத்தவரை அவர்களின் வன்னியர் வாக்குவங்கி மிக சிறியதே. அதிமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி சேர்ந்தால் வடக்கே விடுதலை சிறுத்தைகளே அதிமுகவை தாண்டி ஆதிக்கம் செலுத்தும். ஆனால் பல அடித்தட்டுமக்கள் அதிமுகவில் இருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிடவேண்டும். இதனால் அதிமுகவில் விடுதலை சிறுத்தைகளுக்கு நல்ல மரியாதை கிடைத்தது. திமுகவை பொறுத்தவரை மேடையில் எங்கள் தலைவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் அடிமட்ட அளவில் கிடைப்பதில்லை. திமுக மேடைகளில் எங்கள் தலைவர்கள் கருணாநிதிக்கு சமமாக மேடையில் அமராலம். அவர்கள் கட்சிதலைவர்கள் எங்கள் கட்சி மேடைகளுக்கு வருவார்கள். ஆனால் மேடையில் கிடைக்கும் மரியாதை அடிமட்ட அளவில் கிடைப்பதில்லை. அதிமுகவை பொறூத்தவரை அவர்கள் தென்மாவட்டங்களில் முக்குலத்தோர் கட்சியாக இருப்பதால் அங்கே அவர்கள் எங்களை மதிப்பதில்லை. இந்த சமூகத்தில் நாங்கள் எந்த மேடைகளில் எங்களை ஏற்றுகொள்கிறார்கள் என்பதை மட்டுமே பார்க்கும் சூழலே நிலவுகிறது.

அரசியல் சாக்கடையில் இறங்கியபின்னர் திமுக மற்றும் அதிமுகவுக்கு இடையேயான வித்தியாசம் இதுவே என ஆகிவிட்டது. இம்மாதிரி பார்த்தால் அவர்கள் எங்களுக்கு கொடுத்த பங்கு மிக சிறிது என்பதுடன் எக்கட்சியிலும் எங்களுக்கு முழுமையான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவர்கள் எங்களை "தலித் கட்சி" என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கிறார்கள். இக்க்கண்ணோட்டம் மாற சிறிது காலம் ஆகலாம்.



---..(திரு. சன்னா அவர்களின் நேர்காணல் தொடரும்...)..---






   
செல்வன்

 
holyape@gmail.com