Showing posts with label கவிஞர் நிலவை.பார்த்திபன். Show all posts
Showing posts with label கவிஞர் நிலவை.பார்த்திபன். Show all posts

Thursday, May 5, 2022

யாருடைய குற்றம்?



  —  கவிஞர் நிலவை.பார்த்திபன்




பள்ளிக்கூட வகுப்பறையில்
சல்லித்தனம் நடக்குது!
சொல்லித்தரும் வாத்தியார
சுள்ளானெல்லாம் அடக்குது!

வீணைன்னு நெனச்சதெல்லாம்
விசிலடிச்சுத் திரியிது!
தூணுன்னு நெனச்சதெல்லாம்
துருப்பிடிச்சு உரியுது!

முத்தலாக விளையும் பயிர்
முளையிலயே தெரியுது!
பெத்தவங்க அடிவயிறு
பெட்ரோலா எரியுது!

குத்து விளக்கெல்லாம்
கூட்டம் சேர்ந்து குடிக்குது!
கத்துத் தரும் வாத்தியார
சுத்தி கும்மி அடிக்குது!

முடி வெட்ட சொன்னதுக்கே
முறுக்கிக்கிட்டு மொறைக்குது!
அடிபட்ட நாயப்போல
ஆத்திரத்தில் குறைக்குது!

தேர்வெழுத போகும் கையில்
பீர் பாட்டில் நுரைக்குது!
போற பாத தெரியாம
போத கண்ண மறைக்குது!

வால் இல்லா வானரங்க
வகுப்பறைய கெடுக்குது!
மேல்நிலைப் பள்ளி மேசைகள
மேல ஏறி ஒடைக்குது!

பாடம் வகுப்பில் நடக்கும்போதே
பாட்டுப்பாடி ஆடுது!
தோரணையா படுத்துத் தூங்க
தோழி மடியத் தேடுது!

படிக்கச் சொன்ன வாத்தியார
அடிக்க கைய ஓங்குது!
மாணவ சமுதாயத்தோட
மானத்தையே வாங்குது!

சமுத்திரமா நினைச்சதிப்போ
சாக்கடையா தேங்குது!
சமுதாய நலன்களுக்கு
மிகப்பெரிய தீங்கிது!

வருங்காலத் தூண்களெல்லாம்
வளஞ்சு போயி கெடக்குது!
பெரம்பெடுத்து திருத்தலாம்னா
சட்டம் வந்து தடுக்குது!