Wednesday, April 15, 2015

நடுவட்ட சீனர்கள்

நடுவட்ட சீனர்கள்

- செல்வன்

19ம் நூற்றாண்டில் மலேயாவிலும் ப்ரிட்டிஷ் ஆட்சி இருந்தது. இந்திய கைதிகளை அந்தமானுக்கும், பர்மாவுக்கும் நாடுகடத்தியது போல மலேயாவில் போராடிய சீனர்கள் சிலரை இந்தியாவுக்கு நாடுகடத்தினார்கள் ப்ரிட்டிஷார். அவர்களை நீலகிரியில் சிறையில் அடைத்தார்கள்.

1868ம் ஆண்டு நீலகிரி ஜெயிலில் இருந்த சீனர்கள் சிலர் ஜெயிலை உடைத்துவிட்டு தப்பி ஓடினார்கள். போலிஸ் சிலரை துரத்திப்பிடிக்க, சிலர் கடைசிவர அகப்படவே இல்லை. அதன்பின் ப்ரிட்டிஷ் அரசிடம் மன்னிப்பு கேட்டு சீன கைதிகளை நீலகிரியிலேயே குடியமர்த்தியது ப்ரிட்டிஷ் அரசு. அவர்களுக்கு நீலகிரி தமிழ்பறையர் இனத்தை சேர்ந்த பெண்களை திருமணமும் செய்து வைத்தார்கள் ப்ரிட்டிஷார். இந்த தம்பதியினர் நீலகிரி மாவட்டம் நடுவட்டம் முதல் கூடலூர் வரை இருந்த பகுதிகளில் வசித்தார்கள்.

இவர்களை ஆராய்ச்சி செய்ய சென்ற எட்கார் தர்ஸ்டன் அவர்களை புகைப்படம் எடுக்க வரச்சொல்லி அழைப்பு விடுத்தார். வழக்கமாக தர்ஸ்டன் இந்தியர்களுக்கு புகைப்படம் எடுக்க இரண்டு முதல் எட்டணா வரை கொடுப்பது வழக்கம். ஆனால் சீனர்கள் "எங்களுக்கு காசு வேண்டாம். போட்டொ கொடுங்கள்" என கேட்டுவாங்கிக்கொண்டார்கள்.

அவர்களது குழந்தைகள் தாயின் கருநிறமாக இல்லாமல் தந்தையின் மஞ்சள் நிறத்தில் இருந்ததாக தர்ஸ்டன் குறிப்பிடுகிறார். இடுங்கிய கண்கள், தட்டைமூக்கு என மங்கோலிய சாயல் அக்குழந்தைகளிடம் இருந்ததாம். காலஓட்டத்தில் அக்குழந்தைகள் நீலகிரியின் பறையர் சமூகத்திலேயே கலந்துவிட்டார்கள். அவர்களை பின்னாளில் தேடிக்கண்டுபிடிக்க நடந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை



No comments:

Post a Comment