Thursday, November 19, 2020

நாயக்கர் காலத்து கல்திட்டை மற்றும் நடுகற்கள்

பெருங்கற்கால மரபின் எச்சமாக நாயக்கர் காலத்தில் கல்திட்டை மற்றும் நடுகற்கள் 

மதுரை கள்ளந்திரியில் கல்திட்டை, திருமங்கலம் வடகரை புதுாரில் 400 ஆண்டுகளுக்கு முந்தைய நடுகல்லை மதுரை கோயில் கட்டட கலை, சிற்பத்துறை ஆய்வாளர் தேவி, தொல்லியல் ஆய்வாளர் சசிகலா, வரலாற்று ஆய்வாளர் அறிவுச்செல்வம் கண்டுபிடித்தனர்.

அவர்கள் கூறியதாவது: கள்ளந்திரி கால்வாய் அருகே கிழக்கு பார்த்தபடி 3 பக்கங்களும் 6 குத்து கற்கள் நட்டு மேலே பலகை கல் மூடிய கல்திட்டை உள்ளது. உள்ளே சிறு கல் ஊன்றி மாலை அம்மன் கோயில் என அப்பகுதி மக்கள் வழிபடுகிறார்கள். அருகில் 20க்கும் மேற்பட்ட தனி கற்களில் இறந்தவர் பிறப்பு, இறப்பு தேதி பொறிக்கப்பட்டுள்ளது.பெருங்கற்கால மரபின் எச்சமாகப் பல கல்திட்டைகள் நவீனக் காலத்தில் உருவாக்கியதை இங்கு காணலாம்.

b.jpg
c.jpg
a.jpg

கொங்கு நாட்டிலிருந்து விஜய நகர நாயக்கர் காலத்தில் பாண்டிய மண்டலம் வந்த ஒரு இனத்தினர் இங்கும் இறப்பு சடங்கு பின்பற்றியதை இக் கல்திட்டைகள் உணர்த்துகின்றன. திருமங்கலம் வடகரை புதுாரில் சிறு பலகை கல்லில் இரு ஆண் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. வலதுபுறம் இருப்பவர் இடது கையில் வளரி, வலது கையில் வாள், தலையில் கொண்டை வடிவ தலையணி அணிந்து அரை ஆடையுடன் இயக்க நிலையில் உள்ளார்.

இடதுபுறம் இருப்பவர் உயரம் குறைந்து, நீண்ட காது, அரை ஆடையுடன் வலது கையில் வாள், இடது கையில் குடுவை வைத்துள்ளார். தலைக்குப் பக்கவாட்டில் சந்திரன், சூரியன், பூ அமைப்பு உள்ளது.இவர்கள் 400 ஆண்டுகளுக்கு முன் வடகரை ஊரை உருவாக்கிய சோழ மூக்கன், நல்ல மூக்கன் என்ற சகோதரர்கள். இவர்களது வாரிசுகள் இவர்களுக்கு நடுகல் எடுத்து, இன்றும் விழா எடுப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர் என்றனர்.


தெரிவு: முனைவர். ப. தேவி அறிவு செல்வம்
நன்றி: தினமலர் - நவம்பர்  19, 2020 (https://www.dinamalar.com/news_detail.asp?id=2654963)
---

No comments:

Post a Comment