Tuesday, October 31, 2017

கல்லாபுரம் பாறை ஓவியங்கள்


து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்


வாணவராயர் அறக்கட்டளை வரலாற்று உலா
கோவை-வாணவராயர் அறக்கட்டளை சார்பாக மாதந்தோறும் ஒரு வரலாற்று உலா நிகழ்வு நடைபெற்றுவருகிறது. அவ்வகையில், சென்ற 22-10-2017 ஞாயிறன்று உடுமலைப் பகுதியில் கல்லாபுரம் அருகில் பாறை ஓவியங்களைக் காணச் சென்றிருந்தோம். அண்மையில், பழநியைச் சேர்ந்த நாராயணமூர்த்தி என்னும் ஆய்வாளர் உடுமலைப் பகுதியில் தொன்மையான பாறை ஓவியங்களைக் கண்டறிந்து செய்தி வெளியிட்டிருந்தார். அந்த வரலாற்றுத் தொன்மையை நேரில் பார்த்த பயணம் குறித்த பதிவு இங்கே பகிர்ந்துகொள்ளப்படுகிறது.

பயணம் தொடங்கியது
எங்கள் பயணம் காலையில், கோவையிலிருந்து தொடங்கியது. வெவ்வேறு பணியிலும் தொழிலிலும் இருப்பவர்கள், பணியை நிறைவு செய்தவர்கள், கல்லூரி மாணவர்கள், இல்லத்தரசிகள் எனப் பல்வகை மக்களும் வரலாற்று ஆர்வம் காரணமாகக் கலந்துகொண்டனர். ஏறத்தாழ நாற்பது பேர். கோவையிலிருந்து உடுமலை சென்றதும் அங்கு உடுமலைப்பகுதி ஆய்வாளர் உடுமலை இரவி என்பார் எங்களுடன் இணைந்துகொண்டார். உடுமலையிலிருந்து கல்லாபுரம் செல்லும் சாலையில் பயணம்.

கல்லாபுரம்-வரலாற்றுப் பின்னணி கொண்ட ஊர்
உடுமலைப்பகுதி, பழங் கொங்குநாட்டின் இருபத்து நான்கு நாட்டுப்பிரிவுகளுள் ஒன்றான கரைவழி நாட்டில் அமைந்திருந்தது. உடுமலைக்கு மிக அருகில் இருக்கும் பழநி, கொங்குநாட்டின் வைகாவி நாட்டில் இருந்தது. கரைவழி நாட்டில் கல்லாபுரம் அமைந்திருந்தது. கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொங்குச் சோழன் விக்கிரம சோழனின் கல்வெட்டில் கரைவழி நாட்டுக் கல்லாபுரமான விக்கிரம சோழ நல்லூர் என்னும் குறிப்பு காணப்பெறுகிறது.

சங்கிராம நல்லூர் சோழேசுவரர் கோயில் கல்வெட்டு (A.R. No.145/1909)
1 ஸ்வஸ்திஸ்ரீ த்ரிபுவநச்சக்ரவத்தி கோநேரிந்
2 மை கொண்டாந் கண்டந் காவநாந சிவபத்த
3 னுக்கு  நம் ஓலை குடுத்தபடியாவது கரைவழி
4 நாட்டுக் கல்லாபுரமான விக்ரமசோழ நல்லூ
5 ரில் நாம் இவனுக்கு இட்ட ..... ஒந்றுக்கு நி
6 லமாவது

13-ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்து இன்று வரை கல்லாபுரம் என்னும் இயற்பெயரைக் கொண்டிருந்த இவ்வூர் 13-ஆம் நூற்றாண்டில் விக்கிரமசோழனின் ஆட்சிக்காலத்தில் அவன் பெயரால் விக்கிரமசோழ நல்லூர் என்னும் சிறப்புப் பெயர் கொண்டிருந்தது என்பதைக் கல்வெட்டு வாயிலாக அறிகிறோம்.

மதகடிப்புதூர்
கல்லாபுரம் சாலையில், தமிழக நீர்வள ஆதாரத்துறை, உலக வங்கி நல்கையின் உதவியுடன் மேற்கொண்ட ”நீர்வள நிலவளத் திட்ட”த்தின் கீழ் வடிநிலப்பணியாகப் பழைய வாய்க்காலைச் சீரமைத்த இராம குளம் வாய்க்கால் குறுக்கிட்ட இடத்தில் பேருந்துப் பயணத்தை நிறுத்தினோம். அது மதகடிப்புதூர் என்னும் பெயருடைய பகுதி. பெயருக்கேற்றவாறு, அந்த இடத்தில் வாய்க்காலில் ஒரு மதகு கட்டியிருந்தார்கள். அருகே, வயலில் ஒரு பகுதியில் நெற்பயிரின் நாற்றங்காலில் சிலர் வேலை செய்துகொண்டிருந்தனர். மதகுக்கு அருகில் இரண்டு சிறுமிகளும் ஒரு சிறுவனும் வயல் நீரில் நண்டு பிடிக்கும் விளையாட்டில் களிப்புற்று ஈடுபட்டிருந்தனர். ஆவல் மேலிட அவர்களை அழைத்து நண்டைக் காட்டச் சொல்லி, அவர்கள் காட்ட, அதைப்பார்த்து அச்சிறார்களின் களிப்பில் நானும் பங்கு கொண்டேன். பசுமை வயல்களின் பக்கம் சென்று பல நாளாயின. பள்ளிப் பருவத்தில், புக்கொளியூர் அவினாசியில் சுந்தரர் முதலைவாய்ப் பிள்ளையை மீட்ட தாமரைக்குளத்தில் மீன் பிடித்த நிகழ்வு, நினைவுக் களத்தில் (நினைவுக்குளத்தில் என்றும் சொல்லலாம்) மேலெழுந்ததைத் தடுக்க இயலவில்லை. அங்கிருந்த முதிய உழவர் ஒருவர், இங்குக் காணும் மதகு நடுமதகு என்றும் இன்னும் இரு மதகுகள்  இப்பகுதியில் இருப்பதாகவும் சொன்னார். வாய்க்காலும், மதகுகளும் சேர்ந்து மதகடிப்புதூர் என்னும் பெயருக்குச் சான்று பகர்ந்தன. பகலுணவை இந்த வாய்க்கால் கரையில் அமர்ந்து உண்டுவிட்டு, ஓவியங்கள் இருக்கும் மலைப்பாறை நோக்கிப் பயணமானோம்.
இராம குளம் வாய்க்கால்

நாற்றங்கால்

நண்டு பிடிக்கும் சிறார்கள்

குகைத்தளம் நோக்கி
மதகடிப்புதூர் வாய்க்காலிலிருந்து கிளைத்துச் செல்லும் மண்பாதையில் (இட்டேரிப் பாதை என்றும் கூறுவதுண்டு) சிறிது நேரம் நடந்து சென்றோம். வழியில், ஆங்காங்கே அவரைச் செடிகள் பயிரிட்டிருந்தார்கள். இட்டேரியின் முடிவில், கருவேல மரங்கள் அடர்ந்த ஒரு தொகுப்பு காணப்பட்டது. வனச் சூழ்நிலையை நினைவூட்டியது. அதைக்கடந்ததும் பாதை ஒற்றையடிப்பாதையாக மாற்றம் பெற்றது. அதனூடே சற்று நேரம் நடந்த பின்னர் பாதையின் வடிவம் மறைந்து, காலடியில் பாறைக்கற்களும், பக்கப் பகுதிகளில் கள்ளி போன்ற சிறு மரங்களும் காணப்பட்டன. ஆங்காங்கே, சரிந்த பாறைப்பரப்புகள். கால்கள் இடறி விடாமல் கண்ணும் கருத்துமாக அடியெடுத்து வைக்கவேண்டிய சூழ்நிலை. சில இடங்களில் நம்மைக் குனிந்து கையூன்ற வைக்கும் பாறைச் சரிவுகள்; பாறை இடுக்குகள். அரை மணிக்கூறு இவ்வாறான பயணம். முடிவில் குகைத் தளத்தை அடைந்தோம்.
              
குகைத் தளம் நோக்கி -  பயணக்காட்சிகள்

குகைத்தளமும் ஓவியங்களும்
குகை, ஒரு விரிந்த குடையின் பாதி வடிவத்தில், கடல் பரப்பில் ஒரு நீண்ட அலை தலை உயர்த்திக் கரைநோக்கிக் கவிந்து வரும் தோற்றத்தில் காணப்பட்டது. நீண்ட குகை. மேற்பரப்பில் ஆங்காங்கே சில தேன் கூடுகளும், குருவிக்கூடுகளும். குருவிக்கூட்டினுள் குருவிக்குஞ்சுகளை உண்ணும் நோக்கத்தில் பாம்புகள் வந்துபோனதன் அடையாளமாகப் பாம்புகள் உரித்த சட்டைகள் பறவைக்கூடுகளை ஒட்டித் தொங்கிக்கொண்டிருந்தன. குகையின் கூரைப் பகுதியில் பாறையில் வெள்ளை நிறத்தில் (WHITE OCHRE) வரையப்பட்ட சிறு சிறு ஓவியங்கள் நிறைய இருந்தன.
குகைக் காட்சிகள்

ஓவியம்-1  குழு நடனம்
சிறு வடிவங்களைக் கொண்ட ஓவியங்களுக்கிடையில், அனைத்து ஓவியங்களுக்கும் தலையாகக் காணப்பட்டது ஒரு பேரோவியம். மற்ற சிறு ஓவியங்களில் இல்லாத ஒரு அழகும் நேர்த்தியும் இந்த ஓவியத்தில் இருந்தன. ஓவியத்தில் பதினேழு மனித உருவங்கள். ஒரு விலங்குருவம். நமது பார்வையில், வலப்பக்கம் காணப்படும் மனித உருவங்கள் பதினொன்று. அவற்றில் எட்டு உருவங்கள் பெரியவர்கள்; மூவர் சிறார்கள்; இடப்பக்கம் காணப்படும் மனித உருவங்கள் ஆறு. இவர்கள் அனைவர்க்கும் நடுவில் ஓர் ஆட்டின் உருவம் வரையப்பட்டுள்ளது. ஆணும் பெண்ணுமாகக் கலந்திருக்கும் இவ்வுருவங்கள் கைகோத்து ஆடிக்கொண்டிருக்கின்றன. பயண ஏற்பாட்டாளரான தொல்லியல் ஆய்வாளர் இரா.ஜெகதீசன் அவர்கள், இந்த ஓவியம் ஒரு வழிபாட்டு நிகழ்வைக் குறிக்கிறது என்றார். வழிபாட்டுக்கான சடங்கில் ஆடு பலியிடப்பெறுகிறது. மக்கள் குழுவாக நடனமாடுகிறார்கள். அருமையானதோர் ஓவியம். இரா.ஜெகதீசன் அவர்கள் குறிப்பிடும்போது, "சங்க இலக்கியங்களில் வேலன் வெறியாடல் போன்ற வழிபாடு கூறப்பட்டுள்ளது. வெற்றியின் காரணமாக எல்லாரும் சேர்ந்து ஆடுகின்ற ஆட்டம் இங்கே குகை ஓவியமாகியுள்ளது. கரூரில் கொங்கர்கள் ஆடும் ஆட்டம் பற்றிய குறிப்பு சங்க இலக்கியத்தில் உள்ளது. அது போலவே, இறை வழிபாட்டு மரபில் மனிதரைப் பலியிட்டு வழிபடும் மரபும், பகைவரைப் பலியிட்டு வழிபடும் மரபும் இருந்துள்ளன. பின்னாளில், மனிதரின் இடத்தில் தாம் வளர்க்கும் கால்நடைகளைப் பலியிட்டுள்ளார்கள். இது காட்டுப்பகுதியாக இருந்தபோது, கால்நடை தொடர்பான போர் அல்லது வேட்டை ஆகிய நிகழ்வுகளில் தமக்குத் தேவையானவை கிடைக்கவேண்டும் என்னும் வேண்டுதலுக்காகப் பலி கொடுத்தல் நடைபெற்றிருக்கக்கூடும். அந்த வகையில், இங்கே குழு நடன ஓவியத்தில் ஆடு காட்டப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.


ஓவியம்-1  குழு நடனம்
சிறு வடிவங்களைக் கொண்ட ஓவியங்களுக்கிடையில், அனைத்து ஓவியங்களுக்கும் தலையாகக் காணப்பட்டது ஒரு பேரோவியம். மற்ற சிறு ஓவியங்களில் இல்லாத ஒரு அழகும் நேர்த்தியும் இந்த ஓவியத்தில் இருந்தன. ஓவியத்தில் பதினேழு மனித உருவங்கள். ஒரு விலங்குருவம். நமது பார்வையில், வலப்பக்கம் காணப்படும் மனித உருவங்கள் பதினொன்று. அவற்றில் எட்டு உருவங்கள் பெரியவர்கள்; மூவர் சிறார்கள்; இடப்பக்கம் காணப்படும் மனித உருவங்கள் ஆறு. இவர்கள் அனைவர்க்கும் நடுவில் ஓர் ஆட்டின் உருவம் வரையப்பட்டுள்ளது. ஆணும் பெண்ணுமாகக் கலந்திருக்கும் இவ்வுருவங்கள் கைகோத்து ஆடிக்கொண்டிருக்கின்றன. பயண ஏற்பாட்டாளரான தொல்லியல் ஆய்வாளர் இரா.ஜெகதீசன் அவர்கள், இந்த ஓவியம் ஒரு வழிபாட்டு நிகழ்வைக் குறிக்கிறது என்றார். வழிபாட்டுக்கான சடங்கில் ஆடு பலியிடப்பெறுகிறது. மக்கள் குழுவாக நடனமாடுகிறார்கள். அருமையானதோர் ஓவியம். இரா.ஜெகதீசன் அவர்கள் குறிப்பிடும்போது, "சங்க இலக்கியங்களில் வேலன் வெறியாடல் போன்ற வழிபாடு கூறப்பட்டுள்ளது. வெற்றியின் காரணமாக எல்லாரும் சேர்ந்து ஆடுகின்ற ஆட்டம் இங்கே குகை ஓவியமாகியுள்ளது. கரூரில் கொங்கர்கள் ஆடும் ஆட்டம் பற்றிய குறிப்பு சங்க இலக்கியத்தில் உள்ளது. அது போலவே, இறை வழிபாட்டு மரபில் மனிதரைப் பலியிட்டு வழிபடும் மரபும், பகைவரைப் பலியிட்டு வழிபடும் மரபும் இருந்துள்ளன. பின்னாளில், மனிதரின் இடத்தில் தாம் வளர்க்கும் கால்நடைகளைப் பலியிட்டுள்ளார்கள். இது காட்டுப்பகுதியாக இருந்தபோது, கால்நடை தொடர்பான போர் அல்லது வேட்டை ஆகிய நிகழ்வுகளில் தமக்குத் தேவையானவை கிடைக்கவேண்டும் என்னும் வேண்டுதலுக்காகப் பலி கொடுத்தல் நடைபெற்றிருக்கக்கூடும். அந்த வகையில், இங்கே குழு நடன ஓவியத்தில் ஆடு காட்டப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.
ஓவியம்-1:  குழு நடனம்

குழு நடனம் - ஓவியத்தின் இடப்புறம்

குழு நடனம் -   ஓவியத்தின் வலப்புறம்

குழு நடனம் - மையத்தில் ஆடு
ஓவியம்-2: சதிக்கை
மற்றொரு ஓவியத்தில், பெரியதாக ஒரு கை மட்டும் வரையப்பட்டுள்ளது. கை, பெண்ணின் கையைக் – குறிப்பாக வளைக்கை – குறிப்பதாகும். கை என்பது சதிக்கல் வகையைச் சார்ந்த நடுகற்களில் காணப்படும் ஒன்று. வீரக்கை என்று தொல்லியலில் குறிப்பிடுகிறார்கள். உடன் கட்டை ஏறிய பெண்டிரை வழிபடும் செயலைக் குறிக்க காட்டப்படுவது கையாகும்.  இங்குள்ள சதிக்கை உருவம் உடன்கட்டை ஏறிய பெண்ணின் வழிபாட்டிடத்தைக் குறிக்கலாம். குழு நடன ஓவியத்தை இந்தப் பெண்ணைத் தெய்வமாக வழிபடும் காட்சியாகக் கருதலாம்.
 சதிக்கை ஓவியம்
படம்-உதவி ஆதிரை சின்னசாமி (முக நூல்)
  
ஓவியம்-3: போர்க்காட்சி
போர் வீரன் ஒருவன் வில்லெடுத்து வேறொருவன் மீது அம்பு எய்வதுபோல் ஓர் ஓவியம் காணப்படுகிறது. மற்றவன் குதிரைமீது இருப்பதாகக் கருதலாம். முதல் வீரனின் உருவத்துக்குக் கீழே இன்னொரு வீரனும் வில் கொண்டு தாக்குவது போல் வரையப்பட்டுள்ளது.


ஓவியம்-4: வழிபாடு
ஓர் ஓவியத்தில், ஒரு கட்டம் வரையப்பட்டு அதனுள் குதிரை மீதமர்ந்த வீரனின் உருவம் காட்டப்பட்டுள்ளது. இக்கட்டத்துக்கு மேற்புறம், பெரிய உருவம் ஒன்று வரையப்பட்டுள்ளது. இது கடவுள் வழிபாட்டைக் குறிப்பதாகலாம். மனித உருவத்தைவிடப் பெரிதாக ஓர் உருவம் வரையப்படுவது தெய்வ உருவத்தைக் குறிக்கவே. பெரிதாக இருக்கும் உருவங்களில் யானையின் உருவமும் காணப்படுகிறது. இப்பகுதி ஆனை மலையின் அருகில் இருப்பதைக் கருதிப்பார்க்கலாம். இக்குகை ஓவியங்களைக் கண்டறிந்த நாராயணமூர்த்தி அவர்கள் பழநிக்கருகில் உள்ள ஆண்டிப்பட்டி மலை என்று குறிப்பிட்டதால், பலரும் இக்குகையின் இருப்பிடத்தைச் சரியாகக் கண்டறிந்து ஓவியங்களைக் காண இயலவில்லை.

ஓவியம்-4 வழிபாடு


உடுமலையைச் சேர்ந்த தென்கொங்கு சதாசிவம் என்னும் ஆய்வாளர், பெரிதும் முயன்று இக்குகையின் இருப்பிடத்தைக் கண்டதால், கோவைக் குழுவினர் மேற்படி பாறை ஓவியங்களைக் கண்டு மகிழும் வாய்ப்பு ஏற்பட்டது.

சில ஓவியங்களை இனம் காண இயலவில்லை. இவ்வோவியங்களைத் தொல்லியல் துறையினர் முறையாக ஆய்ந்து இவற்றின் விளக்கங்களையும், இவற்றின் காலத்தையும் வெளிக்கொணரும் வரலாற்றுச் செய்திகளை எதிர்பார்த்து நிற்போம்.

நாயக்கர் கால வாய்க்கால் பாலம்

பாறை ஓவியங்களைப் பார்த்து முடிந்ததும் கல்லாபுரத்தைக் கடந்து திருமூர்த்திமலை அணைப்பகுதியில் காட்சிக்கு வைத்திருக்கும் தளி பாளையக்காரர்களின் நினைவுக் கற்சிற்பங்களைக் காணப்புறப்பட்டோம். கல்லாபுரம் இந்தப்பகுதியிலேயே மிகச் செழிப்பான பகுதி. நீர்வளத்தால் நெல்வளம் பெருகும் நிலங்கள். வழியில் உழவோட்டும் அழகான காட்சிகள். அருகிலேயே, நீண்ட பாலம் போன்ற கட்டுமானம் ஒன்று காணப்பட்டது. ஆனால் அது பாலம் அன்று. நீரை எடுத்துச் செல்லும் ஒரு வாய்க்கால் தரைமட்டத்திலிருந்து உயர்த்தப்பட்டு அமைக்கப்பட்டிருந்தது. கல்லாபுரத்தின் அந்த இடத்தில் தரைவழிச் செல்லும் வாய்க்கால், தாழ்வான பகுதியைக் கடந்து செல்வதற்காகத் தரை மட்டத்திலிருந்து உயர்த்தி எழுப்பப்பட்டு மீண்டும் கிடை மட்டத்தில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. உடுமலை ஆய்வாளர் இரவி அவர்கள், இந்த வாய்க்கால் கட்டுமானம் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நாயக்கர் காலத்தில் கட்டப்பெற்றது என்னும் செய்தியைச் சொன்னார்.


நாயக்கர் கால வாய்க்கால் பாலம்

தளி பாளையப்பட்டு-நினைவுச் சிற்பங்கள்
அடுத்து நாங்கள் திருமூர்த்திமலை அணைக்குச் சென்றோம். அணை கட்டியபோது சுற்றும் இருந்த சில கிராமங்களில் தளி பாளையக்காரர்களின் வரலாற்று எச்சங்களாகத் திகழ்ந்த நினைவுச் சிற்பங்களை இங்கே பாதுகாப்பாக ஒரு மேடையில் பதித்து வைத்துள்ளனர். காண்பதற்கு அருமையானவை.

படம் உதவி ராஜா ராமசாமி (முகநூல்)

தூக்குமரத்தோட்டக் கல்வெட்டும் எத்தலப்ப நாயக்கரும்
அடுத்து நாங்கள் சென்ற இடம் தளியில் இருக்கும் தூக்குமரத்தோட்டம். ஜல்லிப்பட்டிக்கும் தளிக்கும் இடையில் அமைந்துள்ளது இந்தத் தூக்குமரத்தோட்டம். இங்குள்ள ஒரு கல்வெட்டு தனிச் சிறப்புப் பெற்றது. ஆங்கிலேயன் ஒருவனைத் தளி பாளையப்பட்டின் எத்தலப்ப நாயக்கர் தூக்கிலிட்ட இடம் என்று கருதப்படுகிற இடத்தில் இருக்கும் கல்வெட்டு. தளி என்னும் ஊர், வரலாற்றுச் சிறப்புடைய ஓர் ஊராகும். பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஆங்கிலேயருக்கு எதிராக அப்போதிருந்த பாளையக்காரர்கள் போரிட்டார்கள். பாஞ்சாலங்குறிச்சியை ஆண்டுவந்த கட்டபொம்மன், வஞ்சனையால் ஆங்கிலேயரால் 16-10-1799 அன்று தூக்கிலிடப்பட்டான். அவன் தம்பி ஊமைத்துரை மற்ற பாளையக்காரர்களோடு சேர்ந்து வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டபோது தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்ப நாயக்கரும் சேர்ந்துகொண்டார். 1801-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் நாள் தொடங்கி நூற்று நான்கு நாள்கள் நடைபெற்ற போரில் ஊமைத்துரைக்கு ஆதரவாக 14 பாளையக்காரர்களை ஒன்றிணைத்து அதற்குத் தலைமையேற்றவர் இந்த எத்தலப்ப நாயக்கர், எத்தலப்ப நாயக்கரை அடக்குவதற்காக அப்போதைய ஆங்கிலேய அரசு தந்திரமாக ஒரு தூதுக்குழுவை அவரைச் சந்திக்க அனுப்பிவைத்தது. கட்டபொம்மனின் நண்பரான எத்தலப்ப நாயக்கர், கட்டபொம்மனைச் சதியால் தூக்கிலிட்டதற்கு எதிர்வினையாகத் தனது படை வீரர்களை அனுப்பி ஆங்கிலத் தூதுக்குழுத் தலைவனை மட்டும் தனியே கைது செய்து அவனைத் தூக்கிலிட்டார்.

வெள்ளையர் இந்தியரைத் தூக்கிலிடும் செயலுக்கிடையில், இந்தியர் ஒருவர் வெள்ளையனைத் தூக்கிலிட்ட துணிவான அருஞ்செயல புரிந்தவர் என்னும் பெருமை எத்தலப்ப நாயக்கருக்கு உண்டு.  


கல்வெட்டுச் செய்தி
கல்வெட்டு தனியார் ஒருவரின் தோட்டத்தில் அமைந்துள்ளது. சிலுவைக்கல் ஒன்று நின்ற நிலையிலும், அதன்கீழ், கல்வெட்டு பொறிக்கப்பெற்ற ஒரு கற்பலகை தரையில் கிடத்தப்பெற்ற நிலையிலும் காணப்படுகின்றன. கோவை பூ.சா.கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்வெட்டியல் பட்டயப்படிப்புப் பொறுப்பாசிரியர் மற்றும் இணைப்பேராசிரியர் ச.இரவி  அவர்கள் இக்கல்வெட்டைப் படித்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அவர் கூற்றிலிருந்து :

“திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டத்திற்குட்பட்ட கிராமம் தளியில்  ஆங்கிலேயர் ஒருவரைத் தூக்கிலிட்டதற்கு ஆதாரமாகக் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. அதனைப் படிக்க முயற்சித்த போது அது ‘அந்திரை கெதி’ அல்லது ‘எங்கிரை கெதி’ என்னும் ஆங்கிலேயரின் அடக்கம் செய்யப்பட்ட சமாதி எனக் கண்டறியப்பட்டது.”

நாங்கள் நேரில் பார்த்தபோது கல்வெட்டின் பாடம் பின்வருமாறு காணப்பட்டது.

கல்வெட்டின் பாடம்:
                                I N ( R I )
1         1801 வரு. (ஆபுரி)ல் மீ 23
2         உ வியாழ கிழமை வரை
3         க்கும் செல்லா நென்ற
4         துன்முகி வரு. சித்திரை மீ (..)
5         3 உ தஞ்சை நகரத்தி
6         லிருந்த அந்திரை கெதிஷ்
7         பறங்கி யிருபத்தேழு வ
8         யதில் தெய்விகமாகி அ
9         டங்கின சமாது + I H S


கல்வெட்டின் உச்சியில் I N R I  என்று எழுதப்பட்டுள்ளது.  இது Jesus Nazarenus Rex Judaeorum என்னும் இலத்தீன் மொழித் தொடரின் குறுக்க வடிவம். ஆங்கிலத்தில் “J” என்பது இலத்தீனில் “I”  என்பதாக அமையும். இதன் பொருள் ”நாசரேத்தின் இயேசு யூதர்களின் அரசர்” என்பதாகும். வட சொல்லின் “ஜ”  ஒலிப்பு, தமிழ் மொழியில் ”ய”  என்பதாக ஒலிப்பதைக் கருதிப்பார்க்க. தமிழுக்கும் இலத்தீனுக்கும் இடையில் ஓர் ஒற்றுமை. அரசு என்னும் தமிழ்ச் சொல் அரைசு என்று திரிதலை விளக்கும் தமிழறிஞர் தேவநேயப்பாவாணர், இந்தச் சொல்தான் இலத்தீன் மொழிக்குச் சென்று “ரெக்ஸ்”  எனத்திரிந்து வழங்குவதாகக் குறிப்பிடுவார். கல்வெட்டின் இறுதியில் ஒரு சிலுவைக்குறியும் அதைத் தொடர்ந்து I H S என்னும் எழுத்துகளும் காணப்படுகின்றன. இது Iesus Hominum Salvator என்னும் இலத்தீன் மொழித் தொடரின் குறுக்க வடிவம். ஆங்கிலத்தில் “J”  என்பது இலத்தீனில் “I”  என்பதாக அமையும் என்பதை முன்னரே கண்டோம். இதன் பொருள் ”மாந்த இனத்தைக் காக்கும் இயேசு”  என்பதாகும்.

கல்வெட்டு கூறும் செய்திகள்

கி.பி. 1801-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ஆம் நாள் (தமிழாண்டு துன்முகி, சித்திரை மாதம்) தஞ்சையைச் சேர்ந்த பறங்கி அந்திரை கெதிஷ் (Andre Katie/Andrew Katie) என்பவன் (இருபத்தேழு வயதினன்) இறந்துபட்ட (தெய்விகமாகி அடங்கின) சமாதி இது என்னும் செய்தி கல்வெட்டு வாயிலாக அறியப்படுகிறது. கல்வெட்டில் தூக்கிலிடப்பட்டதாகவோ, தூக்கிலிட்டவர் எத்தலப்ப நாயக்கர் என்ற குறிப்போ இல்லை. எனவே, ஆங்கிலேயரைத் தூக்கிலிட்டதற்கு இக்கல்வெட்டு ஆதாரம் என்று கூறவியலாது. செவி வழிச் செய்திகள், ஆங்கிலேயன் தூக்கிலிடப்பட்டான் என்பதாகவும், தூக்கிலிட்டவர் எத்தலப்ப நாயக்கர் என்பதாகவும் அமைகின்றன. இதை உறுதிப்படுத்த வேறு சான்றுகள் – எடுத்துக்காட்டாக, மெக்கன்சி ஆவணங்கள் போன்றவை -  தேவைப்படுகின்றன. இந்த நிலையில், ஆய்வாளர் உடுமலை இரவி அவர்கள், கல்வெட்டுள்ள இந்த இடம் (தூக்குமரத்தோட்டம்) எத்தலப்ப நாயக்கர் தூக்கிலிடப்பட்ட இடமாகும் என்றொரு கருத்தைச் சொன்னார். இந்தச் செய்திக்கும் தகுந்த சான்றுகள் தேவைப்படுகின்றன. வரலாற்றுப் பேராசிரியர் கோவை இளங்கோவன் அவர்கள் மற்றொரு கருத்தை முன்வைக்கிறார். 1799-இல் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டபின்னர், 1801-1802 காலகட்டத்தில்  ஆங்கிலேய அரசுக்கெதிராக ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதில், பாளையக்காரர்கள், மருது பாண்டியர், கட்டபொம்மனின் சந்ததிகள், திப்புவின் சந்ததிகள், ஆங்கிலேய அரசுக்குப் பகை நாடான பிரஞ்சு அரசு ஆகியோர் ஒன்றிணைந்து எதிர்க்கிறார்கள். அந்த வகையில், தளி பாளையப்பட்டுக்கு உதவிய பிரஞ்சுக்காரர் ஒருவர் இறந்ததற்காக இந்தச் சமாதியும் கல்வெட்டும் எழுப்பப்பட்டிருக்கலாம். வரலாற்றுப் பேராசிரியரின் இக்கருத்து ஆய்வு நோக்கில் கருதற்பாலது. கல்வெட்டு ஆங்கிலேயர் வைத்திருந்தால் ஆங்கிலத்தில் இருந்திருக்கவேண்டும். தமிழில் கல்வெட்டு அமைவதால் இளங்கோவன் அவர்களின் கருத்து முன்னிலை பெறுகிறது. இறந்து போன பறங்கியின் பெயரான கெதிஷ் என்பது பிரஞ்சுப் பெயர்போலத் தோற்றமளிக்கிறது. இப்பெயர், பிரஞ்சுப்பெயர்தானா என்ற ஐயம் நீக்கப்படல்வேண்டும்.
 
எத்தலப்ப நாயக்கரின் வரலாறு-நாட்டார் புனைவுகள்?

 

1988-ஆம் ஆண்டு, தளியைச் சேர்ந்த சுந்தரசாமிக் கவுண்டர் என்பவர், “கீர்த்தி வீரன் எத்தலப்பன் வரலாறு”  என்னும் தலைப்பில் நூல் வெளியிட்டுள்ளார். அதில், தளியில் திருமூர்த்தி மலைச் சாரலில், சரக்கூட ஆசிரமம் ஒன்றை 1970களில் அமைத்துத் துறவு வாழ்க்கை மேற்கொண்ட யோகி இராமசாமி அவர்களுக்கு நேர்ந்த ஒரு நிகழ்வினை அடிப்படையாகக் கொண்டு எத்தலப்ப நாயக்கரின் வரலாற்றை எழுதியுள்ளார். எத்தலப்ப நாயக்கனின் மெய்க்காப்பாளன் சின்னையன் என்பவனின் ஆவி, பல இரவுப்போதுகளில்  யோகி அவர்கள் முன்பு தோன்றி எத்தலப்ப நாயக்கன் வரலாற்றைச் சொன்னதாக நூல் விரித்துரைக்கிறது.

ஆங்கிலேயர்கள், தளி பாளையக்காரர் எத்தலப்ப நாயக்கருடன் சமாதானமாகப் போவதென ஒரு சிறு தூதுக்குழுவுடன் தளிக்கருகில் வந்து கோட்டைத்தளபதியிடம் எத்தலப்ப நாயக்கரைக் கண்டு பேசவேண்டும் என்று தூதுத் தகவல் அனுப்பியபோது, நாயக்கர் இதனை ஒரு சதியென நினைத்து வீரர்களை அனுப்பி ஆங்கிலேயத் தூதுவனைப் பிடிக்கச்செய்து தூக்கிலிடச் செய்தார். இதற்கு எதிர்வினையாக ஆங்கிலேயர் தளி மீது இரவு நேரத்தில் பீரங்கித் தாக்குதல் நடத்தினர். எத்தலப்ப நாயக்கரின் தம்பியும், அரண்மனைப் பெண்டிர் அனைவரும் இறந்துபடுகின்றனர். எத்தலப்ப நாயக்கர் தாம் வணங்கும் ஜக்கம்மா சிலையருகில் இருக்கும் சுரங்கப்பாதை வழியே வெளியேறித் தன்னுணர்வின்றி திருமூர்த்திமலை மேல் சென்றார். அங்கு அவரைக்கண்ட முதுவர் குடியினர், அவர் கைகாட்டியதிசையில் அவரை  அகத்தியம்பாறை என்னுமிடதில் விட்டு அகன்றனர். அவரைத் தேடி அலைந்த மெய்க்காப்பாளன் சின்னையனுக்கு எத்தலப்ப நாயக்கரின் குரலில் ”தெற்கே மலைக்குப்போகிறேன் வந்து சேர்” என்னும் ஒலி கேட்டது. முதுவர் உதவியுடன் அகத்தியம் பாறை சென்ற சின்னையன், நாயக்கர் அங்கு உயிரோடு வீடுபேறுற்றார் என உணர்ந்தான். கனத்த குட்டையான, நீண்ட தாடியுடைய ஒரு முனிவர் சின்னையனை எதிர்கொண்டு, “நீ இன்னும் இருநூறு ஆண்டுகள் தூல உடலில் இருந்து இறைவனடி சேர்வாய்” என்று சொன்னதால் ஆவி வடிவில் யோகி இராமசாமியைச் சந்தித்து எத்தலப்ப நாயக்கரின் வரலாற்றைச் சொன்னதாக நூல் விரிகிறது.

ஆனால், தளி பாளையப்பட்டின் வரலாறும், எத்தலப்ப நாயக்கரின் வரலாறும் இன்னும் முற்றாகச் சான்றுகளோடு  நிறுவப்படவில்லை என்றே கருதவேண்டியுள்ளது.




________________________________________________________________________
தொடர்பு:
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை (doraisundaram18@gmail.com)
அலைபேசி : 9444939156.







Monday, October 30, 2017

மறக்க இயலாத மாமன்னர் இராசராசன்!

——அண்ணாமலை சுகுமாரன்


 இன்று சதயத்திருநாள் !
மாமன்னர் இராசராசனின் 1032வது சதய விழா !!
மாமன்னர் இராசராசன்  அவதரித்தநாள் !!!

சதயம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 24 ஆவது பிரிவு ஆகும். அது ஒரு பெருமைபெறுகிறது இராசராசன் அதில் பிறந்ததால்.

இந்தியவரலாறு  குப்தர்களையும்,மௌரியர்களையும்  விஜயநகர அரசர்களைப் பற்றிச் சொல்லுமளவிற்கு  ராஜராஜ சோழனைப் பற்றியோ, தமிழரசர்களைப் பற்றியோ அதிகம் சொல்வதில்லை. ஆதாரங்கள் என்னமோ கொட்டிக்கிடக்கிறது.

தமிழில் பொருள் காண முடியாத சொற்களில் "சோழ" என்பதும் ஒன்றாகும். 'நீர் சூழ்நாடு' என்பது நாளடைவில் 'சூழநாடு', பிறகு சோழநாடு என மாறியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. மிகப் பழமையானது சோழநாடு. இதனைப் பற்றிய குறிப்புகள் மகாபாரதத்திலும் அசோகரது கல்வெட்டிலும் கூடக் காணப்படுகிறது.சூரிய குலத்தவர் என்று தங்களை அழைத்துக் கொண்ட சோழர்கள் சங்க காலத்திலேயே (கி.மு. 2ம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. 2ம் நூற்றாண்டு வரை) வாழ்ந்திருந்தாலும் அந்தக் காலகட்டத்தின் முடிவில் தென்னாட்டு வரலாற்றிலிருந்தே காணாமல் போய்விட்டிருக்கிறார்கள். ஆயினும் சங்கம் வளர்த்த இந்த இனத்தவர் குறுநில மன்னர்களாக உறையூர், பழையாறை போன்ற பழைய தலைநகரங்களிலே தொடர்ந்து வாழ்ந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.  சிபி, முசுகுந்தன், மனு, செம்பியன் என்று புராணங்களில் அவர்களின் மரபு இடம் பெற்றிருக்கிறது. அதனால் தான் வரலாற்றில் இருந்து அவர்கள் விடுபட்டார்களா என்று தெரியவில்லை .

இராசராச சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் மிக முக்கியமானவர் ஆவார். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும்.

இராசராச சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது.  ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகளை இவனுடைய ஆட்சியில் உருப்பெற்றவையே ஆகும்.

அவரது பிறந்த நாள்  - 943 ஐப்பசி சதயம் நட்சத்திரம் (கி.பி. 943) என்று பேராசிரியர் சி. கோவிந்தராசனார் மற்றும் முனைவர் சி. கோ.தெய்வநாயகம் எழுதிய சோழர் வரலாறு (பக்கம் 102) எனும் நூல் குறிப்பிடுகிறது. (உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுச் சிறப்பு வெளியீடு) மேலும் வேறுபட்ட கருத்துக்களும் சில உண்டு.

இராசராசன் சித்திரைத் திங்கள் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர் என மன்னரது திருப்புகலூர் கல்வெட்டும் முதலாம் இராசேந்திர சோழரின் எண்ணாயிரம் கல்வெட்டும் செப்புவதாக முனைவர் சூ. சுவாமிநாதன் (கல்வெட்டாய்வாளர் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறை மைசூர்) கல்லெழுத்தில் காலச்சுவடுகள் (பக்கம் 38, 39) என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

இராசராசன் வரலாற்றில் பெற்றிருந்த சிறப்பை அவரது சிறப்புப் பெயர்கள் - 42 குறிப்பிடுகின்றன .
  1. இராசகண்டியன்
  2. இராசசர்வக்ஞன்
  3. இராசராசன்
  4. இராசகேசரிவர்மன்
  5. இராசாச்ரயன்
  6. இராசமார்த்தாண்டன்
  7. இராசேந்திரசிம்மன்
  8. இராசவிநோதன்
  9. இரணமுகபீமன்
10. இரவிகுலமாணிக்கன்
11. இரவிவம்சசிகாமணி
12. அபயகுலசேகரன்
13. அருள்மொழி
14. அரிதுர்க்கலங்கன்
15. பெரியபெருமாள்
16. அழகியசோழன்
17. மும்முடிச்சோழன்
18. பண்டிதசோழன்
19. நிகரிலிசோழன்
20. திருமுறைகண்டசோழன்
21. செயங்கொண்டசோழன்
22. உத்தமசோழன்
23. மூர்த்தவிக்கரமாபரணன்
24. உத்துங்கதுங்கன்
25. உய்யக்கொண்டான்
26. உலகளந்தான்
27. தெலிங்ககுலகாலன்
28. கேரளாந்தகன்
29. மூர்த்தவிக்கரமாபரணன்
30. சோழேந்திரசிம்மன்
31. சோழநாராயணன்
32. சோழகுலசுந்தரன்
33. சோழமார்த்தாண்டன்
34. பாண்டியகுலாசனி
35. சிவபாதசேகரன்
36. சிங்களாந்தகன்
37. சத்துருபுஜங்கன்
38. சண்டபராக்ரமன்
39. ஜனநாதன்
40. சத்திரியசிகாமணி
41. கீர்த்திபராக்கிரமன்
42. தைலகுலகாலன்

அரியனை அமர்ந்தநாள் - ஆடி மாதம் 22ம் நாள் 985வது வருடம் 18/07/985
ஆட்சி ஏற்ற வயது - 42ம் வயது
தஞ்சை பெரியகோயில் கட்டியது - ஆட்சியாண்டு 25, 275ம் நாள் சனிக்கிழமை
குடமுழுக்கு  செய்த நாள் - 22/04/1010 (புனர்பூச நட்சத்திரத்தில்)
இறந்த நாள் - 17/01/1014 (ஆட்சியாண்டு 29, மார்கழி மாதம் பூர்வபட்சம் சதூர்த்தசி திதி)  
வாழ்ந்த கால வயது - 71 ஆண்டுகள்

தஞ்சை பெரியகோயில் என்றும் ஒரு அதிசயமாகும்.  யுனெஸ்கோவின் உலக பாரம் பரிய நினைவுச்சின்னங்கள் பட்டியலில் இக்கோயில் இடம் பெற்றுள்ளது.  உலக அளவில் இதன் கட்டிடக் கலை சிறப்பை வியக்காத வல்லுநர்களே கிடையாது. இராசராச சோழன் சிவபெருமானுக்கு ஆத்மார்த்தமாகக் கட்டிய (கி.பி.985 - 1012) அரும்பெரும் ஆலயம் இது.  இங்குள்ள மூலவர் பிரம்மாண்டமானவர், 13 அடி உயரம் உடையவர். ஆவுடை மட்டும் 54 அடி சுற்றளவு உடையது. மேல் பாணத்தின் சுற்றளவு மட்டும் 23 அடி. இவ்வளவு பெரிய லிங்கம் வேறு எங்கும் இல்லை.  அம்பாள் 9 அடி உயரம் உள்ளவர். இந்த லிங்கம், மத்தியபிரதேச மாநிலம், நர்மதா நதிக்கரையிலுள்ள ஒரு மலையிலிருந்து கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. எனப்படுகிறது.

முதலாம் இராசராசன் மூன்று வித மெய்க்கீர்த்திகளைக் கையாண்டாலும் 'திருமகள் போல' என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியையே எட்டாம் ஆண்டிலிருந்து பெரும் அளவில் பயன்படுத்தப்பட்டது. இவ்வகை மெய்க்கீர்த்தி இவனது ஆட்சியில் நடைபெற்ற முதற்போரைக் குறிக்கும் வகையில், 'காந்தளூர்ச்சாலை கலமறுத்த' என்ற பட்டத்தைக் குறிப்பிடுகிறது.

ஸ்வஸ்திஸ்ரீ  திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ரீகோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்.

எத்தனை அழகாகத் தனது வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை வரிசைப்படுத்தியிருக்கிறார் பாருங்கள். இன்னமும் தமிழர்கள் வரலாற்று அறிவு இல்லாதவர்கள் என்று பழி சுமத்தப்படுகிறது. பதிவுகள் என்னமோ மிகவும் உண்டு ஆனால் சரிவர ஆராயப்படவில்லை.

மாமன்னர் இராசராசன் ஆண்ட காலத்தில் நடைமுறையில் இருந்த வரிகள் சில சோழர் காலத்தில் மக்களுக்கு இடப்பட்ட வரிகள். மக்களின் தேவைகள், மகேசனின் தேவைகள் இவற்றை  நிறைவேற்ற அரசுக்குப் பொருள் வேண்டாமா? இதோ அரசின் வருவாய்க்கான வரிகள்:
1. அங்காடிப் பட்டம்
2. இடப்பாட்டம்
3. இலைக் கூலம்
4. இரவுவரி
5. இறை
6. ஈழம்
7. உல்கு
8. ஊரிடுவரி
9. எச்சோறு
10. ஏரிப்பாட்டம்
11. ஓடக்கூலி
12. கண்ணாலக்காணம்
13. காவேரிக்கரை வினியோகம்
14. குசக்காணம்
15. குடிமை
16. சபாவினியோகம்
17. சித்தாயம்
18. சில்லிறை
19. சில்வரி
20. செக்கிறை
21. தட்டார்ப் பாட்டம்
22. தரகு
23. தறியிறை
24. நாடுகாவல்
25. நீர்க்கூலி
26. பாடிகாவல்
27. பூட்சி
28. போர்வரி
29. மரமஞ்சாடி
30. மரவிறை
31. மனை இறை
32. மீன் பாட்டம்
33. வண்ணாரப்பாறை

கடல் கடந்து வாணிகத்திலும் ஆதிக்கத்திலும் கோலோச்சிய சோழர்கள் நீர்ப்போக்குவரத்திலும் சிறந்து விளங்கினர். இதோ கி.பி. 9 - 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேந்தன் திவாகரம் என்னும் நூல் குறிப்பிடும் கப்பலின் பெயர்கள்:
1. வங்கம்
2. பாடை
3. தோணி
4. யானம்
5. தங்கு
6. மதலை
7. திமில்
8. பாறு
9. அம்பி
10. பாரி
11. சதா
12. பாரதி
13. நௌ
14. போதன்
15. தொள்ளை
16. நாவாய்

இவரின் பெருமைக்கு இன்னமும் பல சிறப்புச்செய்திகள் வரலாற்றில் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் முக்கிய ஒன்றைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அது ஒரு அறிவியல் அற்புதம் ! சோழநாட்டின் நிலம் அனைத்தையும் துல்லியமாக அளக்கவும், அவற்றின் தரத்தை நிர்ணயிக்கவும் குரவன் உலகளந்தான் இராசராச மாராயன் என்பவன் தலைமையில் இராசராசன் ஒரு குழு அமைத்தான். இக்குழு தனது பணியைக் குறைவறச் செய்து அரசனின் பாராட்டைப் பெற்றது. நிலத்தை அளக்கப் பயன்படுத்தப்பட்ட பதினாறு சாண் நீளமுடைய கோல் “உலகளந்தான் கோல்” என்றழைக்கப்பட்டது.

எந்தவித சாதனங்களும் கண்டறியாத அந்த காலத்திலேயே நிலத்தை அளந்து தரம் பிரிப்பதென்பது ஒரு அசாதாரண பணி, இதனை மிகவும் சீரிய முறையில் சாதித்த சோழராஜனின் மகுடத்தில் இந்த அரிய பணி ஒரு வைரம்.

உலகளந்தான் கோல் பற்றிய சில விவரங்கள்:
24 விரல் கொண்ட முழம் - கிஷ்கு
25 விரல் கொண்ட முழம் - பிரஜாப மத்தியம்
26 விரல் கொண்ட முழம் - தனுர் முஷ்டி
27 விரல் கொண்ட முழம் - தனுர் கிரஹம்
28 விரல் கொண்ட முழம் - பிராச்யம்
29 விரல் கொண்ட முழம் - வைதேகம்
30 விரல் கொண்ட முழம் - வைபுல்யம்
31 விரல் கொண்ட முழம் - பிரகீர்ணம்
33” ஆங்கில அளவிற்குச் சமமானது கிஷ்கு முழமாகும்.

இத்தனையும் செய்த மாமன்னரின் சிலை இருக்குமிடம் அறிந்தால் வருத்தம் மிகும் .பெரியகோவில் கட்டி முடிக்கப்பட்டவுடன் அதற்கு நிர்வாக அலுவலராக இருந்த ஆதித்தன் தென்னவன் மூவேந்த வேளாளன் என்பவர் இராசராச சோழனுக்கும் அவரது மனைவி லோகமாதேவிக்கும் செம்பில் உருவச் சிலைகள் செய்தார். இராசராச சோழன் உயிருடன் இருக்கும் போதே செய்யப்பட்ட இச்சிலைகள் இப்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கெளதம் சாராபாய் தனியார் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இராசராசசோழன் மறைந்த பிறகு, அவருடைய வெண்கலச்சிலை ஒன்றும் வடிவமைக்கப்பட்டது. அதை, பிரகதீஸ்வரர் வீதி உலா செல்லும்போது முன்னால் எடுத்துச் செல்ல வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார் ராஜேந்திர சோழர். பயபக்தியோடு, கைகூப்பியவாறு இருக்கும் இந்தச் சிலையும் தற்போது வடக்கே சாராபாய் அருங்காட்சியகத்தில்  இருக்கிறது.

இந்த அற்புத வரலாற்று முக்கியம் வாய்ந்த சிலைகளை மத்திய அரசின் உதவியோடு மீண்டும் தமிழக அரசு மீண்டும் தமிழ் மண்ணுக்குக் கொண்டுவந்து தஞ்சைக் கோயிலில் வைக்கவேண்டும்.இதுவே மாமன்னர் இராசராசனுக்கு நாம் செய்யும் நன்றி கூறல் ஆகும்.


அண்ணாமலை சுகுமாரன்
 (30-10-2017)




________________________________________________________________________
தொடர்பு: அண்ணாமலை சுகுமாரன் (amirthamintl@gmail.com)




 

Wednesday, October 25, 2017

நேமி என்ற சொல்லின் பொருள் விளக்கம்


"நிலந்தவ உருட்டிய நேமி யோரும் சமங்கண் கூடித் தாம்வேட் பவ்வே" என்று புறநானூற்றுப் பாடல் ஒன்று  வேந்தரின் ஆட்சிச் சக்கரத்தையும் ; 
"பூண்வனைந் தன்ன பொலஞ்சூட்டு நேமி"  என்று குறுந்தொகைப் பாடலொன்று பொன்னால் ஆகிய விளிம்பை உடையத் தேரின் சக்கரத்தினையும்; 
"பொன் அணி நேமி வலங்கொண்டு ஏந்தி" என்று பரிபாடல் பாடலொன்று திருமால் தனது வலது கையில் ஏந்திய சக்கரத்தையும் குறிக்கும். 

பொதுவாக, நேமி என்பது வட்டவடிவம் கொண்டவற்றைக் குறிப்பதுடன் பூமி, கடல், கணையாழி, சக்கரவாகம் எனும் பறவை, சக்கராயுதனாகிய திருமால், தீர்த்தங்கரர் இருபத்துநால்வருள் ஒருவரான நேமிநாதரையும் குறிக்கவும் பயன் கொள்ளப்படுவதுண்டு.

நேமி என்ற சொல்லின் தோற்றம் அதன் பெயர்ச்சொல், வினைச்சொல் பொருள் குறித்து முனைவர் நா. கணேசன் கொடுக்கும் விளக்கம்தனை இனி காண்போம். 
——————————— 

நேமி
~ முனைவர் நா. கணேசன் ~


முறம் அல்லது சுளகைக் கொண்டு உமி, பதர், கல் போன்றனவற்றைப் பிரிப்பதில் பல வினைகள் உள்ளன. கொழித்தல், புடைத்தல், தெள்ளுதல், நேம்புதல் போன்ற செயல்பாடுகள் அடங்கும் (https://ta.wikipedia.org/wiki/முறம்).
 
புடைத்தல் = அடித்தல்.  புடைத்தல் என்றால் தானிய மணிகளைத் தூக்கி மேலே வீசி, கீழே முறத் தட்டில் வீழுமாறு செய்தல்.  ஒருபுடை புடைத்தான் என்பதுபோன்ற உலகியல் வழக்கங்களை நோக்குக. புடைத்தல் = அடித்தல்.

தெள்ளுதல் = தெறித்தல். பிரிந்த பதடு, சிறுகல், குப்பை போன்றவற்றை வெளியே தெறித்து அகற்றுதல். தெள்ளுதல் = தெறித்தல்.
பொன்னினும் வெள்ளி யானும் பளிங்கினும் புலவன் செய்த
நன்னிறக் கலத்திற் கூர்வா ணட்டென வாக்கிச் சேடி
மின்னனா ரளித்த தேறற் சிறுதுளி விரலிற் றெள்ளித்
துன்னிவீழ் களிவண் டோச்சித் தொண்டையங் கனிவாய் வைப்பார்.
http://www.tamilvu.org/slet/l41d0/l41d0sn3.jsp?x=82
புலவன் செய்த நல் நிறக் கலத்தில் - கம்மப் புலவனாற் செய்யப்பட்ட நல்ல  ஒளியையுடைய கலங்களில், கூர்வாள் நட்டென வாக்கி அளித்த - கூரிய  வாளை நட்டாற்போல வார்த்துக் கொடுத்த, தேறல் - மதுவில், சிறு துளி  விரலில் தெள்ளி - சிறிய துளியை விரலாற்றொட்டுத் தெறித்து, துன்னி வீழ்  களிவண்டு ஓச்சி - நெருங்கி வீழும் மதுமயக்கத்தையுடைய வண்டுகளை  ஓட்டி, கள்ளுண்பார் அதனை விரலாற்றொட்டுப் பூச்சி, வண்டுகளை தெறித்து நீக்கிப் பின் குடித்தலுக்கான  அழகான வர்ணனையைப் பரஞ்சோதி முனிவர் மரபுச்செய்யுளில் பதிந்துள்ளார்.

தெள்ளு- (1) To sift, as grain; கொழித்தல். Colloq. (2). [M. teḷḷuka.] To sift gently in a winnowing fan; புடைத்தல். (3) To waft, as the sea; to cast upon the shore; அலைகொழித்தல். கரிமருப்புத் தெள்ளி நறவந் திசைதிசை பாயும் (திருக்கோ. 128).

நேம்புதல்:  தமிழில் நேம்பு- என்னும் வினைச்சொல் தெலுங்கில் நேமு- எனப்படுகிறது. Ref. MTL. சேந்துகிணற்றில் நேமி மீது கயிற்றை இட்டு குடமோ,வாளியே கீழே செலுத்தி, நீரை மொண்டு மேலே நீர் சேந்துகின்றனர். நீர் இறைக்கும்போது, உருள்நேமி தன் அச்சில் வலம்புரியாகவும், இடம்புரியாகவும் சுழலும். இச் செயல்தான் த்ராவிட மொழிகளில் நேம்புதல்/நேமுதல் என்ற வினைச்சொல் ஆகும் (https://www.youtube.com/watch?v=_afbxTenEzc).

முறத்தில் பெண்கள் தானியம் நேம்பும்போதும், மேல் இருந்து பார்த்தால், சேந்துகிணத்து நேமி போலவே, வலம்புரியாகவும் (clockwise), இடம்புரியாகவும் (anti-clockwise) சற்றெ மாறிமாறிச் சுழற்றுவது காணலாம்.

படம் உதவி- நன்றி: பழமைபேசி


குதிரை பூட்டிய தேர்களின் சக்கரத்தில் நேமி (felloe or felly)


Max Sparreboom, Chariots in the Veda, 1985, E. J. Brill, Leiden
pg. 130
"The spoked chariot-wheel consisted of a felloe (nemi) with a rim (pavi), with spokes (ara) fitted in holes of the nave (naabhi) and it was secured in its place by a linch-pin (aaNi)."

தியானத்தில் ஆழ்ந்த தீர்த்தங்கரர்களுக்குக் கல்வெட்டுகளில் முதலில் ஆழ்வார் என்று பெயர். ஆழ்-தல் “to sink" > ஆணி (=lynch pin) என்னும் தமிழ்ச் சொல் வேதத்தில் இருக்கிறது. ஆர், அர- = தண்டு. தாமரைத்தண்டு = ஆர், அர-. தாமரைத்தண்டின் மேல் பூ விரிகிறது. அர-விரிந்த > அரவிந்த. எனவே, இவுளிச் சாரட்டுகளில் ஆணி போலவே, அர ‘spoke' தொல்தமிழ் என்க. நேம்பு-/நேமு- வினைச்சொல் (உ-ம்: ) தானியத்தை நேம்புவதும், அதே போல கிணற்றில் நேமியின் செயல்பாடும் பார்த்தோம். எனவே தான், நேமி = framework for well-rope (pulley).

குவி/குமி, சவரி/சமரி(=கவரி/கமரி, சாமரை), கோமணம்/கோவணம், உமணர்/உவளம், கமலை/கவலை (ஏற்றத்தின் சால்) ... போல நேம்பு-/நேமு- > நேவு- > நாவுதல் (அ) நாம்புதல் என்றும் வழங்குகிறது.

”உமியும் தவிடும் நீக்கிய பின்னர் சுளகின் அடிப்பாகத்தில் தங்கியிருக்கும் அரிசியை இடதுபக்கமுள்ள இன்னொரு சாக்கில் தட்டுவார்கள். பட் பட்-என்று சுளகைத் தட்டி அனைத்து அரிசியையும் ஒன்று சேர்த்து மிக லாவகமாக அவர்கள் சாக்கில் கொட்டும் அழகே தனி. இப்படியே அடுத்தடுத்து குற்றப்பட்ட அரிசி-உமிக் கலவையை எடுத்து, உமி தவிடு நீக்கி அரிசியை எல்லாம் தனியே சேர்த்துவைப்பார்கள்.
இதற்குள் நெல்குத்திய அக்காமார் தம் வேலையை முடித்து, முந்தானையால் முகத்தை அழுத்தித் துடைத்துக்கொண்டே அத்தை பக்கத்தில் வந்து அமர்வார்கள். அவர்களுக்குச் செம்பு நிறைய தண்ணீர் கொண்டுவந்துகொடுப்பார் அம்மா. இருவரும் மடக் மடக்-என்று குடித்துச் செம்பைக் காலிசெய்வர். “அடுத்து என்ன செய்ய” என்றும் கேட்பர். “நான் பொடச்சுப்போட்ட அரிசிய நல்லா நேம்பி வையி. ஒத்தக் கல்லு இருக்கக்கூடாது" என்று ஒரு அக்காவிடம் அத்தை கூறுவார். அடுத்தவரிடம், “நீ அவ நேம்பிக்கொடுக்கறதக் கொழிச்சுப்போடு” என்பார். அப்பப்ப நாவிக்க. எல்லாக் குருணையையும் அந்தச் சட்டியில கொட்டிவையி. பொடிக்குருணை கோழிக்கு ஆகும். என்பார். நேம்புதல், கொழித்தல், நாவுதல் எல்லாம் சுளகைக் கையாளுவதில் வெவ்வேறு வழிகள். அரிசியினின்றும் கல்லைப் பிரித்தெடுக்க, குருணை எனப்படும் குறு நொய்யைத் தனியே பிரிக்க என்று பல்வேறு முறைகள். இறுதியில் மணிமணியாக முழு அரிசி ஒரு பக்கம், குருணை ஒருபக்கம், கல்லும் கழிவும் ஒருபக்கம், தவிடு ஒரு பக்கம், உமி ஒரு பக்கம் என அந்தப் பகுதியே நிறைந்துவிடும்.” (பேரா. ப. பாண்டியராஜா, 3/31/2015).

நேம்- என்ற தாதுவில் இருந்து நேமு-/நேம்பு- என்றும், நேமி என்ற பெயர்ச்சொல்லும் தோன்றியுள்ளன.

எழுத்தோசைகளை உருவாக்குவதற்காக நாக்கு அலைகொழித்துக் கொண்டிருக்கும் வாயுறுப்பு. ஆதாவது, நேவிக்கொண்டே/நேமிக்கொண்டே > நாவிக்கொண்டே இருக்கும் நாவு.
நவ்வி என்றால் மான், முக்கியமாகப் பெண் மான். ஏனெனில், தன் இனநிரைக்கு ஆபத்து வருகிறதோ என தலையைத் தூக்கி நேம்பிக்கொண்டே/நாவிக்கொண்டே அங்குமிங்கும் பார்த்துக்கொண்டு புல்மேயும் பண்பினதால், நவ்வி என்பது பண்பாகுபெயர். (கோவை:கொவ்வைக்காய், ... போல, நாவிக்கொண்டிருப்பது நவ்வி. எப்பொழுதும் வெளியே தெரியுமாறு நாவு(நாக்கு) இருப்பதால் நாய் (நாஇ - தொல்காப்பியம்) என்கிறோம். நாயாட்டு என்றால் வேட்டையாடல்.

ஆகவே, நேமி என்பது வட்டவடிவில் சுழலும் பண்பை, சுழலும் தன்மை கொண்டவற்றைக் குறிப்பதாகக்  கொள்ளலாம்.



________________________________________________________________________
தொடர்பு: முனைவர் நா. கணேசன் (naa.ganesan@gmail.com)



காட்டைப் பார்

—— பழமைபேசி





வெளியே போ
காட்டைப் பார்
குருவி
கொத்தித்தின்னும்
அழகைப் பார்
கோரைப் புல்லின்
மலரைப் பார்
தடத்தின் குறுக்கேவோடும்
அணிலைப் பார்
தலைக்கு மேலே போகும்
பட்டாம்பூச்சியைப் பார்
வெடித்து
விதைகளைத் துப்பும்
காயைப் பார்
காற்றில் தவழும்
கொடியைப் பார்
போகிறபோக்கில்
புணர்ந்து போகும்
தட்டான் பார்
வேலியில் பூத்திருக்கும்
கள்ளிப்பூவைப் பார்
வெளியின் ஊடாய்
விதையைச் சுமக்கும்
பஞ்சைப் பார்
ஊர்ந்து செல்லும்
கரையான் பார்
கொம்பின் கீழே
தொங்கும் அந்த
கூட்டைப் பார்
தாவிப் போகும்
முயலைப் பார்
கண்டங்கத்திரி
முள்ளைப் பார்
தும்பைச்செடியின்
இலையைப் பார்
மரத்தைக் கொத்தும்
கொண்டைலாத்தி பார்
இன்று இருக்கும்
நாளை இருக்காது
வெளியே போ
காட்டைப் பார்
காட்டைப் பார்

 
________________________________________________________________________
தொடர்பு: பழமைபேசி (pazamaipesi@gmail.com)

Tuesday, October 24, 2017

குருகோவிந்தரும் இராமலிங்கரும்



குருகோவிந்தரும் இராமலிங்கரும்
இராம. மலர்விழி மங்கையர்க்கரசி ~
தமிழ்த்துறைத் தலைவர்
தியாகராசர் கல்லூரி

   
    அக்டோபர் மாதம் அகிம்சை மாதம் என்றாற்போல அடுத்தடுத்து அருளாளர்களின் அவதாரத் தினங்களால் நிறைந்திருக்கிறது. அக்டோபர் இரண்டு காந்தி ஜெயந்தி, அக்டோபர் ஐந்து இராமலிங்கர் ஜெயந்தி, அக்டோபர் 7 (1708 அக்டோபர் 7) குருகோவிந்த் குரு பூஜை (மறைவு) என இரண்டு, மூன்று நாட்கள் இடைவெளியில் அருளாளர்கள் அவதரித்துள்ளனர். காந்தியடிகளை அருளாளர் என அழைக்கலாமா எனில் சமய ஆன்மிக அன்பர்களை மட்டுந்தான் அவ்வாறு அழைத்தல் மரபு எனினும் அகிம்சையால் ஆங்கிலேயரைத் துரத்தியவரும், சர்வோதயம் கண்டவரும், இராமராஜியத்தை நிலைநிறுத்தப் பாடுபட்டவரும், தள்ளிவர்களை ஹரிசனங்கள் (இறைவனின் குழந்தைகள்) என அழைத்து இன்பங்கண்ட ஆன்மநேய காந்திமகானை அருளாளர் என அழைப்பதில் என்ன பிழையிருக்க முடியும் ?
   
    ஆன்மநேய ஒருமைப்பாடு கண்டு சன்மார்க்கம் கண்டு நெறிப்படுத்தி தெனைச் சங்கம் அமைத்து நெறிப்படுத்திய இராமலிங்கர் பதினெட்டாம் நூற்றாண்டு அருளாளர். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியது மட்டுமன்றி வீடுதோறும் இரந்தும் பசியறாது அயர்ந்த வெற்றரைக் கண்டுளம் துறத்தவர். இத்தகையோரைக் கணித்து உலகளாவிய அளவில் “உலகச் சிந்தனையாளர்கள்” என்ற பெயரில் நூலாக்கிய இராபர்ட் எல். ஹெல்போர்னர் பின்வருமாறு கருத்துரைக்கிறார். “மத்திய நூற்றாண்டுகளின் சிந்தனைப் புரட்சியாளர்களின் சிந்தனை உருமாற்றம் குறிப்பாக பதினாறு பதினேழாம் நூற்றாண்டுகளில் மண், மனிதர்கள், சமூகம், இயங்குதளம் இவற்றின் அடிப்படையிலேயே பழையனவற்றை மாற்றிப் புதிய முறைமைகளை இனங்கண்டு உரைத்தனர்” (‘The worldly philosohers’ - Robert L. Heilbroner IV edition -1972 - Simon and Schuster, Newyork, Page - 25) என்பது பொருத்தமே.
   
    இந்து மற்றும் இஸ்லாமிய சமய ஒருமைப்பாடு கண்ட அருளாளராக பதினேழாம் நூற்றாண்டில் அவதரித்த குருகோவிந்தர் விளங்குகிறார். சீக்கிய ஒன்பதாவது மதகுருவாகக் கொண்டாடப்பட்டாலும் இவருக்குப் பின்னரே சீக்கிய மதம் குருகிரந்தம் என்ற பெயரில் சீக்கியப் பனுவல்களைப் பெறுகிறது. அதைத் தொகுப்பித்த பணியைக் குருகோவிந்தர் செய்ததோடு மட்டுமல்லாமல் உருவவழிபாட்டில் மிகப்பெரிய புரட்சியையே செய்துள்ளார் எனக் கூறமுடியும். அதுவரைக் கடவுளர் உருவங்கள், மதகுருமார்களின் உருவங்கள் ஆராதிக்கப்பட்டு வழிபடுதன்மையைப் பெற்றதெனின் இவரே மதநூலான குருகிரந்தத்திற்கு வழிபடுதன்மையை வகுத்துத்தருகிறார். பதினெட்டாம் நூற்றாண்டில் அதேபோல் இராமலிங்கரும் “அருட்பெருஞ்சோதி” என்று கடவுளர் உருவத்தை விடுத்து ஒளியைக் குறியீடாக்கி வழிபடும் ஒளிவழிபாட்டை ஜோதி தரிசனத்தைக் கூடியிருந்து கண்டு ஆன்மநெகிழ்வடையும் புதுமார்க்கத்தைக் கண்டறிந்து தந்தார். இவ்விருவரது மார்க்கங்களும் அவர்தம் காலத்துக்குப் பின்னரும் இன்றுவரை தொடர்ந்து வருவதே தனிச்சிறப்பும் அவரது கொள்கை வெற்றிபெற்றதை உணர்த்துதலுமாகிறது.
   
    சீக்கியமதத்தின் சீரிய நெறிமுறைகளைக் கையிலெடுக்காது தனிமனித குருவழிபாட்டில் சிக்கி ராம்ரஹீம் போன்றவர்களால் ஹரியானா மாநிலத்தில் சென்ற மாதம் நிகழ்ந்த கலவரங்களை நாடே கண்டு வியந்து கண்டனக்குரல்களை எழுப்பியது என்பதையும் மனதிற்கொள்ளவேண்டும். தனிமனிதத் துதி இவ்வாறு தீமையில்தான் ஓர் எல்லை கடந்து செல்லும்போது முடியும் என்பதை உணர்ந்துதானோ என்னவோ குருகிரந்தத்தைப் பொற்கோவிலின் கடவுள் நிலைக்கு வைத்துப் புனிதப்படுத்தினார் குருகோவிந்த்சிங். சீக்கிய மதத்தின் வாழும் குருவாக வழிபடுத்திய குருகோவிந்த்சிங் பீஹார் மாநிலம் பாட்னாவில் 1666ஆம் ஆண்டு டிசம்பர் 22இல் பிறந்தார். இராமலிங்கர் 1853 - விழுப்புரம் மாவட்டம் மருதூரில் தமிழ்நாட்டில் பிறந்தார்.
   
    குருகோவிந்தர் “அரபி, பெர்சியன், சமஸ்கிருதம் போன்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்” (பக்-8, தினமலர் நாளிதழ் - 07.10.2017 - மதுரை பதிப்பு) என்னும் தகவல் அவர் பன்மொழியாளர் என்பதை உறுதிசெய்கிறது. இராமலிங்கரும் ஆங்கிலம், பிரெஞ்சு, (பாண்டிச்சேரியில் வசித்த காலத்தில் அறிந்திருக்கக் கூடும் என்பாரும் உளர்) சமஸ்கிருதம் அறிந்தவராகத் திகழ்கிறார். தமிழ் தாய்மொழி, சமஸ்கிருதம் தந்தைமொழி என திருவருட்பா - உரைநடைப் பகுதியில் அவர் கூறியிருப்பது வியப்பிற்குரியது. அவரது உரைநடையே மணிபிரவாள நடைக்கான கடைசிச் சாட்சியாகத் தமிழ் எழுத்திலக்கிய வரலாற்றில் இருந்திருக்கக் கூடும் என்று ஆய்வாளர்களை உறுதிப்படுத்த வைக்கிறது. இராமலிங்கர் காலத்துக்குப் பின்னரே மறைமலையடிகள், நீதிக்கட்சி, தேவநேயப்பாவணர் போன்றோரால் தனித்தமிழ் இயக்கமும் தனித்தமிழ் நடையும் சமஸ்கிருத ஒறுப்பும் நிகழ்ந்திருக்கிறது.
   
    குருகோவிந்தர் “குதிரைவாரி, பலவகைத் துப்பாக்கிகள், ஆயுதங்கள் முதலியவற்றைக் கையாள்வதில் சிறப்புப் பெற்று விளங்கினார்.” (பக்-8, தினமலர்) என்ற செய்தி தேக ஆரோக்கியம், தற்காப்பு ஆகியவற்றில் அவர் கொண்டிருந்த அக்கறை முக்கியத்துவம் பெறுகிறது.
   
    இராமலிங்கரும் தேக ஆரோக்கியம் பற்றி சுத்த தேகம், பிரவண தேகம், ஒளியுடம்பு ஆகியன குறித்துப்  பேசியுள்ளார். உடல்நலன் குறித்த அக்கறையில் மூலிகை மற்றும் பயிரினங்களின் பயன்பாடு குறித்து மானுடர்களுக்கு உரைநடைப் பகுதியில் தனித்த பதிவினைக் குறித்துள்ளார். கரிசலாங்கண்ணிப் பொடியை அன்றாடம் உண்ணல் நலம் எனத் தானும் உண்டு பிறருக்கு முன்னோடியாக வழிகாட்டியும் விளங்கியுள்ளார்.
   
    குருகோவிந்தரின் மதிப்புமிகு சிந்தனைகளாகத் தான் உருவாக்கிய சீக்கிய மார்க்கத்தைப் பின்பற்றுபவர்களுக்கு ஒழுக்கமுறைகளை வகுத்துள்ளார். “மது அருந்தாமை, புகை பிடிக்காமை, நாள்தோறும் ஐந்துமுறை வழிபடுதல், வருமானத்தில் பத்தில் ஒருபங்கு தானம், வட்டி வாங்காமை ஆகியவற்றைக் கடைப்பிடித்து சீக்கியர் வாழவேண்டும்” என்று சிறந்த பண்புகளையுடைய மானுடச்சமூகம் உருவாகக் கட்டமைத்துத் தந்துள்ளார். அதனைக் கட்டாயமாகப் பின்பற்றவேண்டும் என்றும் சட்டம் இயற்றித் தந்திருக்கிறார். 1708 அக்டோபர் மாதம் ஏழாம்நாள் அவர் காலமானாலும் இன்றுவரை அவர் கொள்கைகளை சீக்கியர் பின்பற்றி வருகின்றனர். இராமலிங்கரும், புலால் உண்ணக்கூடாது. உருவ வழிபாடு கூடாது. ஒளி வழிபாடு மேற்கொள்ள வேண்டும். ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல். பரோபகாரம், பசிப்பிணி மருத்துவம் போன்ற கொள்கைகளை வழியுறுத்தியுள்ளார். அவர் பசியாற்றுக்காக அன்று ஏற்றிவைத்த நெருப்பு அணையா அடுப்பாக இன்றும் வடலூர் சத்திய தருமச்சாலையில்  பசித்தோருக்கு அன்றாடம் உணவு சமைத்து வழங்கிக் கொண்டிருக்கிறது.
   
    அதுவரை இருந்த வழிபாட்டுத் தலங்களினின்றும் தனித்துப் பொற்கோயில் என்பதை வடிவமைத்து அமிர்தசரஸ் நகரிலே சீக்கிய வழிபாடு நடத்துகின்றனர். இந்தப் பொற்கோயிலை 1469 -இல் பிறந்த சீக்கிய சமய நிறுவனரான குருநானக் மெக்காவிற்குப் புனிதப்பயணம் மேற்கொண்டதன் பின்னர் இந்து முஸ்லிம் இருசமயக் கோவில் அமைப்புகளையும் இணைத்து வடிவமைத்ததாக இந்தியாவின் சிறந்த கோயில்கள் (The Great Temples of  India - Ceylon and Burma Asian Educational Services - New delhi & Madras - 1988 - Page 43 - Slkm Temples) என்ற நூலில் சீக்கியக்கோயில் என்பதனுள் பொற்கோயில் என்ற கட்டுரையில் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.
   
    லாகூரிலிருந்து முப்பத்திரண்டு மைல் தூரத்தில் வெள்ளியும் தங்கமும் கலந்து கட்டுமானம் அமைத்த கோயிலாகவும் திகழ்கிறது. இந்துசமய மறுமலர்ச்சியாளரான கபீரின் சிந்தனைகளின் அடித்தளத்தில் குருநானக் அவர்கள் இந்து முஸ்லிம் மதக்கோட்பாடுகளை இணைக்கவேண்டும் என்ற அடிப்படையில் சீக்கியத்தை உருவாக்கியதாகக் கருத இடமுள்ளது.
   
    இராமலிங்கரும் அவர்காலத்தே தமிழகச் சூழலில் இருந்த இஸ்லாமிய, கிறித்தவ ஊடுருவாக்கச் சிந்தனைகளில் அவற்றை இணைத்து வழிபடுதலத்தை வடலூரில் நிர்மாணிக்கிறார் எனக் காணும்போது வியப்பு மேலிடுகிறது. சத்தியஞானசபை என்பது அதுவரை தமிழகத்தில் இருந்த வழிபடுதலங்களினின்றும் மாறுபட்டுப் புதிய நிர்மாணமாக அமைகிறது. எண்கோண அமைப்பில் சத்தியஞானசபையை உருவாக்கி ஒளிவழிபாட்டை சமஸ்கிருதச் சொல்லாடல் பிரயோகத்தில் ஜோதி தரிசனம் என்ற முறைமையை அமல்படுத்தினார். சிதம்பரத்திலிருந்து சிலமைல்தூரத்தில் வடலூரை சத்தியஞானசபையைத் தேர்வு செய்தார். சிதம்பரத்தைப் பூர்வஞான சிதம்பரம் என்றும் வடலூரை உத்தரஞான சிதம்பரம் எனக்கொண்டு அமைத்தார் என்பது பதிவு.
   
    அமிர்தசரஸ் பொற்கோயிலுக்கும் வடலூர் சத்தியஞான தருமச்சாலைக்கும் ஒரு பரோபகார ஒற்றுமையுள்ளது. வளாகத்துள் வருபவர்கள் பசியாறிச் செல்கின்றனர் எனும் பெருங்காருண்ய உபகாரமேயிது.
   
    சீக்கிய நூலான குருகிரந்தமும் இராமலிங்கரின் திருவருட்பாவும் கருத்துநிலையில் சில ஒருபோட்டுத்தன்மை உடையனவாக உள்ளன. குருகிரந்த ஜபுஜி (ஜபுஜி - ஜபம் - இறைவனுக்கு வணக்கம் செலுத்துதல்) யுள் புலப்படாத கடவுளின் குணநலன்கள் நிரல்படுத்தப்படுகின்றன.
    “அவர் உண்மையானவர் அவர் நாமம் உண்மையானது
     படைப்பு உண்மையானது கடவுள் பயமில்லாதவர்
     எதிரிகள் இல்லாதவர், அன்பு நிறைந்தவர்   
    பிறப்பு இறப்பு இல்லாதவர்” (ஜபுஜி சாகிபு - தமிழாக்கம், லூர்து சகாயராணி, முதுநிலைப்பட்டயச் சான்றிதழ் படிப்பு ஆய்வேடு - 1998 - மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம்) என்றவாறு கடவுட்கருத்தாக்கம் சித்திரிக்கப்பட்டுள்ளது.
   
    திருவருட்பாவில் இராமலிங்கர் கடவுளை,
    “இயற்கையிலே பாசங்கள் ஒன்றும் இலார் குணங்கள் ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர் செயற்கை இல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும் திரிபில்லார் களங்கமே இல்லார் தீமை ஒன்றும் இல்லார் வியப்பற வேண்டுதல் இல்லார் வேண்டாமை இல்லார் மெய்யே மெய்யாகி எங்கும் விளங்கி இன்பமயமாய் உயத்தரும் ஓர் சுத்த சிவானந்தசபைதனிலே ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்” (திருவருட்பா - திருச்சிற்றம்பலத் தெய்வமணி மாலை - 12) என்று கடவுள் பண்புநலன்கள் உரைக்கப்பட்டுள்ளன.
    ஜபுஜி            -    திருவருட்பா
    உண்மையானவர்        -    மெய்யே மெய்யாகி எங்கும் விளங்குபவர்
    அன்பு நிறைந்தவர்        -    அன்புருவாம் பரசிவமே
    பிறப்பு இறப்பு இல்லாதவர்    -    பிறப்பிலார் இறப்பிலார்
    என்றவாறு குருகிரந்தத்து ஜபுஜியிலும் இராமலிங்கரின் திருவருட்பாவிலும் கருத்துகள் ஒத்த தன்மையினவாய் விளங்குவதைக் காணமுடிகிறது.

    இறையின் முறைமை குறித்துப் பேசும் மற்றொரு இடமும் வியப்பில் ஆழ்த்துகிறது.
        “இறைமுறை என்பதுதான் வாழ்க்கை
         இறைமுறைமைக்குள் வாழ்வதுதான் ஆசீர்வாதம்
         இறைமுறைமையால் உயர்வும் தாழ்வும்
         இறைமுறைமையால் சந்தோசங்களும் துக்கங்களும்
         இறைமுறைமைக்குள்ளே ஒவ்வொருவரும் வாழ்கின்றனர்
         இறைமுறைமைக்கு வெளியே எவரும் இல்லை”
            என்பதாக ஜபுஜியில் இடம்பெற்றுள்ளது. அதே கருத்துடன் அருட்பாவின் வரிகள் பின்வருமாறு அமைகின்றன.

        “பாட்டுவித்தால் பாடுகின்றேன் பணிவித்தால்
            பணிகின்றேன் பதியே நின்னைக்
         கூட்டுவித்தால் கூடுகின்றேன் குழைவித்தால்
            குழைகின்றேன் குறித்த   ஊணை
         ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறங்குவித்தால்
            உறங்குகின்றேன் உறங்காதென்றும்
         ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் அந்தோ
            இச்சிறியேனால் ஆவதென்னே”
                (திருவருட்பா - தற்சுதந்திரம்இன்மை -  4)
    மேற்குறித்த பாடல்கள் மனித வாழ்வின் அனைத்துமே இறைவிருப்பின்படியே இறைமுறைமையாலே நடைபெறுகின்றன என்பதற்குக் கட்டியங்கூறுவது போல அமைத்திருப்பதைக் காணமுடிகிறது. அப்படியே கொஞ்சம் இருபதாம் நூற்றாண்டிற்கு நகர்ந்து வந்தால் பாரதியும் “யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய் தீதுநன்மையாவும் உந்தன் தெய்வலீலையன்றோ” என்கிறான்.

    எங்கிருந்தாலும் அருளாளர்களின் ஆன்மா ஒன்றுபோல்தான் அனுபவங்களை உணர்கின்றனவா அன்றி ஆண்டவர் அவர்க்கெல்லாம் ஒன்றேபோல உணர்த்துகின்றானா ? யாமொன்றறியேன் பராபாமே !





————————————————————————————————————————————————
தொடர்பு: இராம. மலர்விழி மங்கையர்க்கரசி (malarmangay64@gmail.com)

Saturday, October 21, 2017

கொங்கர்புளியங்குளம் தமிழி கல்வெட்டுக்களும் சமணர் சின்னங்களும் மாயன் வாழிபாடும்

முனைவர்.சுபாஷிணி



கொங்கற்புளியங்குளம். பண்டைய தமிழ் மக்களின் தொல் மரபுகள் தொடர்ச்சியாக இன்றும் பேணப்பட்டு வரும் ஒரு முக்கிய வரலாற்றுச் சிறப்புப் பெற்ற பகுதி. இன்று காண்பதற்குப் பாறையும் புதர்களும் தானே இருக்கின்றன என நினைப்போர் உள்ளே சென்று பார்த்தால் வளமான தமிழர் தொல் பழம் மரபுகள் இன்று உயிர்ப்புடன் இங்குத் தொடர்வதை அறியலாம்.

மதுரையின் திருமங்கலம் வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் கொங்கர்புளியங்குளம். தேனிக்குச் செல்லும் சாலையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தை அடுத்து அமைந்துள்ளது இந்தச் சிற்றூர். மதுரையிலிருந்து ஏறக்குறைய 15 கி.மீ தூரத்தில் உள்ளது இவ்வூர்.


பசுமை மாறாத வகையில் இப்பகுதி அமைந்திருக்கின்றது. இங்கு வாழும் மக்கள் சிறிய வகையில் பயிர் விவசாயம் செய்து வாழும் விவசாயிகள். நாகமலை பாறை பகுதிக்குச் செல்வதற்குக் கீழே நாட்டுப்புற வழிபாடு நடைபெறும் மாயன் கோயில் ஒன்று இங்குள்ளது. உருவங்கள் அற்ற வகையில் செங்குத்தான ஒரு  கல்லினை மட்டுமே வைத்து வழிபடும் மரபு இங்குள்ளது. மிகப் பழமையான வழிபாட்டுக் கூறுகள் மாற்றமடையாத நிலையில் இன்றும் தொடர்வதாக இந்த வழிபடு தலம் அமைந்திருக்கின்றது.

ஒரு செங்குத்தான கல்லை வைத்து அக்கல்லைக் கடவுளாக உருவகித்து மாலைகள் பூசைப் பொருட்கள் வைத்து வழிபாடு நடத்தப்படுகின்றது. இந்த மாயன் வழிபாட்டினை நினைக்கும் போது நம் சிந்தனையில் தென் அமெரிக்காவில் குறிப்பாக மெக்சிகோ, குவாட்டமாலா போன்ற நாடுகளில் இன்றைக்கு 4000 ஆண்டு வாக்கு எனக் கணக்கிடப்படும் மாயன் கலாச்சாரம் நினைவுக்கு வரலாம். பண்டைய மரபுகளில் இருக்கும் பல சடங்கு முறைகளில் இத்தகைய ஒற்றுமைகளை அதிகம் காணலாம். இவை ஆராயப்பட வேண்டியவை.

அத்தோடு சங்ககால இலக்கியத்தில் நாம் அறியும் மாயோன் என்ற கடவுளின் ஒரு கூராக இது அமைய வாய்ப்பிருக்கலாம் என்பதும் ஆராயப்பட வேண்டியதே.

இங்குள்ள மாயன் கோயிலுக்கு வடகிழக்குப் பகுதியில் இறந்தோரை எரிக்கும் ஒரு சுடலை இருக்கின்றது. இங்கு மக்கள் இறந்தவர்களைக் கொண்டு வந்து எரித்து சாம்பலையும் எலும்புத் துண்டுகளையும் எடுத்துச் செல்லும் மரபு இன்றும் தொடர்கின்றது.

இந்தக் கோயிலுக்கு பின்னால் உள்ள பாறையில் தான் இன்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முன்னர் சமண முனிவர்கள் தங்கியிருந்து பள்ளிக்கூடங்களை அமைத்து கல்வியும் கலையும் செழிக்கச் செய்துள்ளனர். அவர்களின் வாழ்விடமாக இங்குள்ள குகைத்தளம் அமைந்திருக்கின்றது. அங்கு முனிவர்கள் தங்க இடம் அமைத்துக் கொடுத்த நல்லுள்ளங்களின் பெயர்களை பண்டைய தமிழ் எழுத்துக்களில் கல்வெட்டாகப் பொறித்து வைத்துள்ளனர்.

உள்ள நாகமலைத்தொடர் பாறைகளின் மேற்பகுதியில் 60க்கும் மேற்பட்ட சமண கற்படுக்கைகள் உள்ளன. அங்கு செல்வதற்குக் கீழ்ப்பகுதியிலிருந்து ஏற்படுத்தப்பட்டுள்ள படிகளில் ஏறிச்செல்லவேண்டும்.

இங்கு அப்பாறையினைச் செதுக்கி வரிசை வரிசையாக படுக்கைகளை அமைத்திருக்கின்றனர்.  இது இயற்கையான குகைத்தளமாகும்.  இக்குகையின் முகப்புப் பகுதியில் காடி என அழைக்கப்படும்  நீர்வடி விளிம்பு அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேர் சுவற்றுப் பகுதியில் பெரிய அளவில் செதுக்கப்பட்ட தமிழி (பிராமி) எழுத்துக்கள் கொண்ட வாசகங்கள் உள்ளன.

முதல் கல்வெட்டின் பாடம்

குறகொடு பிதவன் உபச அன் உபறுவ(ன்)

இதன் பொருள், உபசன் ஆகிய உபறுவன் என்பவரால் இக்குகை கொடுக்கப்பட்டது. உபசன் என்பது சமய ஆசாரியன் என்னும் பொருள்படும். உபறுவன் என்பது ஆட்பெயர். குற என்னும் சொல் கூறை என்னும் பொருளில்  இக்குகையைக் குறிப்பது. கொடுபிதவன் என்பதைக் க் கொடுப்பித்தவன் என்று கொள்ளல் வேண்டும்.

2ம் கல்வெட்டு முதல் கல்வெட்டிலிருந்து இரண்டடி தூரத்தில் அதே பாறைப்பகுதியில் வெட்டப்பட்டுள்ளது. அதன் பாடம்

குறு கொடல்கு ஈத்தவன் செற் அதன் ஒன்

குறு என்பது கூரை என்றும், கொடல் என்பது கொடுத்தல் என்றும், குஈத்தவன் என்பதை குயித்தவன் எனக் கொண்டு குகையைச் செதுக்கியவன் எனப் பொருள் கொள்ளல் வேண்டும். இறுதியில் உள்ள இரண்டு குறியீடுகள்  பொன் என்பதைக் குறிப்பன.

மூன்றாவது கல்வெட்டுப் பாடம்

பாகன் ஊர் பேராதன் பிடன் இத்தவேபொன்

பாகனூரைச் சேர்ந்த பேராதன் பி(ட்)டன் கொடுத்த பொன் என்பது இதன் பொருள். வே பொன் என்பதை வெண்பொன் எனக் கொள்ளலாம். பாகனூர் என்பது இம்மலையின் பின்புறம் உள்ள நிலப்பகுதியாகும். பிடன் என்பது பிட்டன் என்னும் ஆள் பெயராகக் கொள்ளல் வேண்டும்.பாகனூரே இன்றைய சோழவந்தான் எனவும் கொள்ளலாம்.

இக்கல்வெட்டுக்கள் மூன்றும் கி.மு.2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

இக்கல்வெட்டின் மேற்குப் பகுதியில் பாறையின் மேல் சிறிய தீர்த்தங்கரர் திருமேனி செதுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் ஸ்ரீ அச்சணந்தி செயல் எனும் வட்டெழுத்துக் கல்வெட்டு உள்ளது. இது கி.பி. 9-10ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

கொங்கர்புளியங்குளம் இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட காலகட்டத்தில் சமண முனிவர்கள் தங்கி வாழ்ந்து கல்விச்சாலைகளை அமைத்து சமண நெறி தழைக்கச்செய்த ஒரு முக்கிய இடமாகும். பக்திகாலத்தில் சமண சமய வீழ்ச்சிக்குப் பின்னர் மீண்டும் கி.பி.9ம் நூற்றாண்டு வாக்கில் அச்சணந்தி முனிவர் ஏற்படுத்திய சீரிய நடவடிக்கைகளினால் இப்பகுதியில் மீண்டும் சமணம் தழைத்தோங்கியது. அதன் சான்றாக இருப்பது தான் நாம் இன்று காணும் தீர்த்தங்கரர் சிற்பமும் அதன் கீழ் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டுகளுமாகும்.

இந்த முக்கியப் புராதனச் சின்னத்தைப் பற்றி அக்கறை கொள்ளாத சுயநலவாதிகள் இங்கே பாறை உடைப்புப் பணிகளைத் தொடங்கி சில பகுதிகளை சேதப்படுத்தி விட்டனர். ஆயினும் இது தடுக்கப்பட்டு, இன்று கொங்கர்புளியங்குளம் புராதனச் சின்னங்கள் நாம் பார்த்து நம் வரலாற்றின் பழமையை நினைத்துப் பெருமைகொள்ளும் வகையில் இங்குள்ளன.

இங்கு வந்து செல்வோர் தங்கல் பெயர்களை கீறியும், கற்படுக்கைகளைச் சிதைத்தும் இச்சின்னங்களை அழிப்பது வேதனைக்குரிய விசயமாகும். இவை நம் சொத்துக்கள் என்று மனதில் உணர்ந்தால் இவற்றைச் சேதப்படுத்தும் எண்ணம் மனதில் எழாது. இதனை மனதில் கொண்டு இந்த வளம் மிக்க பகுதியை நமது பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றென உணர்ந்து பெருமை கொள்வோம்.

குறிப்பு- மாமதுரை, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்

Friday, October 20, 2017

நாய்க்கரச்சை

—— பழமைபேசி

இந்தகதையப் புரிந்து கொள்ள வேண்டுமானால், முதலில் நீங்கள் சீனிவெடி, இலட்சுமிவெடிகள் எப்படி வேலை செய்கின்றன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மருந்துப் பொருட்களை சரியான விகிதத்தில் கலக்கி, அதற்கு நடுவே ஒரு திரியையும் வைத்து தாள்களால் நன்கு இறுகச்சுற்றப்பட வேண்டும். தென்னாட்டு மக்கள் நிரம்பிய இணையத்தில், இது குறித்து சகலத்தையும் அறிந்தவர்கள் இருப்பர். சுருக்கமாகச் சொல்லின், கன்பவுடரெனும் பொட்டாசியம் நைட்ரேட் எனும் வேதிப்பொருள் திரியின் மூலம் பற்ற வைக்கப்படும் நெருப்பு, காற்றோடு சேர்ந்து வினையாற்றி நைட்ரசன் வாயுவை உண்டு செய்ய, அதன் மூலக்கூறுகள் பெருக்க, உயர் அழுத்தம் ஏற்பட்டு இறுகச்சுற்றப்பட்டிருக்கும் காகிதச்சுற்றினைப் பிளந்தடிக்க காதைக்கிழிக்கும் வண்ணம் பேரோசை உருவெடுக்கும்.

நிற்க. மேலே குறிப்பிட்டபடி சரியான விகிதத்தில் நைட்ரேட் கலக்கப்படாவிட்டாலோ அல்லது இதர வேதிப்பொருட்களின் சமன்பாடு மாறிவிட்டாலோ, பற்றவைக்கப்படும் நெருப்புத் தீண்டும் போது இடம்பெறும் வினையின் செயல் மாறுபடும். வெடிக்காமல், புசுபுசுவென்று குற்றோசையை எழுப்பிக் கொண்டே சற்றுத்தொலைவு போய் கடைசியில் ஓய்ந்து படுத்துவிடும். இதை நாங்கள், பட்டாசு குசுவுட்ருச்சுடாவென்போம். வெடிக்காது.. மேலும், நாய் தன்வாலை வவ்வவ்வெனக் கடித்துக் கொண்டே நாலு சுற்றுச்சுற்றிவிட்டு ‘ங்க்கவ்’வெனச் சொல்லிப் படுத்துக் கொள்வதைப் போல, சிலவேளைகளில் ஓரிரு வெடிகள் கரகரவெனச் சுற்றிச்சுற்றி வந்து பின்னர் ‘பொடுக்’கென்று சன்னமான சத்தத்தோடு படுத்துவிடும் இதை நாய்க்கரச்சு நமுத்துபோச்சுறாவென்போம்.



இப்படியான வெடிகளை, சரமாக அல்லாமல் தனிவெடியாக விடுவது உண்டு. இலட்சுமிவெடி, சரசுவதி வெடியெல்லாம் கனமாக நிறைய இறுக்கத்துடன் கெட்டியான தாள்களால் சுற்றப்பட்டு பார்ப்பதற்கே திகிலூட்டக்கூடியதாக இருக்கும். இவற்றை நுவாக்ரான், டெமாக்ரான் தகரடப்பாவில் நுழைத்து திரிமட்டும் வெளியே தெரியும்படி பற்ற வைக்க வேண்டும். அப்படிப் பற்றவைக்கும் போது பெருஞ்சத்தத்தோடு டப்பாவையும் வானத்தில் தூக்கியடித்து கூடுதலான ஓசையை உண்டு செய்யும். சீனிவெடி எனப்படுகிற வெடிகள்,, லேசான சிவப்புவண்ணத்தாளில் சுற்றப்பட்டிருக்கும் இவற்றை நுவாக்ரான் தகரத்தில் வைத்தால் தூக்கியடிக்காது. கனத்தின் காரணம், வெடிச்சத்தமும் குறைந்து போகும். ஆகவே, இவற்றை கொட்டாங்குச்சியின் கண்களில் ஒன்றை நோண்டிவிட்டு, அதன் துளையில் திரியை வெளியே தெரியும் வண்ணம் வைக்க வேண்டும்.

மழை ஈரம் இருக்குமென்பதால், கற்கள், ஆட்டாங்கல், அம்மி, உரல் போன்றவற்றின் மீது பட்டாசுநுழைக்கப்பட்ட கொட்டாங்குச்சியை வைத்துப் பற்ற வைக்க வேண்டும்.

இப்படித்தான், காலை ஏழுமணி இருக்கும். வாணா கோபால்சாமி நாய்க்கர் தூக்குப் போசியில் பால் வாங்கிக் கொண்டு அந்த வீதி வழியாகப் போய்க்கொண்டிருந்தார். நாய்க்கர், பெரும் கோபக்காரர். பையன்களுக்கு அவரென்றால் பெரும்பயம். அவர் வருவாரென்று நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. நாங்கள் எல்லாரும், பசனை கோயிலுக்கும் குருநாத வாத்தியார் வீட்டு மதிற்சுவருக்கும் நடுவே கும்பலாக நின்று கொண்டிருந்தோம். பாண்டியனின் தம்பி செளந்தரன்தான், சீனிவெடியைப் பற்ற வைக்கப் போனான். ’ஆராவது வர்றாங்களா பாருங்டா’ என்றான்.

சாமிநாதன் சாப்பாட்டுக்கடை தங்கவேலன் சுற்றிலும் முற்றிலும் பார்த்துவிட்டுச் சொன்னான், ‘ஆரும் வர்ல. நீ பத்த வெக்கிலாம்’.

செளந்தரனும் கையில் வைத்திருந்த ஊதுபத்தியால், கொட்டாங்குச்சியை குருநாத வாத்தியார் வீட்டு மதிலுக்கு வெளியே இருக்கும், மதிற்சுவர் மீது மாட்டுவண்டிகள் இடிக்கா வண்ணம் நடப்பட்டிருக்கும் அந்த முட்டாங்கல் மீது வைத்து திரியில் நெருப்பினை வைத்தான்.

வழக்கத்துக்கு மாறாக அது உடனே வெடிக்கவில்லை. ஒரு சில விநாடிகள் சற்றுக்கூடுதலான நேரத்தை, எடுத்துக் கொண்டிருந்தது. எங்களுக்கு அதன் பக்கத்தில் போகவும் அச்சம். அந்த இடைப்பட்ட வேளையில், பசனைகோயிலுக்கு மறுபக்க வீதியிலிருந்து வெளிப்பட்டு, பால்ப்போசியோடு வந்து கொண்டிருக்கிறார் வாணாகோபால்சாமி நாய்க்கர். எங்களுக்கா குலை நடுக்கம். எப்பவுமே ஊர்ப்பையன்களைப் பார்த்து மிரட்டலாக எதையாவது சொல்லிவிட்டுப் போவார். அன்று தீவாளி அல்லவா? நாய்க்கருக்கு வேறென்னவோ யோசனை. விறுவிறுவென வேட்டியை மடித்துக்கொண்ட நிலையில் பால்ப்போசியை தூக்கிக் கொண்டு பாண்டியனின் மளிகைக்கடை முன்பாக எட்டி நடையைப் போட்டார். முட்டாங்கல் மேலிருந்த கொட்டாங்குச்சிக்குள்ளிருந்த சீனிவெடி நாய்க்கரச்சை இடத் துவங்கியது.  கண்ணிமைக்கும் நேரத்தில், அவரின் கால்களுக்கிடையே ஆட்டம் போட்ட கொட்டாங்குச்சி உசுபுசுவென மேலெழுந்த வாக்கில் சரசரவென்றது.

அங்கிருப்பவர்களிலேயே நான்தான்  மிகவும் இளையவன். முதலில் இராசகோபால்தான் கத்தினான். ”தேங்காத்தொட்டி நாய்க்கர் வேட்டிக்குள்ள  பூந்த்துருச்சாட் இருக்கூ? டேய் ஓடுங்டா”.

இவன் போட்ட சத்தமும் கொட்டாங்குச்சியின் உரசலும் நாய்க்கருக்கு பதட்டத்தை உண்டுபண்ண, தூக்குப்போசியைப் போட்டு விட்டு வேட்டியை உதறத் தலைப்பட்டார் நாய்க்கர்.

வீதிமணலில் பால்ப்போசி கவிழ்ந்து மணல் ஈரத்தில் கலந்து கொண்டிருக்கிறது வாங்கி வந்த பால் முழுதும். அரக்கப்பரக்க வேட்டியை அவிழ்த்தவருக்கோ, தான் உள்ளாடை எதுவும் அணியாததைப் பற்றின கவலை இருக்கவில்லை. உதறலோடு உதறலாக உதறிக் கொண்டிருந்தார். அம்மணத்தைப் பார்த்த பையன்கள்,எல்லாரும் வெலவெலத்துப் பயந்து போய், சந்தைப்பேட்டைக்குள் நுழைந்து உப்பிலிமாரப்பன் பட்டிக்குள் ஓடிப் போய் கற்களின் மறைவில் ஒடுங்கிக் கொண்டனர்..

‘கண்டாரோலி பசங்க, எங்கிட்டியே வேலையக் காமிச்சிட்டாங்டா பாண்டியா!”, பசனை கோயல் தாண்டி கரியூடு, டீச்சரம்மா வீடு, ஆலாமரத்தூர் இராசகோபல் வீட்டு வரையிலும் ஓங்கி ஒலித்தது நாய்க்கரின் பேரலறல்.
________________________________________________________________________
தொடர்பு: பழமைபேசி (pazamaipesi@gmail.com)

Monday, October 16, 2017

தொல்லியல் ஆய்வால் நம் தொன்மை அறிவோம்



வணக்கம்.

தமிழகத்திற்கும் உலகின் ஏனைய பாகங்களுக்குமான கடல்வழிப்பயணம் என்பது பன்னெடுங்காலமாகத் தொடர்வது. ஐரோப்பியர்களும் அரேபியர்களும் தான் கடல் வழிப்பாதையை ஆட்சி செய்தவர்கள் என்றும், தமிழர்களுக்குத் தம் நாட்டினை விட்டுத் தூர நாடுகளுக்குச் செல்வது புதிய முயற்சியே, என்ற தவறான சிந்தனையானது, உலகில் நிகழ்ந்த வரலாற்றுச் சம்பவங்களை அறியாதோர் கொண்டிருக்கும் தவறான கருத்தாகும். 

இன்றைக்கு 4,000 ஆண்டு வாக்கில் தென் கிழக்கு நோக்கிச் சென்ற தமிழ்மக்கள் இந்தோனிசியா, பாப்புவா நியுகினி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவுகளிலும் தங்கள் தடம் பதித்துள்ளனர். இன்று இப்பகுதிகளில் வாழும் பூர்வ குடி மக்களிடையே நிகழ்த்தப்பட்டு வருகின்ற பல்வேறு வகைப்பட்ட ஆய்வுகள் இவ்வகைப் பயணங்களின் வழி தமிழகத்திலிருந்து கடல்வழியாக  இவர்கள் சென்றிருக்கக்கூடும் என்ற அனுமானங்களை உறுதி செய்வனவாக உள்ளன.

தொல்லியல் ஆய்வுகள் தான் தமிழகத்தின் பண்டைய நாகரிகத்தின் வயதினைக் கண்டறிய நமக்கிருக்கும் ஒரே சாதனம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை அதன் கடற்கரைப் பகுதிகள் குறிப்பிடத்தக்க துறைமுகப் பகுதிகளைக்கொண்டிருந்தன என்பதைக் காணமுடிகின்றது. தொண்டி, பட்டணம், முசிறி, ​​அரிக்கமேடு, வசவசமுத்திரம், ​மரக்காணம், ​காரைக்காடு/குடிக்காடு, ​காவிரிப்பூம்பட்டினம், ​அழகன்குளம், ​கொற்கை போன்றவை சங்ககாலத்து துறைமுகப் பட்டினங்களாகத் திகழ்ந்தன. ஆனால் கால ஓட்டத்தில் அரசியல் மாறுபாடுகளினால், இயற்கை சீற்றத்தினாலும், சமூக நிலை மாற்றங்களினாலும் இந்தப்பகுதிகள் அதன் சிறப்பையும் வளத்தையும் இழந்து இன்று முக்கியத்துவம் அற்ற பகுதிகளாக மக்களால் அறியப்படும் நிலையைக் காண்கின்றோம்.

ஆயினும் இத்தகை நிலப்பகுதிகளில் சங்க இலக்கியங்கள் காட்டும் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டும், இன்று சாதாரணமாக அப்பகுதியைக் காணும் போது கிடைக்கின்ற பண்டைய தொல்லியல் சின்னங்கள் மற்றும் மக்களின் வாழ்வியல் கூறுகளை உற்று நோக்கும் போதும் அப்பகுதிகள் ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட வேண்டிய பகுதியே என்ற சிந்தனை நிச்சயம் ஏற்படும். இப்படி அடையாளப்படுத்தி ஆராய முற்படும் போது தமிழர் நாகரிகத்தின் தொன்மையை அறிந்து கொள்ள உதவும் சான்றுகள் பல கிடைப்பது சாத்தியப்படும். 



கீழடியில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் பல தடைகளைக் கடந்து மூன்றாம் கட்டத்தை முடித்துள்ளது. அங்கு இனி ஆய்வு செய்ய ஒன்றுமில்லை என்ற கருத்துக்கு எதிராக மீண்டும் அப்பகுதியில் அகழ்வாய்வு செய்யப்படாமல் விடுபட்டுப் போன பகுதிகளையும் செய்ய வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத்தொடங்கி உள்ளது. இந்த நிலையில் அண்மைய காலத்தில் தமிழகத்தில் நிகழ்த்தப்பட்ட மிக முக்கிய அகழ்வாய்வாக அழகன்குளம் ஆய்வு திகழ்கின்றது. 



இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அழகன்குளத்தில் இந்த ஆண்டு மே மாதம் அகழ்வாய்வுப் பணியைத் தமிழக தொல்லியல் துறை தொடங்கி வெற்றிகரமாகச் செயல்படுத்தி முடித்துள்ளது. இந்த ஆய்வின் போது 52 இடங்களில் குழிகள் தோண்டப்பட்டன என்றும் அதில் சங்ககாலத்து கட்டுமானங்கள் சுடுமண் பாண்டங்கள், தமிழி எழுத்து பொறித்த மண்பாண்டங்கள், மணிகள் என ஏறக்குறைய 13,000 தொல்லியல் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டன என்பதும் அவை தமிழகத்திற்கும் ரோமானியர்களுக்கும் ஏனைய நாடுகளுக்கும் இருந்த வணிகத் தொடர்பினை உணர்த்துவதாகவும் இருக்கின்றன என்பதையும் அறியுக்கூடியதாக இருக்கின்றது. 



அழகன்குளத்தில் வெற்றிகரமாக ஆய்வினை நடத்தி முடித்த தமிழக தொல்லியல் துறையே, தேங்கி நிற்கும் கீழடி அகழ்வாய்வுப் பணிகளையும் முன்னெடுக்க வேண்டும் என்பதைத் தமிழ் மரபு அறக்கட்டளை வலியுறுத்துகின்றது. 



தமிழகத்தின் தொன்மையான தத்துவங்களில் ஒன்று சமணம். சமணச் சுவடுகளை அடையாளம் கண்டு அவற்றைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளைச் சேகரித்து அவற்றை ஒரு பிரத்தியேக வலைப்பக்கத்தில் உள்ளீடு செய்து வைக்க வேண்டும் என்ற தமிழ் மரபு அறக்கட்டளையின் எண்ணமும் இந்த மாத தொடக்கம் நிறைவேறியது. http://jainism.tamilheritage.org/ என்ற வலைப்பக்கம் இதுவரை நாம் வெளியிட்டுள்ள பதிவுகளையும் கட்டுரைகளையும் உள்ளடக்கிய வகையில் ஆய்வுத்தளத்தில் ஈடுபடுவோருக்குப் பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் மரபு அறக்கட்டளையின் தொடரும் செயல்பாடுகளில் இணைந்து கொள்ளுங்கள். உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்!

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி