Tuesday, April 30, 2019

திருமுக்கூடல் வீரசோழன் ஆதுலர் சாலை


——   முனைவர். ப. தேவி அறிவு செல்வம்



          ஆயிரம் வருடங்கள் தொன்மையான தமிழகக் கோயில் ஒன்றினுள்ளே மருத்துவமனை ஒன்று செயல்பட்டதைக் கல்வெட்டுச் செய்தியால் அறியமுடிகிறது. திருமுக்கூடல் கல்வெட்டில் அங்கு 'வீரசோழன்' என்னும் பெயரில் இயங்கிய மருத்துவமனை பற்றிய செய்தியின் சுருக்கம் கீழே:

கோயில் இருப்பிடம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள  திருமுக்கூடல் அருள்மிகு ஸ்ரீ அப்பன் வெங்கடேச பெருமாள் திருக்கோயில்

மூலவர்:
மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, திருமால் மூவரும் ஒரே திருக்கோலத்தில் உள்ளனர்.

மூலவரின் சிறப்பு:
இவர் கடுசர்க்கரை  படிமத்தால் ஆனவர், எனவே அபிஷேகம் இல்லாமல் தைலக்காப்பு மட்டும் நடைபெறுகிறது.

ஆதுலர் சாலை  அல்லது மருத்துவமனை பற்றி உள்ள கல்வெட்டுச் செய்தி:
கோயிலின் உள்ளே செயல்பட்டுக் கொண்டிருந்த இந்த மருத்துவமனை 15 படுக்கைகள் கொண்டிருந்தது.

மருத்துவர்:
ஆலம்பாக்கத்து சவர்ணன் கோதண்டராமன் அசுவத்தாமன் பட்டர் என்பவர் நாடி பார்த்து மருந்து கொடுப்பவராக இருந்துள்ளார்.  இவருக்கான ஊதியம் தினமும் 3  குறுணி நெல் 4 காசுகள்.

அறுவை சிகிச்சை செய்பவர்:
அறுவை சிகிச்சை  செய்யும் மருத்துவர்  சல்லிய கிரியை  பண்ணுவான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளார். இவருக்கான ஊதியம் தினம் 1 குறுணி நெல்லும் 2 காசுகளும்.

நீர் கொண்டு வருபவர்:
மருத்துவமனைக்குத் தண்ணீர் கொண்டு வருவதற்கு ஒரு பணியாள் இருந்துள்ளார்.  இவருக்கான ஊதியம் ஆண்டுக்கு 15 கலம் நெல்.

மருத்துவப் பணி மகளிர்:
மருத்துவப் பணி மகளிராக இருவர் இருந்துள்ளனர். இவர்கள் மருந்து அடும் பெண்கள் என அழைக்கப் பட்டுள்ளனர்.  இவர்களுக்கான ஊதியம் தினம் 4 நாழி நெல்லும் அரைக் காசும்.

நாவிதன்:
மருத்துவக் குழுவில் நாவிதர் ஒருவர் இருந்துள்ளார்.  நாவிதர்கள்  கத்தியைக் கையாள்வதில் திறமை பெற்றவர்கள். ஆதலால் சவரத் தொழிலையும், அறுவை தொழிலையும் செய்துள்ளனர். இவர் நரம்பு உடல் உறுப்புகள் பாதிக்கா வண்ணம் சிறு அறுவை சிகிச்சை செய்வதால் இவரும் மருத்துவர் என்று அழைக்கப்பட்டார்.  பிள்ளைப் பேற்றுத்  துறையில் நாவிதர் மனைவிமார் ஈடுபட்டதால் இவர்கள் மருத்துவச்சி என அழைக்கப்பட்டனர்.  நாவிதர்க்கான ஊதியம் நாளொன்றுக்கு 4 நாழி நெல்.

நோயாளிகள்:
நோயாளிகளை வியாதிப்பட்டு கிடப்பார் என்று பெயர் கொண்டு அழைத்ததாகக் கல்வெட்டுச் செய்தி குறிப்பிடுகின்றது. இவர்களுக்கு ஒரு வேளைக்கு ஒரு நாழி அரிசி வழங்கப்பட்டது.

மருந்துகள்:
ஆதுலர் சாலையில் ஒரு ஆண்டுக்குத் தேவையான பலவகையான மருந்துகளிருந்தன, அவை;
1.  பிராமியம் கடும் பூரி - 1 எண்ணிக்கை
2.  வாசா ஹரீ தகி - 2 படி
3.  தச மூலா ஹரீ தகி - 1படி
4.  பல்லாதக ஹரீ தகி -1  படி
5.  கண்டீரம் - 1 படி
6.  பலா  கேரண்ட தைலம் -1 தூணி
7.  லசு நாக ஏரண்ட தைலம் -1  தூணி
8.  பஞ்சக தைலம் -1 தூணி
9.  உத்தம கர்ணாதி தைலம் -1 தூணி
10.  பில்வாதி கிருதம் -1 பதக்கு
11.  மண்டூகர வடகம்-2000 எண்ணிக்கை
12.  திராவத்தி -1 நாழி
13.  விமலை - 2000 எண்ணிக்கை
14.  சுனேற்றி - 2000 எண்ணிக்கை
15.  தம் ராதி - 2000 எண்ணிக்கை
16.  வஜ்ர கல்பம் - 1 தூணி  1 பதக்கு
17.  கல்யாண லவணம் - 1  தூணி 1 பதக்கு
இந்த அனைத்து மருந்துகளையும் பத்திரப்படுத்திப் பாதுகாக்க 40 காசுகள் வழங்கப்பட்டுள்ளது என்று திருமுக்கூடல் கோயிலின் கல்வெட்டு செய்தி தெரிவிக்கின்றது.

இதேபோன்று ஆதுலர் சாலை( மருத்துவமனை) ஒன்று சென்னை வடபழனி முருகன் கோயிலின் உள்ளே இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.



சான்றாதாரங்கள்:
'திருமுக்கூடல்',  முனைவர் சீ. வசந்தி,  தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை வெளியீடு, 2013  பதிப்பு, பக்கம் 75-77.

அருள்மிகு திருமுக்கூடல் கரியமாணிக்க வரதராஜப் பெருமாள் திருக்கோயில்
http://www.tamilvu.org/ta/அருள்மிகு-திருமுக்கூடல்-கரியமாணிக்க-வரதராஜப்-பெருமாள்-திருக்கோயில்-139047



தொடர்பு:
முனைவர். ப. தேவி அறிவு செல்வம்,
மருந்தாக்கவியல் பேராசிரியை மதுரை.
https://www.facebook.com/devipharm



Monday, April 29, 2019

தமிழகத்தின் பெருந்தச்சர்கள்


——   முனைவர். ப. தேவி அறிவு செல்வம்


          தகுதிகள் வாய்ந்தவர்களால் மட்டுமே பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் நிலைத்து இருக்கும் கோயில்களையும், கோயில் படிமங்களையும், சிற்பங்களையும் உருவாக்க முடியும் என்பதை உணர்ந்த அக்கால அரசர்கள் சிற்பிகளுக்கும், பெருந் தச்சர்களுக்கும் பட்டப் பெயர்களையும், அவர்களின் உருவச் சிலைகளையும் அக்கோயிலிலேயே ஏற்படுத்தி பெருமை சேர்த்துள்ளனர்.

அவர்களில்;
1.  தஞ்சை பெருவுடையார் கோயிலில் குஞ்சர மல்லன் இராசராச பெருந்தச்சன் உருவச் சிலை உள்ளது.
2.  உத்திரமேரூர் விமானத்தை நிர்மாணித்தவர் பரமேஸ்வரா பெருந்தச்சன்.
3.  மாமல்ல சிற்பத்தை உருவாக்கியவர் கேவாத பெருந்தச்சன் என்று கல்வெட்டு செய்தி குறிப்பிடுகிறது.
4.  கோனேரி ராசபுரம் கோயிலின் கற்றளி செய்தவரின் உருவமும், அவர் பெயரும் கருவறை சுவரில் ஸ்வஸ்திஸ்ரீ மதுராந்தக தேவரான உத்தம சோழரை திருவயிறு  வாய்ந்த உடைய பிராட்டியார் திருக்கற்றளி எடுப்பித்த ஆலந்தூர்  உடையான சாத்தன் குண்டப்பன் ஆன அரசரான சேகரன். இவன் பட்டம் கட்டிய பெயர் இராசகேசரி மூவேந்தர் வேளான் எனக் கல்வெட்டு செய்தியும் உள்ளது.
5.  தில்லையின் வடக்கு மற்றும் கீழைக் கோபுர வாயிலில் கோபுரங்களை எடுப்பித்த 4 பேர்களின் உருவச்சிலைகள் அவர்களுடைய பெயர்களுடன் உள்ளது.
1.  சேவக பெருமாள்
2.  சேவகப் பெருமாளின் மகன் விசுவ முத்து
3.  இவனது  தம்பி காரண காரி
4.  திரை கொடை ஆசாரி திருமருகன் 


என்ற கல்வெட்டுச் செய்தியுடன் இவர்களுக்கு அளிக்கப்பட்ட நிலம் சிற்ப விருத்தி, சில்பின் காணி என்று அழைக்கப்பட்ட செய்திகளும் இங்கு கல்வெட்டு செய்தியாக உள்ளது.

 மேலும் சங்க இலக்கியங்களில் சிற்பிகளை நூலறி புலவர் என்றும் கோயில் கட்டடக்கலை நிபுணர்களைத் தெய்வ தச்சர் என்றும் குறிப்பிடுகிறது.

சிற்பி ஆனவர் சிற்பத்தை வடிக்கும் முன் செய்பவை: 
முதலில் தியானத்தில் அமர்வார். பிரார்த்தனை மூலம் சமாதி நிலையை அடைவார்.
 சுயத்தை ஆத்மனை  அறியும் நிலை  ஏற்படும்போது சிற்ப வடிவம் அவருக்குப் புலனாகும். அவ்வாறு புலனான வடிவத்தை அவர் பரம்பொருளில் வடிப்பார் அல்லது தியான ஸ்லோகத்தை மனதில் நிறுத்தி ஆத்மாவில் புலப்படும் வடிவத்தை வடிப்பார்.


சான்றாதாரங்கள்:
‘சோழ மண்டலத்து வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும்’, குடவாயில் பாலசுப்பிரமணியன், தஞ்சாவூர் : தமிழ்ப் பல்கலைக் கழகம் , 1987, பக்கம் 422-423.
மற்றும் சிற்ப சாஸ்திர நூல்கள்



தொடர்பு:
முனைவர். ப. தேவி அறிவு செல்வம்,
மருந்தாக்கவியல் பேராசிரியை மதுரை. 
https://www.facebook.com/devipharm

Friday, April 26, 2019

உலகமயமாக்கல் சூழலில் தமிழில் வணிகச்சொற்கள்

——    முனைவர் வீ.ரேணுகாதேவி


          உலகமயமாக்கல் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமல்லாது அந்நாட்டு மக்களின் வாழ்வியல் நெறிமுறைகள், பேசும் மொழி ஆகியவற்றிலும் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே உலகமயமாக்கல் பற்றிய எந்த விவாதத்திலும் விவரணையிலும் பொருளாதார விவகாரங்களை விவாதித்தல் மிக முக்கியமான பகுதியாக உள்ளது. உலகமயமாக்கலின் மாறுதலுண்டாக்கும் சக்திகள் தற்காலச் சமூக வாழ்க்கையின் பொருளாதார, அரசியல், பண்பாடு, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், மொழி என்னும் பரிமாணங்களுக்குள் ஆழமாக ஊடுருவிச் செல்கின்றன.

          தொழில்நுட்பத்தின் மீதும், அதன் விளைவாக உற்பத்தியாகும் வெகுஜனச் சந்தைப் பொருட்களின் மீதும் தீராத வெறி கொண்ட நிலை இன்று காணப்படுகின்றது. உலகமயமாக்கலின் காரணமாக வணிக நிறுவனங்களும், வணிகப் பொருட்களும் ஆங்கிலம் சார்ந்தே காணப்படுவதைப் பரவலாகப் பார்க்க முடிகின்றது.

          மதுரையிலிருந்து திண்டுக்கல்லை நோக்கிப் பயணம் மேற்கொண்டபோது இரு பக்கங்களிலும் கடந்து சென்ற கடைகளின் பெயர்களைப் பார்த்துக்கொண்டே செல்ல நேரிட்டது. அக்கடைகளில் காணப்பட்டப் பெயர்கள் 90 விழுக்காடு ஆங்கிலப் பெயர்களே.

          ஆட்டோ கன்சல்டிங், டூவீலர்  வாங்க விற்க, வர்ஷா டெய்லரிங், பேக்கரி ரூ ஸ்வீட்ஸ், கீர்த்தி செராமிக்ஸ், எக்ஸ்பிரஸ்  கார் வாஷ், கண்ணா காபி பார், இன்ஜினியரிங் ஒர்க்ஸ், சாய் கிரானைட், அம்மன் சிமென்ட் ஒர்க்ஸ், சரஸ்வதி மெஸ், ஹேர் ஸ்பெசாலிட்டி, சூப்பர் சிக்கன், ஜான்சிராணி காம்பிளக்ஸ், ராம்கோ சூப்பர் ஆப்டிக்கல்ஸ், ட்ரைவாஸ் எனப் பெயர்கள் ஆங்கிலத்திலும், ஒலிபெயர்ப்பிலும் எழுதப்பட்டிருந்தன.

          இன்று ஆங்கிலம் வணிகம் சார்ந்த இடங்களில்தான் மிக அதிகமாக இடம் பெற்றுள்ளது. திரைப்படங்கள் நடிகர்களுக்கு அளிக்கப்படும் பட்டங்கள், திரைத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்கள், தெருவில் காணப்படும் நிறுவனப் பெயர்கள் என அனைத்து இடங்களிலும் ஆங்கிலமே நீக்கமற நிறைந்துள்ளது.

திரைப்படப் பெயர்கள்:
          மம்மி, டாடி, யங் இந்தியா, ஜென்டில்மேன், ஒன்ஸ்மோர், பீட்சா, டூயட், லவ்பேர்ட்ஸ், மும்பை எக்ஸ்பிரஸ், பிரண்ட்ஸ் என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.  தமிழக அரசு திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைத்தல், வரிவிலக்கு அளிக்கப்படும் என அறிவித்துள்ள போதும் இந்நிலைத் தொடரத்தான் செய்கின்றது.

திரையுலகில்:
          டைரக்டர், ஹீரோ, ஹீரோயின், வில்லன், டச் அப் மேன், டச் அப் வுமன், ஆர்ட் டைரக்டர், சினிமாட்டோகிராபர், சூட்டிங், ஸ்டோரி, டயலாக், ஸ்டார்ட், கட், மேக்கப், பிலிம், அவுட்டோர் யூனிட், என அனைத்தும் ஆங்கில மயமே.

நடிகர்களுக்குக் கொடுக்கப்படுகின்ற பட்டங்கள்:
          சூப்பர் ஸ்டார் ரஜினி, சூப்பர் ஆக்டர் கமல், ஆக்சன் கிங் அர்ஜுன், காமெடி கிங்,  எஸ்.வி.சேகர்

தெருவில் காணப்பெறும் நிறுவனப் பெயர்கள்:
          லாண்டரி, ஓட்டல், எலக்ட்ரிக்கல்ஸ், டைலர்ஸ், கம்பெனி, சாமில், ஷூமார்ட், டெக்ஸ்டைல்ஸ், ஜுவல்லர்ஸ், புக் ஸ்டால், பேங்க், பைனான்சியர்ஸ், ஷாப், ஸ்டோர், சூப்பர் மார்க்கெட், லெண்டிங் லைப்ரரி என ஏராளம்.

தமிழ் பத்திரிகைகளின் பெயர்கள்:
          ஜுனியர் போஸ்ட், இந்தியா டுடே, விசிட்டர், ஹெல்த்,  சஸ்பென்ஸ், போலீஸ் ரிப்போட்டர்,  சினிமா எக்ஸ்பிரஸ்,  குமுதம் ரிப்போட்டர்,  ஜுனியர் விகடன்.

உணவகங்களிலும் இல்லங்களிலும் பரிமாறப்படும் உணவு வகைகளின் பெயர்கள்:
          புல் மீல்ஸ், கேக், கூல்டிரிங்ஸ், ஜுஸ், ஐஸ் க்ரீம், ஸுவீட், காபி, பப்ஸ், பிரட், பட்டர், ஜாம், பிஸ்கெட்.

பணியிடங்களில்:
          பாண்ட், சர்ட், ஜுன்ஸ், ஜாக்கட், பிளவுஸ், டைட் பேண்ட், டைட் சர்ட், பெல்பாட்டம், புல்ஹேண்ட்,  ரெடிமேட், சாரி, சுடிதார்.

அலுவலகங்களில்:
          டைரக்டர், டீன், மேனேஜர், கிளார்க், டெலிபோன் ஆபரேட்டர், பியூன், அட்டண்டர், வாட்ச்மேன், அசிஸ்டெண்ட், லாக்கர், டிராயர், பைல், பேப்பர், கம்ப்யூட்டர், ஜெனரல் மேனேஜர், சூப்பிரண்டெண்ட், சூப்பர்வைசர், காண்ட்ராக்டர், ஆடிட்டர், ஆபீசர்.

கல்வி நிலையங்களில்:
          பல்கலைக்கழகம், காலேஜ், ரெஜிஸ்டார், வைஸ்-சான்சலர், புரொபஸர், லெக்சரர், பிரின்ஸிபால், டீச்சர், ஸ்டூடண்ட், பஸ்ட் இயர், பைனல் இயர், டெஸ்ட், அசைன்மெண்ட், ரிசல்ட், பாஸ், பெயில்.

தொழிலகங்களில்:
          அப்ளிகேஷன், அட்வைர்டைஸ்மெண்ட், இன்டர்வியூ செலக்சன், அப்பாயின்ட்மெண்ட், பிரமோசன், கிரேட்.

விளையாட்டுகள்:
          கிரிக்கெட், பேஸ்பால், புட்பால், டென்னிஸ், ஹாக்கி, செஸ், பாக்ஸிங்.

நோய் வரின்:
          பீவர், டாக்டர், நர்ஸ், சிஸ்டர், இன்ஞ்செக்ஷன், டிரிப், ஆபரேசன்,  ஹார்ட் அட்டாக், குளுகோஸ், டிரிப்ஸ்.

பேருந்துகளில்:
          ஸ்டாப், ஹோல்டான், ரைட், டிக்கெட், டிரைவர், பஸ்ஸ்டாண்ட், செக்கிங், கண்டக்டர், இன்ஸ்பெக்டர், மார்க்கெட், ஜங்சன், ஏர்போர்ட், பஜார், மெயின் ஸ்டிரீட்.

என எங்கெங்கு காணினும் ஆங்கிலம், பல சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் இருப்பினும் ஆங்கில மோகத்தின் காரணமாக ஆங்கிலச் சொற்களின் பயன்பாடு எங்கும் காணப்படுகின்றது. நல்ல தமிழில் பேச வேண்டும், எழுத வேண்டும், பெயரிடப்பட வேண்டும். இல்லையெனில் பாரதியின் தமிழன்னை கூறுவது போல்
                    மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
                    மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
                    என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ
                    இந்த வசையெனக் கெய்திடாலோ?
என்பது உண்மையாகும்.

          எனவே நாம் தான் நல்ல நல்ல மொழி பெயர்ப்புகளையும், கலைச் சொற்களையும் ஆக்கித் தரவேண்டும்.







தொடர்பு:
முனைவர் வீ.ரேணுகாதேவி
(prof.renuga@gmail.com)
தகைசால் பேராசிரியர்
மேனாள் துறைத்தலைவர்
மொழியியல் துறை
மேனாள் புலத்தலைவர்
மொழியியல் மற்றும் தகவல் தொடர்பியல் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை – 625 021.

Wednesday, April 24, 2019

"எம்.ஜி.ஆர். என்றொரு தேவதூதன்"

——    கதிரவன் 

          1987-88 ம் வருடம், நான்  8 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். இயல்பாகவே ஓவியம் வரைவதில் அதிக நாட்டம் காட்டியதால் வகுப்பு ஆசிரியர்கள் அனைவராலும் கவனிக்கப்பட்டு உற்சாகப்படுத்தப்பட்டேன், "மெட்ராசுல ஓவியக்கல்லூரி இருக்கு, அங்க போயி படிச்சா பெரிய ஆர்ட்டிஸ்ட் ஆயிடுவ " என்று உசுப்பேற்றி விட்டனர்,

          அதன்  பிறகு வேறு எதிலும் கவனம் செல்லவில்லை, ஓவியக்கல்லூரி கனவிலேயே வாழ்ந்துகொண்டிருந்தேன். வீட்டில் சூழ்நிலையே வேறு,பெரிய படிப்பாளி குடும்பம், அப்பா தமிழாசிரியர், திராவிட இயக்கங்களில் தீவிரமாக  இயங்கிக்கொண்டிருந்தவர், அக்காவும் தம்பியும் புத்தகப்புழுக்கள், கணக்குப்புலிகள்! வீட்டில் நான்  எப்பொழுதுமே குற்றவாளிக் கூண்டில்தான் !      “அவங்களைப்பாரு! எல்லா பாடத்துலயும் 85 % மதிப்பெண்கள்! ஆனா  நீ?!" என்ற சாட்சிகளில்லாத விசாரணைக்குப்பின் பிரம்படி தண்டனை என்பது வழக்கமான ஒன்று !

          எனது இலட்சியத்தை அடைய உதவும் ஒரு "divine intervention" க்காக அனுதினமும் வேண்டிக்கொண்டிருந்த காலம் அது!

          இந்த சூழ்நிலையில், எங்கள் தெருவில் ஒரு அண்ணா பெயர்ப்பலகைகள் எழுதும் கடை வைத்திருந்தார். எனக்கு அந்த  கடை தான் தப்பிக்கும் புகலிடம்.  அந்த  அண்ணா என்னை நிறைய வரையச் சொல்லி ஊக்கப்படுத்துவார் !  அதற்காக அப்பாவால் கண்டிக்கப்பட்டும் அதை அவர் பொருட்படுத்தவில்லை.

          அரையாண்டு தேர்வு விடுமுறையில் நான் ஏறக்குறைய அந்த  கடையின் ஊழியனாகவே மாறிவிட்டேன்.

          அந்த சமயத்தில் கோவையில் அதிமுக சொந்த கட்டிடம் வாங்கி அதிமுக  மாவட்ட தலைமையகம் திறக்க ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. அந்த  கட்டிடத்தில்  சுவரோவியம் மற்றும் பேனர்கள் வரையும் பணியை அந்த  அண்ணா பெற்றிருந்தார், கட்டிடத்தைத்   திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் திறப்பதாக ஏற்பாடு, அப்பொழுது அவர் முதலமைச்சர், அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து திரும்பியிருந்தார்.

          விழாவிற்குக் கடைசி மூன்று நாட்கள்  நாங்கள் இரவு பகலாக வேலை செய்துகொண்டிருந்தோம், விழாவிற்கு முதல் நாள் மாலை, எம்.ஜி.ஆர் அவர்கள் விழா ஏற்பாடுகளைப் பார்வையிட அந்த  கட்டிடத்திற்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.  ஒரே பரபரப்பு, பெரிய கூட்டம் கூடிவிட்டது, எங்களுக்கு விரைந்து வேலையே முடிக்கச்சொல்லி நெருக்கடி. 

          இரவு சுமார் ஒன்பது மணியளவில் எம்.ஜி.ஆர். அவர்களும் ஜானகி அம்மா அவர்களும் பெரிய மந்திரிமார் படையுடன் விழா கட்டிடத்திற்கு வந்தார்கள். எம்.ஜி.ஆர்  அவர்கள் விழா ஏற்பாடுகளைப் பார்வையிட்டுக்கொண்டே மெதுவாக நடந்து வந்தார், சிகிச்சைக்குப்பின் உடல் தளர்ந்திருந்தது. 

          நான் திரு அண்ணாதுரை அவர்களின் படத்தை வரைந்துகொண்டிருந்தேன்.  என் அருகே வந்ததும் சற்று நின்றார், நான் வரைவதை விட்டுவிட்டு "ஆ" வென அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். திரையில் பார்த்த அந்த உருவம் நேரில் அதுவும் மிக அருகில் நிற்பதை என்னால் நம்ப முடியவில்லை, கனவு போல இருந்தது! ,

          அப்பொழுது, விழா ஏற்பாடுகளுக்குப் பொறுப்பான ஒருவர் என்னைக்காட்டி,    “இந்த பையன் ஸ்கூல் படிச்சிட்டே வேலையும் செய்யிறான்! நல்ல வரையிறான் " என்று அறிமுகப்படுத்தினார்,

          எம்.ஜி.ஆர். அவர்கள் என் தோளைத்தட்டி, கைகளை ஆட்டி ஏதோ சைகை செய்தார். பேச்சு வரவில்லை, எனக்கு ஒன்றும் புரியவில்லை, ஆனால்  அறையிலிருந்த அனைவரும்  என்னைப் பார்த்து  "என்ன வேணுமுன்னு கேக்கறார் ! சொல்லு" என்று கத்தினார்கள்! உடனே நான்  சுதாரித்துக்கொண்டு  “மெட்ராசுல ஓவியக்கல்லூரியில் படிக்கணும்" என்றேன். சிரித்தபடி தட்டிக்கொடுத்துவிட்டு ஜிப்பா பாக்கட்டில்  கையை விட்டு சில நூறு ரூபாய்த் தாள்களை எடுத்துச் சுருட்டி என் கையில் வைத்து அழுத்தினார்.  பணத்தைக் கொடுத்ததும் அருகில் நின்றிருந்த  தனது தனிச்செயலரை (திரு.பரமசிவம் ஐ.ஏ.எஸ்.) அழைத்து சைகையில் ஏதோ சொல்லிவிட்டு நகர்ந்து சென்றுவிட்டார்! தனிச்செயலர் என்னை அழைத்து எனது பெயர், முகவரி ஆகியவற்றைக் கேட்டுக் குறித்துக்கொண்டார். நடந்ததெல்லாம் ஏதோ பிரமை போல இருந்தது எனக்கு!

          ஒரு வாரம் கழித்து வீட்டுக்கு ஒரு கடிதம் வந்தது. சென்னை ஓவியக்கல்லூரி முதல்வரிடமிருந்து, "உடனே வந்து முதல்வரைச் சந்திக்கவும்" என்று குறிப்பிட்டிருந்தது. அப்பா தன்  சக்தியையும்  மீறி ஏதோ நடக்கிறது என்று எண்ணி மௌனமாக இருந்துவிட்டார். நான் அவரிடம் காசு கூட கேட்கவில்லை, எம்.ஜி.ஆர். அவர்கள்  கொடுத்த காசு என்னிடம் இருந்தது. அம்மா சென்னையிலிருந்த ஒரு மாமாவுக்குத்  தகவல் அனுப்பிவிட்டார்கள். நான் தனியாக ரயிலேறி சென்னை சென்று நேரே ஓவியக்கல்லூரி அலுவலகத்திற்குச் சென்றுவிட்டேன். கோவையிலிருந்து நான்  வந்திருக்கிறேன் என்று கூறி கடிதத்தைக் காண்பித்தேன். அங்கேயும் பரபரப்பு, அப்பொழுது கல்லூரி முதல்வர் திரு.சந்தானராஜ் அவர்கள், அவரும் பிற ஆசிரியர்களும் அலுவலகத்தில் கூடிவிட்டனர். என்னை உள்ளே அழைத்தனர். முதல்வர் என்னைப் பார்த்து  "தம்பி முதல்வர் ஆபிசிலிருந்து எங்களுக்கு ஒரு லெட்டர் வந்திருக்கு, உனக்கு உடனே காலேஜில ஒரு சீட் கொடுக்கச்சொல்லி கேட்டிருக்காங்க, முதல்வரே   கையெழுத்து போட்டிருக்காருயாரப்பா நீ? என்ன நடந்தது " என்று கேட்டார். 

          நான் நடந்ததைக் கூறினேன், வியப்புடன் அனைத்தையும் கேட்டுவிட்டு, "சரி, சர்டிபிகேட் எல்லாம் சப்மிட் பண்ணிடு, நீ இன்னைக்கே காலேஜில சேர்ந்துக்கலாம், உனக்கு எண்ட்ரன்ஸ் எக்ஸாம் எல்லாம் கிடையாது" என்று கூறினார். நான் மெதுவாக  "சார் சர்டிபிகேட் எல்லாம் ஸ்கூல்ல  இருக்கு, நான் 8ம் வகுப்பு படிச்சிட்டிருக்கேன்" என்று கூறினேன்! அவர்களுக்கு அதிர்ச்சி!  " என்னது இப்பதான் 8  ஆவது படிக்கிறாயா" என்று கேட்டார்கள் (ஓவியக்கல்லூரி பட்டப்படிப்பு, பத்தாவது முடித்தபின் ஐந்து  வருடங்கள்) "ஆமாம் சார்" என்று தலையாட்டினேன்! சற்று நேரம் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு "சரி தம்பி கொஞ்சம் வெளியில் நில்லு , மறுபடியும் கூப்பிடறோம்" என்றார்கள், சற்று நேரம் கழித்து மீண்டும் உள்ளே அழைத்தார்கள். முதல்வர் பேசினார் "தம்பி உனக்கு சீட் கன்பார்ம், ஆன  எப்படியாவது பத்தாவது முடிச்சிட்டு வந்துடு" என்று கூறினார்!

அதன்  பின் எல்லாம் புயல் வேகத்தில் நடந்தது;   
கோவை திரும்பி நடந்ததைக் கூறியதும் அப்பா வருத்தத்துடன்  தலையாட்டிவிட்டார். நேரே பள்ளி சென்றேன். தலைமையாசிரியரிடம் விஷயத்தைக் கூறியதும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வேண்டியதைச் செய்வதாகக் கூறினார், மார்ச் மாதம்  நடக்கும் பத்தாம்  வகுப்பு  பொதுத்தேர்வில் தனித்தேர்வராக எழுதத் தயாரிக்கத்துவங்கிவிட்டேன். மார்ச் மாத தேர்வில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுவிட்டேன்! ( வழக்கம் போல ஜஸ்ட் பாஸ்!) ஜூன் மாதத்தில் கல்லூரியிலும் சேர்ந்துவிட்டேன்!

          டிசம்பர் மாதத்தில் எம்.ஜி.ஆர்.  இறந்துவிட்டார். நான்  அப்பொழுது  கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். பள்ளி நாட்களிலேயே அப்பாவின் திராவிட இயக்க செயல்பாடுகளைக்  கவனித்து வளர்ந்ததாலும்  அப்பொழுதே சில புத்தகங்கள் படிக்கத் துவங்கியிருந்ததாலும், எம்.ஜி.ஆர் அவர்களின் மேல் அவருடைய திரை சாகசங்களை ரசித்ததைத் தவிரப் பெரிய ஈடுபாடு இருந்தது கிடையாது. ஆனால் அவருடைய வள்ளல் தன்மையும், வேண்டி  வருவோர்க்கு இல்லையெனாது வழங்கும் குணத்தையும் எதிர்க்கருத்து கொண்டவர்களே பாராட்டிப்பேசவும் கேட்டிருக்கிறேன். 

          தமிழ் நாட்டின் எங்கோ ஒரு மூலையில் இருந்துகொண்டு, ஆசைப்பட்ட ஒரு இலக்கை எண்ணி கனவு மட்டும் கண்டுகொண்டிருந்த ஒரு சிறுவனுக்கு,  அது கைகூடச் சாத்தியமில்லாத சூழ்நிலையிலும், அவன் முன் திடீரென ஒரு தேவதைபோல  தோன்றி, அவனுடைய நியாயமான ஆசையை நிறைவேற்றிக் கொடுத்த திரு எம்.ஜி.ஆர்.  அவர்கள்  என்னைப் பொறுத்தவரையில் ஒரு தேவதூதன் தான் !


__________________

கதிரவன் கோவையைச் சேர்ந்தவர்.   சென்னை ஓவியக்கல்லூரியில் "வடிவமைப்பு மற்றும் காட்சிவழித்தொடர்பு " (Design & visual communication) பட்டப்படிப்பு முடித்தவர். கல்லூரி முடித்தபின் அனிமேஷன் துறையில் 10 ஆண்டுகள் பணியும், இந்தியாவில் தயாரித்த அணைத்து அனிமேஷன் திரைப்படங்களிலும் பணியாற்றி இருக்கிறார். அதன் தொடர்ச்சியாக அடுத்த 10 ஆண்டுகள் பொழுது போக்கு பூங்காக்கள் வடிவமைத்தல் மற்றும் கட்டமைத்தல் (designing  and Developing Theme parks and amusement parks) துறையில் பணியாற்றுகிறார். தற்பொழுது, தனி நிறுவனம் துவக்கி (www.mustudios.net), அந்தமான் - நிக்கோபார் தீவுகளிலும் , லட்சத் தீவுகளிலும் அரசின் சுற்றுலா வளர்ச்சி பணிகளின் ஆலோசகராக (Consultant) பணியாற்றி வருகிறார். மலைப் பகுதிகள் மற்றும் கடற்கரைப் பகுதிகள்  போன்ற  சூழல் உணர்திறன் மண்டல (Eco Sensitive Zones) சுற்றுலா வளர்ச்சி திட்டங்களின் ஆலோசகராகவும் இருந்து வருகிறார். 
 
              

Tuesday, April 23, 2019

பல்சுவைப் பாடல்கள்

-- தேமொழி

"பல்சுவைப் பாடல்கள்" என்ற தலைப்பின் கீழ் இங்குத் தொகுக்கப்பட்ட பாடல்கள் யாவும் ரவிசந்திரிகா (மீ. ப. சோமசுந்தரம், வானதி பதிப்பகம், நான்காம் பதிப்பு: 1989)  என்ற நூலில் மீ.ப. சோமு கதையின் இடையில், ஆங்காங்கே சூழ்நிலைக்குப் பொருத்தமாகக் குறிப்பிட்டுச் சென்ற பாடல்கள். மொத்தம் 25 பாடல்களின் இடத்திற்குப் பொருத்தமான பாடல்வரிகளைக் கொடுத்திருக்கிறார்.  இவை சித்தர் பாடல், நாடோடிப்பாடல், தேவாரம், திருமூலர் பாடல், பட்டினத்தார், குறவஞ்சி எனப் பற்பல வகையான பாடல்கள்.

கதையில் இடம்பெற்ற பாடல்களின் முழுவரிகளையும்  அவர் கொடுத்திருந்தால் அந்தப்பாடல்களும், பாடலின் சில வரிகள் மட்டுமே கொடுக்கப்பட்டு இருந்தால் முழுப் பாடலும், அந்தப்பாடலுக்கு  வெவ்வேறு வடிவங்களும் இருப்பின் அவையும் இணையத்தில் தேடி இங்குத் தொகுக்கப்பட்டுள்ளது


1.
கோமாளிக் கூத்துப் பாடல்:

முதல் கோமாளி:
கோமாளி வேஷக்காரன் ராமராமா - நான் 
          ஏமாளி யல்லவடா ராமராமா
ஆனையைப் பிடித்திழுப்பேன் ராமராமா - அந்தப் 
          பூனையைக் கண்டோடுவேண்டா ராமராமா

புலியைப் பிடித்திழுப்பேன் ராமராமா - அந்த 
          எலியைக் கண்டோடுவேண்டா ராமராமா
சிங்கத்தைப் பிடித்திழுப்பேன் ராமராமா - பெண்டாட்டித்
          தங்கத்தைக் கண்டோடுவேண்டா ராமராமா

மற்றொரு கோமாளி ...
"அப்படியானால், ஏ கோமாளி! உன்னுடைய பெண்டாட்டியைத் தான் பூனை என்றும், எலி என்றும், தங்கம் என்றும் சொன்னாயோ?” என்று வசன நடையிலே கேட்டு விட்டுக் கீழ்க் கண்டவாறு பாட ஆரம்பித்தான்:

கோடாலிக் கொண்டை போட்டு - ஏ தங்கமே தங்கம்
          கோயிலுக்கு வார பெண்ணே - ஏ தங்கமே தங்கம் 
கோடாலிக் கொண்டையிலே - அடியே தங்கமே தங்கம்
          கொழுந்திருந்து வாடுதடி - தங்கமே தங்கம் 

இப்படிக் கோமாளிகளின் உரையாடல்  நடந்து கொண்டிருக்கும் போதே ஒரு பெண்கள் குழு  புறப்பட்டு வந்தது. 

தன்னானே என்றுதான் சொல்லுங்களேன் - உங்க
          நாவுக்குச் சர்க்கரை நான் தாரேன் 
தில்லாலே என்றுதான் சொல்லுங்களேன் - நீங்க
          தின்னச் சர்க்கரை நான் தாரேன் 

ஆனை வாரதைப் பாருங்களேன் - ஆனை
          அசைஞ்சு வாரதைப் பாருங்களேன்! 
ஆனைப்படலம் போலே நம்ப தேவதை
          அட்டிகை மின்னலைப் பாருங்களேன்! 

குதிரை வாரதைப் பாருங்களேன் - குதிரை
          குதிச்சு வாரதைப் பாருங்களேன் 
குதிரைப் படலம்போல நம்ப தேவதை
          கொலுசு மின்னலைப் பாருங்களேன்! 

இதைத் தொடர்ந்து கோமாளி பாட ஆரம்பித்தான்:
தங்கத்தாலே தாம்பாளமாம்-பெண்டுகளா 

இப்படிக் கோமாளி ஆரம்பித்ததும் அடுத்த அடியைப் பெண்கள் பாடினார்கள்.
சரம் சரமாப் பூச்சரமாம் - ஏ கோமாளி!

கோமாளி ஒரு அடி பாடவும், பெண்கள் அடுத்த அடி பாடவுமாக இந்தப் பாடல் மாறி மாறி நடந்தது. 

கோமாளி: தங்கத்தாலே தாம்பாளமாம்  - பெண்டுகளா
பெண்கள்: சரஞ்சரமாப் பூச்சரமாம் - ஏ கோமாளி!
கோமாளி: பூச்சரத்தைக் கைப்பிடிச்சு - பெண்டுகளா
பெண்கள்: புறப்பட்டாளே மாரியம்மா - ஏ கோமாளி! 
கோமாளி: வெள்ளியாலே தாம்பாளமாம் - பெண்டுகளா
பெண்கள்: விதம் விதமாப் பூச்சரமாம் - ஏ கோமாளி 
கோமாளி: பூச்சரத்தைக் கைப்பிடிச்சார் - பெண்டுகளா
பெண்கள்: புறப்பட்டாரே அய்யனாரு - ஏ கோமாளி 
கோமாளி: அருவிக்கரை அரசமரம் - பெண்டுகளா
பெண்கள்: ஆனைகட்டும் பூவரசாம் - ஏ கோமாளி 
கோமாளி: ஆனைமேலே அம்பாரியாம் - பெண்டுகளா
பெண்கள்: அம்பாரியில் கோமாளியாம் - ஏ கோமாளி 


_______________________________________

2.
குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்:

வேதம்நீ வேதவேதாந்தம்நீ எனையாளும்
          வித்தகன் தானும் நீயே 
மெய்ஞ்ஞான வீடுநீ வீட்டின் விளக்குநீ
          விரிகதிர்ச் சுடரும் நீயே 
நாதன்நீ நவநாத சித்தன்நீ முத்தன்நீ
          நாதாந்த மூர்த்தி நீயே
நற்குணம் குடிகொண்ட பாதுஷாவான குரு
          நாதன் முகயத்தீனே! (முஹைதீனே)

_______________________________________
3.

 “மரப்பாச்சிக் கல்யாணம்”:

சிறுவர் சிறுமியர் விளையாடும்பொழுது ...
 “மரப்பாச்சிக் கல்யாணம்” விழா நடத்திப் பாடும் நையாண்டி பாடல் 

தாராபுரம் சம்பந்தம் -அத்தானை
          தாசில்தார் என்று சொன்னாங்க 
தாராபுரம் போய்ப் பார்த்தேன்-அத்தான்
          தமுக்கடிக்கக் கண்டேனே! 

இலந்தக்குளம் சம்பந்தம்-அத்தானை
          இஞ்சினீயர்னு சொன்னாங்க 
இலந்தக்குளம் போய்ப் பார்த்தேன்-அத்தான்
          இட்டிலி விற்கக் கண்டேனே! 

திருச்சினாப்பள்ளி சம்பந்தம் - அத்தானை 
          திவான் என்று சொன்னாங்க 
திருச்சினாப்பள்ளி போய்ப் பார்த்தேன் -அத்தான்
          தீவட்டி பிடிக்கக் கண்டேனே! 

கழுகுமலைச் சம்பந்தம்-அத்தானை
          கலெக்டர் என்று சொன்னாங்க 
கழுகுமலை போய்ப் பார்த்தேன்-அத்தான்
          கழுதை மேய்க்கக் கண்டேனே! 

வண்ணார்பேட்டை சம்பந்தம்-அத்தானை
          வக்கீல் என்றும் சொன்னாங்க
வண்ணார்பேட்டை போய்ப் பார்த்தேன்-அத்தான்
          வறட்டி தட்டக் கண்டேனே!


_______________________________________

4.

மருத்துவம் - சித்தர் பாடல்: 
"ஆனைக் கன்றின் ஒருபிடியும்
          அரச விரோதி இளம்பிஞ்சும் 
கானக் குதிரை இளந்தோலும்
          கையில் கனிந்த கனிப்பருப்பும் 
தாயைக் கொன்ற பூச்சாற்றில்
          தானே கலக்கிக் குடுத்திடினே
மானைப் பொருதும் விழியாளே! 
          வடுகும் தமிழும் குணமாமே! "

[வேறு] 
"ஆனைக் கன்றின் ஒருபிடியும்
          அரையன் விரோதி இளம்பிஞ்சும், 
கானக் குதிரை புறத்தோலும், 
          காலிற் பொடியை மாற்றினதும், 
தாயைக் கொன்றான் சாறிட்டுத் 
          தயவா யரைத்துக் கொள்வாரேல், 
மானைப் பொருதும் விழியாளே! 
          வடுகும் தமிழும் குணமாமே! "

என்பது பாடல். 

தேரையர் பாடலின் கருத்து: ஆனைக் கன்று ஒரு பிடியையும், அரையன் விரோதியின் இளம் பிஞ்சையும், கானக்குதிரையின் மேல் தோலையும், காலில் பொடியை மாற்றினதையும் தாயைக் கொன்றவனது சாற்றில் இட்டுத் தக்க முறையில் அரைத்தெடுத்து உட்கொள்வாரானால், மானை வென்ற கண்ணையுடைய பெண்ணே! வடுகும் தமிழும் குணமாகி விடும் - என்பது கருத்து. 

'வடுகும் தமிழும்' என்னும் நோய் குணமாவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பாடல் தெரிவிக்கிறது...
அத்தி என்னும் சொல்லுக்கு அத்திமரம், ஆனை என்னும் பொருள்கள் உண்டு. எனவே அத்திமரத்தைக் குறிப்பது  ஆனை என்னும் சொல். கன்று என்பது பிஞ்சைக் குறிக்கும். ஆக, ஆனைக் கன்று என்பதற்கு அத்திப் பிஞ்சு' என்று பொருள் கொள்ள வேண்டும். ஆனைக் கன்றின் ஒரு பிடி என்பது ஒரு கைப்பிடி அத்திப் பிஞ்சாம். 

'அரையன் விரோதி இளம் பிஞ்சு' என்பது இளங் கோவைப் பிஞ்சைக் குறிக்கும். கோ என்றாலும் அரையன் என்றாலும் அரசன். வை என்றால் வையும் (திட்டும்) எதிரி. அரையன் விரோதி என்பது கோவைக் கொடி. கோவைப் பிஞ்சு ஓரளவு எடுத்துக்கொள்ள வேண்டும். 

கானக் குதிரை என்பது மாமரம்.  கானம்= காடு, குதிரை என்பதற்கு மாமரம் என்ற பொருளும், மா என்பதற்குக் குதிரை என்ற பொருளும் உண்டு. கானக் குதிரை என்றால் காட்டு மாமரம். புறத் தோல் என்பது மேற்பட்டை. 

'காலிற் பொடியை மாற்றினது' என்பது, செருப்படை என்னும் ஒரு படர்பூடு. காலில் பொடி சுடாமல் மாற்றுவது செருப்பு ஆகும். இங்கே, செருப்பு என்பது செருப்படை என்னும் படர் பூடு வகையைக் குறிக்கிறது.
தாயைக் கொன்றான் என்பது வாழை மரம். குலை போட்டதும் தாய்மரம் கொல்லப்படுகிறது (வெட்டப் படுகிறது). 

மேற் கூறியவற்றையெல்லாம் வாழைமரப் பட்டையைப் பிழிந்து கிடைத்த சாற்றிலே போட்டு நன்றாய் அரைத்து உட்கொண்டால் வடுகும் தமிழும் என்னும் நோய்  குணமாகும். 

வடுகும் தமிழும்' என்ன நோய்? 
வடுகும் தமிழும் குணமாம்' என்பதற்கு, 'வயிறு கடுத்துப் போகும் சகல ரத்த சீதபேதிகளும் குணமாகும்'  என்று பொருள். 
'வடுகும் தமிழும்" என்பது, இரத்த - சீதபேதியை எவ்வாறு குறிக்கும்? 
ரத்த சீதபேதி என்பதில்  இரத்தம் வப்பானது-சீதம் வெண்மையானது. ஆக, வடுகும் தமிழும் குணமாம் என்பதற்கு, குருதியும் சிதமுமாகப் போகும் வயிற்றுக் கடுப்பு நோய் நலமாகும் என்பது பொருளாம். 

நூல்:மர இனப் பெயர்வைப்புக் கலை
ஆசிரியர்: பேரா. சுந்தரசண்முகனார்
பக்கம்: 10

சுருக்கமாக:   இந்த மருத்துவப் பாடலில் மறைபொருளாகச் சொல்லப்பட்ட மூலிகை விளக்கம் வருமாறு:
https://groups.google.com/d/msg/minTamil/kp6h8f3jXSU/Bph4_xeJEbIJ
ஆனைக் கன்று = அத்திப் பிஞ்சு
அரசன் விரோதி = கோவைப் பிஞ்சு
கானக் குதிரைப் புறத்தோல் = மாமரத்துப் பட்டை
காலில் பொடியை மாற்றினதும் = சிரு செருப்படைப் பூண்டு
தாயைக் கொன்றான் சாறு = வாழைப்பூச்சாறு
வடுகும் தமிழும் = வயிற்றுக்கடுப்பு நோய்.
என்பதாகும்.
அத்திப் பிஞ்சு, கோவைப் பிஞ்சு, மாமரத்துப் பட்டை, சிறு செருப்படைப் பூண்டு இலைகளைச் சமமாக எடுத்து வாழைத் தண்டு அல்லது பூவின் சாறு விட்டு அரைத்துச் சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

(வடுகு என்பது தெலுங்கில் வயிற்றுக்கு கடுபு என்று பெயர். தமிழில் உள்ள வயிறு என்ற சொல்லையும் இணைத்து "வயிற்றுக் கடுப்பு"), என்று நோயைக் கூட மறைபொருளாகக் கூறப்பட்டுள்ளது.

_______________________________________

5.
நாடோடிப்பாடல்:

முள்ளு முனையிலே மூணுகுளம் வெட்டினேன் 
          ரெண்டு குளம் பாழு-ஒண்ணு
                    தண்ணியே இல்லை - ஒண்ணு
                    தண்ணியே இல்லை! 

தண்ணிஇல்லாக் குளத்துக்கு வரிப்பணம் மூணுபணம் 
          ரெண்டு பணம் செம்பு-ஒண்ணு
                    செல்லவே இல்லை - ஒண்ணு
                    செல்லவே இல்லை! 

செல்லாத பணத்துக்கு மண்குயவன் மூணுபேரு 
          ரெண்டுபேரு நொண்டி - ஒத்தன்
                    கையே இல்லை-ஒத்தன்
                    கையே இல்லை! 

கையில்லாக் குயவன் செய்தது மூணுபானை 
          ரெண்டு பானை பச்சை-ஒண்ணு 
                    வேகவே இல்லை-ஒண்ணு 
                    வேகவே இல்லை!

வேகாத பானைக்கு இட்டது மூணரிசி 
          ரெண்டரிசி நெட்டை-ஒண்ணு
                    வேகவே இல்லை-ஒண்ணு 
                    வேகவே இல்லை!

வேகாத அரிசிக்கு விருந்தாளு மூணுபேரு 
          ரெண்டு பேரு பட்டினி-ஒத்தன்
                    உண்ணவே இல்லை-ஒத்தன்
                    உண்ணவே இல்லை!


பாடலின் கருத்துகள் ஒவ்வொன்றிலும் மூன்று மூன்று பொருள்கள் குறிப்பிடப்பட்டு மூன்றும் எந்தவகையிலும் பயனில்லை என்பதை நேரடியாகச் சொல்லாமல்,  இரண்டு ஒரு விதமாகவும் மற்றொன்று  வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும், முடிவு: எதுவுமே உருப்படி இல்லை என்பதுதான் நிலை.  குளம் பாழு என்பதும் குளத்தில் தண்ணியே இல்லையென்பதும் இரே நிலைதான்.  இப்பாடல் பலவேறு வகைகளில் உள்ளது. பாடுபவரின் கற்பனைக்கு ஏற்ப வரிகளும் கருத்துகளும் மாறுபடும். கீழே மேலும் இரு வகைகள் 
---

[வேறு -  https://ta.wikisource.org/s/3mnn]

முள்ளு முனையிலே மூணுகுளம் வெட்டினேன்
          ரெண்டுகுளம் பாழு - ஒண்ணு தண்ணியே இல்லை. 
தண்ணியில்லாக் குளத்துக்கு மண்ணுவெட்ட மூணுபேரு
          ரெண்டுபேரு மொண்டி - ஒத்தன் கையே இல்லை. 
கையில்லாத குசவன் செய்தது மூணுபானை
          ரெண்டுபான பச்சை - ஒண்ணு வேகவே இல்லை. 
வேகாத பானைக்குப் போட்டரிசி மூணரிசி
          ரெண்டரிசி நறுக்கு - ஒண்ணு வேகவே இல்லை. 
வேகாத சோற்றுக்கு விருந்துண்ண மூணுபேரு
          ரெண்டுபேரு பட்னி - ஒத்தன் உண்ணவே இல்லை.
உண்ணாத கொத்தன் கட்டினது மூணுகோயில்
          ரெண்டு கோயில் பாழு - ஒண்ணு சாமியே இல்லை.
சாமியில்லாத கோயிலுக்கு ஆடவந்தார் மூணுபேரு
          ரெண்டுபேரு மொட்டை - ஒத்தி மயிரே இல்லை.

---

[வேறு -  https://ta.wikisource.org/s/3nn9]

முள்ளு முனையிலே மூணுகுளம் வெட்டிவச்சேன்
          ரெண்டுகுளம் பாழு - ஒண்னு தண்ணியே இல்லை. 
தண்ணியில்லாக் குளத்துக்கு வந்த குசவர் மூணுபேரு 
          ரெண்டுபேரு மொண்டி - ஒத்தன் கையே இல்லை. 
கையில்லாத குசவன் வனைந்தசட்டி மூணுசட்டி
          ரெண்டு சட்டி பச்சை - ஒண்னு வேகவே இல்லை. 
வேகாத சட்டியிலே போட்ட அரிசி மூணரிசி
          ரெண்டரிசி பச்சை - ஒண்ணு வேகவே இல்லை. 
வேகாத சோற்றுக்கு மோர் கொடுத்தது மூணெருமை 
          ரெண்டெருமை மலடு - ஒண்ணு ஈனவே இல்லை. 
ஈனாத எருமைக்கு விட்டகாடு மூணுகாடு 
          ரெண்டு காடு சொட்டை - ஒண்ணில், புல்லே இல்லை. 
புல்லில்லாக் காட்டுக்குக் கந்தாயம் மூணுபணம்
          ரெண்டுபணம் கள்ளவெள்ளி - ஒண்னு செல்லவே இல்லை.
செல்லாத பணத்துக்கு நோட்டக்காரர் மூணுபேரு
          ரெண்டுபேரு குருடு - ஒத்தனுக்குக் கண்ணே இல்லை.
கண்ணில்லாக் கணக்குப் பிள்ளைக்கு விட்ட ஊரு மூணு ஊரு
          ரெண்டு ஊரு பாழு - ஒண்ணில் குடியே இல்லை. 
குடியில்லா ஊரிலே குமரிப் பெண்கள் மூணுபேரு
          ரெண்டுபேர் மொட்டை - ஒத்திக்கு மயிரே இல்லை.
மயிரில்லாப் பெண்ணுக்கு வந்த மாப்பிள்ளை மூணுபேர்
          ரெண்டு பேர் பொக்கை - ஒத்தனுக்குப் பல்லே இல்லை.


நூல்: நாடோடி இலக்கியம்
ஆசிரியர்: கி. வா. ஜகந்நாதன்
பக்கம் - 75

_______________________________________


6.
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f5/Artemisia_absinthium_0002.JPG/800px-Artemisia_absinthium_0002.JPG




"எருக்கிலைக்குப் பாத்தி கட்டி 
          எத்தனை பூப் பூத்தாலும் 
மருக்கொழுந்தின் வாசமுண்டோ
          மலைப் பழநி வேலவனே!” 

பழநி வட்டாரத்து   நாட்டுப் பாடல் 

[வேறு]

"எருக்கிலைக்குத் தண்ணீர் கட்டி 
          எத்தனைப் பூப் பூத்தாலும் 
மருக் கொழுந்து வாசமுண்டோ 
          மலைப் பழநி வேலவனே” 

நூல்:   காட்டு வழிதனிலே
ஆசிரியர்: கவிஞர் பெரியசாமித்தூரன்
பக்கம்: 36

_______________________________________

7.

சிறுவர்களும் சிறுமிகளும் பாடி ஆடி விளையாடுகையில் பாடும் பாடல். 

"சுண்டெலிக் கண்ணே!"

ஆக்க வேணாம் அரைக்க வேணாம் சுண்டெலிக் கண்ணே - நீ 
          அருகிருந்தால் போதுமடி சுண்டெலிக் கண்ணே! 
தூக்க வேணாம் வைக்க வேணாம் சுண்டெலிக் கண்ணே-நீ 
          சுத்தி நின்னாப் போதுமடி சுண்டெலிக் கண்ணே! 

ஆறும் வேணாம் குளமும் வேணாம் சுண்டெலிக் கண்ணே-நீ 
          அணைஞ்சிருந்தால் போதுமடி சுண்டெலிக் கண்ணே!  
சோறு வேணாம் தண்ணி வேணாம் சுண்டெலிக் கண்ணே-உன் 
          சுகமிருந்தால் போதுமடி சுண்டெலிக் கண்ணே!

அடுப்பு வேணாம் துடுப்பு வேணாம் சுண்டெலிக் கண்ணே-உன் 
          அன்பிருந்தாப் போதுமடி சுண்டெலிக் கண்ணே! 
நடக்க வேணாம் அலுக்க வேணாம் சுண்டெலிக் கண்ணே-நீ 
          நாலு வார்த்தை சொன்னாப் போதும் சுண்டெலிக் கண்ணே!



_______________________________________

8.
குறவஞ்சி பாடல்: 





"அருள் இலஞ்சி வேலர் தமக்கு
          ஒரு பெண்ணைக் கொடுத்தோம்
ஆதீனத்து மலைகள் எல்லாம்
          சீதனமாய்க் கொடுத்தோம்!” 

என்று குற்றாலத்துக் குறவஞ்சி, இலஞ்சி முருகனோடு சம்பந்த முறை கொண்டாடிப் பாடும் பாடல்.

- திருக்குற்றாலக் குறவஞ்சி

_______________________________________

9.

தினைப்புனக் காதல்:


வண்டாடும் சோலையிலே-நீ
          வந்து புனம் காக்கையிலே 
மாடப் புறாவென்று என் கண்ணம்மா
          மதிமயங்கிப் போனேண்டி! 

மலர் பூக்கும் சோலையிலே-நீ
          வந்து புனம் காக்கையிலே 
மயிலோ குயிலோண்ணு- என் கண்ணம்மா
          மதிமயங்கிப் போனேண்டி!

வாழைப் பழமே-என்
          வைகாசி மாங்கனியே! 
நீலக் கருங்குயிலே-என் கண்ணம்மா
          நிலைமயங்கிப் போனேண்டி! 



நூல்: தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்
ஆசிரியர் : நா. வானமாமலை
பக்கம்: 92
(சேகரித்தவர். ஆர். கே. நல்ல கண்ணு)



_______________________________________
10.


பழநி நடைப்பயணம் செய்யும் பண்டாரங்கள் பாடும் பாடல்:

மலைக்குள் மலை நடுவே
          மலையாள தேசமப்பா 
மலையாள தேசம் விட்டு
          மயிலேறி வருவாயிப்போ
அரகரா அரகரா அரோகரா! 

ஏறாத மலை ஏறி
          எருது ரெண்டும் தத்தளிக்க 
பாராமல் கை கொடுப்பாய் 
          பழநி மலை வேலவனே
அரகரா அரகரா அரோகரா! 


[வேறு] 

பாசி படர்ந்த மலை முருகையா
          பங்குனித்தேர் ஓடும் மலை முருகையா
ஊசி படர்ந்த மலை முருகையா
          உருத்திராட்சம் காய்க்கும் மலை முருகையா

மலைக்குள் மலை நடுவே முருகையா
          மலையாள தேசமப்பா முருகையா
மலையாள தேசம் விட்டு முருகையா
          மயிலேறி வருவாயிப்போ முருகையா

அந்த மலைக்குயர்ந்த மலை முருகையா
          ஆகும் பழநி மலை முருகையா
எந்த மலையைக் கண்டு முருகையா
          ஏறுவேன் சன்னிதி முன் முருகையா

ஏறாமல் மலை தனிலே முருகையா
          ஏறி நின்று தத்தளிக்க முருகையா
பாராமல் கைகொடுப்பாய் முருகையா
          பழநி மலை வேலவனே முருகையா

வேலெடுத்து கச்சை கட்டி முருகையா
          விதவிதமாய் மயிலேறி முருகையா
கோலா கலத்துடனே முருகையா
          குழந்தை வடிவேலவனே முருகையா

உச்சியில் சடையிருக்க முருகையா
          உள்ளங்கை வேலிருக்க முருகையா
நெற்றியில் நீறிருக்க முருகையா
          நித்தமய்யா சங்கநாதம் முருகையா

தேரப்பா தைப்பூசம் முருகையா
          தேசத்தார் கொண்டாட முருகையா
இடும்பன் ஒரு புறமாம் முருகையா
          இருபுறமும் காவடியாம் முருகையா

ஆற்காட்டுத் தேசத்திலே முருகையா
          ஆறு லட்சம் காவடிகள் முருகையா
தென்னாட்டுச் சீமையிலே முருகையா
          தேசமெங்கும் காவடிகள் முருகையா

கடம்ப வனங்கண்டு முருகையா
          காட்சிதர வருவாயிப்போ முருகையா
பாவி நான் என்றுசொல்லி முருகையா
          பாராமலிருக்கிறாயோ முருகையா

பழநி நான் வருகிறேனே முருகையா
          பார்த்து வரம் தந்திடுவாய் முருகையா

source: http://pathayathirai.org/murugan_songs.html


_______________________________________
11.


பார வண்டி ஓட்டுநர் பாடும் பாடல்: 
பருப்பு பிடிக்கும் வண்டி - இது
          பட்டணந்தான் போகும் வண்டி 
பருப்பு விலை ஏறட்டுண்டி - தங்கரத்தினமே
          பதக்கம் பண்ணிப் போடுறேண்டி - பொன்னுரத்தினமே

அரிசி பிடிக்கும் வண்டி - இது
          அவினாசி போகும் வண்டி 
அரிசிவிலை ஏறட்டுண்டி - தங்கரத்தினமே
          அட்டி பண்ணிப் போடுறேண்டி - பொன்னுரத்தினமே 

கொள்ளு பிடிக்கும் வண்டி - இது
          கோட்டை தாண்டிப் போகும் வண்டி 
கொள்ளுவிலை ஏறட்டுண்டி - தங்கரத்தினமே
          கொலுசு பண்ணிப் போடுறேண்டி - பொன்னுரத்தினமே 

வாழப் பிறந்த வண்டி - இது
          வாழவகைசெய்யும் வண்டி 
மாளாப் பிறவியல்லலோ - தங்கரத்தினமே
          மனுசப் பிறவியடி! - பொன்னுரத்தினமே 

[வேறு] 

மஞ்ச புடிச்ச வண்டி, மாயவரம் போற வண்டி 
          மஞ்ச வெல ஆகட்டுண்டி - நான் 
மாலை செஞ்சிப் போடுறேண்டி 

பருப்பு புடிச்ச வண்டி, பட்டணந்தான் போற வண்டி 
          பருப்பு வெல ஆகட்டுண்டி - நான் 
பதக்கம் செஞ்சி போடுறேண்டி 

கடலை புடிச்ச வண்டி, கடலூருக்குப் போற வண்டி 
          கடலை வெல ஆகட்டுண்டி - நான் 
கம்மல் செஞ்சிப் போடுறேண்டி 

அரிசி புடிச்ச வண்டி, அசலூருப் போற வண்டி 
          அரிசி வெல ஆகட்டுண்டி - நான்
அட்டி செஞ்சி போடுறேண்டி 

வாழப் புடிச்ச வண்டி, வடக்குப் பக்கம் போற வண்டி 
          வாழ வெல ஆகட்டுண்டி - நான் 
வளையல் செஞ்சி போடுறேண்டி 

மங்கா புடிச்ச வண்டி, மதுரப்பக்கம் போற வண்டி
          மாங்கா வெல ஆகட்டுண்டி - நான்
மாட்டல்  செஞ்சி போடுறேண்டி 

சரக்குப் புடிச்ச வண்டி, சந்தைக்குத்தான் போற வண்டி 
          சரக்கு வெல ஆகட்டுண்டி - நான் 
சங்கிலி பண்ணி போடுறேண்டி 

தேங்காப் புடிச்ச வண்டி, தெக்குப் பக்கம் போற வண்டி 
          தேங்கா வெல ஆகட்டுண்டி - நான் 
தோடு செஞ்சிப் போடுறேண்டி 

paruppu pudicha vandi music scale.JPG

(புஷ்பவனம் குப்புசாமி-1990)
http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/193858/4/chapter%202.pdf#page=29



_______________________________________

12.

பூபாள ராகத்தில் ஒரு பாடல் ...
 “பொழுது விடிந்தது பொற்கோழி கூவிற்று
பொய்கையில் தாமரை பூத்து மலர்ந்தது!” 

[வேறு]

சண்முகர் வருகை: 

வாரும் வாரும் தெய் வடிவேல் முருகரே 
        வள்ளி மணாளரே வாரும் 
        புள்ளி மயிலோரே வாரும். 

சங்கம் ஒலித்தது தாழ்கடல் விம்மிற்று 
        சண்முக நாதரே வாரும் 
        உண்மை வினோதரே வாரும். 

பொழுது விடிந்தது பொற்கோழி கூவிற்று 
        பொன்னான வேலரே வாரும் 
        மின்னார்முந் நூலரே வாரும். 

காகம் கரைந்தது காலையும் ஆயிற்று 
        கண்ணுதல சேயரே வாரும். 
        ஒண்ணுதல் நேயரே வாரும். 

செங்கதிர் தோன்றிற்றுத் தேவர்கள் சூழ்ந்தனர் 
        செங்கல்வ ராயரே வாரும் 
        எங்குரு நாதரே வாரும். 

அருணன் உதித்தனன் அன்பர்கள் சூழ்ந்தனர் 
        ஆறுமுகத் தோரே வாரும் 
        மாறில் அகத்தோரே வாரும். 

சூரியன் தோன்றினன் தொடர்கள் சூழ்ந்தனர் 
        சூரசங் காரரே வாரும் 
        வீரசிங் காரரே வாரும். 

வீணை முரன்றது வேதியர் சூழ்ந்தனர் 
        வேலாயுதத் தோரே வாரும் 
        காலாயுதத் தோரே வாரும். 

சேவல் ஒலித்தது சின்னம் பிடித்தனர் 
        தேவர்கள் தேவரே வாரும் 
        மூவர் முதல்வரே வாரும். 

பத்தர்கள் சூழ்ந்தனர் பாடல் பயின்றனர் 
        பன்னிரு தோளரே வாரும் 
        பொன்மலர்த் தாளரே வாரும். 

மாலை கொணர்ந்தனர் மஞ்சனம் போந்தது 
        மாமயில் வீரரே வாரும் 
        தீமையில் தீரரே வாரும். 

தொண்டர்கள் நாடினர் தோத்திரம் பாடினர் 
        சுப்பிர மணியரே வாரும் 
        வைப்பின் அணியரே வாரும். 

முருகனை விடியலில் வரவேற்கும் மகளிர் பாடும் சிந்துப்பாடல்கள் 
(சிந்து விளக்கம்: மூன்று  அடிகளில், முதலடி அளவடியாலும், பின்னிரண்டடி சிந்தடியாலும் அமைந்து சிந்தடியின் ஈற்றுச் சீர் ஒன்றிவரத் தொடுக்கப் பட்டுள்ளது.)

திருவருட்பா, திருவருட்பிரகாச வள்ளலார் - சிதம்பரம் இராமலிங்க அடிகள்; 51. சண்முகர் வருகை; பாடல்கள்: 538-549

_______________________________________

13.

மலைவாழ் பழங்குடி  பளிஞர் இன மக்கள்  பாடல்களாக சில ... 

அகவல் மகள், ஆவேசத்துடன்  நாகர் பீடத்துக்கு வணக்கம் செய்து விட்டு அகவும் பாடல்;

பழங்குடி தலைவனுக்குக் கட்டளையிடும் பாடல்...
சொக்கையா சொக்கையா
          சோறு வையடா 
சொக்கையன் பெண்டாட்டிக்கு
          நீறு வையடா!

எதிர்காலத்தில் நிகழப்போவதாக அகவல் மகள் குறிப்பு கூறும் பாடல் ....
ஊரான ஊர்விட்டு
          ஒருத்தன் இங்கே வருவானாம்! 
பேரான சீமைவிட்டு
          ஒருத்தன் இங்கே வருவானாம்! 
கட்டான ஆண்பிள்ளையும்
          கண்மணியாம் பெண்பிள்ளையும் 
திட்டான வார்த்தையிலே
          திசைமாறி நின்றிடுவார்! 

ஆனாலும் இந்தமலை
          அருமையான மலையல்லோ 
போனாலும் வந்தாலும்
          புண்ணியந் தான் சேருமல்லோ! 
ஆகையினாலே - சொக்கி குடிதனிலே 
          சோதனைகள் நடவாமல் 
பக்கம் இருந்திடுவான் 
          பாங்கான முருகனுமே! 

பழங்குடி தலைவனின் மகளுக்கு திருமணம் நடக்கப்போவதாக அகவல் மகள் அறிவித்து விடை பெறுதல்....
பளிஞர் குலத்தினிலே 
          பருவத்தில் பூத்திட்ட 
பளிங்குக் கொடியான 
          பத்தினிக் கன்னிக்கு 
பாக்கியங்கள் வந்திடுமாம் 
          பர்த்தாவும் வந்திடுவான் 
ஆக்கினைகள் செய்திடுவாள் 
          அரசாட்சி நடத்திடுவாள்! 

மானுக்காய் இரங்கியிந்த 
          மான் போலும் கன்னியிவள் 
போன உயிர்காத்த 
          புண்ணியத்தால் நன்மையுண்டு!  
இத்தனை தான் இந்நேரம்; 
          இனியுள்ள சேதியெல்லாம் 
பித்துடனே வருமந்தப் 
          பேரான மனிதனிடம் 
சொல்ல வருவேன் நான், 
          சொக்கையா கேட்டாயோ! 
மெல்ல நடந்திடுவேன் 
          மேலேறிச் செல்லுகிறேன்!

[***குறிப்பு: பழங்குடியினர் திருமணம் குறித்த பாடல் தனியே கொடுக்கப்படும் ...***]

திருமணம் நன்றே முடிந்ததாகவும் தான் கூறிய குறியின்படியே அனைத்தும் நிகழ்ந்ததாகவும்  அகவல்மகள் அறிவிக்கும் பாடல்...

ஊரான ஊர்விட்டு 
          ஒருத்தன் இங்கே வந்தானாம்
பேரான சீமைவிட்டு 
          ஒருத்தன் இங்கே வந்தானாம் 
கட்டான ஆண்பிள்ளையும் 
          கண்மணியாம் பெண்பிள்ளையும்
திட்டான வார்த்தையிலே 
          திசைமாறி நின்றிட்டார் 
ஆனாலும் இந்தமலை 
          அருமையான மலையல்லோ
போனாலும் வந்தாலும் 
          புண்ணியந்தான் சேருமல்லோ! 
ஆகையினாலே சொக்கி குடிதனிலே 
          சோதனைகள் நடவாமல்
பக்கம் இருந்திட்டான் 
          பாங்கான முருகனுமே! 

_______________________________________


14.

பளிஞர் -  பழங்குடியினர் திருமணவிழா பாடல்:

தும்பிக்கையார் பிள்ளையாரைத்
          தொழுதுபாதம் தெண்டனிட்டோம்  
ஆனைமுகத்து நாயகரை
          அடிபணிந்து தெண்டனிட்டோம்! 
தாமரைப் பூ பூத்துநின்ற
          தையலவள் வாசலிலே 
பூமகளும் நிலமகளும்
          பொருந்தும் மண வாசலிலே 
ஆனைமுகனார் வந்துநின்று
          அசைந்தாடும் வாசலிலே 
ஆறுமுக வேலவர்தான்
          அவதரித்த வாசலிலே 
வேலும் மயிலும் 
          விளையாடும் வாசலிலே 
அன்னம் மிதந்து 
          அசைந்தேகும் வாசலிலே 
வண்மை வளம் உடையாள் 
          வந்து நிற்கும் வாசலிலே 
செல்வம் பெரிதுடையாள் 
          சேவைதரும் வாசலிலே
கலியாணம் கலியாணம் 
          காரிகைக்கே கலியாணம் 
அல்லி அரசாணிக்கும் 
          அர்ச்சுனர்க்கும் கலியாணம் 
ஆணழகன் அர்ச்சுனர்க்கும்
          பெண்ணழகி அல்லிக்கும் 
ஆசார வாசலிலே அழகுக் கலியாணம்!

கலியாணம் என்று சொல்லிக் காடெல்லாம் முழுதறிய 
உற்றார் உறமுறையார் ஊரெல்லாம் பாக்கு வைத்து 
சம்பந்தி மார்களுக்குச் சதிருடனே பாக்குவைத்து 
வாருங்கள் என்று சொல்லி வணங்கி வரவேற்று 
முன்னூறு காதம் மூடியே பந்தலிட்டார்! 
ஆயிரம் காதம் அகலமாய்ப் பந்தலிட்டார்! 
எண்ணூறு காதம்பேர் இட முள்ள பந்தலிலே 
வாழை மரம் கட்டி வண்ணக் கொடிகட்டி 
மாணிக்கப் பந்தலிலே வரிசையுடன் தான் தூக்கி 
தென்னங் குருத்து வெட்டிச் சோலைக் கிளிகள் கட்டி 
தாரும் கமுகுகளும் தனித்தனியே தொங்கவிட்டார்! 
சொக்கட்டான் பந்தலிட்டுச் சோளக் கதிர்கட்டி 
பாளங்கள் தொங்கவிட்டுப் பந்தல் அலங்கரித்தார்!

கலியாணம் கலியாணம் 
          காரிகைக்குக் கலியாணம் 
அல்லிக்குக் கலியாணம் 
          அர்ச்சுனர்க்குக் கலியாணம் 
அல்லிக்கும் அர்ச்சுனர்க்கும் 
          அழகான கலியாணம்!

திருமணம் முடிந்த பின்னர் மணமகனின் நண்பர்கள் அவனை நோக்கி பாடும் பாடல்... 
புளிய மரத்துக் கிளி
          பூவெடுத்துத் தின்னும் கிளி 
உன்னை அடுத்த கிளி-கந்தப்பா
          உனக்கேத்த சொக்கிக் கிளி! 

அரச மரத்துக் கிளி
          அத்திப் பழம் கொத்தும் கிளி 
பஞ்ச வர்ணக் கிளி-கந்தப்பா
          பாட்டிலே பேசுங் கிளி! 

ஆல மரத்துக் கிளி
          ஆறு தாண்டி வந்த கிளி 
சோலை மரத்துக் கிளி -கந்தப்பா
          சொந்தமாகி வந்த கிளி!

மணமகனின் தோழர்கள் மணமகனைக் கேலி செய்யும் பாடல் ....
கொய்யாமரத்து மேலே
          கொம்புப் பழம் உறங்கும் 
கொம்புப் பழம் விழுந்தால்
          குயிலா நினைவு வரும். 

கண்ணாளஞ் சோலையிலே
          கனிஞ்ச பழம் உறங்கும் 
கனிஞ்ச பழம் விழுந்தா
          கண்ணா நினைவு வரும். 

மாமரத்து உச்சியிலே
          மாங்காப் பழம் உறங்கும் 
மாங்காப் பழம் விழுந்தா
          மயிலா நினைவு வரும்! 

மணமகளின் தோழியர் மணமகளைக் கேலி செய்யும் பாடல்...
கருமலையிலே கல்லுருட்டி
          கன்னிமார் எல்லாம் கூடிக்கிட்டு 
மூணு முழத்தில் அடுப்புக்கட்டி
          முத்துக் குடங்கொண்டு பால் காய்ச்ச 
காய்ச்சின பாலும் கசக்குதென்பா
          கட்டித் தயிரும் புளிக்குதென்பா 
வேப்பம் பட்டை இனிக்குதென்பா
          வெள்ளரிப் பிஞ்சும் கசக்குதென்பா. 


_______________________________________

15.

பழங்குடிப் பெண் பாடும் பாடல்:  

“கொள்ளுப் போட்டா எள்ளு விளையும் - எங்க காட்டிலே 
          கோழி வந்து குட்டிபோடும் - எங்க வீட்டிலே 
கடலை போட்டா நெல்லு விளையும் - எங்க காட்டிலே 
          கடுவம் பூனை குட்டி போடும் - எங்க வீட்டிலே 
அவரை போட்டாத் துவரை விளையும் - எங்க காட்டிலே 
          ஆனை போடும் பூனைக்குட்டி - எங்க வீட்டிலே” 



_______________________________________


16.

மலைவாழ் பழங்குடியினர் பாடல்: 

முருகனாரு சாமி - அது
          முதலான சாமி - எங்க 
முன்னோரும் பின்னோரும்
          முறை தொழுத சாமி!

கந்தனாரு சாமி - அது
          கடவுளராம் சாமி - இன்னும் 
சொந்தமான பேருக்கெல்லாம்
          சுகம் கொடுக்கும் சாமி! 

வேலவராம் சாமி - அது
          வேண்டினார்க்குச் சாமி - எந்தக் 
காலமுமே நம்மையெல்லாம்
          காத்துவரும் சாமி! 

வெற்றி வேலுச் சாமி - அது
          வீரவேலுச் சாமி - நம்மைச் 
சுற்றியுள்ள பகைகள் எல்லாம்
          தொலைத்துநின்ற சாமி! 

வள்ளியோட சாமி - அது
          வரிசை தரும் சாமி - தெய்வ 
ஆனையோட சாமி நம்மை
          ஆதரிக்கும் சாமி!

குமரனாரு சாமி - அது
          குலதெய்வச் சாமி 
கும்பிட்டபேர் எல்லாரையும்
          கும்பி காக்கும் சாமி! 

புள்ளிமயில் சாமி - அது
          புஞ்சிரிப்புச் சாமி 
வள்ளிதெய்வ யானையோடே
          வரம் கொடுக்கும் சாமி! 



_______________________________________


17.

பட்டினத்தார் பாடல்:

வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம் வேறொருவர்க்கு 
          எட்டாத புட்பம் இறையாத தீர்த்தம் இனி முடிந்து 
கட்டாத லிங்கம் கருதாத நெஞ்சம் கருத்தினுள்ளே 
          முட்டாத பூசையன்றோ குருநாதன் மொழிந்ததுவே?



http://www.tamilvu.org/slet/l7100/l7100pd1.jsp?bookid=140&pno=130


_______________________________________


18.

கண்ணன் பாட்டு: கண்ணன் என் காதலன்

-- சுப்பிரமணிய பாரதியார்

(செஞ்சுருட்டி-திஸ்ர ஏகதாளம்.)
சிருங்கார ரசம்.

தூண்டிற் புழுவினைப்போல் -- வெளியே
சுடர் விளக்கினைப்போல்,
நீண்ட பொழுதாக -- எனது
நெஞ்சந் துடித்த தடீ.
கூண்டுக் கிளியினைப்போல் -- தனிமை
கொண்டு மிகவும் நொந்தேன்;
வேண்டும் பொருளையெல்லாம் -- மனது
வெறுத்து விட்டதடீ. 1

பாயின் மிசைநானும் -- தனியே
படுத் திருக்கையிலே
தாயினைக் கண்டாலும், -- சகியே,
சலிப்பு வந்ததடி.
வாயினில் வந்ததெல்லாம், -- சகியே,
வளர்த்துப் பேசிடுவீர்;
நோயினைப் போலஞ் சினேன், -- சகியே
நுங்க ளுறவையெல்லாம். 2

உணவு செல்லவில்லை; -- சகியே
உறக்கங் கொள்ளவில்லை.
மணம் விரும்பவில்லை; -- சகியே,
மலர் பிடிக்கவில்லை;
குண முறுதியில்லை; -- எதிலும்
குழப்பம் வந்ததடீ;
கணமும் உள்ளத்திலே -- சுகமே
காணக் கிடைத்ததில்லை. 3

பாலுங் கசந்ததடீ; -- சகியே,
படுக்கை நொந்ததடீ.
கோலக் கிளிமொழியும் -- செவியில்
குத்த லெடுத்ததடீ.
நாலு வயித்தியரும் -- இனிமேல்
நம்புதற் கில்லையென்றார்;
பாலத்துச் சோசியனும் -- கிரகம்
படுத்து மென்றுவிட்டான். 4

கனவு கண்டதிலே -- ஒரு நாள்
கண்ணுக்குத் தோன்றாமல்,
இனம் விளங்கவில்லை, -- எவனோ
என்னகந் தொட்டு விட்டான்.
வினவக் கண்விழித்தேன்; -- சகியே,
மேனி மறைந்துவிட்டான்;
மனதில் மட்டிலுமே -- புதிதோர்
மகிழ்ச்சி கண்டதடீ. 5

உச்சி குளிர்ந்ததடீ; -- சகியே,
உடம்பு நேராச்சு.
மச்சிலும் வீடுமெல்லாம் -- முன்னைப்போல்
மனத்துக் கொத்ததடீ.
இச்சை பிறந்ததடீ -- எதிலும்
இன்பம் விளைந்ததடீ.
அச்ச மொழிந்ததடீ; -- சகியே,
அழகு வந்ததடீ. 6

எண்ணும்பொழுதி லெல்லாம், -- அவன்கை
இட்ட விடத்தினிலே
தண்ணென் றிருந்ததடீ; -- புதிதோர்
சாந்தி பிறந்ததடீ
எண்ணியெண்ணிப் பார்த்தேன்; -- அவன்தான்
யாரெனச் சிந்தைசெய்தேன்;
கண்ணன் திருவுருவம் -- அங்ஙனே
கண்ணின்முன் நின்றதடீ. 7


http://www.tamilvu.org/node/154572?link_id=185



_______________________________________


19.

தோத்திரப் பாடல்கள்:  முத்துமாரி

-- சுப்பிரமணிய பாரதியார்

உலகத்து நாயகியே, -- எங்கள் முத்து 
  மாரியம்மா, எங்கள் முத்து மாரி! 
உன்பாதம் சரண்புகுந்தோம், -- எங்கள் முத்து 
  மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
கலகத் தரக்கர்பலர், -- எங்கள் முத்து 
  மாரியம்மா, எங்கள் முத்துமாரி!
கருத்தினுள்ளே புகுந்துவிட்டார், எங்கள் முத்து 
  மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பலகற்றும் பலகேட்டும், -- எங்கள் முத்து 
  மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பயனொன்று மில்லையடி, -- எங்கள் முத்து 
  மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
நிலையெங்கும் காணவில்லை, -- எங்கள் முத்து 
  மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
நின்பாதம் சரண்புகுந்தோம், -- எங்கள் முத்து 
  மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

துணிவெளுக்க மண்ணுண்டு, -- எங்கள் முத்து 
  மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
தோல்வெளுக்கச் சாம்பருண்டு, -- எங்கள் முத்து 
  மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
மணிவெளுக்கச் சாணையுண்டு, -- எங்கள் முத்து 
  மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
மனம்வெளுக்க வழியில்லை, -- எங்கள் முத்து 
  மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பிணிகளுக்கு மாற்றுண்டு, -- எங்கள் முத்து
  மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பேதைமைக்கு மாற்றில்லை, -- எங்கள் முத்து 
  மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
அணிகளுக்கொ ரெல்லையில்லாய், -- எங்கள் முத்து
  மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
அடைக்கலமிங் குனைப்புகுந்தோம், -- எங்கள் முத்து
  மாரியம்மா, எங்கள் முத்து மாரி!


http://www.tamilvu.org/node/154572?link_id=44



_______________________________________


20.

கோளறு திருப்பதிகம்:

வேய் உறு தோளி பங்கன், விடம் உண்ட கண்டன், மிக 
                                              நல்ல வீணை தடவி,
மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து, என் 
                                          உளமே புகுந்த அதனால் 
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் வியாழம், வெள்ளி, 
                                     சனி, பாம்பு இரண்டும், உடனே 
ஆசு அறும்; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் 
                                                அவர்க்கு மிகவே.

திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
(இரண்டாம் திருமுறை)

http://www.tamilvu.org/slet/l4120/l4120son.jsp?subid=1748



_______________________________________



21.

தோத்திரப் பாடல்கள்: வேலன் பாட்டு

-- சுப்பிரமணிய பாரதியார்

[ராகம் -- புன்னாகவராளி] [தாளம் -- திஸ்ர ஏகம்]

வில்லினை யொத்த புருவம் வளைத்தனை,
  வேலவா! --அங்கொர்
வற்பு நொறுங்கிப் பொடிப் பொடி
  யானது, வேலவா!
சொல்லினைத் தேனிற் குழைத்துரைப் பாள்சிறு
  வள்ளியைக் --கண்டு
சொக்கி மரமென நின்றனை 
  தென்மலைக் காட்டிலே.
கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட 
  பாதகன் --சிங்கன்
கண்ணிரண் டாயிரங் காக்கைக் 
  கிரை யிட்ட வேலவா!
பல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திடும் 
  வள்ளியை --ஒரு
பார்ப்பனக் கோலந் தரித்துக் கரந
 தொட்ட வேலவா! 1

வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்குங் 
  கடலினை --உடல்
வெம்பி மறுகிக் கருகிப் 
  புகைய வெருட்டினாய்.
கிள்ளை மொழிச்சிறு வள்ளியெனும் பெயர்ச்
  செல்வத்தை --என்றும்
கேடற்ற வாழ்வினை இன்ப 
  விளக்கை மருவினாய்.
கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு 
  குலைத்தவன் --பானு
கோபன் தலைபத்துக் கோடி
  துணுக்குறக் கோபித்தாய்.
துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறுவன 
  மானைப்போல்-தினைத்
தோட்டத்தி லேயொரு பெண்ணை 
  மணஙகொண்ட வேலவா! 2

ஆறு சுடர்முகங் கண்டு விழிக்கின்ப 
  மாகுதே; --கையில்
அஞ்ச லெனுங்குறி கண்டு 
  மகிழ்ச்சியுண் டாகுதே.
நீறு படக்கொடும் பாவம் பிணி பசி
  யாவையும்-இங்கு
நீக்கி அடியரை நித்தமுங் 
  காத்திடும் வேலவா!
கூறு படப்பல கோடி யவுணரின் 
  கூட்டத்தைக் --கண்டு
கொக்கரித் தண்டங் குலுங்க
  நகைத்திடுஞ் சேவலாய்! 
மாறு படப்பல வேறு வடிவொடு 
  தோன்றுவாள் --எங்கள்
வைரவி பெற்ற பெரு ங்கன
  லேவடி வேலவா! 3



http://www.tamilvu.org/node/154572?link_id=17



_______________________________________


22.

திருமூலர் பாடல்:

மந்திரமாவதும் மாமருந் தாவதுந்
தந்திர மாவதுந் தானங்க ளாவதுஞ்
சுந்தர மாவதுந் தூய்நெறி யாவதும்
எந்தை பிரான்தன் இணையடி தானே.


https://shaivam.org/thirumurai/tenth-thirumurai/446/thirumoolar-nayanar-thirumandiram-tantiram-6-sivaguru-thiruvadi-peru


_______________________________________



23.

தோத்திரப் பாடல்கள்:  சரசுவதி தேவியின் புகழ்

-- சுப்பிரமணிய பாரதியார்

ஆனந்த பைரவி ராகம் -- சாப்பு தாளம் 

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் 
   வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை யின்பம் குலவு கவிதை 
   கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்
உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே 
   ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்
கள்ள மற்ற முனிவர்கள் கூறும் 
   கருணை வாசகத் துட்பொரு ளாவாள். (வெள்ளைத்) 1

மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்
   மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்
கீதம் பாடும் குயிலின் குரலைக் 
   கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்
கோத கன்ற தொழிலுடைத் தாகிக் 
   குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள் 
   இன்ப மேவடி வாகிடப் பெற்றாள். (வெள்ளைத்) 2

வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு 
   வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்
வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லர் 
   வித்தை யோர்ந்திடு சிற்பியர் தச்சர்
மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர் 
   வீர மன்னர்பின் வேதியர் யாரும்
தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம் 
   தரணி மீதறி வாகிய தெய்வம். (வெள்ளைத்) 3

தெய்வம் யாவும் உணர்ந்திடுந் தெய்வம் 
   தீமை காட்டி விலக்கிடுந் தெய்வம்
உய்வ மென்ற கருத்துடை யோர்கள் 
   உயிரி னுக்குயி ராகிய தெய்வம்
செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்
   செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்
கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம் 
   கவிஞர் தெய்வம், கடவுளர் தெய்வம். (வெள்ளைத்) 4

செந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளீர்! 
   சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்!
வந்த னம்இவட் கேசெய்வ தென்றால் 
   வாழி யஃதிங் கெளிதன்று கண்டீர்!
மந்திரத்தை முணுமுணுத் தேட்டை 
   வரிசை யாக அடுக்கி அதன்மேல் 
சந்தனத்தை மலரை இடுவோர் 
   சாத்தி ரம்இவள் பூசனை யன்றாம். (வெள்ளைத்) 5

வீடு தோறும் கலையின் விளக்கம் 
   வீதி தோறும் இரண்டொரு பள்ளி
நாடு முற்றிலும் உள்ளன வூர்கள் 
   நகர்க ளெங்கும் பலபல பள்ளி
தேடு கல்வியி லாததொ ரூரைத் 
   தீயி னுக்கிரை யாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை 
   கேண்மை கொள்ள வழியிவை கண்டீர். (வெள்ளைத்) 6

ஊணர் தேசம் யவனர்தந் தேசம் 
   உதய ஞாயிற் றொளிபெறு நாடு
சேண கன்றதோர் சிற்றடிச் சீனம் 
   செல்வப் பார சிகப்பழந் தேசம்
தோண லத்த துருக்கம் மிசிரம் 
   சூழ்க டற்கப் புறத்தினில் இன்னும்
காணும் பற்பல நாட்டிடை யெல்லாம் 
   கல்வித் தேவியின் ஒளிமிகுந் தோங்க. (வெள்ளைத்) 7

ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்
   நல்ல பாரத நாட்டிடை வந்தீர்!
ஊனம் இன்று பெரிதிழைக் கின்றீர்! 
   ஓங்கு கல்வி யுழைப்பை மறந்தீர்!
மான மற்று விலங்குக ளொப்ப 
   மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ?
போன தற்கு வருந்துதல் வேண்டா, 
   புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்! (வெள்ளைத்) 8

இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல் 
   இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல் 
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் 
   ஆலயம் பதி னாயிரம் நாட்டல்
பின்ன ருள்ள தருமங்கள் யாவும் 
   பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல
அன்ன யாவினும் புண்ணியம் கோடி 
   ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல். (வெள்ளைத்) 9

நிதிமி குத்தவர் பொற்றகுவை தாரீர்! 
   நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவு மற்றவர் வாய்ச்சொ லருளீர்! 
   ஆண்மை யாள ருழைப்பினை நல்கீர்!
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்! 
   வாணி சைக் குரியன பேசீர்!
எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்
   இப்பெருந்தொழில் நாட்டுவம் வாரீர்! (வெள்ளைத்) 10



http://www.tamilvu.org/node/154572?link_id=7


_______________________________________



24.

பெண்மை

-- சுப்பிரமணிய பாரதியார்


பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா
தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன
தாயின் பெயரும் சதியென்ற நாமமும்.1

அன்பு வாழ்கென் றமைதியில் ஆடுவோம்
ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்
துன்பம் தீர்வது பெண்மையி னாலடா
சூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம். 2

வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா
மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்
கலி யழிப்பது பெண்க ளறமடா
கைகள் கோத்துக் களித்துநின் றாடுவோம். 3

பெண்ண றத்தினை ஆண்மக்கள் வீரந்தான்
பேணு மாயிற் பிறகொரு தாழ்வில்லை;
கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே
காத லின்பத்தைக் காத்திடு வோமடா. 4

சக்தி யென்ற மதுவையுண் போமடா
தாளங் கொட்டித் திசைகள் அதிரவே
ஒத்தி யல்வதோர் பாட்டும் குழல்களும்
ஊர் வியக்கக் களித்துநின் றாடுவோம். 5

உயிரைக் காக்கும் உயிரினைச் சேர்த்திடும்
உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்
உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா
ஊது கொம்புகள், ஆடு களிகொண்டே. 6

‘போற்றி தாய்’ என்று தோள்கொட்டி யாடுவீர்
புகழ்ச்சி கூறுவீர் காதற் கிளிகட்கே
நூற்றி ரண்டு மலைகளைச் சாடுவோமே
நுண்ணி டைப்பெண் ணொருத்தி பணியிலே. 7

‘போற்றிதாய்’ என்று தாளங்கள் கொட்டடா
‘போற்றிதாய்’ என்று பொற்குழ லூதடா
காற்றி லேறியவ் விண்ணையுஞ் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே. 8

அன்ன மூட்டிய தெய்வமணிக் கையின்
ஆணை காட்டில் அனலை விழுங்குவோம்
கன்னத் தேமுத்தம் கொண்டு களிப்பினும்
கையைத் தள்ளும்பொற் கைகளைப் பாடுவோம். 9



http://www.tamilvu.org/node/154572?link_id=295



_______________________________________



25.  
பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந்
திண்மையுண் டாகப் பெறின். 

வாழ்க்கைத் துணைநலம் - குறள் 54. 



_______________________________________








இவை ரவிசந்திரிகா வழங்கும் பல்சுவைப் பாடல்கள்:
ரவிசந்திரிகா 
'சோமு' (மீ. ப. சோமசுந்தரம்)
வானதி பதிப்பகம்
நான்காம் பதிப்பு: 1989