Wednesday, June 22, 2022

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஹோமோ எரெக்டஸ்

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஹோமோ எரெக்டஸ் — முனைவர்.க.சுபாஷிணி



அண்மையில் 16 ஜூன் 2022, ஸ்பெயினின் மனித பரிணாம வளர்ச்சிக்கான தேசிய ஆராய்ச்சி மையம் (CENIEH) வெளியிட்ட அறிக்கையின்படி, 1.6 மில்லியன் ஆண்டுகள் பழமையான ஹோமோ எரெக்டஸ் புதைபடிமங்கள் சீனாவின் கோங்வாங்லிங் (Gongwangling) பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக இன்ஸ்டிடியூட் ஆஃப் வெர்டிபிரேட் பேலியோண்டாலஜி மற்றும் பேலியோ ஆந்த்ரோபாலஜி, CENIEH ஆய்வாளர்கள் மற்றும் சீனாவின் லியு வூ உள்ளிட்ட விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.


இந்த எலும்புக் கூட்டுக்குச் சொந்தமான ஹோமோ எரெக்டஸ் சீனாவின் கோங்வாங்லிங் பகுதியை அடைந்த முதல் ஹோமினின்களில் ஒருவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. படிமத்தின் மண்டை ஓடு, தாடை எலும்பு மற்றும் ஐந்து பற்களில் மைக்ரோ-கம்ப்யூட்டட் டோமோகிராபி, ஜியோமெட்ரிக் மோர்போமெட்ரி மற்றும் கிளாசிக்கல் மோர்பாலஜி நுட்பங்களுடன் ஆய்வு நடத்தப் பட்டது. ஆய்வின் முடிவு சீனாவில் உள்ள ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட மற்ற ஹோமோ எரெக்டஸ் தளங்களில் 400,000 மற்றும் 800,000 ஆண்டுகளுக்கு முன்பான புதைபடிமங்களில் காணப்பட்டதைப் போலவே உள்ளன என்றாலும் சில மாறுபாடுகளையும் இவை வெளிப்படுத்துகின்றன என்பதை இந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஹோமோ எரெக்டஸ் என்பது அழிந்து போன பண்டைய மனித இனங்களுள் ஒன்று. 2 மில்லியன் ஆண்டுகள் காலகட்டத்தில் இவை வாழ்ந்ததற்கானச் சான்றுகள் உலகின் பல்வேறு இடங்களில் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. தமிழகத்தின் அத்திரம் பாக்கம் பகுதியில் கிடைத்த தொல் மனித எச்சங்களும் இவ்வகை ஹோமோ எரெக்டஸ் இனமாக இருக்கலாம். ஆரம்பக்கால ஆப்பிரிக்க ஹோமோ எரெக்டஸ் புதைபடிமங்கள் (சில சமயங்களில் ஹோமோ எர்காஸ்டர் என்றும் அழைக்கப்படுகின்றன) மனிதனைப் போன்ற நவீன உடல் விகிதாச்சாரத்தில் ஒப்பீட்டளவில் நீளமான கால்கள் மற்றும் உடற்பகுதியின் அளவைக் காட்டிலும் குறுகிய கைகளைக் கொண்ட பழமையான மனிதர்கள் இவர்கள். இவர்களின் உடற்கூறுகள் தரையில் வாழும் வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் மனித உடல் உடல் பரிணாம வளர்ச்சி கண்டதை வெளிப்படுத்துகின்றன. மரம் ஏறுதலிலிருந்து நடக்கக்கூடிய மற்றும் நீண்ட தூரம் ஓடக்கூடிய திறனை வெளிப்படுத்தும் வகையில் இந்த பரிணாம வளர்ச்சி அமைகிறது. டச்சு அறுவை சிகிச்சை நிபுணரான யூஜின் டுபோயிஸ் தான் 1891 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் முதல் ஹோமோ எரெக்டஸ் மனித இனத்தின் புதைபடிமத்தைக் கண்டுபிடித்தார். 1894 ஆம் ஆண்டில், டுபோயிஸ் இந்த இனத்திற்கு பிதேகாந்த்ரோபஸ் எரெக்டஸ் என்று பெயரிட்டார். தமிழ்நாட்டின் மலையடிவாரங்களிலும் குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் அகழாய்வுகளை நிகழ்த்தினால் இவ்வகை தொல் மனிதர்களின் எச்சங்களைக் கண்டறிவதற்கு வாய்ப்பு அமையும். குறிப்பு: https://www.cenieh.es/en/press/news/homo-erectus-gongwangling-could-have-been-earliest-population-china ---

Saturday, June 18, 2022

இலக்கியங்களில் பெண்ணிய அடக்குமுறை குறித்த பதிவுகள்

இலக்கியங்களில் பெண்ணிய அடக்குமுறை குறித்த பதிவுகள்

 - முனைவர் பா.சத்யா தேவி



உடல், அரசியல் இரண்டும் இரு வேறுபட்ட தளங்கள் உடல் தோன்றியபோது அரசியல் தோன்றவில்லை. ஆனால் அரசியல் உடலை முன்னிறுத்தித் தோன்றியது எனலாம். அரசியல் என்பது என்ன? அதிகாரத்தை நிலை நிறுத்துதலை அல்லது செயல்படுத்துதலை அரசியல் எனக் கூறலாம். ஆனால் இது மட்டும் தான் அரசியலா என்றால் இல்லை. அதற்குள் பல்வேறு பட்டுணர்வுகள் அல்லது கருத்துகள் நிலவுகின்றன. அதிகாரம் செய்தலும் அரசியல் அந்த அதிகாரத்திற்கு எதிராகக் குரல் எழுப்புவதும் அரசியல்.

உடல் அரசியல் எனில் எதைக் கூறலாம்? எந்த வரையறைக்குள் அதை நிலைப்படுத்துவது என்ற பல சிந்தனைகள் உள்ளன. மனித உயிர் தனக்கான வாழ்வை வாழவும் கொண்டாடவும் முக்கிய கருவியாக இருப்பது உடல். அந்த உடல் தனிமனித நனவிலி மற்றும் விருப்பம் சார்ந்து மட்டும் இயங்கக்கூடியதா எனக் கேட்டால் இல்லை. அவ்வுடல் சமூகம் வரையறுத்த பண்பாடு அதிகாரம் அனைத்திற்கும் உட்பட்டு இருக்கக் கூடியதாகும். உடலின் இயக்கம் மனம் மற்றும் அறிவு சார்ந்து இயங்கக் கூடியது. ஒரு தனி மனிதனை எவ்வாறு சமூக மற்றும் பொதுவெளியில் ஒரு கட்டுக்குள் இயக்க இயலுகிறது, என்ற கேள்விக்கு அரசு அதிகாரம் அல்லது சமூக பண்பாடு எனப் பதிலுரைக்கலாம்.

சமூகம், கலாச்சாரம், மதம், இனம், அரசு போன்ற அனைத்தும் அதிகாரத்தின் கருத்தியலை மட்டுமே உள்வாங்கி இயங்கக்கூடியதாகும் ஆகும். எனவே மனித உயிரும் உடலும் ஒரு அதிகாரத்தின் பாற்பட்டே இயங்க நேர்கிறது. இந்த அதிகாரம் யார் கையில் உள்ளது; அரசின் கையில் அரசு புரியக்கூடிய அரசியலில். எனவே தினம் தினம் மனிதர்கள் அரசியலைக் கடக்காமல் அல்லது அரசியல் இன்றி இயங்க இயலாது. முன்பே கூறியது போல அதிகாரம் செலுத்தக் கூடிய அரசியல் என ஒன்று இருந்தால் அதற்கு எதிராகக் குரல் கொடுப்பதும் செயல்கள் புரிவதும் மற்றொரு வகையான அரசியல்.

மனித உடல் மீது நிகழும் வன்முறை என்பது மிகப்பெரிய அத்துமீறல் ஆகும். அந்த வன்முறைக்கு எதிராகக் குரல் எழுப்புவது உடலரசியல் ஆகும். “அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்” என்ற சொல்லாடல் நமது சமூகத்தில் பரவலாக இயங்கக்கூடியது. இதன்வழி அறிவது மனித உடலை வன்முறை எனும் அத்துமீறல் வழி கட்டுக்குள் கொண்டு வருதல் காலங்காலமாக நிகழக் கூடியது என்பதாகும்.

மனித உடலின் மீது நிகழும் வன்முறையானது அனைவருக்கும் ஒன்றுபோலவே உள்ளதா எனில் இல்லை ஆண் உடலில் நிகழ்தலும் பெண் உடலில் நிகழ்தலும் பல்வேறு மாற்றப்பாடுகள் உடையது. அதிலும் உட்பிரிவுகள் பல உள்ளன. பொதுவெளி, நிர்வாகம், அலுவல், குடும்பம் எனும் பல வழிகளில் பல்வேறு வகையாக நிகழும் ஒவ்வொரு மனித உயிரும் ஒவ்வொரு மாதிரியான அத்துமீறல்களை எதிர்கொள்ள நேரிடும்.

அத்துமீறல்களைப் பேசுதல் மட்டும்தான் உடலரசியலா? நிச்சயமாக இல்லை. உடலின் உழைப்பை, வலியை, வேட்கையை, கொண்டாட்டத்தைப் பேசுதலும் உடலரசியல் தான். ஆனால் இத்தகைய உடல் அரசியல் பாலின வகையில் நிச்சயமாக மாறும் தன்மையுடையது. சான்றாக ஜவுளிக்கடையில் வேலை செய்யும் இருபாலினத்தோரில் ஆணுக்குச் சற்று அதிகமாகவும் பெண்ணுக்குச் சற்று குறைவாகவும் ஊதியம் வழங்குவர். ஆனால் வேலைப்பளுவும் வேலை நேரமும் மாறுபடுவதில்லை. இந்த பெண்கள் தங்களது உழைப்பு சுரண்டலைப் பேசுகையில் அதில் வெளிப்படுவது உடலரசியல். திருப்பூரில் சிவகாசியில் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்களும் மேற்கூறிய உடல் அரசியலில் பேசப்பட வேண்டியவர்கள் தான். இத்தகைய உழைப்புச் சுரண்டல் ஆணுக்கு நிகழும் போது அங்குக் கேள்வி கேட்கப்படும் அல்லது செயல்படும் உடலரசியல் வேறுவிதமானது,

          மண்ணில் உழைப்பா ரெல்லாம் வரியராம்
          உரிமை கேட்டால் அவர் மீது அம்பு பாய்ச்சும்
          புலையர் செல்வாராம்
          இதை பகலெல்லாம் தம் கண் மீது கண்டு கண்டு
          அந்திக்கு பின் விண்மீனாய் கொப்பளித்த
          விரிவானம் பாராய் தம்பி
என்ற பாவேந்தர் பாரதிதாசனின் பாடலில் வெளிப்படுவதும் உடலரசியல். உரிமையைக் கேட்கும் உரிமை கூட இல்லாது இருந்த நிலையும் கேட்க நேரிடும் போது உடல் துன்புறுத்தப்படுவதும்; உடல் வலியின் வழி உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பைச் சுரண்டுவதும் தெளிவாக வெளிப்படுகிறது. இது அதிகாரத்திற்கு எதிரான உடலரசியல். மனித உழைப்பைச்சுரண்ட உடலைக் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் எவ்வாரெனில் தொடர் வலியைக்கொடுத்து ஒரு மிருகத்தைப் பழக்கப்படுத்துவது போன்று மனித உடலை வலி கொடுத்து அத்துமீறி கட்டுக்குள் வைத்துக் கொள்வது அதிகாரம் செலுத்தும் உடலரசியல். இவ்விரண்டையும் இப்பாடலில் உணரமுடிகிறது.

          சமத்துவம் சமத்துவம் சமத்துவமேயெனப்
          பிரெஞ்சு புரட்சியில் ஒலித்ததுவே யின்று
          பெண்டிர் உலகத்திலும் ஒலிக்குதுவாம்
          ஆண்களைக் காட்டிலும் அனைத்திலும் முன்னிற்கும்
          அதிகாரம் வேண்டுமென்னும் அர்த்தமில்லை
          சமமாக நிற்கின்றாள்
          சமமாக உழைக்கின்றாள்
          சவமாக கருதாமல்
          சமமாக நினையீரோ?
என்ற கவிஞர் மணிமேகலையின் கவிதை உரத்துச் சொல்வது ஒன்றைத்தான் பாலின சமத்துவம்.

மனித உயிர் என்கிற ரீதியில் பலர் ஒடுக்கப்பட்டாலும் பெண் என்கிற பாலின ரீதியிலும் இங்கு அவள் ஒடுக்கப்படுகிறாள். இதன் மூலம் இரு வகையான ஒடுக்குதல் பெண் மீது நிகழ்கிறது. பொதுவாக ஆணின் உடல் உழைக்கும் கருவியாக மாற்றப்பட்ட நிலையில் பெண்ணின் உடல் கூடுதலாக, போகப்பொருளாகவும் நோக்கப்படுகிறது.

பெண் கவிஞர்கள் எழுதும் எழுத்து புலம்பல்கள் அல்லது சுய கழிவிரக்கம் என்கிற முன்முடிவுகளுடன்தான் எழுத்துலகம் நோக்குகிறது. முற்போக்கு பேசினாலோ, புதிய சிந்தனைகளை வெளிப்படுத்தினாலோ பெண்ணின் உடலரசியல் பிழையான கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுகிறது. எனினும் கவிஞர்கள் தனக்கான சொல்லை மொழியைத் தயக்கமின்றி வெளிப்படுத்துகின்றனர்.

          அத்தனை எளிதில்லை - ஒரு
          அலைபேசி அழைப்பை பற்றிக்கொண்டு
          அன்பின் வழிநடத்தல்
          அன்பின் மறுதலிப்பை அன்போடு ஏற்றுல்
          பசித்த கொடிய மிருகத்தை
          புன்னகைக்க வற்புறுத்தல்

பெண்ணின் உடலில் நிகழும் தேடல் அது நிகழாத போது கோபமாக மாறும் நிலையை க்ருஷாங்கினியின் கவிதை சூசகமாகச் சொல்லிச் செல்கிறது. தன்னுடைய விருப்பத்தைக் காதலைக் காமத்தை அவள் வெளியில் சொல்லக் கூடாது என்பதே சமூகம் வகுத்த நியதி அதை வெளிப்படுத்தும் பெண்ணைப் பொது வெளியில் பொது உடைமையாகக் கருதும் நிலையே உருவாகிறது. பெண்ணின் உடலரசியலை ஏற்க சமூகம் தயாராக இல்லாத நிலையில் ஒழுக்கம் கெட்டவள் என்கிற வார்த்தை அத்துமீறலைத் தொடங்குகிறது. அதன் பின்பு அது செயல்களை வெளிப்படுகிறது இறுதியில் உடம்பின் மீதான வன்முறையாகவும் மாறுகிறது.

பெண்கள் அணியும் நாகரீக உடை கூட எத்தனை எத்தனை பேரைக் கோபப்படுத்துகிறது அல்லது எரிச்சலூட்டுகிறது. இருசக்கர வாகனத்தில் பெண்கள் செல்லும் போது ஏதாவது ஒரு ஆணின் வாகனத்தை முந்திச் சென்று விட்டால் அதைக் கூட அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலாது தனது வாகனத்தை இன்னும் அழுத்தமாகத் திருகி அதிக சத்தத்துடன் அப்பெண்ணின் வாகனத்தை முந்திச் செல்வது ஆணின் ஆதிக்கத்தைக் கூறும் உடலரசியல். பாலின பாகுபாடுகளை மீண்டும் மீண்டும் நிகழ்த்தும் செயல்களை இதுபோல இன்னும் கூறிக்கொண்டே போகலாம். சமூகத்தில் பெண்கள் சமமானவர்கள் போல ஒரு பாவனை தான் உள்ளது.   அந்த பாவனையைப் பல ஆண்கள் நிஜம் என மீண்டும் மீண்டும் தான் நம்பிக்கொண்டு பெண்கள் மீது திணிக்க முற்படுகின்றனர். பெண்களின் பொருளாதாரமோ, பதவியோ, கல்வியோ, அறிவார்ந்த செயல்களோ தான் மதிக்கப்படுகின்றன. ஆனால் பெண் உடல் என்கிற ரீதியில் பல்வேறு வகையில் தொடர்ந்து ஒடுக்கப்படுகிறாள்.

நாட்டுப்புறப் பாடலில் ஒரு பெண் பாடும் பாடல் பெண்ணின் நிலையைக் கூறுகிறது.

          ஆணாய்ப் பிறந்திருந்தால்
          அப்பன் வீட்டு அரண்மனையில்
          அம்பெடுப்பேன் வில்லெடுப்பேன்
          ஐவருடன் பந்தடிப்பேன்
          வீரவாழ்வு வாழ்ந்திருப்பேன்
          மாரியம்மன்கோயிலாண்டை
          மண்ணாய் பிறந்திருந்தால் - எனக்கு
          மாசம் ஒரு பூசை வரும்
          பெண்ணாய் பிறந்த குறை
          புலம்பிக் கிடைக்கலாச்சு

மண்ணுக்கு இருக்கும் மரியாதை மதிப்பு கூட சக உயிரான பெண்களுக்கு இல்லை. ஊதியம் பெற்று இருந்தாலும் வீட்டில் பெண் தனக்கான வேலையை மறுக்க இயலாது. சமூகம் குடும்பம் என்கிற ரீதியில் ஒடுக்கப்பட்டாலும் அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கான தேடலைத் தொடங்கிவிட்டனர். தனது உடல் தனது என்பதையும் உணரத்தலைப்பட்டு விட்டனர். எனினும் பாலின சமத்துவம் என்கிற ஒன்று நிகழ சில நூற்றாண்டுகள் ஆகலாம்.



முனைவர் பா.சத்யா தேவி,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி,மதுரை
bsathya2217@gmail.com





Wednesday, June 15, 2022

வள்ளுவமும் விஞ்ஞானமும்

வள்ளுவமும் விஞ்ஞானமும்

வெ.தோதாத்திரி


ஒப்புரவு அறிதல்:
ஒப்புரவு என்பது கைம்மாறு கருதாத உதவி. பிரதி உபகாரம் எதிர்பார்த்துச் செய்வது ஒப்புரவு ஆகாது. மற்றவர்களுக்கு நம்மால்  இயன்ற  உதவிகளைச் செய்வது, பணத்தால் உதவுவது, உடலால் உதவுவது இதற்குப் பிரதி பயனை எதிர்பாராமல்  செய்ய வேண்டும். இதற்கு உதாரணமாக வள்ளுவர் நான்கு திருக்குறள்களைக் காட்டியுள்ளார்.
    
          கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
          என் ஆற்றும் கொல்லோ உலகு          (211) 
இந்த உலகத்தார் தமக்கு உதவும் மழைக்கு என்ன கைம்மாறு செய்கின்றனர்? மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைம்மாறு வேண்டாதவை.

மழை பொழியும் மேகத்திற்கு நாம் என்ன பிரதி பலன் செய்கின்றோம்? ஒன்றுமில்லை. மேகமும் நம்முடைய பிரதி பலனை எதிர்பார்த்து மழை பொழிவதில்லை. மழையைப் பொழிவது மேகத்தின் குணம், இயல்பு. அதே போன்று பிரதி பலனை எதிர்பாராமல் பிறர்க்கு உதவி செய்ய வேண்டும்.
          ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்
          பேரறிவாளன் திரு.          (215)
ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தது போன்றது பேரறிவாளனிடம் உள்ள செல்வம். ஊரார் ஊருணியில் நீரை எடுத்துப் பலவகையிலும் பயன்படுத்துகிறார்கள். அந்த ஊருணிக்கு அவர்கள் எந்தவித கைம்மாறும் செய்வதில்லை. அவ்வாறே பேரறிவாளனிடம் உள்ள செல்வம் ஊராருக்குப் பயன்படும். எத்தகைய கைம்மாறும் பேரறிவாளன் எதிர் பார்ப்பதில்லை.

          பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
          நயன் உடையான் கண்படின்          (216)
ஊரின் நடுவே பயன் மிகுந்த மாம்பழங்கள் பழுத்தாற் போன்றது நற்பண்புடையானிடன் செல்வம் சேர்தல். ஊரின் நடுவே பயன்மிகுந்த மா பலா வாழை போன்ற மரங்கள் கனிகளுடன் இருந்தால் அவற்றை ஊரார் உண்டு களிப்பர். அதற்காக இம்மரங்களுக்கு எவ்வித கைம்மாறும் செய்வது கிடையாது.

          மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
          பெருந்தகையான் கண்படின்          (217)
அனைத்து உறுப்புகளும் மருந்தாகிப் பயன்படத்தவறாத மரம் போன்றது பெருந்தகைமை உடையவனிடம்  செல்வம் சேர்தல். சில மரங்களின் காய்கள், இலைகள், பழங்கள், பட்டை மற்றும் வேர் அனைத்தும் மருந்தாகப் பயன்படும். அவற்றைத்தக்க  முறையில் உபயோகித்து மக்கள் பயனடைகிறார்கள். இருந்தாலும் அவர்கள் அந்த மரத்துக்கு எந்த வித உதவியோ கைம்மாறோ செய்வதில்லை. அதைப் போலவே பெருந்தகைமையுடையான் தன் செல்வத்தைப் பிறருக்காகவும் பயன்படுத்துவான். இதற்கு அவன் பிரதி  பலனை எதிர்பார்ப்பதில்லை.

கைம்மாறு கருதாமல் செய்யும் உதவி ஒப்புரவு என்று பார்த்தோம். அப்படி உதவி செய்வதால் விளையும் நன்மைகள் யாதென்று பார்த்தோம். உதவி செய்பவர்கள் அந்தப் பலனை எதிர்பார்ப்பதில்லை என்றாலும் அந்த நன்மைகள் தாமாகவே உதவி செய்பவர்களுக்கு வந்து சேரும். விஞ்ஞானம் அவ்வாறே கூறுகிறது. அது எங்ஙனம் என்பதைப் பார்ப்போம்.

தன்னையும் தன் குடும்பத்தைப் பற்றி மட்டுமே எண்ணாமல் பிறரைப் பற்றி எண்ணும் போது நமது மனவழுத்தம் (stress) குறைகிறது. இதனால் நமது ஆரோக்கியம் கூடுகிறது. மற்றவர்களுக்கு உதவும் போது தன்னைப்பற்றிய சிந்தனை (self centeredness) போய்விடுகிறது. இதனால் நமக்கு ஏற்படும் கவலைகளும் போய்விடுகின்றன. மற்றவர்களுக்கு உதவும் போது மூளையில் நம்மை அமைதிப்படுத்தும் endorphins, oxytocin போன்ற  hormones உற்பத்தியாகி நமக்கு மன அமைதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கின்றன. அதனால்தான் திரு.இரவீந்திரநாத் தாகூர் அவர்களும் ‘service is joy ’  அதாவது "தொண்டு மகிழ்ச்சி" என்றார். மற்றவர்களுக்குச் சேவை செய்யும் போது நமது கோபம், குரோதம் போன்ற குணங்கள் மறைந்து விடுகின்றன. இதனாலும் நமது ஆரோக்கியம் கூடுகிறது. 

எதிர்மறை எண்ணங்களான, கோபம், பழி வாங்குதல் போன்ற சிந்தனைகள் நம்முடைய ஆரோக்கியத்தைக் கெடுக்கின்றன.. அந்த உணர்ச்சிகள் வரும் போது நமது நெஞ்சு படபடக்கின்றது.. நமது இரத்த அழுத்தம் கூடுகிறது. நமது ஜீரணம் தடைப்படுகிறது. இவற்றினால் நமது ஆரோக்கியம் கெடுகிறது. இந்த உணர்ச்சிகள் எல்லாம் நாம் மற்றவர்களுக்குச் சேவை செய்யும் போது மறைந்துவிடுகின்றன. இதனால் நமது ஆரோக்கியம் பேணப்படுகிறது.





"தொல்காப்பியர் பிள்ளைத் தமிழ்"



தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ.காளியப்பன்
                இயற்றிய
ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர் பிள்ளைத்தமிழ்




தாலப்பருவம்:
"தாலப்பருவம் அல்லது தாலாட்டு"
பிள்ளைத்தமிழில் மூன்றாம் பருவம் தாலப்பருவம் ஆகும்.   இது குழந்தையின் ஏழாம் திங்களில் நிகழ்வது ஆகும்.   தால் என்பது நாக்கு.   நாக்கை அசைத்துக் குழந்தை பேசிப் பழகும் பருவம் மேலும் நாக்கை அசைத்துத் தாலாட்டிக் குழந்தையைத் தூங்க வைப்பதும் இப்பருவமாகும்.   பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் ஒரு பருவமாக விளங்கும் தாலாட்டு.    நாளடைவில் தனியொரு சிற்றிலக்கியமாக உருப்பெற்றது எனலாம் (சான்றாக மாரியம்மன் தாலாட்டு போன்றன).

பாடல்— 1:
          உந்தி [83] முதலா  முந்துவளித் தோன்றி                                                      
                    உரசு நாவால் தோன்றிய ஒலியே
          செந்தமிழ் எழுத்தெனச் செப்பினர் புலவர்
                    சேர்த்தே பாடினர் உன்னைத் தாலாட்டி
          முந்தித் தாயே கற்றிடச் செய்தாள்
                    முக்கனி மொழியைத் தாலாட்டி என்றும்
          தீந்தமிழுக்(கு) இலக்கணம் ஆனது தாலாட்டு
                    தீதறக் கற்றனர் தெளிந்து புலவோர்கள்                      
          முந்தையர்  குலத்தின் பெருமை யோடு
                    முன்னோர் வாழ்வியல் நெறிமுறை கூறி
          சந்தவிசை பாடி ஆட்டினர் தொட்டிலையே
                    சிறுகண் மூடி சிறுவா உறங்காயோ
          அந்தமிலா ஐவகை இலக்கணம் உரைத்தவனே
                    அதங்கோட் டாசாற்கு அரில்தப உணர்த்தியவா
          செந்நாப் போதார் உன்வழிக் குறளை
                    உரைக்கச் செய்தவா தாலோ தாலேலோ         [1]

குறிப்பு:  83  என்பது  தொல்காப்பிய நூற்பாவைக் குறிக்கும்.

அருஞ்சொற்பொருள்:
உந்தி— மூலாதாரம்; முந்துவழி— மேலேவரும் காற்று; தீந்தமிழ்— தீம்+தமிழ் இனிமையான தமிழ்; அந்தம்— அழிவு முடிவு; அரில்தப— மயக்கம் நீங்க

இதன்பொருள்:
உந்தியிலிருந்து காற்றுத் தோன்றி மேலே வரும் போது நாவால் உரசப்பட்டு ஒலியாக மாறுகிறது. இந்த ஒலிகளைச் செந்தமிழ் எழுத்துகள் என்று செந்தமிழ்வாணர்கள்   கூறினார்கள். அந்த எழுத்துக்களைச் சேர்த்துச் சொற்களை உருவாக்கினர். முதன்முதலாக தாயால் நாவை அசைத்துப் பாடிய பாட்டே தாலாட்டு எனப்பட்டது. இதைத்தான்  தாய்மொழி என்று கூறுவர். இத்தாலாட்டே  முக்கனி மொழிக்குத் தொடக்க இலக்கணம் ஆகும். இவ்விலக்கணத்தைக் குற்றமறக் கற்றுத்தெளிந்தவர்களே புலவர்கள் எனப்பட்டனர். அவர்கள் நம்முன்னோர்களின் குலப்பெருமையோடு வாழ்வியல் நெறிமுறைகளையும் இசையோடு பாடி தாலாட்டுச் செய்கிறார்கள். தாலாட்டித் தொட்டிலை ஆட்டுகின்றார்கள். எனவே சிறுகண்மூடிச் சிறுவா உறங்காயோ? அழிவில்லாத ஐந்து இலக்கணங்களை உரைத்தவனே! அதங்கோட்டாசான் தடைகளுக்கு விடைகூறி இலக்கணத்தை மயக்கமின்றி  உணர்த்தியவனே! திருவள்ளுவரையும் உன்வழியிலேயே குறளை இயற்ற வைத்தவனே! தாலோ தாலேலோ

இலக்கணக்குறிப்பு:
உரசு நா— வினைத்தொகை; செந்தமிழ், முக்கனி, தீந்தமிழ்,சிறுகண் செந்நாப்போதார் — பண்புத்தொகைகள்; அந்தமிலா— ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்;  உன்வழி— ஆறாம் வேற்றுமைத்தொகை

__________________________________________

பாடல்— 2:
          தமிழர் வாழ்வைக் களவு கற்பெனத்
                    தனித்தனி பிரித்துத் துறைபல தந்தவனே!  
          தண்டமிழ் நிலத்தை நான்காய்ப் பிரித்துத்
                    தனித்தே ஐவகை ஒழுக்கத்தை நிறுத்தியவா
          தமிழர் பெருமையைத் தரணிக்கு உரைத்தவா!
                    தலைவன் தலைவி அறத்தொடு நிற்றலும்
          தோழியும் பாங்கனும் உற்றிடத் துதவலும்
                    தாயர் இருவர் தன்மை உரைத்தவனே!
          இமிழ்கடல் சீற்றத்தால் இறந்தன நூலெலாம்
                    எனினும் உன்நூல் இறவாது மீண்டதே
          இடைகடைச் சங்கத்தார்க்கு இலக்கணம் தந்தவா!
                    எங்கள் காப்பியா தாலோ தாலேலோ      
          அமிழ்தாம் தமிழுக்கு அரணாய் உள்ளவா!
                    ஐவகை நிலத்தின் தெய்வம் உரைத்தவா!
          அணிக்குத் தலைமை உவமை என்றவா!
                    அனைத்தும் அறிந்தவா தாலோ தாலேலோ         [2]

அருஞ்சொற்பொருள்:
தரணி— உலகம்; தாயர் இருவர்— செவிலித்தாய்;  நற்றாய்; பாங்கன்— தோழன்;  இமிழ்கடல்— ஒலியை உடைய கடல்; அரணாய்— பாதுகாப்பாய்

இதன்பொருள்:
தமிழர் அகவாழ்க்கையைக் களவென்றும் கற்பென்றும் பிரித்து, அதை விளக்கத்  துறைகளாகப் பிரித்துக் கூறியவா! தமிழர் வாழும் நிலப்பகுதியைக் குறிஞ்சி முதலாக நான்காய்ப் பிரித்தவா! அதேசமயம் ஒழுக்கத்தை ஐந்தாகக் கூறியவா! தமிழர் பெருமையை உலகிற்கு எடுத்துச் சொன்னவனே! தலைவன் தலைவியர்  பேசிக்கொள்ளும் இடத்தினையும், தோழியும் தோழனும் தலைமக்கள் காதல் வளர உதவி செய்தலையும் நற்றாய் செவிலித்தாய் இருவர் தன்மைகளையும் உரைத்தவா! முன்னொரு காலத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலையால்  அனைத்து நூல்களும் மறைந்தன. ஆனால் உன்நூல் மட்டும் இறவாமல் மீண்டது. அதுவே இடைச் சங்கத்தார்க்கும், முதற்சங்கத்தார்க்கும் (ஏன் இக்காலத்தார்க்கும்) இலக்கண நூலைத்திகழத் தந்தவனே! எங்கள் தொல்காப்பியனே! நாவினை அசைத்துப் பேசாயோ! தமிழ் தமிழ் என்று சொல்லச் சொல்ல அமிழிதாக மாறும் தமிழ் மொழிக்குப் பாதுகாப்பாக விளங்குபவனே! ஐவகைத்திணைக்கும் உரிய தெய்வங்களை எடுத்துக்  கூறியவா! அணிகளுக்கெல்லாம் முதன்மையானது உவமையணி என்றவா! அனைத்தும் அறிந்த ஆன்றோனே! தாலோ தாலேலோ!

இலக்கணக்குறிப்பு:  
களவு கற்பு, தலைவன் தலைவி— உம்மைத்தொகைகள்; தண்டமிழ்— பண்புத்தொகை;  தோழியும் பாங்கனும்— எண்ணும்மை; இமிழ்கடல்— இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை; உன்நூல்— ஆறாம் வேற்றுமைத் தொகை.

__________________________________________

பாடல்— 3:
          பிரிவுகள் என்பது பாலையின் உரிப்பொருள்
                    களவிலும் கற்பிலும் இருவேறு நிலையிலும்
          பிரிவுக்கு இலக்கணம் பற்பல சொன்னவனே
                    பொருள்வயிற் பிரிதலும் உண்டென மொழிந்தவா!
          உரித்தென மொழிந்தாய் ஓதலும் காவலும்
                    உயர்ந்த தூதும் ஒருவழி உண்டென்றாய்
          உரிய காலத்தை ஓதினாய் அன்றே
                    ஒருவழித் தணத்தலும் உடந்தான் ஓதியவா!
          உரிமை கோரார் உயர்ந்த மங்கையர்
                    மடல்மேல் ஏறவும் கடல்மேற் செல்லவும்
          உடன்போக்கும் ஒருவகைப் பிரிவாய் உரைத்தவா!
                    உள்ளம் உவக்கத் தாலோ தாலேலோ
          பரத்தையர் பிரிவால் ஊடலும் வந்தால்
                    பற்பல வாயில்கள் பலவாய்த் தேற்றுவதைப்
          பலவகை மொழியால் பாங்காய் உரைத்தவா!
                    பாரோர் மகிழத் தாலோ தாலேலோ         [3]                

அருஞ்சொற்பொருள்:
ஒருவழித்தணத்தல்— உடன்போக்கு; பார் உலகம்; வாயில்கள் தலைவனுக்கும் தலைவிக்கும் சிறு பிணக்கு ஏற்படும்போது உடன்பாடு செய்பவர்கள்

இதன்பொருள்:
பிரிவு என்பது பாலைத்திணையின் உரிப்பொருள். இது களவு, கற்பு என்ற இருவேறு நிலைகளிலும் நடைபெறும் எனப் பிரிவுக்கு இலக்கணம் சொன்னவனே! பொருள் தேடச் செல்லும் பிரிவு, கற்பதற்காகவும் நாட்டைக்காப்பதற்காகவும், தூது செல்வதற்காகவும் பிரியும் பிரிவுகள் உள்ளன.  உடன்போக்கையும் ஒரு பிரிவாகக் கூறயவனே! பெண்கள் மடல் ஏறுதல் வழக்கம் இல்லை. அதேசமயம் பெண்கள் தனியாகக் கலம் ஏறி கடல்கடந்தும் செல்வதில்லை என்றுஇலக்கணம் உரைத்தவா! நாங்கள் உள்ளம் மகிழும்படி கண்ணுறங்காயோ! கற்புக்காலத்தில் பரத்தையர்ப்பிரிவால் தலைவி ஊடும்போது பலவகையான வாயில்கள் பல்வேறுமுறையில் தேற்றுவர்கள் என உரைத்தவனே! உலகமக்கள் மகிழும்படித் தாலோ தாலேலோ!

இலக்கணக்குறிப்பு:  
ஓதலும் காவலும்— எண்ணும்மை      

__________________________________________

பாடல்— 4:    
          ஒலியைக் கணக்கிட உரைத்தாய் மாத்திரை
                    ஒருவிர லோடு பெருவிரல் சேர்த்து
          ஓசை செய்தல் ஒருமாத் திரையாம்
                    ஒருவர் இயல்பாய்க் கண்ணிமைத் தலுமாம்
          ஒலிக்கும் மாத்திரை ஒருநான்கு கூறாம்
                    ஒலிக்க மனதால் நினைத்தல் காலாம்
          ஊன்றல் அரையே முறுக்கல் முக்கால்
                    விடுத்தல் ஒன்றென விளம்பினர் தமிழர்
          ஒலிக்கும் எழுத்தைக் குறில்நெடில் ஒற்றென
                    ஒலிக்கும் அலகால் ஒருபெயர் வைத்தவனே!
          ஒன்றே குறிலாம் இரண்டே நெடிலாம்  
                    ஒற்றே அரையென ஓதிய புலவன்நீ
          வலிமெலி இடையென வகுத்தாய் எழுத்தினை
                    வாய்பாட்டில் நீளும் எழுத்தின் இலக்கணம்
          வருமிசை நூலில் காண்க என்றவனே!
                    வல்லோர் மகிழத் தாலோ தாலேலோ         [4]            

இதன் பொருள்:
எழுத்துக்கள் உச்சரிக்க ஆகும் நேரத்தைக் கணக்கிட மாத்திரை என்னும் அலகினை உரைத்தாய்.   சுட்டு விரலோடு பெருவிரலைச் சேர்த்துச் சொடுக்க ஆகும் நேரமே ஒருமாத்திரை நேரமாகும்.  அதைக்கூட நான்கு கூறாக்கி எழுத்தை உச்சரிக்க நினைப்பது கால் மாத்திரை, இருவிரல்களையும் சேர்ப்பது அரை, முறுக்குதல் முக்கால், விடும்போது ஒருமாத்திரை ஆகும் என எடுத்துச் சொன்னவர்கள் நம்தமிழர்கள். ஒலிக்கும நேரத்தை வைத்துக்  குறில்,நெடில், ஒற்று எனப்பெயர் வைத்தவனே!  ஒரு மாத்திரை பெறுவது குறில் என்றும்,இரண்டு மாத்திரை நேரம் ஒலிப்பது நெடில் என்றம், அரைமாத்திரை அளவு ஒலிப்பதை ஒற்று என்றும் வகுத்துக் காட்டிய புலவன் நீயே!  ஒற்று எழுத்தினை வல்லினம், மெல்லினம், இடையினம் என்று வகுத்துக் காட்டினாய்! வாய்ப்பாட்டில் நீண்டு ஒலிக்கும் எழுத்தின் அளவுகளை இசை நூலில் கண்டுகொள்க என்றவனே! வல்லோர் மகிழத்தாலோ தாலேலோ!

இலக்கணக்குறிப்பு:  
ஒரு விரல்,பெருவிரல்— பண்புத்தொகைகள்; நினைத்தல்,ஊன்றல் தொழிற்பெயர்கள். வலிமெலி இடை உம்மைத்தொகை
   
__________________________________________

பாடல்— 5:    
          எல்லா எழுத்தும் பிறக்கும் இடமும்
                    எடுக்கும் முயற்சியும் தொகுத்துச் சொல்லியவா
          எண்ணிய சார்பாய் இருக்கும் மூன்றும்
                    அதனதன் முதலே அடிப்படை என்றவனே!
          எல்லா [102] எழுத்தும் வெளிப்படக் கிளந்து
                    சொல்லிய பள்ளி எழுதரும் என்றவனே!
          அகத்தெழு வழிஇசை அரில்தப நாடி
                    அளபிற் கோடல் அந்தணர் மறையென்றாய்
          எல்லா[103] எழுத்திலும் இருபத்தி ரண்டே
                    சொல்லுக்கு முதலாம் என்று சொல்லியவா!
          இருபத்து நான்கே இறுதியில் வருவதொடு    
                    இடைநிலை மயக்கமும் இயம்பிய காப்பியனே!
          எல்லாப் புணர்ச்சியும் இயையும் போது
                    இடையில்[118] சாரியை வருவதை உரைத்தாயே
          எல்லாம் தொகுத்து தொகைமரபு உரைத்தவா!
                    எல்லாரும் மகிழத் தாலோ தாலேலோ         [5]        

குறிப்பு: 102,103 118 என்பன தொல்காப்பிய நூற்பாக்களைக் குறிக்கும்.

இதன் பொருள்:
முதலெழுத்து, சார்பெழுத்து ஆகிய எல்லா எழுத்துகளும் பிறக்கும் இடமும், ஒலிக்கும் முயற்சியும்    ஆகிய அனைத்தையும் தொகுத்துச் சொல்லியவா! சார்பெழுத்துகள்அதன்அதன் முதல் எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டு வரும் என்றவனே! எல்லா எழுத்துகளும் முன்பு கூறிய பிறப்பிடங்களிலிருந்து பிறக்கும் ஓசை காற்றினால், வெளிப்படக் கேட்குமாறு சொல்லும்போது உள்ளே உறுப்புகளில் தங்கிச் சுழன்று எழும் ஓசைக்காற்றுக்கு அளபு கூறுதல் அந்தணர் இலக்கண நூல்களில் காணப்படும்  என்றவனே!  முப்பத்து மூன்று எழுத்துக்களில்  இருபத்து இரண்டு எழுத்துகள் மொழிக்கு முதலிலும், இருபத்து நான்கு எழுத்துகள் மொழிக்கு இறுதியிலும் வரும் என்று கூறியதோடு மொழிக்கு இடையில் எந்த எந்த  எழுத்துகளோடு எந்த எந்த  எழுத்துகள் சேர்ந்து  வரும் என்று கூறியவா!  எல்லா வகைப் புணர்ச்சியிலும் சாரியைகள் இடையிலும் வருவதை உணர்த்தியவா! இவற்றை எல்லாம் தொகுத்து தொகைமரபு என்னும்  இலக்கணம் உரைத்தவா எல்லோரும் மகிழத் தாலோ தாலேலோ !
   
இலக்கணக்குறிப்பு:  
எழுத்தும்— முற்றும்மை; அகத்தெழு— ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை; தொகை மரபு— இருபெயரொட்டுப் பண்புத்தொகை

__________________________________________

பாடல்— 6:                                  
          எல்லா ஈற்றுக்கும் சாரியை உரைத்து
                    இருவகைப் புணர்ச்சிக்கும் இலக்கணம்  இயம்பியவா!
          இகர இறுதிப் பெயர்நிலை முன்னர்
                    வல்லெழுத்து மிகமென இலக்கணம் வகுத்தவனே!  
          எல்லாப் பருவத்தும் உழைத்தான் என்பதை
                    பனிவளி வெயில்மழை  யுடன்அத்துச் சாரியை
          இயைந்து வருமென எடுத்துக் காட்டியவா  
                    இலக்கணத் தூடே பண்பாடு பகன்றவா!
          எல்லாச் சொல்லிலும் எகரமும் ஒகரமும்
                    ஈற்றலில் வாராது என்று இயம்பியவா!
          எல்லா ஈற்றுக்கும் எடுத்துக் காட்டுடன்
                    இலக்கணம் சொன்னாய்த் தாலோ தாலேலோ                                        
          நல்லது அல்லாச் சொல்லுக்குக் கூட
                    நற்றமிழில் இடக்கர் அடக்கல்  என்றவனே!
          நல்லதல்லா மலத்தைப் ‘பகர ஈ’ என்றவனே!
                    நாங்கள் மகிழ தாலோ தாலேலோ         [6]        

அருஞ்சொற்பொருள்:  
வழி— காற்று; ஊடே— இடையே; பகறல்— கூறுதல்

இதன்பொருள்:
வேற்றுமை, அல்வழி என்னும் இருவகைப் புணர்ச்சிகளிலும் உயிரீறு மெய்யீறு குற்றியலுகர ஈறு என எல்லா வகை ஈறுகளுக்கும் சாரியை கூறியவனே! இகர இறுதி பெயர் சொல்லின்(அப்படி இப்படி எப்படி) முன்னர் வல்லெழுத்து மிகும் என இலக்கணம் வகுத்தவனே! தமிழன் பனி, காற்று, வெயில், மழை என்னும் எல்லாப்பருவ காலத்திலும் உழைத்தான் என்பதை அத்துச் சாரியை கூறும் போது சான்றுகூறியவனே! இவ்வாறு இலக்கணம் கூறும்போது  இடையிடையே தமிழ்ப் பண்பாட்டையும்  கூறியவனே! எந்தச் சொல்லுக்கும் இறுதியில் எகரமும் ஒகரமும் வாரா என்று கூறியவனே! இவ்வாறு எல்லா ஈறுகளுக்கும் இலக்கணம் சொன்னவனே! மலத்தை  ‘பீ’ என்று கூறாமல் இடக்கர் அடக்கலாகப்  ‘பகர ஈ’ என்றவனே! நாங்கள் மகிழத் தாலோ தாலேலோ.

இலக்கணக்குறிப்பு:  
ஈற்றுக்கும் — முற்றும்மை; இருவகை,நற்றமிழ்— பண்புத்தொகைகள்; பனிவழிவெயில் மழை— உம்மைத்தொகை;  இலக்கணம் சொன்னாய்— இரண்டாம் வேற்றுமைத்தொகை

__________________________________________

பாடல்— 7:
          எண்ணல் எடுத்தல் முகத்தல் நீட்டலென
                    எல்லா அளவையும் எடுத்துச் சொன்னவனே!
          எள்ளையும் கொள்ளையும் நெல்லையும் குறித்தே
                    எல்லா நிலத்தார் உணவைக் கூறியவா!  
          கண்ணியும் மாலையும் தாரும் பூத்தானே
                    கழுத்திலும் மார்பிலும் அணிகையில் வேறாமே
          காலம் இடத்திற்கு முன்பின் பொதுவெனக்
                    காட்டிய காப்பியனே தாலோ தாலேலோ
          விண்ணும் [1589] மண்ணும் வளியொடு நெருப்பும்
                    வான்மழை நீரும் கலந்த உலகத்தில்
          பெண்ணும் ஆணும் நீங்கிய அலியை
                    பேடியெனக் கூறியே மரபினைப் போற்றியவா  
          பெண்ணைப் பெற்றோர் கொடுப்பக் கொள்ளாது
                    பாங்கன் பாங்கியைத் தூதாய் விடுத்து
          பெண்ணுடன் போதல் உடன்போக் காமென
                    பேசிய காப்பியா தாலோ தாலேலோ         [7]        

குறிப்பு:  1589  என்பது  தொல்காப்பிய நூற்பாவைக் குறிக்கும்.
           
அருஞ்சொற்பொருள்:
கண்ணி —  தலைமாலை;  தார் — மார்பணிமாலை; வளி — காற்று;  பாங்கன் — தோழன்; பாங்கி — தோழி

இதன்பொருள்:
அளவைப் பெயர்களாகிய எண்ணல், எடுத்தல் (நிறை) நீட்டல், முகத்தல் என்று எல்லா வற்றையும் எடுத்துச் சொன்னவனே! எள்,கொள், நெல் என்ற சொற்களால் ஐவகை நிலமக்களின் உணவுகளைக் குறித்துக் கூறியவா! கண்ணி, மாலை, தார் என்பன யாவையும் பூக்களால் ஆன தொடர்களே, இருப்பினும் தலையில் அணியும்போது கண்ணி என்றும், கழுத்தில் அணியும் போது மாலை என்றும், மார்பில் அணியும்போது தார் என்றும் பெயர்களைப் பெறுகின்றன. இவற்றின் வேறுபாடுகளை எல்லாம் உரைத்தவனே!   இடத்திற்கும்   காலத்திற்கும் முன் பின் என்ற சொற்கள் பொதுவாக வரும் என்று காட்டிய காப்பியனே தாலோ தாலேலோ! வானமும்,நிலமும், காற்றும்   நெருப்பும்  நீரும் கலந்த சேர்க்கையே உலகம் என்றவனே! அவ்வுலகத்தில் ஆண் தன்மையும், பெண்தன்மையும் அற்ற பிறவியைப் பேடி என்று கூறி மரபினைக் காத்தவனே! தலைவியின் பெற்றோர்களால் கொடுக்கப்படாத போது, தோழியையும் தோழனையும் தூதாக விடுத்துப் பெண்ணை    அழைத்துக்கொண்டு செல்லுதலை உடன்போக்கு என்று கூறிய காப்பியனே! தாலோ தாலேலோ.

இலக்கணக்குறிப்பு:  
எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் உம்மைத்தொகைகள்; எள்ளையும், கொள்ளையும் — எண்ணும்மை

__________________________________________

பாடல்—8:    
          ஈருயிர் [140 ]சேர்ந்தால் இடையில் தோன்றும்
                    எழுத்தைக் கூட ‘ய்.வ்’  என்றவனே!
          எழுதும் போது மகரம்  வரும்முறை
                    உட்பெறு புள்ளி உருவாகும் என்றவனே[143]
          ஆரிய மொழியை அண்ட விடாது
                    அன்றே காத்தவனே  அதையும் மீறினால்
          அம்மொழிக்  கிளவி அவ்வெழுத் தொரீஇ
                    எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும் என்றவனே [884]  
          சீரிய புலவர் அவையில் கேட்ட
                    தடைக்கு விடையைத் தகும்படி உரைத்தவனே!
          திருவிற் பாண்டியன் திருமுன் அரங்கேற்றத்
                    தொடங்கிய காப்பியா தாலோ தாலேலோ![பாயிரம்]
          ஊரொடு[1031] தோற்றம் உரித்தென மொழிந்து
                    உலாத்தோன்ற ஒருவித் திட்டவனே!  உன்னை
          ஊரில் உள்ளதேரில் வைத்து இழுப்போம்
                    உள்ளம் மகிழ்ந்து தாலோ தாலேலோ             [8]        

குறிப்பு:  பாயிரம் மற்றும் 140, 143, 884, 1031 என்பன தொல்காப்பிய நூற்பாக்களைக் குறிக்கும்.

அருஞ்சொற்பொருள்:
மகரம் ம் என்னும் மெய்யெழுத்து; கிளவி—சொல்;சீரிய- சிறந்த

இதன்பொருள்:
புணர்ச்சியில் வருமொழி முதலிலும் நிலை மொழி ஈற்றிலும் உயிர் எழுத்துகள் வரும்போது அவற்றை உடன்படுத்த ய், வ் என்னும் எழுத்துகள் தோன்றும் என்றவனே! எழுதும் போது மகரக்குறுக்கத்திற்கு உள்ளே புள்ளி  உருவாகும் என்றவனே! அன்றே ஆரிய மொழியைத் தமிழில் கலக்க விடாது   காத்தவனே! அதையும் மீறிய எழுதவேண்டும் என்ற சூழ்நிலையில் அவ்வெழுத்துகளின் வரிவடிவத்தை நீக்கி தமிழ் ஒலிக்கு ஏற்றாற் போல் மாற்றி எழுதவேண்டும் என்றவனே! சிறந்த புலவர்கள் வீற்றிருக்கும்  நிலந்தரு திருவில் பாண்டியன்  அவையில் புலவர்கள் வினவிய வினாக்களுக்கெல்லாம் விடைகளைக் கூறி நூலினை அரங்கேற்றம் செய்தவனே! சிற்றிலக்கியங்களில் ஒன்றாகிய உலா இலக்கியம் தோன்ற அடிப்படை  இட்டவனே! ஊரில் உள்ள நாங்கள் அனைவரும் ஒருங்குகூடி உள்ளமாகிய தேரில் வைத்து இழுப்போம். ஆகவே உள்ளம் மகிழ்ந்து தாலோ தாலேலோ.
 
இலக்கணக்குறிப்பு:
ஒரீஇ – சொல்லிசை அளபெடை        
   
__________________________________________

பாடல்—9:        
          ஒன்பதின் மீதுனக்கு நாட்டம் உள்ளதால்
                    ஓரதி காரத்தை ஒன்பதியல் ஆக்கினையோ
          ஓராயிரத் தறுநூற்று பதினொரு நூற்பா
                    உரைத்தாய் என்றே ஒத்துக் கொண்டோமே
          ஒன்பதி னோடு ஒருநூறு ஆயிரம் [463]
                    ஒட்டி வருவதை உரைத்தாய் இலக்கணத்தால்
          தொண்ணூறு தொள்ளா யிரமாகும் முறையைத்
                    துளைந்து உரைத்த தொல்காப் பியனே
          நன்றாய் சோற்றை ஆக்கல் போல
                    நவின்றாய் இலக்கணம் கிளவி ஆக்கத்தில்
          நம்தமிழ் வாழ நல்லரண் அமைத்த
                    நற்றமிழ்ப் புலவா தாலோ தாலேலோ
          உந்தன் நூலை நூலெனத் தொடங்கி
                    நூலென முடித்த நுனித்தகு புலவோனே
          உனக்கீடாய் இனியொரு நூலை படைக்க
                    உள்ளா ரிலையே தாலோ தாலேலோ             [9]    

குறிப்பு:  463  என்பது  தொல்காப்பிய நூற்பாவைக் குறிக்கும்.

அருஞ்சொற்பொருள்:
துளைந்து—ஆய்ந்து

இதன்பொருள்:
ஒன்பதின் மீது உனக்கு அளவிலா நாட்டம் இருப்பதால்தான் என்னவோ ஒவ்வொரு அதிகாரத்தையும் ஒன்பது ஒன்பது இயல்களாகப் பகுத்துள்ளாய் அதனால் நூற்பாக்களின் எண்ணிக்கையும் 1611  ஆக உள்ளதோ? மேலும் புணர்ச்சியில் ஒன்பது என்ற எண்ணை மட்டும் சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளாய். தொண்ணூறு தொள்ளாயிரம் தோன்றும் முறைகளை ஆயந்து  கூறிய  தொல்காப்பியனே! குருணை, கல், கறுப்பு அரிசி இவற்றை எல்லாம் களைந்து உணவு சமைப்பதைச்  சோறு ஆக்கல் என்பர். அதை மனத்தில் கொண்டே சொல் அதிகாரத்தின்  முதல்  இயலைக் கிளவி ஆக்கம் என்று பெயர் வைத்தவனே! நம் தமிழ் மொழியின் காப்பரண் ஆக தொல்காப்பியம் தந்த புலவா!  தாலோ தாலேலோ. உன்றன் நூலை நூல் மரபு என நூலில் தொடங்கி,  புலவர் கூறிய நூலே என நூலில் முடித்த  கூர்த்த அறிவுள்ளவனே தாலோ தாலேலோ!

இலக்கணக்குறிப்பு:
நம் தமிழ்—ஆறாம் வேற்றுமைத்தொகை; நல்லரண்—பண்புத்தொகை; உன்றன் என்பது உந்தன் என எதுகைக்காக எழுத்தப்பட்டது. இலை—இல்லை என்பதன் இடைக்குறை
9 இன் சிறப்பு — விளக்கம்:  
9உடன் எந்த எண்ணைப் பெருக்கினாலும்  'விடையின் கூட்டுத்தொகை 9ஆகவே வரும்'
சான்று:  9x9  =81 → 8+1= 9;  8x9  =72 → 7+ 2 = 9

9 உடன் எந்த எண்ணை கூட்டினாலும்  'விடையின் கூட்டுத்தொகை கூட்டப்பட்ட எண்ணாக இருக்கும்'
சான்று:   9+ 9  =18→1+8= 9;   9+ 7  =16 →   1+6= 7

அதனால்தான் சிறப்பு தலைமை எனும் பொருள்தரும் ஓரெழுத்து ஒரு மொழியாகிய ஐ யை ஒன்பதாவது எழுத்தாகத் தமிழ் நெடுங்கணக்கில் வைத்துள்ளனர். இக்காரணத்தினாலேயே அய் என எழுதக்கூடாது என்கிறோம். அக்காரணம் பற்றியே தொல்காப்பியர் ஒவ்வொரு அதிகாரத்தையும் ஒன்பது ஒன்பது இயல்களாகப் பிரித்துள்ளார்.

திருமூலரும்  இவ்வாறே திருமந்திரத்தை  ஒன்பது உட்பிரிவுகளைக் கொண்டதாகச்செய்துள்ளார்.
ஒவ்வொரு பிரிவும் ஒரு ‘தந்திரம்’ எனக் குறிக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்பது தந்திரங்களும், ஆகமங்கள் ஒன்பதின் சாரமாக அமைந்துள்ளன. அந்த எண்ணில் நீண்ட வாழ்வு எனும் அர்த்தம் பொதிந்திருப்பதாகச் சொல்கின்றனர், சீனர்களின் சொர்க்க கோபுரம், ஒன்பது வளையங்களால் சூழப்பட்டுள்ளது.   எகிப்து, ஐரோப்பா, கிரீக் முதலான நாடுகளும் 9-ஆம் எண்ணை விசேஷமாகப் பயன்படுத்திப் போற்றுகின்றன.  புத்த மதத்தில், மிக முக்கியமான சடங்குகள் யாவும் ஒன்பது துறவிகளைக் கொண்டே நடைபெறும்.   தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் சுத்தத்தை 999 என்று  மதிப்பிடுவார்கள்.    பெண்களின் கர்ப்பம், பூரணமாவது ஒன்பதாம் மாத நிறைவில்தான்!
ஒன்பது என்ற எண்ணுக்கு வடமொழியில் நவம் என்று பெயர்.  நவ என்ற சொல் புதிய, புதுமை எனும் பொருள் உடையது.        
(5-27-20222)    
__________________________________________

பாடல்—10:
          களவல ராயினும்[1061] காமத்துப் படினும்
                    கண்ட ஊரார் காதொடு பேசினும்
          கட்டினும் கழங்கினும் வெறியாட்டு அயர்தலும்
                    செவிலிக் கூற்று நிகழும் என்றவனே!
          களவில்  பழகிய காதலர் இருவர்
                    காவிலும் பூம்பொழில் சோலையில் சேர்ந்தே
          கனவில் மிதந்தது போதுமென்றே கற்புக்காக
                    கடிமணம் புரிவர் என்று சொன்னவனே!
          அளவிற்கும்[170] நிறையிற்கும் மொழிமுத லாகி
                    உளவெனப் பட்ட ஒன்பதிற் றெழுத்தென
          அகரவுகரம் கசதப நமவ என்றவனே!
                    அனைத்தும் அடக்கி இலக்கியம் சொன்னவனே
          உளமகிழ்ந் துன்னைப் போற்றினோம் ஐயனே
                    உவந்து நீயும் தாலோ தாலேலோ
          ஒருபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்கா
                    பெற்றதால் உன்னை தாலோ தாலேலோ             [10]        
           
குறிப்பு:  170,  1061 என்பன   தொல்காப்பிய நூற்பாவைக் குறிக்கும்.

அருஞ்சொற்பொருள்:
அலர்— ஊரார் தூற்றிப் பேசல்; கட்டு—கட்டாக உள்ள ஓலைச்சுவடி பார்த்துக்கூறல்; கழங்கினும்— கழற்சிக்காயின் எண்ணிக்கையை வைத்துக் கூறல்;  வெறியாட்டு— வேலன் மீது வந்து கூறல்; கா—பூங்கா; கடி மணம்—திருமணம்

இதன்பொருள்:
தலைவனும் தலைவியும்  பழகுவதை ஊரார் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் போதும், காமம் மிகுதியால் தலைவியின் உடலில் தோன்றும் நிறவேறு பாட்டின் போதும், ஊர் மக்கள் தங்களுக்குள் கமுக்கமாகப் பேசிக் கொள்ளும் போதும்,    ஓலைக்கட்டு,கழற்சிக்காய்,இவற்றின மூலமும் வேலன் வந்து ஆடிச் சொல்லும் போதும் செவிலி கூற்று நிகழும் என்றவனே! காதலர் இருவரும் பூங்காவிலும், சோலையிலும் சேர்ந்து சுற்றி மகிழ்ச்சியாக இருந்தது  போதும் என்று திருமணம் செய்து கொள்ளுவர் என்று கூறியவனே! அளவைகளாகிய எண்ணுதல் முகத்தல் நீட்டல் மற்றும் நிறுத்தல் முதலிய அளவுப் பெயர்கள் மொழிக்கு முதலாக வரும் போது வரக்கூடிய எழுத்துகளை அ, உ, க,ச,த,ப,ந,ம,வ என்னும் ஒன்பது எழுத்துகளும் வரும் என்றவனே! இவற்றையெல்லாம் உள்ளடக்கி தமது நூலை இலக்கியம் போல் கூறியவனே!  எங்கள் உள்ளம் மகிழ்ந்து போற்றினோம் தலைவா நீயும் உள்ளம் மகிழ்ந்து நாவை அசைத்துப் பாடுவாயாக!எந்தப் பிறவியிலும் எங்களை தீயவை தீண்டாமல் இருப்போம். ஏனெனிலே பழிசேராத உன்னை நாங்கள் மகவாகப் பெற்றுள்ளோம். தாலோ தாலேலோ

இலக்கணக்குறிப்பு:
கட்டினும் கழங்கினும் எண்ணும்மை; பூம்பொழில்- இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத்தொகை; தீண்டா — ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்                        
   
__________________________________________
தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ.காளியப்பன்
அலைபேசி:  9788552993  
    

Saturday, June 11, 2022

பாரம்பரியமும் பண்பாடும்

"பாரம்பரியமும் பண்பாடும்"

  —  ஆர்.எம்.பாபு


அந்தக்  காலங்களில் வீட்டுக்குள் கழிவறை வைக்கவேண்டும் என்று நாம் நம் பாட்டி, தாத்தாவிடம் சொல்லி  இருப்போமேயானால் அவர்கள் துடைப்பத்தை எடுத்து நம்மை அடித்துத்  துரத்தி இருப்பார்கள்.  காரணம்,  அன்று வீட்டுக்குள் கழிப்பறை வைப்பது என்பது ஏற்புடையது அல்ல.  ஆனால் இன்றைய காலங்களில் கழிப்பறை இல்லாமல் வீடு கட்டப்போகிறோம் என்று சொன்னால் துடைப்பத்தை எடுத்து மீண்டும் நம்மைத் துரத்த வருவார்கள்.  

ஆக, இப்படி நாம் யோசித்துப் பார்த்தோமேயானால் எது மரபு? என்ற கேள்வி எழும்.  

எது மரபு?
மரபு என்பது நமக்கு முன்னோர்களிடமிருந்து கிடைத்த சொத்து என்று பொருள்படுகிறது. இந்தச் சொல் பல்வேறு விசயங்களையும் விளக்குவதற்குப் பயன்படுகிறது. இந்த மரபு எந்தவித மாற்றங்களும் இன்றி ஒரு தலைமுறையிடமிருந்து அடுத்த தலைமுறையினருக்குக் கொடுக்கப்படுகிறது என்றும் கூறுகிறோம். இதை நாமும் அவ்வாறே அடுத்த சந்ததியினருக்குக் கொடுப்போம் என்றும் நினைக்கிறோம்.  இந்த மரபுதான் நம்முடைய பண்பாட்டையும், நாகரீகத்தையும் உருவாக்குகிறது. ஆனால், இவற்றை ஆராய்ந்து பார்க்கும்போது இந்த மரபுகளின் உள்ளடக்கங்கள் சில சமயங்களில் ஓரளவுக்கும் சில சமயங்களில் மிக அதிகமாகவும் மாறிக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

மரபுகள் பழமையானவையா?
தற்போது மரபு என்பதற்கு வேறொரு விளக்கமும் அளிக்கப்படுகிறது. கடந்த காலத்தில் வழக்கத்திலிருந்ததாக நாம் கருதிய விஷயங்களும், நம்முடைய தற்போதைய குறிக்கோள்களும் ஒன்றின்மீது ஒன்று தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதைப்பற்றி நாம் ஆழ்ந்து ஆராயும் போது புதிய கருத்துக்கள் தோன்றுகின்றன. இதனால் மரபு என்பதைப் பற்றி நமக்கு பொதுக் கருத்து உருவாகிறது. அல்லது நிகழ்காலத் தேவைகளுக்கு ஏற்ப இந்தப் பொதுக் கருத்து ஒரு புதிய கண்டுபிடிப்பாக உருவாகலாம். சில சடங்குகளையும் மரபுகளையும் மிகப் பழமையானவை என்று நினைக்கிறோம். ஆனால் ஆராய்ந்து பார்க்கையில் அவை மிக அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்டவை என்றே தெரிகிறது.

மரபு மாறக்கூடியது:
அண்மைக் காலங்களில் வரலாற்று ஆசிரியர்கள் மரபு என்பது உருவாக்கப்பட்டது, மாறக்கூடியது என்றுதான் பார்க்கிறார்கள். ஒரு காலகட்டத்தின் பண்பாடு என்பது கண்களால் பார்க்கக் கூடிய நிகழ்த்துக் கலைகள், இலக்கியம், தத்துவம், கல்வி, கேள்விகளில் புலமை பெற்று மனித குலத்தின் பெருமைகளை மேம்படுத்துதல் போன்ற விசயங்களில் ஒரு சமுதாயம் படைத்த சாதனைகளைக் குறித்ததாகக் கருதப்பட்டது. நவீன காலத்திற்கு முந்தைய காலகட்டத்தில் மேற்கூறிய விசயங்கள் மேட்டுக்குடி மக்களின் செயல்பாடுகளோடு தொடர்புடையவையாயிருந்தன. இதனை எளிய மக்களின் பண்பாட்டிலிருந்து வேறு படுத்திக் காட்டுவதற்கு இதை உயர் கலாச்சாரம் என்றார்கள். ஆனால் மேற்கூறிய பண்பாட்டின் கூறுகள் பரந்துபட்ட சமுதாயத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருபவை. பண்பாடு என்று கூறும்போது சமுதாயத்தின் பல்வேறு பகுதி மக்களின் வாழ்க்கை முறை, அம்மக்களின் எண்ணங்களுடைய வெளிப்பாடுகள் ஆகியவையும் அடங்கும். பண்பாடு என்று குறிப்பிடும்போது அதில் வேட்டையாடி உணவு சேகரிக்கும் மக்கள், ஆடு மாடு மேய்க்கும் மக்கள், விவசாயிகள், நகர்ப்புற ஏழை மக்கள் போன்ற எளிய மக்களின் வாழ்க்கையும் அடங்கும்.

பண்பாடு என்பது மாறக் கூடியது.  தாக்கங்களுக்கு உட்பட்டது. பரிமாற்றங்களை அனுமதிப்பது. வரலாற்றை ஆராயும் போது மாற்றங்கள் அடிக்கடி நிகழ்ந்தன என்று தெரிகிறது. மேலும் பண்பாடு என்பது உற்பத்தி சார்ந்ததென்றும் புலப்படுகிறது. வேட்டையாடி வாழும் சமுதாயத்தில் நிலவும் பண்பாடுகள், ஆடு மாடு மேய்த்து வாழும் சமுதாயத்தின் பண்பாட்டிலிருந்து வேறுபடும். விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட சமுதாயத்தின் பண்பாடு முதலாளித்துவ சமுதாயத்தின் பண்பாட்டிலிருந்து மாறுபட்டதாகவே இருக்கும்.

ஆதிக்கப் பண்பாடும் – எளிய மக்கள் பண்பாடும்:
கடந்த காலங்களில் சமுதாயம் ஒரே மாதிரியான ஒற்றைத் தன்மையுடைய கலாச்சாரத்தைப் பின்பற்றியதில்லை. எல்லாச் சமுதாயத்திலும் இருந்ததைப் போலவே இந்தச் சமூகத்திலும் மேல் தட்டு பண்பாடுகள் ஆதிக்கம் செலுத்தின. ஆனால் இந்த மேல்தட்டுப் பண்பாடுகளைத் தாங்கி நின்றது எளிய மக்களின் பண்பாடு. இது தான் முக்கியமானதாகும்.

இந்த நிலையில் பல கேள்விகள் எழுகின்றன. “ இந்தப் பண்பாடுகள் அனைத்தும் ஒற்றுமையாக இருந்தனவா? அல்லது சாதி, மொழி, சமயம் இவற்றின் அடிப்படையில் பிரிந்து இருந்தனவா? இப்போது இந்தக் கலாச்சாரங்களை ஒன்றிணைக்க முயலும்போது நாம் புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்கிறோமா?“  என்பவைதான் இந்தக் கேள்விகள்.

இந்த ஒன்றுபடுத்தும் முயற்சி “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற முழக்கத்தோடு நின்றுவிட்டதாகத் தோன்றுகிறது. ஏனெனில், “இந்த ஒற்றுமை என்றால் என்ன? வேற்றுமை என்றால் என்ன?” என்பதெல்லாம் தெளிவுபடுத்தப்படவில்லை. இவற்றோடு கூட மேலோட்டமாகப் பார்க்கும்போது மாற்றமே இல்லாமல் தோன்றும் ஒரு விசயத்தை ஆராய்ந்து பார்த்தால் அதிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதைக் காணலாம். உதாரணம், சாதி – நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சாதிய ஏற்றத்தாழ்வு வெவ்வேறு விதமாகக் காணப்படுகிறது. உயர் சாதியாகக் கருதப்படும் ஒரு சாதி எல்லா இடங்களிலும் உயர் சாதியென்று கருதப்படுவதில்லை. குறிப்பாக பஞ்சாபில் ‘கத்ரி’ என்ற சாதி உயர்வாகக் கருதப்படுகிறது. சில இடங்களில் பிராமணர்களும், சில இடங்களில் ‘ஷத்ரியர்கள்’ என்று தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வோரும் உயர் சாதியாகக் கருதப்படுகின்றனர்.

பண்பாட்டைப் புரிந்துகொள்ளல்:
அனைத்து சமுதாயங்களிலும் ஆள்வோர் ஆளப்படுவோர் என்ற பிரிவுகள் உண்டு. இதில் அதிகாரப் பிரிவினர், அடக்கப்படுவது யார் என்பது காலத்தை ஒட்டி மாறும். அவ்வாறே, அவர்கள் ஆதரிக்கும் கலாச்சாரம் எது என்பதிலும் மாற்றம் ஏற்படலாம். அண்மைக் காலங்கள் வரையில் ஆளும் வர்க்கங்கள் தங்கள் பண்பாட்டுத் தடயங்களையும், ஆவணங்களையும் பாதுகாத்து வைப்பதற்கு ஏற்ற சூழல் நிலவியது. ஆனால் தங்கள் பண்பாட்டை எந்த வகையிலும் பதிவு செய்ய இயலாதவர்களைப் பற்றி ஊகத்தின் அடிப்படையில் தான் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

தொல் பொருள் ஆய்வுகள் நமக்குச் சில தகவல்களை அளிக்கின்றன. மேல் தட்டு மக்களின் பண்பாட்டைப் புரிந்து கொண்டவர்களை ஒரு தனிப்பட்ட பகுதியினராகப் பார்க்காமல், அவர்கள் சமுதாயத்தின் ஏனைய பகுதிகளோடு எத்தகைய தொடர்பு கொண்டிருந்தார்கள், இதர பகுதியினரோடு எவ்வாறு பழகினார்கள் என்பதை ஆராய்வது அவர்களது பண்பாட்டைப் புரிந்துகொள்ள உதவும்.

சுற்றுச் சூழலில் ஏற்பட்ட மாற்றங்களும் தற்போது கருத்தில் கொள்ளப்படுகின்றன. நாடுகளின் அழிவு, தட்ப வெட்ப நிலைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் – இவை கடந்த காலங்களில் நிகழ்ந்திருக்கின்றன. சிந்து சமவெளி நாகரீகத்தின் நலிவிற்கு இந்த மாறுதல்கள் காரணமாக இருக்கலாம் என தற்போது கருதப்படுகிறது. தொழில் நுட்பத் துறையில் நிகழும் புதிய கண்டுபிடிப்புகள், சமூகப் பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப மக்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திக் கொள்ளும் மாற்றங்கள், இவையும் கவனிக்கத் தகுந்தவை.

புதுமைக் கலப்பு:
வணிகத்தின் மூலமும், குடி பெயர்ந்து வரும் மக்களோடு ஏற்படும் தொடர்புகளாலும் பிற நாட்டை வெற்றி கொள்வதால் ஏற்படும் அரசியல் நிகழ்வுகள் இவற்றால் சமுதாய வாழ்வில் புதுமைகள் புகலாம். பிற நாட்டை வெற்றி கொள்ளும் போது புதிய அரசியல் அமைப்பு என்பது மிகத் தெளிவாக முன்னுக்கு வருகிறது. வணிகக் குடிபெயர்தலால் வலுவான தாக்கங்கள் ஏற்படுகின்றன. இவை பரந்த நிலப்பரப்பில் மிக அதிகமான மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஆனால் நாம் படையெடுப்புகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். நம் நாட்டின் வட மேற்குப் பகுதியில் கிறிஸ்து சகாப்தத்தின் தொடக்கத்தில் கிரேக்கச் சிற்ப வடிவமைப்புகளின் தாக்கத்தால் உருவான காந்தார சிற்பக் கலையைக் குடிபெயர்தலினால் ஏற்படும் மாற்றங்களுக்கு ஓர் உதாரணமாகக் கொள்ளலாம்.

இதே காலகட்டத்தில் பௌத்த சிற்பக் கலை, மதுரா, மத்திய இந்தியா மற்றும் தெற்கே அமராவதி போன்ற இடங்களில் வளர்ந்திருந்தது. காந்தார சிற்பக் கலை வடிவங்களுக்கும் பௌத்த சிற்பக் கலை வடிவங்களுக்கும் இடையே பல வேற்றுமைகள் காணப்படுகின்றன. இந்தக் கலை வடிவங்களைப் பற்றிக் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக அறிஞர்களிடையே கடுமையான விவாதங்கள் நடைபெறுகின்றன. ஆனால் 19 ஆம் நூற்றாண்டுக் கலை வரலாற்று அறிஞர்கள் தங்கள் சம காலத்துச் சிற்பக் கலைஞர்களிடம் இதைப் பற்றி கருத்துக் கேட்கவில்லை. இந்த காந்தாரப் பகுதியில் பேசப்பட்ட மொழிகள் தனித்து விளங்கின. கிரேக்கம், சமஸ்கிருதம் இரண்டும் தனித்தனி மொழிகளாகவே விளங்கின.

அதே காந்தாரத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் துருக்கியர்கள், ஆப்கானியர்கள், பாரசீகர்கள் போன்றோர் குடியேறினர். இவர்கள் மத்திய ஆசியாவிலிருந்தும் மேற்கு ஆசியாவிலிருந்தும் வந்தவர்கள். இந்த நிகழ்வுகளை நாம் படையெடுப்பு என்று கூறி விட்டுவிடுகிறோம். படையெடுப்பினால் வணிகத் தொடர்புகள் அதிகரிக்கின்றன. புலம் பெயர்ந்து வசிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. துருக்கியர், ஆப்கானியர் ஆகியோரின் வருகையால் மொழி மத நம்பிக்கைகளில் தாக்கம் ஏற்பட்டது. இங்கு இஸ்லாமிய மதம் அறிமுகமானது மட்டுமின்றி புதிய சிந்தனைகள் உருவாகின. சூபிகள் என்ற பிரிவினர் எளிய மக்களிடையே பழகித் தங்கள் கருத்துகளைப் பரப்பினர். இதன் விளைவாகப் பஞ்சாபி போன்ற மொழிகள், பல புதிய சொற்கள் அறிமுகமாயின. குருநானக், வாரிஸ் ஷா போன்ற சமயப் பெரியோர்களின் கவிதைகள் பொதுவாக மக்கள் பேசும் மொழியிலேயே இயற்றப்பட்டன. இவ்வாறு மொழி பயன்பாட்டின் பிற கூறுகளுக்கும் பரவியது.

நீண்டகாலம் எழுதப்பட்ட அர்த்த சாஸ்திரம்:
பல நூல்களின் காலத்தைக் கண்டறிய மொழியில் ஏற்பட்ட மாற்றங்கள் உதவுகின்றன. நீண்ட காலம் தொடர்ந்து எழுதப்பட்ட நூல்களில் ஒன்று ‘அர்த்த சாஸ்திரம்’. இந்த நூலின் மொழி நடையில் ஏற்பட்ட மாற்றங்களைக் கொண்டு இந்த நூலின் வெவ்வேறு பகுதிகளும் எப்போது எழுதப்பட்டன என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒரு மொழிக்கு வேறு மொழிகளோடு தொடர்பு ஏற்படும்போது சில புதிய சொற்கள் கடன் வாங்கப்படும் அல்லது பரிமாற்றம் செய்யப்படும். இத்தகைய பரிமாற்றம் இந்த இரு மொழிகளைப் பேசும் மக்களிடையே நிலவிய உறவுகளையும் தெளிவுபடுத்தும். வேத கால சமஸ்கிருதத்தில் ‘லாங்கல’ (langala) என்ற சொல் ஏர் என்பதைக் குறிக்கிறது. அந்தச் சொல் திராவிட மொழியிலிருந்து பெறப்பட்டது என்று தெரிகிறது.

குடிபெயர்தல் மூலமாகப் பண்பாட்டில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. மேய்ச்சல் நிலங்களைத் தேடியும் வணிகத்தின் பொருட்டும் மக்கள் புதிய இடங்களில் குடியேறுவார்கள். வணிகம் நடைபெறுவதற்காக புதிய பாதைகள் போடப்படும். புதிய குடியிருப்புகள் தோன்றும். இதன் விளைவாகப் புதிய பண்பாட்டு வடிவங்கள் தோன்றும். ஹூனா, துரானி போன்ற சாதிப் பெயர்கள் இந்தப் போக்கைக் குறிக்கின்றன.

பிரிட்டிசாரின் வருகை முற்றிலும் மாறுபட்டது. இந்தியாவின் செல்வத்தை உறிஞ்சுவது தான் அவர்களுடைய நோக்கம். இருப்பினும், இந்தியாவின் கடந்தகாலத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள அவர்கள் ஆர்வம் காட்டினர். இவ்வாறு அவர்களுக்குக் கிடைத்த விவரங்களும் நம்முடைய  பாரம்பரியத்தை உருவாக்குவதில் பங்காற்றின.

பாரபட்சமான நோக்கு:
செல்வ வளம் மிக்க மேல் தட்டு மக்களின் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் சுவடிகளும் சான்றுகளும் ஏராளமாகக் கிடைக்கின்றன என்பதை ஏற்கெனவே பார்த்தோம். எளிய மக்களுடைய பண்பாட்டைப் பற்றிய  இத்தகைய அடையாளங்கள் கிடையாது. அவர்கள் மேல் தட்டு சமுதாயத்தின் செல்வத்தைப் பெருக்குவதற்கான அனைத்து உழைப்பையும் அளித்தனர். ஆனால் மேல் தட்டு பண்பாட்டில் அவர்களுக்குப் பங்கில்லை. அடித்தட்டு மக்களுடைய பண்பாடு வேறு விதமானது. அவர்களுடைய பண்பாட்டைப் புரிந்து கொள்ள மேல்தட்டு மக்கள் இவர்களை எப்படிப் பார்த்தார்கள் என்று கவனித்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டும்.

மேல்தட்டு மக்களின் பார்வையிலிருந்து தான் நாம் அடித்தட்டு மக்களைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இந்த நோக்கு பாரபட்சமற்றதாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் இந்த மக்களின் திறமையும் அழகுணர்வும் மேல்தட்டினரின் பண்பாட்டை உருவாக்குவதில் பெரும் பங்காற்றுகின்றன.

பண்பாட்டை உருவாக்குவதாகக் கருதப்படும் மரபு எல்லாக் காலங்களிலும் மாறாது நிலைத்து நிற்பதல்ல. அதுவொரு பொருளாக இருந்தாலும் கருத்தாக இருந்தாலும், நிகழ்காலத்தில் இருந்ததைப் போலத்தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறோம். பண்பாட்டுக் கூறுகளுக்கு ஒரு பூர்வீகத்தை ஏற்படுத்துவதன் மூலம், கடந்த காலத்தை நிகழ் காலத்திற்குக் கொண்டு வருகிறோம். இவ்வாறு கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையே ஒரு தொடர்ச்சியை ஏற்படுத்துகிறோம். “மாறாமல் தொடருகிறது" என்று நாம் நினைக்கும் பண்பாட்டுக் கூறுகளில் நாம் தக்கவைத்துக் கொண்டவை எவை? வேண்டாமென விலக்கியவை எவை? என்று ஆராய வேண்டும்.

நியாயம் கற்பித்தல்:
நம் முன்னோர் காலந் தொட்டு பழக்கத்தில் இருந்ததென்று நாம் கூறிக் கொள்வது சில விசயங்களுக்கு நியாயம் கற்பிப்பதற்கான முயற்சியாகும். இவ்வாறு கூறுவது சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட குழுவினர் உயர்ந்த நிலையில் இருந்ததைக் காட்டும் அடையாளமாக இருக்கலாம். இவ்வாறு கூறுவது அவர்கள் சமுதாய வாழ்வில் வெற்றி பெற்றதாகக் காட்டிக்கொள்ளப் பயன்படும் அல்லது ஒரு குழுவின் சமூக நிலையை மற்ற சிலர் ஏற்றுக்கொள்ளச் செய்யப் பயன்படும். வேறு சிலர் அது பற்றி கேள்வி எழுப்பலாம்.

இத்தகைய கேள்விகளைத் தவிர்க்கும் முயற்சியாகவும் இருக்கலாம். பண்பாட்டின் ஒரு பகுதிக்கு பூர்வீகம் இதுதான் என்று கற்பிக்க முயலும்போது அந்தப் பகுதி வேறொரு பூர்வீகத்திலிருந்து பிறந்திருக்கலாம் என்பதை மறுக்கிறோம். இது வேண்டுமென்றே செய்யப்பட்டால் அதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம். துவக்கத்தில் இதை ஏற்றுக் கொண்டிருப்பார்கள், பின்னர் இதனைப் பலர் ஏற்க மறுத்திருப்பார்கள். தொல் பண்பாட்டின் பல அம்சங்களில் பூர்வீகத்தை முழுமையாக அறிந்துகொள்வது மிக அவசியம். இதைச் சரியாகத் தெரிந்துகொள்ளாவிட்டால், ஒன்று நாம் பாரம்பரியத்தைத் திரிக்கிறோம் அல்லது நாமாக எதையாவது கண்டு பிடிக்கிறோம் என்று தான் கூற வேண்டும்.

புறச் சூழல் முக்கியம்:
கலைகளைப் பற்றி, அதுவும் பண்பாட்டின் ஓர் அம்சமாகக் கருதப்படுகின்ற சங்கீதம் நாட்டியம் போன்ற நிகழ்த்துக்கலைகள் பற்றிப் பேசும்போது அவற்றைப் பற்றிக் குறிப்பிடும் நூல்களைப் பற்றியும் அவற்றில் காணப்படும் குறிப்புகளைப் பற்றி மட்டும் குறிப்பிட்டால் போதுமானதா?. இந்தக் கலை வளர்ந்த புறச் சூழலைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாமா? என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கலைகளைப் பொறுத்தவரையில் பெண்கள் ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்தார்கள் அல்லது அவர்கள் ஒரு தொழிலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அந்தத் தொழில் சமுதாயக் கோட்பாடுகளுக்கு எதிரானது. இவர்கள் சமூகத்திற்கு அப்பாற்பட்ட தங்களுக்கே உரித்தான ஒரு சமூகத்தின் கருவை உருவாக்கிக் கொண்டார்கள். பௌத்த, சமணப் பெண் துறவிகளின் குழுக்கள் மேற்கூறிய தேவதாசிகளின் குழுக்களிலிருந்து மாறுபட்டவை. இவர்களும் தங்களுக்கென்ற ஒரு வாழ்வை நடத்தினர். இத்தகைய பெண்களின் வாழ்க்கை, அவர்கள் வாழ்ந்த சமூகத்தோடு எத்தகைய தொடர்பு கொண்டிருந்தார்கள் என்பவை ஆராயப்பட வேண்டியவை.

மேற்கூறிய விசயங்கள் அனைத்தும் பண்பாடு, மரபு என்பவற்றைப் பற்றி விரிவாக ஆராய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. பண்பாடு என்பது நிலைத்து நிற்பதல்ல, மாறிக் கொண்டேயிருப்பது என்பதையும் சுட்டிக் காட்டுகின்றன.

 ----




Sunday, June 5, 2022

உரோமை தமிழ்ச் சங்க தமிழ்க் கூடல் நிகழ்வு

 இத்தாலி நாட்டின் தலைநகரான வரலாற்றுச் சிறப்புமிக்க உர்பானோ கல்லூரியில்  பழமை வாய்ந்த, வரலாற்றுச் சிறப்புமிக்க உரோமை தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இரு ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 5, 2022 அன்று மாலையில் மேதகு கர்தினால்  லூர்துசாமி நாளை முன்னிட்டு ஒரு தமிழ்க் கூடல் நிகழ்வு நடைபெற்றது. 


இந்நிகழ்வில் ஐரோப்பியத் தமிழியல், ஐரோப்பியரின் தமிழ் இலக்கிய இலக்கண செயல்பாடுகள், அதனடிப்படையில் உருவான ஆவணங்கள் என்பன பற்றி உரையாற்றினேன். உரோமை தமிழ்ச்சங்கத்தின் தலைவர் அருட்தந்தை ஜான் போஸ்கோ அவர்களுடன் திரு கௌதம சன்னா, அருட்தந்தை லார்ட் வின்னர் ஆகியோர் உரைகளும் இடம் பெற்றன.



அருட்பணியில் கல்வி கற்கும் மாணவர்களின் ஆடல் பாடல் நிகழ்வுகளும் இணைந்தன. சீரிய முறையில் பணியாற்றும் உரோமை தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நல் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.


    முனைவர்.க.சுபாஷிணி

தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு


Saturday, June 4, 2022

இமிர் கருந்தும்பி


 




                    "இமிர் கருந்தும்பி"

          குமிழப்  பரந்த  வெள்ளிடைத்   தீஞ்சுரம் 
          குலாவ ப்பூஞ்சினை இமிர் கருந்தும்பி 
          ஆலாடு விழுதின் செம்புல   மன்றில் 
          புற்றம் ஆங்கொரு  குற்றம் செத்து 
          நிழற்குடை கவித்த எழிலின் ஆட் சி 
          இறையுண்ட சீர்மலி வேந்தின் அன்ன 
          தமியள் அப்பால் ஒருதனி யிருந்தாள் 
          தன்னை அங்கு தனியொளி  காட்டும் என்று. 


பொழிப்புரை :
குமிழ மரங்கள் உடைய அந்த வெட்ட வெளியிடையேயும்  அழகிய இனிமை செறிந்த காட்டுவழியொன்றில் வளைந்து  வளைந்து அந்த மரத்தின் பூங்கிளைகள் உரசும். அதன் மீது  கரிய சிறு வண்டுகள் ஒலியெழுப்பும்.

ஆல மர  விழுதுகள் ஆடும் ஒரு செம்புலத்து மேட்டில் குன்றம் போல் ஒரு புற்று  உயர்ந்து நிற்கிறது. அந்த அடர்ந்த காட்டின் நிழல்  ஒரு  குடைபோல்  கவிந்து ஒரு வெண்கொற்றக்குடையாய்  அந்த அழகின் ஆட்சியை நடத்துகிறது.

ஆனால் அந்த அழகு கோலோச்சும் திறனுக்கும் திரை  (கப்பம்) செலுத்தப்பட்டு பெறும் ஓர் அரசன் போல் அவள் (தலைவி) அங்கு வீற்றிருக்கிறாள். ஒரு தனி சிறப்புடன் அவள் அங்கு அமர்ந்திருக்கிறாள்.

தனது தலைவன்  (தன் + ஐ =தன்னை) அங்கு வந்துவிடுவான்.அவன் வந்தவுடன்  அவனது முகம் பூக்கும் பேரொளி அங்கு பரவி நிற்கும் என்று அவள்  மகிழ்கிறாள்.

  —  ருத்ரா இ. பரமசிவன் (சொற்கீரன்)

இந்தியாவில் நோய்களும் மருத்துவமும் - ஒரு வரலாற்றுப் பார்வை: நூலறிமுகம்


 
  —  ஆ.சிவசுப்பிரமணியன்

 
வரலாறு என்ற அறிவுத்துறையானது தொடக்கத்தில் அரசியலை மையமாகக் கொண்டே எழுதப்பட்டுவந்தது. பின்னர் சமூகத்தை மையமாகக் கொண்ட சமூக வரலாறாக வளர்ச்சியுற்றது. இதன் பின்னர் ஒரு குறிப்பிட்ட நாட்டில் வாழும் மக்களின் சமூக வாழ்வின் பல்வேறு கூறுகளையும் ஆராய்ந்து வெளிப்படுத்தும் சமூக அறிவியலாக மாற்றமடைந்தது. இவ்வகையில் மக்களின் நலவாழ்வில் முக்கியப் பங்காற்றும் மருத்துவத்தின் வரலாறானது வரலாறு என்ற சமூக அறிவியலுக்குள் ஒரு கூறாக இடம்பெற்றது. மருத்துவத்தின் வரலாறு என்னும் போது மனிதர்களைப் பிடித்துத் துன்புறுத்தும் பிணிகளையும், பிணி தீர்க்கும் மருத்துவ முறைகளையும் உள்ளடக்கியது.

பிணியும் பிணி தீர்த்தலும் மருத்துவத்துறை சார்ந்தவை என்பதில் ஐயமில்லை. ஆனால் பிணி வராது தடுப்பதிலும் வந்த பிணியைப் போக்குவதிலும் நாட்டை ஆளுவோருக்குப் பங்குண்டு. அப்பிணிக்கு ஆளான மக்களின் வாழ்க்கை நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் அவர்கள் வாழும் நாட்டின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் தன்மையன. இதனால்தான் நாடு என்பதற்கு இலக்கணம் வகுக்கும் வள்ளுவர் ஒரு நாடானது ‘ஓவாப் பிணி’ (நீங்காத நோய்) இல்லாது இருக்க வேண்டும் என்று வரையறுத்துள்ளார் (குறள்:734).  வரலாற்றுக் கல்வியில் புறக்கணிக்க இயலாத இடத்தைப் பெற்றுள்ள நாடு என்ற நிலப்பரப்பின் சிறப்பை நிலைநாட்டுவதில் நோயின்மையின் இடம் குறித்த சிறப்பான பதிவு இது.


இங்கு அறிமுகம் செய்யப்படும் 'இந்தியாவில் நோய்களும் மருத்துவமும் - ஒரு வரலாற்றுப் பார்வை' (Disease & Medicine in India, A Historical Overview) என்ற நூல் சமூக வரலாற்றில் நோயும் மருத்துவமும் வகித்த பங்களிப்பை இந்திய நாட்டை மையமாகக் கொண்டு அறிமுகம் செய்துள்ளது.  இந்திய வரலாற்றுக் கழகமானது (The Indian History Congress) 2001ஆவது ஆண்டில் தனது அறுபத்தி ஒன்றாவது அமர்வை ஜனவரி 1-3 நாட்களில் கொல்கத்தாவில் நடத்தியது. அதில் இந்திய மக்களின் உடல்நலம், இந்தியாவின் மருத்துவ முன்னேற்றம் குறித்த சிறப்பு அமர்வு இடம் பெற்றது. அவ் அமர்வில் படிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந் நூலாகும். இச் சிறப்பமர்வில் இடம் பெற்றிருந்ததுடன் அதன் தலைவராகவும் செயல்பட்ட பேராசிரியர் தீபக் குமார் இக்கட்டுரைகளைத் தொகுத்துப் பதிப்பித்துள்ளதுடன் ஓர் ஆழமான ஆய்வு முன்னுரையையும் எழுதியுள்ளார்.

இவர் ஜாகீர் உசேன் கல்வி ஆய்வு மையத்திலும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் அறிவியல் வரலாறு, சமூகமும் கல்வியும் என்ற பாடங்களைக் கற்பித்து வந்துள்ளார். பல்வேறு ஆய்விதழ்களில் இவர் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இவை தவிர ‘அறிவியலும் அரசும்’ (Science and the Raj 1857-1905)  என்ற நூலை எழுதியுள்ளார். ‘அறிவியலும் பேரரசும்’ (Science and Empire: Essays in the Indian Context)  என்ற நூலைப் பதிப்பித்துள்ளார்.

ஆய்வாளர்கள் பலர் எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பாக அமையும் நூலொன்று ஓர் ஆழமான நூலாக அமையமுடியாது என்றாலும் இந்தியாவில் பரவிய நோய்கள், அவற்றுக்கான மருத்துவம் குறித்த சில அடிப்படைச் செய்திகளை இந்நூல் வெளிப்படுத்தி நிற்கிறது. இவ்வகையில் இந்தியாவில் காணப்படும் நோய்கள், அவற்றுக்கான மருத்துவம் குறித்த வரலாற்று வரைவுக்குத் துணை நிற்கும் தகுதி இந்நூலுக்கு உண்டு.  ராதா காயத்திரி, துருப்குமார் சிங் என இருவரும் பதினான்கு பக்க அளவில் இத் தலைப்பை ஒட்டிய நூல்களின் பட்டியல் ஒன்றைத் தயாரித்துத் தந்துள்ளனர். நூலின் இறுதியில் ( பக்கம்: 276-289) இடம் பெற்றுள்ள இப் பட்டியல் இத் தலைப்பில் மேலும் ஆய்வு செய்ய விழைவோருக்குத் துணை நிற்கும் தன்மையது.

பதிப்பாசிரியரின் முன்னுரை நீங்கலாக மொத்தம் பதினெட்டு கட்டுரைகளைக் கொண்ட இந்நூலில் உள்ளடக்கத்தின் அடிப்படையில், ‘நவீன இந்தியாவிற்கு முற்பட்ட காலம்’, ‘நவீன இந்தியா’ என்ற இரு தலைப்புகளில் கட்டுரைகளை இரு பிரிவுகளாகப் பகுத்துள்ளனர். முதற் பிரிவில் எட்டு கட்டுரைகளும் இரண்டாவது பிரிவில் பத்து கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.

பதிப்பாசிரியரின் முன்னுரை:
இந்நூலுக்கான ஓர் ஆழமான முன்னுரையை மிகச் சுருக்கமாக பதிப்பாசிரியர் தீபக் குமார் எழுதியுள்ளார். அவரது கருத்துப்படி அறிவியலின் வரலாறும், தொழில் நுட்பம், மருத்துவம் என்பனவும் வரலாற்றுக் கல்வியுடன் நெருக்கமான தொடர்புடையன. சமூகப் பண்பாட்டு நோக்கில் பார்த்தால் இவற்றைப் புறந்தள்ளிவிட முடியாது.  காலந்தோறும் இந்திய வரலாற்றில் இவை தனிச் சிறப்பிடத்தைப் பெற்றுள்ளன. பதினொன்றாவது நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல் ஒன்றில் (Said al- Andalusi: Tabaqat al-Umam) அறிவியலை வளர்த்ததில் இந்தியா முதலாவது நாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மருத்துவர்கள் சமயப்புனித நூல்களுக்கு நெருக்கமானவர்களாக இருந்தபோதிலும் இயற்கையின் செயல்பாட்டினை உற்றுநோக்கி அறிதலை வலியுறுத்தி வந்தனர். “இயற்கை குறித்த அறிதலும் மனித குலத்தின் மீது அன்பு செலுத்துதலும் வெவ்வேறானவை அல்ல; இரண்டும் ஒன்றே” என்று சரகசம்ஹிதா என்ற நூல் குறிப்பிடுகிறது.

நாம் வாழும் இக்காலம் அறிவியல் வளர்ச்சிபெற்ற காலம். பல வரலாற்றியலர்கள் மருத்துவ வரலாறு பக்கம் திரும்பியுள்ளனர். தொடக்கத்தில் இந்திய மருத்துவ மரபு குறித்து தத்துவ பண்பாட்டு அணுகுமுறையிலான ஆய்வுகள் வெளிவந்தன. தற்போது தற்கால இந்தியாவின் வரலாறு சார்ந்த வரலாற்றியலர்கள் இந்திய மருத்துவ வரலாறு குறித்த வரலாற்றாய்வில் ஆர்வம் காட்டுகிறார்கள். அரசியலில் மருத்துவம் மருத்துவத்தின் அரசியல் எனப் பல ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன.   மானுடவியலாளர்களும் சமூகவியலாளர்களும் இத் துறையில் சில நுண் ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளனர். அறிவியல் தொழில் நுடபம் குறித்த சமூகவரலாற்று வரைவுக்கு எவ்வகையிலும் தாழ்ச்சியுறாத நிலையை மருத்துவம் குறித்த சமூக வரலாறு பெற்றுள்ளது.

இச்செய்திகளையடுத்து இந்தியாவில் நிலவிய ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம் என்ற இரு மருத்துவ முறைகளைக் குறிப்பிட்டுள்ளார். (ஆனால் தமிழ்நாட்டின் சித்த மருத்துவம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.)  இதன் தொடர்ச்சியாக இவை ஏன் நிறுவனமாக மாறவில்லை என்ற வினாவை எழுப்பி விடை தேடுகிறார். விதிக் கொள்கையும் சாதியும் ஏற்படுத்திய எதிர்மறையான விளைவுகளை விடையாக உணர்கிறார்.

அவரது கருத்துப்படி தெற்காசிய சமூகத்தில் நிலவும் சாதிய முறையானது கருத்தியலையும் (theory), செயல் முறையையும் (practice) தனித்தனியாகப் பிரிக்கும் அழிவுப் பணியைச் செய்துள்ளது. இது உடல் உழைப்பிலிருந்து மூளை உழைப்பை வேறுபடுத்துவதாகி விட்டது. சமய உணர்வும் சாதியும் இணைந்து போயின. இடைக்கால இந்தியச் சமூகத்தில் ஆளும் வர்க்கத்தின் பண்பாட்டுத் தோல்வியாக இது ஆகிப்போனது.

முகலாயர் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த அபுல் ஃபசல் என்பவர் வெளிப்படுத்திய துயரம் தோய்ந்த பின்வரும் சொற்களை அவர் மேற்கோளாகக் காட்டுகிறார்:
“மரபு என்னும் பெருங்காற்றினால் பகுத்தறிவு என்னும் விளக்கின் ஒளிமங்கி... "எப்படி” “ஏன்” என்ற கேள்விக் கதவுகள் அடைக்கப்பட்டு கேள்விகேட்டலும் ஆராய்தலும் எட்டாக்கனியாகி புறச்சமயவாதிகளாயினர்.”

இதன் தொடர்ச்சியாக , இடைக்கால இங்கிலாந்து குறித்து ராய் போர்ட்டர் என்பவர் எழுப்பிய வினாக்கள் போன்று சில வினாக்களை எழுப்பியுள்ளார்:
  —  நோய் போக்குதல் எவ்வாறு நிகழ்ந்தது? இதை யார் செய்தார்கள்?
  —  நோயாளி இதை எப்படி உணர்ந்தார்?
  —  மருத்துவ மானுடவியலாளர்கள் மந்திர- சமயச் சடங்கு, சடங்குகள், ஷாமன்கள்(மந்திர ஆற்றல் கொண்ட பூசாரி) ஆகியோரை ஆராய்ந்துள்ளார்கள். இவை வரலாற்று அடிப்படையில் பதிவு செய்யப் பட்டுள்ளனவா?
  —  கீழ்நிலையிலுள்ள மக்களின் நோய் தீர்ப்பவர் யார்?
  —  இத் தொழில் முறை எவ்வாறு உருவாகிறது?

இப்படிப் பல வினாக்களை தீபக் குமார் எழுப்பியுள்ளர். அவரது இவ் வினாக்கள் இத்துறையில் ஆய்வு செய்யப் புகுவோருக்கு உதவும் தன்மையன. இவ்வினாக்களை அடுத்து காலனியத்தின் நுழைவிற்கு முன் இந்தியாவில் பின்பற்றப்பட்ட நோய் போக்கும் முறைகள் குறித்தும், பயன்படுத்திய மருத்துவ நூல்கள் குறித்தும் விவரிக்கிறார். இறுதியாக, இந்தியாவில் நவீன மேற்கத்திய மருத்துவத்தின் அறிமுகம் குறித்த செய்திகளைக் குறிப்பிட்டுள்ளார். இவை வெறும் செய்திகளாக மட்டுமின்றி திறனாய்வுத் தன்மையுடன் இடம் பெற்றுள்ளன.

இம் முன்னுரையில் வேறு ஒரு முக்கிய பிரச்சினையும் விவாதிக்கப்பட்டுள்ளது. நமது பாரம்பரிய மருத்துவ முறைக்கும், காலனியம் அறிமுகம் செய்த நவீன மருத்துவ முறைக்கும் இடையிலான உறவை பதிப்பாசிரியர் சுட்டிக்காட்டி விவாதித்துள்ளார்.  இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறையானது ஐரோப்பிய மருத்துவ முறை அறிமுகமான பின்னர் நிலைத்து நிற்கப் போராட வேண்டிய நிலைக்கு ஆளானது. புதிய அறிவுத் துறை ஒன்றை முழுமையாக ஏற்றுக் கொள்வதானது சில நேரங்களில் பழைய அறிவுத்துறையை முற்றிலும் புறந்தள்ளுவதாக அமைவதுண்டு. இத்தகைய நெருக்கடியில் நம் பாரம்பரிய மருத்துவ முறையானது விலகி நிற்கும் நிலைக்கு ஆளானது. இருந்தபோதிலும், பெரும்பான்மையான இந்தியர்கள் நம் பாரம்பரிய மருத்துவத்தைப் புத்தாக்கம் செய்து மறுமலர்ச்சியை ஏற்படுத்தவே விரும்பினார்கள். மேற்கத்திய மருத்துவமும் இந்திய மருத்துவமும் ஒன்றிணைந்து செயல்படவேண்டிய களங்கள் இருந்தன. ஆனால் அது கண்டு கொள்ளப்படவில்லை.

மேற்கத்திய மருத்துவம் நோய்க்கான காரணத்தைக் கண்டறிய அழுத்தம் கொடுத்தது. இந்திய மருத்துவம் குணப்படுத்தலை நோக்கமாகக் கொண்டிருந்தது. நுண்ணுயிர்கள், நுண்ணுயிர் நோக்கிகள் (மைக்ரோஸ்கோப்) என்பன நோயறியும் மருத்துவக் கண்ணாடிகளாக மேலை மருத்துவத்தில் பயன்பட்டன. ஆனால் இந்திய மருத்துவம் நோய் எதிர்ப்பாற்றலை வலியுறுத்தியது. இதன்படி நோயாளியின் உடல்நலத்தில் ஏற்படும் முன்னேற்றமானது நுண்ணுயிர்களையும் அவற்றை அழித்தலையும் விட இன்றியமையாதது.

இத்தகைய வேறுபாடுகள் இருப்பினும் இவ்விரு மருத்துவ முறைகள் குறித்த அறிவார்ந்த கலந்துரையாடல் எதையும் மேற்கத்தியமுறை மருத்துவர்கள் மேற்கொள்ளவில்லை என்று குறிப்பிடும் பதிப்பாசிரியர், தம்மை உயர்வானவர்களாக இவர்கள் கருதிக்கொண்டமையே இதற்குக் காரணம் என்ற முடிவுக்கு வருகிறார். இறுதியாக காலனியச் சார்புநிலை, தேசியச் சார்புநிலை என்ற இரண்டு பார்வைகளையும் கடந்து இரண்டு அறிவுத்துறைகளுக்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

நவீன இந்தியாவிற்கு முற்பட்ட காலம்:
நவீன இந்தியாவிற்கு முற்பட்ட காலத்தில் நிலவிய மருத்துவ முறைகளை ஆராயும் அல்லது அறிமுகம் செய்யும் எட்டு கட்டுரைகளில் முதலாவது கட்டுரையாக சுராஜ் பான் என்பவரும், தஹியா என்பவரும் இணைந்து எழுதிய கட்டுரை இடம் பெற்றுள்ளது. இவர்களுள் சுராஜ் பான் சிறப்பான தொல்லியலாளர். குருஷேத்திரா பல்கலைக்கழகத்தில் பண்டைய இந்திய வரலாறு மற்றும் தொல்லியலில் பேராசிரியராகப் பணியாற்றியவர். கட்டுரையின் இணையாசிரியரான தஹியா குறித்த பதிவுகள் எவையும் இடம் பெறவில்லை. இக் கட்டுரை கி.மு.2500-1900 காலத்தைச் சேர்ந்த ஹரப்பா நகரில் வாழ்ந்த மக்களின் நோய்கள், வழக்கிலிருந்த அறுவைச் சிகிச்சை முறை, மக்களின் உடல் நலம் குறித்த செய்திகளை வெளிப்படுத்துகிறது.

கட்டுரையின் தொடக்கத்தில் கட்டுரையாசிரியர்கள் முன்வைக்கும் பின்வரும் செய்திகள் அவர்களது சமூகப் பார்வையை வெளிப்படுத்தி நிற்கின்றன.
“அண்மைக்காலம் வரை உடல்நலம் என்பது நோயின்மை அல்லது உடல் வலு சார்ந்த ஒன்றாகக் கருதப்பட்டு வந்தது. ஏழ்மை அதோடு தொடர்புடைய சமூகக் காரணிகள் (கழிவகற்றல்) என்பன உடல்நலமின்மைக்கான முக்கிய காரணங்கள்" என்பதை மருத்துவ அறிவியல் படிப்படியாக உணர்ந்து கொண்டது.

உடல் நலத்திற்கான அடிப்படைத் தேவைகளாக அமையும் ஊட்டச்சத்து, தூய்மையான குடிதண்ணீர், உடல் நலம் பேணுதல், கழிவுகளை அகற்றல் எனபன கிடைத்து மன அழுத்தமும் வன்முறையும் கட்டுப்படுத்தப்பட்டால் மக்களின் உடல்நலம் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு வளர்ச்சி பெறும்.

இச் செய்திகளின் தொடர்ச்சியாக ஹரப்பா நாகரிகத்தில் காணப்படும் மருத்துவம் தொடர்பான செய்திகளை வகைப்படுத்தி கட்டுரையாசிரியர் தந்துள்ளார். இவ்வகையில் உணவும் ஊட்டச்சத்தும், நோய்குறித்த உயிரியல் சான்றுகள், அறுவைச் சிகிச்சையும் உடல்நலமும், மக்களிடையே நிலவிய பாலியல் விகிதாச்சாரம், ஆயுட்காலம், உயர அளவு, தாக்கிய நோய்கள்குறித்து தனித்தனியே குறிப்பிட்டுள்ளார். இதற்கான தரவுகளாக அகழ் ஆய்வின்போது கிடைத்த எலும்புக்கூடுகளும் மண்டை ஓடுகளும் பயன்பட்டுள்ளன. கழிவுநீர் அகற்றுதல் தொடர்பாக அங்கு நிலவிய குறைபாடுகளையும் விவரித்துள்ளார்கள். மொத்தத்தில் அகழாய்வுச் சான்றுகள், உயிரியல் சான்றுகளின் அடிப்படையில் இச் செய்திகளை எழுதியுள்ளார்கள். அதே போழ்து இச் செய்திகள் நகரம் சார்ந்த செய்திகள் என்றும், இறந்தோரின் சமூகப் பின்புலம் (வர்க்கம், பால்) வரையறுக்கப்பட்டதாகவே உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர். பெண்கள் உடல் அடிப்படையில் எவ்வாறு நடத்தப்பட்டனர் என்பதை ஆராயவேண்டியுள்ளது. மார்ஷல் என்பவரின் சேகரிப்பில் இருந்த பத்து மண்டை ஓடுகள் வரிசையில் முதலாவது மண்டை ஓடும் பத்தாவது மண்டை ஓடும் தாக்குதலுக்கு ஆளான பெண்களின் மண்டை ஓடுகளாக உள்ளன. கொடூரமான முறையில் பெண்கள் நடத்தப்பட்டமைக்கான சான்றாக இதைக்கொள்ளலாம். ஹரப்பா நகரின் பெண்கள் அங்கிருந்த ஆண்களைவிட உயரம் குறைவாகக் காணப்படுவது ஊட்டச்சத்து பால்வேறுபாட்டுடன் பகிரப்பட்டதை வெளிப்படுத்துகிறது.

ஹரப்பா நகர்களில் கழிவு நீர் வெளியேற்றியமை, உடல் நலம் பேணியமை, தூய்மையான குடிநீர், மாசில்லா சூழல் என்பன குறித்து மிகுதியான அளவுக்கு எழுதப்பட்டுள்ளன. இயற்கையின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வழிமுறையாக, பெரிய அளவிலான தானியக் களஞ்சியங்களில் தானியங்களைச் சேகரித்து வைத்திருந்தார்கள். இது ஆளும் வர்க்கத்திற்கு அல்லது நகரின் மொத்த மக்களின் பயன்பாட்டிற்காக இருக்கலாம். இம் மக்களின் உடல்நலம் ஒரு கட்டுக்குள்தான் இருந்துள்ளது. மேலும் இது தொடர்பான ஆய்வுகளுக்கான சான்றுகளாக ஊட்டச்சத்து, கருவிகள், மூலிகை மருத்துவம் குறித்த தரவுகளுடன் தனிமனிதனின் உடல் நலத்தைப் பாதிக்கும் சமூக உண்மைகளையும் இணைத்து ஆராய வேண்டும் என்பது கட்டுரையாளர்களின் கருத்தாக உள்ளது.

இரண்டாவது கட்டுரை பாட்னா பல்கலைக் கழகத்தின் பண்டைய இந்திய வரலாற்றுத் துறையின் பேராசிரியர் விஜயகுமார் தாகூர் எழுதியது. இக்கட்டுரை பண்டைய இந்தியாவில் வழக்கிலிருந்த அறுவைச் சிகிச்சை முறைகள் குறித்தும், மருத்துவ அறிவியலின் வளர்ச்சி குறித்தும் அறிமுகம் செய்கிறது.

மூன்றாவது கட்டுரை கண்பார்வை குறித்த இடைக்கால இந்தியக்(1200-1750) கோட்பாடுகளையும், மூக்குக் கண்ணாடி அறிமுகத்தையும் குறிப்பிடுகிறது. மூக்குக் கண்ணாடி அணிந்து மீர் முசாவ்வீர் என்பவர் படித்துக் கொண்டிருக்கும் பதினாறாவது நூற்றாண்டு ஓவியம் ஒன்றும் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளது. இக்கட்டுரை ஆசிரியர் இக்பால் கனிகான் அலிகார் பல்கலைக்கழகத்தில் இடைக்கால இந்திய வரலாற்றையும் தொழில் நுட்ப வரலாற்றையும் கற்பிக்கும் பேராசிரியர்.

நான்காவது கட்டுரை இடைக்கால இந்தியாவின் மருத்துவர்கள் மருத்துவத்தையே ஒரு தொழிலாகக் கொண்டவர்களாக விளங்கியதை அறிமுகம் செய்கிறது. இக் கட்டுரையாசிரியர் அலீந்தீம் ரிஜாவி அலிகார் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைப் பேராசிரியர்.

ஐந்தாவது கட்டுரை 16ஆவது நூற்றாண்டு இந்தியாவில் பின்பற்றப்பட்ட மருத்துவர்களுக்கான விதிமுறைகளை அறிமுகம் செய்கிறது. கட்டுரையின் பின் இணைப்பாக நம் காலத்தில் மேற்கத்திய மருத்துவமுறையில் தேர்ச்சி பெறும் மருத்துவர்கள் எடுத்துக் கொள்ளும் ஹிப்பாகிராட்டிக் உறுதிமொழியும் ( Hippocratic Oath)  இடம் பெற்றுள்ளது. இக் கட்டுரையாசிரியர் சிரீன் மூசாவி மத்தியகால இந்தியப் பொருளாதார வரலாற்றில் வல்லுனர். அலிகார் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைப் பேராசிரியர்.

ஆறாவது கட்டுரை இந்தியாவின் சிறந்த வரலாற்றுப் பேராசிரியர்களில் ஒருவரான இர்பான் ஹபிப் எழுதியது. இக் கட்டுரை மொகலாய இந்தியாவில் மருத்துவத் துறையில் நிகழ்ந்த மாறுதல்களையும் கண்டுபிடிப்புகளையும் அறுவை சிகிச்சை நடைமுறைகளையும் ஆராய்கிறது.

ஏழாவது கட்டுரை நவீன இந்தியா உருவாகும் முன்பு நிகழ்ந்த அம்மை நோய்ப் பரவல் குறித்தும் அதைப் போக்குவதற்கு மேற்கொண்ட சிகிச்சை முறைகள் குறித்தும் ஆராய்கிறது. இக் கட்டுரையாசிரியர் இஸ்ரத் அலம் அலிகார் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையில் பணியாற்றிவருபவர். டச்சு மொழியில் பயிற்சி உடையவர்.

எட்டாவது கட்டுரை அம்மை நோய் குறித்து பதினெட்டாவது நூற்றாண்டில் வெளியான துண்டு வெளியீடு (Tract) ஒன்றின் துணையுடன் அம்மை நோய் பரவும் காலம், நோயாளிக்கான உணவு,  சிகிச்சை என்பனவற்றை ஆராய்கிறது.  இக்கட்டுரையின் ஆசிரியர் ஹரிஷ் நரேந்திராஸ், தில்லி பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையில் மருத்துவ சமூகவியலாளராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நூலின் முதற் பிரிவில் ‘நவீன இந்தியாவிற்கு முற்பட்ட காலம்' என்ற தலைப்பில் இடம் பெற்றிருந்த எட்டு கட்டுரைகள் குறித்த அறிமுகத்தைத் தொடர்ந்து இவ்விதழில் ‘நவீன இந்தியா’ என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள பத்து கட்டுரைகளின் சுருக்கமான அறிமுகம் இடம் பெறுகிறது.

தொற்று நோய்கள்:
மலேரியா:
இந்தியாவில் பரவிய தொற்று நோய்களில் மலேரியா, காலரா, பெரியம்மை ஆகிய நோய்கள் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தன. இவற்றுள் மலேரியா நோய்ப் பரவல் குறித்து முதல் இரண்டு கட்டுரைகள் குறிப்பிடுகின்றன.

முதலாவது கட்டுரையின் ஆசிரியரான இதிசாம் காசி வங்கதேசத்தின் டாக்கா பல்கலைக் கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியர். மலேரியா நோய்ப் பரவலில் சுற்றுச் சூழல் வகிக்கும் இடத்தை இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது.  பத்தொன்பதாவது நூற்றாண்டின் நடுப்பகுதியில் வங்காளக் கிராமம் ஒன்றில் இந்நோய் முதலில் காணப்பட்டது. பின்னர் படிப்படியாக இன்றைய பங்களாதேஷ் மேற்கு வங்கம் உள்ளிட்ட வங்காளப் பகுதியில் பரவியது. மக்கள் இதைப் ‘புதிய காய்ச்சல்' என்றழைக்க ஆங்கில அரசு ‘பர்துவான் காய்ச்சல்' என்று பெயரிட்டது. இக்காய்ச்சலின் பரவலால் எண்ணிக்கையில்லாத அளவில் மக்கள் மடிந்தனர்.  இப்போதுங்கூட இப்பகுதி மலேரியா, டெங்கு காய்ச்சல்களின் தாக்குதலுக்கு ஆளாகும் பகுதியாக உள்ளது. மலேரியா பரவுதலுக்கு முன்பு இருந்த காரணங்கள் இப்போதும் தொடர்கின்றன. இப்பகுதியில் நிகழும் வெள்ளப் பெருக்கு முடிவுற்றதும் பல்வேறு நோய்கள் உருவாகின்றன.  அவற்றுள் ஒன்றாக மலேரியா அமைகிறது.  இந்நோய்ப் பரவல் குறித்துப் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

இக்கட்டுரை ஆசிரியரின் கருத்துப்படி இரயில் சாலைப் போக்குவரத்துக்கள் உருவாக்கத்தில் அக்கறை காட்டிய ஆங்கில அரசு நீர் வழிப் போக்குவரத்தைப் புறக்கணித்தது. சாலைகள் இரயில் பாதைகள் அமைத்தல், புதிய குடியிருப்புகள் உருவாக்குதல் என வளர்ச்சிப் பணிகள் நடந்தபோது குழிகளும் கற்குவாரிகளும் உருவாயின. இவற்றில் தேங்கும் நீர் மலேரியாக் கொசுக்களின் உற்பத்திக்குத் துணை நின்றது. இதனால் வளர்ச்சியின் விளைவால் உருவாகும் நோயாக மலேரியா சுட்டப்பட்டது. பல்வேறு ஆறுகள் பாயும் சமவெளிப்பகுதிகளைக் கொண்ட வங்காளத்தில் முறையான வடிகால்கள் இல்லாமையும் மலேரியா நோய் பரவலுக்கான காரணங்களில் ஒன்றாகியது. தண்ணீர் தேங்காது ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகள் பாயும் பகுதிகளில் உள்ள கிராமங்களை விட நீரோட்டம் இன்றி தேங்கிய நிலையில் உள்ள ஆற்றங்கரைக் கிராமங்கள் மலேரியாக் கொசுக்களின் உற்பத்தி மையமாக விளங்கின. வெள்ளத் தடுப்பிற்காகக் கட்டப்படும் தடுப்பணைகளில் தேங்கும் தண்ணீரும் மலேரியாக் கொசுக்களின் உற்பத்திக் களமாயின.

காலனிய அரசிற்கு வருவாய் ஈட்டுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இரயில் பாதைகளும் சாலைகளும் அமைக்கப்பட்டமையால் இவற்றின் உருவாக்கம் நீர் தேங்கி நிற்பதற்குக் காரணமாக அமைவது கண்டு கொள்ளப்படவில்லை.வளர்ச்சித் திட்டங்களின் எதிர்விளைவாக மலேரியா தோன்றிப் பரவியது. ஆனால் இவ் உண்மையைக் காலனிய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. மலேரியாப் பரவலுக்கு அது மக்களைக் குறை கூறியது. இந்நோயானது பாரம்பரியம் சார்ந்த ஒன்று, இனம் சார்ந்தது என்ற கருத்தை அது உருவாக்கிய ஆணையங்கள் முன்வைத்தன. பலவீனமான இனங்கள் இயற்கையின் வளர்ச்சிப் போக்கில் இறந்து போகும் என்றன. இது சமூக டார்வினியம் (Social Darwinism) சார்ந்த கருத்து வெளிப்பாடு என்று கட்டுரையாசிரியர் சரியாகவே மதிப்பிட்டுள்ளார். மலேரியா நோய் குறித்த கடந்தகால அனுபவம் சூழல் சீர்கேட்டின் அனுபவ வரலாறாக அமைந்து எதிர்காலத்திற்கான வழிகாட்டியாக அமைந்துள்ளது. இக் கட்டுரையின் மையச் செய்தியுடன் தொடர்புடையதாக அடுத்த கட்டுரையும் அமைந்துள்ளது.

பத்தொன்பதாம் நூற்றாண்டு மும்பை நகரைத் தாக்கிய மலேரியா குறித்த கட்டுரையை மும்பைப் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் சிம்கி சர்கார் எழுதியுள்ளார்.  1838-1841 காலகட்டத்தில் மும்பை நகரின் கொலாபா துறைமுகப் பகுதியில் மலேரியா பரவியது. கொலாபா வட்டார நிலப்பரப்பின் பெரும்பகுதி கடல்நீர் பரவியிருந்த தாழ்வான இடத்தைச் சீர்திருத்தி உருவாக்கப்பட்டதாகும்.

1861-1866 இல் இப் பகுதியின் நிலங்களைச் சீர்திருத்தம் செய்ததானது மலேரியா அதிகரிப்புக்குக் காரணமாக அமைந்தது. 1863 தொடங்கி 1866 வரையிலான நான்காண்டு காலத்தில் மலேரியாத் தாக்குதலால் நிகழ்ந்த இறப்புகளின் சராசரி எண்ணிக்கை 12,577ஆக இருந்தது. 1865இல் இது 18,767 ஆக உயர்ந்தது. இந்நிகழ்வுகளையடுத்து துறைமுகத்தின் விரிவாக்கம் 1903 க்கும் 1907 க்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்தபோது மலேரியாப் பரவல் அதிகரித்தது. 1909இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது துறைமுகத்தை நோக்கியிருந்த வீடுகளில் வசித்தவர்களில் இருபது விழுக்காட்டினரும் துறைமுகத்தை விட்டுத் தள்ளியிருந்த வீடுகளில் வசித்தோரில் மூன்று விழுக்காட்டினரும் மலேரியாத் தாக்குதலுக்கு ஆளாகியிருந்தது தெரியவந்தது.

காவல்பணியில் ஈடுபடுவோர் , கூலிகள், தூய்மைப்படுத்தும் தொழிலாளர்கள் ஆகியோர் மலேரியாத் தாக்குதலுக்கு ஆளானார்கள். துறைமுகத்தில் புதிதாக உருவாக்கப்படும் கப்பல் துறைக்கு (Dock) எதிரே அமைந்திருந்த தூய ஜார்ஜ் மருத்துவமனை மும்பை நகரிலேயே மலேரியா மிகுந்த இடமாக விளங்கியது. மொத்தத்தில் மும்பை நகரில் மிகுதியான மக்களை மலேரியா பலிவாங்கியது. இந்த அளவுக்கு இதன், தாக்குதல் கிராமப்புறங்களில் இல்லை.

இச் செய்திகளின் தொடர்ச்சியாக மலேரியா நோய் உருவாதல் குறித்த பழைய கோட்பாடுகள், அது பரவும் முறை, அதைத் தடுக்கும் முறை, அதன் வகைகள் மும்பை நகரின் பொருளாதாரத்தில் மலேரியா ஏற்படுத்திய தீய விளைவுகள் எனபனவும் இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ளன.

காலரா:
ஐவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறையில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வு மாணவராக இருந்த துருப் குமார் சிங் பத்தொன்பதாம் நூற்றாண்டில் (1817-1870) வாந்திபேதி (காலரா) நோய்ப் பரவல் குறித்த கட்டுரையை எழுதியுள்ளார்.

இந்நோய்த்தாக்குதல் ஏற்படுத்திய உயிரிழப்பு குறித்து இங்கிலாந்தையும் இந்தியாவையும் ஒப்பிடும் புள்ளிவிவரங்களை இக்கட்டுரை ஆசிரியர் வெளிப்படுத்துவதுடன் இங்கிலாந்தில் இதன் பரவல் குறைந்து வர இந்தியாவில் அதிகரித்து வந்ததையும் சுட்டிக் காட்டியுள்ளார். காலனிய அரசின் இராணுவத்தில் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு இந் நோய் பரவாமலிருந்துள்ளது. ஆனால் பின்னர் அங்கும் பரவத்தொடங்கியுள்ளது. இங்கிலாந்தில் இருந்த படைப்பிரிவைவிட மூன்று மடங்கு அதிகமாக இறப்பு எண்ணிக்கை இருந்ததாக 1859 இல் அமைக்கப் பட்ட ஆணையம் குறிப்பிட்டுள்ளது. முறையான கழிவகற்றலும் குடிநீர் வழங்கலும் இல்லாமையே இதற்கான காரணம் என்று அது குறிப்பிட்டது. இதன் அடிப்படையில் போர்வீரர்களுக்கென்று தனி வாழுமிடங்கள் (கன்டோன்மெண்டுகள்) உருவாக்கப்பட்டன. இருப்பினும் காலரா பாதிப்பு இந்தியப் படைவீரர்களை விட ஆங்கிலப்படை வீரர்களை அதிகம் பாதித்தது. 1867இல் வட இந்தியாவில் இருந்த ஆங்கில இராணுவ வீரர்களில் காலராவினால் இறந்தோர் எண்ணிக்கை ஆயிரத்துக்குப் பதினான்கு விழுக்காடாக இருந்தது. ஆனால் அதே இராணுவத்தில் பணியாற்றிய இந்தியர்களின் இறப்புவிகிதம் ஆயிரத்துக்கு மூன்று விழுக்காடாக இருந்தது. அது மட்டுமின்றி பல்வேறு நோய்த் தாக்குதலால் இறப்போரில் இந்தியப் படைவீரர்களின் எண்ணிக்கையை விட ஆங்கிலப் படைவீரர்களின் எண்ணிக்கையே அதிக அளவில் இருந்தது. இருப்பினும் காலரா நாடு என்ற பெயரை இந்தியா பெற்றது. ஐரோப்பாவிற்குச் செல்லும் இந்தியக் கப்பல்கள் தனிமைப்படுத்தி நிறுத்தி வைக்கப்பட்டன. காலனிய அரசோ நோய்த்தடுப்பிலும் இனச் சார்பு நிலைப்பாடையே எடுத்தது.

சிபிலிஸ்:
சபியா சாச்சி மஸ்தா என்பவர் சுரங்கங்கள் குறித்த கல்வியாளர். தான்பாத் நகரில் செயல்பட்டுவந்த கல்வி நிறுவனம் ஓன்றில் அறிவியல் தொழில் நுட்பம் குறித்த வரலாறு கற்பித்து வந்தார். இவர் எழுதியுள்ள கட்டுரை சிபிலிஸ் என்ற பால்வினை நோய் குறித்ததாகும். இந்நோயானது போரச்சுக்கீசிய வணிகர்களால் இந்தியாவில் பரவியது. இந்தியர்கள் இந்நோயை ‘பரங்கி நோய்' என்றழைத்தனர். (இந்நோயால் தோன்றும் புண்களைப் பரங்கிப் புண் என்று தமிழர்கள் அழைத்துள்ளனர்.) இந்நோய் பத்தொன்பதாவது நூற்றாண்டு இந்தியாவில் பரவி ஏற்படுத்திய பாதிப்புகளை இந்நூலின் இரண்டாவது பிரிவில் இடம் பெற்றுள்ள நான்காவது கட்டுரை ஆராய்கிறது.

இந்நோயால் மிகுதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் ஆங்கில இராணுவத்தினர் என்று குறிப்பிடும் கட்டுரையாசிரியர் காலனிய அரசு அதிகாரி களிடையிலான உரையாடலில் ஒரு பகுதியாக இது இருந்தது என்கிறார். இந்நோய்ப்பரவல் குறித்த அறிக்கை ஒன்று, போர்வீரர்களாக வரும் இளைஞர்கள் தம் பாலியல் வேட்கையைத் தணித்துக் கொள்வதற்கு சுய இன்பத்தில் ஈடுபடல் அல்லது பொருட் பெண்டிருடன் உறவுகொள்ளுதல் என்ற இரண்டு வழிமுறைகளே உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும் இவற்றுள் முதலாவது உடல் மற்றும் உள்ளச் சீர்குலைவுக்கும் இரண்டாவது அச்சமூட்டும் பால்வினை நோய்களுக்கும் வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்நோய்ப்பரவல் படை வீரர்களிடம் மட்டுமின்றி உயர் இராணுவ அதிகாரிகளிடமும் இருந்துள்ளது.

இந்நோய்த்தாக்குதல் ஏற்படுத்தும் பாதிப்பு, இது குறித்த புள்ளி விவரங்கள், அறிக்கைகள் என்பனவற்றை அடிப்படையாக்க் கொண்டு இக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

கிறித்தவத்தின் மருத்துவப் பணி:
இதற்கு அடுத்த கட்டுரையாக அமைவது கனடா நாட்டைச் சேரந்த கிறித்தவ மறைப் பணியாளர்கள் (The Canadian Baptist Missionaries) 1870 முதல் 1952 வரை தெலுங்கு மொழி வழங்கும் பகுதியில் மேற்கொண்ட மருத்துவப் பணிகளை அறிமுகம் செய்கிறது. இக்கட்டுரையின் ஆசிரியரான ராஜ் சேகர் பாசு கொல்கத்தாவிலுள்ள ரவீந்திர பாரதி பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். தென் இந்தியாவில் கிறித்தவ மறைப்பணியாளர்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வில் தனித்துவம் உடையவர்.

1870ஆவது ஆண்டில் விசாகப்பட்டினத்திலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் இச் சபையினர் செயல்படத் தொடங்கினர். பின்னர் சில ஆண்டுகளில் கோகொனாடா என்ற பகுதியை மையமாகக் கொண்டு தம் நடவடிக்கைகளை விரிவுபடுத்தினர். மறைப்பணியாளர்களாகப் பெண்களை நியமித்து யேசுவின் நற்செய்தி ஏடுகளைக் கற்பித்ததுடன் உயர்சாதியினருக்கும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் பள்ளிகளைத் திறந்தனர். 1890இன் தொடக்கத்தில் மருந்தகங்களையும் மருத்துவ மனைகளையும்,பெரும்பாலும் தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்பட்ட மக்களுக்காகத் திறந்தனர். இவற்றில் பெண் மறைப்பணியாளர்களை நியமித்தனர்.

இம் மருத்துவப் பணியில் அவர்கள் பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டனர். 1897 இல் நிகழ்ந்த பஞ்சத்தை அடுத்து காலராவும் அம்மை நோயும் பரவின. இதனால் பாதிக்கப்பட்ட மக் களுக்கு உதவும் பணியில் ஈடுபட்ட அரசுக்குத் தம் மறைப்பணியாளர்களை அனுப்பி உதவினர். அத்துடன் தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்படுத்தப் பட்டிருந்த மக்களுக்கு மருத்துவ உதவி வழங்கினர். உள்நாட்டுப் பகுதிகளில் மருந்தகங்களையும் மருத்துவமனைகளையும் நிறுவி அவற்றில் பணிபுரிய அனுபவம் வாய்ந்த மருத்துவப் பணியாளர்களை அனுப்பினர். 1898இல் மறைத் தளத்தின் அறிவுறுத்தலின்படி ஸ்மித் என்ற மருத்துவரும் செவிலியர் பயிற்சி பெற்றிருந்த அவரது மனைவியும் விசாகப்பட்டினத்திற்கு அருகிலுள்ள எல்லமஞ்சிலி என்ற ஊரில் சிறிய மருத்துவமனை ஒன்றை நிறுவினர். இது தொடங்கப்பட்ட சிறிது காலத்திற்குள்ளாகவே பெண் நோயாளிகளுக்கான சிறந்த மருத்துவமனை என்ற நற்பெயரை ஈட்டியது. இதன் விளைவாக சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட வறுமை வாய்ப்பட்ட மக்கள் பிரிவைச் சேர்ந்த பெண்கள் கிறித்தவத்தைத் தழுவினார்கள்.

இவர்களின் மருத்துவப் பணியின் வளர்ச்சி நிலையாக பிதாப்புரம் என்ற ஊரில் பெதஸ்தா மருத்துவமனை என்ற பெயரில் மருத்துவமனை ஒன்று கனடா நாட்டைச் சேர்ந்த இரு பெண் மறைப்பணியாளர்களின் நிதியுதவியடன் உருவானது. 1904க்கும் 1908க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவிலும் கனடாவிலும் திரட்டப்பட்ட நிதியின் துணையுடன் பேறுகாலப் பிரிவு கட்டப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இம் மறைப் பணியாளர்கள் மேற்கொண்ட மருத்துவப் பணியின் வளர்ச்சி நிலையைக் கூறிச் செல்கிறார் இக் கட்டுரையாசிரியர்.

கட்டுரையின் இறுதியில் தம் மருத்துவப் பணிக்கான சமூக ஒப்புதலைப் பெற இவர்கள் எவ்வளவு சிரமப்பட்டார்கள் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். மேற்கத்திய மருத்துவம் குறித்து பாரம்பரியமாக நிலவிவந்த வெறுப்பு, கிறித்தவ மறைப் பணியாளர்களுக்கு எதிராகப் பிராமணக் குருக்களும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரிவினரின் மாந்திரிகர்களும் மேற்கொண்ட எதிர்ப்பிரச்சாரங்களுக்கு ஊடாகத்தான் இவர்கள் செயல்பட வேண்டியிருந்தது. தொற்று நோய்களுக்கு இவர்கள் அளித்த சிகிச்சையின் வெற்றி மேற்கத்திய மருத்துவத்தின் மீது பரவலாக நிலவிவந்த ஒவ்வாமையை நீக்கியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக இவர்கள் தம்மை இந்தியர்களாகப் பாவித்து மருத்துவப் பணியை ஆன்மீகப் பணியாகவும் உலகளாவிய சகோதரத்துவமாகவும் நோக்கினர். காந்தியவாதி ஒருவர் குறிப்பிட்டது போன்று தம் பாவங்களைப் போக்க இந்தியப் பூசகர்கள் புனித நீர்நிலைகளில் தம் கரங்களைக் கழுவிக் கொண்டிருந்தபோது இவர்கள் நோயாளிகளின் காயங்களைக் கழுவிக் கொண்டிருந்தனர்.

இந்திய விடுதலை இயக்கத்தில்:
ஆங்கில ஆட்சிக்கெதிரான விடுதலை இயக்கத்தில் மக்களின் உடல் நலம் குறித்த சிந்தனைகள் இடம் பெற்றிருந்ததை காந்தியை முன்வைத்து அமித் மிஸ்ரா ஆராய்ந்துள்ளார். இவர் லக்னோ நகரில் செயல்பட்டு வரும் மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி.

தம் கட்டுரைக்கான சான்றுகளை மகாத்மா காந்தியின், தேர்வு நூல்களில் இருந்து திரட்டியுள்ளார். உணவூட்டம் (Nutrition), உடல் நிலை ஆக்க மேம்பாடு (Sanitation), தொற்று நோய்கள்(Infectious Diseases), எதிர்ப்பாற்றல் (Immunization), மருந்துச் சிகிச்சை, இயற்கைச் சிகிச்சை, என்ற உட்தலைப்புகளைக் கொண்டதாக இக் கட்டுரை அமைந்துள்ளது.

காந்தியின் இயற்கைச் சிகிச்சை முறையை வளரச்செய்தால் அது கிராம மேம்பாட்டுத்திட்டத்தை உள்ளடக்கியதாகும் என்ற கருத்தில் இவருக்கு உடன்பாடுள்ளது.

பிற கட்டுரைகள்:
கொல்கத்தா இரவீந்திர பாரதி பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர் சுதா முகர்ஜி இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வங்கப் பெண்களின் உடல் நலம் குழந்தைகளின் உடல் நலம் எவ்வாறிருந்தது என்பது குறித்து எழுதியுள்ளார். பெண்கள் குழந்தைகள் உடல்நலம் பேணுவதில் ஐரோப்பியர்களின் தனியார் அமைப்புகளும் அரசு நிர்வாக அமைப்பும் வகித்த பங்களிப்பையும் ஆராய்ந்துள்ளார். இங்கிருந்த சுரங்கங்கள், சணல் ஆலைகள், மலைத்தோட்டங்கள் ஆகியனவற்றில் பணிபுரியும் பெண்களின் பேறுகால நலன் குறித்து அக்கறை காட்டுதல் ஓரளவுக்காவது நிகழ்ந்துள்ளது. பேறுகால இறப்பு, குழந்தை இறப்பு குறித்த புள்ளிவிவரங்களும் இக் கட்டுரையில் இடம் பெற்றுள்ளன.

கோட்டையம் மகாத்மா காந்தி பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறையில் ஆய்வு மாணவராக இருந்த சுனிதா பி.நாயர் திருவிதாங்கூர் மாநிலத்தில் மேற்கத்திய மருத்துவமுறை பத்தொன்பதாவது நூற்றாண்டில் எவ்வாறு இருந்தது என்பது குறித்த சமூக வரலாற்றை எழுதியுள்ளார். அம்மைத் தடுப்பூசி அங்கு அறிமுகமானபோது அது கட்டாயமாக்கப்பட்டது. தடுப்பூசி போடுபவர்கள் ஒடுக்கப்பட்ட சாதியினருக்குப் போட மறுத்தனர்.

அம்மைத் தடுப்பூசி குத்திக் கொள்ள பல்வேறு காரணங்களைக் கூறி பெரும்பான்மையான மக்கள் தொடக்கத்தில் மறுத்துள்ளனர். பிராமணியத்தை இழந்து விடுவோம் என்று பிராமணர்கள் அஞ்சினர். பசு மாட்டிற்கு அம்மைக் கொப்பளம் வரச்செய்து அதிலிருந்து எடுக்கப்படும் அம்மைப் பாலை தம் உடலில் செலுத்திக் கொள்வது பசுவைப் புனித விலங்காகக் கருதும் தம் சமய நம்பிக்கைக்கு எதிரானது என்றனர். இத்தடுப்பூசி போட்டுக் கொள்வதால் பசுவின் குரல், உடல் அமைப்பு என்பன தம்மிடம் தோன்றிவிடும் என்றும் மனிதத்தலை மாட்டின் தலையாக மாறிவிடும் என்றும் நம்பினர். கல்வியறிவு பெற்றிருந்தவர்களிட மிருந்தும் எதிர்ப்பு வந்தது.  சிலர் தொழுநோய் சிபிலிஸ் போன்ற நோய்களை இத் தடுப்பூசி ஏற்படுத்தும் என்றனர்.

காலரா நோய் பரவியபோது நாட்டு வைத்தியர் ஒருவர் மருந்து தயாரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.   ஆங்கில மருத்துவமுறை படிப்படியாக அறிமுகமானதையும் தனியார்கள் குறிப்பாகக் கிறித்தவ அமைப்புகள் மருத்துவ மனைகளை உருவாக்கியதையும் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பக்கம் கேரளத்தின் பாரம்பரிய வைத்திய முறைகளில் ஒன்றான ஆயுர்வேத வைத்திய முறை நவீனமாதலை நோக்கி நகர்ந்தது.

இந்திய தேசிய இயக்கத்தினர் உள்நாட்டு மருத்துவ முறைக்கு ஆதரவாகக் குரலெழுப்பத் தொடங்கினர். இதன் தாக்கத்தால்1907இல் அகில இந்திய ஆயுர்வேத காங்கிரஸ் என்ற அமைப்பு உருவானது. 1889இல் ஆயுர்வேத பாடசாலைகள் உருவாயின. 1895 - 96இல் இப் பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு மருத்துவ மானியம் வழங்கப் படலாயிற்று.    1917-18 இல் ஆயுர்வேத மருத்துவத்திற்கென்று தனித்துறை தொடங்கப்பட்டு ஆயுர்வேத இயக்குநர் என்ற பதவியும் உருவாக்கப்பட்டது. இத்துறை ஆயுர்வேத பாடசாலைகளின் பாடத் திட்டத்தை நவீனப் படுத்தியது. ஆயுர்வேத மருந்தகங்களும் மருத்துவ மனைகளும் செயல்பட்டு வந்தன. காலனிய ஆட்சியும் கூட ஆயுர்வேத மருத்துவ முறையின் வளரச்சியில் அக்கறை காட்டியுள்ளது.

மேற்கத்திய மருத்துவ முறை குறித்த இந்தியர்களின் நிலைப்பாடு மும்பை மாநிலத்தில் 1900-20 காலகட்டத்தில் எவ்வாறிருந்தது என்பதை மும்பை பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் மிருதுளா ராமண்ணா ஆராய்ந்து எழுதியுள்ளார்.

நூலின் இறுதிக் கட்டுரை ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சமூக மருத்துவம் மக்கள் நலம் குறித்த மையத்தில் பணியாற்றி வரும் மோகன் ராவ், உலக வங்கியின் உடல்நல அரசியல் குறித்து ஆராய்கிறார். இக் கட்டுரையில் இடம் பெறும் வரலாற்றுச் செய்திகளில் இருந்து பலரும் நழுவிச் செல்வதைக் கருதியதாலோ என்னவோ இக் கட்டுரைக்கு ‘தவிர்க்கும் வரலாறு' (Eliding History) என்று தலைப்பிட்டுள்ளார். கட்டுரையின் இறுதியில் அவர் வெளிப்படுத்தியுள்ள கருத்துக்களின் ஒரு பகுதி வருமாறு:
“உலக முழுவதும் மட்டுமல்லாது நாடுகளுக்குள்ளும் 1980 முதல் ஏற்றத்தாழ்வுகள் கணிசமாக அதிகரித்துள்ளமை மிகத் தெளிவாகத் தெரிகிறது. இதனால் வறுமை அதிகரித்துள்ளது. இதன் காரணமாகக் காலனியம் முடிவுற்ற மூன்றாம் உலக நாடுகளிலும் மேற்கு உலக நாடுகளில் உருவான மக்கள் நல அரசுகளிலும் சுகாதார மற்றும் மருத்துவ முன்னேற்றங்கள் முறியடிக்கப்பட்டுள்ளன. உலக முழுவதும் மனிதரின் சராசரி ஆயுள் குறைந்துள்ளதுடன் குழந்தை மற்றும் சிறார் இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளது.”

“அடித்தளமக்களுக்குத் தொழில்நுட்பத்துடன் கூடிய மருத்துவ முன்னேற்றத்தை விட வாழ்க்கைத்தர முன்னேற்றம் அதிமுக்கியத்துவம் உடையது என்ற புரிதல் அவசியம். முன்பு இந்தியாவில் பிற அம்சங்களுடனும் ஒருங்கிணைந்த முன்னேற்றத்துடனும் உடல்நலனை இணைத்துப் பார்க்கும் போக்கு இருந்தது."

"இன்றைய புதிய முயற்சிகள் உலக வங்கியின் வழிகாட்டலில் பொதுச் சுகாதாரம் குறித்த பங்கையும் கண்ணோட்டத்தையும் வெறும் தொழில் நுட்பம் சாரந்தவையாக மாற்றிவிட்டன.”

“அதே சமயம், மக்களின் சுகாதார நலனைத் தீர்மானிப்பதில் இதுவரை அரசுக்கு இருந்து வந்த பங்களிப்பு இன்று பெருமளவில் குறைக்கப் பட்டுவிட்டது. வெறும் தொழில் நுட்ப உத்திகளைக் கொண்டு செயல்படும் சுகாதார மேம்பாட்டுத் திட்டங்களின் பயன் எப்போதும் நீடித்து நிற்பதில்லை. இந்தியாவில் செயல்படுத்தப்பட்ட மலேரியா ஒழிப்புத் திட்டம் இதை நிருபித்துள்ளது.  மனித நாகரீக வளர்ச்சியின் கண்ணாடிகளில் சுகாதார முன்னேற்றமும் ஒன்று. அதில் இன்று தெரிவது உயர்வாகவும் இல்லை, மின்னுவதாகவோ மிளிர்வதாகவோ இல்லை.”




நூல்:
இந்தியாவில் நோய்களும் மருத்துவமும் - ஒரு வரலாற்றுப் பார்வை: தீபக் குமார், பதிப்பாசிரியர் (2012)
Disease & Medicine in India, A Historical Overview. (Deepak Kumar, Editor) Tulika Books, New Delhi






நன்றி: உங்கள் நூலகம்; ஆகஸ்ட், செப்டம்பர் - 2021