Sunday, October 30, 2016

தீபாவளி வாழ்த்துக்கள்

- இராம.கி.

திடீரென்று அலுவ வேலையாற் பணிக்கப் பெற்று, மறுபடி சென்னை. இன்று காலை வந்தேன். நாலே நாட்களில் சவுதி செல்ல வேண்டும்.

வான்பறனை கீழிறங்கும் போது, அதன் செலுத்தியார் சென்னை அருகாமை வந்தவுடன் தீபாவளி வாழ்த்துக்கள் கூறி, இருக்கைகளை நேராக்கிக் கொள்ள நம்மைப் பணிக்கிறார். பறனை கொஞ்சம் கொஞ்சமாக இறங்குகிறது. கண்ணாடிச் சாளரத்திற்கு வெளியே பனி கலந்த மேக மூட்டம். எத்தனை பேர் இதற்குப் பொறுப்பு? நகரம் எங்கிலும்? வழமையான சென்னை. அதன் வேடிக்கைக் கூத்துகள்.

அருகே இருந்த பிரஞ்சுப் பெண்மணி, இந்த மேக மூட்டத்திற்குக் காரணம் கேட்கிறார். நான் "நாலைந்து நாட்களாக நல்ல மழை; சில இடங்களில் நகரத்துள் வெள்ளம்; வடியச் சில நாட்கள் ஆகலாம்; தவிரத் தீபாவளிநாள்; முன்னாளின் இரவிலும், இன்று அதிகாலையிலும் வெடிகள், மத்தாப்புக்கள் என்று பலதும் கொளுத்தப் பட்டிருக்கும்; அதனால் எழுகிற புகை இந்தப் பனியோடு கலந்து கலையாத மேக மூட்டத்தைக் கிளப்பிவிட்டிருக்கும்", என்று விளக்கம் சொன்னேன்.

"என்னது வெடியா? நேற்று வந்திருக்கலாமே? வாண வேடிக்கை அழகைப் பார்த்திருக்கலாமே?" என்று என்னிடம் ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு தன் தோழியரோடு பிரஞ்சில் அதை ஆர்வத்தோடு சொல்கிறார்.

"தீபாவளி எதற்குக் கொண்டாடுகிறார்கள்?" என்ற அவரது கேள்விக்கு, ஓரளவு சுருக்கமாக கூடவே விரைவாக மறுமொழி சொல்லி முடிக்கிறேன்.

பறனை ஓடுகளத்தைத் தொட்டுவிட்டது. உள்ளே ஈரப்பதம் மாறிக் கொண்டிருப்பதை உணருகிறேன்.

வான்பாலத்தை அணைந்தாயிற்று.

நான், வான்பறனைப் பணிப்பெண்ணுக்கு முகமன் சொல்லி தீபாவளி வாழ்த்தும் சொல்லி வெளியேறுகிறேன். அந்த பகுரைனி அரபுப் பணிப்பெண் வியந்து கொள்ளுகிறாள். முகம் நிறையப் புன்சிரிப்பு.

வெளியே வந்து வண்டியில் ஏறி வீட்டிற்குப் புறப்படும் போதும் மேக மூட்டம் கலையவில்லை. ஒவ்வொரு ஆண்டும் இதே மேகமூட்டம் தான். மழை இருந்தாலும், இல்லாவிட்டாலும். நகரத்தில் இருந்து தெற்கு நோக்கிச் செல்லும் சாலையெங்கும் ஈரம்; அதன் மணம்; மணத்துள் ஒரு பாந்தமான உணர்வு. இதுதான் சென்னை. உள்ளிழுத்துக் கொள்ளுகிறேன். நெஞ்சுகள் நிறையட்டும்.

இந்த மண் தாகத்தால் ஏங்கியதே? தாகம் அடங்கியதோ? வழி நெடுகிலும் அஞ்சடிகளில் நாலைந்து நாட்களில் முளைத்த புல்வெளிப் பச்சை. ஆங்காங்கே சாலைகளில் ஈயென்று வாய் பிளந்த பள்ளங்கள்; மதகு இல்லாச் சிறு சிறு நீர்த்தேக்கங்கள். எங்கள் நகரம் மாறவே மாறாதோ?

நான் வாழும் பகுதிக்கு அண்மையில் வந்தாயிற்று. "நிறுத்துக்கள். அங்கு ஏதோ ஒரு சிறுவன் வெடி வைக்கிறான்" என்று உந்து ஓட்டுநருக்குச் சொல்லுகிறேன். ஆயிரம் இழைச் சீனச் சரவெடி (இப்பொழுதெல்லாம் சீனவெடி என்ற சொல்லே இளையருக்குத் தெரிவதில்லை. எல்லாம் தௌசண்ட் வாலா தான். எங்கோ மரபுத் தொடர்புகள் அறுந்து கொண்டு இருக்கின்றன. வணிக வேகம் சிந்தனையை மறைக்கிறது.) வெடி காதை அடைக்கிறது. புகை கண்ணை மறைக்கிறது.

நின்று காத்து வண்டி தொடருகிறது.

வீட்டுக்கு வந்தாயிற்று; எண்ணெய்க் குளியல் செய்தே ஆகவேண்டும் என்று துணையாள் அடம் பிடிக்கிறாள். அவள் பேச்சுக்கு மறுபேச்சு உண்டோ? குளியல் ஆயிற்று. புத்தாடைகள் வீட்டில் குத்து விளக்கிற்கு எதிரே. இதையெல்லாம் சொல்லவேண்டுமோ? மஞ்சள் தடவி, பக்கத்தில் மாதிரிக்குக் கற்கண்டு வடையை ஏனம் நிறைய வைத்துப் படைத்து, பல்லாண்டு சொல்லித் தண்டனிட்டு, வணங்கி, புத்தாடைகளை எடுத்துக் கொள்ளுகிறோம்.

கற்கண்டு வடையை எத்தனை நாளுக்கு அப்புறம் பார்க்கிறேன்? நாக்கில் நீர் ஊறுகிறது. "அதெல்லாம் முடியாது கோயிலுக்குப் போய்வந்த பிறகுதான்" என்கிறாள் மனைவி. அவளை ஆற்றுப் படுத்தி என் வழிக்கு மாற்றுகிறேன்.

கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் நிகழ்ச்சிகள் நேரிலும், தொலைக் காட்சியிலும் நடைபெறுகின்றன.

ஆயிற்று; கோயிலுக்குப் போக வேண்டியதுதான். எங்கள் வீட்டின் முன்னும் ஒரு சீனச் சர வெடி (போன ஆண்டு ஆயிரங் கண்ணிச் சர வெடி வாங்கிய என் மனையாள் இந்த ஆண்டு நூறு கண்ணிச் சரவெடி தான் வாங்கியிருக்கிறாள்.)

இதோ, கோயிலுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அப்படியே உறவினர், நண்பர்கள் பார்த்துத் திரும்பவேண்டும்.

எப்படியோ எதிர்பாராமல் சென்னைக்கு வந்தாயிற்று. இன்னும் ஒரு தீபாவளி. எப்பொழுதும் உள்ள சடங்கு அதே கதியில் தொடர்கிறது. நரகாசுரன் எதற்காகத் தீபாவளியைக் கொண்டாடச் சொன்னான்? புரியவில்லை.

"அடச்சே! எதற்காக என்று தெரிந்து என்னாகப் போகிறது? :-) எல்லாமே ஒரு பூடகமான நம்பிக்கை தானே? கலகலப்பு இருந்தால் தானே வாழ்க்கை?" நான் என்னையே ஆற்றுப் படுத்திக் கொள்ளுகிறேன்.

"இந்தா, வந்துட்டேன். தீப்பெட்டியைக் கொண்டு வரேன்" என்கிறாள் என் மனைவி.

உடைந்த செங்கற் சில்லின் மேல் சீனச் சரவெடி...........

மறுபடியும் சத்தம்...... மறுபடியும் புகை..... மேக மூட்டம் விளைவிப்பதில் எங்களின் பங்கு.

தீபாவளி வாழ்த்துக்கள்.


__________________________________________________________________












இராம.கி.
poo@giasmd01.vsnl.net.in
http://valavu.blogspot.com
__________________________________________________________________

சங்க இலக்கியங்களில் ஆரியர் - 3

அடுத்தது அகநானூறு 336, பாவைக்கொட்டிலார் பாடியது. இவர்பெயர் சற்றுவிதப்பானது. கொட்டுதல்=வளைத்தல். குழல், குடல், கூடு, கூடையென வளைபொருளில் தமிழில் ஏராளம் சொற்களுண்டு. கொட்டு = பிரப்பந்தண்டை வளைத்துச்செய்த கூடை. கொட்டில் = சிறிய பிரப்பங்கூடை. நெற்கொட்டில் = நெல்லிடுங்கூடை. பாவைக்கொட்டில் = பொம்மைகளைப் போட்டுவைக்கும் பிரப்பங்கூடை. இக்காலத்தில் எல்லாவீடுகளிலும் பொத்திகைக் (plastic) கூடையிற்றான் பொம்மைகளைப் போட்டுவைக்கிறார். (elasticற்கு மட்டுமே ”நெகிழி” பயன்படுத்துவது நல்லது. plastic - ஐயும்  elastic - ஐயும் பிரித்துக் கையாளவேண்டாமோ?) அக்காலத்தில் பிரப்பம்புல் (இதைக் கொடியென்பாருண்டு.) தமிழக மருதநிலங்களில் ஆற்றங்கரைகளிலும், ஈரஞ்செறிந்த ஏரிக்கரைகளிலும் பெரிதும்வளர்ந்தது. இன்றுங் கூடச் சீர்காழி-புகார்ப் பாதையில் பிரம்புப்பொருட்களுக்கும், கோரைப்பொருட்களுக்கும் பேர்பெற்ற தைக்காலைக் காணலாம். (பிரம்பும் கோரையும் வேறுபட்டவை.) அவ்வழி போகும் சுற்றுலாக்காரர் ஏதேனும் ஒரு பிரம்பு/கோரைப் பொருளை அங்கிருந்து வாங்காது போகார். http://www.kadalpayanangal.com/2014/07/1.html
 
பிரம்பு மூங்கிலைப்போன்றது; ஆனாற் சற்றுவேறுபட்டது. மிகப் பெரிதாகவும், மெல்லிதாகவுமன்றி, நடுத்தர விட்டங் கொண்ட பிரப்பந்தண்டின் முள்களைச் சீவி, தண்டை நெருப்பிற்காட்டிக் கொஞ்சஞ் கொஞ்சமாய் வளைத்துப் பல்வேறு அறைகலன்கள் (furnitures), அணிபொருட்களைச் (ornamental goods) செய்வர். இதில் பாவைக்கொட்டிலும் ஒன்று. கும்பகோணம்-கதிராமங்கலம் சாலையிற் சென்றால் வரும் திருக்கோடிகாவில் பிரம்பே தலமரமாகும். சென்னைப் பெரம்பூர் என்பது பிரம்பூர் தான். இக்காலத்தில் பிரம்பு தமிழகத்தில் அருகிவிட்டது. எல்லோரும் செயற்கைப் பொருட்களுக்கே ஆலாய்ப் பறக்கிறோம். பெரும்பாலும் பீகார், இராசசுத்தான், ஆசியத் தென்கிழக்கு போன்ற இடங்களிலிருந்து தான் பிரம்பும், பிரப்பம் பொருட்களும் இன்று கொண்டுவரப்படுகின்றன. பிரப்பங்கொட்டில் என்பதுமிகச்சரியான மருதத்திணைப் பொருள். பாவைக்கொட்டிலார் ஒருவேளை சோழநாட்டுத் தைக்காலுக்கருகில் இருந்தாரோ, என்னவோ? எண்ணிப்பார்க்க மனம் குறுகுறுக்கிறது.
 
பாடல் மருதத்திணை. நயப்புப் பரத்தை (விருப்பமானவள்; hero's current lover) இற்பரத்தைக்குப் (concubine; சின்னவீடு...:-)) பாங்காயினார் கேட்பச் சொல்கிறாள். பாட்டிற் பேசப்படுவோர் பரத்தைகள் என்பதைச் சுற்றிவளைத்து உணர்கிறோம். ”என்னாங்கடி, சக்களத்திகளா? என்னிடமா விளையாட்டு? இவ்வூர்த்தலைவன் என்னைச் சுற்றிவரும்படி ஆக்கவில்லையெனில், சோழரின் வல்லக்கோட்டையில் ஆரியர்படை மண்ணைக்கவ்வியதுபோல், நானுங்கவிழ்ந்து என்வளையை உடைத்துக்கொள்வேனடி” என்று சூளுரைக்கிறாள். சென்னைநகரத் தண்ணீர்க் குழாயடியில் பெண்கள் சண்டையடிப்பது போல் தெரிகிறதோ? படியுங்கள். சற்று நீளமான பாட்டு. இதன் விளக்கமும் நீளந்தான். என்னைப் பொறுத்துக்கொள்ளுங்கள்.
 
குழற்காற் சேம்பின் கொழுமடல் அகலிலைப்
பாசிப் பரப்பில் பறழொடு வதிந்த
உண்ணாப் பிணவின் உயக்கஞ் சொலிய
நாளிரை தரீஇய எழுந்த நீர்நாய்
வாளையொ டுழப்பத் துறைகலுழ்ந் தமையின்
தெங்கட் தேறல் மாந்தி மகளிர்
நுண்செயல் அங்குடம் இரீஇப் பண்பின்
மகிழ்நன் பரத்தைமை பாடி அவிழிணர்க்
காஞ்சி நீழல் குரவை அயரும்
தீம்பெரு பொய்கைத் துறைகேழ் ஊரன்
தேர்தர வந்த நேரிழை மகளிர்
ஏசுப என்பவென் நலனே அதுவே
பாகன் நெடிதுயிர் வாழ்தல் காய்சினக்
கொல்களிற் றியானை நல்கல் மாறே
தாமும் பிறரும் உளர்போற் சேறல்
முழவிமிழ் துணங்கை தூங்கும் விழவின்
யானவண் வாரா மாறே வரினே
வானிடைச் சுடரொடு திரிதரும் நெருஞ்சிபோல்
என்னொடு திரியா னாயின் வென்வேல்
மாரியம்பின் மழைத்தோற் சோழர்
வில்லீண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளை
ஆரியர் படையின் உடைகவென்
நேரிறை முன்கை வீங்கிய வளையே.
 
என்பது பாட்டு. பாடலின் விளக்கம் கூடுவதற்காக, இதனுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப்போட்டு கீழே கொடுத்திருக்கிறேன்.
 
குழல்கால் சேம்பின் கொழுமடல் அகல்இலைப்
பாசிப் பரப்பில் பறழொடு வதிந்த
உண்ணாப் பிணவின் உயக்கம் சொலிய,
நாள்இரை தரீஇய, எழுந்த நீர்நாய்
வாளையொடு உழப்பத் துறை கலுழ்ந்தமையின்,
தெங்கள் தேறல் மாந்தி,
மகளிர் நுண்செயல் அம்குடம் இரீஇப்
பண்பில் மகிழ்நன் பரத்தைமை பாடி,
அவிழ் இணர்க் காஞ்சி நீழல் குரவை அயரும்
தீம் பெரு பொய்கைத் துறை கேழ் ஊரன்,
தேர் தர வந்த நேரிழை மகளிர்
ஏசுப என்ப என் நலனே அதுவே
 
பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சினக்
கொல் களிற்று யானை நல்கல் மாறே
தாமும் பிறரும் உளர் போல் சேறல்
முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின்
யானவண் வாராமாறே
 
வரினே
 
வான் இடைச் சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல்
என்னொடு திரியான் ஆயின்
 
வென்வேல் மாரியம்பின் மழைத்தோற் சோழர்
வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை
ஆரியர் படையின் உடைகவென்
நேரிறை முன்கை வீங்கிய வளையே.
 
இனிச் சில சொற்பொருள்களையும் விளக்கக்குறிப்புகளையும் பார்ப்போம்.
 
கொழகொழவென்ற சேப்பங்கிழங்கிற் செய்த மோர்க்குழம்பைச் சுவைத்ததுண்டோ? சேப்பங்கிழங்குப் பொரியல்? வறுவல்? இதைச் சாப்பிடுவதில் நல்லது, கெட்டது இரண்டுமேயுண்டு. ஒருபக்கம் குருதிப் பெருக்கு அடக்கி, மலத்தை இளக்கி, உடலுக்குக் குளிர்ச்சிதரும் சேம்பு, இன்னொருபக்கம் வெப்பு, தடிப்பு, கோழைக்கட்டென்று கெடுதலையும் உண்டாக்கலாம். உடலுக்குள் வாயுவையும் பெருக்கலாம். நீர்ப்பாங்கான மண்ணில் பயிர்விளைந்தும், கிழங்கு சாம்பி (நீர்வற்றி)க் காண்பதால் சாம்ப/சாம்பைக் கிழங்கு என்றாயிற்று. சாமம்/சாமை, சேம்பு/சேம்பை, சேமம்/சேமை, சேப்பு/சேப்பை எனப் பல்வேறு திரிபுகளில் இன்று சொல்லப்படுகிறது. வடமொழியிற் கேமுகவென்று திரியும். ஆங்கிலத்தில் Indian Kales Root என்பர். Colacasia esculenta என்பது புதலியற் பெயர். பென்னம்பெரிய சேம்பிலையில் நீர்நாய் தங்கும் விவரிப்போடு இப்பாடல் தொடங்குகிறது..சேம்பு, நீர்நாய் என இரண்டுமே மருதத் தொடர்புடையவை.
 
குழல்கால்-குழல்போன்ற சேம்புத்தண்டு; கொழுமடல் அகலிலை-அகண்ட சேம்பு இலை. சிலபோது இது யானைக்காதளவிற்கு வளருமென்பர். (இலையை/தண்டைப் புளிசேர்த்துச் சாப்பிட்டால், மூலம் நீங்குமாம். பொதுவாகச் சேம்பிற்குப் புளிசேர்த்துண்பது நாட்டுவழக்கம். ”சிறியார்க்கு இனியதைக்காட்டாதே, சேம்பிற்குப் புளியிடமறவாதே” என்பது சொலவடை. மோர்க்குழம்பின் புளிப்பு புரிகிறதா?) பாசிப்பரப்பு = பசும்பரப்பு. பறழ் = குட்டி, உண்ணாப் பிணவு = உண்ணாதிருக்கும் பெண் நீர்நாய்; உயக்கம் சொலிய = வருத்தம் போக்கவேண்டி, நாள் இரை தரீஇய எழுந்த நீர்நாய் = அன்றாட உணவைத் தர எழுந்த நீர்நாய் (Otter);
 
[இக்காலத்தில் நீர்நாய் நம்மூரிற் கிட்டத்தட்ட அழிந்தே போய்விட்டது. இரோப்பாவில் ஓரளவாவது வளர்கிறது. மக்கள் வாழ்வில் உரையாட்டுகளுள்ளன. சிறார்க்கு அதை அடையாளங்காட்டி, அதன் வாழுமை போற்றப்படுகிறது. வேதிப்பொறியியல் ஆய்விற்காக சிலவாண்டுகள் நெதர்லாந்தில் நான் வாழ்ந்தபோது தெல்வ்ட் (Delft) நகரின் தாந்தாவ் (Tanthof) பகுதியில் எங்கள் வீடு நீர்நாய்ச் சந்தில் (Otter laan) இருந்தது. இத்தெருப்பெயரின் அழகுகண்டு நான் வியந்திருக்கிறேன். நீர்நாய் போன்ற சொற்களையும், இயற்கையையும் சேர்த்தே நாம் இழந்திருக்கிறோம். நம் பிள்ளைகளுக்கு ஆண்டாள் சொல்லும் ஆனைச்சாத்தான் குருவியை அடையாளங் காட்டமுடியுமா? கைபேசி வந்ததிலிருந்து சிறுகுருவிகள்கூட நம் நகரங்களைவிட்டு ஓடியேபோயின. குருவிச்சத்தம் உங்களுக்குக் கேட்கிறதோ?]
 
வாளையொடு உழப்ப - நீரிற்கிடக்கும் வாளைமீனோடு போராடி அதைச்சாய்த்துக் கவ்வும் செயலால்; துறை கலுழ்ந்தமையின் = நீர்த்துறை கலங்கியதால்.
 
[இனிக் கள். தென்னை பற்றியதோர் இடைவிலகல். கள்/மது போன்றவை உணர்வு கலங்குதல்/மலங்குதற் பயன்பாட்டின் வழியெழுந்த பெயர்களாகும். இன்னொரு விதமாய், சருக்கரைப்பொருளையும், சுவைப்பொருள்களையும் சேர்த்து நொதிக்கவிட்டுப் (fermented) பின் தெளிவித்துச் (clarified) வடித்துக் கள்/மது செய்வதால், உருவாக்கவழிப் பெயர்களுமுண்டு  துல் எனும் வேர்ச்சொல் துலங்குவதைக் (clear) குறிக்கும் துல்>தெல்>தெல்லல் வினையிலிருந்து தெள்ளல், தெளிதல், தெரிதல், தெளிவித்தல் தேறல், தேற்றம், தெற்று போன்றசொற்கள் பிறந்தன. நொதித்துத்தெளியும் பொருளைத் தெளிவென்றும், தேறலென்றும் அழைத்தார். நொதித்தல் குறைந்தது தேனென்றும் தேமென்றுஞ், தீமென்றும் சொல்லப்பட்டது. துல்>தில் இலிருந்து தித்திப்பென்ற சொல்கூட எழுந்தது. கள்ளிற்கு இன்னொரு பெயராய்த்தேன், தேறல், தெளிவு போன்றவையும் ஏற்பட்டன. உங்களுக்குத் தெரியுமோ? கள்ளிற்குத் தமிழில் 48 சொற்களுக்கு மேலுண்டு. ஆகக் ”கள்” நம்மோடு நெடுநாள் வந்தது. இன்றெமக்கு எமனுங் கூட. 
 
இனித் தென்னைக்கு வருவோம். இது ஆசியத் தென்கிழக்கிலிருந்து தமிழகங் கொண்டுவரப்பட்டதென்று புதலியலார் (botanists) சொல்வார். சங்க காலத்திற்கும் முன் இது நடந்திருக்கலாம். நம்மூரைச் சேர்ந்த பனைபோலவே இதிலும் தெல்>தெள்>தெளிவு இறக்கமுடியுமென அறிந்த தமிழன், இதன்சுவை இன்னும் அதிகமென்பதால் தெல்மரமென்ற புதுப்பெயரையே இதற்கிட்டான். பனங் கள் சற்று கடுக்கும்; தென்னங் கள் அவ்வளவு கடுக்காது. கடுப்பெல்லாம் வெறியக்காடி-acetic acid செய்யும் வேலை. ”தெல்” என்பது கள்ளின் வேரானதால், தெளிவைத் தரும் தெல்ங்குமரம் தெங்குமரமாயிற்று; தெல்நை, தென்னையாயிற்று. தெங்கங்காய் நாளடைவில் தேங்காயெனச்சுருங்கிற்று. தெங்கள்=தெங்கின் கள். ”தெல்”லென்ற வேர்ச்சொல்லே இவற்ற்றிற்கு அடிப்படை. ஞாவகம் வைத்துக்கொள்ளுங்கள்தெல் எனும் திசைக் குறிப்பும், தெல் எனும் மரக்குறிப்பும் வெவ்வேறு சொற்பிறப்பின. தென்னையென்ற பெயரின் வழி, கள்மரப் பொருள் குறிப்பதாலேயே, ”அது நம்மிடம் இயல்பாய் இருந்ததல்ல; இறக்குமதி” என்பது புரிந்துபோகும். பனை நம்முடையது; தென்னை வெளியிலிருந்து வந்தது. விவரமறியாப் பலருக்கும் இது வியப்பாகலாம்
 
தெல்லின் நீட்சியாய், அதன் வெறியத்தைக் (ethanol) ஓரளவு கட்டுவதாய், அரைநொதிப்பு நீர்மத்தில் சுண்ணாம்பிட்டு நீரிய அயனிச்செறிவை (hydrogen ion concentration) மாற்றி அமிலவரங்கிலிருந்து (acidic range), களரியரங்கிற்கு (alkali range) கொணர்ந்து திண்மத்துகள் (solid particles) கீழிறங்க, மீண்டும் தெளிய/தேற (settling) வைப்பர். தெளிவு/தேறலென்று இதையுஞ் சொல்வார். இப் பதநீரை, தென்பாண்டி நாட்டில் விற்கவுஞ் செய்வார். பதநீரின் வெறியச் செறிவு 2-4% ஆகும். பொதுவாக நம்மூர்க் கள்ளில் 7% க்கு மேலிருக்கும். கட்டங்கள் (கடுங்கள்) 9% க்கும் மேலிருக்கும். சப்பானிய அரிசிக்கள் (சாக்கே) 15-20% அளவிருக்கும். தயக்கமின்றி, ஆண், பெண், சிறார் அனைவரும் தென்தமிழ்நாட்டில் குறைவெறியப் பதநீரைக் குடிப்பார்; இதைத் தவறென்று யாரும் கொள்வதில்லை. ”பதநீரு வாங்கலையோ, பதநீரு?...” வீதியிற் குரல்கேட்டாலே வாயில் நீரூறும். பதநீரைப் பனையிலும் இறக்கலாம், தென்னையிலும் இறக்கலாம்.]
 
தெங்கள் தேறல் - இங்கே பதநீர்; மகளிரைப் பேசுகையில், இதைக் கள்ளாகக் கொள்ளுவது பாட்டின் கட்டுகைக்குப் (context) பொருந்தாது; தெங்கள் தேறல் மாந்தி - தாகத்திற்குப் பதநீர்குடித்தபின், சேம்பின் காலுக்கு அருகில் கால்வாய் நீர் கலங்காதிருந்தால் தெளிந்த நீரையே மகளிர் குடித்திருப்பர். ஆனால் அது கலங்கிய காரணத்தால் இங்கே பதநீரைக் குடிக்கிறார். நுண்செயல் அம்குடம் இரீஇ = நுணுகிச்செய்த அழகுக்குடங்களைத் தம் பக்கத்திருத்தி;. (அரிய வேலைப்பாடுள்ள மண்குடங்களை ஆதிச்சநல்லூர், கொடுமணம்,பொருந்தல், தற்போது கீழடி என விதவிதமாய் அறிகிறோமே?) “நுண்செயல் அங்குடம்” - ஓர் அழகான விவரிப்பு. குயவரைப் பற்றிய பாடல்களும் சங்க இலக்கியத்தில் அதிகம் தான்.         
 
மகிழ்நன் என்பான் கணவனல்லன். உடன்பழகி மகிழ்கிறவன் = consort; இக்காலத்தில் boy friend என்பாரே, அதற்கிணையாகக் கூட இதைச்சொல்லலாம். மகிழ்நன், கணவனாகலாம்; வேறொருத்தியை மணந்து இவளோடு மகிழ்வோனாகலாம்; ஏன், யாரையும் மருவாது(marry) காதலனாய்க்கூட அமையலாம்; மகிழ்நனென்றவுடன் உடலுறவு ஞாவகம் வந்துவிடத் தேவையில்லை. பண்பில் மகிழ்நன் = பண்பில்லாத மகிழ்நனின். (அவன் ஒரு பெண்ணோடு மட்டும் உறவுகொள்ளவில்லை. அவன் பரந்திருப்பதால் பரத்தன்.) பரத்தமை = பலரையும் பரந்துசார்ந்த ஒழுக்கம்.
 
அடுத்தது காஞ்சி மரம். இதுவும் மருத மரங்களிலொன்று. காஞ்சியை ஆற்றுப்பூவரசு/ஆத்துப்பூவரசு/ஆற்றரசு/ஆடலரசு/செடிப்பூவரசு, ஆயில்/ஆயிலி/ஆவில், கச்சி/கஞ்சி, கடற்கேசிதம், ஆனத்துவரை/ சன்னத்துவரை, நாய்க்குமிழ், பிண்டாரம் என்றெலாம் அழைப்பர். பிண்டாரத்தையொட்டி வடபுலமொழிகளிலும் பெயரிருக்கிறது. ”காஞ்சி” கன்னடத்திலும், ஆற்றுப்பூவரசு/ ஆற்றரசு மலையாளத்திலும் பயில்கிறது. பம்பரக் கும்பில் என்றுகூட மலையாளத்திற் சொல்வர். எல்லா நீர்க்கரைகளிலும், குறிப்பாகக் அகழிக்கரைகளிலும் இம்மரம் பயிரிட்டிருக்கிறார். ஆற்றங்கரையில் வளரும் காஞ்சிமரங்கள், மண்ணையிறுக்கி, ஊருக்குள் வெள்ளம்புகாதவாறு காத்துதவுமென்பார். (சென்னை அடையாறு, கூவம் ஆற்றுக்கரைகளில் இதைவளர்த்தால் நன்றாக இருக்குமே?) பப்பாளி, பனை. பலா போலஇம்மரத்திலும் ஆண், பெண் வகைகளுண்டு. ஆண்பூக்கள் மஞ்சளாயும், பெண்பூக்கள் பச்சை/நீலமாயும் இருக்கும். இதன் புதலியற்பெயர் trewia nudiflora.
 
மாற்றுநாட்டைக் கவரவிரும்பி ஓர் அரசன் வலிந்து படையெடுப்பதை வல்ஞ்சி>வஞ்சித்துறையென்பார். (வஞ்சிப்போரின் அடையாளம் வஞ்சிப்பூவாகும்.) வஞ்சிப்போரின் எதிர்ப்பில் தற்காப்பாய் (defence) எழுந்தது காஞ்சிப்போராகும். (கள்>கள்வு>கவ்வு>கா என்ற திரிவில் காக்குஞ்செயல் வெளிப்படும். கள்+சு = கச்சு என்பது மெய்புதைக்கும்/காப்பாற்றிக்கொள்ளும் ஆடையாகும். மூக்கொலிபெற்றுக் கச்சு கஞ்சுகமென்றாகும். கஞ்சி>காஞ்சி என்பவை நாட்டைக் காக்கும் செயற்பாடுகள். இவற்றின் அடையாளமாய் rebus principle இன் படி தற்காப்பாளர் காஞ்சிப்பூ சூடினார். (காஞ்சி மரங்கள் மிகுந்த கச்சிப்பேடு, காஞ்சிபுரமானது.) காஞ்சித்திணை, காஞ்சிப்பொதுவியல், காஞ்சித்துறை என்பவை நாடு, கருத்து, மெய்யியல் போன்றவற்றைக் குறித்துத் தற்காக்கும் நிலைப்பாடுகளாயின.
 
அவிழ் இணர்க் காஞ்சி நீழல் குரவை அயரும் - பூவுதிர்க்கும் காஞ்சிமர நிழலடியில் குரவையாடி அயரும் மகளிர்;. காஞ்சியென்ற குறிப்பையும் பார்த்தே, கூடியோர் பரத்தை மகளிரென்ற முடிவிற்கு நாம் வருகிறோம். ஏனெனிற் காஞ்சியையொட்டிப் பரத்தையர் கூடுவது ஒருவிதச் சங்க இலக்கிய மரபுக்குறிப்பு. (காஞ்சி காப்பாற்றும் மரமல்லவா?) காஞ்சியைச் சுற்றிக் குருக்கத்திக் கொடி படர்வதாய், தொண்டைமான் இளந்திரையனைப் பாடும் கடியலூர் உருத்திரங் கண்ணனாரின் பெரும்பாணாற்றுப் படை 375-377 ஆம் வரிகளில் 
 
குறுங்காற் காஞ்சி சுற்றிய நெடுங்கொடிப்
பாசிலைக் குருகின் புன்புற வரிப்பூ
  
என்ற காட்சி விரியும். காதல் மகளிரை (குறிப்பாய்ப் பரத்தைகளை) குருகிற்கு (சிலம்புமாதவியும் குருக்கத்திப்பெயர் கொண்டவளே!) ஒப்பிடுவது தமிழ்ப்புலவருக்கு ஆகிவந்த பழக்கம். அகம் 55 ஈச்ச மரத்தைக் காதலனுக்கும் சுற்றிப்படருங் குருக்கத்திக்கொடியைக் காதலிக்கும் உவமையாகக் கொள்ளும். (இதேபோலக் குருக்கத்திக்கொடி மாமரஞ் சுற்றியதாய் காளிதாசனின் சாகுந்தலத்தில் ஓர் உவமை வரும். காளிதாசனை முதலாகவும் சங்கப்புலவரைப் பின்னாகவும் காட்டும் இந்தாலசி அறிஞர்களை என்னசொல்வது?) இங்கே காஞ்சி நீழலில் குருக்கத்தியர் கூடிக் குரவையாடுகிறார். குரவை என்பது 7 பேரோ, 9 பேரோ ஆடும் மகளிர் ஆட்டம். அவ்வப்பொழுது கைசேர்த்தாடும் ஆட்டம். குரவை பற்றித் தனிக்கட்டுரையே எழுதமுடியும். இங்கு தவிர்க்கிறேன்.
 
தீம் பெரு பொய்கைத் துறை கேழ் ஊரன் = ஊரார் கூடி நீராடும் இனிய துறைநிறைந்த ஊர்த்தலைவன்; தேர் தர வந்த = தேரில் வந்ததுகண்டு; நேரிழை மகளிர் ஏசுப என்ப = அழகிய இழை (சங்கிலி) அணிந்த மகளிர் கேலிபேசி ஏசினாரோ? என் நலனே அதுவே = அதுவுமெனக்கு நல்லதுதான். (காஞ்சிமர நிழலில் கூடியவர் குரவையாடி ஊரனைப்பற்றி வம்புபேசி ஏசுகிறார். ”பேசட்டும், எனக்கும் அது நல்லது தான்”.என்கிறாள் நயப்புப்பரத்தை.)
 
பாகன் நெடிது உயிர் வாழ்தல் = (ஞாவகம் வச்சுக்குங்கடி) யானைப்பாகன் நெடுநாள் உயிர்வாழ்தலென்பது; காய்சினக் கொல்களிற்று யானை நல்கல் மாறே = கோவம்வரின் இழுத்துப்போட்டு மிதிக்கும் யானையின் நல்கையெனத் தெரிந்துகொள்ளுங்கள். (இடைவிடாது துன்புறுத்தும் பாகனை கோயில்யானைகள் அடித்து மிதித்துவிடும். பாகனின் கொடுமை/குசும்பிற்கும் அளவுண்டு); தாமும் பிறரும் உளர் போல் சேறல் = தாமும் மற்றவரும் மட்டுமே உலகிலுள்ளது போற் செல்லுதல்; முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின் = முழவடிக்கத் துணங்கை தூக்கி ஆடும் விழாவில் (துணங்கை குரவையின் இன்னொரு வேற்றம். குரவை பற்றி எழுதும்போது இதையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்); யானவண் வாராமாறே = நான் அங்கே வராவரைக்குந்தான். வரினே = அப்படி வந்து, வான் இடைச் சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல் = வான்படு சூரியனுக்குத் தக்கத் தன்னைத் திரித்துக்கொள்ளும் நெருஞ்சிபோல்.
 
நெருஞ்சி (நுள்>நெள்>நெரி>நெரிஞ்சி>நெருஞ்சி) என்னும் புல் (Tribulus terrestris) சூரியனைப் பார்த்தாற்போல் கிடையாகப் பலகிளைகள் விட்டுப்படரும் நிலத்திணையாகும். நெருஞ்சங்காய்/பழம் போன்றவற்றின் முள்ளாலே இப்பெயரேற்பட்டது. முள்பற்றிய கதைகள் தமிழில் நிறையவுண்டு. அத்துணைசிறிய நிலத்திணைக்கு இங்கேயோர் அரிய புதலியல் அவதானம் சுட்டப்படுகிறது. நெருஞ்சியின் ஒரு கணுவில் வளரும் கூட்டிலைகளில் ஒன்று பெரிதாகவும், மற்றொன்று சிறிதாகவுமிருக்கும். அடுத்த கணுவில் பேரிலையிருந்தபக்கம் சீரிலையும், சீரிலையிருந்தபக்கம் பேரிலையாகவும் மாறியிருக்கும். இப்படிக் கிளைநெடுகிலும் ஒன்றையொன்று மறைக்காமல் எல்லா இலைகளும் ஞாயிற்றொளியைப் பெறூம்வகையில் புல்வளரும். மொத்தத்தில் சூரியவொளி தனக்கு முற்றிலும் கிடைக்கும்படி ஆண்டு முழுக்க இப்புல் திரிந்துகொண்டேயிருக்கும். மேற்கூறிய வரி இப்பொழுது விளங்குகிறதா?
 
இங்கே ஞாயிறு நயப்புப்பரத்தைக்கும், நெருஞ்சி மகிழ்நனுக்கும் உவமையாகின்றன. உவமையில் என்னவொரு மமதையும் இளக்காரமும் வருகின்றன? - பாருங்கள் அதே பொழுதில் என்னவொரு பொருத்தம்? சங்க இலக்கியச் சிறப்பே இதுதான். இயற்கை பற்றிய கூர்த்த அவதானம்; அதை மாந்த வாழ்க்கைக்குப் பொருத்தும் பட்டறிவு. இயற்கையோடு இணையும் போக்கு. இற்றைவாழ்க்கையின் அவலமே இதற்கு மாற்றாய் நடப்பதுதான். இயற்கையை விட்டு நாம் நெடுந்தொலைவு வந்துவிட்டோம் என்றே தோன்றுகிறது. சூழலியற்காரர் மீளமீள இதைத்தான் சொல்கிறார்.    .
 
என்னொடு திரியான் ஆயின் = என்னைச் சுற்றித் திரியானெனில்; வென்வேல் மாரியம்பின் மழைத்தோற் சோழர் = வெல்லும் வேலும், மாரிபோல் அம்பும், மேகம்போற் கிடுகும் உடைய சோழரின்; வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை = வில்பொருந்திய வல்லக்கோட்டையின் வெளிக்காவற்காட்டில்; ஆரியர்படையின் உடைகவென் = ஆரியர்படை சுக்குநூறானது போல்; நேரிறை முன்கை வீங்கிய வளையே. = நேரே தாழ்ந்திருக்கும் முன்கையில் திரண்டுள்ள என் வளைகள் உடையட்டும்.
 
கடைசி 4 வரிகளில் ஆரியருக்கும் சோழருக்கும் இடைநடந்த போர்ச்செய்தி சொல்லப்படுகிறது இதைப்புரிந்துகொள்ளச் சற்று மெனக்கெடவேண்டும். நந்தரிலிருந்து, மோரியர், சுங்கர், கனகர் வரை அவரவர் பெயரிற் சொல்லியதுபோக பொத்தாம்படையாயும் சங்க இலக்கியத்தில் ஆரியர்பற்றிச் சிலசெய்திகளுண்டு. அப்படியொரு செய்தியிது அடுத்துவரும் நற்றினை 170 இலும், இதே செய்தியுண்டு. தவிரச் சிலம்பின் மதுரைக்காண்டத்தில்  ”வடவாரியர் படைகடந்து, தென்றமிழ்நாடு ஒருங்கு காணப் புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரைசுகட்டிலிற் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனோடு ஒரு பரிசா நோக்கிக் கிடந்த மதுரைக் காண்டம் முற்றிற்று” என்றும் கூறப்படும். (அரைசுகட்டிலிற் துஞ்சிய நெடுஞ்செழியன் வடக்கே போகவில்லை. வடக்கிருந்தவந்த படையைக் கடந்தான். அவ்வளவுதான்.அதேபொழுது இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனும், செங்குட்டுவனும் வடக்கே போனதற்குச் சிலம்பிற் சான்றுள்ளது.)
 
வடக்கே மோரியரின் பின் மகதர் ஆட்சிப்பரப்பு சிச்சிறிதாய்க் குறைந்தது. அலெக்சாந்தரின் மிச்சப்படைகள் வழி வடமேற்கெழுந்த இந்தோ-கிரேக்கர் (கிரேக்கம், உரோமானியரென நேரே வந்தவரையும், இந்தோ-கிரேக்கரையும் சேர்த்தே தமிழர் யவனரென்பர்), சகர் போன்றோர் மகதராட்சி குன்றிய வடபகுதிகளைத் தாமே ஆளத்தொடங்கினர். உச்செயினிக்கு மேற்கிருந்த சத்ரபரும் சகர்வழி வந்தவரே. பின் இவரெல்லாம் விந்தியந்தாண்டித் தெற்கே வரத்தொடங்கினார். தங்களைச் சத்திரியரென்றே சொல்லிக்கொண்ட இவர் எங்கெல்லாம் வலுக்குறைந்ததோ, அங்கெலாம் நுழைந்தார். அவரிலொரு பகுதியார் உத்தேய (>யுத்தேயே>யௌதேய) கணமென்றும் ஆயுதகணமென்றும் சொல்லப்பட்டார். முடியரசில்லாது குடியரசாயும் இனக்குழு ஆட்சியும் கொண்டிருந்தார். போர்மூலம் பொருள்திரட்டி நகர்ந்துகொண்டிருந்தார். அகண்ட அரசை ஏற்படுத்தவில்லை. ஆங்காங்கே கூட்டங்கூட்டமாய்ச் சிலகாலம் வாழ்த்து பின்பிரிந்து வேறிடஞ்சென்று விரிந்துகொண்டிருந்தார். அக்கால robber - barons, mercenaries என இவரைச்சொல்லலாம். எங்கெலாம் வளமிருந்ததோ, அங்கெலாம் உழிஞை, வஞ்சிப்போர் நடத்துவார். கொள்ளையடிப்பார்; நகர்ந்துபோவார். தென்னாடுநோக்கி இவர் படையெடுத்ததை இவர்நாணயம் தெற்கேகிடைத்ததனாலும், இவருடைய ”கார்த்திகேயன், சுப்ரமண்யன், சண்முகன்” வழிபாடும், நம்மூர் குறிஞ்சிமுருகன் வழிபாடும் இரண்டறக் கலந்துபோனதாலும்அறிகிறோம். இவற்றைப் பின்னிப்பிணைந்து நம் திருமுருகாற்றுப்படையும், பரிபாடலும் சொல்லுங் கதைகள் பற்பல. (இந்த வழிபாட்டுக் கலப்பு ஒரு தனியாய்வு. யாராவது செய்யவேண்டும்.)
 
இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன் ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி செந்தமிழ்ச் செல்வியின் சிலம்பு 46 ஆம் இதழில் ”ஆரியப்படை கரந்த, அரசு கட்டிலில் துஞ்சிய, பாண்டியன் நெடுஞ்செழியன்” என்ற கட்டுரையும், கல்வெட்டுக் கருத்தரங்கம் 1966 ஆம் இதழில் ”ஆரியப்படையும் யௌதேய கணமும்” என்ற கட்டுரையும் உத்தேய கணம்பற்றி வெளியிட்டார். இவற்றின் மறுபதிப்பு: ”மயிலை சீனி வேங்கடசாமி தமிழுக்கு வழங்கிய கொடை - பாகம் 1” என்று சென்னைத் தமிழ்வளர்ச்சிப் பேரவை வெளியிட்ட நூலில் உள்ளது. தவிர, https://en.wikipedia.org/wiki/Yaudheya,https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D போன்ற தளங்களிலும் ஆங்கிலத்திலும், தமிழிலும் யௌதேயவென கூகுளித்தால் செய்திகள் கிடைக்கும். ”தமிழருக்கும் உத்தேயருக்கும் இடையாட்டம்” பற்றிய ஆய்வு இன்னும் நிறைவுபெறவில்லை. இதுநாள்வரை தொட்டும் தொடாமலுமே சிலசெய்திகள் தெரிந்துள்ளன.
 
உத்தேயரெனும் ஆரியரின் தாக்கம் நூற்றுவர்கன்னர் (சதகர்ணிகள்) மீதுமிருந்தது. சகரை முற்றிலும் தொலைத்துப் பின்னாளில் நூற்றுவர்கன்னர் வடக்கேயும் எழுந்தார். நூற்றுவர் கன்னரைத் தாக்கியவர் தகடூர் வரை வந்து தமிழரைத் தாக்குவது எளிது. மலையமான் திருமுடிக்காரியை முள்ளூருக்கருகிலும், சோழரை வல்லத்திலும், பாண்டியரை மதுரைக்கருகிலேயேயும் உத்தேயர் தாக்கியிருக்கிறார். மொத்தத்தில் இது அடுத்தடுத்து ஏற்பட்ட படையெடுப்பு (expedition). இதன் இயலுமையை அறியுமுன் சங்ககால மக்கள்தொகையைக் கருத்துமூலமாகவாவது நாம் உணரவேண்டும். இப்படியொரு படை அக்காலத்தில் எவ்வளவு பெரிதாயிருந்திருக்கும்? 3000, 30000, 100000 - இதில் எது சரி? வல்லக்கோட்டைக்குள் (வல்லத்தின் கோட்டை; இதன் நினைவாகவே சென்னைக்கருகில் வல்லக்கோட்டை என்ற ஊர் எழுந்திருக்கலாம். அதன் முருக வழிபாட்டுச் சிறப்பும் உத்தேயக் கணத்துள் எழுந்திருக்கலாம்.) எத்தனைபேர் இருந்தார்? 3000, 30000, 100000?
 
இற்றைத்தமிழகத்தில் 7 3/4 - 8 கோடிக்குத் தமிழருள்ளோம். மற்ற மாநிலங்களிலும், நாடுகளிலுமுள்ள தமிழர்தொகை கணக்கிட்டால் சிலர் ஒன்றரைக் கோடியென்றும், இன்னுஞ்சிலர் 2 கோடியென்றும் சொல்வார். எது உண்மையோ தெரியாது. மொத்தத் தமிழர் குறைந்தது 9 1/2 கோடியாவது தேருவோம். பொருத்தமான, தோராயமான கணக்குகளையிட்டால் இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர் தொகையென்பது கிட்டத்தட்ட 5/6 இலக்கமே தேறும். சங்ககாலத்தின் போது மூவேந்தர் நாடுகள் ஒவ்வொன்றிலும் நிரவலாய் 2 இலக்கத்திற்கும் குறைவாகவே மக்கள் இருந்திருப்பர். 
 
[இப்படியொரு கணக்கை 1999 - 2000 களில் ஒருமுறையிட்டேன். மலேசியாவில் நடந்த முதல் உலகத் தமிழ்மாநாட்டில் இதற்கான கட்டுரையொன்று வெளிவந்தது. என் தந்தையார் நூலகத்திலிருந்து அந்த ஆங்கிலக்கட்டுரை எனக்குப் படிக்கக்கிடைத்தது. ஏசுகிறித்து காலத்திலிருந்த பாலத்தீன மக்கள்தொகை, அன்றைய மக்கள்தொகைப் பெருக்கவீதம் போன்றவற்றை மேலையர் சான்றுகளிலிருந்து அவ்வாசிரியர் கொடுத்திருந்தார். ஆசிரியர் பெயர் இப்பொழுது எனக்கு நினைவில்லை. இதோடு, இந்தியா விடுதலை பெற்றபின் தமிழரின் பெருக்கவீதம். பெருக்கவீதங்கள் எப்படி உயர்ந்துகுறைந்தன என்றெலாம் இயன்றமை ஊன்றுகோள்களைக் கொண்டு, குத்துமதிப்பான கணக்கைப் பாலாப்பிளையின் தமிழிணையம் மடற்குழுவில் கட்டுரையாய் வெளியிட்டேன். ”அகத்தியரிலும்” பின்னாற் படியிட்டநினைவு எனக்குண்டு. இப்பொழுது அம்மடல் என்கணியிற் கிடையாது. அதை இணையத்தில் எப்படித்தேடியெடுக்க வேண்டுமென்றுந் தெரியவில்லை. ஆனால் 5/6 இலக்கம் என்றமுடிவு  நினைவுள்ளது. இக்கணக்கை யாராவது திருப்பிப்போடவேண்டும்.]
 
அதை ஒருபக்கம்வைத்து இன்னொருபக்கம் விளைவுகளைப் பார்ப்போம். 4, 5 பெருநகரங்களுக்கு மேலின்றி, மற்றபடி சிறுநகரங்கள், சிற்றூர்களுடன் பெரும்பாலும் வயல்கள், காடுகள் ஊடிருந்த காலம் அது. உறையூர், புகார் ஆகிய பெருநகரங்கள் தவிர்த்து ஆவூர், வல்லம் போன்ற கோட்டைகளுள்ள சிறுநகரங்கள் சோழநாட்டில் அன்றிருந்தன. சிலப்பதிகாரத்தில் புகாரின் கிழக்கு மேற்கு அகலத்தை 1 காதமென இளங்கோ நாடுகாண் காதையிற் சொல்வார். பெரும்பாலும் ஊடே ஆறுபோகும் பெருநகரங்கள் 1:2 என்ற மடங்கிலிருப்பதால் புகாரின் நீளம் 2 மடங்கென்று கொண்டால், நகரப்பரப்பளவு 2 சதுரக்காதம். = 90 சதுரக்கிலோமீட்டர் என்றாகும். (என்கணக்கில் தென்புல வாய்பாட்டின் படி 1 காதம் = 6.70503 கி.மீ. இதேநகரம் வடபுல வாய்ப்பாட்டின் படி 4 மடங்கு சிறிதாயிருக்கும்.) 2011 இல் இந்திய மக்கள்தொகை அடர்த்தி 382 என்பர். 2000 ஆண்டுகளுக்குமுன், புகார் நகர அடர்த்தியை 100 எனக் கொண்டால், அதன் மக்கள்தொகை 10000 க்கும் குறைவாயிருக்கும். (இற்றைச் சென்னையும் சென்னையைச் சுற்றிலும் கணக்கிட்டால் மக்கள்தொகை 1.5 கோடிக்குத் தேரும்.) வல்லம் போன்ற கோட்டைகளில் 3000, 4000 பேருக்கும் மேலிருந்தால் அதிகமென்றே தோன்றுகிறது.
 
வல்லம் உறையூர்ச்சோழனுக்கு ஆட்பட்டது. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் செங்குட்டுவன் காலத்தவன். என் ’சிலம்பின் காலம்’ நூலில் செங்குட்டுவன் வடக்கே இரண்டாம்முறை படையெடுத்துப் போன காலம் பொ.உ.மு.80 க்கு அருகிலென்று சொல்லியிருப்பேன். செங்குட்டுவன் ஆட்சிதுறந்தகாலம் பொ.உ.மு. 76 என்றுகொண்டால் பட்டஞ்சூடியது (பதிற்றுப்பத்துப் பதிகத்தின் படி) பொ.உ.மு.131 ஆகும். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் இறந்தபோது பெண்காமத்தில் அவனுக்கு ஈடுபாடிருந்ததென்று சிலம்புகூறும். எனவே இறக்கும்போது அவன் அகவை 60க்கு மீறாது. 25 அகவையில் அவன் பட்டமேறியதாய்க் கொண்டால், 35 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கலாம். அப்படியெனின் அவன் பட்டமேறியது பொ.உ.மு. 115. பட்டமேறிய சிலவாண்டுகளில் ஆரியப்படை கடந்தானெனில் உத்தேயர் படையெடுப்பு பொ.உ.மு 120 க்கு அருகில் நிகழ்ந்திருக்கலாம். (http://valavu.blogspot.in/2010/05/8.html) இது செங்குட்டுவன் முதற்படையெடுப்பிற்குப் பிந்தியதென்றே இப்பொழுது எனக்குத் தோன்றுகிறது. ஆனால், இவன் இமையம் போகவில்லை, நெடுஞ்சேரலாதன் வடசெலவிற் வெற்றிபெற்ற காரணத்தாற் இப்படியோர் பெயரைப் போட்டியாய்த் தனக்குச் சூட்டிக்கொண்டான் போலும்.
 
இனி வல்லம் எந்தச் சோழனின் ஆளுகைக்கு உடபட்டது?
.     
செங்குட்டுவனின் தாய் நற்சோணை ஞாயிற்றுச்சொழனின் மகள். ஞாயிற்றுச்சோழனுக்குத் (ஆ)தித்தன் என்ற பெயருமுண்டு. அவன் சேரரோடு (மணவுறவு) கொண்ட காரணத்தால் மணக்கிள்ளி (கிள்ளிச் சம்பந்தியென்றே இதற்குப்பொருள்) இவன்மகன் தித்தன்வெளியன். இவன் தந்தையோடு முரணி வளநாட்டின் (சோழநாடு வளநாடு, நாகநாடு என 2 பகுதிகள் கொண்டது.) துறைமுகம் கோடிக்கரையில் (நாகநாட்டிற்கு புகாரே தலைநகரும் துறைமுகமுமாகும்.) இருந்துகொண்டு ஆட்சி செய்ததும் சங்க இலக்கியத்திற் பதிவு செய்யப்படுள்ளது. தித்தன் வெளியன் வீர விளையாட்டுக்கள், இசை, நடனக் கூத்துக்களென்றே சிலகாலங் கோடிக்கரையிற் கழித்தான். தித்தனுக்குப் பின், வேற்பல் தடக்கை பெருவிறற்கிள்ளி (பல்வேறு தடங்களில் - வழிகளில் - வேல்வீசுந் திறன்கொண்ட கிள்ளி) என்றும்போர்வைக்கோப் பெருநற்கிள்ளி (போர்வையெனும் ஊரின் அரசன்; இற்றை உறையூருக்கு அருகிலுள்ள பேட்டைவாய்த்தலை, போர்வையெனப்பட்டதாம்.) என்றும் அழைக்கப்பட்டு, தித்தன்வெளியன் பின்னாளில் தந்தைக்கு அப்புறம் உறையூரிலிருந்து ஆண்டிருக்கிறான்.
 
நெடுஞ்சேரலாதனின் மைத்துனன் தித்தன்வெளியனே. பின் சேரலாதன், தித்தன் வெளியன் என்ற இருவருக்கும் சண்டையேற்பட்டு போர்க்களத்திலிறந்ததைக் கழாத்தலையார், புறம் 62, 368 பாக்களால் உறுதிசெய்வார். இவனுக்குப்பின் இவனுடைய இள அகவை மகனோடு (பெரும்பாலும் இவன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன் ஆகலாமென உய்த்துணருகிறோம்.) பகைகொண்ட 9 அரசருடன் செங்குட்டுவனே போரிட்டு உறையூரை நிலைநிறுத்த உதவினான். இச்செய்திகளெல்லாம் சிலம்பின் வஞ்சிக்காண்டத்தில் வருவதை அறியமுடியும். இச்செய்திகளை தமிழுலகம், தமிழ்மன்ற, தமிழாயம் மடற்குழுக்களில் அகம் 152 பற்றி நானெழுதிய கட்டுரைத்தொடரில் பேசியிருக்கிறேன். எனவே உத்தேயர் வல்லத்தின் மேற் படையெடுத்தபோது, வல்லம் வேற்பல் தடக்கை பெருவிறற்கிள்ளியின் ஆட்சிக்கு உட்பட்டிருந்திருக்கலாம் என்று முடிவுசெய்கிறோம்.. இன்றைக்கு திருச்சிராப்பள்ளியிலிருந்து தஞ்சாவூர் போகும்பாதையில் தஞ்சைக்கு வெகு அருகில் 8/9 கி.மீட்டரில், வல்லம் இருக்கிறது.
 
அங்கே பெரியார் மணியம்மை பல்கலைக்கழகமும், சற்று தொலைவில் தமிழ்ப்பல்கலைக் கழகமும் இருக்கின்றன.  
 
அகம் 336 ஆம் பாட்டின் மொத்தப்பொருள்:
 
குழல்தண்டிற் பொருந்திய அகண்ட சேம்பிலையின் பசும்பரப்பில், குட்டியொடு தானும் உண்ணாதிருக்கும் பெண்நீர்நாயின் வருத்தம் போக்கவேண்டி, அன்றாட உணவுதர எழுந்த நீர்நாய் நீரிற்கிடக்கும் வாளையொடு போராடி, அதைச்சாய்த்துக் கவ்வுஞ்செயலால் நீர்த்துறை கலங்கியதால். தாகத்திற்குப் பதநீர்குடித்தபின், நுணுகிச்செய்த அழகுக்குடங்களைத் தம் பக்கத்திருத்தி. பண்பிலா மகிழ்நனின் பரத்தமையைப் பேசிக்கொண்டும். பூவுதிர்க்கும் காஞ்சிமர நிழலடியில் குரவையாடியும், அயரும் மகளிர் கூடிநீராடும் இனியதுறை நிறைந்த ஊர்த்தலைவன் தேரில்வந்தது கண்டு கேலிபேசி ஏசினாரோ? அதுவும் எனக்கு நல்லதுதான்.
 
(ஞாவகம் கொள்ளுங்கள்;) யானைப்பாகன் நெடுநாள் உயிர்வாழ்தலென்பது கோவம் வரின் இழுத்துப்போட்டு மிதிக்கும் யானையின் நல்கையெனத் தெரிந்துகொள்ளுங்கள். தாமும் மற்றவரும் மட்டுமே உலகிலுள்ளதுபோற் செல்லுதலென்பதும், முழவடிக்கத் துணங்கைதூக்கி ஆடும்விழாவிற்கு நான் அங்கே வராவரைக்குந்தான். அப்படிவந்து, வான்படு சூரியனுக்குத் தக்கத் தன்னைத் திரித்துக்கொள்ளும் நெருஞ்சிபோல் அவன் என்னைச் சுற்றித் திரியானெனில், வெல்லும் வேலும், மாரிபோல் அம்பும், மேகம்போற் கிடுகுமுடைய சோழரின் வில்பொருந்திய வல்லக்கோட்டையின் வெளிக் காவற்காட்டில், ஆரியர்படை சுக்குநூறானது போல், நேரேதாழ்ந்திருக்கும் முன்கையில் திரண்டுள்ள என் வளைகள் உடையட்டும்.
 
அன்புடன்,
இராம.கி.

நூல் விமர்சனம் - தென்னிந்திய சமூகப்புரட்சியின் தந்தை அயோத்திதாசப் பண்டிதர்

முனைவர்.சுபாஷிணி


தென்னிந்திய சமூகப்புரட்சியின் தந்தை 
அயோத்திதாசப் பண்டிதர் 

தொகுப்பாசிரியர்: கௌதம சன்னா 

கடந்த சில ஆண்டுகளில் அயோத்திதாசப் பண்டிதர் பற்றிய தகவல்களைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்தமிழ் மடலாடற் குழுமத்தில் அவ்வப்போது ஒரு சில உறுப்பினர்கள்  பகிர்ந்து வருவதை வாசித்திருக்கின்றேன். அதில் மிக முக்கிய விசயமாக அமைவது பண்டிதரின் பெருமுயற்சியில் தொடர்ச்சியாக வெளிவந்த ஒரு பைசா தமிழன் பத்திரிக்கையின் முழுமையான மின்னூல் நம் சேகரத்தில் இணைந்த நிகழ்வு எனலாம். அவ்வப்போது அவரது ஆக்கங்களை வாசித்தறிய  வேண்டும் என நான் முயன்றாலும் தொடர்ச்சியான பல பணிகள் எனது கவனத்தை வேறு வகையில் செலுத்தியது என்பதை மறுப்பதற்கில்லை. அண்மையில் ஒரு குறிப்பைத்தேட எனது இல்ல நூலகத்தை அலசியபோது நண்பர் ஒருவர் வழங்கிய "தென்னிந்திய சமூகப்புரட்சியின் தந்தை - அயோத்திதாசப் பண்டிதர்" என்ற நூல் கிட்டியது. சென்ற வாரம் பாரிஸ் பயணத்தின் போது தொடங்கி பின் முடிக்க இயலாமல் சென்ற நிலையில் இன்று ஏனைய பக்கங்களை வாசித்தேன். 

நூலின் தொகுப்பாசிரியர் திரு.கௌதம சன்னா இரு பகுதிகளாக இந்தத் தொகுப்பு நூலைப் பிரித்து வாசிப்புக்கான தகவல்களைத் தொகுத்திருக்கின்றார். முதல் பாதி, பண்டிதரின் எழுத்துக்களாகப் பரவலாக வெவ்வேறு விசயங்களைத் தொட்டுச் செல்வதாக அமைந்திருக்கின்றது. மறுபாதி அயோத்திதாசப் பண்டிதரைப்பற்றியும் அவர் நடத்திய தமிழன் பத்திரிக்கை பற்றியும், தமிழ் பௌத்தம் பற்றியும், பண்டிதரின் மறைவுக்குப் பின்னர் தொடரப்பட்ட முயற்சிகளைப்பற்றியும் என அமைந்துள்ளது. 

"அயோத்திதாசப் பண்டிதர் என்பவர் யார்" என அறிந்து கொள்ள விரும்புவோருக்கு அறிமுகமாக அமைவதுடன் 19ம் நூற்றாண்டின் இறுதி தொடங்கி தமிழ்ச் சமுதாயத்தின் சீர்திருத்த முயற்சியில் அவரது பங்கு எத்தகையது என்பதைத் தெளிவு குறையாது விளக்கும் ஆதாரச்சான்றுகள் நிறைந்த தரமான நூலாகவும் அமைந்துள்ளது இந்த நூல். அதில் குறிப்பாக பண்டிதரின் எழுத்துக்களின் வழியே வாசகர்களை, அவரை அறிந்து கொள்ள செய்த முயற்சி வரவேற்கத்தக்கது. 

வாழ்க்கை குறிப்பு, எங்குப் பிறந்தார்.. என்ன செய்தார். என்றெல்லாம் நூலைக் கொண்டு செல்லாமல், பண்டிதரின் வாழ்க்கை நோக்கமாக அமைந்திருக்கின்ற அவரது சமூகச்சீர்திருத்தக் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அனைத்துக் கட்டுரைகளும் இடம்பெற்றிருக்கின்றன என்பது மிகச் சிறந்த ஒரு விசயம் என்றே கருதுகிறேன். பண்டிதரின் தமிழன் பத்திரிக்கையிலிருந்து சிறு கட்டுரைகளின் தொகுப்பாக முதற்பகுதியில் இணைந்திருப்பவை சொல்லும் செய்திகள் பண்டிதரின் சிந்தனையில் முழுமையாக ஒடம்பெற்றிருந்த சமூக நிலையை வெளிக்காட்டுவதாக அமைந்திருக்கின்றன. உதாரணமாக, 
  • அக்கால பெண்களின் கல்வி அபிவிருத்திக்கு யார் தடையாக இருக்கின்றனர் என்ற அலசல் 
  • மக்களிடையே கல்வி அறிவு பெருகுவதால் நன்மையா அல்லது சாதிப்பற்று பெருகுவதால் நன்மையா என்ற அலசல் 
  • விதவைப் பெண்களின் துன்பங்கள், அவர்களை மறுமணம் செய்து கொடுக்காமல் துன்பத்தில் ஆழ்த்தும் ஆண் சமூகத்தின் மீதான தனது கண்டனம் 
  • சாதிபேதம் ஏற்படுத்தும் சமூகச்சீரழிவு 
  • சமயக்கூடங்களில் சாதிகளும் வேஷங்களும் 
  • மனிதன் தன்னை எப்படி உயர்த்திக் கொள்ள வேண்டும் 
  • சாதிகளற்ற சமுதாயம் 
...என அமைந்திக்கும் கட்டுரைகளைக் குறிப்பிடலாம். 

இதன் தொடர்ச்சியாக அமைந்திருக்கும் புத்தரைப்பற்றியும் பௌத்தத்தைப் பற்றியும் பண்டிதர் எழுதிய நீண்ட கட்டுரை ஒன்றும் இடம்பெறுகின்றது. இது புத்தரின் வரலாற்றை விரிவாக எடுத்துரைப்பதோடு பௌத்த கொள்கைகளை விளக்கும் வாசிப்புப்பொருளாகவும் அமைந்துள்ளது. 

அயோத்திதாசப் பண்டிதரைப்பற்றிய அறிஞர் அன்பு.பொன்னோவியம் அவர்களின் விரிவான கட்டுரை இந்த நூலுக்குத் தனிச்சிறப்பினை வழங்குகின்றது. காரணம், பகுதி பகுதியாக சில கட்டுரைகளின் வழி பண்டிதரைப்பற்றிய அறிமுகத்தை முதல் பகுதியில் பெறும் வாசகர்களுக்கு ஒரு தொகுப்பாக இக்கட்டுரை அமைந்திருப்பதே எனலாம். இக்கட்டுரையில் தமிழன் பத்திரிக்கையில் பல பகுதிகளிலிருந்து தகவல்களைப் பதிந்து அதற்கான தனது கருத்துக்களையும் வழங்கி சீர்திருத்தக்கருத்துக்கள் அக்கால கட்டத்திற்கு எத்தகைய தேவையாக அமைந்தன என்று வலியுறுத்துவதோடு அச்சீர்திருத்தக்கருத்துக்கள் தொடர்ந்து ஒரு சிலரால் பிற்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அயோத்திதாசர் அம்முயர்சிகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தமையின் முக்கியத்துவத்தைப்பதியும் ஆவணமாக இக்கட்டுரை அமைகின்ரது எனலாம். 

இந்த நூலில் தொகுப்பாசிரியர் புகைப்படங்களோடு வழங்கியிருக்கும் சில நூல்களைப் பற்றிய தகவல்கள் சுவாரசியமாக உள்ளன. பண்டிதர் எழுதிய "தென்னிந்திரர் தேச புத்த தர சாஷியக்காரர்கலில் ஒருவளாகிய பாரதமாதா ஔவையார் எனும் ஸ்ரீ அம்பிகையம்மன் வரலாறு", "அரிச்சந்திரன் பொய்கள்" என்பனவற்றோடு திரிசிரபுரம் ஆ.பெருமாள் பிள்ளை எழுதிய "ஆதி திராவிடர் வரலாறு" (1922) ஆகியவற்றைக்குறிப்பிட்டுச் சொல்லலாம். நான் தேடி மின்னாக்கம் செய்ய நினைக்கும் நூற்களின் பட்டியலில் இவையும் இப்போது அடங்கும். 

தென்னிந்திய ஆதிதிராவிட அமைப்புக்கள் பற்றிய செய்திகளும் "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற கருத்தியலின் ஆரம்பக்கால முயற்சிகளைப்பற்றிய தகவல்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 

கல்வி அறிவு ஒன்று மட்டுமே மனிதக்குலத்தை உயர்த்தக்கூடியது. அந்தக்கல்வி என்பது ஒரு நாட்டின் மக்களுக்கு எந்தப்பாரபட்சமும் இல்லாமல் வழங்கப்படவேண்டும் என்ற கருத்தினை அயோத்திதாசார் தனது காலத்தின் தேவையறிந்து வலியுறுத்தியிருக்கின்றார். அந்த வேண்டுகோள் இன்னமும் முழுமையாக நிறைவடையவில்லை என்பது கசப்பான உண்மையாகத்தான் உள்ளது. 

  • மக்களும் அவர்களின் நோக்கமும், என ஆராயும் போது,  
  • அறிவாளிகள் தாம் தங்கள் அறிவால் மக்களையும் நாட்டையும் வழி நடத்த வேண்டும், 
  • ஆட்சியிலுள்ளோர் ஆளுமையில் அறத்தைக் கடைபிடித்தலின் அவசியம், 
  • வணிகர் எத்தன்மைகளுடன் வணிகம் செய்யவேண்டும் 
  • வேளாளர் நிலத்தின் தன்மைக்கேற்ற விவசாயத்தை எவ்வாறு திட்டமிட்டுச் செயல்படுத்த வேண்டும் 
..என விவரிக்கும் பண்டிதரின் கருத்துக்களும், புராணக்கதைகள் என்பன மக்களை மூடர்களாக்காமல் மக்களின் அறிவு விருத்திக்கு உதவுவனவாக இருக்க வேண்டும் என விவரிக்கும் பகுதிகளும் ப்ளேட்டோவின் "தி ரிப்பப்ளிக்" நூலில் சாக்ரட்டீஸ் அடிமண்டீசுடன் பேசும் உரையாடல்களைத்தான் எனக்கு  நினைவுறுத்தின. 

சமூக சீர்திருத்தம் என்பது எல்லா மக்களுக்கும் சமதர்மமாக, எல்லோரும் குடிமக்களே என்ற பார்வையுடன், மக்களுக்கான நீதி குறையாது அமைந்திருக்க வேண்டியது அரசின் தலையாய கடமை . அதனை வலியுறுத்தும் பண்டிதரின் எழுத்துக்கள் முக்கியமானவை. அதிலும் குறிப்பாக இன்றைய நடைமுறையில் மிக மிகத் தேவை என்று நான் கருதுகிறேன். 

எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய பண்டிதரின் முயற்சியைச் சொல்லும் தொகுப்பாசிரியரின் கட்டுரை மிக அருமை. 

நூலில் இடம்பெற்றிருக்கும் தகவல்களுக்கு இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் ஒவ்வொன்றும் சிறப்பு சேர்க்கின்றன. நல்லதொரு முயற்சி. அயோத்திதாசர் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோர் அனைவருக்கும் மட்டுமல்லாது சமூக நீதி, சமூக நலன் என்ற வகையிலான ஆய்வுகளில் ஆர்வம் காட்டுவோருக்கும் இது நல்ல நூலாக அமைகின்றது. நல்லதொரு நூலை வாசித்த திருப்தியை இந்த நூல் வழங்கியிருக்கின்றது! 

நூல் கிடைக்குமிடம்;
கரிசல் பதிப்பகம்
வேளச்சேரி, சென்னை.
தொடர்புக்கு 04422451444
+919445376080
விலை ரூ 150/-

தீபாவளி ஒரு இந்தியப்பண்டிகை

தேமொழி


நீங்க செத்துப் போனதை ஏன் எல்லாரும் கொண்டாடுறாங்க?

நீங்க ஏதாவது தப்பு பண்ணுணீங்களா?  நீங்க நல்லவரா கெட்டவரா?

சொல்லுங்க ... நீங்க நல்லவரா கெட்டவரா?

என்று கற்பனையில் இப்படி யாரும் நரகாசுரனிடம்  இன்று  கேட்க முடியாது.

முதலில் நாம் அறிய வேண்டியது  நரகாசுரன் என்றொரு அசுரன் இருந்தானா என்பதாகத்தான் இருக்கவேண்டும்.

நரகாசுரன்  இறந்த நாளைத் தீபாவளி என்று விளக்கு ஏற்றி, புத்தாடை உடுத்தி,  பலகாரம் உண்டு, பட்டாசு வெடித்து மகிழும் அளவிற்கு நரகாசுரன் இறப்பு அப்படி என்ன  மகிழ்ச்சி தருவதா? அதுவும் அந்த அசுரனே  என் இறப்பு மக்களைத் துன்புறுத்தும் கொடியவர்  அனைவருக்கும் ஒரு  பாடமாக அமையட்டும் என்ற நோக்கில் அதனைப் பண்டிகையாகக்  கொண்டாடச் சொல்லி வேறு கேட்டுக் கொண்டானாம்.  அப்படிச் சொன்னவன் தீயவனாகவா இருக்க முடியும்?  இந்த நரகாசுரன் கதை நாமறிந்த இந்துமத புராணக்கதை.

உண்மையில் தீபாவளிப் பண்டிகையின் தோற்றத்தை  சமணசமயத்தில் காட்டுகிறார்கள் பண்டிகையின் தோற்றத்தை ஆராய்ந்த அறிஞர்கள்.  வாழ்வாங்கு வாழ்ந்து, மக்களின் நலனுக்காக அவர்களை நல்வழிப்படுத்தத் தனது இறுதிநாள் வரை அறிவுரைகள் கூறிய சமணசமயத்தின் கடைசி தீர்த்தங்கரர்  வர்த்தமான மகாவீரர் மறைந்த தினத்தை விளக்கேற்றி வைத்து,  அவரது அறிவுரையின் ஒளி தொடர்ந்து மக்களின் அறியாமை இருளை நீக்கி அவர்களை  வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சமணர்கள் வழிபடுநாளாகக் கருதிய நாள்தான்  தீபாவளி நன்னாள் என்பது இவர்கள் முடிவு (சமணமும் தமிழும்,  பக்கம்: 79-80, கல்வெட்டாராய்ச்சி  அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி).

பாவாபுரி நகரின் மன்னரது அரண்மனையில் இரவுமுழுவதும் அறிவுரை வழங்கினார் மகாவீரர். அது முடிவதற்கு இரவு நெடுநேரமாகிவிட, மக்கள் அனைவரும் அங்கேயே உறங்கினர். அவர்கள் விழித்தெழுந்து பார்த்த பொழுது  மகாவீரர் வீடு பேறு அடைந்திருந்தார் (அக்டோபர் 15,   527 பொ. ஆ. மு).  அறியாமை இருளை அகற்றும் அவரது அறிவுரை, தொடர்ந்து மக்களின் வாழ்வில் ஒளிவீசி நல்வழிப்படுத்த வேண்டும் என்பதன் அறிகுறியாக மன்னரும் மக்களும் முடிவெடுத்து ஒளிவிளக்குகளை ஏற்றிவைத்து வழிபடும் இம்மரபைத்  துவக்கினர். மகாவீரர் மறைந்தது அதிகாலை என்பதால் அந்நேரத்தில் வழிபடுதல் மரபு  என்பது சமணம் கூறும் வரலாறு.  ஆகவே தீபாவளி வழக்கில் வந்தது மகாவீரர் மறைந்த  பொ. ஆ. மு. 600 இல். இது வேத காலத்திற்கும் முற்பட்ட காலம்.  வேதங்களில் சமணதீர்த்தங்கரர்கள் பற்றிய குறிப்புகளும் உள்ளன.  தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை; தீப + ஆவலி = தீபாவலி; வரிசையாக ஒளிவிளக்கேற்றும் தீபாவலி விழா பின்னர் தீபாவளி என்று திரிந்தது என்று விளக்கப்படுகிறது.  சமண சமயத்தைச் சேர்ந்த மார்வாரிகள், குஜராத்திகள் இன்றைய நாளிலும் தீபாவளி கொண்டாடுவதும், அந்நாளைப் புதுக்கணக்கு துவக்கும் நாளாகக் கடைப்பிடிப்பதும் தீபாவளியின் சமண சமயப் பின்னணியைக் காட்டி நிற்கின்றது.  சமண சமயத்தார் பலவிதக் காரணங்களால் (விரும்பியோ/விரும்பாமலோ) இந்து மதத்தைத் தழுவ நேர்ந்த பொழுது, தங்களது மகாவீரர் மறைந்த நாளின் நினைவைப் போற்றும்  வகையில் விளக்குகளை ஏற்றிக் கொண்டாடும்  தீபாவளி  பழக்கத்தைக் கைவிடாது தொடர்ந்தனர் (தமிழர் நாகரிகமும் பண்பாடும், பக்கம்: 33-34, டாக்டர் மா.இராசமாணிக்கனார்).

புராணக் கதைகள் புனைந்துரைக்கப்பட்ட பிற்காலத்தில் தீபாவளிப்  பண்டிகைக்குத் தக்கவாறு  இந்துமதக் கதைகள் பல உருவாக்கப்பட்டன என்பதே அறிஞர் பலரும்  கூறுவது (அபிதான சிந்தாமணி, சைவப் பேரறிஞர் ஆ.சிங்காரவேலு முதலியார்).  இரண்யாட்சதன் பூமியைப் பாயாகச் சுருட்டியது (நம்பமுடிகிறதா?), கடலுக்கு அடியில் ஒளித்தது (அறிவுக்குப் பொருந்துகிறதா?),  கண்டு தனது  படைப்புத் தொழில் தடைப்பட்டதாக மிரண்ட  பிரம்மா திருமாலிடம் வேண்டுகிறார். திருமால்  பன்றி அவதாரம்  எடுத்து புவியை மீட்க, இதனால் பூமியும் பன்றியும்  கொண்ட உறவில் பிறந்த பவுமன் (இயற்கையில் நிகழக்கூடியதா?) என்பவன்  தாயைத் தவிர யாராலும் தான் கொல்லப்படக்கூடாது என்ற வரம் பெறுகிறான்.  அழிக்கப்படமுடியாது என்ற  ஆணவத்தில் (தாய்க்குலத்தைப்  பற்றிய தப்புக்கணக்கு போட்ட முதல் மனிதனாக இருக்கக்கூடும்) தேவர்களுக்கும் மக்களுக்கும்  அவன் துன்பம் தர, திருமால் கிருஷ்ணாவதாரம் எடுக்க, திருமகள் சத்யபாமாவாக அவரை மணக்க, இருவரும் 'நரக'ர்களை (மக்களை) துன்புறுத்திய 'அசுர'னுடன் போர் புரிகிறார்கள். சத்யபாமா தனது மகன் நரகாசுரனாக மாறிவிட்ட பவுமனைக் கொல்கிறார்  என்பது புராணக்கதை.

இதில் நரகாசுரனே தனது இறந்தநாளைக் கொண்டாடவேண்டும் என்று கேட்டதாக ஒரு வடிவமும், சத்யபாமா கேட்டுக் கொண்டதாக மற்றொரு வடிவமும் கொண்ட  கதைகளும்  உள்ளன.  அதுபோல இரண்யாட்சதன் கதைக்குப் பதிலாக  மது, கைடபர் என்ற அரக்கர்கள் வேதத்தை ஒளித்து வைத்து அதை மீட்க திருமால் பன்றி வடிவம் எடுத்ததாகவும் மற்றொரு வேறுபட்ட  கதையும்  உண்டு.  எனவே இக்கதைகளின் அடிப்படையில்  நரகாசுரன்  என்பவனின்  பிறப்பே கேள்விக்குரியதாக  இருக்கிறது.  எந்தவகையில் மாற்றி மாற்றிச் சொன்னாலும் இவை  அறிவுக்கும் அறிவியலுக்குப் புறம்பான கதைகள் என்பதில் ஐயமில்லை.

கதைகள்  உருவாகிய நோக்கம்  என்று இரண்டு காரணங்களை நாம் கணிக்க இயலும்:
1) அனைவரும் கொண்டாட விரும்பும் சமண தீபாவளியை இந்துமதத்திற்கு ஏற்றதாக மாற்ற வேண்டும் என்பது ஒரு நோக்கம்
2) அதேசமயம் நல்லவர்களுக்குத் தீங்கிழைப்பவர் யாராக இருப்பினும் அவர்கள்  அழிக்கப்படுவார்கள் என்ற சமயக்கருத்தை மக்களிடம் கொண்டு செல்வதும் மற்றொரு நோக்கம்.

நல்லவருக்கு நல்லதே  நடக்கும் என்ற இந்த  நீதியை   அனைத்துச் சமயங்களும் பாகுபாடின்றி வலியுறுத்துகிறது; மக்களை நல்வழிப்படுத்தச் சமயங்கள் போதிக்கும் ஒரு அடிப்படைக்  கொள்கை இது. உலகம் முழுவதும் எந்த ஒரு சமயமும் இதில் வேறுபடுவதில்லை.  உண்மை சமயக் கருத்தை மறந்துவிட்டு சமயவெறி பிடித்து அலைபவர்கள் இந்த  அடிப்படைக் கருத்துக்கு மாறாக நடப்பதும் வழமையே.  மேலும், தலைவன் அல்லது நாயகன்  ஒருவன் தோன்றி தீயவர்களை அழிப்பான் (the victory of the good over the evils) என்பதும், அவன் வரவை எதிர்பார்ப்பதும் உலக சமய புராணங்கள் யாவற்றிலும் (இன்றைய திரைப்படங்கள் உட்பட) காணப்படுவதும்  கூட.  இதனை உலக சமயங்களையும் புராணக்கதைகளையும் ஆராய்ந்த அறிஞர் ஜோஸப் கேம்பெல் (Joseph Campbell, 1904 – 1987) என்ற அமெரிக்க புராணவியலாளர் (American Mythologist) கூறியுள்ளார். உலக மதங்களையும் அவற்றின் புராணக் கதைகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்த ஜோஸப் கேம்பெல், தனது ஆய்வின் முடிவாக உலகில் உள்ள புராணக்கதைகள் அனைத்தும் ஒரே வகையான அடிப்படை நியதிகளையே கொண்டிருக்கின்றன எனக் கருதினார். இதனை இவர் “ஒற்றைப் புராணம்” (monomyth) என்ற கோட்பாடாக அறிமுகப்படுத்தினார். அதாவது உலகில் வழங்கி வரும் கதைகளனைத்தும் ஒரே அடிப்படையில் அமைந்தவை, அதன்படியே ஒவ்வொரு மனித வாழ்க்கையும் வாழ்ந்து காட்டப் படுகிறது என்பது அவர் முடிவு.

பண்டைய தமிழிலக்கியங்களில் தீபாவளிக்கான சான்றுகள் காட்ட இயலாது.  விஜயநகர ஆட்சி தமிழகத்தில் தொடங்கியதும் தீபாவளி கொண்டாடுவதும் தோன்றியது.   தீபாவளி என்பது புத்தாண்டுப் புதுக் கணக்கு விழாவாக விஜயநகர ஆட்சியில்  கொண்டாடப்பட்டதை நிக்கோலோ டிகாண்டி என்பார் குறிப்பிடுவதாக பேராசிரியர் அ.கி.பரந்தாமனார் (மதுரை நாயக்கர் வரலாறு, பக்கம் : 433-434) சுட்டிக்காட்டுகிறார். விஜயநகர ஆட்சிக் காலத்தில், மதுரையில் குடியேறிய விஜய நகரத்திலிருந்து வந்த சவுராஷ்டிரர்களும்   இதைப் புதுக் கணக்கு விழாவாகக் கொண்டாடி வந்திருக்கிறார்கள். மதுரை, தஞ்சை, செஞ்சி ஆகிய பகுதிகளை ஆண்ட  நாயக்கர்களால் தமிழகத்தில் பதினாறாம் நூற்றாண்டு காலவாக்கில்   புகுத்தப்பட்டு தீபாவளி, அந்நாட்கள் தொடங்கி  தென்னிந்திய  மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. நரகாசுரன் கதையை தீபாவளியுடன் இணைத்துக் கூறப்படுவது  தென்னிந்தியாவின் மரபு.

நரகாசுரன் கதை பார்ப்பனர்களால் இட்டுக்கட்டப்பட்டது என்பது தமிழ்க்கடல் மறைமலை அடிகள் அவர்களது கருத்து  (தமிழர் மதம்,   பக்கம் : 200-201).  பார்ப்பனர்கள் நடத்திய  உயிர்ப்பலி கொடுக்கப்பட்ட வேள்விகளை எதிர்த்த மன்னன் ஒருவனை, அவன்  மக்களை (பார்ப்பனர்களை) துன்புறுத்திய  அசுரன் என்று உருவகப்படுத்தி கண்ணனிடம் கூற,    கண்ணன் அவனை அழித்தான் என்று உருவாக்கப்பட்ட கதை என்பது மறைமலை அடிகள் தரும் விளக்கம்.  மக்கள் வாழுமிடங்களில் அத்துமீறி நுழைந்த ஆரியர் தங்களது சோம பானம் சுரா பானத்தை மக்களுக்கு ஊற்றிக்கொடுத்து அவர்களைப் போதைக்கு அடிமைப்படுத்தியதையும் பிறகு அவர்களது தானியங்களையும் உடைமைகளையும் கைப்பற்றியதைத் தட்டிக்கேட்ட அரசன் நரகாசுரனாகக் காட்டப்பட்டு மற்றொரு அரசனான கண்ணன் துணையுடன் கொல்லப்பட்டான் என்ற மற்றொரு கோணமும் உண்டு.  

ஆகவே, சார்புநிலை ஒழித்து செயல்களின் அடிப்படையில் எடை போட்டால்,  உயிர்க் கொலைகளைத் தடை செய்தவனோ, மக்களைப் போதைக்கு அடிமைப்படுத்தி அவர்களது உடைமைகளைச் சூழ்ச்சியால் கவர்ந்தவர்களைக் கண்டித்த செயற்கரிய செய்த நரகாசுரன்  தீயவனாக இருக்க வாய்ப்பில்லை.  ஆரியர் தம்மை  எதிர்த்தவரை 'அசுரர்' எனக் குறிப்பிடுவர். சுரா பானத்தைக் குடித்த ஆரியர்களை 'சுரர்கள்' என்றும், அதனைக் குடிக்காதவர் 'அசுரர்கள்' என்றும் கூறுவர். இவர்கள் கறுத்த நிறத்துடன், கோரைப்பற்களும், கொம்புகளும்  உடைய கொடியவர்களாகவும், சுரர்கள் நற்குணம் பொருந்திய தேவர்களாகக் கூறுவதும் புராணக்கதை வழக்கம்.   அசுரர் என்பவர் என்பவர் குறிப்பிட்ட எந்த இனத்தவர் என்பதை வரலாற்று அறிஞர்களால் கண்டறியப்பட இயலவில்லை என்றாலும், அவர்கள் ஆரியர்களின் பகைவர்கள் என்பது உறுதி.  திராவிடர்களும் ஆரியர்களின் பகைவர்களாகக் கருதப்பட்டவர்களே. இக்காரணத்தின் அடிப்படையில் தமிழர்கள் தீபாவளியைக் கொண்டாடுவது பொருத்தமற்றது என்று கா.சுப்பிரமணியன் பிள்ளை தனது  தமிழ் சமயம் (பக்கம் : 62)  என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

கிருஷ்ணாவதார  நரகாசுரன் அழிப்பு கதை  மட்டுமின்றி, கண்ணன்  கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து இந்திரனிடம் இருந்து ஆயர்குலத்தைக் காப்பாற்றியதையும் இணைத்துக் கூறும் தீபாவளிக்  கதையும் உண்டு. திருமாலின் பிற அவதாரக் கதைகளுடன் இணைப்பதும் வழக்கில் உள்ளது. மன்னன்  மாபலியைப் பாதாளத்திற்கு அனுப்பிய பிறகு அவர் ஒவ்வொரு ஆண்டும் தனது மக்களைக் காணவரும்  நாளாகவும் (மலையாள ஓணம் பண்டிகை) கூறப்படுகிறது. அது போல,  இராமாவதாரத்துடன் தொடர்புப்படுத்தி, இராவணனைக் கொன்று  சீதையை சிறைமீட்டு, தனது வனவாசம் முடிந்து இராமர் அயோத்தி திரும்பிய நாளை மக்கள்    மகிழ்ச்சியுடன்  விளக்கேற்றிக் கொண்டாடியதே தீபாவளிப் பண்டிகை என்றொரு மற்றொரு  இந்துமதத்தின் தீபாவளிக் கதையும் உண்டு. வட இந்தியாவில் வழக்கத்தில் உள்ள தீபாவளிக்  கதை இராமரின் கதை.  சக்தி  கேதாரகௌரி விரதத்தை  21 நாள் கடைப்பிடித்த பின்னர், சக்தியைச் சிவன் தனது உடலில் ஒரு பாதியாக ஏற்று அர்த்தனாரீஸ்வரர்  என்று மாறிய நாள்  தீபாவளி என்ற ஒரு கந்தபுராணக் கதையும் உண்டு.  அதுமட்டுமின்றி  சீக்கியர்களும் தங்களது குரு கோபிந்த் சிங் (Guru Har Gobind) விடுதலை பெற்ற நாளைக் கொண்டாட பொற்கோவில் வரை விளக்கேற்றி வழிபடும் வழக்கமும் உண்டு.  நேபாளத்தில் உள்ள மகாயான பௌத்தர்கள் உருவவழிபாடு செய்ய கிடைத்த உரிமையைத் திருமால், திருமகள் ஆகியோரை வழிபட்டும்;  மயன்மாரில் உள்ள தேரவாத பௌத்தர்கள் புத்தர் வீடுபேறு அடைந்ததை விளக்கேற்றிக் கொண்டாடும் வழக்கமாகவும் தீபாவளி  உள்ளது.  ஆனால் இப்பண்டிகைகளில் சிலவற்றில்  நாட்கள் வேறுபடுவதும், பண்டிகை  கொண்டாடும் நாட்களின் எண்ணிக்கை வேறுபடுவதும் வழக்கம்.

இந்தியத் துணைக்கண்டத்தின் சமண சமயத்தில் துவங்கி, இன்று அப்பகுதியில் வாழும் சமணர், இந்துமதத்தின் பல உட்பிரிவினரும், பௌத்தரும், சீக்கியரும் என்று  பற்பல சமயப்பின்னணி கொண்டவரும் குளிர் காலத் துவக்கத்தில் விளக்கேற்றிக் கொண்டாட விரும்பும் ஒரு  பண்டிகையாக தீபாவளி சமய எல்லைகளைக் கடந்த விழாவாக மாறிவிட்டிருக்கிறது.  உலகில் பல்வேறு நாடுகளில் குடிபெயர்ந்து வாழும் இந்தியர்களின் பலதலைமுறையினரும் கொண்டாட, இன்று  உலகில் பலநாடுகளில் கொண்டாடும் நிலையை எட்டி இந்தியப் பண்டிகை என்றால் தீபாவளி என்ற பொதுத்தன்மையையும் அடைந்துவிட்டது. பண்டிகையின்  பின்னணி எனக் கூறப்படும் காரணம் எதுவாக இருப்பினும்,  பல்வேறு பின்புலம் கொண்ட  இந்தியர்களையும் ஒருங்கிணைக்கும் தீபாவளிப் பண்டிகையை இந்துப் பண்டிகை என்பதைவிட இனி "இந்தியப்பண்டிகை" என்பதே சாலப் பொருந்தும்.  வலைத்தள அமெரிக்க நாட்காட்டிகளில் இடம்பெறும் ஒரே இந்தியப்பண்டிகை தீபாவளி.   தமிழகத்தில் இதைத் தவிர்த்து, விளக்கேற்றிக் கொண்டாட  கார்த்திகை பண்டிகையும் உண்டு.

விளக்கொளி ஏற்றிக் கொண்டாடும் விழாக்கள்(Festival of Lights) இந்தியாவிற்கு மட்டும்  உரியதன்று.  உலகில் பலநாடுகளில் விளக்குகள் ஏற்றிக் கொண்டாடும் விழாக்கள் வழக்கத்தில் உள்ளன.  இவ்விழாக்களுக்கிடையேயான  ஒற்றுமைகள் என்னவென்று  நோக்கினால்,  இவையாவும் புவிநடுக்கோட்டிற்கு வடக்கேயுள்ள நாடுகள் என்பதும், இப்பண்டிகைகள் கொண்டாடப்படுவது புவிநடுக்கோட்டிற்கு வடக்கேயுள்ளபகுதியின்  குளிர்காலத்துடன் (winter solstice - அதாவது நவம்பர்,டிசம்பர், ஜனவரி மாதங்களில்) தொடர்புடையவை என்பதுமாகும்.  இரவு நீண்டுவிடும் காலத்தில் விளக்கொளிகள் தரும் அழகிற்காகவும் இவை கொண்டாடப்பட்டிருக்கக் கூடும்.

உலகநாடுகளில் குளிர் காலத்தில் கொண்டாடப்படும் விளக்கொளி விழாக்கள் சில:
கிறிஸ்துமஸ் - உலகெங்கும் (Christmas)
யூதர்களின் ஹனூக்கா பண்டிகை (Jewish Festival of Lights Hanukkah)
குவான்சா - ஆஃப்ரிக்க அமெரிக்கர்கள் (Kwanzaa - African)
செயிண்ட் லூசியா நாள் - சுவீடன் (St. Lucia's Day - Sweden)
ஹாக்மானே - ஸ்காட்லாந்து  (Hogmanay - Scotland)
தசங்காடய்ங் - மயன்மார்  (The Tazaungdaing Festival - Myanmar)
செயிண்ட் மார்ட்டின் டே - ஹாலந்து (St. Martin's Day - Holland)
லோய் குர்தாங் - தாய்லாந்து (Loi Krathong - Thailand)
லியோன் - ஃபிரான்ஸ்(Lyon - France)
இவையாவும் ஏதோ ஒரு வகையில் தீமை ஒழிந்து நன்மை மேலோங்கிய நாளாகவோ, வெற்றித் திருநாளாகவோ, ஒரு புதிய தொடக்கமாகவோ, அறியாமை நீங்கும் நாளாகவோ கொண்டாடப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஒளியில் இருள் நீங்குவது அறியாமை நீங்கி அறிவு பெறுவதுடன் ஒப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாகவே உலகில் பண்டைய நாட்களில் இருந்து,  குளிர்காலத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளே அதிகம்.  இதற்குக் காரணம் வேளாண்மையை மேற்கொண்டு மக்கள் ஒரு குழுவாக குடியிருக்கத் தொடங்கியதற்கு தொடர்புப்படுத்தும் வழக்கமும் உள்ளது.  அறுவடை முடித்து உணவுப்பண்டங்கள் நிரம்பியிருக்கும்  காலம் என்பதாலும், தட்பவெட்பநிலை காரணமாகத் தொழிலில் சுணக்கம் ஏற்படும் நாட்களை இவ்வாறு கூடி உணவுண்டு பொழுதைக் கழிக்க   பண்டிகைகள் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அத்துடன் உளவியல் அடிப்படையில், குளிர் காலத்தில் பகல்பொழுது குறுகியும் இருண்டும் இருக்கும் நாட்களில் சிலர் மனச்சோர்வு நிலைக்கு   (Seasonal affective disorder -SAD) ஆட்படுவது  வழக்கம்.  அப்பொழுது தங்களை நிலைப்படுத்திக்கொள்ள அதிகம் உணவை நாடுவதும் வழக்கம்.  மனச்சோர்வுக்கு மருந்தாக உணவு உண்ணுவது, போதைப்பொருட்களை மூளை எவ்வாறு கையாள்கிறதோ அதே அடிப்படையிலேயே  இயங்கச் செய்கிறது என்று கூறுகிறது அறிவியல். பண்டிகை என்பது விதம் விதமாக சமைத்துண்ணும் வாய்ப்பை வழங்குகிறது என்பதால் குளிர் காலங்களில் அவற்றின் எண்ணிக்கை அதிகமிருப்பதாகக் கொள்ளலாம். 

Friday, October 28, 2016

கடலூர் கேப்பர்மலை ரகசியம்

-- சிங்கநெஞ்சம் சம்பந்தம்.

தெற்கே பொதிகை முதல் வடக்கே இமயம் வரை, எத்தனை எத்தனையே மலைகள் நம்நாட்டில் உள்ளன.  ஆனால் கடலூரில் உள்ள ஒரே மலை “கேப்பர் மலை“.  உண்மையில் கேப்பர் மலை, ஒரு மலையே அல்ல.

கடலூர் நகரம் முழுவதுமே கடற்கரை சமவெளியில், பத்துமீட்டர் உயரத்திற்குள்ளேயே அமைந்துள்ளது.  மேற்கே சற்று உயரமாக இருபது மீட்டருக்குள் உள்ள செம்மண் மேட்டுப் பகுதி மலை என்று வழங்கப்படுகிறது.  இந் மலை, கடலூர் துறைமுக நகருக்கு மேற்கேயும்,
திருவந்திபுரத்திற்குத் தெற்கேயும் அமைந்துள்ளது.

திருவந்திபுரத்தில் உள்ள ஹயக்ரீவர் மலை கேப்பர் மலையின் ஒரு பகுதியே, இந்த மலைக்குப் போகும் முன் சற்று கேப்பரைப் பற்றிப் பார்ப்போமா?


இந்த மலையைப் பற்றிய குறிப்பு 13.6.1783 –இல் ஆங்கிலேய-பிரெஞ்சு படைகளுக்கு நடைபெற்ற போரைக் குறிப்பிடுகின்ற வரை படத்தில் காணப்படுகிறது.



பிரெஞ்சு மொழியில் உள்ள இந்த வரைபடத்தில், இந்த மலை கூடலூர் குன்று என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த வரைபடத்தில் கடலூர் புதுநகர் காட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முற்காலத்தில் கேப்பர் மலை கூடலூர் குன்று என்றும் செம்புறாங்கல் மலை என்றும் அழைக்கப்பட்டது.  பின்னர் வண்டிப்பாளையம் மலை என்றும் அழைக்கப்பட்ட இந்த மலையின் மீது 1796-ம் ஆண்டு வண்டிப்பாளையத்திற்கு அருகே, ஆங்கிலேய படைத்தலைவர் பிரான்சிஸ் கேப்பர் என்பர் மாளிகை கட்டினார்.  அதைக் குறிக்கும் வகையில் இந்த மலை கேப்பர் மலை என்று அழைக்கப்பட்டது.  1815-ம் ஆண்டு இந்த மாளிகை அரசாங்கத்துக்குச் சொந்தமானது.  பின் சில மாற்றங்களுடன் அது கேப்பர் சிறை ஆக மாற்றப்பட்டது.  இந்த வளாகம் 300மீட்டர் நீளமும் 280 மீட்டர் அகலமும் உள்ளது.  ஆங்கிலேய அடக்குமுறை ஆட்சியின்போது புதுவை கடலூர் எல்லையில் கைது செய்யப்பட்ட பாரதியார் இந்தச் சிறையில்தான் அடைக்கப் பட்டிருந்தார்.

கேப்பர் மலையில் கருங்கற்களே கிடையாது.  மேலே சிவந்த நிறத்தில் செம்புறாங்கள் படிவங்களும், அதன் கீழே கடலூர் மணற்பாறைகளும் காணப்படுகின்றன.  கடலூர் துறைமுகத்தை அடுத்துள்ள கேப்பர் குவாரி அருகே (காரைக்காடு) அகழ்ந்தெடுக்கப்பட்டு இந்த செம்புறாங்கல் முன்பு சாலைகள் போடப் பயன்படுத்தப்பட்டது.  கடலூர் மணற்பாறைகளின் அடியில் இடையிடையே தரமான களிமண் கிடைக்கிறது.  பண்ருட்டிப் பகுதியிலும், வண்டிப்பாளையம் பகுதியிலும் இந்தக் களிமண் கொண்டு நேர்த்தியான பொம்மைகளும்  மண்கலங்களும் செய்யப்படுகின்றன.  விருத்தாசலத்தில் உள்ள பீங்கான் தொழிற்சாலையிலும் இந்தக் களிமண்ணே பயன் படுத்தப் படுகிறது. நெய்வேலியில் வெட்டி எடுக்கப்படும் பழுப்பு நிலக்கரி இந்தப் பாறை அடுக்குகளின் கீழ் கிடைக்கிறது.  கேப்பர் மலையின் அடிவாரத்தில் உள்ள ‘கரையேறவிட்ட குப்பத்தில்‘ கல்லாக மாறிய மரம், கடந்த நூற்றாண்டில் முற்பகுயில் கண்டறியப்பட்டதாகக் குறிப்புகள் உள்ளன.  திருவக்கரை பகுதியில் உள்ள கல்மரங்களும் கடலூர் மணற்பாறைகளிலேயே காணப்படுகின்றன.



கடலூர் மணற்பாறைகளில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால் அதன் மேல் உருவாகியுள்ள செம்புறாங்கல் மற்றும் செம்மண் படிவங்கள் சிவந்து காணப்படுகின்றன. செம்மண்டலம், செம்மேடு போன்ற ஊர்களின் பெயர்களே இதற்குச் சான்று ஆகும்.  கடலூருக்கு மேற்கே உள்ள பகுதிகளில் நிலக்கடலை சிறந்த முறையில் பயிர் செய்யப்படுகிறது.  பண்ருட்டிக்கும் நெய்வேலிக்கும் இடையே பரவியுள்ள செந்நிலப் பரப்பில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது.  இங்குப் பலா, முந்திரி போன்றவை செழிப்பாக விளைகின்றன.  இவை உலகப் புகழ் பெற்றவை.  இன்றும் பண்ருட்டி -வடலூர் சாலையின் இரு மருங்கும் பலாப்பழங்களும்
முந்திரியும் விற்கப் படுவதைக் காணலாம்.  முந்திரிப் பயிறு ஏற்றுமதி நம் நாட்டிற்கு அந்நிய செலாவணியைப் பெற்றுத் தருகிறது.

தகவல் – இயக்குநர் (ஓய்வு) இந்திய புவியில் ஆய்வு துறை.

நன்றி - மாலை மலர் (கடலூர்)  தீபாவளி மலர்  



 ________________________________________________________ 
 
Singanenjam
singanenjam@gmail.com
________________________________________________________