Monday, November 20, 2017

இமையோரத்தில்....



——  ருத்ரா இ பரமசிவன்.



"என்ன நடக்குது இங்கே?"
நாம் இந்த தூசிப்படலங்களில்
இமை விரிக்கிறோம்.
திடீரென்று கருட புராணம்
சிறகடித்துக்கொண்டு பறக்கிறது.
"கும்பி பாகம் கிருமி போஜனம்"
தூள் பறக்கிறது.
குற்றமும் தண்டனையும்
தராசுத்தட்டுகளில்
தட தடக்கிறது.
பாற்கடல் எனும் அரசியல் அமைப்பின்
ஷரத்துக்கள்
கடையப்படுகின்றன.
யார் அசுரர் ? யார் தேவர்?
எதுவும் தெரியவில்லை.
எதுவும் தேறவில்லை.
ஜனநாயகச்  சிவனின்
தொண்டைக்குள் நஞ்சு!
வெளியில் சில அசுரர்கள்
தேவர்களின் மடியில் சில அசுரர்கள்.
கொள்ளை உறிஞ்சலில்
கார்ப்பரேட்டுகளின் கோரைப்பற்கள்
இவர்களின்  எல்லா சந்நிதானங்களிலும்
தரிசனம் தருகின்றன.
அமுத குடம் எனும் ஓட்டுப்பெட்டிக்குள்
இன்னும்
அலையடித்துக்கொண்டிருக்கிறது
பாற்கடல் எனும் போலியான
ஒரு நச்சுக்கடல்.
சிவன் என்ன? அரி என்ன?
ஊழல் சிந்தனையில்
உருண்டு திரண்டு
வரும்
அந்த பொருளாதாரப்பேயாசைகள்
எந்தக்குரல் வளையையும்
நெறிக்காமல் விடுவதில்லை.
சாதி மதங்களின்
சாக்காட்டு சாஸ்திரங்கள்
"ஓட்டு"  சாஸ்திரங்களை
ஓட ஓட விரட்டுகின்றன.
அரசியல் சாசனத்தில்
தனக்கு வேண்டியவாறு
பொந்துகள் ஏற்படுத்திக்கொண்டு
பொல்லாத சாஸ்திரங்கள்
மகுடம் சூட்டி வலம் வருகின்றன.
பணத்தை மட்டும் கருப்பு என்று சொல்லி
அதே கருப்புப்பொருளாதாரத்தை
வெள்ளையடித்து
வெறும் நகப்பூச்சு செய்தாலும்
அந்த கூர்நகங்களில்
சொட்டும் ரத்தம் எங்கும் தெரிகிறது.
தூங்கிக்கிடப்பவர்களே ..இந்த
தூசிக்கடல் தாண்டி
எதிர் நீச்சல் போடுங்கள்.
உங்கள் விடியலுக்கு
இன்னும் எத்தனை எத்தனை
நூற்றாண்டுகள்  வேண்டுமோ  தெரியவில்லை?
திடீரென்று சோம்பல் முறித்து
படுத்துக்கிடக்கும்
மூடத்தனத்தின் இந்த பழம்பாயை
சுருட்டியெறியுங்கள்!
அதோ இமையோரத்தில்
வருடும்
ஒரு புத்தம் புதிய‌
பூங்காலையின் ஒளிக்கீற்றுகள்!



________________________________________________________________________
தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)