Thursday, November 26, 2020

கல் முகவடிவங்கள் கண்டுபிடிப்பு - துருக்கி

சுபாஷிணி

நீண்டகால மனித குல நாகரித்தின் சான்றுகளைக் கொண்டிருக்கும் நாடுகளில் துருக்கி சிறப்பு முக்கியத்துவம் பெரும் ஒரு நாடு. பண்டைய தொல் நகரமான Stratonikeia, Muğla பகுதியில் தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழாய்வுகளில் இங்கு கல்முகவடிவங்கள் கிடைத்திருக்கின்றன. 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த நகரில் ஏறக்குறைய 2200 ஆண்டுகள் பழமை என அறியப்படுகின்ற இந்த கல்முகவடிவங்கள் பண்டைய தெய்வ வடிவங்கள், விலங்குகள் ஆகியவற்றை சார்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளன.



இப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட தேடுதலில் இதுவரை இத்தகைய 43 கல்முக வடிவங்கள் கிடைத்துள்ளன.

பமுக்காலே பல்கலைக்கழகத்தின் முயற்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்டுவரும் இந்த ஆய்வு ஒரு திறந்தவெளி அரங்கப் பகுதியில் (Amphitheatre) நிகழ்த்தப்பட்டு வருகின்றது. இந்த முகமூடிகள் இக்கலைக்கூடத்தின் வாயில் பகுதி தொடங்கி அமைக்கப்பட வகையில் உள்ளன. மிகப் பிரமாண்டமான முறையில் இந்த கல்முகவடிவங்கள் திகழ்கின்றன. முழுமையான செய்தி: https://www.dailysabah.com/arts/mythological-masks-unearthed-in-turkeys-ancient-city-of-stratonikeia/news?fbclid=IwAR3He9Zngri58Kd69XoVL4JOENzcEsKnJ5Tbjbl75e-4Cro22OjhNPb2kRE




Sunday, November 22, 2020

பாரி நிலையம் செல்லப்பன்

பாரி நிலையம் செல்லப்பன் 

-- கல்பனாதாசன்



தமிழ் நூல் பதிப்பாளர்களுள் தலை சிறந்தவர்கள் என ஒரு பட்டியல் எடுத்தால் அதில் சக்தி கோவிந்தன் பெயர் நிச்சயம் முதல் வரிசையில் நிற்கும்.  சக்தி கோவிந்தன்,  பாரி நிலையம் செல்லப்பன், முல்லை முத்தையா மூவருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. மூவரும் பர்மாவில் வாழ்ந்து தாயகம் மீண்ட தமிழர்கள். வை கோவிந்தனும் முல்லை முத்தையாவும் செல்லப்பனுக்கு இன்னொரு வகையில் முன்னோடிகள். தமிழ் நூல்கள் பதிப்பை இந்தியத் தரத்துக்கு உயர்த்திய அவர்கள் செல்லப்பனையும் தமது துறைக்கு ஈர்த்து விட்டார்கள்.

1920 இல் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் அடைக்கப்ப செட்டியார் - அழகம்மை ஆச்சி இணையருக்கு மூத்த மகனாகப் பிறந்த செல்லப்பன் 10 ஆம் வயதிலேயே பர்மாவில் குடியேறி விட்டார். அங்கே அவரது தந்தையார் வணிகம் செய்து கொண்டிருந்தார். தாம் படித்த  ' கம்பை தன வைசியர் கல்வி க் கழக'த்தில் தமிழ்ப்பற்றும் தேசியக் கண்ணோட்டமும் புகட்டப்பட்டார். பர்மாவில் வசித்த காலத்தில் தமிழோடு ஆங்கிலம், இந்தி, பர்மிய மொழி எனப் பன்மொழியில் தேர்ச்சி பெற்றார். 

விடுதலைப் போராட்ட ச் செம்மல்களை நேரில் தரிசிக்கும் ஆர்வத்தில் 1939 இல் செல்லப்பன், காந்தி அண்ணாமலை என்னும் நண்பருடன் பர்மாவிலிருந்து கிளம்பி இந்தியா வந்தார். வார்தாவில் காந்தி, அலகாபாத்தில் நேரு, சாந்திநிகேதனில் தாகூர், கல்கத்தாவில் சுபாஷ் சந்திரபோஸ் என எல்லோரையும் சந்தித்து ஆட்டோகிராஃப் பெற்றுக்கொண்டு மீண்டும் இரங்கூன் வழி பர்மா திரும்பினார். தமிழில் கையெழுத்துப் போட்ட காந்தியார் எழுதிய வாசகம் -" நீரில் எழுத்தாகும் யாக்கை. "

பின்னர், உள் நாட்டு அரசியல் சூழலால் அகதியாக  43 பேர்களுடன் இந்தியா திரும்புமுன் தாம் நடத்திவந்த புத்தகக் கடையை அங்கிருந்த பெண்மணியிடம் ஒப்படைத்துவிட்டு வெறுங்கையுடன் வர நேர்ந்தது. 43 பேரில்  கால் நடையாகவும்  பல்வேறு வாகனங்கள் மூலமும் மாறி மாறி அல்லலுற்று உணவு, உறையுள் தொடர்பான இன்னல்கள் அனுபவித்து ஒருவழியாகத் தாம் ஒருவர் மட்டுமே வெற்றிகரமாக இம்மண்ணை மிதிக்கும் பேறு பெற்றார் என்றும் அன்னார் சரிதை பதிவாகியுள்ளது. 

முல்லை முத்தையாவே செல்லப்பனைப் பதிப்பகத் துறையில் ஆற்றுப்படுத்தியவர். இருவரும் முன்பே பர்மாவில் நண்பர்கள். மண்ணடியில் காவலர் குடியிருப்புக்குப் பக்கம் ஒரு மாடிக் கட்டடத்தில் முதல் தளத்தில் இருவர் பதிப்பகங்களும் இயங்கின. முல்லைக்கும் பாரிக்கும் பெயர்ப் பொருத்தம் உண்டல்லவா. முல்லைப் பதிப்பகம், பாரி நிலையம் இரண்டும் இயல்பிலேயே நட்புக் கொண்டாடின. 

சுத்தானந்த பாரதி எழுத்துகளால் கவரப்பட்டிருந்த செல்லப்பன் பதிப்பகத்துறைக்கு  வந்ததில் வியப்பில்லை. தமிழ்ப் புத்தகாலயம்  கண  முத்தையாவுடன் இணைந்து பாரி புத்தகப் பண்ணை என்னும் கூட்டு நிறுவனத்தையும் உருவாக்கினார். அகிலன், ராஜம் கிருஷ்ணன் ஆகியோர் நூல்களை கண முத்தையா பதிப்பிக்க இவர் விற்றுக்கொடுப்பார். பிறகு தாமே பதிப்புப் பணியில் இறங்கினார். மு வரதராசனின் கள்ளோ காவியமோ தான் விற்பனை உரிமை பெற்ற முதல் நூல். நேதாஜி சொற்பொழிவுகள் அடங்கிய " டில்லியை நோக்கி " மொழியாக்க நூலையும் குறிப்பிட அவர் தவறுவதில்லை. 

தொடர்ந்து மு வ நூல்கள் அவரிடமிருந்து வரவே மு வ என்றால் பாரி, பாரி என்றால் மு வ என இருவரும் ஈருடல் ஓருயிர் ஆயினர். மு வ தமது நூல்களைத் தாமே அச்சிட்டு க் கொடுக்க செல்லப்பன் விற்பனை செய்து தருவார் என்பது ஏற்பாடு. நல்லி குப்புசாமி செட்டியார் தமது கட்டுரையில் குறிப்பிட்டுள்ள தகவல் இது - ' நெசவுத்தொழில் சார்ந்த பட்டுச்செல்வம் என்னும் 300 பக்க நூல் பாரி நிலையப் பதிப்பு (ஆசிரியர் கே எஸ் லட்சுமணன்) ரூ 5 விலையில் எனக்குக் கிடைத்தது. எங்கள் நட்பும் அன்றே முகிழ்த்தது. அந்த நூல் அரிய தகவல் களஞ்சியம். '

ஒரு முறை நூல்கள் வாங்கப் பாரி வந்த வேளை முன்பே மு வ மாடியில் பேசி க் கொண்டிருக்கும் தகவல் கிடைத்து அண்ணா படியேறி வந்து மு வ வுடன் அளவளாவ மூவரும் நெருக்கம் கொண்டனர். இதுவும் செல்லப்பனுக்கு வாய்த்த பேறுதான். அடுத்து அண்ணாவின் தம்பிக்கு கடிதங்கள் ( 21 தொகுதிகள் ) பாரி மூலம் நூல்வடிவம் கண்டன. பின்னாளில் தி மு க வரலாறு, மாநிலச் சுயாட்சி போன்ற நூல்களும் பாரி வெளியீடாயின. பரிமளம் தொகுத்த 'அண்ணா தன் வரலாறு ' நூலை நான் பாரியில் தான் வாங்கினேன். அண்ணாவின் கட்டுரைகள் வாயிலாகவே அவர் வரலாறு நிரல்பட அ ந் நூலில் வர்ணிக்கப் பட்டிருக்கும். அது ஒரு புதிய பாணி. 

பாரதி தாசன் நூல்களை முதலில் குஞ்சிதம் குருசாமி பிறகு திருச்சி ராமச்சந்திரபுரம் செந்தமிழ் நிலையம் வெளியிட்டார்கள். மூன்றாம் பதிப்பாளர் செல்லப்பனே. 'அழகின் சிரிப்பு ' தான் செல்லப்பன் மூலம் வெளிவந்த முதல் நூல். கவிஞர் பெற்ற தொகை ரூ 500. அடுத்துப் படிப்படியாக மேலும் 9 நூல்கள் தந்து ரூ 5000 பெற்றுக்கொண்டு புதுச்சேரி பெருமாள் கோவில் தெரு இல்லத்தை வாங்கினார் எனப் புதிய புத்தகம் பேசுது ( சூரிய சந்திரன் சந்திப்பு ) நேர்காணலில் குறிப்பு உண்டு. குறிஞ்சித் திட்டு, மணிமேகலை வெண்பா, கண்ணகி புரட்சிக் காப்பியம் வரை அனைத்தும் பாரி நிலைய வெளியீடுகள். பிறகு பூம்புகார் பிரசுரம் 1970 களில் மலிவுப் பதிப்பு கொண்டுவந்தது. 

ஞான பீடப் பரிசுக்குப் பாரதி தாசன் பெயர் பரிந்துரை செய்யப்படுகிறது.  தேர்வுக் குழுவில் தெ பொ மீனாட்சி சுந்தரம், சா கணேசன், பெ. தூரன் உறுப்பினர்கள். 'புதிய பார்வை'க்கு அளித்த பேட்டியில்  (ராம்குமார் சந்திப்பு) செல்லப்பன் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். ஈரோடு தமிழன்பனிடம் கேட்டதில் கூடுதல் விளக்கம் கிடைத்தது. "ஞானபீடப்பரிசு பற்றிப் பாரி செல்லப்பன்,என்னுடைய நெஞ்சின்நிழல் என்னும் நாவலை வெளியிடப் பாரதிதாசன் என்னை அழைத்துக்கொண்டு போனபோதுதான் முதன்முதலாகக்கூறினார்.

பாரி நிலையத்தாரிடம் யார் தம்மைப் பரிந்துரைத்தது என்பதை மட்டுமே பாரதிதாசன் கேட்டார். அவரோடு அவர் இல்லம் திரும்பும்வழியில் என்னிடம் சொன்னார்.  " ஒரு லட்சம் தானே, வரட்டுமே. வீட்டுக்கு அரிசியோ பருப்போ வாங்கிப்  போடுவேன் என்றா நினைக்கிறாய்? பெரிய அச்சுயந்திரம் வாங்கிப் போட்டு உன்புத்தகம் மற்றவன் புத்தகங்களையெல்லாம் அச்சடிச்சுப் போட்டால் தமிழ்ப்பகையே அழிந்துபோகும்" என்றார். இதுகுறித்து நான் எழுதியுள்ள பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள் என்னும் நூலில் விரிவாக எழுதியுள்ளேன். 

"இடைப்பட்ட காலத்தில் புரட்சிக்கவிஞர் இறந்துவிடவே பரிசு கிடைக்காமல் போய்விட்டது. ஞானபீட விதிமுறைகள் படி பரிசு படைப்பாளியின் மரணத்துக்குப் பின் வழங்கப்படுவதில்லை. ஆனால் பாரதிதாசன் நூல்களை வெளியிட்டமைக்காக, பாரி நிலையத்துக்கு தமிழக அரசு ஒரு லட்சம் அளித்துக் கௌரவம் செய்தது. கவிஞர் மறைவுக்குப்பின் சாகித்ய அகாடமி பரிசு பிசிராந்தையார் என்னும் நாடக நூலுக்காக வழங்கப்பட்டது. கவிஞரின் துணைவியார் பழனியம்மாள் பெற்றுக்கொண்டார்.

செல்லப்பனின் மகன் அமர்ஜோதி மேலும் சில  தகவல்கள் சொன்னார்.  பாரதிதாசன் 1964 இல் சென்னை பொதுமருத்துவ மனையில் மாரடைப்பால் மரணம் அடைந்த வேளை அன்னார் திருவுடலை புதுச்சேரி இல்லத்துக்கு எடுத்துச் செல்லவும் அடக்கம் செய்யவும் செல்லப்பன் ரூ 3000 அளித்து உதவினார். கவிஞரின் மகன் மன்னர்மன்னன் வசம் தொகை தரப்பட்டது. அண்ணா 1962 இல் நாடாளுமன்றத் தேர்தலில் நின்றபோதும் செல்லப்பன் நிதியுதவி செய்துள்ளார். அண்ணாவின் மகன் டாக்டர் பரிமளம் செல்லப்பனின் நெருங்கிய நண்பர். 

800 நூல்களுக்கும் மேலாக வெளியிட்ட பாரி நிலையம் அண்ணாவின் 'தம்பிக்கு கடிதங்கள்' பிரும்மாண்டமான மெரினா கடற்கரை விழாவையும், அமர்க்களமே இல்லாமல் பத்தே பேர்களுடன் (டாக்டர் ராதாகிருஷ்ணன் உட்பட) நடைபெற்ற ராஜாஜியின் சக்ரவர்த்தி திருமகன்  வெளியீட்டு விழாவையும் நேர்காணல்களில் தவறாமல்  நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்வார். ராஜாஜியும் கி ஆ பெ விசுவ நாதமும் தமக்கு ராயல்டி முக்கியமில்லை, நூல்கள் மலிவு விலையில் எல்லோருக்கும் சேரவேண்டும் என்றுதான் வலியுறுத்துவார்களாம்.! 

மீ ப சோமசுந்தரம், ஆசைத்தம்பி, தென்னரசு, புலவர் குழந்தை, வ சுப மாணிக்கம், அ கி பரந்தாமனார், அ மு பரமசிவானந்தம், தனி நாயக அடிகள் எனப் பல்வேறு எழுத்தாளர்கள்  நூல்கள், புலியூர்க்கேசிகன் உரைகள் ஆகியவற்றை விட்டுவிடாமல் சேர்த்து க் கொள்வார். அவரது பதிப்பாசிரியர் குழுவில் இடம் பெற்ற மே வீ வேணுகோபாலப் பிள்ளை, புலியூர்க்கேசிகன், சண்முகம் பிள்ளை ஆகியோர் பங்களிப்பால் பிழைகளற்ற மொழிச் செம்மையை நூல்களில் கொண்டுவர முடிந்தது எனப் பெருமையுடன் குறிப்பிடுவார். 

'பதிப்பகப் பாரி' என நல்லி குப்புசாமி செட்டியாரால் வர்ணிக்கப்பட்ட செல்லப்பன் பல சொல் சொல்லாமல் சில சொல் சொல்லும் சிக்கனக்காரர். தாமுண்டு தமது பணியுண்டு என்று கருமமே கண்ணாயிருப்பவர். அடிக்கடி வரும் வாடிக்கையாளர்கள் மட்டும் அவரிடம் உரிமை பாராட்டலாம். ஸ்டாக் ரூம் சென்று நூல்களை த் தேடவும் அலசவும் அவர்களுக்குச் சலுகை தருவார். பேச்சுக் கொடுத்தால் தயங்காமல் அவர்கள் கேட்கும் ஐய வினாக்களுக்கு உரிய பதில் தருவார். அரிதாக அவரே சில நூல்கள் பரிந்துரை செய்வதும் உண்டு. நிறைய விஷயம் தெளிந்தவர். அறிஞர்கள் கவிஞர்கள் ஆய்வாளர்களைப் படித்தவர். 

வெறும் நூற்படிப்போடு நில்லாமல் மனிதர்களையும் படிப்பவர். ஆனாலும் ஒருவகை அறிதுயிலில் ஆழ்பவர். அதாவது மௌனம் காப்பவர். இன்னொரு முக்கியமான செய்தி - நூலாசிரியர்கள், பிற பதிப்பாளர்களுக்குத் தரவேண்டிய ராயல்டியைப் பாக்கி வைக்காமல், தட்டி க் கழிக்காமல் காலாகாலத்தில் கணக்குத் தீர்ப்பவர். 

தமிழகத்தின் தலைசிறந்த ஆளுமைகள் ராஜாஜி, அண்ணா, பாரதிதாசன், மு வரதராசன் ஆகியோர்தம் ஆஸ்தான பதிப்பாளர் அப்பெரியோர்தம் அன்புக்கும் நட்புக்கும் உரிய பண்பாளர் பாரி நிலையம் செல்லப்பன் நூற்றாண்டில் அப்பெருமகனை நினைவு கூர்வோம். அன்னார் வழிப் பல்கிப் பெருகிய புதிய தமிழ், எளிய தமிழ், இனிய தமிழ் உலகெங்கிலும் உள்ள தமிழர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் செழித்து நீடித்து நிலைப்பதாக என வாழ்த்தி மகிழ்வோம். 


நன்றி - தினமணி தீபாவளி மலர், 2020 





Thursday, November 19, 2020

நாயக்கர் காலத்து கல்திட்டை மற்றும் நடுகற்கள்

பெருங்கற்கால மரபின் எச்சமாக நாயக்கர் காலத்தில் கல்திட்டை மற்றும் நடுகற்கள் 

மதுரை கள்ளந்திரியில் கல்திட்டை, திருமங்கலம் வடகரை புதுாரில் 400 ஆண்டுகளுக்கு முந்தைய நடுகல்லை மதுரை கோயில் கட்டட கலை, சிற்பத்துறை ஆய்வாளர் தேவி, தொல்லியல் ஆய்வாளர் சசிகலா, வரலாற்று ஆய்வாளர் அறிவுச்செல்வம் கண்டுபிடித்தனர்.

அவர்கள் கூறியதாவது: கள்ளந்திரி கால்வாய் அருகே கிழக்கு பார்த்தபடி 3 பக்கங்களும் 6 குத்து கற்கள் நட்டு மேலே பலகை கல் மூடிய கல்திட்டை உள்ளது. உள்ளே சிறு கல் ஊன்றி மாலை அம்மன் கோயில் என அப்பகுதி மக்கள் வழிபடுகிறார்கள். அருகில் 20க்கும் மேற்பட்ட தனி கற்களில் இறந்தவர் பிறப்பு, இறப்பு தேதி பொறிக்கப்பட்டுள்ளது.பெருங்கற்கால மரபின் எச்சமாகப் பல கல்திட்டைகள் நவீனக் காலத்தில் உருவாக்கியதை இங்கு காணலாம்.

b.jpg
c.jpg
a.jpg

கொங்கு நாட்டிலிருந்து விஜய நகர நாயக்கர் காலத்தில் பாண்டிய மண்டலம் வந்த ஒரு இனத்தினர் இங்கும் இறப்பு சடங்கு பின்பற்றியதை இக் கல்திட்டைகள் உணர்த்துகின்றன. திருமங்கலம் வடகரை புதுாரில் சிறு பலகை கல்லில் இரு ஆண் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. வலதுபுறம் இருப்பவர் இடது கையில் வளரி, வலது கையில் வாள், தலையில் கொண்டை வடிவ தலையணி அணிந்து அரை ஆடையுடன் இயக்க நிலையில் உள்ளார்.

இடதுபுறம் இருப்பவர் உயரம் குறைந்து, நீண்ட காது, அரை ஆடையுடன் வலது கையில் வாள், இடது கையில் குடுவை வைத்துள்ளார். தலைக்குப் பக்கவாட்டில் சந்திரன், சூரியன், பூ அமைப்பு உள்ளது.இவர்கள் 400 ஆண்டுகளுக்கு முன் வடகரை ஊரை உருவாக்கிய சோழ மூக்கன், நல்ல மூக்கன் என்ற சகோதரர்கள். இவர்களது வாரிசுகள் இவர்களுக்கு நடுகல் எடுத்து, இன்றும் விழா எடுப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர் என்றனர்.


தெரிவு: முனைவர். ப. தேவி அறிவு செல்வம்
நன்றி: தினமலர் - நவம்பர்  19, 2020 (https://www.dinamalar.com/news_detail.asp?id=2654963)
---

Wednesday, November 18, 2020

ஆலகிராமத்தின் பண்டைக்காலச் சிற்பங்கள்

ஆலகிராமத்தின் பண்டைக்காலச் சிற்பங்கள் 

-- ரமேஷ் தண்டபாணி 


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் ஆலகிராமம் பல்லவர்கால பல்வேறு வரலாற்றுத் தடயங்களை தன்னகத்தே கொண்ட ஊர்.  இவ்வூரிலுள்ள எம கண்டேஸ்வரர் கோயில்உள்ள சதுர வடிவம் கொண்ட ஆவுடையார், பலகைகளில் செதுக்கப்பட்ட விஷ்ணு, எழுத்து பொறிப்பு உள்ள கிபி 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழகத்தின் தொன்மையான விநாயகர், சண்டிகேசுவரர், விஷ்ணு ஆகிய சிற்பங்கள் இதனை உறுதி செய்கிறது.

a.jpg

b.jpg

c.jpg

மேலும் பிடாரி கோயில் உள்ள மிகத் தொன்மையான மூத்த தேவி பலகைகளில் பெரிய அளவில் செதுக்கப்பட்ட அய்யனார் குதிரை நாயுடன், இரு பெண்கள் படையல் செய்வது போன்ற அமைப்பு  ஊர் அய்யனார் இவையாவும் மன்னர் காலத்தில் இவ்வூர் சிறப்பு பெற்றதை நமக்கு எடுத்துக் காட்டுகிறது இங்குள்ள சிற்பங்கள் பழமைக்கு மட்டுமல்லாது சிறந்த வேலைப்பாடு இருக்கும் எடுத்துக்காட்டாய் விளங்குபவை இவற்றைப் பார்வையிடுவது பராமரிப்பது பாதுகாப்பது நமது தலையாய கடமையாகும்.

(குறிப்பு: தொல்லியல் ஆர்வலர் சேலம் மோகன் ஐயா, தமிழ் ஆசிரியர் திரு கமலக்கண்ணன், மருத்துவர் காளிதாஸ். மருத்துவர் நிவாஸ்,  மருத்துவர் பாபு, நண்பர் ஜோதி பிரகாஷ் ஆகியோர் சேர்ந்து குழுவிற்கு மனமார்ந்த நன்றி.)
---






Thursday, November 12, 2020

பெருந்தொற்றுகளின் காலம்: புதுச்சேரியின் அனுபவங்கள்!

 பெருந்தொற்றுகளின் காலம்: புதுச்சேரியின் அனுபவங்கள்!


- எம்.பி.இராமன்


கொள்ளைநோய்களின் தாக்கத்தால் 18-ம் நூற்றாண்டின் பின்பாதியிலும், 19-ம் நூற்றாண்டிலும் தமிழக மக்கள் கொத்துக் கொத்தாக வீழ்ந்தனர். “போரைக் காட்டிலும் நோயால் பலிகள் அதிகம்” என்கிறார் ஆனந்தரங்கப் பிள்ளை. அவரின் நாட்குறிப்புப் பதிவுகளில், அந்தக் காலத்து மக்கள் பெருந்தொற்றை எதிர்கொண்ட விதத்தை விரிவாகப் பதிவிட்டுள்ளார்.

நோய்க்கான காரணமும், அதற்கான தீர்வும் தெரியாததால், படித்தவர்கள்கூட அச்சத்திலும் பீதியிலும் உறைந்துபோனார்கள். பாமர மக்கள் இது தெய்வக் குற்றம் என்று நம்பினர். அம்மன் தனது கோபத்தால்தான் காலராவையும், அம்மை நோயையும் அனுப்பி மக்களைத் தண்டிக்கிறாள் என்று மனதார நம்பினார்கள். எனவே, அந்த நம்பிக்கை ஆழமாக ஊறி, ஊரெங்கும் பரவியது. அதுவே பல்வேறு வதந்திகளாகவும் உருவெடுத்து மக்களை மருட்டியது.

விதவிதமான வதந்திகள்:
1756 டிசம்பர் வாக்கில் தமிழகப் பகுதிகளில் கடும் பஞ்சமும், வைசூரி என்னும் பெரியம்மை, பிளேக், கடும் காய்ச்சல் ஆகிய நோய்களும் கடுமையாகத் தாக்கின. போதுமான ஊட்டமின்றிப் பலவீனமாயிருந்த மக்கள், கொள்ளைநோய்களுக்கு எளிதில் இரையாகினர். ஆர்க்காடு, வேலூர், லால்பேட்டை வட்டாரங்களில் மட்டுமே 10-15 ஆயிரம் பேர் பலியாயினர். ஆர்க்காட்டில் முகாமிட்டிருந்த ஆங்கிலேயரில் பாதிப் பேரும், நவாப் குடும்பத்தினரில் சிலரும் மரணமடைந்தனர்.

ஆர்க்காட்டில் கடம்பை அம்மன் கனவில் தோன்றி ‘நான் அனைவரையும் கொன்றுபோடவே வந்திருக்கிறேன், நான் போக வேண்டுமானால், ஒரு யானை, 10 குதிரை, 100 ஆட்டுக்கிடா, 50 எருமைக்கிடா பலி கொடுக்க வேண்டும். அத்துடன் மது, மாமிசம் 100 பானை சோற்றுப் படையல் காணிக்கையும் வேண்டும்’ என்று கூறியதாகச் செய்திவந்தது. மற்றொரு அம்மன், குதிரை, யானைகளுடன், தீவட்டி ஏந்திய ஆட்கள் புடைசூழ, மேளதாளத்துடன் மைசூரிலிருந்து புறப்பட்டு, கடலில் குளியல் போடுவதற்காக வந்துகொண்டிருப்பதாகவும், அது வரும் வழியில் திருவண்ணாமலையில் தங்கியிருப்பதாகவும் இன்னொரு வதந்தி பரவியது. முதல் வதந்தியைவிட இது சற்றுக் கொடூரமாயிருந்தது. பகல் நேரத்தில் அம்மன், மரக்கிளைகளில் வௌவால்போல் தொங்கிக்கொண்டு, மனிதர்களைக் கொன்று போடுவதாகவும், இரவில் வெட்டவெளிகளில் திரிவதாகவும், அப்போது உள்ளூர் தேவதைகள், ‘நாங்கள் இங்கு காவலிருக்கும்போது நீ எப்படி இங்கு வரலாம்’ என்று சண்டை போடுவதாகவும், விடிந்து பார்த்தால், எங்கு பார்த்தாலும் ரத்தமாய் சிந்திக் கிடக்கிறது என்றும், புளியமரத்தில் யானை, குதிரைகளின் தலைகள் தொங்குகின்றன என்றும் புரளிகள் கிளம்பி நோயைவிடவும் வேகமாகப் பரவின.

நாளுக்கு நாள் பிணங்கள் விழுந்துகொண்டே இருந்தன. ஆர்க்காட்டுப் பகுதியில் சாவு எண்ணிக்கை 15,000-க்கும் மேல் எகிறிக்கொண்டிருந்தது. அச்சத்தில் உறைந்துபோன மக்கள், ஊரைவிட்டு வெளியேறத் தொடங்கினார்கள். முதலில் இந்துக்களின் ‘தெய்வக் குற்றம்’ என்ற கருதுகோளை நம்ப மறுத்த வெள்ளையர்களையும் முஸ்லிம்களையும்கூட அச்சம் கவ்விக்கொண்டது. அவர்களும் தங்களின் வீடுகளில் வேப்பிலை செருகினார்கள். வீதிகளில் வேப்பிலைத் தோரணங்கள் கட்டப்பட்டன. புதுச்சேரி ஆளுநர் லெரியும், அவரது ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் அனைவரும் பீதியில் உறைந்துபோனார்கள். வீடுகளிலும் வீதிகளிலும் வேப்பிலைத் தோரணம் கட்டட்டும் என்றும் ஆளுநரே சொன்னார். கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் தங்களது தலைப்பாகைகளில் வேப்பிலைக் கொத்தைச் செருகிக்கொண்டார்கள்.

பணம் சுருட்டும் குறுக்கு வழி:
இதற்கிடையே மக்களின் பேதைமையைப் பணமாக்கும் முயற்சிகளும் நடந்தன. வந்தவாசி அய்யண்ண சாஸ்திரி அரசுக்கு வரிப்பணம் கட்ட வேண்டியிருந்தது. ஆகவே, ஆட்களை அழைத்துப் பணத்தைக் கொடுத்துச் சிப்பம் கட்டச் சொன்னார். ஆட்களில் ஒருவன் திடீரென்று எழுந்து நின்று, “நான் மாரியம்மன் வந்திருக்கிறேன். இந்தப் பணத்தைக் கோட்டைக்கு அனுப்ப வேண்டாம். எனக்குக் காணிக்கையாகத் தந்தால் போதும்” என்று உரத்துக் கூறி ஆடினான். வெலவெலத்துப்போன சாஸ்திரி, அதையே தெய்வ வாக்காக எடுத்துக்கொண்டு, பண முடிப்பை அனுப்பாமல் வைத்துக்கொண்டார்.

அரசுக்குக் கப்பம் வரவில்லை என்பதால், அதை வாங்கி வருவதற்காக ஒரு சேவகன் சென்றான். அவன் பணமூட்டையில் கைவைத்தவுடன் மூக்கிலும் வாயிலும் ரத்தம் கக்கினான் என்று ஒரு செய்தி பரப்பப்பட்டது. அரசு அதிகாரி சவரிராயரின் தம்பி இந்தச் செய்தியை நம்பவில்லை. ஏதோ சூது நடக்கிறது என்று கண்டுகொண்டு, மூடநம்பிக்கையை நிந்தித்தான்; அம்மனையும் வைதான். ஆகவே, வேறொரு காவல்காரனை அனுப்பி எடுத்துக்கொள்ளலாம் என்று திட்டமிட்டான். அந்த எண்ணம் தோன்றிய அந்தக் கணமே அவனுக்குக் கழிசல் கண்டு உயிர் பிழைப்பதே கடினம் என்றானது. தம்பியின் மேல் பாசமிக்க சவரிராயன் பயந்துபோனார். கிறிஸ்தவர் என்றாலும், பாதிரியார்களுக்குத் தெரியாமல், ஆயிரம் ரூபாயை அம்மனுக்கு உண்டியல் போடுகிறேன், என் தம்பி பிழைத்தால் போதும் என்று வேண்டிக்கொண்டார்; அவரது தம்பியும் குணமானார் என்று விரிகிறது மற்றொரு வதந்திச் செய்தி.

ஆளுநரும் அதிகாரிகளும் வதந்திகளின் வலையில் வீழ்ந்துவிட்டதால், கிறிஸ்தவப் பாதிரியார்கள் அஞ்சினார்கள். அவர்கள் ஒன்றாகக் கூடி, பிரெஞ்சு அரசு அதிகாரிகளைச் சந்தித்துத் தங்களின் ஆட்சேபனைகளைத் தெரிவித்தார்கள். தொடர்ந்து அழுத்தங்களைக் கொடுத்து, அம்மன் பக்தர்கள் என்ற பெயரில் ஆட்டம் போட்டவர்களைப் பிடித்துச் சிறையில் அடைக்கச் செய்தார்கள். கொள்ளைநோயின் தாக்கம் குறைந்ததால் இந்தப் பிரச்சினையும் காலப்போக்கில் அமுங்கிப்போனது. ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பிலிருந்து (‘அகநி’ பதிப்பகம் இந்த நாட்குறிப்புகளைச் செம்பதிப்பாக வெளியிட்டிருக்கிறது) அப்போதைய மக்களின் மனநிலையைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆய்வுக் கட்டுரைகள் சிலவற்றிலிருந்து அப்போது அரசின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது.

காலராவுக்குக் காரணம்:
1855-ல் மருத்துவர் கோலாஸ், காலரா பற்றி ஆராய்ந்து, தேங்கிக் கிடக்கும் குப்பைகளும், அசுத்தமான தண்ணீருமே காரணம் என்று புதுச்சேரி அரசுக்கு அறிவித்தார். குப்பைக்கூளங்கள் கிடந்த கடைத்தெருவையும் கறிக்கடைகளையும் தூய்மையாக வைக்க அரசு ஆணையிட்டது. பொதுச் சுகாதாரம் கருதி, 1825-ல் ஆளுநர் துப்புய் அனைத்து சவ அடக்கங்களும் நகருக்கு வெளியேதான் செய்யப்பட வேண்டுமென்று அரசாணை வெளியிட்டார்.

1905 – 1913 காலகட்டத்தில், மொத்த மக்கள்தொகையில் நான்கில் ஒருவர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டனர். ‘ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்; ஆனால், ஏழைகளும் தொழிலாளர்களுமே அதிகம் இறக்கிறார்கள்; அவர்களும், நோய் தொற்றிய ஓரிரண்டு நாட்களிலேயே இறந்துவிடுகிறார்கள்; தூய்மையற்ற சூழல், அசுத்தமான குடிநீர், ஊட்டமில்லாத உடல், நெரிசலான குடியிருப்புகளே அதீத மரணங்களுக்குக் காரணம் என்றார் மருத்துவர் வெலந்தினோ.

தடுப்பூசிக்குத் தயக்கம்:
1701-ல் ஃபிரான்சுவா மர்த்தேன் காலத்திலேயே புதுச்சேரியில் ஆங்கில முறை மருத்துவமனை தொடங்கப்பட்டுவிட்டது. 18-ம் நூற்றாண்டுக்குள்ளாக மேலும் ஏழு மருத்துவமனைகளும் மருந்தகங்களும் தொடங்கப்பட்டன. முதன்முதலாக, 1849-ல் காலராவுக்குத் தடுப்பூசி அறிமுகமானது. ஆனால், ஆங்கில மருத்துவத்தில் நம்பிக்கையில்லாத மக்கள் அதற்கு முன்வரவில்லை. ஊசி போட்டுக்கொண்டால் ஒரு பணம் இலவசமாகத் தரப்படும் என்று அரசு ஆசை காட்ட வேண்டியிருந்தது.

1879-ல் முதன்முதலாக அம்மை நோய்க்குத் தடுப்பூசி போடும் முறையை பிரெஞ்சிந்திய அரசு அறிமுகப்படுத்தியபோதும், இந்துக்கள் அதை ஏற்கவில்லை. மதரீதியான இந்த எதிர்ப்பை அரசால் எளிதாக எதிர்கொள்ள முடியவில்லை. தடுப்பூசி போட்டுக்கொள்வது நம்பிக்கையைக் கொச்சைப்படுத்தும் செயல் என்று தடுப்பூசி போட்டுக்கொள்ளப் பிடிவாதமாக மறுத்தனர். சுகாதார ஊழியர்களை ஊருக்குள் விடாமல் தடுத்தனர். எல்லோருக்கும் ஒரே ஊசி போட்டு, ஒன்றாக்கப் பார்ப்பதாக உயர் சாதியினர் குற்றஞ்சாட்டினர். நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் மிகவும் பலவீனமாகி, நடக்கவே முடியாத நிலையில், வேறு வழியில்லாமல் மருத்துவமனைக்கு வந்தபோது அவர்களின் நிலைமை மோசமாகிவிட்டிருந்தது.

மக்களின் அறியாமை பற்றிக் கவலை கொண்ட அரசு, ஒவ்வொரு கொம்யூன்களிலும் தீவிர தடுப்பூசி இயக்கம் நடத்தப்பட வேண்டுமென்று 1884 ஏப்ரல் 3-ல் மேயர்களுக்கு அறிக்கை அனுப்பியது. ‘பிரெஞ்சு மூவண்ணக் கொடியின் கீழ் ஆளும் அரசு, மாரியம்மன் பெயரால் வரும் எதிர்ப்பைப் பொறுத்துக்கொள்ளாது’ என்ற ஆளுநர் கப்ரியேல் லூயி அன்ழுல்வான், 1906-ல் தடுப்பூசி போடுவதைக் கட்டாயமாக்கி அரசாணை பிறப்பித்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில் ஏற்பட்ட பேரிழப்புகளைத் தடுக்க முடியவில்லை.

மக்களின் தயக்கமும் முழுமையாக நீங்கியபாடில்லை. 1930-களில் ‘மக்கள் அனைவருக்கும் முழுமையான பாதுகாப்பு’ என்ற பெயரில் வெகுமக்கள் இயக்கம் ஒன்றை அரசு நடத்தத் தொடங்கியது. பிரெஞ்சிந்திய அரசு நோய்த்தடுப்பில் முழுமையான வெற்றிகாண முடியவில்லை. ஆனாலும், அதற்கான வழிமுறைகளை வகுத்துச் சென்றதால்தான், விடுதலை பெற்ற புதுச்சேரி அதை வெற்றிகரமாக்க முடிந்தது.

[எம்.பி.இராமன், பேராசிரியர், ‘சூழல் படும் பாடு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்]

நன்றி: இந்து-தமிழ் 

Tuesday, November 10, 2020

மாற்றுப்பாலினம் & பாலீர்ப்பு கொண்டோர் இணையவழிக் கருத்தரங்கம்

மாற்றுப்பாலினம் & பாலீர்ப்பு கொண்டோர் இணையவழிக் கருத்தரங்கம் 

-- முனைவர். பாப்பா


தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வையத்தலைமை கொள் பிரிவு அக்டோபர் 30,  2020 தொடங்கி நவம்பர் 1,  2020 வரை மூன்று நாட்கள் ஏற்பாடு செய்து நடத்திய இணைய வழி விழிப்புணர்வு கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது.  இக்கருத்தரங்கம் 'கலையும் வரலாறும்', 'பண்பாடும் மானுடவியலும்' மற்றும் 'சமூகச்சிக்கல்களும் சாதனைகளும்' என மூன்று தலைப்புகளில் நடைபெற்றது. இதில் மொத்தம் ஒன்பது கருத்துரைகளும் மூன்று சிறப்புரைகளும் நிகழ்த்தப்பெற்றன.

மூன்று நாட்களும் கருத்தரங்க நிகழ்வுகளைத் தோழர் ஆனந்தி, முனைவர் பாப்பா, தோழர் மலர்விழி ஆகியோர் நெறியாள்கை செய்தனர். தோழர் மலர்விழி, முனைவர் சாந்தினிபீ, முனைவர் தேமொழி ஆகியோர் வரவேற்புரை வழங்கினர்.

தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவனர் முனைவர் சுபாஷிணி மூன்று நாட்களும் நோக்கவுரையாற்றினார். சமூகத்தில் தொடர்ந்து பேசப்படாத, புறக்கணிக்கப்பட்டு வருகிற மனிதர்கள் பற்றிப் பேசுவதற்கான தளத்தினை உருவாக்கும் நோக்கத்தில் இக்கருத்தரங்கு நடத்தப்படுவதாகக்  கூறினார். வரலாறு, இலக்கியம், வழிபாடு, கூவாகம் திருவிழா, தொல்லியல் மற்றும் பாரதக்கதை சொல்லும் மரபு போன்ற நிலைகளில் மாற்றுப்பாலினம் பற்றிய செய்திகள் காலந்தோறும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.  

1948இல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் சாசனம் மனிதர்கள் அனைவரும் சமம் என்று வெளியிட்டது. 2014இல் அவர்கள் வெளியிட்ட அறிக்கை தமிழில் உள்ளது. இவர்களுக்கெனத் தனிச்சட்டம் இயற்றப்பட்டு அது பதினான்கு மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழில் மொழிபெயர்ப்பு செய்யும் பணியைத் தமிழ் மரபு அறக்கட்டளை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார். மாற்றுப்பாலினம் பற்றிய விழிப்புணர்வு உருவாவதற்குப் பள்ளிக்கூடச் சூழலில் மாற்றம் வேண்டும். அதற்கு ஆசிரியர்களுக்கு நாம் உதவவேண்டும். ஐரோப்பா, அமெரிக்கா போன்ற உலக நாடுகளில் வெளிப்படையாகத் தம்மை மாற்றுப்பாலினம் என்று வெளிப்படுத்திக்கொண்டு இவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதைப் போல நமது சூழலிலும் மாற்றுச்சிந்தனை தேவை என்று கூறியதோடு உலகளாவிய நிலையில் மாற்றுப்பாலினச் சாதனையாளர்களைப் பட்டியலிட்டார்.

மூன்று நாட்களும் நோக்கவுரையைத் தொடர்ந்து பங்கேற்பாளர்களின் புரிதலுக்காக LGBT குறித்த காணொலி ஒன்று திரையிடப்பட்டது.

மூன்று நாட்களும் நடைபெற்ற கலந்துரையாடல் பங்கேற்பாளர்களிடையே LGBT குறித்ததொரு நல்ல புரிதலையும் இதுகுறித்துப் பரந்துபட்ட மனதுடன் வெளிப்படையான பேச்சுக்கும் வழி செய்தது.

முதல் நாள் நிகழ்வு: கலையும் வரலாறும் :

1.JPG

முதல் கருத்துரை ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியின் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் முனைவர் கற்பகவள்ளி அவர்களுடையது. மீவியல்பு கொண்டவர்கள் என்று தோழர்களைக் கூறுவதில் பெருமையடைகிறேன் என்று மகிழ்வுடன் கூறினார். அலெக்சாண்டர் இவர்களுக்கு அதிக சக்தி இருப்பதாக எண்ணித் தமது ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் வாய்ப்புக் கொடுத்தது, மாலிக்கபூர், அலாவுதீனுக்கு மிடையிலான நட்பு போன்ற வரலாற்றுச் செய்திகளையும் மகாபாரதம், சீவக சிந்தாமணி ஆகிய இலக்கியங்களிலிருந்து சான்றுகளையும் எடுத்துரைத்தார். இவர்களுக்கான அனைத்து வாய்ப்புகளும் இந்தியாவில் குறைவு என்றாலும் தமிழகத்தில்தான் முதன்முதலில் (2008) மாற்றுப்பாலினத்தவர்  நலவாரியம் தொடங்கப்பட்டதையும் இவர்களுக்கென தனிக்குடும்ப அட்டை, கடனுதவி, மருத்துவக்காப்பீடுவேலைவாய்ப்புப்பயிற்சி, அரசு மருத்துவ மனைகளில் இலவசமாகப் பாலின அறுவை சிகிச்சை, கல்வி நிலையங்களில் கல்வி கற்பதற்கு அனுமதி போன்றவை வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

சமூகத்தில் மனிதராக இவர்களுக்கு மரியாதை தரவேண்டும், அவர்களது குறைகளை முதலில் கேட்கவேண்டும், இவர்கள் சமூகச்செயல்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்க வேண்டும், பள்ளிகளிலேயே இது பற்றிய ஆரம்ப விழிப்புணர்வுக் கல்வியைக் கொடுத்தோமானால் இவ்வயதில் இத்தோழமைகளுக்கு ஏற்படும் உடலியல் ரீதியான மாற்றங்களை மற்றவர்கள் புரிந்து கொள்வதற்கு உதவியாக அமையும் அதை நாம் செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இரண்டாவதாக, சங்கம நிறுவனத்தின் துணைத்தலைவர், சமூகச் செயல்பாட்டுக்கான கேரள அரசின் விருது (2012) பெற்றவர், எழுத்தாளர் தோழர் ஷீத்தல். தமிழகத்தில் எங்களை மனிதராகப் பார்க்கிற மனது இருக்கிறது. கேரளத்தில் அது இல்லை, இப்பொழுதுதான் பெண்கள் எங்களைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று தனது உரையைத் தொடங்கினார். மூன்றாம் பாலினம் என்று ஏன் எங்களைச் சொல்ல வேண்டும். முதல், இரண்டு, மூன்று என்று இடங்களை வரையறை செய்தது யார்? அதற்கான அடிப்படை எது?  ஆண், பெண் இருவரது குணங்களும் கொண்ட நாங்களே முதலிடம் என்கிற கேள்வி, கருத்து இரண்டினையும் முன்வைத்தார்.

சமூகம் மற்றும் சட்டரீதியில் இவர்களுக்குக் கிடைத்த அங்கீகாரத்தை எடுத்துரைத்தார். இவர்களும் மனிதர்களே, சமூகத்தில் அனைத்து உரிமைகளும் இவர்களுக்கு உண்டு என்று 2014 ஆம் ஆண்டில் கேரளாவில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது, இவ்வாண்டில் மாற்றுப்பாலினம் குறித்த கணக்கீடு ஒன்றைத் தான் செய்தது, ‘ரெயின்போ’ என்கிற பெயரில் அரசுடன் இணைந்து ஆய்வுத்திட்டம் தொடங்கி இத்தோழமைகளுக்காகப் போராடுவது பற்றியும் பேசினார்.

முதலில் ஆண்களுக்கு, பிள்ளைகளுக்கு இது குறித்துக் கற்றுத்தருதல் வேண்டும். நான் எப்படி வாழ வேண்டும், எனது ஆசை, கனவுக்கேற்ற வகையில் நான் வாழ வேண்டும் என்றும் எங்குமே எங்களுக்கான இடம் இல்லை. பிரச்சனைகள்தான். நாங்கள் போராடுகிறோம். நீங்களும் எங்களுடன் சேருங்கள். எங்களுக்காகப் பேசுங்கள் என்றும் கூறினார். தன்னம்பிக்கையுடன் கூடிய இவரது உரை  நமக்கும் உற்சாகத்தைத் தந்தது.

இதையடுத்து கேரளத் திருநங்கையர் பற்றித் தோழர் ஸ்ரீஜித் சுந்தரம் தயாரித்த ‘பறையான் மறந்த கதை’ நாடகக் காணொலி திரையிடப்பட்டது. இந்நாடகத்தில் வாழ்க்கைதான் துயரமானது, இறப்பும் துயரமா? என்று இறந்துபோன உடல்களின் ஆவிகள் கேட்பதாக இறுதிக்காட்சி அமைத்திருப்பதையும் சமீபத்தில் சென்னையில் தோழர் சங்கீதா கொடுமையாகக் கொல்லப்பட்டது குறித்தும் பேசினார்.

சமூகத்தில் தங்களைப் பற்றிய தரவுகள் கலைவழியே சொல்லப்பட்டதாகத்தான் இருக்கின்றனவே தவிர களப்பணி வழியானதாகவோ, நேரடி அனுபவங்கள் வாயிலானதாகவோ இல்லை என்றார். பதினைந்து வருடங்களாகத் தான் நடத்திவரும் ‘கட்டியக்காரி’ நாடக அமைப்பின்வழி நடத்தப்பெற்ற மிளகாய்ப்பொடி, அவமானம், பறையான் மறந்த கதை போன்ற நாடகங்களின் உருவாக்கம், பின்னணி, இதற்குப் பேரா. மங்கையின் மிகுந்த ஆதரவு கிடைத்தது பற்றியும் எடுத்துரைத்ததோடு தங்கள் வாழ்க்கையில் கலை  மூலம் முக்கியமான பணியைச் செய்து வருவதாகவும் அதேநேரம் நாடகக்கலையில் பங்கேற்கும் தோழமைகள் கூட வெளிப்படையான பகிர்தலை வைத்துக் கொள்ள முடியாத அளவிற்கு இச்சமூகத்தின் புரிதல் உள்ளது என்றும் கூறினார். கட்டியக்காரி என்கிற தனது நாடக அமைப்பின் பெயரை விளக்கும் பொழுது நாட்டில் பெயர் குறித்த பிழை திருத்தங்கள் காட்டப்படுவதுதான் அதிகம், நாங்கள் பேசுவதை, எங்கள் வலிகளை யாரும் கேட்கமாட்டார்கள் என்றும் வருந்தினார். மதுரையில் தோழர் பிரியா பாபுவால் தொடங்கப்பட்டிருக்கிற திருநங்கைகளுக்கான ஆய்வு மையத்தினைக் கல்லூரி மாணவர்கள் அதிகம் பயன்படுத்துவது வரவேற்கத்தக்க ஒன்று. நாடகக்கலைவழி திருநங்கைகள் வாழ்வியலைச் சமூகத்திற்குப் பறைசாற்றும் இவரது உரை கேட்பவர் மனதைக் கனக்கச் செய்தது.

இன்றைய சிறப்புரையாளர் முனைவர் கட்டளை கைலாசம் தமது இளவயதுப் பருவத்திலும் இத்தோழமை பற்றிய அறிதலும் பகிர்தலுக்குமான வாய்ப்பு இல்லை என்று தனது உரையைத்  தொடங்கினார். 1992 ஆம் ஆண்டு பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி, நாட்டார் வழக்காற்றியல் மையத்தில் திரௌபதி வழிபாடு பற்றி விரிவான ஆய்வு செய்த ஆல்ஃப் ஹில்டபெடல் என்பவரது தொடர் சொற்பொழிவுகள் பற்றிக் கூறினார். நவம்பர் 1ஆம் தேதி திருநங்கையருக்கான மின்னிதழ் மதுரையில் பிரியா பாபு அவர்களால் தொடங்கப்படவிருப்பதையும் தெரியப்படுத்தினார். திருநங்கைகள் பற்றிய  இலக்கியத்தரங்களை மிகுதியாகப் பகிர்ந்து கொண்டார். ஆந்திராவின் ஹைதராபாத்தில் தொடங்கி தென்மாவட்டங்கள் வரையிலான திருநங்கையரின் தோற்றக்கதைகள் பற்றியும் கூவாகம் திருவிழா, வட இந்தியாவில் வாழும் இவர்களது பிரிவுகள், மொழி, உறவுமுறைகள் இவர்களது நூல்கள், இவர்களைப் பற்றிய நூல்கள் குறித்தும் விளக்கமாகக் கூறியதோடு இது குறித்த ஆழமான ஆய்வு தேவை, இன்னும் நாம் இவர்களை முதலில் ஏற்றுக் கொள்ளவேண்டும். குடும்பம் பள்ளி, சமூகம் என அனைவரும் ஏற்பதோடு இவர்களை நேசிப்பதே நமது கடமை என்றும் தனது உரையை முடித்துக் கொண்டார்.


இரண்டாம் நாள் நிகழ்வு: மானுடவியலும் கலாச்சாரமும்: 

2.JPG

இரண்டாம் நாள் நிகழ்வில் முதலில் பேசியவர் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் நிர்வாகவியல் துறைப்பேராசிரியர் செந்தில்குமார் அவர்கள். திருநங்கையர் பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை மக்களிடையே தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பதால் களப்பணி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். உலகளாவிய நிலையில் மாற்றுப்பாலினத்தாரின் நிலை ஒரே மாதிரியாக, உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில்தான் இருக்கிறது. ஜனநாயக ஆட்சியிலும் இந்நிலை மாறவில்லை என்பதைத் தமது ஆய்வுத்தரவுகளோடு விளக்கினார். கல்வி, பொருளாதாரத்தில் கட்டாயம் முன்னேற்றம் தேவை. அதுவே அவர்களை உயர்த்தும் வழிமுறையாகும் என்றார்.

இரண்டாவதாகப் பேசியவர் திருப்பூர் எல். ஆர். ஜி மகளிர் அரசு கலைக் கல்லூரியின் தமிழ்துறைப் பேராசிரியர் அமைதி அரசு அவர்கள். மாற்றுப்பாலினத் தோழமைகளுக்கான சக்தி, திறமை, ஆளுமை, கலைத்தன்மை போன்ற தனித்த வெளிக்கு நாடக உலகம் பேருதவியாக இருக்கிறது என்பதைத் தமது கூத்துப்பட்டறை அனுபவங்கள் வழித் தெளிவாக விளக்கினார்.

மூன்றாவதாகப் பேசியவர் இருபது வருடங்களுக்கும் மேலாக விளிம்புநிலை மக்களிடம் பணியாற்றிவரும் தோழர் கலைமாமணி சுதா அவர்கள். ஒருசில மனிதர்கள் ஓரிரு சமயங்களில் செயலாற்றுவதை மட்டும் வைத்து அவர்களைத் தவறாக எடைபோடக்கூடாது. இது திருநங்கைகளுக்கும் பொருந்தும். எங்களுடனான உங்களது நட்பு, அனுபவம் குறித்தும் அவ்வனுபவம் நல்லதாக இல்லாவிட்டாலும் பேசுங்கள், எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்டார். தனது சமூகத்திற்கான முன்னேற்றமும் மாற்றமும் இப்பொழுது அதிகமாகத்தான் இருக்கிறது என்று கூறினார்.

திருநங்கையர் கூடுமிடமாகிய ஜமாத், இவர்களது சடங்குகளான தத்தெடுத்தல், தாயாகிய சேலாபாலூற்றும் திருவிழா, இவர்களது உறவுகளுக்கிடையேயான வலிமை அதாவது இந்தியாவில் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் ஏதாவதொரு திருநங்கையைப் பார்த்தால் போதும் தங்குமிடம், உணவு போன்ற சிக்கல்கள் தீர்ந்துவிடும் என்று பண்பாடு ரீதியிலான தரவுகளைத் தம் உரையாக்கினார்.

குடும்பம் எனும்போது இரண்டு ஏற்கவியலாத, வருந்தத்தக்க நிலை ஏற்பட்டிருப்பதாகக் கூறினார். ஒன்று – திருநங்கையாக மாறியபின் ஒருவரை அவரது குடும்பம் அவர் எவ்வழியில் சம்பாதித்தாலும் பரவாயில்லை என்று அப்பணத்திற்காக மட்டுமே ஏற்கிறது, இரண்டு – குடும்பம் ஏற்பதைப் பெரிதாக நினைக்கும் திருநங்கையரும் சாதி, சமயத்தைப் பின்பற்றத் தொடங்கிவிட்டனர். இன்னும்  மாற்றுப்பாலினத்தவர் தன்னைப் பற்றி அறிந்த பிறகு குடும்பத்திலிருந்து வெளியில் வருவதே சரி என்றும் இல்லையெனில் அக்குடும்பம் அவரைப் பெண்ணாகவே இருத்தி இன்னொரு ஆணுக்குத் திருமணம் செய்வித்து இருவரது வாழ்க்கையையும் பாழாக்கிவிடும் என்றார். மேலும் திருநங்கையைவிடத் திருநம்பியர் வாழ்வு இன்னும் சிக்கலானது, இது குறித்த புரிதலும் தேவை என்றும் பேசியது யதார்த்தத்தை வெளிச்சமிட்டுக் காட்டியதாக இருந்தது.

சிறப்புரையாளர் சுப. வீரபாண்டியன் அவர்கள் இக்கருத்தரங்கில் என்னைப் பேசத்தான் அழைத்தார்கள், ஆனால் இரண்டு நாட்களும் நான் நிறைய கற்றுக்கொண்டேன் என்று திறந்த மனதோடு பேசத் தொடங்கி சமூக மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருப்பதுதான். சமூக உளவியல்தான் சமூகத்தை வழிநடத்துகிறது என்று கூறி அதனை மேட்டிமைத்தனமும் ஒவ்வாமையும், புறக்கணிப்பு, அவமதிப்பு, பரிவு, தோழமை என்கிற ஐந்து நிலைகளில் விளக்கினார். சுதந்திரமும் சுயமரியாதையும்தான் மனிதனுக்கு முதல் தேவை. ஒவ்வொரு மனிதனும் இதுபற்றி நினைக்கும் போதுதான் சமூகம் மாறுகிறது. சமூகத்தில் எதையுமே தரப்படுத்துதல் மற்றும் வரிசைப்படுத்துதலே தவறான ஒன்று என்றதோடு மனித உரிமைகள் குறித்த கருத்துக்களைப் பிடல் காஸ்ட்ரோவில் தொடங்கி சகோதரத்துவம், சமத்துவம், சுதந்திரம் என்கிற புத்தர், அம்பேத்கர் கருத்துக்களுடன் முடித்தார்.

 

மூன்றாம் நாள் நிகழ்வு: சமூகச்சிக்கல்களும் சாதனைகளும் :

day3.jpg

ஏழாவது கருத்துரையை வழங்கிய இலங்கையைச் சார்ந்த ஏஞ்சல் குயின்ரஸ் சமூகத்தில் தங்களுக்கான இடம் பற்றிய விழிப்புணர்வு இருந்ததால் கல்வி கற்கும் பொருட்டு எட்டு வயதில் உணர்ந்த தனது நிலையைப் பதினாறு வயதில் வெளிப்படுத்தியதாகவும் இந்த ஒடுக்குமுறையே சமூகம் பற்றிய சிந்தனையைத் தனக்குக் கொடுத்தது என்றும் கூறினார்.

இந்தியாவில் அதிகார ஒடுக்குமுறை, திருநங்கையருக்குள்ளும் ஒருவரையொருவர் ஒடுக்குதல் உள்ளது. அது போன்று இலங்கையிலும் வந்துவிடக்கூடாது என்று நினைத்தோம் என்று கூறினாலும் இந்தியாவில் தனக்கு அநேகம்பேர் உதவி செய்திருக்கிறார்கள். அதற்குத் தான் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் கூறினார்.

இலங்கையில் Jafna Transgender Network அமைப்பின்வழி சுயதொழிலுக்கான உதவியும் பயிற்சியும் வழங்குதல், இவர்கள் தமது அடையாளத்தை வெளிப்படுத்துவதற்கான சிக்கல் இருப்பதால் உளவியல் ரீதியாக ஆறுதல் தருதல், உங்கள் வாழ்க்கையை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வைக் கொடுத்தல் என்கிற வகையில் பணிசெய்து வருவதையும் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் இப்படியொரு சமூகம் இருப்பதையும் இவர்களது சிக்கல்களையும் சொன்னால்தான் தெரிகிறது என்றும் கூறினார். இலங்கையில் இளைஞர்கள்  மத்தியில் தங்களுக்கு ஆதரவு அதிகம், தங்களோடு அவர்கள் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.

எட்டாவது கருத்துரை தென்கொரியாவில் வசித்துவரும் தோழர் சம்யுக்தா விஜயன். தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இந்தச்சமூகம் பற்றிச் சிந்தித்த கணத்திலிருந்தே நான் பெண் என்று கூறும் இவர் தனது குடும்பம், பள்ளி, ஆசிரியர், நண்பர்கள் எனத் தன்னைச் சுற்றியிருந்த அனைவருடைய ஆதரவும் இருந்ததால் தனது வாழ்வில் எத்தகைய சிக்கலும் இல்லை என்று கூறினார். இந்தியாவில் இது பற்றிய ஆய்வுகள் நிறைய நடக்கவில்லை. திருநங்கையர் குறித்த சொற்களின் ஆய்வினைவிடப்  புரிதல்தான் முக்கியம் என்று கூறினார்.

பாலினம் பற்றிய இவரது அறிவியல் ரீதியான விளக்கம் தெளிவாக, பயனுள்ளதாக, மிகுந்த புரிதலுடன் கூடியதாக இருந்தது. இவ்வுலகம் பகல் மற்றும் இரவால் ஆனது என்றாலும் முற்பகல், பிற்பகல், சாயுங்காலம் என்றிருப்பதைப்போல ஆண், பெண் என்பதும் முழுமையானதல்ல. இது ஒரு Spectrum. பால் (Biological sex), பாலினத்தை அடையாளப்படுத்துதல் (Gender Identity), வெளிப்படுத்துதல் (Gender Expression), பால்நிலை குறித்த பயிற்சி (Sexual Orientation) என்கிற நான்கு நிலைகளுக்குள்தான் நாம் இருப்போம் முழுமையான ஆண், பெண் என்பது இல்லை என்று விளக்கினார்.

ஒன்பதாவது உரைக்குரியவர் சென்னை, தமிழ்த்திரையுலகில் இயக்கம், எழுத்து, தயாரிப்பு என்று பல பரிமாணங்களில் சாதனை படைத்து வரும் தோழர் மாலினி ஜீவரத்தினம். தான் வாசித்த நூல்கள், நண்பர்கள், பணியிடத்தில் இடத்தில் உடனிருந்தோர் ஆதரவு இவையே தன்னை வெளிப்படுத்த உதவியதாகக் கூறினார். திரையுலகில் படம் தயாரிக்க நிறைய திருநங்கையர் முன்வந்திருப்பது மாற்றத்தைக் காட்டுகிறது. நான் வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களின் கருத்துக்களை, என்னைப் பற்றிய பேச்சுக்களை எனது படைப்புகளில் பயன்படுத்துவேன் என்றார். திரைப்படங்களில் கதாநாயகன் திருநங்கையாக வேடமிடுவது வரவேற்கத்தக்க ஒன்று என்றாலும் வேடமிடுவதற்கும் தாங்களே நடிப்பதற்கும் வேறுபாடு உண்டு என்றும் கூறினார். இருபத்தொன்றாம் ஆண்டில் திருநங்கையர் பற்றிய,  இவர்கள் பணிசெய்த திரைப்படங்கள் நிறைய வெளியிடப்படவிருக்கின்றன என்று தெரிவித்தார். தமிழ்ச்சமூகத்தில் திருநங்கையருக்கான தனித்த இடம் என்பது சவாலான விசயம்தான் என்றார்.

மூன்றாம்நாள் சிறப்புரை வழக்கறிஞர் சன்னாவினுடையது. பாலியல் பாதையில் சமூக, அரசியல் நிலைப்பாடுகள் பற்றிப் பேசினார். பதினெட்டு வருடங்களுக்கு முன் புதிய கோடாங்கி இதழுக்காகத் திருநங்கையருக்குச் செய்த இலக்கியப்பயிற்சி முகாம் ஒன்று தனக்கு இவர்கள் பற்றிய அறிதலுக்கு அடிப்படையாக அமைந்ததாகவும் முகாமிற்குப் பிறகு களப்பணி செய்து இவர்களது வாழ்வியல் மற்றும் இவர்களது படைப்புகளைக் கொண்டு சிறப்பிதழாகவே கொண்டு வந்தது அக்காலகட்டத்தில் மிகுந்த சலசலப்பை உண்டு பண்ணியதாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து திருநங்கையருக்குச் சட்டசபையில் தனித்த இடம் கேட்க சட்டவழி முறைகளை எடுத்துக்கூறியது. அரவாணி என்பது பெண்பால், உருவாக்கப்பட்டது – கலைஞர் கருணாநிதி ஆட்சியில்; இந்த அரவாணி என்கிற பெயர் திருநங்கை, திருநம்பி என மாற்றம் பெற்றது, தமிழ்ச்சமூகத்தில் அரசியல் ரீதியான புரிதல் இருந்ததால் இது சாத்தியமானது என்றும் நலவாரியம் அமைக்கப்பெற்றது பற்றியும் கூறினார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்த ஒடுக்குமுறைகள் மாற்றம் பெற இது போன்ற கருத்தரங்கு தேவை என்றார். மொழியைக் கட்டமைப்பவர்கள் ஆண்களே, Gender என்னும் சொல்லின் முதல் பகுதியே Gen என்னும் ஆண் மையத்தை, முதன்மையைத்தான் குறிக்கிறது. மக்களிடம் ஏற்பு கிடைத்திருப்பது கடந்த பத்து ஆண்டுகளாகச் சாதனை நிகழ்ந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது.

வெறும் பேச்சாக மட்டும் இல்லாமல் தமிழ் மரபு அறக்கட்டளைக்குச் சில கோரிக்கைகளையும் முன்வைத்தார்.  மொழி ஆண் மொழியாகத்தான் இருக்கிறது. சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் ஒரு இடமாவது வேண்டும். பள்ளிக்கல்வியிலிருந்தே  பாலினச்சமத்துவம் மற்றும் மாற்றுப்பாலினம் குறித்த கல்வி வழங்கப்படவேண்டும். மனித இனத்தில் 120 பிரிவுகள் இருப்பதாகக் கணக்கெடுத்திருக்கிறார்கள். இவர்களது பிரிவுகளுக்குரிய பெயர்களைக் கண்டறியவேண்டும். தமிழறிஞர்களும் தமிழ் மரபு அறக்கட்டளையும் முன்னெடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


(1) LGBT - ஒரு அறிமுகம் [https://youtu.be/MsiO198Kqec]


(2) `மாற்றுப்பாலினம் & பாலீர்ப்பு கொண்டோர் நலவாழ்வு [https://youtu.be/kRwXwwuQtCk]


இந்த நிகழ்ச்சி பற்றிய செய்திகள் 
என்ற பகுதியிலிருந்து காணலாம்.











மாற்றுப்பாலினம் & பாலீர்ப்பு கொண்டோர் இணைய கருத்தரங்கம்
யூடியூப்  காணொளிகளாக .. .. .. 
நாள் 1 – கலையும் வரலாறும்

நாள் 2 – மானுடவியலும் கலாச்சாரமும்

நாள் 3 – சமூகச்சிக்கல்களும் சாதனைகளும்





அறிக்கை  தயாரிப்பு: முனைவர். பாப்பா




Monday, November 9, 2020

வேட்டைச்சமூகத்தில் பெண்களின் நிலை - தொல்லியல் சான்றுகள்


வேட்டைச்சமூகத்தில் பெண்களின் நிலை - தொல்லியல் சான்றுகள்
 பண்டைய சமுதாயத்தில் ஆண்கள் வேட்டையாடி உணவுப் பொருளைக் கொண்டு வருவார்கள் என்றும், பெண்கள் ஒரு இடத்தில் தங்கியிருந்து உணவைச் சமைத்துக் கொடுப்பார்கள் என்றும் பொதுவாகச் சொல்லப்படுகின்றது.  இந்தப் பொது சிந்தனையை மாற்றி அமைக்கும் வகையில் அண்மைய ஒரு தொல்லியல் கண்டுபிடிப்பு திகழ்கிறது.  


பெரு நாட்டின் ஆண்டியன் மலைப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட ஒரு அகழாய்வில் 9000 ஆண்டுகள் பழமையானது என அறியப்பட்ட ஒரு எலும்புக்கூட்டினை ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர்.   ஒரு வேட்டைக்காரருக்கு உருவாக்கப்பட்ட ஒரு ஈமக்கிரியை பகுதி அது. அந்த எலும்புக்கூட்டின் அருகிலிருந்த வேட்டைக்கருவிகளை ஆராய்ந்த போது இது மிகத் திறமை வாய்ந்த ஒரு வேட்டைக்காரரது உடைமையாக இருக்கும் என்று கருதினர்.  வேட்டைக்கருவியோடு இணைந்து கிடைத்த 20 கருவிகளும் ஒரு தேர்ந்த வேட்டைக்காரரின் படைப்பு என்று கருதினர்.  நிச்சயமாக இந்த வேட்டைக்காரர் ஒரு முக்கிய வேட்டைக்குழுவின் தலைவனாக இருக்க வேண்டும் என்றும் கருதினர். 

அதன் பின்னர் எலும்புக்கூட்டின் மேல்  அரிசோனா பல்கலைக்கழக ஆய்வாளர்களால் நிகழ்த்தப்பட்ட வேதியல் சோதனைகளில்  இந்த வேட்டைக்காரர் ஒரு பெண் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தற்சமயம் அந்த வேட்டைக்காரர் ஒரு பெண்தான் என்பதை உறுதி செய்திருக்கின்றனர். இதுவரை வேட்டையாடி சமூகம் என்பது ஆண்களே என்ற பொதுச் சிந்தனையை இந்தக் கண்டுபிடிப்பு மாற்றியிருக்கின்றது. 

இந்தக் கண்டுபிடிப்பின் அடிப்படையில் ஆய்வாளர்கள் தென்னமெரிக்காவில் வெவ்வேறு பகுதிகளில்  நடத்தப்பட்ட ஆய்வுகளில்    அவர்கள் மேலும் 10 பெண் வேட்டைக்காரர்களின் எலும்புக்கூடுகளைக் கண்டுபிடித்திருக்கின்றனர்.  அவர்களது அருகாமையிலேயே அவர்களது வேட்டைக்கருவிகளும் மரியாதை நிமித்தம்  வைத்துப் புதைக்கப்பட்ட செய்தியையும் இந்தக் கண்டுபிடிப்பு வெளிப்படுத்தியுள்ளது. 

இது பற்றி கருத்து கூறும் போது,  இதன் வழி பண்டைய காலத்தில், பெண்கள் வேட்டையாடிகளாகத் தொன்று தொட்டே இருந்திருக்கின்றனர் என்பதையும் உறுதி செய்யலாம் என  ஒக்லஹாமா பல்கலைக்கழக தொல்லியல் அறிஞர் போனி பிட்பிளாடோ தெரிவிக்கின்றார். 

பெரு நாட்டின் ஆண்டிஸ் மலைப்பகுதியில் 13,000 அடி உயரத்தில் இந்த வேட்டையாடி மக்கள் வாழ்ந்திருக்கின்றனர்.  ஆண்களும் பெண்களும் இணைந்தே தங்கள் உணவைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம். அவர்களில் ஒரு பெண் அக்குழுவின் தலைவியாகவும் இருந்திருக்கலாம்.   பல பெண் வேட்டைக்குழுத்  தலைவர்களும் இருந்திருக்கலாம். இப்படிப் பல ஊகங்களுக்கும் தொடர் ஆய்வுகளுக்கும் இட்டுச் செல்லும் கண்டுபிடிப்பாகவே இது அமைகிறது.



மேலதிக செய்திகளுக்கு: https://www.sciencemag.org/news/2020/11/woman-hunter-ancient-andean-remains-challenge-old-ideas-who-speared-big-game?fbclid=IwAR1vDCJG-edq4XZbOz3aB_y00xJ4p90gCa62iQkdboPmv95Kq1xudDNok7c

Sunday, November 8, 2020

ராகுல சாங்கிருத்தியாயனை பௌத்த பிக்குவாக ஆக்கிய இலங்கை

ராகுல சாங்கிருத்தியாயனை பௌத்த பிக்குவாக ஆக்கிய இலங்கை 

-- என்.சரவணன்


ராகுல சாங்கிருத்தியாயனை அறியாத எழுத்தாளர்கள் இருக்க முடியாது. இராகுல்ஜி 1893 ஆம் ஆண்டு கிழக்கு உத்திரப் பிரதேசத்தில் ஆஜம்கட் மாவட்டம் , பண்டகா என்ற கிராமத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில் முதல் குழந்தையாகப் பிறந்தார். கேதார்நாத் பாண்டே. (09.04.1893 – 14.04.1963)  என்கிற இயற்பெயருடன் இவர் தனது பெற்றோர்களைச் சிறு வயதிலேயே இழந்ததன் பின் தனது பாட்டியால் வளர்க்கப்பட்டார்.

ஆரம்பப் பள்ளிப்படிப்பை மட்டுமே முறையான கல்வியாகக் கற்றாலும் தானே கற்று 30க்கும் மேற்பட்ட மொழிகள் அறிந்த பன்மொழி அறிஞராகவும், பலதுறை வல்லுநராகவும் 70 வயதுவரை வாழ்ந்து 1963 இல் மறைந்தவர். இவர் ‘மகா பண்டிட்’ என்கிற பட்டமும் பெற்றவர்.  தமிழகத்தில் இவர் வாழ்ந்த காலத்தில் தமிழையும் அறிந்து கொண்டார்.

அவர் காசியில் சமஸ்கிருதம்,அரபு, பர்சிய மொழிகளை மரபுரீதியாகக் கற்றுக்கொண்டார். ஏனைய 30க்கும் மேற்பட்ட மொழிகளை அவர் சுயமாகவே கற்றுக்கொண்டார். அவர் எழுதியுள்ள நூல்களைப் பட்டியலிட இக்கட்டுரை போதாது. அவர் எழுதிய எண்ணற்ற நாட்குறிப்புகள் குறிப்புகள் இன்னமும் வெளியாகவில்லை.

தமிழில் இலக்கிய ஆர்வலர்கள் பலர் வாசிக்கத் தவறியிருக்காத நூல் “வால்காவிலிருந்து கங்கை வரை”. “ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்” என சி.என். அண்ணாதுரை பரிந்துரைத்த நூல் அது. அது மட்டுமன்றி மேலும் பல முக்கிய நூல்களை நமக்குத் தந்தவர். இந்த நூல் இந்திய, இலங்கை மொழிகளில் மாத்திரமல்ல ரஷ்ய, செக், போலிஷ், சீன மொழி உள்ளிட்ட பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுப் பல பதிப்புகளைக் கண்ட நூல்.

1920களின் ஆரம்பத்தில் அவர் தீவிர அரசியல் பணிகளில் இணைத்துக்கொண்டார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு வடிவமான ஒத்துழையாமை இயக்கத்திற்காக பிரச்சாரங்களில் ஈடுபட்டு 31.01.1922 அன்று அவரை பிரிட்டிஷார் கைது செய்து சிறையில் அடைத்தது. சிறையிலிருந்தும் கைதிகளை விழிப்புணர்வூட்டுவதற்காகப் பாடல்கள், கவிதைகள், நாடகங்களை எழுதினார். அவரின் எழுத்துக்கள் சிறைக்கு வெளியில் இரகசியமாக அனுப்பப்பட்டது பிரசுரமும் செய்யப்பட்டன. அடிக்கடி கைதாகி சிறையிலிருந்தார். காங்கிரஸ் கட்சியில் ஜில்லா செயலாளராகவும் இருந்திருக்கிறார். இந்தக் காலப்பகுதியில் தான் புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரசு மரம் இருக்கின்ற “புத்தகயா” ஆலயத்தை இந்துக்களிடம் இருந்து மீட்டு பௌத்தர்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். முஸ்லிம்களின் படையெடுப்பைத் தொடர்ந்து முன்னர் இருந்த பௌத்த ஆலயம் சின்னாபின்னமாக்கப்பட்டு பிற்காலத்தில் அங்கே இருந்த புத்தரை சிவனென்று வழிபட்டு ஒரு இந்துக் கோவிலாகவே மாற்றிவிட்டிருந்தனர்.

இன்று பௌத்த மறுமலர்ச்சியின் தந்தையாகக் கொண்டாடப்படும் அநகாரிக்க தர்மபால அப்போது இலங்கையிலிருந்து அங்கு சென்றவேளை இதனைக் கண்ணுற்று இந்துக்களிடம் இருந்து அதை மீட்பதற்காக “மகாபோதி சங்கம்” என்கிற இயக்கத்தை ஆரம்பித்து தீவிரமாக இயங்கிவந்தார். (அந்த இயக்கத்தின் அந்த முயற்சி பின்னர் வெற்றிபெற்றது. இந்த மீட்பில் ராகுல்ஜியின் பங்கும் கணிசமானது.)

புத்தகயா அமைந்துள்ளதும் பீகாரில் தான். அங்கே சாப்ரா (Chhapra) என்கிற பிரதேசத்தின் காங்கிரஸ் கமிட்டியை ராகுல்ஜி கூட்டி அங்கே புத்தகயாவை மீட்பதற்கான தீர்மானங்களை நிறைவேற்றினார். இந்த பரிந்துரைகளை காங்கிரசின் வருடாந்த தேசிய மாநாட்டில் ஒரு தலைப்பாகச் சேர்க்கப்பட்டது. அங்கே அநகாரிக்க தர்மபாலாவும் தனது சார்பில் பிக்குமார்களை அனுப்பிவைத்தார். அங்கு நிகழ்ந்த பல தரப்பட்ட மொழியிலான விவாதங்களை ராகுல் மொழிபெயர்த்தார். பிற்காலத்தில் இது குறித்து ஆராய்வதற்காக அன்றைய காங்கிரஸ் தலைவர் ராஜேந்திர பிரசாத் அமைத்த கமிட்டியில் ராகுல்ஜி முக்கிய பங்காற்றினார். புத்தகயாவை மீட்கும் முயற்சி வெற்றியளிக்காத நிலையில் இலங்கைக்குப் புறப்பட்டார்.

அநகாரிக்க தர்மபாலவின் சிஷ்யரும் மகா போதி சங்கத்தின் செயலாளருமான பிரமச்சாரி தேவபிரிய வலிசிங்க இலங்கைக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார். வித்தியாலங்கார பிரிவெனாவைச் சேர்ந்த நாராவில் தர்மரத்ன தேரர் ஒரு  தந்தியின் மூலம் அவருக்கு அழைப்பையும் வழிச்செலவுக்கான பணத்தையும் அனுப்பி வைத்தார். 16.05.1927 அன்று அவர் இலங்கை வந்தடைந்தார்.

இலங்கைக்கு வந்த அவர் தேரவாத பௌத்தத்தால் மேலும் ஈர்க்கப்பட்டு லுனுபொக்குனு தம்மானந்த தேரரின் கீழ் பௌத்த தீட்சை பெற்று காவியுடை அணிந்து பௌத்த பிக்குவாக ஆனார். பின்னர் தனது “ராம் உதார் தாஸ்” என்கிற பெயரை "ராகுல சாங்கிருத்தியாயன்" மாற்றிக்கொண்டார். அவரின் எஞ்சிய காலம் முழுவதும் இந்தப் பெயரிலேயே அவர் இயங்கினார். ராகுல என்பது புத்தரின் மகனின் பெயர். இலங்கையில் பல பிக்குமார்கள் தமக்குச் சூட்டிக்கொண்ட பிரபலமான பெயர்.

இலங்கையில் ராகுலுக்குத் தேவைப்பட்ட நூல்களை வாங்கிக் கொடுத்து உதவியவர் இலங்கை தேசிய காங்கிரசின் தலைவராக, அரசபை உறுப்பினராக, அமைச்சராக எல்லாம் இருந்த சேர் டி.பி.ஜெயதிலக்க.

அமெரிக்காவைச் சேர்ந்த கேணல் ஒல்கொட், ரஷ்யாவைச் சேர்ந்த பிலாவட்ஸ்கி, இந்தியாவைச் சேர்ந்த அயோத்திதாச பண்டிதர் போன்றோர் கூட இதற்கு முன்னர் இலங்கைக்கு வந்து பௌத்த தீட்சை பெற்று பௌத்தர்களாக ஆன நமக்குத் தெரிந்த பிரபலமானவர்கள்.

இலங்கையில் சிங்களத்தையும், பாளி மொழியையும் பௌத்த இலக்கியங்களைப் பற்றி ஆழமாகக் கற்றுணர்ந்தார். பௌத்த புனித நூலான “திரிபீடக” (மூன்று பீடங்கள்) எனப்படுகின்ற பௌத்த கிரந்தங்களைக் கற்றுத் தேர்ந்து “திரிபீடகாச்சார்யா” என்கிற பட்டத்தையும் பெற்றார். ஒன்றரை வருடம் கழிந்து 01.12.1928 அன்று அவர் இலங்கையிலிருந்து நேபாளுக்கு பயணமானார். ஆனாலும் அவர் அதன் பின்னரும் இலங்கைக்கு அடிக்கடி வந்தார். சீன, நேபாள், திபெத் பகுதிகளுக்கு அவர் மேற்கொண்ட பயணங்களின் போது அதுவரை கண்டுபிடிக்கப்படாத முக்கிய புராதன பௌத்த ஓலைச்சுவடிகளைக் கண்டெடுத்து அவற்றை வெளியில் கொண்டுவந்தார்.

திபெத்திற்கு இவர் புத்த துறவியாகச் சென்று அங்கிருந்து பல மதிப்புள்ள புத்தகங்களையும் ஓவியங்களையும் இந்தியாவிற்குக் கொணர்ந்தார். இவை முன்னர் இந்தியாவின் நாலந்தா நூலகத்திலிருந்தவை ஆகும்.

பயணங்கள் தருவது போன்ற அனுபவங்களையும் படிப்பினைகளையும் உலகில் வேறெதுவும் தந்துவிடாது என்பது வரலாற்று உண்மை. ராகுல்ஜியும் ஒரு நாடோடியைப் போல ஏராளமான பயணங்களை மேற்கொண்டார். இந்த இடைக்காலப்பகுதியில் அவர் தனது பெயரை ராம் உதார் தாஸ் என்று மாற்றிக்கொண்டிருந்தார். சாதாரண பயணம் அல்ல. தன் வாழ்நாளில் 45 வருட காலத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணத்தில் செலவழித்தவர். அவரின் பயண அனுபவங்களைப் பற்றி அவரே தனியாக எழுதிய “ஊர்சுற்றிப் புராணம்” என்கிற நூல் அனைவரும் வாசித்து இன்புற வேண்டிய நூல். இந்திய பயண இலக்கியத்தின் தந்தை என்று இன்றும் அழைக்கப்படுபவர் ராகுல்ஜி.

வர்ணாசிரமதர்ம எதிர்ப்பு, வர்க்க விடுதலை, ஆணாதிக்க எதிர்ப்பு, பிற்காலத்தில் பொதுவுடைமை கொள்கையில் தீவிரம், அம்பேத்கருக்கு ஆதரவு, இட ஒதுக்கீட்டு விடயத்தில் காந்தியின் மீது கடுப்பு, பாகிஸ்தான் பிரிவினை தொடர்பில் “அம்மக்களின் கருத்துக்கே முன்னுரிமை” போன்ற அவரின் அரசியல் நிலைப்பாடுகள் இன்றும் வியக்கவைப்பவை.

இலங்கையில் அவர் பெற்ற அனுபவங்களை விவரித்து “லங்கா” தலைப்பில் ஒரு நூலை எழுதியிருப்பதை அறிய முடிந்தது. இக்கட்டுரைக்காக அந்த நூலைத் தேடிக்கண்டுபிடிக்க முடிந்தது. 1935 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த நூல் இந்தி மொழியில் 240 பக்கங்களைக் கொண்டது இது. அனுராதபுரம், பொலன்னறுவை கொழும்பு இடங்களைப் பற்றிய விவரிப்புகளையும், வரலாற்றுக் குறிப்புகளையும் பல புகைப்படங்களையும் உள்ளடக்கிய அந்த நூல் இதுவரை தமிழ், சிங்கள அல்லது வேறெந்த மொழியிலும் வெளிவரவில்லை என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்ய வேண்டும். 1950லிருந்து வெளியான அவரின் “எனது வாழ்க்கைப் பயணம்” என்கிற தலைப்பில் வெளியான 6 தொகுப்புகளில் முதலாவதில் “லங்கா” உள்ளடக்கப்பட்டிருக்கிறது.

ஆங்கிலத்திலிருந்து சிங்களத்துக்கு ஏராளமான படைப்புகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன என்பது உண்மை. இந்தி என்பதாலோ என்னவோ இது வரை “லங்கா” கண்டுகொள்ளப்படவில்லையோ தெரியவில்லை. அது மட்டுமன்றி ராகுல்ஜி பற்றி சிங்களத்தில் இதுவரை ஒரு சிறிய கட்டுரையைக் கூட என்னால் இனங்காண முடியவில்லை. இலங்கையைப் பொறுத்தளவில் தமிழர்களை விட சிங்கள பௌத்தர்களால் கொண்டாடப்படவேண்டியவர் ராகுல்ஜி. வால்காவிலிருந்து கங்கை வரை நூல் மாத்திரம் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதைக் கவனிக்க முடிகிறது.

பிற்காலத்தில் அவர் மாக்ஸிய இலக்கியங்களைக் கற்று ஒரு மாக்சியவாதியாக ஆனார். இந்தியப் பல்கலைக்கழகங்கள் அவரைக் கண்டுகொள்ளாத காலத்தில் அவரின் புலமையைக் கண்டு லெனின்கிராட் பல்கலைக்கழகம் இரு தடவைகள் அவரை பணியாற்ற அழைத்தது.

அவரின் இறுதிக்காலத்தில் இலங்கையில் வித்தியாலங்கார பல்கலைக்கழகம் (இன்றைய களனி பல்கலைக்கழகம்) அவரை தம்மோடு பணியாற்றும்படி அழைத்தது. அங்கே பேராசிரியராக பணியாற்றினார். இறுதிவரை அவரை எந்த இந்தியப் பல்கலைக்கழகமும் உரிய கௌரவத்தை அவருக்குக் கொடுக்கவில்லை.

ராகுல்ஜி தனது தொடர்ச்சியான சமூக விஞ்ஞானத் தேடல்களுக்கு ஊடாக மாக்ஸிய சிந்தனையால் கவரப்பட்டார். மாக்சியவாதியாகவே ஆனார். அதன்பின்னர் அவர் பௌத்தத்தை மார்க்சியத்துக்கூடாக எப்படி அணுகவேண்டும் என்று “மார்க்சிய அணுகுமுறையில் பௌத்தம்” (Buddhism: The Marxist Approach) என்கிற நூலை எழுதினார்.

உலகின் பல எழுத்தாளர்கள் தமது இறுதிக்காலத்தில் எதிர்கொண்டிருக்கிற அதே நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் என்பவற்றால் பாதிக்கப்பட்டதுடன், மிகை உழைப்பு உடலின் ஆரோக்கியத்தையும் வெகுவாக பாதித்து நினைவாற்றலையும் இழந்து 1963இல் டார்ஜிலிங்கில் இறந்தார்.



உசாத்துணை:

1. Alaka Atreya Chudal – “Rahul Sankrityayan and the Buddhism of Nepal” - European Bulletin of Himalayan Research 46: 62-87 (2015)

2. பிரபாகர் மாச்வே- இந்திய இலக்கிய சிற்பிகள் "ராகுல் சாங்கிருத்யாயன்" – 1986

3. Rahul Sankrityayan – “Lanka” – Sahitya sevak sangam, 1935

4. கலாநிதி கஹாவத்தே சிறி சுமேத ஹிமி – “புராதன இந்தியாவின் முதல் பௌத்த விகாரை” – திவயின (01-10.2014)



நன்றி - அரங்கம்