Tuesday, December 31, 2013

ஜபம் - பார்வதி ராமச்சந்திரன்


கிடைத்தற்கரிய இந்த மனிதப் பிறவியில், மன அமைதி என்பது பலருக்கும் கிட்டாத ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. ஆனால், இந்தப் புனித பாரத மண்ணில் தோன்றிய ஞானியரும், யோகியரும், மஹான்களும், மன அமைதி, நிம்மதி மட்டுமல்லாது, இறைவனின் சந்நிதியையும் சாயுஜ்யத்தையும் அருளும் மிக எளிமையானதொரு வழியை, நமக்குக் காட்டிச் சென்றுள்ளனர். அற்புதமான மார்க்கம் அது. 'ஜபம்' என்ற இந்த ஒற்றை வார்த்தையின் பொருளை முழுமையாகப் புரிந்து கொண்டு, பயன்படுத்துபவர் நிச்சயம் பேறு பெற்றவர்களே!! இது சாமானியர்களும் மனிதப் பிறவியின் பயனை அடைவதற்காக அருளப்பட்ட உன்னத சாதனம்.

பொதுவாகவே ஒலி வடிவங்கள் ஒருவரது மனதிலும் வாழ்விலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் திறனுடையவை. நேர்மறை மற்றும் எதிர்மறையான  சொற்கள் ஏற்படுத்தும் பாதிப்பு விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கபட்ட ஒன்று. இசையின் மகத்துவம் அறியாதவர் யார்?. இறை நாமம் அல்லது மந்திரம் சொல்வது, நம் உடலில் நேர்மறையான விளைவுகளைத் தரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.

ஜபம் என்றால் என்ன என்பது பற்றிய ஒரு சின்ன விளக்கம். இஷ்ட தெய்வத்தின் திருநாமத்தை அல்லது  மந்திரத்தை திரும்பத் திரும்பச் சொல்வதே ஜபம்.
 மனதுக்குள் இதைச் செய்வது மானசீக ஜபம் என்றும், தனக்கு மட்டுமே கேட்கும்படி மிக மெதுவாக இதைச் செய்வது 'உபாம்சு' என்றும் பிறருக்குக் கேட்கும்படியான ஜபம், 'உச்சாடனம்' என்றும் கூறப்படுகிறது. லிகித ஜபம் என்பது, நம் இஷ்டதெய்வத்தின் திருநாமத்தை எழுத்தால் எழுதுவது. எழுதும் போது, மௌனம் அனுசரிப்பதும், முழு மன ஈடுபாட்டுடன் செய்வதும் மிக முக்கியம்.

இதில் இறைவனின் திருநாமத்தைச் சொல்வது 'நாம ஜபம்'. குறிப்பாக, ஒரு தெய்வத்துக்கு உரிய மந்திரத்தை, முறையாக, குருவிடம் இருந்து உபதேசம் பெற்று, அவர் காட்டிய வழியில் ஜபிப்பது 'மந்திர ஜபம்'. நாம ஜபத்திற்கு கட்டாயமான நியமங்கள் அவசியமில்லை.   ஆனால், மந்திர ஜபத்திற்கென்று நியமங்கள் உண்டு.

ஜபமானது, யோகத்தில் ஓர் அங்கமாதலால் ஜபயோகம் என்றே அழைக்கப்படுகின்றது. மிக நீண்ட நேரம், பலரால் சேர்ந்து செய்யப்படும் ஜபம், 'ஜபயக்ஞம்' என்று அழைக்கப்படுகின்றது. ஸ்ரீமத் பகவத் கீதையில், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, 'யக்ஞங்களில் நான்  ஜப யக்ஞமாக இருக்கிறேன்'  (யஜ்ஞாநாம் ஜபயஜ்ஞோ அஸ்மி ) என்று அருளுகிறார்.
சுவாமி சிவானந்தர், 'பகவானையும், பக்தனையும் இணைக்கும் பாலமே ஜபம்' என்கிறார்.

ஜபம் செய்வதால் ஏற்படும் நன்மைகளை விவரித்துச் சொல்ல ஒரு ஆயுள் போதாது!!!.  மனம் ஒருமுகப்படுதல் என்பது ஒவ்வொரு செயலின் வெற்றிக்கும் இன்றியமையாதது. அதுவும் ஆன்மீகப் பாதையில் செல்ல விழைவோருக்கு மனமே மூலதனம். ஸ்ரீசாரதா தேவியார், 'ஆன்மீக முன்னேற்றம் அடைவதற்கு, ஒருவரது மனமே அவருக்கு அருள் புரிவதாக இருக்க வேண்டும்' என்று அருளுகிறார். தியானம், தவம், யோகம் அனைத்தும், தூய மனம் வாய்த்தோருக்கு மட்டுமே தனக்கான பாதைகளைத் திறந்து விடுகின்றன. மனம் தூய்மைப்படுவதற்கு, ஒருமைப்பட்ட மனதோடு ஜபம் செய்வது அவசியம்.
தியானம், முதலில் ஜபத்தோடு கூடியதாகச் செய்யப்படுகின்றது. அதன் பின், மெல்ல மெல்ல ஜபம் தானே நின்று, தியான நிலை, நிலைபெறுகிறது.
ஆன்மீக வாழ்வு என்பது இவ்வுலக வாழ்வுக்குப் புறம்பானதன்று. தீவிரமான ஒரு எண்ணமோ சிந்தனையோ மனதில் எழுமாயின், மனம் திரும்பத் திரும்ப அதிலேயே அலைபாயாது நிலைபெற்றிருக்கும். அதைப் போல, இயல்பாகவே அலைபாயும் மனது, இறைநாமத்தைத் திரும்பத் திரும்பச் சொல்வதால்,   மெல்ல மெல்ல அடங்கி, ஒரு புள்ளியில் ஒடுங்குகிறது. மனதில் தோன்றும் எண்ணங்கள், செயல்கள் அனைத்தையும் மனம் உற்று நோக்கத் துவங்குகிறது. இதன் காரணமாக, எண்ணங்கள், செயல்பாடுகள் இவற்றில் ஒரு ஒழுங்குமுறை செயல்படுத்தப்படுகின்றது. அநாவசியமான எண்ணங்களோ, செயல்பாடுகளோ நிகழ்வதில்லை. சாந்தமான, தூய மனமானது, தன்னைச் சுற்றியுள்ள அனைத்திலும் நேர்மறை சக்தியை வியாபிக்கச் செய்கிறது. இதன்  மிக உச்ச நிலையில், 'தன்னையறிதல்' மிக இயல்பாக நிகழ்கிறது.
தொடர்ந்த ஜபம், ஒருவர், தமது உலகக் கடமைகளை, எவ்விதப் பற்றுதலுமின்றி, அமைதியான முறையில் நிறைவேற்ற நிச்சயம் உதவுகிறது.
நெருப்புக்கு எப்படி தன்னைச் சார்ந்தவற்றை எரிக்கும் தன்மை இருக்கிறதோ அப்படியே இறை திருநாமங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லுதலுக்கும் ஒருவரது பாவங்களை, கர்ம வினைகளை பஸ்மமாக்கும் தன்மை இருக்கிறது.
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், " தெரிந்தோ, தெரியாமலோ, தன்னறிவுடனோ, அறிவில்லாமலேயோ எந்த ஸ்திதியிலாகட்டும், ஒருவன் பகவந்நாமத்தை சொல்வானானால் அவனுக்கு அதன் பலன் கிட்டும். தானாகவே விரும்பி ஆற்றுக்குப் போய்க் குளிப்பவனுக்கும், வேறொருவனால் ஆற்றில் தள்ளப்படுபவனுக்கும் அல்லது தூங்கும்போது வேறொருவன் கொட்டிய தண்ணீரில் நனைபவனுக்கும் ஸ்நான பலன் ஒருங்கே ஏற்படுகிறது அல்லவா?" என்று நாம ஜபத்தின் மகிமையைச் சொல்கிறார்.
ஜபம் செய்வோர், அது நாம ஜபமாயினும் சரி,மந்திர ஜபமாயினும் சரி, தமக்கு மட்டுமல்லாது பிரபஞ்சத்துக்கே நன்மை செய்பவர்களாகிறார்கள். பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், 'பணம் இருப்பவர், பணத்தின் மூலம் சேவை செய்யட்டும், இல்லாதவர், ஜப தவங்களின் மூலம் சேவை செய்யட்டும்' என்று அருளியிருக்கிறார்.   ஒருவர் தொடர்ந்து ஜபம் செய்யும் போது, அந்த ஜபமானது, மிக அற்புதமான அதிர்வலைகளை அவரிடத்திலிருந்து வெளிப்படச்செய்து, அவரைச் சுற்றிலும் தெய்வீகமான, அவரைக் காண்பவருக்கு அமைதியை ஏற்படுத்தும் ஒரு சூழலை உருவாக்குகிறது.
ஸ்ரீமத் பாகவதம் கூறும் அஜாமிள சரிதமும், இறைநாமம் சொல்லுதலின் மகிமையையே பேசுகிறது. இறக்கும் தருவாயில், தன் குழந்தையின் பெயரை, 'நாராயணா' என்று உச்சரித்தவாறே இறந்ததால், அஜாமிளனுக்கு அவன் கர்மவினைகளிலிருந்து விடுதலை கிடைத்தது. ஒரு  முறை , இறைநாமத்தை உச்சரித்ததற்கே இத்தகைய பலன் என்றால், ஜபத்தின் மகிமையை நாம் தெளிவாக அறியலாம்.
'மரா, மரா' என்று உச்சரிக்க ஆரம்பித்த வேடன், வால்மீகி முனிவரானது  இறைநாமத்தின் மகிமையை விளக்கும்  ஒரு உதாரணம்!!..
காஞ்சி ஸ்ரீபரமாச்சாரியாரின் திவ்ய சரிதம், ஜபத்தின் மகிமையை விளக்கும் ஒரு நிகழ்வை எடுத்துக் காட்டுகிறது. மாங்காடு ஸ்ரீகாமாட்சி அம்மனின் ஆலயம் பெரும் சிறப்பு வாய்ந்ததாக இருந்த போதிலும், ஸ்ரீஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மஹா தெய்வீக சக்திகள் வாய்ந்த ஓர் அர்த்த மேருவுடன் கூடியதாக இருந்த போதிலும், அங்கு, அந்த நற்பலன்களை அடைய வருவோரின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. ஆலயத்தின் பரம்பரை அர்ச்சகராகிய மறைதிரு. ஏகாம்பர சிவாச்சாரியார், ஸ்ரீமஹாபெரியவரின் ஆலோசனைப்படி, ஆலயத்தினுள் தீவிரமான ஜப யோக சாதனையில் ஈடுபடலானார். இன்று ஸ்ரீமாங்காடு காமாட்சி அம்மன் ஆலயம், கோடிக்கணக்கான பக்தர்களால்  கொண்டாடப்படும்  தலமாகத் திகழ்கிறது. இந்த நிகழ்வு, ஆசுகவி வேலனாரின், 'மாங்காடு காமாட்சி மகிமை' நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இறைநாமத்தைச் சொல்வது மட்டுமல்ல, யாரேனும் சொல்வதைக் கேட்பதாலேயே ஒருவர் தமது கர்மவினைகளிலிருந்து விடுபடுகிறார். இதை விளக்கும் ஒரு கதை பிருஹதாரணிய புராணத்திலிருந்து..
பிங்களா என்னும் பெண், முறையற்ற வாழ்வு வாழ்ந்து வந்தாள். ஒரு நாள், ஒரு திருடன், தான் திருடிய ஒரு கிளியை அவளுக்குப் பரிசளித்தான். அந்தக் கிளி, ஒரு பக்தரின் வீட்டில் வளர்ந்து வந்த கிளி. அது,'ராம ராம' என்று சொல்லப் பழகியிருந்தது. இடைவிடாது, தன் ராம நாம ஜபத்தால் அந்த இல்லத்தையும் பிங்களையையும் புனிதப்படுத்தியது அந்தக் கிளி. இறைநாமத்தின் மகிமையை அறியாதவளாயினும், தன்னை அறியாமல், தன் பாவங்களிலிருந்து விடுதலை அடைந்தாள் பிங்களை.
 “எல்லாம் சரி!!!... நாம ஜபத்தின் மகிமை அளப்பரியது. மனதைத் தூய்மைப்படுத்தி, கர்ம வினைத் தளைகளிலிருந்து விடுபட உதவுகிறது. அமைதியான முறையில் நம் கடமைகளைச் செய்தவாறே, இவ்வுலகப் பிரச்னைகளினூடாக நம் வாழ்க்கைப் படகைச் செலுத்த உதவுகிறது. ஆனால் நேரம் வேண்டுமே!!!” என்பவர்களுக்கு, அன்னை ஸ்ரீசாரதா தேவியாரின் ஒரு அமுத வாக்கே நல்லதொரு பதிலாக இருக்குமென்று நினைக்கிறேன்.
ஒரு முறை, அன்னையின் ஜபத்திற்கான நேரம் குறித்து, சுவாமி மாதவானந்தர் அன்னையிடம் கேட்ட போது, அன்னை கீழ்க்கண்டவாறு கூறுகிறார்..
'என்ன செய்வது மகனே!. நாங்கள் பெண்கள். வீட்டு வேலைகள் எப்போதும் இருக்கின்றன. இவற்றை விடுத்துத் தனியாக ஜபம் செய்ய முடியாதே!.  சமைப்பதற்காக உலை வைக்கிறேன். அரிசி கொதித்து சாதம் ஆகும் வரை ஜபம் செய்கிறேன். பிறகு குழம்பு தயாரிக்க வேண்டும். அது பதமாகும் வரை மீண்டும் ஜபம் செய்கிறேன். சமையல் முடிந்ததும் மீண்டும் ஜபம் செய்கிறேன். இவ்வளவு தான் என்னால் செய்ய முடியும். நான் வேறு பெரிதாக என்ன ஆன்மீக சாதனை செய்துவிட  முடியும்?' என்ற அன்னையின் மொழிகளே 'மனம் இருந்தால் மார்க்கம் உண்டு'  என்பதை  அழகாக விளக்குகிறது.
தினம் மிகக் குறைந்த அளவு, மிகக் குறைந்த நேரத்தில் செய்யப்படும் ஜபத்தின் மகிமையை, எவ்வளவு சொன்னாலும் அனுபவத்தின்  மூலமே உணர முடியும். நம் தினசரிக் கடமைகளுள் ஒன்றாக ஜபம் செய்வதைச் சேர்க்க‌ முடியுமெனில், நமக்குள்ளும் அற்புதங்களை உணரலாம்!!!
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!!


புத்தாண்டு பிறக்குது !

சி. ஜெயபாரதன், கனடா

புத்தாண்டு பிறக்குது ! நமக்கு
புத்தாண்டு பிறக்குது !
கடந்த ஆண்டு ஓடுது, ஆயினும்
தடம் இன்னும் இருக்குது !
வித்தைகள் சிறக்கணும் !
வேலைகள் பெருகணும் !
வீணர்கள் தேறணும் !
சித்தர்கள் பிறக்கணும் !
பித்தர்கள் தெளியணும் !
யுக்திகள் கூர்மை ஆகணும் !
சண்டைகள் குறையணும் !
சாதிகள் சேர்ந்து வாழணும் ! ​
சமய இனத்தர் கைகோர்த்து வசிக்கணும் !
பொ ரி​ உருண்டை ஆச்சு பூத உலகம் !
திறமைகள் ஒன்றாய் வலுக்கணும்
வறுமை குன்றி வருவாய் பெருகணும்.
மின்சக்தி பெருகி யந்திரம் ஓடணும்.
வேளாண்மை விருத்தி ஆகணும் !
பஞ்சம் குறைய மிஞ்சி விளையணும் !
லஞ்ச மனிதர் அஞ்சி அடங்கணும் !
தேசப் பற்று நமக்குள் ஊறணும் !
தேச விருத்தி குறிக்கோள் ஆகணும் !
தேச மக்கள் நேசம் பெருகணும் !
விடுதலை நாடு சீராய்த் தழைக்க,  
கடமைகள் முடிக்கணும்; நாட்டுப்
பொறுப்புகள் ஏற்கணும் !  

முப்பாலும் கலந்து - துரை.ந.உ.

அறம்



1.
தாண்டவம் வென்றழித்தல்; ஆணவம் கொன்றொழித்தல்;
ஆண்டவம் காணும் வழி
2.
மாத்திரைப் பையோ(டு) இறைதேடிச் செல்லுமந்த
யாத்திரையால் என்ன பயன்

பொருள் 



3.
எதுவும் இணையில்லை என்போர் அறியார்
அதுவும் நிலையில்லை என்று

4.
புரியும் வரைச்சொல் வதைவிடவும் ஒன்றைப்
புரியும் படிச்சொல்லல் நன்று

5.
கரையானைக் கண்டால் உடன்ஒதுக்கு; ஆற்றங்
கரையானைக் கண்டால் ஒதுங்கு

6.
கூட்டல் வகுத்தல் கழித்தல் அறி;அது
காட்டும்;உன் வாழ்வின் வழி

இன்பம் 

மன்னவளே!


7.
​இல்லாமை இல்லாமால் போக்குமோர் மந்திரமுண்(டு);
இல்லாள் எனும்பேர் அதற்கு

​8.
​இணைதுணை யானால் மருந்து;வந்(து) அமைந்த
துணைஇணை யானால் விருந்து


என்னவனே!​

​9.
​மலைபோல் எழுவான்; மழைபோல் பொழிவான்;
அலைபோல்
​இழுப்பான் அவன்

10.
​பாயும் அவன்வேகம் கண்​டால் ​புரளுமாம்
பாயும் பயந்து
​மிரண்டு

பாரதத்தின் பிற மாநிலங்களில் தமிழர் குடியேற்றம் - திவாகர்


திவாகர்

இருபதாம் நூற்றாண்டில் வெள்ளையர்கள் ஆண்டபோதும் சரி, அதற்குப் பிறகு சுதந்திரமடைந்த இந்தியாவிலும் சரி, வேலை இல்லா திண்டாட்டம் என்ற ஒன்று மக்களைப் பாடாய்ப் படுத்தியதால் எங்கெல்லாம் வேலை இருக்கின்றதோ எங்கெல்லாம் வாழ்வாதாரத்துக்கு சந்தர்ப்பங்கள் தோன்றுகின்றனவோ எங்கெல்லாம் சென்றால் உழைப்பால் பசியை வெல்லலாம் என்று தோன்றியதோ அங்கெல்லாம் மக்கள் மொழி பேதமில்லாமல் குவியத் தொடங்கினர் என்பதை யாரும் மறுக்கமுடியாதுதான். ஆனால் இக்கட்டுரை இப்படி சமீபகாலங்களில் நடைபெற்ற மாற்றங்களை விட்டு சற்று ஆழமாக திரும்பிப்பார்க்கவேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டது. முக்கியமாக தமிழர்கள் இடமாற்றம் அதுவும் தமிழ் பேசப்படும் தமிழ் மாநிலத்தை விட்டு பாரதத்தில் மற்ற மாநிலங்களில் தமிழர்கள் குடியேற்றம் எப்படி ஏற்பட்டிருக்கலாம் என்றும் ஆராயப்பட்டு எழுதப்பட்டதாகும்.

உலகிலுள்ள பண்டைய குடி இனங்களில் காலம் காலங்களாக ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாற்றத்தை தன்னுள் வாங்கிக்கொண்டு அதனால் புத்துணர்ச்சி பெற்று மென்மேலும் பெருமை பெற்று வாழும் குடி தமிழ்க்குடி ஒன்றுதான் என்று மிகத் தைரியமாக சொல்லவேண்டும். தமிழர்களின் தோற்றத்தைக் காலக் கணக்குக் கொண்டு நிச்சயமாகக் கணக்கிடமுடியாது. அவர்கள் எந்தப் பகுதியில் முதலில் தோன்றினார்கள் என்பதையும் நம்மால் இன்னமும் நேர்த்தியாக விளக்கமுடியவில்லை. கடலால் அழிந்த குமரிக்கண்டத்தில் தமிழர்கள் தோன்றினார்கள் என்று பொதுவாக நிறுவப்பட்டாலும், குமரிக்கண்டம் என்பது ஆப்பிரிக்காவையும் ஆஸ்திரேலியாவையும் மத்தியில் இந்தோனிஷியாவையும் இணைத்துக் காணப்பட்ட பூமி என்று பல தன்னார்வக் கட்டுரைகள் வெளியிடப்பட்டாலும் நிறுவப்படாத செய்திகளை நாம் இக்கட்டுரையில் கொண்டு வரப்போவதில்லை. தற்போதுள்ள தமிழக-கேரள  பூமியே தமிழர்கள் தோன்றிய பூர்வ நிலம் என்ற வழக்கையே தமிழர் சொந்த பூமியாக ஏற்றுக்கொண்டு, இப்படி தம் சொந்த பூமியிலிருந்து பிற இடங்களுக்கு இடம் பெயர்ந்த வரலாற்றை மட்டும் கவனிப்போம்.

சங்கத் தமிழ் சொல்லும் குமரிமுனையிலிருந்து திருவேங்கடம் வரை உள்ள நிலப்பரப்பில் ஆதியில் நிலங்களின் தன்மைக்கு ஏற்ப தமிழர்கள் வாழ்ந்தாலும், தங்கள் நாகரீகத்தை தங்கள் சொந்த பூமியிலிருந்து கொண்டே வளர்த்துக்கொண்டும் மேன்மைப்படுத்திக் கொண்டும் வாழ்ந்தாலும் இன்றைய பாரதத்தில் பிற இடங்களிலும் சங்ககாலம் தொட்டே தங்கள் இனப்பெருக்கத்தைக் கொண்டு சென்றார்கள் என்றே சொல்லலாம். அதே போல இன்றைய தென்னக மொழிகளான கன்னடம், தெலுங்கு, துளு (மலையாளத்தையும் தமிழையும் தற்போதைக்குப் பிரித்துப் பார்க்கவில்லை. காரணம் தமிழின் மிகப்பெரிய தாக்கத்தைக் கொண்ட மொழியாக மலையாளம் உள்ளது) ஆகியவைகளில் தமிழின் வழக்கமான அளவில் பேசப்படும் சாதாரணச் சொற்கள் கலந்து மக்கள் வாயால் பேசப்படும்போதுதான் தமிழர்கள் இங்கெல்லாம் குடியேறி இருக்கிறார்கள் என்பது விளங்கும். இந்தச் சொற்களைப் பற்றி அதிகமான அளவில் கட்டுரைகள் வடிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, துளு நாட்டிலும் (மேற்குக் கடையோர மங்களூர் உடுப்பி போன்ற இடங்கள்) அதே போல தென் கலிங்கநாட்டில் (இன்றைய வடகிழக்கு ஆந்திரா) மக்களால் பேசப்படும் சாதாரண பேச்சு வழக்கில் கூட தமிழுக்கே தனிப்பட்ட உரிமையான பல சொற்கள் அந்தந்த மொழிகளோடு கலந்து விட்டதையும் அவர்களிடத்தில் நாம் பேசும்போது சாதாரணமாகவே அறியலாம். உதாரணத்துக்காக உயரமான மலைக்குடியேற்றத்துக்காக செல்லும் ஆரம்பப்பகுதியை தமிழில் அடிவாரம் என்றழைப்பது சகஜம்தான். இன்றைக்கும் தென் கலிங்கத்து மலைகளின் கீழ்ப்பகுதியை அடிவாரம் அல்லது அடவிவரம் என்றே அழைக்கிறார்கள். இது உதாரணத்துக்குச் சொல்லப்பட்டதுதான். தமிழர்கள் எந்தந்த சமயங்களில் இப்படி குடியேற்றம் மாறினார்கள் என்பதை சற்று விளக்கமாகக் கவனிக்கலாம்.

தமிழர்கள், பற்பல ஆண்டுகளாகவே கடும்  உழைப்பாளிகளாகத்தான் இருந்ததாக தமிழர் பற்றிய ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன். இன்றைக்கும் கூட கர்நாடகத்திலும் ஆந்திரத்திலும் கிரானைட் குவாரிகளில் ஏராளமான அளவில் தமிழர் குடும்பங்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளன. இன்றைக்கும் கூட கிரானைட் ஏற்றுமதி இந்தியாவிலிருந்து மிக அதிக அளவில் ஐரோப்பிய நாடுகளுக்கும் கீழை ஆசிய நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது என்பதும் அந்த ஏற்றுமதி பெரிய அளவில் நடைபெற தமிழர்கள்தாம் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதும் எத்தனை பேர் அறிந்தார்களோ நாம் அறியோம். (ஒருவேளை பழைய நாளேடுகளில் கொத்தடிமை மீட்கப்பட்டனர் என்ற சிறு செய்திகள் படித்திருப்போருக்கு இவை ஞாபகம் இருக்கவாய்ப்புண்டுதான்.)
தமிழர்கள் மூன்றுவிதமாக செயல்திறன்களில் சிறந்து விளங்கினார்கள். பண்டைய காலத்தில் இரும்பு உற்பத்தி மிக அதிக அளவில் சக்கரக்கோட்டம் (இன்றைய பல்சார் மாவட்டம், சட்டிஸ்கர் மாநிலம்) என்ற நகரத்தைச் சூழந்த காடுகளில் நடைபெற்றது. பதினோராம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்திலும் மத்தியிலும் இந்த சக்கரகோட்டத்தில் மிகப் பெரிய இரண்டு யுத்தங்கள் நடைபெற்றன. ராஜேந்திர சோழன் காலத்தில் (கி.பி 1012-1042) நடைபெற்ற ஒரு யுத்தம் அங்குள்ள இரும்புச் சுரங்கங்கள் சோழர்கள் வசம் முழுமையாக சிக்குவதற்குக் காரணமாக இருந்தது. இரும்பு என்பது மக்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான அங்கமாக அமைந்து விட்ட காலகட்டத்தில் இந்த இரும்புச் சுரங்கங்களை சோழ அரசே தங்கள் வசம் வைத்திருந்ததற்கான பல ஆதாரங்களை சரித்திர ஆய்வாளர்கள் பல ஆண்டுகளாகவே கண்டறிந்துள்ளனர். இரும்புச் சுரங்கங்களில் தமிழர்களே வேலை செய்தனர். தமிழர்களே காவல் காத்தனர். ராஜேந்திர சோழனுக்குப் பிறகு குலோத்துங்க சோழன் (கி.பி 1070-1120) காலத்திலும் இந்த இரும்புச் சுரங்கங்களைத் தக்க வைத்துக் கொள்ள இன்னொரு முறை ஒரு யுத்தம் நடந்ததாக  குலோத்துங்கன் மெய்க்கீர்த்தியில் ஒரு வரி உள்ளது. ஆனால் காலம் செல்ல செல்ல இந்தச் சுரங்கங்கள் மத்திய இந்தியாவின் உள்ள வேறு பல அரசர்களின் கட்டுப்பாட்டுக்குள்ளும், பிறகு தில்லி சுல்தான்களின் கட்டுப்பாட்டிலும் வந்து விட்டது. ஆனால் பத்து, பதினோராம் நூற்றாண்டில் குடியேறிய தமிழ்த் தொழிலாளக்குடும்பங்கள் நிலையாக அங்கேயே தங்கள் வாழ்க்கையைத் தொடர ஆரம்பித்துள்ளனர். வீரர்களுக்குத்தான் எப்போதுமே இடமாற்றம் உண்டாகுமே தவிர தொழிலாளப் பெருமக்களுக்கு ஏது இடமாற்றம். மேலும் ஒரு தொழிலில் தம் திறமையைக் காண்பிக்க முற்பட்டுவிட்டால், அதன் சிறப்புத் தன்மையால் எந்த இடத்தில் தங்கள் தொழிலைச் செய்கிறோமோ அங்கேயே தங்கிவிடும் பழக்கம் எல்லாக் குடியினரிடத்திலும் உண்டு. இப்படியாக கூட்டம் கூட்டமாக அனுப்பப்பட்ட தமிழ்க்குடும்பங்கள்தாம் இன்றைக்கும் பிஜித்தீவி கரும்புத் தோட்டங்களிலும், மலேஷிய ரப்பர் தோட்டங்களிலும், இலங்கை தேயிலைத் தோட்டங்களிலும் வேர்விட்டு மரமாகி ஆலமாகி நின்று விட்டதை யார்தாம் மறுக்கமுடியும். அதே போலத்தான் அன்றைக்கு சக்கரக்கோட்டக் காடுகளிலும் மேலும் வடக்கே நீண்ட கனிமச் சுரங்களிலும் வேலைக்காகச் சென்ற தமிழர்கள் அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டனர்.

ஆனால் காலம் கொடுமையானது. பின் வந்த காலங்கள் இரும்புக்காக எத்தனையோ போர்களை சந்தித்தன. போர்களை நடத்தியவர்கள் இந்திய சிற்றரசர்கள் மட்டுமல்ல, துருக்கியில் இருந்து வந்து நம்மை ஆண்ட துருக்கர்களும் அதற்குப் பின்னர் வந்த ஐரோப்பியர்களும் கூட. சுரங்கங்களில் உள்ள தொழிலாளர்கள் பிழைப்பு அவ்வளவாகப் பாதிக்கப்படாவிட்டாலும் அவர்களது பரம்பரை பழக்கவழக்கங்கள் காலத்தால் மாறுபட ஆரம்பித்தன. இந்தக் கலாசார மாற்றம் தமிழனின் வாழ்க்கை முறையையும், மொழியையும் பாதித்தது என்று கூட சொல்லலாம்.

பீஹார், மத்தியப்பிரதேசம், சட்டிஸ்கர் போன்ற மாநிலங்களில் தமிழ்க்கடவுளான முருகர் வழிபாடுகள் நீண்டகாலமாக இருந்து வருகின்றன. பின்னால் வந்த கதைகள் முருகனை வடநாட்டுக் குமாரசுவாமியாக ஆக்கினாலும் தமிழனின் தலைக் கடவுள் முருகனை என்றும் தமிழர்களின் வாரிசுகள் மறக்கவில்லை என்பதற்கான சான்றுதான் இது. இன்று அவர்கள் அந்த மண்ணின் மைந்தர்களாக மாறிப்போனாலும் முருக வழிபாடு ஒன்றே அவர்களை இன்னமும் தமிழகத்தின் வேரை மிகப் பலமாக அவர்கள் மனதில் ஊன்றியிருக்கிறது என்று சொன்னாலும் மிகை அல்ல.

அதே போல ஆந்திரத்தில் வேறு வகையான நிலையில் தமிழர்கள் குடிபெயர்ந்தனர். கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்து ஏழாம் நூற்றாண்டு வரை ஆந்திரம் முழுவதும் போயர்கள் எனும் மலைவாழ் இனத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இந்த போயர்கள் மிகவும் உன்னத நிலையில் இருந்ததாக அவர்களைப் பற்றிய சரித்திரம் சொல்கிறது. மேலும் இவர்கள் வடநாட்டில் உள்ள காசியில் வேதம் பயின்று, புரிநூல் தரித்து அவர்கள் வேதக் கொள்கைகளை ஏற்று அவைகளை மலைவாழ் மக்களிடம் பரப்புவதற்குக் காரணமாக இருந்தனர். மடிபோயா என்பவர் மடிசர்மா என்று பெயர் மாறியதற்கான ஆதாரங்களும் ஆந்திர சரித்திரத்தில் உள்ளன. ஆனால் எட்டு, ஒன்பது நூற்றாண்டுகளில் வந்த சாளுக்கிய வம்சத்தினர் ஆந்திரத்தை இரண்டாகப் பிரித்து கீழைச் சாளுக்கியம் என ஆந்திரக் கிழக்குப் பகுதியையும் மேலைச் சாளுக்கியம் என இன்றைய மேற்கு ஆந்திரம், கர்நாடகம், மகாராட்டிரத்தின் தென்பகுதியையும் ஆள ஆரம்பித்தனர். இவர்கள் வேத மதத்தை முறையாகப் பரப்ப கோவில்களை அதிகம் கட்ட ஆரம்பித்தனர். 9ஆம் நூற்றாண்டில் ஐந்து பெரும் சிவன் கோவில்கள் ஆந்திரத்தில் எழுப்பப்பட்டு இன்றும் பஞ்சராமம் ஸ்தலங்கள் என்ற பெயருடன் சிறப்பாக போற்றப்படுகின்றன.

சரி, இவை எதற்காக சொல்கிறோம் என்றால் வேதபாடங்கள் சொல்வதற்கு போயர்கள் ஏற்கத்தக்கவர் இல்லை என்று கீழைச் சாளுக்கிய ராஜாக்கள் அந்த இனத்து மக்களோடு யுத்தம் செய்ததாகவும் கலிங்கம் முதல் இன்றைய ஓங்கோல் வரை நீண்ட நாட்களாக நடந்த சண்டைகளில் போயர்கள் வீழ்த்தப்பட்டதையும் ஏகப்பட்ட செப்புப்பட்டயங்கள் பறைசாற்றுகின்றன. இந்த சமயத்தில் தமிழகம் மட்டுமே கல்வி கேள்விகளில் சிறந்து விள்ங்கியதால் கல்வியறிவு பெற்ற வேத விற்பன்னர்கள் பலர் குடும்பம் குடும்பங்களாக ஆந்திர தேசத்துக்கு அனுப்பப்பட்டனர், என்றும் அவர்களுக்குத் தோதாக ஆங்காங்கே கோவிலக்ள் கட்டப்பட்டு அவர்கள் பராமரிப்பில் நிலங்கள் நிவந்தமாகவும் விடப்பட்டதற்கு செப்புப்பட்டயங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன.. இன்றைய குண்டூர், கிருஷ்ணா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, விசாகப்பட்டண  மாவட்டங்களில் இந்தத் தமிழ் அந்தணர்கள் குடியேற்றம் நடந்ததையும் குலோத்துங்கனின் செப்புப் பட்டயம் உறுதி செய்கிறது. காஞ்சி பரமாச்சாரியார் தனது தெய்வத்தின் குரல் புத்தகத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடும்போது, இவர்கள் வடநாட்டைச் சேர்ந்த அந்தணர்கள் இல்லை என்றும் சாமவேதம் கற்ற தமிழ் அந்தணர்கள்தாம் என்றும் உறுதி செய்கின்றார். இன்றைக்கும் இந்தத் தமிழர்கள் தங்கள் குடிப்பெயராக ’திராவிட’ என்ற பெயரை வைத்துக்கொண்டுள்ளார்கள். தமிழை திராவிடமொழி என்று வடநாட்டார் பல்லாண்டுகளாக எழுதி வருவது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த திராவிட குடும்பத்தார் பல்லாயிரக்கணக்கில் ஆந்திராவில் இருந்தும், தம் முன்னோர் அனைவரும் தமிழர்களே என அறிந்தும் தம் மொழியை மட்டும் மறந்துபோயினர்.. இன்று அதற்காக வருத்தப்படும் பல குடும்பங்கள் இங்கு உள்ளன என்றாலும் காலம் எனும் காலன் செய்த கோலம் இது என்று சொல்லலாமா அல்லது முன்னோர்கள் முயலாததால்  காலத்தின் மாற்றத்தில் தமிழ்மொழியை நழுவவிட்டக் கொடுமையை என்று நம் முன்னோர்கள் மீது பழியைப் போடுவோமா?
அதே போல வைணவத்தைப் பரப்புவதற்காக நாதமுனி எனும் வைணவப்பெரியார் – 10ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தவர், இவர் வைணவமதத்தின் ஆதி குரு எனப்போற்றப்ப்படுபவர். அவர் வைணவ மதத்தைத் தனிப்பட்ட வகையில் பரப்புவதற்காக பல வைணவக் குடும்பங்களை தமிழகத்திலிருந்து ஆந்திரா முழுவதும் அனுப்பி வைத்தார். இப்படி ஒரு வைணவக் குடும்பத்துக்கு நிலம் நிவந்தம செய்யப்பட்டதற்கான இன்றைய பிரகாசம் மாவட்டம் காரம்சேடு வேணுகோபாலசுவாமி கோயிலில் கல்வெட்டுக் குறிப்பு ஒன்று எடுத்துக் காட்டுகிறது, இன்றும் ஆந்திரத்தின் கடைக்கோடியில் உள்ள ஸ்ரீகூர்மம், சிம்மாசலம் கோயில்களில் கூட இந்த வைணவக்குடும்பங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அவர்களால் தமிழ் பேசமுடியவில்லை என்றாலும், கோயில்களில் தமிழ்ப்பிரபந்தங்கள் பாடுவதை வழக்கத்தில் இன்னமும் வைத்துள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அதே போல ஜெயங்கொண்டார் தான் பாடிய கலிங்கத்துப் பரணியில் இன்றைய ஒடிஷா-ஆந்திர எல்லையில் தமிழ்வீரர்கள் கலிங்கத்தோடு நடைபெற்ற போரில் வெற்றி கிடைத்ததும், கலிங்க வீரர்களைத் தேடித் தேடிப் பிடிக்கையில் கலிங்க வீரர்கள் மாறு வேடம் பூண்டு தாம் புத்தர்கள், தாம் தெலுங்கர்கள், தாம் அரவமொழி பேசும் தமிழர்கள் என்று சொல்லித் தப்பித்தனராம். அரவம் என்றால் தமிழ்மொழி என்பதும் அவர்கள் அந்த மண்ணின் மைந்தராக மாறினாலும் அரவமொழியைப் பேசியதால் அரவர்கள் என்றே அழைக்கப்பட்டதாக அந்தச் செய்தி சொல்கிறது. இது பதினொன்றாம் நூற்றாண்டுச் செய்தியாகும்.

வடநாடுகளில் தமிழர் குடியேற்றம் பல நூறாண்டுகளாகவே வணிக நிமித்தமாக நடைபெற்று வந்தது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள கன்னோசி நகரத்துக்கு ராஜேந்திர சோழர் காலத்தில் சில சிங்களக்குடும்பங்களும், தமிழ்க்குடும்பங்களும் அனுப்பப்பட்டன என்று இலங்கை மஹாவம்சத்தினர் எழுதியுள்ளார்கள். இதற்கு ஆதாரத்தகவல்கள் சோழநாட்டில் உண்டு. ராஜேந்திரர் இலங்கையை முழுவதும் தங்கள் ஆட்சியில் கொண்டு வந்த போது, இலங்கைக்கு கன்னோசி மன்னர் உதவியதாகக் கல்வெட்டுச் செய்திகள் உள்ளன.  இன்றைக்கும் தமிழே அறியாத பீஹார் தமிழர்கள் பாடலிபுத்திரம் என்கிற பாட்னாவிலும் ராஞ்சியிலும் ஏராளமான அளவில் வசித்து வருகிறார்கள்.
வணிகர்கள் குடியேறுவது என்பது காலம் காலமாக நடைபெறும் நிகழ்ச்சிகள்தான். தமிழ் வணிகர்கள் ஆந்திரத்தின் வடபகுதியில் குடும்பஙளோடு வசித்ததையும், அப்படி ஒரு குடும்பம் சிம்மாசலம் கோயிலுக்காக ஒரு பெரு நிலத்தில் தோட்டத்தை வளர்த்து, அந்த நந்தவனத்தை நிவந்தமாக (தானம்) அளித்ததையும் ஒரு தமிழ்க்கல்வெட்டு பேசுகிறது. எங்கோ ஆந்திராவில் வடகோடியில் உள்ள இந்தக் கோயில் பற்றிய முதல் கல்வெட்டு கூட தமிழ்தான் என்பது ஆச்சரியமான விஷயம்தானே. அத்தோடு பெருநிலம் ஒன்றினை ஒரு தமிழ் வணிகன் தானம் செய்தான் என்றால் அவன் இன்னும் எத்தனை பெரிய இடங்களை அந்தச் சமயத்தில் தன் வசத்தில் வைத்திருந்தானோ.. அவனைப் போல பல தமிழ் வணிகர்களும் அங்கு இருந்ததாக திரு பி.சுந்தரம், ஆந்திர பல்கலைக் கழகப் பேராசிரியர் 1963 இல் ‘தி ஹிண்டு’ பத்திரிகையில் ஒரு பெரிய கட்டுரையாகவே வடித்திருக்கிறார்.

தமிழர் குடியேற்றம் குழுமங்களாகத்தான் நடைபெற்றன. இந்தக் குழுமங்கள் வெளிநாடுகளைப் பொறுத்தமட்டில் சங்கங்கள் வைத்து தங்களுக்குள் ஒற்றுமையை வளர்த்துக்கொண்டதற்கான உதாரணங்கள் வெகுவாக நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அதே சமயத்தில் தமிழ் வணிகர்கள் கடல்கடந்த வெளிநாடுகளில் எண்பேராயம், ஐந்நூற்றவர் என்று தங்கள் சமூகத்துக்காகவே சங்கங்கள் அமைத்தவை பற்றிய கல்வெட்டுச் சான்றுகள் அந்தந்த நாடுகளில் கிடைத்துள்ளன. இந்தியத் திருநாட்டில் தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் உள்ள சங்கங்களைப் பற்றிய பழைய தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் இன்றைய பெரிய நகரங்களில் உள்ள தமிழர்கள் எப்போதுமே சங்கம் வைத்துக் கொண்டு காலத்துக்கு ஏதுவாக செயல்பட்டது தெரியவருகிறது.

ஆனாலும் இப்படி பழையகாலத்தில் குடியேறிய தமிழ் மக்கள் தங்கள் வாரிசுகளைப் பற்றியோ, அவர்களுக்கு மொழிப்பற்று கொடுக்காமல் மறைந்தது பற்றியோ நாம் இனியும் பேசிக் கொண்டிராமல் தற்காலத்தில் இப்படி குடியேறும் தமிழ்க் குடும்பங்கள் மறவாமல் தம் பிள்ளைகளுக்கு தேனினும் இனிய தமிழறிவை எப்பாடுபட்டாவது புகட்டவேண்டும். அன்று அப்படிக் குடியேறிய தமிழர்கள் செய்த பிழையை நாமும் செய்யலாமா.. இன்று முனோர்களைச் சுட்டிக்காட்டி தவறு செய்துவிட்டார்களே என்று நாம் சுமத்தும் அவப்பெயர் நாளைய இளையதலைமுறையினரால் நமக்கும் ஏற்படக்கூடாது அல்லவா..

நாவுக்கினிய நம் இனிய தமிழ் மொழியை நம் செல்வங்களுக்குத் தந்து நாம் பெருமை கொள்வோம். இதை இந்தப் புத்தாண்டு உறுதிமொழியாக ஒவ்வொரு தமிழ்க்குடியின் தலைவனும் தலைவியும் மேற்கொண்டால் அதுவே அவர்கள் தம் வாழ்நாளில் மொழிக்குச் செய்த பெரும் சேவையாகும்..

வங்காளத்தின் இராணி பவானி - பவள சங்கரி


பவள சங்கரி திருநாவுக்கரசு

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வங்காள நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் உரிமையுடன் உச்சரிக்கப்பட்ட ஒரு பெருமை வாய்ந்த பெயர் என்றால் அது ராணி பவானி என்பதுதான்.


தன்னுடைய நிர்வாகத் திறன், அரசியல் செல்வாக்கு மற்றும் தாராள குணம்  மூலமாக இன்றும் அந்த மக்களின் மனதில் நிலையானதொரு இடத்தைப் பிடித்து வைத்திருப்பவர். ரமாகந்தா என்ற ராஜ்ஷாகியைச் சேர்ந்த ஜமீந்தாரின் மனைவி இவர். ஜமீந்தார் ரகுநந்தன் அவர்களின் மகன் தான் ரமாகந்தா. வடக்கு வங்காளத்தின் நட்டோர் சொத்துகளின் நிறுவனரின் தத்துப் பிள்ளை. ரமாகந்தாவின் திறமையற்ற நிர்வாகத்தினால் இவர்கள்  பல சொத்துகளையும் இழக்க நேரிட்டது. 1746ம் ஆண்டில் ரமாகந்தா இறந்த பின்பு, அவருடைய மனைவி, இராணி பவானி தேவி என்று அனைவராலும் போற்றப்பட்டவர் ஜமீந்தாரினியாக பொறுப்பேற்றார்.  பின்பு   தம் பொறுப்புகளை உணர்ந்து  சொத்துகளையும் காப்பாற்றினார்.   ஒரு பெண் இத்துனை பெரிய பொறுப்பேற்பது நடைமுறையில் அரிதாக இருந்த காலம் அது. இக்காலத்திலும் கூட வெவ்வேறு வடிவங்களில் இது தொடரத்தான் செய்கிறது. ஆனால் ராணி பவானி தேவி நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மிகத் திறமையாக அந்த பிரமாண்டமான சொத்துகளை நிர்வகித்து வந்திருக்கிறார். தன்னுடைய கட்டுப்பாடான தனிப்பட்ட வாழ்க்கை முறைமைகளாலும், மக்கள் மீது கொண்ட இரக்கம் மற்றும் தயாள குணத்தினாலும், அனைவராலும் மிகவும் விரும்பப்பட்டார் அவர். வங்காள நாட்டில், கோவில்கள், விருந்தினர் மாளிகைகள் மற்றும் சாலைகள் போன்றவைகள் கட்டுவதன் மூலமாக அவர் ஆற்றிய பணிகள் ஏராளம். பல்வேறு நீர்த் தொட்டிகள் கட்டுவதன் மூலமாக, மிக முக்கியமான தண்ணீர்ப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டார்.  அத்தோடு பல கல்வி நிறுவனங்கள் கட்டியதன் மூலமாக கல்விப் பணியையும் செவ்வனே கவனித்து வந்திருந்தார்.



ராணி பவானி போக்ரா மாவட்டத்தில், தானா ஆடம்டிகியின், சாட்டின் கிராம் என்னும் இடத்தில் 1715ம் ஆண்டு பிறந்திருக்கிறார். இவருடைய வாழ்க்கை சற்று போராட்டம் நிறைந்த ஒன்றாகவே இருந்திருக்கிறது. கணவர் ராமகாந்தா இறந்த 1746ம் ஆண்டிற்கு முன்பே இவர் அந்த சொத்துக்களின் பாதுகாவலராக, சொந்தக்காரராக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்.  அதற்குக் காரணம் ராணி பவானி தேவியின் நிர்வாகத் திறமையே. கணவர் இறந்த போது அவருக்குத் தாரா என்ற ஒரு மகள் மட்டும் இருந்திருக்கிறார். அவரை ரகுநாத லாகிரி என்பவருக்கு மணமுடித்துக் கொடுத்திருக்கிறார். சொத்துக்களை நிர்வகிக்கும் பணியையும் இவரே மேற்கொண்டிருக்கிறார். ஆனால் விதிவசத்தால் 1751ம் ஆண்டிலேயே, குழந்தை இல்லாத தம் இளம் மனைவியை விட்டுவிட்டு  திடீரென்று இறந்துவிட்டார் ரகுநாத லாகிரி. அதன் பின் மீண்டும் இராணி பவானி தேவியின் கைகளிலேயே அனைத்துப் பொறுப்புகளும் வந்து சேர்ந்தது. மீண்டும் தம் கடுமையான உழைப்பினாலும், நிர்வகிக்கும் திறனாலும் சொத்தை மேலும் பன்மடங்காகப் பெருக்கியுள்ளார். கோடிக்கும் அதிகமாக வருமானம் வரும் வகையில் அதனை செவ்வனே நிர்வகித்திருந்தார். தன்னுடைய 79வது வயதுவரை அதற்காக அயராது உழைத்துக் கொண்டிருந்தார்.



ஆனாலும் பவானியின் வாழ்க்கை முறை மிக எளிமையும், ஒழுங்கு முறை மாறாத ஒன்றாகவுமே இருந்தது. அன்றாடம் விடியலில் தொடங்கும் அவருடைய பொழுது வெகு நேரம் காலை பூஜையில் கழியும்.  அதன் பிறகு பத்து பிராமணர்களுக்குத் தானே சமைத்து அவர்களுக்குப் பரிமாறிவிட்டு தன் காலை உணவு உண்ணவே மதியம் ஆகிவிடும். உடனடியாக அலுவலகம் வந்து அன்றைய நிறைவேற்ற வேண்டிய பணிகளுக்கானத் திட்டங்களை வகுத்து,  சம்பந்தப்பட்டவர்களுக்கு அப்பணியை இட்டுத் திரும்புவார். பின் மாலை நேரங்களில் கதாகாலட்சேபங்களும், சுலோகங்களும், கேட்பது வழக்கம். அதன் பிறகு அவருடைய நிறுவனத்தின் மேலாளர் வந்து கையெழுத்து வாங்க வேண்டிய கோப்புகளில் கையெழுத்து வாங்கிக் கொண்டு, அடுத்து செய்ய வேண்டிய பணிகள் குறித்த பேச்சு வார்த்தைகளும், மற்ற தொடர்புகள் குறித்தும் பேசி அனுப்புவார். பின் ஆற்றங்கரைக்குச் சென்று மண் விளக்கில் நெய் ஊற்றி தீபமேற்றி வழிபாடு முடித்து, கொஞ்சம் போல சிற்றுண்டி ஏதாவது உண்டு முடித்து மீண்டும் அலுவலகம் வந்துவிடுவார். இந்த நேரத்தில்தான் பார்வையாளர்களும், குடியிருப்பவர்களும் தங்கள் வேண்டுதல்கள் மற்றும் வருத்தங்களைச் சுமந்தபடி ஆறுதல் தேடி அம்மையாரிடம் வருவது வழக்கம். இவையெல்லாம் முடிய இரவு 10 மணிக்கு மேல் ஆனாலும் அதன் பிறகு குடும்பத்தில் உள்ளவர்களின் நலம் குறித்து விசாரித்துவிட்டே ஓய்வெடுக்கச் செல்வார். காசிக்குச் செல்லும் பெரும்பாலான மலைப்பாதைகளும், ஆன்மீகப் பயணம் செல்பவர்கள் தங்குவதற்கான பல விடுதிகளும் இராணி பவானி அம்மையார் மூலம் கட்டமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வங்காளத்தில், தங்களுக்குச் சொந்தமான, கங்கைக் கரையிலிருக்கும் பல கிராமங்களின் நிலங்கள் ஏழை பிராமணர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. பவானிப்பூர் தாரா அம்மன் கோவிலின் புணரமைப்பின் பெரும்பான்மையான பங்கு  இவருடையது.  போக்ரா மாவட்டத்தின் ஷேர்பூர் உபசில்லா எனும் இடத்தில்  பவானிப்பூர் என்ற சக்தி வழிபாட்டுத் தளமான அம்மன் கோவில் அமைந்துள்ளது. இவருடைய  50.42 ஏக்கர் பரப்பளவில் உள்ள அற்புதமான வடிவிலான வீடு, இன்றும்  சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது. சுற்றியிருந்த அகழிகளின் பெரும் பகுதி பூந்தோட்டம் மற்றும் பழத்தோட்டங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.  1795ம் ஆண்டில் இராணி பவானி மறைந்த பின்பு அவருடைய வளர்ப்பு மகன் இராமகிருஷ்ணா இந்தப்பகுதியை ஆண்டு வந்தார்.






எனது இந்தியா:2014 - இன்னம்பூரான்

http://0310301.netsolhost.com/images/Tagore/tagore5.jpg

‘பிரிட்டனை உருவாக்கியவர்கள்’ (Making Britain) என்ற தலைப்பில் ஒரு இந்தியர் அந்த நாட்டின் திறந்தவெளி பல்கலைக்கழகத்தால் கொண்டாடப்படுகிறார். அவர் தான் இன்றைய தலை மாந்தர்.

மினூ மஸானி என்ற தேசாபிமானி ‘நமது இந்தியா’ (Our India)  என்ற நூலை 1940ல் எழுதினார். மக்கள் விரும்பிப்படித்த நூல். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்குப் பிறகு தனது அபிமானங்களில் பல மாற்றங்களைக் கண்ட அவர் ‘இந்தியர்களாகிய நாம்’ (We Indians) என்ற நூலை 1989ல் எழுதினார்.  நானி ஆர்தஷேர் பால்கிவாலா என்ற கீர்த்திமான் ஒரு புகழ் வாய்ந்த வழக்கறிஞர், சிந்தனைச்சிற்பி. கோடீஸ்வரர். வருடந்தோறும் மத்திய அரசின் பட்ஜெட்டை மும்பை பொது மன்றத்தில் அலசுவார். அலை மோதும் கூட்டம். அவருடைய சொத்து முழுதும் சென்னை சங்கர நேத்ராலயாவை அடைந்தது. அவர் ‘மக்களாகிய யாம்’ (We The People) என்ற நூலை 1984ல் எழுதினார். ஒரே மூச்சில் மூன்று நூல்களையும் படித்தால் ‘எனது இந்தியா:2014’ வின் போக்குத் தென்படலாம். இவர்கள் இருவரின் வரலாறும், சிந்தனைகளும் நமக்கு நன்மை பயக்கும். அந்த வழி பயணிப்பதற்கு முன்னால் சில தெளிவுகள் பிறந்தால், அந்த நன்மையின் பயன் அதிகரிக்கும். அதற்கு நாம் 1857க்கு பிறகு பிரிட்டீஷ் ராஜாங்கத்தின் கலோனிய அரசு கோலோச்சியபோது, விடுதலை வீரர்களாகவும், மற்ற வகையிலும் சமுதாயத்தில் பிரமுகர்களாக இருந்தவர்கள் சிலரை பற்றி அறிந்து கொள்வது உதவலாம். பீடிகை முற்றிற்று.

‘எஃகு கட்டுமானம்’ என அறியப்பட்ட இந்தியன் சிவில் சர்வீஸ், இந்திய ரயில்வே, சட்ட அமைப்பு, ராணுவம் ஆகியவை கலோனிய அரசு இந்தியாவுக்கு விட்டுச்சென்ற சொத்து என்று வரலாற்றாசிரியர்களில் பலர் பட்டியலிடுகிறார்கள். அந்த எஃகு கட்டுமானத்துக்கு சிபாரிசு அனுமதியில்லை. அது ஒரு உரிமை. அதில் இடம் பெறுபவனின் திறனாற்றலும், உழைப்பும் தான் படிக்கல்கள். இந்தியாவால் முடிந்த அளவுக்கு அவன் கல்வித்திறனின் மேன்மை இருக்க வேண்டும். ஆக்ஸ்ஃபோர்ட் அல்லது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக இளநிலை பட்டம் (arts :மானிட இயல், பொருளியல், மனித நேயம், தத்துவம் போன்றவை) அத்யாவசியம் என்று இதன் அடிப்படை மெக்காலே ரிப்போர்ட். இந்தியன் சிவில் சர்வீஸ்ஸின் ஆளுமையை புரிந்து கொள்ள இந்த ஒரு வரி போதும். ‘...அவர்களது உச்ச நிலை நிர்வாகத்தின் போது பெரும்பாலும் ஆங்கிலேயர்களும், பிரபல ஹிந்துக்களும், சில இஸ்லாமியர்களும் உள்ள ஐ.சி.எஸ்., உலகளவில் என்று சொல்லப்படாவிடினும், பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தின் அதிகார மையம். ஆயிரம் நபர்கள் 30 கோடி மக்கள் மீது ஆட்சி செலுத்தினர். அவர்களின் வாழ்க்கையின் அங்கமாக அமைந்து விட்டனர்...’ .(உசாத்துணை: Dewey, Clive (1993): 3)
ஆங்கிலேய ஐ.சி.எஸ். அதிகாரிகளில் பலருக்கு ஆய்வுகளில் ஆர்வம் மிகுந்து இருந்தது. இன்றைய தொல்லியல், மானிடவியல், இலக்கிய ஆய்வு, ஆவணப்படைப்பு (District Gazeteers) என்றெல்லாம் கணக்கற்ற அதிகப்படி வேலைகளை இழுத்துப்போட்டுக் கொண்டனர். அடிப்படையில் மக்கள் பரிபாலனத்தில் சோடை போகவில்லை. அவர்கள் சம்பந்தப்பட்டவரை இந்தியா அடிமை நாடு. அந்த கட்டத்துக்குள் மக்கள் நலம் பேணவேண்டும். தற்கால நிலையையும், அவர்களது நிர்வாகத்தையும் எடை நிறுத்தால், இது நன்றாகவே புரியும். அடக்கு முறை, ஜபர்தஸ்து, விடுதலை தாபத்துக்குத் தண்டனை எல்லாம் இருந்தது. ஆனாலும், நம் விடுதலை தாபத்தை அவர்களில் பலர் புரிந்துகொண்டு இயங்கியதும் உண்மை.  சொல்லப்போனால், சர் வில்லியம் வெட்டர்பர்ன் (1859 பரிக்ஷை) 1889லி இந்திய நேஷனல் காங்கிரஸின் அக்ராசனராக இருந்தார். அது ஒரு சகாப்தம். நாம் அவர்களை வெறுக்கவும், நன்றி கூறவும் விஷயங்கள் உளன. மற்றொரு சமயம், காலம் தழைத்தால் அவற்றை கவனிப்போம்.


யார் இந்த ‘பிரிட்டனை உருவாக்கியவர்கள்’ (Making Britain) இந்தியர்? அவர் தான் சத்யேந்திரநாத் தாகூர் (1842 -1923). இந்திய மண்ணில் பிறந்து வளர்ந்து, கடும்போட்டியில் கெலித்து, அந்த ‘எஃகு கட்டுமானத்தில் 1863 ல் நுழைந்த  முதல் ஐ.சி.எஸ். அதிகாரி. 33 வருடங்கள் பம்பாய் மாகாணத்தில் பணி செய்து, சதாரா மாவட்டத்து நீதிபதியாக ஓய்வு பெற்றார். எழுத்தாளராகவும், பன்மொழி வித்தகராகவும், கவிஞராகவும், தத்துவ போதகராகவும் விளங்கிய அவர் ஒரு பெண்ணிய வாதி, சீர்திருத்தவாதி, பிரம்மோ சமாஜ், பிரார்த்தனா சமாஜ் போன்ற முற்போக்கு மையங்களுடன் உறவாடினார். துகாராமின் பக்திபாடல்களான ‘அபங்க’ கவிதைகளை மொழி பெயர்த்தார். தந்தை மகரிஷி தேவேந்திரநாத் தாகூரின் சுயசரிதத்தை எடிட் செய்தார். பெளத்த மதம் பற்றி எழுதினார். இந்தியாவின் முதல் தேசகீதமாகக் கருதப்படும் ‘mile sabe Bharat santan, ektan gaho gaan...’ (பாரத மழலைகளே! கோரஸ் பாடுவோம்...’) என்ற கவிதையையும், மற்றும் பல தேசீய கவிதைகளையும் படைத்த இந்த ஐ.சி.எஸ்.அதிகாரி, தீவிர தேசீயவாதியான பாலகங்காதர திலகரின் கீதா ரகஸ்யத்தை மொழி பெயர்த்தார். இது கவனிக்க வேண்டிய விஷயம். ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். பதவியில் இருக்கும் உயர் அதிகாரி ஒருவர் தற்காலம் எதிர்க்கட்சித்தலைவரின் இலக்கியத்தை மொழி பெயர்க்க முடியுமோ, இந்த மாதிரி. லோகமான்ய திலகர் அவர்களை நாடு கடத்திய கலோனிய அரசு தன்னுடைய இந்த மேலதிகாரியின் கூட்டுறவிலும், தேசீயம் சார்ந்த பணிகளிலும் தலையிடவில்லை. அவர் தன்னுடைய தம்பி குருதேவ் ரவீந்தரநாத் தாகூருடன் இங்கிலாந்து பயணத்தில் கலந்து கொண்டு 1880ல் இந்தியா திரும்பினார். வங்காளத்தில் தன் பணியை செயலாற்றிக்கொண்டிருந்தார்.

இன்னம்பூரான்
01 01 2014

  • சித்திரத்துக்கு நன்றி:http://0310301.netsolhost.com/images/Tagore/tagore5.jpg
  • படத்தில் : ஜ்யோந்திரநாத் தாகூர் அமர்ந்து; வெண்புடவை அவர் மனைவி காதம்பரி.
  • ஐரோப்பிய உடையில்: சத்யேந்திரநாத். தழைந்த புடவையும் டைட் ப்லெளசுமாக, அவர் மனைவி ஞானனந்தினி. அந்த ஆடை அவருடைய டிஸைய்ன். அந்த காலத்தில் மிகவும் பாப்புலர் ஆனது. 
  • உசாத்துணை:
  • http://www.open.ac.uk/researchprojects/makingbritain/content/satyendranath-tagore
  • http://www.oxforddnb.com/view/printable/98035
  • Dewey, Clive (1993). Anglo-Indian attitudes: the mind of the Indian Civil Service. Continuum International Publishing Group. p. 3. ISBN 978-1-85285-097-5.
  • http://en.wikipedia.org/wiki/Satyendranath_Tagore
  • http://iastoppersstory.blogspot.co.uk/2012/05/satyendranath-tagore-first-indian-to.html



இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com

விஜய வருடப் புத்தாண்டுப் பிறப்பு 2014


                   
அன்புள்ள   மின் தமிழர்களே, என் தமிழர்களே இன் தமிழர்களே
அன்புள்ள நண்பர்களே ,சகோதர சகோதரிகளே,  அறிவிற் சிறந்த ஆன்றோர்களே   பத்தாண்டு காலமாய்  இணையத்திலும்  பிறந்தது முதல் இதயத்திலும்  இருந்து  அன்போடு பழகும் அன்பு உள்ளங்களே புத்தாண்டு கொண்டாட  வாருங்கள்.

2014 ம் ஆண்டு விஜய வருஷம்.  இந்த ஆண்டு நமக்கெல்லாம் நல்ல ஆண்டாய் அமையட்டும்.  நல்விளைவு தனை அளித்து தீவினைதனை தடுக்கும்   நல் வருடப் பிறப்பாய் இவ்வருடம் இருக்கட்டும்.  எல்லா நலன்களையும்,  எல்லா வளங்களையும் வித்யாசமின்றி எல்லோருக்கும் அளிக்கும்   புத்தாண்டாய் 2014 ம் ஆண்டு அமையட்டும்  என்று வேண்டி புத்தாண்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்  ,எத்துணையோ பெரியோர்களின் ஆசிகள்,  சிறியவர்களின் வாழ்த்து மடல்கள் அத்துணை வாழ்த்துக்களும் ஆசிகளும்  பொய்யாமோ? நம்பிக்கைதான் வாழ்க்கை ஆனந்தம்..ஆனந்தம்..ஆனந்தமே ” .

காலம் ஒரு அருமையான ஆசிரியன், அந்த ஆசிரியன் கற்றுக்கொடுக்கும் பாடங்களை  உலகத்தில் வேறு யாராலும் கற்பிக்க முடியாது என்பது திண்ணம் . காலம் ஆட்டிவைக்கிறது, நம்மை தூங்க வைக்கிறது,விழிக்க வைக்கிறது, விழ வைக்கிறது , எழ வைக்கிறது. எல்லாச் செயல்களையும் செய்ய வைக்கிறது, நம்மைப் பண்படுத்துகிறது.

கால  ஓட்டம்  ,காலச் சுழற்சி  கனவேகமாய் சுழன்று கொண்டிருக்கிறது.  நிறுத்த முடியாத, மீண்டும்  பெறமுடியாத  காலங்கள்.அதற்குள் ஒரு வருடம் ஓடிவிட்டது, மறந்து விடாதீர்கள் இப்போதும்,எப்போதும்  ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு கணமாய், இந்த    நிமிடத்திலிருந்தாவது  ஏற்கெனவே  செய்த தவறுகளைக் களைந்து  இனி செய்யப்போகும்  செயல்களை  இன்னும் சிறப்பாய்  செய்யப் பழகுவோம்.  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.இனி  வருங்காலம்  இனிதே அமையட்டும்.  இனிய  புத்தாண்டுக்  காலம் தொடங்கிவிட்டது இனிமையானதாக நம் வாழ்வை மாற்றிக்கொள்ள நாமும் அதனுடன் ஓடுவோம்.  எல்லோருக்கும் நல்ல வாழ்வு அமையட்டும்
பிறந்து வளர்ந்து நினைவு தெரிந்த நாள் முதலாய் புத்தாண்டு வாழ்த்து சொல்ல முன்னோர் கற்றுக் கொடுத்த  முத்தான நல்வழிகள் –வகுத்திட்ட முன்னேற்ற புதுவழிகள் முறையாய்க் கடைப்பிடிப்போம்.

ஒவ்வொரு வருடம் பிறக்கும் போதும்  பல நல்ல மாற்றங்களை நாம் எதிர்பார்க்கிறோம் ,மாற்றங்கள் தேவைதான் மாற்றங்களை ஏற்கும் மனம் நிச்சயமாய் வேண்டும், ஆனாலும் மாற்ற முடியாதவை  என்று பல உண்டு .   பெற்றதாயை பெற்ற தகப்பனை ,பிறந்த பொன்னாட்டை, தாய் மொழியை  மறக்கவும்  மாற்றவும்  முடியாது ,  மாற்றவும் கூடாது, அதேபோல முன்னோர்கள் கணித்த தீர்க்க தரிசனங்களை, மாற்றவும் கூடாது, ஆகவே புத்தாண்டு வாழ்த்துக்களை மகிழ்வோடு பகிர்ந்து கொள்வோம்.
தாழ்வும் உயர்வும் கலந்ததுதான் வாழ்க்கை,முயற்சியும் ஊக்கமும் நிறைந்ததுதான் வாழ்க்கை.தன் முயற்சியில் தளராத விக்ரமாதித்யன் போல்  தளராமல் செய்கின்றோம் முயற்சியும் சுழற்ச்சியுமாய்  முடிவென்ன கண்டோமென யோசித்துப் பார்க்கின்றேன்.வாழ்வும் தாழ்வும் தராசுத் தட்டுகள் போல் உயர்ந்தும் தாழ்ந்தும்  மாறி மாறி  மேலும் கீழுமாய் போய் போய் வருகிறது.
முயற்ச்சிகள் மட்டும் தளராமல் மீண்டும் மீண்டும்  தலையெடுத்து  தன் சுழற்சிப் பாதையிலே  தளராமல் ஒட்டுமிந்த வாழ்க்கை ஓட்டம்.நம்பிக்கை மட்டும் இல்லாதிருந்தால்? இத்துணைநாட்கள் தாக்குப் பிடித்திருக்குமா..?
கை தூக்கிவிட நிச்சயமாய் ஒருவனுண்டு  என்கிற நம்பிக்கை உள்ளத்தில் அகலாமல்  ஒட்டிக் கொண்டிருப்பதால் ஆனந்தமாய் ஓடுகிறது வாழ்க்கை ,
” ஆனந்தம் ” என்கிற சொல்லைக் கேட்டாலே நமக்கெல்லாம் எவ்வளவு ஆனந்தம் .  வருகிறது? ஆனந்தம் பரமானந்தம்,என்னும் இரு வார்த்தைகளுக்கிடையே எவ்வளவு பொருள் மாறுபாடு இருக்கிறது தெரியுமா..?   முதலில் ஆனந்தம்  என்னும் சொல்லுக்கு பொருள் என்ன என்பதைச் சற்றே ஆராய்வோம்,

அடுத்தவர்களை ஆனந்தமாக வைத்திருப்பதே நமக்கு உண்மையான ஆனந்தத்தை அளிக்கறது என்று முற்றும் அறிந்தவர்கள் சொல்லுவார்கள்,ஆனால் இந்தப்  ப்ரபஞ்சத்தின் ரகசியங்களை, அன்பை, சாத்வீகத்தை, இறையை, மனிதத்தை , சிறிதளவாவது அறிந்து கொள்ளவேண்டும் என்னும் ஆர்வமுடைய நம்மைப் போன்றவர்கள்.நினைக்கிறோம்.

அடுத்தவர்களுக்கு துன்பம்  அளித்து அவர்களுடைய நிம்மதியை,ஆனந்தத்தை கெடுக்காமலிருப்பதே ஆனந்தம் தான் என்று என்ணுவோம், உண்மைதான், அது முதல் நிலைதான் , பள்ளியில் பால பாடம் படிப்பதைப் போல, உண்மையான ஆனந்தம் அடுத்தவருக்கு உதவி செய்வதிலும், அடுத்தவர் துன்பம் போக்குதலிலும், அடுத்தவரிடம் இதமாக, பணிவாக, ஆத்மார்த்தமாகப் பேசி அவர்களை நெகிழச்  செய்வதும்.

அவர்களின் மனதின் உள்ளே அன்பெனும் பாதை அமைத்து உள்ளே சென்று அவர்களின் ஆத்மாவோடு நம் ஆத்மாவைக் கலக்கச்செய்வது,அதனால் வரும் சமத்துவத்தினால் ஏற்பட்ட பரிசுத்தமான உள்ளத்தோடு உறவாடி அவர்களின் இதயத்தில் இருக்கும் இறைவனோடு நம் உள்ளத்தில் இருக்கும் இறைவனை கலந்துரையாட விடுவது , மனிதம் தூண்டி, நாமும் அவர்களும்ஒருமித்த நிலையில் இருப்பது இவைதான் ஆனந்தம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து,

நமக்கு எப்போதெல்லாம் உண்மையான ஆனந்தம் வருகிறது என்று பார்த்தால் நம் வாழ்வில் சில நல்ல குறிக்கோளுடன் செயல் படும்போதும், அதேபோல், உலக நலன் கருதும் ஒரு நல்ல ஆன்மீக வாதியை, நாட்டின் மேல் உண்மையான அக்கறை செலுத்தி, அதற்காகப் பாடு படுபவரை, அடுத்தவருக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டு செயல்படுபவரை,பொதுமக்களின் நலன் கருதி செயல் படும்
தலைவர்களை, மனித நேயத்தை மதித்து பாரபட்ஷமில்லாமல் நடந்துகொள்ளும் மனிதாபிமான ஆர்வலர்களை, அனைத்து உயிர்களையும் மதிக்கும்  பெரியோர்களை,தன்னைப்போல பிறரையும் எண்ணி அவர்களின் துன்பத்தைப் போக்க தன்னாலான செயல்களை செய்யும் பலரை,எல்லா மக்களையும் தன் மக்கள் போல் நேசிக்கும் மனிதர்களை இவர்களையெல்லாம் கண்டால் உண்மையான ஆனந்தம் வருகிறது,
சாதாரணமாக உதவி செய்யாவிட்டாலும் ,அடுத்தவருக்கு துன்பம்  விளைவிக்காமல் இயல்பு வாழ்க்கையில் வாழும் பலரைக் கண்டாலும் உண்மையான ஆனந்தம் வருகிறது,இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். \

ஆனால் உண்மையாகவே  நாமும் ஆனந்தமாய் இருந்துகொண்டு அடுத்தவர்களையும் ஆனந்தமாக வைத்திருக்க இந்தப் புதுவருடம் நமக்கெல்லாம் சக்தியை அளிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு  அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ






Monday, December 30, 2013

தனிமை இரக்கமா அல்லது இனிமையா - சிவகாமிப் பாட்டியின் தத்துவக் கீறல்கள்


பேரா மின்னம்பலக் கூத்தன்
(டாக்டர்.நாகராசன் வடிவேல்)

சிவகாமிப் பாட்டி:  பேராண்டி அப்படிக் கணினியில என்னத்தப்பா தோண்டித் தோண்டிப் பாக்குறே

பேராண்டி:  பாட்டி பாரதியாரின் தனிமை இரக்கம் என்ற கவிதையையும் தனிமையிலே இனிமை காண முடியுமா என்ற சினிமாப் பாட்டும் தோண்டிக்கிட்டிருக்கேன் பாட்டி

பாரதியாரின் தனிமை இரக்கம் பாடல்

குயிலனாய்! நின்னொடு குலவிஇன் கலவி
பயில்வதில் கழித்த பன்னாள் நினைந்துபின்
இன்றெனக் கிடையே எண்ணில்யோ சனைப்படும்
குன்றமும் வனமும் கொழிதிரைப் புனலும்
மேவிடப் புரிந்த விதியையும் நினைந்தால் 

பாவியேன் நெஞ்சம் பகீரெனல் அரிதோ ?
கலங்கரை விளக்கொரு காவதம் கோடியா
மலங்குமோர் சிறிய மரக்கலம் போன்றேன்
முடம்படு தினங்காள் ! முன்னர்யான் அவளுடன்
உடம்பொடும் உயிரென உற்றுவாழ் நாட்களில் 

வளியெனப் பறந்தநீர் மற்றியான் எனாது
கிளியினைப் பிரிந்துழிக் கிரியெனக் கிடக்கும்
செயல்யென் இயம்புவல் சிவனே
மயலையிற் றென்றெவர் வகுப்பரங் கவட்கே?

(இப்பாடல் பாரதியாரின் குறிப்புகளோடு மதுரை 'விவேகபாநு ' பத்திரிகையில் 1904ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியானது.)

தனிமையிலே இனிமை காண முடியுமாச் சினிமாப் பாட்டு



பாட்டி:  எங்க கால இளந்தாரியோட அச்சில் ஏறின முதல் கவிதையாச்சே அது.  மனைவியைவிட்டுப் பிரிந்து கல்விக்காகக் காசிக்குப் போய்த் திரும்பிவந்தபிறகு எழுதின விரகதாபம் மிக்க காதல் பாட்டாச்சே பேரா.  ஆனா ஒரு வித்தியாசம் என்னன்னா தமிழ்க் கவிஞர்கள் பொதுவாகப் பொண்டுகதான் பிரிவைத் தாங்கமுடியாமல் நோய்வாய்ப்பட்டு நொந்ததாப் பாடுவாங்க.  இங்கே ஒரு இளைஞர் விரகதாபத்தை வெளிக்காட்டியிருக்கார் பாரு.  தமிழ்நாட்டு ஆண்பிள்ளைகள் திருமணமான மனைவியை வீட்டில் விட்டுவிட்டு வெளியூர் போய்விடுவது வழக்கம் என்றாலும் ஏதோ இந்தப் பெண்கள் பிரிந்த கனவனைப் பற்றிமட்டும் கவலைப்படுவதுபோலக் காட்டிப் பெண்களைக் கொஞ்சம் அவர்கள் ஆளுமையை மட்டம்தட்டியிருப்பதைப் பாரு

அதுபோலக் காதலில் பிரிந்தவர்களும் கண்ணீர்வடித்துக்கொண்டே பாடுவது சினிமாவில் சர்வ சாதாரணம்

http://www.youtube.com/watch?v=DWD9Unxdiow 

பேரன்:  அப்படீன்னா பாட்டி தனிமை என்பது கொடுமையானதில்லை அப்படீன்னா சொல்லவர்றீங்க

பாட்டி:  தமிழ்நாட்டில் குமுகக் குடும்ப உறவு ஒரு பெண்ணோ ஆணோ தனித்திருக்க வாய்ப்பளிப்பதில்லை.  பிறப்பிலிருந்து இறப்புவரை ஒரு பெண் மற்றவர்கள் மத்தியில்தான் வாழவேண்டும்.  தனக்கென்று ஒரு தனிமையை அமைத்துக்கொள்ள முடியாத நிலையில்தான் வாழவேண்டும். அதேபோல் ஆணும் அலுவல்காரணமாக வெளியே போகும்போதும் குடும்பத்தை விட்டுத் துறவு கொள்ளும்போது மட்டுமே தனிமை கிடைக்கும்.  எனவே தனிமை கொடிது என்ற கருத்து பரவலாக இருந்தாலும் அது சரியல்ல பேராண்டி.

தனிமை இல்லாமல் காதல் வளராது. தனிமை இல்லாமல் உயிரினங்கள் வாழமுடியாதுடா பேராண்டி.  தனியாக இல்லாமல் குழந்தை வாழ்க்கையைப்பற்றித் தெரிந்துகொள்ள முடியாது.  தனிமை இல்லாமல் கவிஞனும் கலைஞனும் படைப்பாளியாக ஆகமுடியாது.  ஆகவே தனிமை என்பது அன்பு இல்லாமை அல்ல அன்பின் தோழனே தனிமை பிரிதலும் கூடலும் வாழ்வின் சுழற்சியாகும் ஒன்றில்லாமல் பிரிதொன்றில்லை..

தனியாக இருக்கக் குழுவிலிருந்து பிரியவேண்டியதில்லை.  ஆன்மாவின் குரலுக்குச் செவி சாய்க்கக் கிடைக்கும் கனநேரம் தனிமைக்குப் போதும் அந்தக்கனத்தில் ஒருவன் தன் வாழ்க்கையை எப்படிக் கொண்டு செல்லவேண்டும் என்று தீர்மானிக்க முடியும்.  தனிமையைக் கண்டு அஞ்சி நிற்கவோ மற்றவர்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்று மருகி நிற்கவோ தேவையில்லை.  நீ தனியாக இல்லாமல் இருந்தால் உன்னைப்பற்றி உணரமுடியாது. அப்போது  தான் யார் என்றே தெரியாத ஒரு வெற்றிடத்தில் ஒருவன் வாழவேண்டிய நிலை உருவாகிவிடும்.

பேராண்டி:  என்ன பாட்டி ஒரே எம்டன் குண்டுமாதிரி தத்துவங்களை எடுத்து வீசறே.  தனியா இருக்கனுன்னா குடும்பத்தையும் உறவையும் பிரிஞ்சு காசிக்கோ இமயமலைக்கு ஓடனும்னு எல்லாரும் சொல்லுறாங்க.  நீ இப்படி எதிர்மாறாச் சொல்லுறியே பாட்டி

பாட்டி: பேராண்டி தனிமை என்பது மனம் சம்பந்தப்பட்டது.  மனப்பழக்கத்தினால் குடும்பத்தில் வாழ்ந்துகொண்டே தனிமையை அனுபவிக்க முடியும்.  அதைத்தான் குடும்பப் பெண்கள் தாங்கள் பெற்ற பயிற்சியால் இப்பவும் செய்துகொண்டிருக்கிறார்கள்

பேராண்டி;  பாட்டி மனம் என்பது ஒரு குரங்கு அல்லவா அதை கட்டுப்படுத்துவது எப்படி


பாட்டி:  மனம் என்பது படம் ஓடும் திரை போன்றது. மனம் ஐம்புலன்களையும் இயக்கும் ஐம்பொறிகள் மூலம் தொடர்ந்து செயல்படக்கூடியது.  படமே ஓடாத வெற்று திரை தனிமையாகாது. ஐம்பொறிகளில் கண், காது வாய் ஆகிய பொறிகளை அடக்கி மனதைக் கட்டுப்படுத்தினால் திரையில் கெட்ட காட்சிகள் தோன்றாது எனவே பொறிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது ஒரு வாதம்,  ஆனால் மனதைக் கட்டுக்குள் கொண்டுவராமல் பொறியைமட்டும் மூடினால் என்ன பயன்.  மனதைக் கட்டுக்குள் கொண்டுவரும் பயிற்சி மேற்கொண்டு மனதைக் கட்டுப்படுத்தவேண்டும் என்பதே உண்மையான வாழ்க்கைத் தத்துவம்

பேராண்டி:  மேலை நாட்டு உளவியல் அறிஞர்களும் இதையேதான் சொல்லுறாங்க.  ஆனா மனம் பொல்லாதது.  பிறந்த குழந்தைக்கு அம்மாமேல் ஒரு ஈர்ப்பு இருக்கும் அதை அடக்கி அடக்கி அது மனதின் ஆழத்தில் சில பிறழ் உணர்வுகளை வளர்த்துக்கொள்வதே அவனுடைய பிற்கால வாழ்க்கை சிக்கல்களுக்குக்கு அடிப்படை என்று ஃப்ராய்டு என்ற அறிஞர் சொல்லியிருக்கார் பாட்டி.  அதுபோலவே யங் என்ற உளவியலாரும் மனம் கட்டுப்பாடற்றது என்று சொல்லியிருக்கார்

பாட்டி:  போடா போடா பேராண்டி ப்ராடு ஜிங்கு ஜங்குன்னு என்னென்னமோ உளர்றியே.  அதைவிட்டு நம்ம தத்துவங்கள் சொல்றதைக் கொஞ்சம் தெரிஞ்சுக்கோ.  அவய்ங்க ஐம்பொறிகள் ஐம்புலனோட நிறுத்திக்கிட்டாங்க.  நம்ம அறிஞர்கள் ஐம்பொறிகளும் மூடி திறக்கும் கதவுகள் என்றும் அதை இயக்க மூன்று உள்ளுறுப்புகள் இருப்பதாகச் சொல்லியிருக்காங்க.  மனம், புத்தி சித்தம் என்ற மூன்று உள்ளுறுப்புகள் ஐம்பொறிகளை இயக்குவதாக நம் தத்துவங்கள் சொல்லுதுடா பேரா.  மனம் என்பது கட்டுக்குள் இல்லாமல் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வினாடிக்கு ஒருமுறை மனத்திரையில் படத்தை ஓட்டிக்கொண்டே இருக்கும்.  புத்தி மட்டுமே நான் யார் என அகந்தையை உருவாக்கி அதற்கேற்பக் காட்சிகளை மாற்றியமைக்கும்.  சித்தம் என்பது அகந்தையை நீக்கி மனிதன் முழுமையை அடைய உதவும்.  இந்த மூன்று உள்ளுறுப்புகளைப்பற்றி உங்க ப்ராடு ஏதாவது சொல்லியிருக்காரா பேராண்டி

பேராண்டி:  பாட்டி இப்புடி வெடுக்குன்னு கேட்டா நான் எப்படிப் பதில் சொல்றது.  கொஞ்சம் டைம் குடு பாட்டி நம்ம அறிஞர்கள் யாராவது வந்து உனக்குப் பதில் சொல்லுவாங்க

பாட்டி.  அப்புடீன்னா சரி.  இந்த மூன்று உறுப்புகளும் சரியா இயங்கப் பயிற்சி வேணும் பேராண்டி.  அந்தப் பயிற்சி குடும்பத்திலும் குமுகத்திலும் எளிதில் கிடைக்கும் பேராண்டி.  குடும்பத்தில் நல்ல சிந்தனைகள் இருக்கவேண்டும் என்று வீட்டில் கடவுள் வைத்து வணங்குவது நம் வழக்கம்.  குடும்பக் கடவுள்முன் தனிமையில் நின்று வேண்டுவது ஒரு அன்றாட பழக்கம் அல்லவா பேராண்டி.  மேலும் மனதைக் கட்டுப்படுத்த நோன்புகள் நியமங்கள் என்று குடும்பத்தில் பல வழிமுறைகள் உண்டு.  அவையெல்லாம் மனதைப் பக்குவப்படுத்தி நல்ல சிந்தனை வளர உதவுகிறது.  விரதம் இருப்பதும் நோன்பு நோற்பதும் பிரசாதமாக இனிப்பு வகைகள் உண்பதும் மனதை ஒருமுகப்படுத்தும் முயற்சியாக அமைந்துள்ளது நம் வாழ்க்கைமுறையின் சிறப்புடா பேராண்டி.  மனதை மேலாண்மை செய்யும் பயிற்சியில் ஆண்களைவிட பெண்களே அதிகம் ஈடுபடுவதும் அதிகத் திறமை உடையவர்களாக இருப்பதும் நம் சமுதாயத்தின் சிறப்பு

பேராண்டி: சரி பாட்டி மனதை அடக்கப் பல வழிமுறைகள் சரி புத்தி பற்றி என்ன தத்துவம் கைவசம் இருக்கு அதையும் கொஞ்சம் சொல்லு பாட்டி

பாட்டி; பேரா புத்தகம் படிப்பது மட்டும் புத்தியை வளர்க்காது.  ஏட்டுச் சுரைக்காய்க் கறிக்குதவாது.  சிக்கல்களைத் தீர்க்கத் தேவையான கருத்துகளைக் கைவசப்படுத்தி அவ்வப்போது எழும் சிக்கல்களைத் தீர்க்கும் திறனே புத்தி.  அந்த அடிப்படையில் பார்த்தால் பெண்களே உண்மையில் ஆண்களைவிட அதிபுத்திசாலிகள்.  ஆனாலும் கனவனை மகிழ்ச்சியில் ஆழ்த்த அவனைவிட தான் மட்டம் என்று காட்டிக்கொள்வதன்மூலம் அவர்கள் புத்திசாலித்தனத்தைக் கொஞ்சம் மட்டுப்படுத்திக் கொள்கிறார்கள் மறைத்துக் கொள்கிறார்கள்.  ஒங்க தாத்தா இருக்காரே அவரு எவ்வளவு புத்திசாலி என்று எனக்குத் தெரியாத என்ன?  அவருகிட்ட கொஞ்சம் அறிவுக்குறைவாக இருப்பதாக ஒரு நாடகம்போட்டுத்தானே அவரை  உயர்த்திக்காட்டமுடியும்.  அப்புடித்தானே எல்லாப் பெண்களும் நடந்துக்குறாங்க.

பேராண்டி:  அது சரி.  விட்டா இப்படியே அளவில்லாமல் அளந்துடுவியே பாட்டி

பாட்டி:  பேராண்டி மனத்தளவிலும் புத்தி அடிப்படையிலும் சிந்தனையிலும் பெண்கள் சிறந்தவர்கள்.  அதனாலேயே பெண்வழி சமுதாயங்கள் சிறப்படைந்து விளங்கின.  ஆண்வழி சமுதாயங்கள் பெண்ணை அடக்குவதன்மூலமே தாங்கள் உயர்வுபெறமுடியும் என்று பல கட்டுப்பாடுகளை உருவாக்கிப் பெண்களை அடிமை படுத்தி வாழ்கிறார்கள்.  பெண்கள் எந்த நிலையிலும் தங்களுக்குக் கிடைக்கும் சிறிய இடைவெளியில் கிடைக்கும் நேரத்தைக் கொண்டு தனிமையில் தங்கள் மனம் புத்தி சிந்தனையை வளர்த்துக்கொண்டு இந்த வையகத்தை வாழவைக்கிறார்கள்.  நீ சொன்னியே ப்ராடுன்னு ஒருத்தர் குழந்தை அம்மாமேல் ஈர்ப்பு இருப்பதை மறைப்பதால் பல சிக்கல்கள் உருவாகுவதாகச் சொன்னார் என்று சொன்னாயே நம்ம ஊரில் பிள்ளையார் அவங்க அம்மா மாதிரியே ஒரு பெண்ணைத்தான் மணமுடித்துக்கொள்வேன் என்று ஆற்றங்கரயில் குளக்கரையில் மரத்தடியில் பெண்கள் கூடும் இடங்களில் ஒற்றைக் காலில் நின்றார்.  கோவில்களில் பாலினக் கவர்ச்சியை ஊட்டும் சிற்பங்களைத் தாண்டித்தான் இறைவனைத் தரிசிக்க நம்மவர்கள் ;போகிறார்கள்.


நம்ம நாட்டில் மன நோயாளிகள் வக்கிர புத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு காரணம் நாம் தனிமையில் யார் என்ற தேடலைத் தொடர்ந்து மேற்கொண்டு நல்லது எது கெட்டது எது என்று அறிந்து வாழத் தேவையான பயிற்சி கிடைப்பதால் என்பதைப் புரிந்துகொள் பேராண்டி.

தனிமை இனிமையானது தனிமை வெறுமையானதல்ல.  தனிமை அன்புக்குத் தோழன். தனிமை காதலுடன் கைகோர்த்து உலவும் இணை  தனிமை ஒரு உண்மை விளம்ப்பி : .  தனிமையே உன்னை நீ நினைப்பதைவிட அதிக உயரத்துக்கு உன்னை இட்டுச் செல்லும்.கருவி  பயிற்சி இருந்தால் எவ்வளவு பெரிய கூட்டத்திலும் தனிமை காண முடியும்.  இது நம் நாட்டு தத்துவம் பேராண்டி.  புரிஞ்சு நட. நல்வாழ்வு வாழ்வாய்

பேராண்டி:  சரி பாட்டி அப்படியே செய்யுறேன்



இரண்டு திருக்குறட்பாக்களுக்கான புதிய சிந்தனைகள்

கி.காளைராசன்

தெய்வந் தொழாள்? 
(புதிய சிந்தனை)

ஐயன் திருவள்ளுவர் ‘வாழ்க்கைத் துணைநலம்‘ என்ற அதிகாரத்தில்
“தெய்வந்  தொழாஅள்  கொழுநற்  றொழுதெழுவாள்
பெய்யெனப்  பெய்யும்  மழை“ (55)
என்று குறள் கூறியுள்ளார்.

கணவனை வணங்கும் குணமுடைய பெண், கணவனுக்கும் மேலான தெய்வத்தை வணங்காததற்கான காரணம் என்ன?  என்று ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

இக்குறளுக்கு,
தெய்வம் தொழா அள் = தெய்வத்தை வணங்க மாட்டாள்
கொழுநன் தொழுது எழுவாள் = கணவனை வணங்கி எழுந்திருப்பாள்
பெய் எனப் பெய்யும் மழை = மழை பெய்யவேண்டும்  என்று   சொன்னால் மழை பெய்யும்

“தெய்வத்தை வணங்கமாட்டாள், கணவனைத் தொழுது எழுவாள், அவள் ‘பெய்‘என்று சொன்னால் மழை பெய்யும்“ என்பது பொருள்.

பொழுது = அதிகாலை
இடம் = இல்லம்

இவள் ஏன் தெய்வத்தை வணங்கவில்லை? என்பதற்கான காரணத்தை மட்டும் ஒவ்வொரு உரையாசிரியரும்  ஒவ்வொருவிதமாக விளக்கம் கூறியுள்ளனர்.

1) தெய்வத்திற்குப் பதிலாகத் தினந்தினம் காலையில் கணவனை வணங்கி எழுந்திருப்பாள் என்றும்,
2) கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடுவாள் என்றும்,
3) வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் என்றும்,
4) பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி என்றும்,
5) பிற தெய்வம் தொழாது தன் தெய்வம் ஆகிய கொழுநனைத் தொழாநின்று துயிலெழுவாள் என்றும்
6) தெய்வத்தைத் தெய்வமென்று தொழாளாய், எல்லாத் தெய்வமுந் தன்கணவனென்றே கருதுபவள் என்றும்
விளக்கம் கூறியுள்ளனர்.

ஆனால், தெய்வத்திற்குப் பதிலாகக் கணவனை ஏன் வணங்க வேண்டும்?
கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கை விட மேலானதாக ஏன் கருத வேண்டும்?
என்பதற்கான காரணத்தை உரையாசிரியர்கள் குறிப்பிடவில்லை.


ஒரு பெண் தெய்வத்தை வணங்கமாட்டாள் என்று திருவள்ளுவரா குறிப்பிடுகிறார்?  இவ்வாறு வள்ளுவன் சொன்னால், எந்தப் பெண்ணும் எந்த ஒரு தெய்வத்தையும் வணங்கமாட்டார்களே?

புதிய சிந்தனை
இக் குறளில்,
தெய்வம், பெண், கொழுநன், மழை என்ற பெயர்ச் சொற்களும்,
தொழுதல், எழுதல், பெய்தல் என்ற வினைச் சொற்களும் பயன் படுத்தப் பெற்றுள்ளன.


‘எழுவாள்‘ என்று வினைமுற்று உள்ளதால், இப்பெண் எழுவதற்கு முன் துயில் நீங்கி எழுந்துள்ளாள் என்பது பொருள். துயில் எழுந்த இந்தப் பெண், தெய்வத்தைத் தொழாமல் கணவனைத் தொழுதுள்ளாள்.
எனவே இவள் அருகிலேயே கணவன் துயில்கொண்டுள்ளான் என்பதும் பொருள். எனவே, இந்தப் பெண் தூங்கி எழுவதற்கு முன்பாகக் கணவனுடன் சேர்ந்து படுத்துள்ளாள் என்பதும் பொருளாகிறது.

இரவில் கணவனுடன் சேர்ந்து படுத்துத் தூங்கிய பெண் காலையில் எழும்போது தன்னுடைய உடற்தூய்மை கருதித் தெய்வத்தைத்   தொழமுடியாத நிலையில் இருப்பாள். எனவே, தெய்வத்திற்கு அடுத்தநிலையில் உள்ள தன் கணவனைத் தொழுது எழுவாள்.  கணவனைத் தொழுது எழும் இப் பெண்ணின் வயிற்றில் ஓர் உயிர் தோன்றி வளர்கின்றன காரணத்தினால், உலகில் தோன்றியுள்ள  உயிர்கள் எல்லாம் வளர்வதற்குக் காரணமான மழையானது இவளது வேண்டுகோளுக்கு இரங்கும் என்பது பொருளாகிறது.


குறளுக்கான உரை

இரவில் கணவனுடன் ஒன்றாய்ச் சேர்ந்து படுத்திருந்த பெண்ணானவள், காலையில் எழுந்திருக்கும் போது,  அவளது உடற்தூய்மை கருதித் தெய்வத்தை வணங்காமல், தனது கணவனை வணங்கி எழுகின்றாள்.  உலகில் தோன்றியுள்ள
உள்ள உயிர்கள் எல்லாம் வளர்ந்து நன்கு வாழ்வதற்குக் காரணமானது மழை.  இம்மழையானது, இவள் வயிற்றில் தோன்றியுள்ள உயிரும் நன்கு வளர்ந்து வாழும் பொருட்டு, இப் பெண்ணின் வேண்டுகோளுக்கு இணங்கிப் பெய்யும் என்பது கருத்து.

புத்தாண்டில் புதிய சிந்தனைகள் பிறக்கட்டும்.
வள்ளுவன் வகுத்த வழியில் வாழ்ந்திடுவோம்.

புத்தாண்டு நல்வாழ்த்துகள்.


அன்பன்
கி.காளைராசன்
-------------------------
(கற்புக்கரசி கண்ணகி கோவலனுடன் சேர்ந்திருக்காத காரணத்தினால் மழையை வேண்டவில்லை.  மாறாக  அவள் அழைத்தவுடன் அக்கினி வந்தது என்பதும், தனித்திருக்கும் பெண்தெய்வங்களின் ஜடாமுடியானது அக்கினி வடிவத்தில் இருப்பதும் சிந்தனைக்கு உரியன)

வாசிக்கப் பெற்றவை

“தெய்வந்  தொழாஅள்  கொழுநற்  றொழுதெழுவாள்
பெய்யெனப்  பெய்யும்  மழை“ (55)

கலைஞர் உரை:
கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்.

மு.வ உரை:
வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!.

சாலமன் பாப்பையா உரை:
பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.

பரிமேலழகர் உரை:
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்என - பிற தெய்வம் தொழாது தன் தெய்வம் ஆகிய கொழுநனைத் தொழாநின்று துயிலெழுவாள் 'பெய்' என்று சொல்ல; மழை பெய்யும்-மழை பெய்யும். (தெய்வம் தொழுதற்கு மனம் தெளிவது துயிலெழும் காலத்தாகலின், 'தொழுது எழுவாள்' என்றார். 'தொழாநின்று' என்பது,  'தொழுது' எனத் திரிந்து நின்றது. தெய்வம்ந்தான் ஏவல் செய்யும் என்பதாகும். இதனால் கற்புடையவளது ஆற்றல் கூறப்பட்டது.

மணக்குடவர் உரை:
தெய்வத்தைத் தெய்வமென்று தொழாளாய், எல்லாத் தெய்வமுந் தன்கணவனென்றே கருதி, அவனை நாடோறுந் தொழுதெழுமவள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும்.

Translation:
No God adoring, low she bends before her lord; Then rising, serves: the rain falls instant at her word!.
Explanation:
If she, who does not worship God, but who rising worships her husband, say,  "let it rain," it will rain.
----------------------------

வாசிக்கப்பெற்ற குறள்கள்

தெய்வம் 43, 45, 50, 55, 619, 702, 1023

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங்
கைம்புலத்தா றோம்ப றலை (43)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்
தெய்வத்துள் வைக்கப் படும் (50)

தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை (55)

தெய்வத்தா னாகா  தெனினு முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் (619)

ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல் (702)

குடிசெய்வ லென்னு மொருவற்குத் தெய்வ
மடிதற்றுத் தான்முந் துறும்  (1023)


தொழுதல் 55, 260, 268, 828, 970, 1033

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
யெல்லா வுயிருந் தொழும் (260)

தன்னுயிர் தானறப் பெற்றானை யேனைய
மன்னுயி ரெல்லாந் தொழும் (268)

தொழுதகை யுள்ளும் படையொடுங்கு மொன்னா
ரழுதகண் ணீரு மனைத்து (828)

இளிவரின் வாழாத மான முடையா
ரொளிதொழு தேத்து முலகு (970)

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந்
தொழுதுண்டு பின்செல் பவர் (1239)


மழை  12, 15,  55,  1239

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை  (12)

கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉ மெல்லா மழை (15)

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண் (1239)

Friday, November 1, 2013

மலேசிய இந்துக் கோயில்களின் தெய்வங்கள் - தேமொழி


தேமொழி

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தெய்வம் என்ற சொல்வழக்கினை செயல்படுத்த எங்கெங்கும் கோயில்களை அமைப்பது தமிழர் மரபாக இருக்கிறது. மலை உச்சிகள், கடற்கரைகள், குளக்கரைகள், ஆற்றங்கரைகள் மட்டுமல்ல, நடைபாதைகளையும் நாம் விட்டு வைத்ததில்லை.
தமிழக மக்கள் தொன்று தொட்டு வழிபாட்டில் உள்ள தெய்வங்களுக்கு மட்டுமின்றி, வெளிநாட்டிலிருந்து வந்து பரவிய மதங்களுக்கும் வழிபாட்டிற்காக ஆலயங்கள் ஏற்படுத்தியுள்ளனர். ஆலயங்கள் கலாச்சார மையமாக மட்டுமின்றி மானுடவியலின் பிரதிநிதியாக மனிதர்களின் வாழ்வியல் வரலாற்றையும் எடுத்துரைக்கிறது. ஓரிடத்தின் கோயில்களின் தன்மையைக் கொண்டு அங்கு வாழும் மக்களை, அவர்களது பின்புலத்தை நாம் அறியலாம். காட்டாக, இந்தியக் கடற்கரையோர நகர்களில் வந்திறங்கிய மேலைநாட்டு கிறிஸ்துவர்களின் தாக்கத்தினாலும் போதனைகளாலும் அம்மதத்தைத் தழுவிய கடல் சார்ந்து வாழ்ந்த மீனவர்களில் பலர் கிறிஸ்துவர்களாகவும் அவர்கள் வணங்கும் தேவாலயங்களையும் நாமறிவோம்.

அது போல நம் நாட்டின் மதங்களும் கிழக்காசிய, தென்கிழக்காசிய நாடுகளிலும் பரவியுள்ளதை அங்குள்ள புத்த மத வழிபாட்டினாலும், இந்து மதக் கோயில்களாலும் அறிவோம். அவ்வாறு பரவிய இந்துமதத்தின் கோயில்களைக் கொண்டும் அங்கு சென்று வாழ்ந்த இந்தியர்களின், தமிழர்களின் பின்னணியையும் அறியலாம். கம்போடியாவில் உள்ள அங்கோவார்ட் கோயில் உருவாகிய காலத்தில் அங்கு வாழ்ந்த இந்தியர்களின் பின்னணி, இக்கால மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உள்ள இந்தியர்களின் பின்புலம் போன்றவற்றை அவர்கள் வழிபடும் கடவுள்களின் கோயில்களைக் கொண்டும் நாம் அறிந்து கொள்ளலாம்.

மலேசிய கோயில்கள்

தமிழர்களின் சிறுதெய்வங்களும் பெருந்தெய்வங்களும்:
தமிழகத்தின் சமய வளர்ச்சியில் காலப்போக்கில் நிகழ்ந்த மாற்றங்களில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வடபுலத்திலிருந்து வந்து பரவியிருந்த சமண புத்த மதங்கள் மறைந்து, மற்றுமொரு வடபுலத் தாக்கத்தினால் நலிவடைந்திருந்த இந்து மதம் அரசர்களின் ஆதரவு பெற்று மறுமலர்ச்சி அடைந்தது. ஏற்கனவே தமிழ்நாட்டில் இருந்த பண்டைய வழிபாட்டு முறைகளையும், தெய்வங்களையும் உள்ளிழுத்து மறுமலர்ச்சி அடைந்த இந்துமதம் தன்னை உறுதிப் படுத்திக் கொண்டது.

பண்டைய தமிழர்களின் வழிபாடு தங்களது மூதாதையரை தெய்வங்களாக வணங்குவதாக இருந்தது. இந்த ஆதிகால வழிபாட்டுத் தெய்வங்கள் பிற்காலத்தில் சிறுதெய்வங்களாகக் குறிப்பிடப்பட்டனர். இந்த மரபு வழி தெய்வங்களும், வழிபாட்டு முறைகளும் தலைமுறை தலைமுறையாக நாட்டுப்புற பாமர மக்களின் பண்பாடாக இருக்கிறது. மாறாக, பெருந்தெய்வங்கள் வேதங்கள் கூறும் புராண தெய்வங்களாவர். சுருக்கமாகக் கூறின், சமூகத்தின் அடித்தட்டு மக்களால் வழிபடப்படும் தெய்வங்கள் சிறுதெய்வங்களாகவும், மேல்தட்டு மக்களால் வழிபடப்படும் தெய்வங்கள் பெருந்தெய்வங்களென்றும் அறியப்பட்டு வருகிறது. இந்த வழிபாட்டின் அடியையொற்றி இவை முறையே நாட்டுப்புற சமயமென்றும், பெருஞ்சமயமென்ற பிரிவுகளாகவும் வழங்கப்பட்டு வருகிறது (முனைவர் ஒ.முத்தையா, தமிழ் இணையக் கல்விக் கழகம்).



கிராமங்களை இருப்பிடமாகக் கொண்டு, நாட்டுப்புற மக்களின் மரபு வழி வந்த சிறுதெய்வங்கள் (1) ஒரு தனிப்பட்ட வீட்டிற்கு உரிய தெய்வமாகவோ, (2) ஒரு குலத்திற்கு உரிய தெய்வமாகவோ (ஒரே மூதாதையர் வழி வந்த குடும்பக்களுக்குரிய), (3) ஓர் இனத்திற்குரிய தெய்வமாகவோ (சாதிப்பிரிவு), (4) ஊர்த்தெய்வமாகவோ அல்லது (5) பெரும்பான்மையோர் வணங்கும் (வெகுசனத் தெய்வம் என்றும் குறிப்பிடப்படும்) தெய்வமாகவோ இருப்பர்.
இச்சிறு தெய்வங்களில் பெரும்பாலோர் பெண்தெய்வங்களாவர். பெண்தெய்வங்களிலும் தாய்தெய்வங்களே அதிகம், கன்னித் தெய்வங்களும் உண்டு. ஆண் தெய்வங்களை விட பெண்தெய்வங்கள் சக்தி வாய்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர், இந்த நம்பிக்கையை "சக்தி இருந்தால் செய், சக்தி இல்லையேல் சிவனே என்று இரு" என்ற பழமொழியின் வாயிலாகவும் அறியலாம் என்கிறார் முனைவர் ஒ.முத்தையா.
வளமைக்கும் செழுமைக்கும் அடையாளமாகவும், வலிமைக்கும் திறமைக்கும் குறியீடாகவும் போற்றப்படுபவர் பெண் தெய்வங்கள். வணங்கினால் நன்மையும், வணங்காவிட்டால் தீமையும் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் வழிபடப்படும் பெண் சிறுதெய்வங்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன், சீலைக்காரியம்மன், திரௌபதையம்மன், நாச்சியம்மன், பேச்சியம்மன், கண்டியம்மன், வீருசின்னம்மாள், உச்சிமாகாளி, மந்தையம்மன், சோலையம்மன், ராக்காச்சி, எல்லையம்மன், அங்காளம்மன், பேச்சி, இசக்கி, பேராச்சி, ஜக்கம்மா போன்ற பெண் தெய்வங்கள்.
மழைத்தெய்வமாக, மழை தந்து உயிர்வளங்களைக் காப்பதாகக் கருதப்பெறும் மாரியம்மன், கோட்டை மாரியம்மன், இருக்கன்குடி மாரியம்மன், வீரபாண்டி மாரியம்மன் என்ற பல்வேறு பெயர்களிலும் அறியப்படுவதுண்டு. தமிழகம் முழுவதும் மாரியம்மன் வழிபாடு பரவி இருந்தாலும் தென் மாநிலங்களில் மாரியம்மன் வழிபாடு அதிகம்.

சங்க இலக்கியங்களில் பாலை நிலத்தின் தெய்வம் கொற்றவையாக குறிப்பிடப்படும் காளியம்மனின் கோயில் இல்லாத கிராமங்களே இல்லை என்று கூறுமளவுக்கு அடுத்துப் பரவலாக வணங்கப் படும் ஒரு தெய்வம் காளியம்மன். வேதங்கள் குறிப்பிடும் கோப ஆவேசம் கொண்டு தீயவர்களைத் தண்டிக்கும் காளியே இந்தக் காளியம்மன் ஆவார். சிறுதெய்வங்களில் ஆண் தெய்வங்கள் சிறுபான்மையினரே. இவர்கள் பெரும்பாலும் காவல் தெய்வங்களாக ஊருக்குப் புறத்தே கோயில் கொண்டிருப்பர். ஊர்த் தெய்வங்களாகவோ, காவல் தெய்வங்களாகவோ வணங்கப் பெறும் ஆண்தெய்வங்களில் (1) முதன்மை தெய்வங்களும், அவர்களுக்கு உறுதுணையான உள்ளோர் பரிவாரத் தெய்வங்களாகக் கருதப்படும் (2) துணைமைத்தெய்வங்களும் உண்டு. முதன்மை தெய்வங்களாக அய்யனார், முனீஸ்வரன், சுடலை மாடன், அண்ணன்மார் சாமி, மதுரைவீரன், கருப்பசாமி போன்ற தெய்வங்கள் வணங்கப் படுகின்றனர். கூடமுடைய அய்யனார், செங்குளத்து அய்யனார், கொக்குளத்து அய்யனார் என்ற பெயர்களில் வணங்கப் படும் ஐயனார் வழிபாடு தமிழக கிராமங்களில் பரவலாக அதிகம் உண்டு. மாயாண்டி, மாடசாமி, சடையாண்டி போன்றோர் துணைமைத் தெய்வங்களாவர்.

குளம் ஏரிபோன்ற நீர்நிலைகளில் அருகில் மிகச்சிறு கோயில்களில், அல்லது ஊருக்கு வெளியே கொடிய ஆயுதங்கள் கையிலேந்தி மண்குதிரை போன்ற வாகனங்களுடன்இருக்கும் சிறுதெய்வங்களின் தோற்றம் அச்சம் தருவதாகவும், உருவத்தில் பெரியவையாகவும் இருக்கும். பூசாரிகள் கொண்டு பூசைகள் நிகழ்த்தி, பலி கொடுத்து வணங்கப்படும் வழிபாட்டு முறைகள் கொண்ட சிறுதெய்வங்கள் என்போர் தோன்றி, வாழ்ந்து, மக்களைக் காத்து, அவர்கள் நலனுக்காக தங்கள் இன்னுயிரை விட்டவர்கள் ஆவர்.
காலப்போக்கில் சிறுதெய்வங்கள் பெரும்பான்மையினர் வணங்கும் தெய்வங்களாக மாற்றப்பட்டு பிறகு பெருந்தெய்வங்களின் வடிவமே இவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். நாட்டுப்புறச் சிறுதெய்வ வழிபாடுகளில் நிகழ்ந்து வரும் இந்த மாற்றங்கள் தெய்வங்களின் மேல்நிலையாக்கம் (sanskritization) எனச் சுட்டப்படுகிறது. காட்டாக, 'மாரியாயி' என்ற சிறுதெய்வம், 'மாரியாத்தா' என்ற பெரும்பான்மையினர் வணங்கும் தெய்வமாக மாறுதலடைந்து, பிறகு 'ஸ்ரீகௌமாரியம்மன்' என்ற பெருந்தெய்வமாக மேல்நிலையாக்கப்படுகிறது. அது போன்றே 'காளியாயி' என்ற சிறு தெய்வம், 'காளியாத்தா' என்று மாற்றமடைந்து, பிறகு 'ஸ்ரீகாளீஸ்வரி' என்ற பெயருடன் பெருந்தெய்வமாக பெரும்பான்மையினர் வணங்குவதற்கு மேல்நிலையாக்கம் பெறுகின்றது. அதனைத் தொடர்ந்து ஆகம முறை வழிபாட்டைக் கொண்டு வணங்கும் முறைகளும் தொடர்கிறது. பெரிய கோபுரம் உள்ள கோயில்களும் எழுப்பப்பட்டு, பலி கொடுத்தல் போன்ற நிகழ்வுகள் கோயிலுக்கு புறத்தே நடத்தப்படுகிறது.



அக்கரைச் சீமையின் அம்மன்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் மலேசியாவிற்கு குடிபெயர்ந்தவர்கள், தோட்ட வேலைகளுக்காக ஆங்கிலயர்களால் அழைத்து வரப் பெற்றவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள், அதிலும் குறிப்பாகத் தமிழர்கள் (பரதன் குப்புசாமி, 2006; பார்பரா வெஸ்ட் 2009). இவர்களில் பெரும்பாலோர் உழவு பொய்த்ததால் பஞ்சம் பிழைக்க கூலி வேலை செய்ய சென்ற நாட்டுப்புற மக்களாவார். அந்நிய மண்ணில் தங்கள் வழிபாட்டிற்காகத் தொன்று தொட்டு பின்பற்றிய கடவுள்களுக்கு கோயில் அமைத்தனர். அதனால் அக்கோயில்கள் தமிழக மண்ணில் பெரும்பான்மையாக அமைந்திருக்கும் சிவன், விஷ்ணு, பார்வதி, மீனாட்சி போன்ற பெருந்தெய்வங்களின் கோயில்கள் போலன்றி, நாட்டுப்புற மக்கள் வழிபட்ட சிறு தெய்வங்களான மாரியம்மன், காளியம்மன், முனீஸ்வரன் போன்ற தெய்வங்களின் கோயில்களாக இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது (முனைவர்.சுபாஷிணி  , 2013).

இத்தகவலை மேலும் ஆழ்ந்து நோக்க விரும்பி மலேசிய இந்து தெய்வங்களின் கோயில்களின் பட்டியல் விக்கிபீடியாவில் இருந்து தரவிறக்கப்பட்டு, கோயில்களின் தெய்வங்களின் பெயர்கள் கொண்டு பகுக்கப்பட்டது [மலேசிய மண்ணின் வளர்ச்சிக்கு தமிழக இஸ்லாமியர் பெரும்பங்கு ஆற்றியிருந்தாலும், இந்த கட்டுரையின் நோக்கத்தின் காரணமாக அத்தமிழர்களின் பின்புலத்தை அறியத்தரும் அவர்களது வழிபாட்டுத்தலங்களோ தகவல்களோ தவிர்க்கப்பட்டுள்ளது]. இது போன்று தற்கால நிலையினைக் கடந்தகால நிகழ்வுகளின் வரலாற்றுத் தரவுகள் துணை கொண்டு அறிந்து கொள்ளும் ஆய்வு “வரலாற்று ஆய்வு” (Retrospective Observational Study) என்ற முறையாகும்.


மலேசிய கோயில்கள்

தரவுகளின் படி மலேசிய மண்ணில் ஆண் தெய்வங்களின் கோயில்களின் எண்ணிக்கையும் பெண் தெய்வங்களின் கோயில்களின் எண்ணிகையும் சம அளவில் அமைந்திருக்கிறது. ஆனால் சிறுதெய்வங்களின் கோயில்களின் எண்ணிக்கை அளவில் 58 விழுக்காடும், பெருந்தெய்வங்களின் கோயில்களின் எண்ணிக்கை அளவில் 42 விழுக்காடாகவும் இருக்கிறது. மேலும் ஆழ்ந்து நோக்குகையில் அதிக கோயில்கள் இருப்பது மாரியம்மனுக்கே (30%) என்பது தெரிகிறது. அடுத்தடுத்த இடங்களில் தொடர்ந்து இடம் பெறுபவை முருகன் கோயில்களும் (19%), முனீஸ்வரன் கோயில்களும் (10%), காளியம்மன் கோயில்களும் (10%), பிள்ளையார் கோயில்களும் (7%) ஆகும். உத்தேசமாக, இரண்டு கோயில்களில் ஒன்று சிறு தெய்வங்களின் கோயிலாகவும், மூன்று கோயில்களில் ஒன்று மாரியம்மன் கோயிலாகவும் அமைந்திருக்கிறது. மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோயில்கள் கூட்டாக 40% கோயில்களாக அமைந்து நாட்டுப்புற சிறுதெய்வங்களான பெண்தெய்வங்களின் கோயில்கள் அதிகம் இருப்பது தெரிகிறது. இவற்றோடு 10% முனீஸ்வரன் கோயில்களையும் கணக்கில் கொண்டால் சிறுதெய்வங்களின் கோயில்கள் பாதிக்கும் மேல் பெரும்பான்மையாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
தரவுகள் அளிக்கும் இந்துக்கோயில்களின் தகவல்கள், மலேசியாவிற்கு பத்தொன்பதாம் நூற்றாண்டில் புலம் பெயர்ந்த உழைப்பாளிகளில் பெரும்பான்மையோர் தமிழக கிராம மக்கள் என்ற தகவலையே ஒத்திருக்கிறது. மலேசியாவின் புகழ் பெற்ற, நீண்ட காலமாக வழிபாட்டில் இருக்கும் கோயிலும் கோலாலாம்பூரில் மாரியாம்மன் கோயிலே. கோலாலாம்பூரின் சைனா டவுன் அருகில் இருக்கும் இப்புகழ் மிக்க, பழமை வாய்ந்த ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் 1873 ஆண்டு திரு. தம்புசாமி பிள்ளை அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. பிள்ளைக் குடும்பத்தினரின் தனிப்பட்ட இக்கோயில் பிறகு 1920களில் அனைவரும் வணங்கிப் பயன் பெரும் கோயிலாக மாற்றப்பட்டு, தற்பொழுது ஒரு அறங்காவல் குழுவின் மேற்பார்வையில் நிர்வாகிக்கப்படுகிறது. சிறு செங்கல் கோயிலாக இருந்த இக்கோயில் இடம்மாற்றப்பட்டு 1973 இல் கோபுரம் உள்ள புதிய கோயிலாக கட்டப்பட்டுள்ளது. மலேசியாவில் நீண்ட காலமாக வழிபடும் இந்துக்கோயிலாக உள்ளது இந்த ஸ்ரீ மகாமாரியம்மன் கோயிலின் சிறப்பு.


ஆதாரங்கள்:

  • பரதன் குப்புசாமி, (BaradanKuppusamy - 24 March 2006). "Racism alive and well in Malaysia". Asia Times.பார்த்த நாள் 27 October 2010. - http://www.atimes.com/atimes/Southeast_Asia/HC24Ae01.html
  • பார்பரா வெஸ்ட் (West, Barbara A. - 2009).Encyclopedia of the Peoples of Asia and Oceania, Volume 1.Facts on File inc. p. 486.ISBN 0-8160-7109-8. - http://books.google.com/books?id=pCiNqFj3MQsC&printsec=frontcover&hl=en#v=onepage&q&f=false
  • முனைவர்.சுபாஷிணி, மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு, மின்தமிழ், ஜூலை 2013 - https://groups.google.com/forum/#!msg/mintamil/OTs6Tbc7z5E/7kjFBrMAiO4J
  • நாட்டுப்புறவியல் மரபுகள்: வழிபாடுகளும், விழாக்களும், முனைவர் ஒ.முத்தையா - http://www.tamilvu.org/courses/degree/a061/a0614/html/a06142in.htm - http://www.tamilvu.org/courses/degree/a061/a0614/html/a0614222.htm
  • மலேசியா தகவல்கள்: மலேசியா - https://ta.wikipedia.org/s/er மலேசியா இந்துக் கோயில்களின் பட்டியல் (தரவுகளின் நிலவரம் July ‎12, ‎2013 படி): https://en.wikipedia.org/wiki/List_of_Hindu_temples_in_Malaysia கோலாலாம்பூர் மாரியம்மன் கோயில் - http://en.wikipedia.org/wiki/Sri_Mahamariamman_Temple,_Kuala_Lumpur கோலாலாம்பூர் மாரியம்மன் கோயில் - http://www.malaysiantemples.com/2012/04/maha-mariamman-temple-kuala-lumpur.html


மலேசியா அம்மன் கோயில் காணொளிகள்:

  • Documentary - Sri MahaMariamman Temple, KL, Malaysia Part 1 - http://youtu.be/s6txzvoXvSI 
  • Documentary - Sri MahaMariamman Temple, KL, Malaysia Part 2 - http://youtu.be/7SDHK9vUME0


மேலும் தகவலுக்கு பரிந்துரைக்கப்படும் நூல்கள்:

  • Ramstedt, Martin (2004), Hinduism in modern Indonesia, London: Routledge, ISBN 0-7007-1533-9 
  • Elementary Statistics: Looking at the Big Picture, Nancy Pfenning, 2010, Retrospective observational study on P.49, Cengage Learning, ISBN-10: 0495016527



  • படங்கள் உதவி: http://en.wikipedia.org/wiki/File:Sri_Mahamariamman_Temple_2,_central_Kuala_Lumpur.jpg 
  • http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/4/45/Mariamman_temple_in_KL.jpg/581px-Mariamman_temple_in_KL.jpg

கருந்தெய்வம் காளி கோவிலின் வரலாறு - ராணி ராசுமணியின் வரலாறு!


தக்சிணேசுவரம் காளி கோவில் வரலாறு

பவள சங்கரி

நம் இந்திய வரலாற்றில் பெண்களின் சாதனைப் பட்டியலை எடுத்துக்கொண்டால் அவை பெரும்பாலும் தன்னலமற்ற சேவைகளின் அடிப்படையிலேயே அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. மெழுகுவர்த்தியாக தம்மைத்தாமே ஆகுதியாக,  மக்கள் சேவையே மகேசன் சேவையாகக் கருதி தொண்டாற்றும் எத்தனையோ தெய்வப் பிறவிகளை நம் வரலாறு சந்தித்துக்கொண்டுதானிருக்கிறது. குடத்திலிட்ட விளக்காக எத்தனையோ சேவைகள் வெளியில் தன்னை வெளிச்சம் போட்டு காட்டிக் கொள்ளாவிட்டாலும், அதன் பலாபலன்கள் மூலமாக பிரகாசிக்கத்தான் செய்கிறது. அப்படிப்பட்ட அவதாரங்களின் கீர்த்தி எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் வானும், மண்ணும் இருக்கும்வரை நிலைத்து நிற்கத்தான் செய்கிறது. அந்த வகையில், பல்வேறு விதமான சமூகக் கட்டுப்பாட்டுத் தளையில் சிக்கிக்கொண்டிருந்த காலகட்டங்களிலும் தன்னலமற்ற தன்னுடைய அரிய சேவையால் தம் பிறவிப்பயனை அடைந்த  ஒரு பெண்மணி, ராணி ராசுமணி.  ஸ்ரீராமகிருஷ்ணரின் மண்ணில் தோன்றிய மற்றொரு மாணிக்கம் இவர்.



‘பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’ என்பார்கள். ஆனால் பொன் போன்றதொரு புதன் நந்நாளில்  செப்டம்பர் மாதம் 1793ம் ஆண்டில், வங்காள தேசத்தில் கொல்கத்தா நகரின் சில மைல்கல் தொலைவில் உள்ள கோனா என்னும் ஊரில் அவதரித்தவர். இவருடைய தந்தையார் ஹரேகிருஷ்ணதாஸ் ஒரு கூலித்தொழிலாளி. தாய் ராம்பிரியா மற்றும் சகோதரர்கள் ராமச்சந்திரா மற்றும் கோவிந்தா ஆவர். ராசுமணி என்ற இவருடைய பெயருடன் செல்லப்பெயரான ராணியும் சேர்ந்து ராணி ராசுமணியானது. இளம் வயதிலேயே காளிதேவியின் மீது கொண்டிருந்த ஆழ்ந்த பக்தி, ராமாயணம் மற்றும் மகாபாரதக் காவியங்களின் மீது கொண்டிருந்த ஈடுபாடு காரணமாகவும், தம் பெற்றோரின் வழியில் வைஷ்ணவத்தில் ஈடுபாடும் கொண்டதனால்  மிகவும் தாழ்த்தப்பட்ட சாதி என்று சொல்லப்படுகிற ஒரு சாதியில் பிறந்திருந்தாலும் எளிதாக மக்களின் இதயங்களைக் கவர்ந்தார்.  தன்னுடைய ஏழாவது அகவையிலேயே தாய் ராம்பிரியாவை இழக்க வேண்டிய பெரும் துக்கத்தில் தள்ளப்பட்டார். மூன்று ஆண்டுகள் அதன் பாதிப்பில் நொந்து போயிருந்தாலும் விரைவில் மீண்டும் வந்தார். விதியின் வசத்தால் மிகவும் ஏழ்மை நிலையிலிருந்த ராணி ராசுமணி அதிசயத்தின் அதிசயமாய் இறையருளால் ஒரே நாளில் ஊரில் மிகப்பிரபலமான மற்றும் மிகப்பெரிய கோடீசுவரியானார்.

ஹௌரா மாவட்டத்தின் கோஷல்பூர் நகரைச்சேர்ந்த பிரித்திராம் தாஸ் என்பவர் மிகப்பிரபலமான தொழிலதிபர். தன்னுடைய முதுமையுடன் சேர்த்து இளைய மகன் ராஜ்சந்திராவின் தனிமையின் சோர்வும் அவரை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியிருந்தது. ராஜ்சந்திராவிற்கு இரண்டும் முறை திருமணம் முடித்தும் இரு மனைவிகளும் மிகக் குறுகிய காலத்திலேயே இறந்து போய்விட்டனர். மூன்றாவது திருமணம் செய்து கொள்ளும் மனநிலையில் மகன் இல்லாததே அவருடைய மிகுந்த சோகத்திற்கு காரணமானது. ஒரு நாள் ராஜ்சந்திரா ஹூக்லி மாவட்டத்தில் திரிவேணியில் கங்கை நதியில் குளிப்பதற்காக படகில் சென்றார்.  அச்சமயம் படித்துறையின் வழியாக கடந்து செல்லும் அந்த கருணை மிகு, தெய்வீக அழகு நிறைந்த சிறுமியைப் பார்த்தவுடன் அந்த அபரிமிதமான அழகில் மயங்கி, அவளையே மணம் புரிய விரும்புவதாக தந்தையிடம் கூறுகிறார். மகனின் இந்த விருப்பம் தெய்வ சங்கல்பம் என்று மிக மகிழ்ச்சியாக ராணி ராசுமணியை அவர்  பெற்றோரிடம் பெண் கேட்டு, இத்திருமணம் 1804ம் ஆண்டு, ராசுமணியின் 11ம் வயதில்  கொல்கத்தா நகரின் ராஜ்சந்திராவின் மாளிகையில் நடந்தது. இந்த இளம் வயதில் திடீர் மாற்றத்தை எதிர்கொண்டாலும் அந்த சிறுமி ராணி ராசுமணி தன் எளிமையையும், இறை பணியையும் இழக்கவில்லை. தன்னுடைய மாமனார் மற்றும் மாமியாரின் சேவைகளையும் தம் அன்றாடக் கடமைகளில் ஒன்றாக சேர்த்துக்கொண்டாள். இத்தோடு நில்லாமல் குடும்பத்தின் ஏனைய பொறுப்புகள் அனைத்தையும் அவள் திறமையாக கையாண்ட விதமும்,  அவளுடைய அறிவுக்கூர்மையும் கணவனின் நம்பிக்கையை பெறச் செய்ததால், எல்லா முக்கியமான முடிவுகளையும் அவளைக் கேட்டே எடுக்கும் நிலை ஏற்பட்டது.

1817ம் ஆண்டு, தன்னுடைய 64வது வயதில் பிரித்திரம் தன்னுடைய ஏராளமான சொத்துகளை மகனுக்குக் கொடுத்துவிட்டு இறந்துபோனார். ராஜ்சந்திரா தன்னுடைய பரந்த சேவையுள்ளம் காரணமாக பெரிதும் மதிக்கப்பட்டார். 1823ல் ராணி ராசுமணி தன் தகப்பனை இழந்தார். அதே ஆண்டில் அப்பகுதியில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் காரணமாக வீடு, வாசல் தங்கள் உடமைகள் என அனைத்தையும் இழந்த மக்களுக்குத் தாராளமாக தம் உதவிக்கரம் நீட்டினார். தங்கள் வீட்டினருகில் கங்கையின் மீது மலைப்பாதை மிகவும் மோசமான நிலையில் ஆபத்தை விளைவிக்கக்கூடியதாக இருந்தது. அந்தப் பாதையை அதற்கான உயரதிகாரிகளிடம் பேசி அனுமதி பெற்று, தன் கணவரிடமும் இது பற்றி விரிவாக எடுத்துச்சொல்லி அவருடைய ஒப்புதலையும் பெற்று, செப்பனிடும் பணியையும் முடித்து, அவருடைய பெயரிலேயே பாபு காட் மற்றும் பாபு சாலை என்ற பெயரில் 1830ம் ஆண்டு அந்த முக்கியமான சாலை  திறக்கப்பட்டது.

விதியின் விளையாட்டு ஆரம்பமானது. 1836ல் ஜூன் மாதத்தில் தன்னுடைய 49வது வயதில் மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக இவருடைய கணவர் திடீரென்று உயிர் நீத்தார். தன்னுடைய 44 வது வயதில் மூன்று பெண் குழந்தைகளுக்கும் திருமணம் ஆன நிலையில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வாழ்ந்தார் ராணி ராசுமணி. இந்த வேதனை தாளாமல் மூன்று நாட்கள் அன்ன ஆகாரமோ, நீரோ கூட பருகாமல் இருந்தார்.  ஆனாலும் பிரிந்த அந்த ஆன்மாவிற்காக மிகச் சிறப்பான முறையில் சிரார்த்த பூசை செய்தார். வந்தவர்கள் அனைவருக்கும் இல்லை என்று இல்லாமல் வேண்டுவதையெல்லாம்  அளித்து அனுப்பினார். அந்த விழா முடியும் தருவாயில் ஒரு இனிமையான சம்பவம் நடந்தது.  பல ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்சந்திராவிற்கு, ஸ்ரீ ரகுநாதரின் திரு உருவப்படத்தை தினசரி வழிபாட்டிற்காக பரிசாக வழங்கிய  அதே துறவி ஒருவரும் எதிர்பார்க்காத அன்று மீண்டும் தோன்றினார். ராசுமணி மிகவும் மகிழ்ந்து, வணங்கி  ஏதேனும் பரிசு பெற்றுக்கொள்ள வேண்டுமென்று மன்றாடினார். ஆனால் அந்தத் துறவியோ ஒரு கம்பளியும், தண்ணீர் குவளையும் மட்டுமே பெற்றுக்கொண்டு ஸ்ரீரகுநாதரைப் பார்த்துவிட்டு, ஆசி வழங்கிச் சென்றார். ராசுமணி இதனைத் தன் ஆன்மீகத் தேடலுக்கான  நல்லதொரு சகுனமாகக் கருதினார். ஆன்மீகத்தில் ஆழ்ந்த ஈடுபாடு ஏற்பட்டாலும், கணவரை இழந்த நிலையில் அந்த மிகப் பெரிய சொத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் அதனால் பல விதமான நெருக்கடியான சூழல்களைச் சமாளிக்க வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டது. காளியின் மீது தான் கொண்ட ஆழ்ந்த பக்தியின் காரணமாக துணிச்சலாக அனைத்தையும் கையாண்டார். இவையனைத்திற்கும் உதவியாக தனது வலக்கரமாக செயல்பட்டவர் இவருடைய மருமகனான மதுரநாத் பிஷ்வாஸ்.

அந்த கட்டுப்பாடான காலத்தில் ராணி ராசுமணி மனித உரிமைக்காக வெளிப்படையாக, துணிச்சலாகக் குரல் கொடுத்தார்.  மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பிரித்தானிய அரசாங்கம் மீன் பிடிப்பதற்கு வரி விதித்தது. இந்த நேரத்தில்தான் ராணியின் முடிவெடுக்கும் திறன் இப்பிரச்சனைக்கு தீர்வாக அமைந்தது. பிரித்தானிய அரசாங்கத்திடம் கங்கையில் மீன் பிடிக்கும் உரிமையைப் பெற முடிவெடுத்தார்.  அந்த காலத்தில் மிகப்பெரிய தொகையான ரூ.10,000 கொடுத்துவிட்டு அந்த உரிமையையும் பெற்றார். அடுத்து உடனடியாக அவர் செய்த காரியம் கங்கை நதியைச் சுற்றி தடுப்பு சுவர் அமைத்ததுதான். இதனால்  கப்பல் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டதனால் பிரித்தானிய அரசாங்கம் அதனை நீக்கச் சொல்லி பேச்சு வார்த்தை நடத்தியபோது, தான் ரூ 10,000 கொடுத்து வாங்கிய மீன்கள் கப்பல் போக்குவரத்தினால் சிரமத்திற்கு உள்ளாகிறது என்று வாதிட்டார். பிரித்தானிய அரசாங்கம் செய்வதறியாது, அவரை சமாதானம் செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதற்கான தீர்வாக மீன்பிடி வரியை நீக்கிவிட்டு, தன்னுடைய பணத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டால் தான் தடுப்பணைகளை நீக்கி விடுவதாகக் கூறினார். பிரித்தானிய அரசும் அதனை ஒப்புக்கொண்டு வரியையும் நீக்கி, பணத்தையும் திருப்பிக் கொடுத்தது. இப்படி ஒரு தனி மனுசியாக தன் இராசதந்திரம் மூலமாக ஒரு அரசாங்கத்தையே தம் கட்டுக்குள் வைத்திருந்ததற்கு ஆதாரமாக பல சம்பவங்கள் நடந்ததை வரலாறு கூறுகிறது.



அதற்கு ஆதாரமான மற்றொரு நிகழ்ச்சி. தன்னுடைய ஜன்பஜார் மாளிகையில் துர்கா பூசைக்கான பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார் ராணி. ஏழு அடுக்கு மாடியும், 300 அறைகளும் கொண்ட தன்னுடைய அந்த மாளிகையே விழாக்கோலம் பூண்டு   கோலாகலமான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.  அதற்கான தீர்த்தம் எடுத்து வரவேண்டி குருக்கள் குழு விடியலில் ஊர்வலமாக மேள தாளங்களுடன் கங்கை நோக்கிச் சென்றனர். செல்வாக்கும் வசதியும் நிறைந்த ஐரோப்பியர்கள் பலர் குடியிருந்த இடம் அது. விடியலில் இந்த ஊர்வலமும், மேள தாளமும் அவர்களின் உறக்கத்தைக் கலைக்க அதனால் கோபம் கொண்ட ஒருவர் ராணியின் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க  மேற்கொண்டு ஊர்வலம் நடத்தத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் ராணியோ அந்தத் தடையை மீறி ஊர்வலம் நடத்தினார். அதனால் அவருக்கு 50 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஒரு வார்த்தையும் பேசாமல் உடனே அபராதத்தைச் செலுத்தியவர், அன்றைய தினமே பாபுகாட் சாலையில் மூங்கிலால் ஒரு தடுப்புச்சுவரை ஏற்படுத்தினார். அவருடைய சொந்த சாலையில் தடுப்புச் சுவர் ஏற்படுத்தியதை ஒன்றும் செய்ய முடியாமல் போனாலும் தெற்கிலிருந்து மேற்கு கொல்கத்தாவிற்கும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வருவதற்கான போக்குவரத்தும் சுத்தமாக நின்றுபோனது. அரசாங்கத்தினர் பலமுறை இவரிடம் வேண்டியும் அந்தத் தடுப்பை நீக்க மறுத்தார். தன்னுடைய உரிமையான இடத்தில் தான் எதையும் செய்ய முடியும் என்று உறுதியாக வாதிட்டார். இறுதியில் வேறு வழியில்லாமல் அரசாங்கம் அவருடைய அபராதத் தொகையைத் திருப்பிக் கொடுத்ததோடு விடியற்காலையில் கங்கையில் தீர்த்தம் எடுக்கச் செல்லும் ஊர்வலத்திற்கான தடையையும் நீக்கினர்.  அதன்பின் தடுப்புச் சுவரை நீக்கி போக்குவரத்திற்கு வழி செய்தார். அன்னை மாகாளியின் அருளால் அஞ்சா நெஞ்சமும், பொறுமையும் உடன்வர பல்வேறு நலப்பணிகளை செய்து முடித்தார் ராணி ராசுமணி.  ஒரு முறை சில குடிகார பிரித்தானிய இராணுவ வீரர்கள் ராணியின் மாளிகையில் நுழைந்து தகராறு செய்தபோது சற்றும் தயங்காது தானே அவர்களைத் தாக்க ஆரம்பித்தார் அந்த வீரப்பெண்மணி. தெய்வாதீனமாக  அந்தப்புறம் கடந்து சென்ற ஒரு அதிகாரியின் மூலமாக அவரும் அவருடைய சொத்தும் காப்பாற்றப்பட்டது. இதுபோன்று பல்வேறு சம்பவங்களில் அவருடைய தனித்திறமை மற்றும் துணிச்சல் காரணமாக தன்னையும், தம் சொத்தையும் காப்பாற்றிக்கொண்டார். காளியின் துணை இருக்கும்வரை தன்னை ஒருவராலும் ஒன்றும் செய்ய முடியாது என்று திடமாக நம்ப ஆரம்பித்தார்.

ஏழைகளுக்கும், நலிவடைந்தவருக்கும் தன் உதவிக்கரம் தயங்காது நீட்டி பெரும் சேவைகள் புரிந்திருந்தாலும்,  இன்றளவும் ராணியைப்பற்றி நினைக்கும்பொழுதெல்லாம் அவருடைய காளி பக்தியே முதன்மையாக நினைவிற்கு வரும். ராணியின் வாழ்க்கையில் திடீரென எதிர்பார்க்காத சில சம்பவங்கள் நடக்கத் தொடங்கின. தம்முடைய பிறவிப்பயனை அடையக்கூடிய காலமும் கனிந்து வந்தது எனலாம். பல காலமாக பனாரசில், காசிவிசுவநாதரையும், அன்னபூரணி அன்னையையும் தரிசித்து வரவேண்டும் என்று விருப்பம் கொண்டிருந்தார். அது கனிந்து வரும் காலம் வந்தபோது பிரயாண ஏற்பாடுகள் வெகு விமரிசையாக நடந்தது. ராணி படகில் பிரயாணம் செய்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 24 படகுகள் ஏற்பாடாகியிருந்தது.  ஆறு மாதங்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் தயாராக இருந்தது. உணவு மற்றும் மற்ற பொருட்களுக்காக ஏழு படகுகள், தனக்காக ஒரு படகு, தன் மூன்று மகள்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்காக , இரண்டு படகுகள் பாதுகாப்பாளர்களுக்காக, இரண்டு படகுகள் பணியாளர்களுக்காக, நான்கு படகுகள் மற்ற உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக, துணி துவைப்பவர்களுக்காக ஒரு படகு,  நான்கு பசுக்கள் மற்றும் கன்றுக்காக ஒரு படகு, என்று அனைத்தும் தயாரான நிலையில் ராணி ராசுமணி மிகவும் ஆர்வமாகக் காத்துக்கொண்டிருந்தார். காசி விசுவநாதரையும், அன்னபூரணியையும் தரிசிக்கப்போகும் ஆனந்தத்தில் இருந்தார்.  அப்படி ஒரு சூழலில்தான் ஒரு அதிசயம் நடந்தது. அடுத்த நாள் கிளம்பப்போகும் மகிழ்ச்சியில் இருக்கும் அந்த வேளையில் அன்று இரவு ராணி ராசுமணியின் கனவில் தோன்றிய அன்னை காளிதேவி, “காசிக்குச் செல்ல வேண்டியத் தேவை இல்லை.  கங்கை நதிக் கரையின் ஒரு அழகிய இடத்தில் எனக்கு ஆலயம் அமைத்து அன்றாட வழிபாடு மற்றும்  நைவேத்தியமும் ஏற்பாடு செய்வாயாக. யாம் அங்கு எழுந்தருளி உன்னுடைய தினசரி வழிபாட்டை ஏற்றுக்கொள்ளப் போகிறோம்” என்றார். உள்ளம் பூரித்துப்போன  இராணி ராசுமணி பயணத்தை நிறுத்திவிட்டு உடனடியாக அடுத்த நாளே பயணத்திற்காக ஏற்றிய பொருட்கள் அனைத்தையும் ஏழை மக்களுக்கும் தேவையானவர்களுக்கும் கொடுத்துவிட்டு காளியின் பாதாரவிந்தங்களுக்கு அன்றாடம் பூசை செய்யும் வகையில் ஆலயம் கட்டும் பணியைத் துவக்கினார்.



முதலில் ஆலயம் எழுப்புவதற்கான ஒரு தகுதியான இடத்தை முனைந்து தேடி, கங்கை நதியின் வடபுறம் தட்சிணேசுவரம்  கிராமப் பகுதியில் 20 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்தார். ஆமையின் பின்புறப் பகுதியைப் போன்ற தோற்றமுடையது அந்த நிலம். அந்த நிலத்தின் ஒரு பகுதி ஒரு ஆங்கிலேயருடையதும் மற்றொரு பகுதி ஒரு முகமதிய சமயப் பெரியவரின் நினைவாக இருந்த இடுகாட்டு நிலம். இப்படி ஒரு இடுகாட்டுப் பகுதியே தந்திரங்களின் அடிப்படையில் சக்தி தேவிக்கும் அவள்தம் உபாசனைக்கும் உகந்த இடம் என்பார்கள். 1847ம் ஆண்டில் ஆலயம் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. ஆலயம் கட்டி முடிக்க எட்டு ஆண்டுகள் ஆனது. விஷ்ணு ஆலயம் மற்றும் 12 சிவாலயங்களும் கட்டப்பட்டன. நிலத்திற்கு ரூ 50,000, கட்டிடத்திற்கு 160,000 ரூபாயும், காளி கோவில் வளாகத்திற்கு 900,000 ரூபாயும், மற்றும் ரூபாய் 226,000 கோவிலை நிர்வாகம் செய்வதற்கான இருப்புத் தொகைக்கான சொத்தாகவும் அந்தக் காலத்திலேயே மிகப் பெரிய தொகையாக செலவு செய்து பிரம்மாண்டமாக எழுப்பப்பட்ட கோவில் இது. கோவில் முடியும் தருணம் வரும்போதே அவர் பூசை நேய நியமனங்களில் முழுமையாக ஆழ்ந்திருந்தார். தினமும் மூன்று முறை குளித்து, மிக எளிய உணவை உட்கொண்டு, பெரும்பாலான நேரங்களை தியானம் மற்றும் அன்னையின் திருநாமங்கள் உச்சாடணையிலேயே  கழித்துக் கொண்டிருந்தார்.



ராணியின் விருப்பத்திற்கேற்ப அன்னையின் திருவுருவ மேனி அழகாக அமைந்த பின்னும் அம்மனின் உருவத்தை ஆலயத்தின் கருவறையினுள் எழுந்தருளச் செய்ய தகுந்த நாளுக்காக காத்துக்கொண்டிருந்தார். நாட்கள் சென்று கொண்டிருந்தது. அன்னையோ ஒரு பேழையில் பத்திரமாக பூட்டி வைக்கப்பட்டிருந்தார். ஒரு நாள் இரவு மீண்டும் கனவில் தோன்றிய காளிமாதேவி , “இன்னும் எவ்வளவு நாட்களுக்குத்தான் என்னை இப்படி அடைத்து வைத்திருக்கப் போகிறாய்?  எனக்கு ஒரே புழுக்கமாக இருக்கிறது, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம்  கருவறையில் பிரதிஷ்டை செய்” என்று கட்டளையிட்டிருக்கிறார்.  உடனே அதற்கான பணிகளை முடுக்கிவிட்டார் ராணி. அப்போது வேலையாட்கள் அம்மன் வைத்திருந்த பேழையைத் திறந்த போது அம்மனின் திருமேனி வியர்வையில் நனைந்திருப்பதைக்  கண்டு ஆச்சரியப்பட்டனர்.

உடனே ராணி தீர்த்தவாரி நாளன்று அன்னையை கருவறையினுள் பிரதிஷ்டை செய்யத் திட்டமிட்டார். அனைத்தும் தயார் நிலையில் இருந்தது.  காளி கோவிலை கட்டி முடிப்பதற்குள் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருந்தாலும், செலவு, சக்தி, என அனைத்தும் மிக அதிகமாக ஆனாலும், எல்லாப் பணிகளும் செவ்வனே நடந்து முடிந்தபோதிலும், இறுதியாக அந்த பிரம்மாண்டமான பிரச்சனையில் வந்து நின்றது. ஆம், சாதிப்பிரச்சனை தலை தூக்கியது அங்கு!  ராணி பிராமணர்கள், மற்ற உயர் சாதிப் பிரிவினரின் அபிமானம் பெற்றிருந்தாலும், அத்துனை பெரிய சொத்திற்கு அதிபதியாக இருந்தபோதிலும் அவர் ஒரு கீழ் சாதிப்பிறப்பாகவே பார்க்கப்பட்டார். அதனால் அவர் கோவிலின் சொந்தக்காரராகவும், பிராமணர்களுக்கு உணவு சமைப்பதையும் விரும்பக்கூடிய நிலையில் இருக்கமுடியவில்லை. ராணி பல பண்டிதர்களுடனும் ஆலோசனை பெற்றாலும் ஒருவராலும் இதற்கான தீர்வைச் சொல்ல முடியவில்லை. இந்த நேரத்தில்தான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் மூத்த சகோதரர் ராம்குமார் அந்த காலகட்டத்தில் இருந்த கட்டாயமான பிராமணிய சட்டத்தைக் கடைபிடிக்கும் முகமாக ஒரு தீர்வைச் சொன்னார்.



ஆலயம் ராணியின் குரு மற்றும் ராம்குமார், அதிகாரப்பூர்வமான அர்ச்சகர் ஆகியோரின் பெயரில், காளிதேவியின் சிலையை, ஒரு வியாழன்று, மே மாதம் 31ம் நாள் 1855ம் ஆண்டில் கருவறையில் பிரதிஷ்டை செய்தார். பல பிரபலமான சாஸ்திரிகள், பிராமண பண்டிதர்கள், பக்தர்கள்,  ஞானிகள், காசி, ஒரிசா, நவதீப் போன்ற வெகு தூர தேசத்திலிருந்தும் வந்திருந்தனர். மிகப்பரந்த மனம் கொண்ட ராணி சாதி, மதம் என்ற எந்த பாகுபாடும் இன்றி, காளிமாதேவி ஆலயத்தை நிர்மாணிக்கும் குறிக்கோளை அடைந்துவிட்டார். சாதுக்களும், மத குருமார்களும், யாத்ரீகர்களும், கங்காசாகர் அல்லது பூரி ஆலயத்திற்குச் செல்லும் வழியில் தக்சினேசுவரத்தில் தங்கி அன்னையின் தரிசனமும் பிரசாதமும் பெற்று தியானம் செய்து வழிபட்டு நிறைவாகச் சென்று கொண்டிருந்தனர்.

ஸ்ரீ ராமகிருஷ்ணர், தன்னுடைய 19 வயதில் விஷ்ணு ஆலயத்தில் பூசாரியாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டபோது முதலில் மறுத்தவர் பின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஒப்புக்கொண்டார். பல விதமான சாதுக்களின் தரிசனங்கள் பற்றியும் சிலாகித்துக் கூறுகிறார் இவர். அவர் முன்னிலையிலேயே ஒரு துறவி நிர்வாணமாக உடல் முழுவதும் சாம்பலைப் பூசிக்கொண்டு நீண்ட முடியும், நகங்களும் கொண்டு, எரிந்த உடலிலிருந்து எடுக்கப்பட்டது போன்ற சாம்பலை மேனியில் பூசிக் கொண்டிருந்தவர், காளி தேவியைப் பற்றிய பாடலை கோவிலே அதிரும் வகையில் உரக்கப் பாடியதை அன்னை மகிழ்ச்சியுடன் புன்னகைத்து ரசித்ததை ஸ்ரீராமகிருஷ்ணர் நேரில் கண்டதாகக் கூறுவார். ஒரே வருடத்தில் ராம்குமார் இறந்துவிட, ஸ்ரீராமகிருஷ்ணர் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ராணி இவருடைய காளி பக்தியில் மனமுறுகிப்போவார். காளி மீதான அவருடைய பாடல்களை மெய் மறந்து கேட்டுக் கொண்டிருப்பார்.

ஒரு நாள், ஸ்ரீராமகிருஷ்ணர் அன்னை காளிமாதேவியை ஆழ்ந்த ஏக்கத்துடன் அழைத்து மனமுறுக பாடிக் கொண்டிருக்கும்போது, எதிரில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்த ராணியை திடீரென்று ஓங்கி கன்னத்தில் அறைந்துவிட்டார். அதிர்ந்து நின்றிருந்தவரைப் பார்த்து, “என்ன செய்கிறாய் நீ, இந்த புனிதமான இடத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு உலக விசயங்கள் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறாயா” என்று சப்தமிட, உடனே காவலர்கள் ஓடிவந்து அவரை வெளியில் இழுத்துவிட முயற்சிக்க, ராணியோ அதைத் தடுத்து அன்னை காளிதேவியே ராமகிருஷ்ணர் உருவில் வந்து தன்னை மிரட்டியதாக எடுத்துக்கொண்டார். உண்மையிலேயே தான் ஒரு வழக்கு பற்றி எண்ணிக் கொண்டிருந்தது அவருக்கு எப்படித் தெரிந்தது என்று மிகவும் அதிசயப்பட்டார்.

1861ம் ஆண்டில் ராணி மிகவும் நோய்வாய்ப்பட்டார். தன் இறுதி நாட்களை உணர்ந்து கொண்டவர், தென் கொல்கத்தா நகரின் காலிகட் பகுதியில் இருந்த தோட்டவீட்டில் குடியேறினார். ஆதி கங்கையின் கரையில் இருந்த இல்லம் அது. தன் இறுதிக் காலம் வந்துவிட்டதை அறிந்து தான் முடிக்காமல் விட்ட ஒரு பணியான தக்சிணேசுவர கோவிலின் நிர்வாகப் பணிகளுக்கான கையிருப்புப் பணத்திற்கான சொத்தை கோவில் பெயரில் மாற்ற வேண்டிய பெரும் பணியை உடனடியாகச் செய்து முடித்த அடுத்த நாளே தன்னுயிரையும் இழந்தார். 1861, பிப்ரவரி 19ம் நாளில் இயற்கை எய்தினார். இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால், அவர் கங்கை நதிக்கரைக்கு கொண்டுவரப்பட்டார். அது இரவு வேளையாதலால் விளக்குகள் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தன. ராணி ராசுமணி, “அந்த விளக்குகளை நிறுத்துங்கள். இந்த செயற்கையான பிரகாசம் இனி எனக்குத் தேவையில்லை. இதோ என் தாய் வந்துவிட்டாள். அவளுடைய ஞான ஒளி இந்த இடம் முழுவதும் நீக்கமற  நிரம்பியிருக்கிறது.” என்று சத்தமிட்டவர் சற்று நேரத்திலேயே, “அம்மா, நீங்கள் வந்துவிட்டீர்களா!” என்று சொல்லிக்கொண்டே தன் இன்னுயிரை விட்டார்.  அன்னையே நேரில் வந்து தன் அன்பு மகளை அள்ளி அணைத்துச் சென்றாள்!

நீண்ட தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு பெண்ணாக இருந்தாலும், ராணி ராசுமணி தன் கோவில் நிர்வாகத்திற்காக சேர்த்து வைத்திருந்த சொத்தை பயன்படுத்த முடியாத அளவிற்கு அவரே எதிர்பார்க்காத, 1947ம் ஆண்டின் இந்தியப் பிரிவினை வந்தது. இவருடைய நிலம் பங்களாதேச எல்லைக்குட்பட்டிருந்ததாலும், அரசாங்கம் அவருடைய அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்ததாலும் அன்று முதல் தக்சிணேசுவரத்தின் காளி கோவில் இவருடைய சொத்திலிருந்து வந்த வருமானத்தில் நிர்வகிக்கப்படவில்லை என்பதுதான் வருத்தமான செய்தி. அனைத்தும் அன்னையின் விளையாட்டு!


Thursday, October 31, 2013

ஆதியில் அவள் இப்படித்தான் இருந்தாள் - மதுமிதா



ஆதியில் அவள்
இப்படித்தான் இருந்தாள்
காதலும் காமமும்
இயல்பாய் இருந்தன அப்போது

இடையில் வந்தது ஆடை
அணிகலப்பின்னலில் பிணைக்கப்பட்ட
அவளும் அடிமையானள்

கண்டுபிடிக்கப்பட்ட
கடவுள் சாத்தானின் முன்
தன் நிலையை இழந்தாள்

போர்த்தப்பட்ட நாகரீகப் போர்வையில்
பொதிந்து கிடந்த
நிர்வாண வனப்பு
அமிழ்ந்தே போயிற்று

காதலும் காமமும்
விரசத்துக்குத் தள்ளப்பட்டன

ரத்தக்கவுச்சி நிறைந்த
தொடர் நினைவுகளை
உதறி எறிய விழைந்தாலும்
என்றும் அவள் நினைவினில்
ஆதி மனித வேட்கை

கூட்டை உடைத்து வெளியேறும் கூட்டுப்புழு
பலவண்ணச் சிறகுகளுடன் வெளிப்படுவதாய்
சட்டென நிகழ்ந்ததொரு
வளர்சிதை மாற்றத்தில்
அனைத்தையும் உதறியெறிந்து வெளியேறினாள்

காதலுக்கும் காமத்துக்கும்
புதுவீச்சினை
அளிக்க விரைந்தெழுகிறாள்
எதுவும் இல்லை
அவளின் கவனத்தில்
இப்போது இலக்கு
அவன் அவன் அவன் மட்டுமே

ஜென்மாந்திரங்கள் கடந்தும்
யுகம் யுகமாய்
அவள் சீரான பாதங்களை
எடுத்து எடுத்து வைத்து
பயணித்துக்கொண்டே இருக்கிறாள்
அவனை நோக்கி

அங்கிருந்து அவனும்
பயணித்துக்கொண்டே இருக்கிறான்
இவளை நோக்கியே

பயணம் ஓர் நேர்புள்ளியில்
இணையும் போது
இருவரும் இவ்வுலகில் நிறுவுவார்கள்
காமத்தின் மேன்மையை

அன்புடன்
மதுமிதா
21.06.2012

குறிப்பு: பேஸ்புக்கில் சித்தன் ப்ரசாத் வரைந்து போஸ்ட் செய்த இந்த ஓவியத்தை சாக்காக வைத்து எழுதப்பட்ட கவிதை இது

தீபாவளி (கவிதை) - பார்வதி இராமச்சந்திரன்

தீபாவளி!

வானம் அதிர வெடி வகைகள்!
வண்ணப் பூ பொழி வாணங்கள்!
வீசும் காற்றிலும் சிரிப்பலைகள்!
வந்து விட்டதே தீபாவளி!

மின்னுது மின்னுது மத்தாப்பு!
பொங்குது குழந்தையின் புன்சிரிப்பு
பொங்கி எழுந்தொளிரும் பூவாளி
பொலிவாய் வந்தது தீபாவளி!

எண்ணைக் குளியல் புத்தாடை
உண்ண வகையாய் சிற்றுண்டி
எண்ணம் முழுதும்  இன்பமயம்
இகமெல்லாம் மகிழும் தீபாவளி!!!

விருந்தினர் வந்திடும் வேளையிலே
நிறைந்திடும் உவகை மனதினிலே
வெடியாய் அதிருது சிரிப்பொலி பார்!!
வெல்லமாய் இனிக்குது தீபாவளி!!

இந்த நாளில் நலம் நிறைய‌
எளியோர் வாழ்விலும் வளம் பெருக‌
என் மனம் உள்ளதை நான் சொல்வேன்
இதை நீ கேட்பாய் என் தோழி!!

உம்மால் முடிந்த பொருள் தன்னை
உருகும் வறியோர் மடி சேர்த்து
உயர்த்திடும் நாளில் உலகுயரும்
உன்னத தினமே தீபாவளி!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

தீபாவளி நினைவுகள் - கீதா சாம்பசிவம்

கீதா சாம்பசிவம்

 சின்ன வயசில் தீபாவளிசமயம் அநேகமாய் ஜுரம்வந்துபடுத்திருப்பேன். ஆகவே ரொம்பச் சொல்ல ஒண்ணும் இல்லைனே சொல்லணும்.  ஆனால் அப்போதிருந்த உற்சாகம், பட்டாசு வெடிக்கும் ஆர்வம் இப்போதைய குழந்தைகளிடம் இல்லை.  ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சம் இருந்தாலும் அப்போதைய தீபாவளி நினைவுகள் நினைத்தாலே இனிக்கும்வகை தான். தீபாவளி குறித்த பேச்சு எல்லாம் நவராத்திரிக்கே ஆரம்பிக்கும். எனக்குத் துணி எடுக்கும்முன்னர் அப்பா ஒரு முறைதெரிஞ்ச ஜவுளிக்கடைகளை எல்லாம் சுத்தி வருவார்.  அந்த வருஷம் லேட்டஸ்ட் என்னனு தெரிஞ்சுப்பார்.எல்லாத்துக்கும் மேலே அதை வாங்கும் அளவுக்குப் பணம் வேணுமே, அதுக்காக மூணு மாதங்கள் முன்பிருந்தே தயார் பண்ணிப்பார். தீபாவளிக்கு பக்ஷணங்கள் நிறையவே செய்வாங்க.  அதுக்காகவும் சாமான்கள் சேகரம் பண்ணப்படும்.

அண்ணாவுக்கும், தம்பிக்கும் அரை டிரவுசர் எனப்படும் உடையும், மேல் சட்டையும் துணி வாங்கித்தைக்கக் கொடுப்பாங்க.  அதிலே தான் அப்பா காமெடி பண்ணி இருப்பார்.  வளரும் பசங்கனு சொல்லி தையற்காரரிடம் அளவு எடுக்கிறச்சே தாராளமாத் தைங்கனு சொல்லிடுவார்.   அரை மீட்டர் துணி போதும்ங்கற இடத்திலெ ஒரு மீட்டர் வாங்கி இருப்பார்.  ஆகவே அது அண்ணா மாதிரி இரண்டு பையர்கள் போட்டுக்கிறாப்போல் இருக்கும். தம்பிக்கும் அப்படித் தான்.  இந்த தீபாவளிக்குத் தைச்ச டிரவுசரை அவங்க அதுக்கப்புறமா இரண்டு வருஷம் கழிச்சுப் போட்டால் கூடப் பெரிசாத் தான் இருக்கும்.  அவங்க போட்டுக்கவே முடியாது. ஆனால் அப்பாவுக்கோ பிள்ளைங்க ரெண்டு பேரும் அசுர வளர்ச்சி என நினைச்சுப்பார்.  அடுத்த தீபாவளிக்கும் இதே கதை தொடரும். அண்ணாவுக்குத் தைச்சதெல்லாம் தம்பி வளர்ந்து போட்டுக்காஆரம்பிச்சான்னா பாருங்களேன்.

அடுத்துப் பட்டாசு.  அதுவும் குறிப்பிட்ட கடையிலே தான் வாங்குவார். எவ்வளவுக்குனு நினைக்கிறீங்க? இரண்டே ரூபாய்க்கு. அதிலேயே லக்ஷ்மி வெடி, குருவிவெடி, சீனிச்சரம், ஓலைப் பட்டாசு, கொம்பு வாணம், புஸ் வாணம், ஏரோப்ளேன், அணுகுண்டு, பென்சில் மத்தாப்பு, சாட்டை, கம்பி மத்தாப்பு, தீப்பெட்டி மத்தாப்பு எல்லாமும் வரும். அதை நான்கு பாகமாய்ப்போடுவார் அப்பா.  நான் பெண் குழந்தை என்பதால் பட்டாசு எல்லாம் கிடையாதுனு சொல்லிப் பார்ப்பார்.  ஆனால் நான் விட மாட்டேனே! எனக்கும் வேணும்னு கேட்டு வாங்கி வைச்சுப்பேன். கடைசியிலே உடம்பாப் படுத்துப்பேனா, எல்லாத்தையும் அண்ணா, தம்பிக்குக் கொடுத்துடுனு அப்பா சொல்லுவார்.

கடைசியிலே அவங்களோடதையும் சேர்த்து அப்பாவே விட்டுடுவார். தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னாடியே இருந்து அம்மா பக்ஷணம் பண்ண ஆரம்பிப்பாங்க. மைசூர்ப்பாகு நிச்சயமா இருக்கும். அல்வா நிச்சயமா இருக்கும். மற்ற ஸ்வீட் அம்மாவுக்கு என்ன முடியுமோ அது. மிக்சர் நிச்சயமா இருக்கும். அதுக்குப்  பண்ணும்போதே தேன்குழல், ஓமப்பொடினு பண்ணுவாங்க.  அப்புறமா உக்காரை நிச்சயமா இருக்கும். இது சிலர் அரிசியிலெ செய்யறாங்க. எங்க வீட்டிலே து.பருப்பு, க,பருப்பு வறுத்து ஊற வைச்சு அரைச்சுச் செய்வாங்க.  அது பற்றிப்பின்னர் எழுதறேன்.

தீபாவளிக்குக் காலம்பர மூணரை மணிக்கே அம்மா எழுப்புவாங்க.  எழுந்துக்கத் தான் சோம்பலா இருக்கும். இந்த அம்மாவெல்லாம் தூங்கவே மாட்டாங்க  போலனு  நினைச்சுப்பேன். முதல்லே நான் எழுந்து குளிச்சாத் தான் அப்புறமா அண்ணா, தம்பி எல்லாம் குளிக்கலாம்.  அந்த நேரத்துக்கே அம்மா குளிச்சிருக்கிறதைப் பார்த்தா ஆச்சரியமா இருக்கும். அப்பா அமாவாசையும் சேர்ந்து வந்தால் குளிச்சிருக்க மாட்டார்.  ஏன்னா, முதல்லெ ஒரு தரம் எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சுட்டா அப்புறமா  அமாவாசைத் தர்ப்பணத்துக்கு மறுபடி குளிக்கணும். ஆகவே பண்டிகை தனித்து வந்தால் எண்ணெய்க் குளியல். எல்லாம் முடிஞ்சு மூணு பேரும் குளிச்சுட்டு வந்ததும், அப்பா தன் கையலே துணி எடுத்து தருவார்.  அதுக்குள்ளே அம்மா சாமிக்குக் கோலம் போட்டு விளக்கு ஏத்தி, பக்ஷணம், துணி, பட்டாசு எல்லாம் எடுத்து வைசிருப்பாங்க. அப்பா குளிச்சுட்டா நிவேதனம் பண்ணுவார்.  இல்லைனா அம்மாவை விட்டு செய்ய சொல்லுவார். எல்லாரும் புது துணி உடுத்தி சந்தோஷமா பட்டாசு வெடிக்கப் போவோம்.

அதுக்கு அப்புறமா உல்லூரிலேயே இருக்கும் பெரியப்பா, பெரியம்மா வேடுகல், தாத்தா வேடு ஆகிய வேடுகளுக்குப் பொயிட்டு அவங்க கிட்டெ எல்லாம் ஆசிர்வதம் வாங்கிட்டு வருவோம். பணமொ, துணியோ, பக்ஷணம், பட்டாசு என்று அது கலெக்ஷன் தனி.

இப்போதோ குழந்தைங்க ஒரு பக்கம், நாங்க ஒரு பக்கம்.  2011 ஆம் வருஷம் மட்டும் எங்க பையர் வீட்டிலே யு.எஸ்ஸிலே கொண்டாடினோம்.  குழந்தைங்களோட இருக்கிற சந்தோஷம் இருந்தாலும் இந்தியாவிலே பண்டிகை கொண்டாடிய சந்தோஷம் என்னமோ வரலை.  இப்போ நவராத்திரி என்றால் கூட கொலு வைச்சுட்டு நான் மட்டுமே தன்னந்தனியா உட்கார்ந்திருக்கிறாப்போல் இருக்கு.  அதுவும் சென்னையில் யாருமே வர மாட்ட்டாங்க. ஸ்ரீரங்கத்தில் பண்டிகை கொஞ்சம் பரவாயில்லைனு தோணுது.  என்றாலும் பக்ஷணத் தொழிற்சாலை மாதிரி பக்ஷணங்கள், புடைவைக் கடை போலப்புடைவைகள் என வாங்கிக் கொண்டாடிய காலம் எல்லாம் போய் இப்போ நாம் இருவர், நமக்கு நாம் இருவர் மட்டுமேனு தீபாவளி கொண்டாடிட்டு இருக்கோம்.

காலம் மாறியது என்பதோடு அல்லாமல் உறவுகள் ஒரு இடம் நாம் ஒரு இடம் என்றெல்லாம் ஆகும்னு நினைச்சுப் பார்க்கவில்லை. இதையும் ஏற்று கொண்டு வாழ பழகியாச்சு.   எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.