Tuesday, December 31, 2013

எனது இந்தியா:2014 - இன்னம்பூரான்

http://0310301.netsolhost.com/images/Tagore/tagore5.jpg

‘பிரிட்டனை உருவாக்கியவர்கள்’ (Making Britain) என்ற தலைப்பில் ஒரு இந்தியர் அந்த நாட்டின் திறந்தவெளி பல்கலைக்கழகத்தால் கொண்டாடப்படுகிறார். அவர் தான் இன்றைய தலை மாந்தர்.

மினூ மஸானி என்ற தேசாபிமானி ‘நமது இந்தியா’ (Our India)  என்ற நூலை 1940ல் எழுதினார். மக்கள் விரும்பிப்படித்த நூல். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்குப் பிறகு தனது அபிமானங்களில் பல மாற்றங்களைக் கண்ட அவர் ‘இந்தியர்களாகிய நாம்’ (We Indians) என்ற நூலை 1989ல் எழுதினார்.  நானி ஆர்தஷேர் பால்கிவாலா என்ற கீர்த்திமான் ஒரு புகழ் வாய்ந்த வழக்கறிஞர், சிந்தனைச்சிற்பி. கோடீஸ்வரர். வருடந்தோறும் மத்திய அரசின் பட்ஜெட்டை மும்பை பொது மன்றத்தில் அலசுவார். அலை மோதும் கூட்டம். அவருடைய சொத்து முழுதும் சென்னை சங்கர நேத்ராலயாவை அடைந்தது. அவர் ‘மக்களாகிய யாம்’ (We The People) என்ற நூலை 1984ல் எழுதினார். ஒரே மூச்சில் மூன்று நூல்களையும் படித்தால் ‘எனது இந்தியா:2014’ வின் போக்குத் தென்படலாம். இவர்கள் இருவரின் வரலாறும், சிந்தனைகளும் நமக்கு நன்மை பயக்கும். அந்த வழி பயணிப்பதற்கு முன்னால் சில தெளிவுகள் பிறந்தால், அந்த நன்மையின் பயன் அதிகரிக்கும். அதற்கு நாம் 1857க்கு பிறகு பிரிட்டீஷ் ராஜாங்கத்தின் கலோனிய அரசு கோலோச்சியபோது, விடுதலை வீரர்களாகவும், மற்ற வகையிலும் சமுதாயத்தில் பிரமுகர்களாக இருந்தவர்கள் சிலரை பற்றி அறிந்து கொள்வது உதவலாம். பீடிகை முற்றிற்று.

‘எஃகு கட்டுமானம்’ என அறியப்பட்ட இந்தியன் சிவில் சர்வீஸ், இந்திய ரயில்வே, சட்ட அமைப்பு, ராணுவம் ஆகியவை கலோனிய அரசு இந்தியாவுக்கு விட்டுச்சென்ற சொத்து என்று வரலாற்றாசிரியர்களில் பலர் பட்டியலிடுகிறார்கள். அந்த எஃகு கட்டுமானத்துக்கு சிபாரிசு அனுமதியில்லை. அது ஒரு உரிமை. அதில் இடம் பெறுபவனின் திறனாற்றலும், உழைப்பும் தான் படிக்கல்கள். இந்தியாவால் முடிந்த அளவுக்கு அவன் கல்வித்திறனின் மேன்மை இருக்க வேண்டும். ஆக்ஸ்ஃபோர்ட் அல்லது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக இளநிலை பட்டம் (arts :மானிட இயல், பொருளியல், மனித நேயம், தத்துவம் போன்றவை) அத்யாவசியம் என்று இதன் அடிப்படை மெக்காலே ரிப்போர்ட். இந்தியன் சிவில் சர்வீஸ்ஸின் ஆளுமையை புரிந்து கொள்ள இந்த ஒரு வரி போதும். ‘...அவர்களது உச்ச நிலை நிர்வாகத்தின் போது பெரும்பாலும் ஆங்கிலேயர்களும், பிரபல ஹிந்துக்களும், சில இஸ்லாமியர்களும் உள்ள ஐ.சி.எஸ்., உலகளவில் என்று சொல்லப்படாவிடினும், பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தின் அதிகார மையம். ஆயிரம் நபர்கள் 30 கோடி மக்கள் மீது ஆட்சி செலுத்தினர். அவர்களின் வாழ்க்கையின் அங்கமாக அமைந்து விட்டனர்...’ .(உசாத்துணை: Dewey, Clive (1993): 3)
ஆங்கிலேய ஐ.சி.எஸ். அதிகாரிகளில் பலருக்கு ஆய்வுகளில் ஆர்வம் மிகுந்து இருந்தது. இன்றைய தொல்லியல், மானிடவியல், இலக்கிய ஆய்வு, ஆவணப்படைப்பு (District Gazeteers) என்றெல்லாம் கணக்கற்ற அதிகப்படி வேலைகளை இழுத்துப்போட்டுக் கொண்டனர். அடிப்படையில் மக்கள் பரிபாலனத்தில் சோடை போகவில்லை. அவர்கள் சம்பந்தப்பட்டவரை இந்தியா அடிமை நாடு. அந்த கட்டத்துக்குள் மக்கள் நலம் பேணவேண்டும். தற்கால நிலையையும், அவர்களது நிர்வாகத்தையும் எடை நிறுத்தால், இது நன்றாகவே புரியும். அடக்கு முறை, ஜபர்தஸ்து, விடுதலை தாபத்துக்குத் தண்டனை எல்லாம் இருந்தது. ஆனாலும், நம் விடுதலை தாபத்தை அவர்களில் பலர் புரிந்துகொண்டு இயங்கியதும் உண்மை.  சொல்லப்போனால், சர் வில்லியம் வெட்டர்பர்ன் (1859 பரிக்ஷை) 1889லி இந்திய நேஷனல் காங்கிரஸின் அக்ராசனராக இருந்தார். அது ஒரு சகாப்தம். நாம் அவர்களை வெறுக்கவும், நன்றி கூறவும் விஷயங்கள் உளன. மற்றொரு சமயம், காலம் தழைத்தால் அவற்றை கவனிப்போம்.


யார் இந்த ‘பிரிட்டனை உருவாக்கியவர்கள்’ (Making Britain) இந்தியர்? அவர் தான் சத்யேந்திரநாத் தாகூர் (1842 -1923). இந்திய மண்ணில் பிறந்து வளர்ந்து, கடும்போட்டியில் கெலித்து, அந்த ‘எஃகு கட்டுமானத்தில் 1863 ல் நுழைந்த  முதல் ஐ.சி.எஸ். அதிகாரி. 33 வருடங்கள் பம்பாய் மாகாணத்தில் பணி செய்து, சதாரா மாவட்டத்து நீதிபதியாக ஓய்வு பெற்றார். எழுத்தாளராகவும், பன்மொழி வித்தகராகவும், கவிஞராகவும், தத்துவ போதகராகவும் விளங்கிய அவர் ஒரு பெண்ணிய வாதி, சீர்திருத்தவாதி, பிரம்மோ சமாஜ், பிரார்த்தனா சமாஜ் போன்ற முற்போக்கு மையங்களுடன் உறவாடினார். துகாராமின் பக்திபாடல்களான ‘அபங்க’ கவிதைகளை மொழி பெயர்த்தார். தந்தை மகரிஷி தேவேந்திரநாத் தாகூரின் சுயசரிதத்தை எடிட் செய்தார். பெளத்த மதம் பற்றி எழுதினார். இந்தியாவின் முதல் தேசகீதமாகக் கருதப்படும் ‘mile sabe Bharat santan, ektan gaho gaan...’ (பாரத மழலைகளே! கோரஸ் பாடுவோம்...’) என்ற கவிதையையும், மற்றும் பல தேசீய கவிதைகளையும் படைத்த இந்த ஐ.சி.எஸ்.அதிகாரி, தீவிர தேசீயவாதியான பாலகங்காதர திலகரின் கீதா ரகஸ்யத்தை மொழி பெயர்த்தார். இது கவனிக்க வேண்டிய விஷயம். ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். பதவியில் இருக்கும் உயர் அதிகாரி ஒருவர் தற்காலம் எதிர்க்கட்சித்தலைவரின் இலக்கியத்தை மொழி பெயர்க்க முடியுமோ, இந்த மாதிரி. லோகமான்ய திலகர் அவர்களை நாடு கடத்திய கலோனிய அரசு தன்னுடைய இந்த மேலதிகாரியின் கூட்டுறவிலும், தேசீயம் சார்ந்த பணிகளிலும் தலையிடவில்லை. அவர் தன்னுடைய தம்பி குருதேவ் ரவீந்தரநாத் தாகூருடன் இங்கிலாந்து பயணத்தில் கலந்து கொண்டு 1880ல் இந்தியா திரும்பினார். வங்காளத்தில் தன் பணியை செயலாற்றிக்கொண்டிருந்தார்.

இன்னம்பூரான்
01 01 2014

  • சித்திரத்துக்கு நன்றி:http://0310301.netsolhost.com/images/Tagore/tagore5.jpg
  • படத்தில் : ஜ்யோந்திரநாத் தாகூர் அமர்ந்து; வெண்புடவை அவர் மனைவி காதம்பரி.
  • ஐரோப்பிய உடையில்: சத்யேந்திரநாத். தழைந்த புடவையும் டைட் ப்லெளசுமாக, அவர் மனைவி ஞானனந்தினி. அந்த ஆடை அவருடைய டிஸைய்ன். அந்த காலத்தில் மிகவும் பாப்புலர் ஆனது. 
  • உசாத்துணை:
  • http://www.open.ac.uk/researchprojects/makingbritain/content/satyendranath-tagore
  • http://www.oxforddnb.com/view/printable/98035
  • Dewey, Clive (1993). Anglo-Indian attitudes: the mind of the Indian Civil Service. Continuum International Publishing Group. p. 3. ISBN 978-1-85285-097-5.
  • http://en.wikipedia.org/wiki/Satyendranath_Tagore
  • http://iastoppersstory.blogspot.co.uk/2012/05/satyendranath-tagore-first-indian-to.html



இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com

No comments:

Post a Comment