Friday, November 1, 2013

மலேசிய இந்துக் கோயில்களின் தெய்வங்கள் - தேமொழி


தேமொழி

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தெய்வம் என்ற சொல்வழக்கினை செயல்படுத்த எங்கெங்கும் கோயில்களை அமைப்பது தமிழர் மரபாக இருக்கிறது. மலை உச்சிகள், கடற்கரைகள், குளக்கரைகள், ஆற்றங்கரைகள் மட்டுமல்ல, நடைபாதைகளையும் நாம் விட்டு வைத்ததில்லை.
தமிழக மக்கள் தொன்று தொட்டு வழிபாட்டில் உள்ள தெய்வங்களுக்கு மட்டுமின்றி, வெளிநாட்டிலிருந்து வந்து பரவிய மதங்களுக்கும் வழிபாட்டிற்காக ஆலயங்கள் ஏற்படுத்தியுள்ளனர். ஆலயங்கள் கலாச்சார மையமாக மட்டுமின்றி மானுடவியலின் பிரதிநிதியாக மனிதர்களின் வாழ்வியல் வரலாற்றையும் எடுத்துரைக்கிறது. ஓரிடத்தின் கோயில்களின் தன்மையைக் கொண்டு அங்கு வாழும் மக்களை, அவர்களது பின்புலத்தை நாம் அறியலாம். காட்டாக, இந்தியக் கடற்கரையோர நகர்களில் வந்திறங்கிய மேலைநாட்டு கிறிஸ்துவர்களின் தாக்கத்தினாலும் போதனைகளாலும் அம்மதத்தைத் தழுவிய கடல் சார்ந்து வாழ்ந்த மீனவர்களில் பலர் கிறிஸ்துவர்களாகவும் அவர்கள் வணங்கும் தேவாலயங்களையும் நாமறிவோம்.

அது போல நம் நாட்டின் மதங்களும் கிழக்காசிய, தென்கிழக்காசிய நாடுகளிலும் பரவியுள்ளதை அங்குள்ள புத்த மத வழிபாட்டினாலும், இந்து மதக் கோயில்களாலும் அறிவோம். அவ்வாறு பரவிய இந்துமதத்தின் கோயில்களைக் கொண்டும் அங்கு சென்று வாழ்ந்த இந்தியர்களின், தமிழர்களின் பின்னணியையும் அறியலாம். கம்போடியாவில் உள்ள அங்கோவார்ட் கோயில் உருவாகிய காலத்தில் அங்கு வாழ்ந்த இந்தியர்களின் பின்னணி, இக்கால மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உள்ள இந்தியர்களின் பின்புலம் போன்றவற்றை அவர்கள் வழிபடும் கடவுள்களின் கோயில்களைக் கொண்டும் நாம் அறிந்து கொள்ளலாம்.

மலேசிய கோயில்கள்

தமிழர்களின் சிறுதெய்வங்களும் பெருந்தெய்வங்களும்:
தமிழகத்தின் சமய வளர்ச்சியில் காலப்போக்கில் நிகழ்ந்த மாற்றங்களில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வடபுலத்திலிருந்து வந்து பரவியிருந்த சமண புத்த மதங்கள் மறைந்து, மற்றுமொரு வடபுலத் தாக்கத்தினால் நலிவடைந்திருந்த இந்து மதம் அரசர்களின் ஆதரவு பெற்று மறுமலர்ச்சி அடைந்தது. ஏற்கனவே தமிழ்நாட்டில் இருந்த பண்டைய வழிபாட்டு முறைகளையும், தெய்வங்களையும் உள்ளிழுத்து மறுமலர்ச்சி அடைந்த இந்துமதம் தன்னை உறுதிப் படுத்திக் கொண்டது.

பண்டைய தமிழர்களின் வழிபாடு தங்களது மூதாதையரை தெய்வங்களாக வணங்குவதாக இருந்தது. இந்த ஆதிகால வழிபாட்டுத் தெய்வங்கள் பிற்காலத்தில் சிறுதெய்வங்களாகக் குறிப்பிடப்பட்டனர். இந்த மரபு வழி தெய்வங்களும், வழிபாட்டு முறைகளும் தலைமுறை தலைமுறையாக நாட்டுப்புற பாமர மக்களின் பண்பாடாக இருக்கிறது. மாறாக, பெருந்தெய்வங்கள் வேதங்கள் கூறும் புராண தெய்வங்களாவர். சுருக்கமாகக் கூறின், சமூகத்தின் அடித்தட்டு மக்களால் வழிபடப்படும் தெய்வங்கள் சிறுதெய்வங்களாகவும், மேல்தட்டு மக்களால் வழிபடப்படும் தெய்வங்கள் பெருந்தெய்வங்களென்றும் அறியப்பட்டு வருகிறது. இந்த வழிபாட்டின் அடியையொற்றி இவை முறையே நாட்டுப்புற சமயமென்றும், பெருஞ்சமயமென்ற பிரிவுகளாகவும் வழங்கப்பட்டு வருகிறது (முனைவர் ஒ.முத்தையா, தமிழ் இணையக் கல்விக் கழகம்).



கிராமங்களை இருப்பிடமாகக் கொண்டு, நாட்டுப்புற மக்களின் மரபு வழி வந்த சிறுதெய்வங்கள் (1) ஒரு தனிப்பட்ட வீட்டிற்கு உரிய தெய்வமாகவோ, (2) ஒரு குலத்திற்கு உரிய தெய்வமாகவோ (ஒரே மூதாதையர் வழி வந்த குடும்பக்களுக்குரிய), (3) ஓர் இனத்திற்குரிய தெய்வமாகவோ (சாதிப்பிரிவு), (4) ஊர்த்தெய்வமாகவோ அல்லது (5) பெரும்பான்மையோர் வணங்கும் (வெகுசனத் தெய்வம் என்றும் குறிப்பிடப்படும்) தெய்வமாகவோ இருப்பர்.
இச்சிறு தெய்வங்களில் பெரும்பாலோர் பெண்தெய்வங்களாவர். பெண்தெய்வங்களிலும் தாய்தெய்வங்களே அதிகம், கன்னித் தெய்வங்களும் உண்டு. ஆண் தெய்வங்களை விட பெண்தெய்வங்கள் சக்தி வாய்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர், இந்த நம்பிக்கையை "சக்தி இருந்தால் செய், சக்தி இல்லையேல் சிவனே என்று இரு" என்ற பழமொழியின் வாயிலாகவும் அறியலாம் என்கிறார் முனைவர் ஒ.முத்தையா.
வளமைக்கும் செழுமைக்கும் அடையாளமாகவும், வலிமைக்கும் திறமைக்கும் குறியீடாகவும் போற்றப்படுபவர் பெண் தெய்வங்கள். வணங்கினால் நன்மையும், வணங்காவிட்டால் தீமையும் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் வழிபடப்படும் பெண் சிறுதெய்வங்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன், சீலைக்காரியம்மன், திரௌபதையம்மன், நாச்சியம்மன், பேச்சியம்மன், கண்டியம்மன், வீருசின்னம்மாள், உச்சிமாகாளி, மந்தையம்மன், சோலையம்மன், ராக்காச்சி, எல்லையம்மன், அங்காளம்மன், பேச்சி, இசக்கி, பேராச்சி, ஜக்கம்மா போன்ற பெண் தெய்வங்கள்.
மழைத்தெய்வமாக, மழை தந்து உயிர்வளங்களைக் காப்பதாகக் கருதப்பெறும் மாரியம்மன், கோட்டை மாரியம்மன், இருக்கன்குடி மாரியம்மன், வீரபாண்டி மாரியம்மன் என்ற பல்வேறு பெயர்களிலும் அறியப்படுவதுண்டு. தமிழகம் முழுவதும் மாரியம்மன் வழிபாடு பரவி இருந்தாலும் தென் மாநிலங்களில் மாரியம்மன் வழிபாடு அதிகம்.

சங்க இலக்கியங்களில் பாலை நிலத்தின் தெய்வம் கொற்றவையாக குறிப்பிடப்படும் காளியம்மனின் கோயில் இல்லாத கிராமங்களே இல்லை என்று கூறுமளவுக்கு அடுத்துப் பரவலாக வணங்கப் படும் ஒரு தெய்வம் காளியம்மன். வேதங்கள் குறிப்பிடும் கோப ஆவேசம் கொண்டு தீயவர்களைத் தண்டிக்கும் காளியே இந்தக் காளியம்மன் ஆவார். சிறுதெய்வங்களில் ஆண் தெய்வங்கள் சிறுபான்மையினரே. இவர்கள் பெரும்பாலும் காவல் தெய்வங்களாக ஊருக்குப் புறத்தே கோயில் கொண்டிருப்பர். ஊர்த் தெய்வங்களாகவோ, காவல் தெய்வங்களாகவோ வணங்கப் பெறும் ஆண்தெய்வங்களில் (1) முதன்மை தெய்வங்களும், அவர்களுக்கு உறுதுணையான உள்ளோர் பரிவாரத் தெய்வங்களாகக் கருதப்படும் (2) துணைமைத்தெய்வங்களும் உண்டு. முதன்மை தெய்வங்களாக அய்யனார், முனீஸ்வரன், சுடலை மாடன், அண்ணன்மார் சாமி, மதுரைவீரன், கருப்பசாமி போன்ற தெய்வங்கள் வணங்கப் படுகின்றனர். கூடமுடைய அய்யனார், செங்குளத்து அய்யனார், கொக்குளத்து அய்யனார் என்ற பெயர்களில் வணங்கப் படும் ஐயனார் வழிபாடு தமிழக கிராமங்களில் பரவலாக அதிகம் உண்டு. மாயாண்டி, மாடசாமி, சடையாண்டி போன்றோர் துணைமைத் தெய்வங்களாவர்.

குளம் ஏரிபோன்ற நீர்நிலைகளில் அருகில் மிகச்சிறு கோயில்களில், அல்லது ஊருக்கு வெளியே கொடிய ஆயுதங்கள் கையிலேந்தி மண்குதிரை போன்ற வாகனங்களுடன்இருக்கும் சிறுதெய்வங்களின் தோற்றம் அச்சம் தருவதாகவும், உருவத்தில் பெரியவையாகவும் இருக்கும். பூசாரிகள் கொண்டு பூசைகள் நிகழ்த்தி, பலி கொடுத்து வணங்கப்படும் வழிபாட்டு முறைகள் கொண்ட சிறுதெய்வங்கள் என்போர் தோன்றி, வாழ்ந்து, மக்களைக் காத்து, அவர்கள் நலனுக்காக தங்கள் இன்னுயிரை விட்டவர்கள் ஆவர்.
காலப்போக்கில் சிறுதெய்வங்கள் பெரும்பான்மையினர் வணங்கும் தெய்வங்களாக மாற்றப்பட்டு பிறகு பெருந்தெய்வங்களின் வடிவமே இவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். நாட்டுப்புறச் சிறுதெய்வ வழிபாடுகளில் நிகழ்ந்து வரும் இந்த மாற்றங்கள் தெய்வங்களின் மேல்நிலையாக்கம் (sanskritization) எனச் சுட்டப்படுகிறது. காட்டாக, 'மாரியாயி' என்ற சிறுதெய்வம், 'மாரியாத்தா' என்ற பெரும்பான்மையினர் வணங்கும் தெய்வமாக மாறுதலடைந்து, பிறகு 'ஸ்ரீகௌமாரியம்மன்' என்ற பெருந்தெய்வமாக மேல்நிலையாக்கப்படுகிறது. அது போன்றே 'காளியாயி' என்ற சிறு தெய்வம், 'காளியாத்தா' என்று மாற்றமடைந்து, பிறகு 'ஸ்ரீகாளீஸ்வரி' என்ற பெயருடன் பெருந்தெய்வமாக பெரும்பான்மையினர் வணங்குவதற்கு மேல்நிலையாக்கம் பெறுகின்றது. அதனைத் தொடர்ந்து ஆகம முறை வழிபாட்டைக் கொண்டு வணங்கும் முறைகளும் தொடர்கிறது. பெரிய கோபுரம் உள்ள கோயில்களும் எழுப்பப்பட்டு, பலி கொடுத்தல் போன்ற நிகழ்வுகள் கோயிலுக்கு புறத்தே நடத்தப்படுகிறது.



அக்கரைச் சீமையின் அம்மன்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் மலேசியாவிற்கு குடிபெயர்ந்தவர்கள், தோட்ட வேலைகளுக்காக ஆங்கிலயர்களால் அழைத்து வரப் பெற்றவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள், அதிலும் குறிப்பாகத் தமிழர்கள் (பரதன் குப்புசாமி, 2006; பார்பரா வெஸ்ட் 2009). இவர்களில் பெரும்பாலோர் உழவு பொய்த்ததால் பஞ்சம் பிழைக்க கூலி வேலை செய்ய சென்ற நாட்டுப்புற மக்களாவார். அந்நிய மண்ணில் தங்கள் வழிபாட்டிற்காகத் தொன்று தொட்டு பின்பற்றிய கடவுள்களுக்கு கோயில் அமைத்தனர். அதனால் அக்கோயில்கள் தமிழக மண்ணில் பெரும்பான்மையாக அமைந்திருக்கும் சிவன், விஷ்ணு, பார்வதி, மீனாட்சி போன்ற பெருந்தெய்வங்களின் கோயில்கள் போலன்றி, நாட்டுப்புற மக்கள் வழிபட்ட சிறு தெய்வங்களான மாரியம்மன், காளியம்மன், முனீஸ்வரன் போன்ற தெய்வங்களின் கோயில்களாக இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது (முனைவர்.சுபாஷிணி  , 2013).

இத்தகவலை மேலும் ஆழ்ந்து நோக்க விரும்பி மலேசிய இந்து தெய்வங்களின் கோயில்களின் பட்டியல் விக்கிபீடியாவில் இருந்து தரவிறக்கப்பட்டு, கோயில்களின் தெய்வங்களின் பெயர்கள் கொண்டு பகுக்கப்பட்டது [மலேசிய மண்ணின் வளர்ச்சிக்கு தமிழக இஸ்லாமியர் பெரும்பங்கு ஆற்றியிருந்தாலும், இந்த கட்டுரையின் நோக்கத்தின் காரணமாக அத்தமிழர்களின் பின்புலத்தை அறியத்தரும் அவர்களது வழிபாட்டுத்தலங்களோ தகவல்களோ தவிர்க்கப்பட்டுள்ளது]. இது போன்று தற்கால நிலையினைக் கடந்தகால நிகழ்வுகளின் வரலாற்றுத் தரவுகள் துணை கொண்டு அறிந்து கொள்ளும் ஆய்வு “வரலாற்று ஆய்வு” (Retrospective Observational Study) என்ற முறையாகும்.


மலேசிய கோயில்கள்

தரவுகளின் படி மலேசிய மண்ணில் ஆண் தெய்வங்களின் கோயில்களின் எண்ணிக்கையும் பெண் தெய்வங்களின் கோயில்களின் எண்ணிகையும் சம அளவில் அமைந்திருக்கிறது. ஆனால் சிறுதெய்வங்களின் கோயில்களின் எண்ணிக்கை அளவில் 58 விழுக்காடும், பெருந்தெய்வங்களின் கோயில்களின் எண்ணிக்கை அளவில் 42 விழுக்காடாகவும் இருக்கிறது. மேலும் ஆழ்ந்து நோக்குகையில் அதிக கோயில்கள் இருப்பது மாரியம்மனுக்கே (30%) என்பது தெரிகிறது. அடுத்தடுத்த இடங்களில் தொடர்ந்து இடம் பெறுபவை முருகன் கோயில்களும் (19%), முனீஸ்வரன் கோயில்களும் (10%), காளியம்மன் கோயில்களும் (10%), பிள்ளையார் கோயில்களும் (7%) ஆகும். உத்தேசமாக, இரண்டு கோயில்களில் ஒன்று சிறு தெய்வங்களின் கோயிலாகவும், மூன்று கோயில்களில் ஒன்று மாரியம்மன் கோயிலாகவும் அமைந்திருக்கிறது. மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோயில்கள் கூட்டாக 40% கோயில்களாக அமைந்து நாட்டுப்புற சிறுதெய்வங்களான பெண்தெய்வங்களின் கோயில்கள் அதிகம் இருப்பது தெரிகிறது. இவற்றோடு 10% முனீஸ்வரன் கோயில்களையும் கணக்கில் கொண்டால் சிறுதெய்வங்களின் கோயில்கள் பாதிக்கும் மேல் பெரும்பான்மையாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
தரவுகள் அளிக்கும் இந்துக்கோயில்களின் தகவல்கள், மலேசியாவிற்கு பத்தொன்பதாம் நூற்றாண்டில் புலம் பெயர்ந்த உழைப்பாளிகளில் பெரும்பான்மையோர் தமிழக கிராம மக்கள் என்ற தகவலையே ஒத்திருக்கிறது. மலேசியாவின் புகழ் பெற்ற, நீண்ட காலமாக வழிபாட்டில் இருக்கும் கோயிலும் கோலாலாம்பூரில் மாரியாம்மன் கோயிலே. கோலாலாம்பூரின் சைனா டவுன் அருகில் இருக்கும் இப்புகழ் மிக்க, பழமை வாய்ந்த ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் 1873 ஆண்டு திரு. தம்புசாமி பிள்ளை அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. பிள்ளைக் குடும்பத்தினரின் தனிப்பட்ட இக்கோயில் பிறகு 1920களில் அனைவரும் வணங்கிப் பயன் பெரும் கோயிலாக மாற்றப்பட்டு, தற்பொழுது ஒரு அறங்காவல் குழுவின் மேற்பார்வையில் நிர்வாகிக்கப்படுகிறது. சிறு செங்கல் கோயிலாக இருந்த இக்கோயில் இடம்மாற்றப்பட்டு 1973 இல் கோபுரம் உள்ள புதிய கோயிலாக கட்டப்பட்டுள்ளது. மலேசியாவில் நீண்ட காலமாக வழிபடும் இந்துக்கோயிலாக உள்ளது இந்த ஸ்ரீ மகாமாரியம்மன் கோயிலின் சிறப்பு.


ஆதாரங்கள்:

  • பரதன் குப்புசாமி, (BaradanKuppusamy - 24 March 2006). "Racism alive and well in Malaysia". Asia Times.பார்த்த நாள் 27 October 2010. - http://www.atimes.com/atimes/Southeast_Asia/HC24Ae01.html
  • பார்பரா வெஸ்ட் (West, Barbara A. - 2009).Encyclopedia of the Peoples of Asia and Oceania, Volume 1.Facts on File inc. p. 486.ISBN 0-8160-7109-8. - http://books.google.com/books?id=pCiNqFj3MQsC&printsec=frontcover&hl=en#v=onepage&q&f=false
  • முனைவர்.சுபாஷிணி, மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு, மின்தமிழ், ஜூலை 2013 - https://groups.google.com/forum/#!msg/mintamil/OTs6Tbc7z5E/7kjFBrMAiO4J
  • நாட்டுப்புறவியல் மரபுகள்: வழிபாடுகளும், விழாக்களும், முனைவர் ஒ.முத்தையா - http://www.tamilvu.org/courses/degree/a061/a0614/html/a06142in.htm - http://www.tamilvu.org/courses/degree/a061/a0614/html/a0614222.htm
  • மலேசியா தகவல்கள்: மலேசியா - https://ta.wikipedia.org/s/er மலேசியா இந்துக் கோயில்களின் பட்டியல் (தரவுகளின் நிலவரம் July ‎12, ‎2013 படி): https://en.wikipedia.org/wiki/List_of_Hindu_temples_in_Malaysia கோலாலாம்பூர் மாரியம்மன் கோயில் - http://en.wikipedia.org/wiki/Sri_Mahamariamman_Temple,_Kuala_Lumpur கோலாலாம்பூர் மாரியம்மன் கோயில் - http://www.malaysiantemples.com/2012/04/maha-mariamman-temple-kuala-lumpur.html


மலேசியா அம்மன் கோயில் காணொளிகள்:

  • Documentary - Sri MahaMariamman Temple, KL, Malaysia Part 1 - http://youtu.be/s6txzvoXvSI 
  • Documentary - Sri MahaMariamman Temple, KL, Malaysia Part 2 - http://youtu.be/7SDHK9vUME0


மேலும் தகவலுக்கு பரிந்துரைக்கப்படும் நூல்கள்:

  • Ramstedt, Martin (2004), Hinduism in modern Indonesia, London: Routledge, ISBN 0-7007-1533-9 
  • Elementary Statistics: Looking at the Big Picture, Nancy Pfenning, 2010, Retrospective observational study on P.49, Cengage Learning, ISBN-10: 0495016527



  • படங்கள் உதவி: http://en.wikipedia.org/wiki/File:Sri_Mahamariamman_Temple_2,_central_Kuala_Lumpur.jpg 
  • http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/4/45/Mariamman_temple_in_KL.jpg/581px-Mariamman_temple_in_KL.jpg

கருந்தெய்வம் காளி கோவிலின் வரலாறு - ராணி ராசுமணியின் வரலாறு!


தக்சிணேசுவரம் காளி கோவில் வரலாறு

பவள சங்கரி

நம் இந்திய வரலாற்றில் பெண்களின் சாதனைப் பட்டியலை எடுத்துக்கொண்டால் அவை பெரும்பாலும் தன்னலமற்ற சேவைகளின் அடிப்படையிலேயே அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. மெழுகுவர்த்தியாக தம்மைத்தாமே ஆகுதியாக,  மக்கள் சேவையே மகேசன் சேவையாகக் கருதி தொண்டாற்றும் எத்தனையோ தெய்வப் பிறவிகளை நம் வரலாறு சந்தித்துக்கொண்டுதானிருக்கிறது. குடத்திலிட்ட விளக்காக எத்தனையோ சேவைகள் வெளியில் தன்னை வெளிச்சம் போட்டு காட்டிக் கொள்ளாவிட்டாலும், அதன் பலாபலன்கள் மூலமாக பிரகாசிக்கத்தான் செய்கிறது. அப்படிப்பட்ட அவதாரங்களின் கீர்த்தி எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் வானும், மண்ணும் இருக்கும்வரை நிலைத்து நிற்கத்தான் செய்கிறது. அந்த வகையில், பல்வேறு விதமான சமூகக் கட்டுப்பாட்டுத் தளையில் சிக்கிக்கொண்டிருந்த காலகட்டங்களிலும் தன்னலமற்ற தன்னுடைய அரிய சேவையால் தம் பிறவிப்பயனை அடைந்த  ஒரு பெண்மணி, ராணி ராசுமணி.  ஸ்ரீராமகிருஷ்ணரின் மண்ணில் தோன்றிய மற்றொரு மாணிக்கம் இவர்.



‘பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’ என்பார்கள். ஆனால் பொன் போன்றதொரு புதன் நந்நாளில்  செப்டம்பர் மாதம் 1793ம் ஆண்டில், வங்காள தேசத்தில் கொல்கத்தா நகரின் சில மைல்கல் தொலைவில் உள்ள கோனா என்னும் ஊரில் அவதரித்தவர். இவருடைய தந்தையார் ஹரேகிருஷ்ணதாஸ் ஒரு கூலித்தொழிலாளி. தாய் ராம்பிரியா மற்றும் சகோதரர்கள் ராமச்சந்திரா மற்றும் கோவிந்தா ஆவர். ராசுமணி என்ற இவருடைய பெயருடன் செல்லப்பெயரான ராணியும் சேர்ந்து ராணி ராசுமணியானது. இளம் வயதிலேயே காளிதேவியின் மீது கொண்டிருந்த ஆழ்ந்த பக்தி, ராமாயணம் மற்றும் மகாபாரதக் காவியங்களின் மீது கொண்டிருந்த ஈடுபாடு காரணமாகவும், தம் பெற்றோரின் வழியில் வைஷ்ணவத்தில் ஈடுபாடும் கொண்டதனால்  மிகவும் தாழ்த்தப்பட்ட சாதி என்று சொல்லப்படுகிற ஒரு சாதியில் பிறந்திருந்தாலும் எளிதாக மக்களின் இதயங்களைக் கவர்ந்தார்.  தன்னுடைய ஏழாவது அகவையிலேயே தாய் ராம்பிரியாவை இழக்க வேண்டிய பெரும் துக்கத்தில் தள்ளப்பட்டார். மூன்று ஆண்டுகள் அதன் பாதிப்பில் நொந்து போயிருந்தாலும் விரைவில் மீண்டும் வந்தார். விதியின் வசத்தால் மிகவும் ஏழ்மை நிலையிலிருந்த ராணி ராசுமணி அதிசயத்தின் அதிசயமாய் இறையருளால் ஒரே நாளில் ஊரில் மிகப்பிரபலமான மற்றும் மிகப்பெரிய கோடீசுவரியானார்.

ஹௌரா மாவட்டத்தின் கோஷல்பூர் நகரைச்சேர்ந்த பிரித்திராம் தாஸ் என்பவர் மிகப்பிரபலமான தொழிலதிபர். தன்னுடைய முதுமையுடன் சேர்த்து இளைய மகன் ராஜ்சந்திராவின் தனிமையின் சோர்வும் அவரை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியிருந்தது. ராஜ்சந்திராவிற்கு இரண்டும் முறை திருமணம் முடித்தும் இரு மனைவிகளும் மிகக் குறுகிய காலத்திலேயே இறந்து போய்விட்டனர். மூன்றாவது திருமணம் செய்து கொள்ளும் மனநிலையில் மகன் இல்லாததே அவருடைய மிகுந்த சோகத்திற்கு காரணமானது. ஒரு நாள் ராஜ்சந்திரா ஹூக்லி மாவட்டத்தில் திரிவேணியில் கங்கை நதியில் குளிப்பதற்காக படகில் சென்றார்.  அச்சமயம் படித்துறையின் வழியாக கடந்து செல்லும் அந்த கருணை மிகு, தெய்வீக அழகு நிறைந்த சிறுமியைப் பார்த்தவுடன் அந்த அபரிமிதமான அழகில் மயங்கி, அவளையே மணம் புரிய விரும்புவதாக தந்தையிடம் கூறுகிறார். மகனின் இந்த விருப்பம் தெய்வ சங்கல்பம் என்று மிக மகிழ்ச்சியாக ராணி ராசுமணியை அவர்  பெற்றோரிடம் பெண் கேட்டு, இத்திருமணம் 1804ம் ஆண்டு, ராசுமணியின் 11ம் வயதில்  கொல்கத்தா நகரின் ராஜ்சந்திராவின் மாளிகையில் நடந்தது. இந்த இளம் வயதில் திடீர் மாற்றத்தை எதிர்கொண்டாலும் அந்த சிறுமி ராணி ராசுமணி தன் எளிமையையும், இறை பணியையும் இழக்கவில்லை. தன்னுடைய மாமனார் மற்றும் மாமியாரின் சேவைகளையும் தம் அன்றாடக் கடமைகளில் ஒன்றாக சேர்த்துக்கொண்டாள். இத்தோடு நில்லாமல் குடும்பத்தின் ஏனைய பொறுப்புகள் அனைத்தையும் அவள் திறமையாக கையாண்ட விதமும்,  அவளுடைய அறிவுக்கூர்மையும் கணவனின் நம்பிக்கையை பெறச் செய்ததால், எல்லா முக்கியமான முடிவுகளையும் அவளைக் கேட்டே எடுக்கும் நிலை ஏற்பட்டது.

1817ம் ஆண்டு, தன்னுடைய 64வது வயதில் பிரித்திரம் தன்னுடைய ஏராளமான சொத்துகளை மகனுக்குக் கொடுத்துவிட்டு இறந்துபோனார். ராஜ்சந்திரா தன்னுடைய பரந்த சேவையுள்ளம் காரணமாக பெரிதும் மதிக்கப்பட்டார். 1823ல் ராணி ராசுமணி தன் தகப்பனை இழந்தார். அதே ஆண்டில் அப்பகுதியில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் காரணமாக வீடு, வாசல் தங்கள் உடமைகள் என அனைத்தையும் இழந்த மக்களுக்குத் தாராளமாக தம் உதவிக்கரம் நீட்டினார். தங்கள் வீட்டினருகில் கங்கையின் மீது மலைப்பாதை மிகவும் மோசமான நிலையில் ஆபத்தை விளைவிக்கக்கூடியதாக இருந்தது. அந்தப் பாதையை அதற்கான உயரதிகாரிகளிடம் பேசி அனுமதி பெற்று, தன் கணவரிடமும் இது பற்றி விரிவாக எடுத்துச்சொல்லி அவருடைய ஒப்புதலையும் பெற்று, செப்பனிடும் பணியையும் முடித்து, அவருடைய பெயரிலேயே பாபு காட் மற்றும் பாபு சாலை என்ற பெயரில் 1830ம் ஆண்டு அந்த முக்கியமான சாலை  திறக்கப்பட்டது.

விதியின் விளையாட்டு ஆரம்பமானது. 1836ல் ஜூன் மாதத்தில் தன்னுடைய 49வது வயதில் மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக இவருடைய கணவர் திடீரென்று உயிர் நீத்தார். தன்னுடைய 44 வது வயதில் மூன்று பெண் குழந்தைகளுக்கும் திருமணம் ஆன நிலையில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வாழ்ந்தார் ராணி ராசுமணி. இந்த வேதனை தாளாமல் மூன்று நாட்கள் அன்ன ஆகாரமோ, நீரோ கூட பருகாமல் இருந்தார்.  ஆனாலும் பிரிந்த அந்த ஆன்மாவிற்காக மிகச் சிறப்பான முறையில் சிரார்த்த பூசை செய்தார். வந்தவர்கள் அனைவருக்கும் இல்லை என்று இல்லாமல் வேண்டுவதையெல்லாம்  அளித்து அனுப்பினார். அந்த விழா முடியும் தருவாயில் ஒரு இனிமையான சம்பவம் நடந்தது.  பல ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்சந்திராவிற்கு, ஸ்ரீ ரகுநாதரின் திரு உருவப்படத்தை தினசரி வழிபாட்டிற்காக பரிசாக வழங்கிய  அதே துறவி ஒருவரும் எதிர்பார்க்காத அன்று மீண்டும் தோன்றினார். ராசுமணி மிகவும் மகிழ்ந்து, வணங்கி  ஏதேனும் பரிசு பெற்றுக்கொள்ள வேண்டுமென்று மன்றாடினார். ஆனால் அந்தத் துறவியோ ஒரு கம்பளியும், தண்ணீர் குவளையும் மட்டுமே பெற்றுக்கொண்டு ஸ்ரீரகுநாதரைப் பார்த்துவிட்டு, ஆசி வழங்கிச் சென்றார். ராசுமணி இதனைத் தன் ஆன்மீகத் தேடலுக்கான  நல்லதொரு சகுனமாகக் கருதினார். ஆன்மீகத்தில் ஆழ்ந்த ஈடுபாடு ஏற்பட்டாலும், கணவரை இழந்த நிலையில் அந்த மிகப் பெரிய சொத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் அதனால் பல விதமான நெருக்கடியான சூழல்களைச் சமாளிக்க வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டது. காளியின் மீது தான் கொண்ட ஆழ்ந்த பக்தியின் காரணமாக துணிச்சலாக அனைத்தையும் கையாண்டார். இவையனைத்திற்கும் உதவியாக தனது வலக்கரமாக செயல்பட்டவர் இவருடைய மருமகனான மதுரநாத் பிஷ்வாஸ்.

அந்த கட்டுப்பாடான காலத்தில் ராணி ராசுமணி மனித உரிமைக்காக வெளிப்படையாக, துணிச்சலாகக் குரல் கொடுத்தார்.  மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பிரித்தானிய அரசாங்கம் மீன் பிடிப்பதற்கு வரி விதித்தது. இந்த நேரத்தில்தான் ராணியின் முடிவெடுக்கும் திறன் இப்பிரச்சனைக்கு தீர்வாக அமைந்தது. பிரித்தானிய அரசாங்கத்திடம் கங்கையில் மீன் பிடிக்கும் உரிமையைப் பெற முடிவெடுத்தார்.  அந்த காலத்தில் மிகப்பெரிய தொகையான ரூ.10,000 கொடுத்துவிட்டு அந்த உரிமையையும் பெற்றார். அடுத்து உடனடியாக அவர் செய்த காரியம் கங்கை நதியைச் சுற்றி தடுப்பு சுவர் அமைத்ததுதான். இதனால்  கப்பல் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டதனால் பிரித்தானிய அரசாங்கம் அதனை நீக்கச் சொல்லி பேச்சு வார்த்தை நடத்தியபோது, தான் ரூ 10,000 கொடுத்து வாங்கிய மீன்கள் கப்பல் போக்குவரத்தினால் சிரமத்திற்கு உள்ளாகிறது என்று வாதிட்டார். பிரித்தானிய அரசாங்கம் செய்வதறியாது, அவரை சமாதானம் செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதற்கான தீர்வாக மீன்பிடி வரியை நீக்கிவிட்டு, தன்னுடைய பணத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டால் தான் தடுப்பணைகளை நீக்கி விடுவதாகக் கூறினார். பிரித்தானிய அரசும் அதனை ஒப்புக்கொண்டு வரியையும் நீக்கி, பணத்தையும் திருப்பிக் கொடுத்தது. இப்படி ஒரு தனி மனுசியாக தன் இராசதந்திரம் மூலமாக ஒரு அரசாங்கத்தையே தம் கட்டுக்குள் வைத்திருந்ததற்கு ஆதாரமாக பல சம்பவங்கள் நடந்ததை வரலாறு கூறுகிறது.



அதற்கு ஆதாரமான மற்றொரு நிகழ்ச்சி. தன்னுடைய ஜன்பஜார் மாளிகையில் துர்கா பூசைக்கான பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார் ராணி. ஏழு அடுக்கு மாடியும், 300 அறைகளும் கொண்ட தன்னுடைய அந்த மாளிகையே விழாக்கோலம் பூண்டு   கோலாகலமான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.  அதற்கான தீர்த்தம் எடுத்து வரவேண்டி குருக்கள் குழு விடியலில் ஊர்வலமாக மேள தாளங்களுடன் கங்கை நோக்கிச் சென்றனர். செல்வாக்கும் வசதியும் நிறைந்த ஐரோப்பியர்கள் பலர் குடியிருந்த இடம் அது. விடியலில் இந்த ஊர்வலமும், மேள தாளமும் அவர்களின் உறக்கத்தைக் கலைக்க அதனால் கோபம் கொண்ட ஒருவர் ராணியின் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க  மேற்கொண்டு ஊர்வலம் நடத்தத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் ராணியோ அந்தத் தடையை மீறி ஊர்வலம் நடத்தினார். அதனால் அவருக்கு 50 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஒரு வார்த்தையும் பேசாமல் உடனே அபராதத்தைச் செலுத்தியவர், அன்றைய தினமே பாபுகாட் சாலையில் மூங்கிலால் ஒரு தடுப்புச்சுவரை ஏற்படுத்தினார். அவருடைய சொந்த சாலையில் தடுப்புச் சுவர் ஏற்படுத்தியதை ஒன்றும் செய்ய முடியாமல் போனாலும் தெற்கிலிருந்து மேற்கு கொல்கத்தாவிற்கும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வருவதற்கான போக்குவரத்தும் சுத்தமாக நின்றுபோனது. அரசாங்கத்தினர் பலமுறை இவரிடம் வேண்டியும் அந்தத் தடுப்பை நீக்க மறுத்தார். தன்னுடைய உரிமையான இடத்தில் தான் எதையும் செய்ய முடியும் என்று உறுதியாக வாதிட்டார். இறுதியில் வேறு வழியில்லாமல் அரசாங்கம் அவருடைய அபராதத் தொகையைத் திருப்பிக் கொடுத்ததோடு விடியற்காலையில் கங்கையில் தீர்த்தம் எடுக்கச் செல்லும் ஊர்வலத்திற்கான தடையையும் நீக்கினர்.  அதன்பின் தடுப்புச் சுவரை நீக்கி போக்குவரத்திற்கு வழி செய்தார். அன்னை மாகாளியின் அருளால் அஞ்சா நெஞ்சமும், பொறுமையும் உடன்வர பல்வேறு நலப்பணிகளை செய்து முடித்தார் ராணி ராசுமணி.  ஒரு முறை சில குடிகார பிரித்தானிய இராணுவ வீரர்கள் ராணியின் மாளிகையில் நுழைந்து தகராறு செய்தபோது சற்றும் தயங்காது தானே அவர்களைத் தாக்க ஆரம்பித்தார் அந்த வீரப்பெண்மணி. தெய்வாதீனமாக  அந்தப்புறம் கடந்து சென்ற ஒரு அதிகாரியின் மூலமாக அவரும் அவருடைய சொத்தும் காப்பாற்றப்பட்டது. இதுபோன்று பல்வேறு சம்பவங்களில் அவருடைய தனித்திறமை மற்றும் துணிச்சல் காரணமாக தன்னையும், தம் சொத்தையும் காப்பாற்றிக்கொண்டார். காளியின் துணை இருக்கும்வரை தன்னை ஒருவராலும் ஒன்றும் செய்ய முடியாது என்று திடமாக நம்ப ஆரம்பித்தார்.

ஏழைகளுக்கும், நலிவடைந்தவருக்கும் தன் உதவிக்கரம் தயங்காது நீட்டி பெரும் சேவைகள் புரிந்திருந்தாலும்,  இன்றளவும் ராணியைப்பற்றி நினைக்கும்பொழுதெல்லாம் அவருடைய காளி பக்தியே முதன்மையாக நினைவிற்கு வரும். ராணியின் வாழ்க்கையில் திடீரென எதிர்பார்க்காத சில சம்பவங்கள் நடக்கத் தொடங்கின. தம்முடைய பிறவிப்பயனை அடையக்கூடிய காலமும் கனிந்து வந்தது எனலாம். பல காலமாக பனாரசில், காசிவிசுவநாதரையும், அன்னபூரணி அன்னையையும் தரிசித்து வரவேண்டும் என்று விருப்பம் கொண்டிருந்தார். அது கனிந்து வரும் காலம் வந்தபோது பிரயாண ஏற்பாடுகள் வெகு விமரிசையாக நடந்தது. ராணி படகில் பிரயாணம் செய்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 24 படகுகள் ஏற்பாடாகியிருந்தது.  ஆறு மாதங்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் தயாராக இருந்தது. உணவு மற்றும் மற்ற பொருட்களுக்காக ஏழு படகுகள், தனக்காக ஒரு படகு, தன் மூன்று மகள்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்காக , இரண்டு படகுகள் பாதுகாப்பாளர்களுக்காக, இரண்டு படகுகள் பணியாளர்களுக்காக, நான்கு படகுகள் மற்ற உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக, துணி துவைப்பவர்களுக்காக ஒரு படகு,  நான்கு பசுக்கள் மற்றும் கன்றுக்காக ஒரு படகு, என்று அனைத்தும் தயாரான நிலையில் ராணி ராசுமணி மிகவும் ஆர்வமாகக் காத்துக்கொண்டிருந்தார். காசி விசுவநாதரையும், அன்னபூரணியையும் தரிசிக்கப்போகும் ஆனந்தத்தில் இருந்தார்.  அப்படி ஒரு சூழலில்தான் ஒரு அதிசயம் நடந்தது. அடுத்த நாள் கிளம்பப்போகும் மகிழ்ச்சியில் இருக்கும் அந்த வேளையில் அன்று இரவு ராணி ராசுமணியின் கனவில் தோன்றிய அன்னை காளிதேவி, “காசிக்குச் செல்ல வேண்டியத் தேவை இல்லை.  கங்கை நதிக் கரையின் ஒரு அழகிய இடத்தில் எனக்கு ஆலயம் அமைத்து அன்றாட வழிபாடு மற்றும்  நைவேத்தியமும் ஏற்பாடு செய்வாயாக. யாம் அங்கு எழுந்தருளி உன்னுடைய தினசரி வழிபாட்டை ஏற்றுக்கொள்ளப் போகிறோம்” என்றார். உள்ளம் பூரித்துப்போன  இராணி ராசுமணி பயணத்தை நிறுத்திவிட்டு உடனடியாக அடுத்த நாளே பயணத்திற்காக ஏற்றிய பொருட்கள் அனைத்தையும் ஏழை மக்களுக்கும் தேவையானவர்களுக்கும் கொடுத்துவிட்டு காளியின் பாதாரவிந்தங்களுக்கு அன்றாடம் பூசை செய்யும் வகையில் ஆலயம் கட்டும் பணியைத் துவக்கினார்.



முதலில் ஆலயம் எழுப்புவதற்கான ஒரு தகுதியான இடத்தை முனைந்து தேடி, கங்கை நதியின் வடபுறம் தட்சிணேசுவரம்  கிராமப் பகுதியில் 20 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்தார். ஆமையின் பின்புறப் பகுதியைப் போன்ற தோற்றமுடையது அந்த நிலம். அந்த நிலத்தின் ஒரு பகுதி ஒரு ஆங்கிலேயருடையதும் மற்றொரு பகுதி ஒரு முகமதிய சமயப் பெரியவரின் நினைவாக இருந்த இடுகாட்டு நிலம். இப்படி ஒரு இடுகாட்டுப் பகுதியே தந்திரங்களின் அடிப்படையில் சக்தி தேவிக்கும் அவள்தம் உபாசனைக்கும் உகந்த இடம் என்பார்கள். 1847ம் ஆண்டில் ஆலயம் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. ஆலயம் கட்டி முடிக்க எட்டு ஆண்டுகள் ஆனது. விஷ்ணு ஆலயம் மற்றும் 12 சிவாலயங்களும் கட்டப்பட்டன. நிலத்திற்கு ரூ 50,000, கட்டிடத்திற்கு 160,000 ரூபாயும், காளி கோவில் வளாகத்திற்கு 900,000 ரூபாயும், மற்றும் ரூபாய் 226,000 கோவிலை நிர்வாகம் செய்வதற்கான இருப்புத் தொகைக்கான சொத்தாகவும் அந்தக் காலத்திலேயே மிகப் பெரிய தொகையாக செலவு செய்து பிரம்மாண்டமாக எழுப்பப்பட்ட கோவில் இது. கோவில் முடியும் தருணம் வரும்போதே அவர் பூசை நேய நியமனங்களில் முழுமையாக ஆழ்ந்திருந்தார். தினமும் மூன்று முறை குளித்து, மிக எளிய உணவை உட்கொண்டு, பெரும்பாலான நேரங்களை தியானம் மற்றும் அன்னையின் திருநாமங்கள் உச்சாடணையிலேயே  கழித்துக் கொண்டிருந்தார்.



ராணியின் விருப்பத்திற்கேற்ப அன்னையின் திருவுருவ மேனி அழகாக அமைந்த பின்னும் அம்மனின் உருவத்தை ஆலயத்தின் கருவறையினுள் எழுந்தருளச் செய்ய தகுந்த நாளுக்காக காத்துக்கொண்டிருந்தார். நாட்கள் சென்று கொண்டிருந்தது. அன்னையோ ஒரு பேழையில் பத்திரமாக பூட்டி வைக்கப்பட்டிருந்தார். ஒரு நாள் இரவு மீண்டும் கனவில் தோன்றிய காளிமாதேவி , “இன்னும் எவ்வளவு நாட்களுக்குத்தான் என்னை இப்படி அடைத்து வைத்திருக்கப் போகிறாய்?  எனக்கு ஒரே புழுக்கமாக இருக்கிறது, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம்  கருவறையில் பிரதிஷ்டை செய்” என்று கட்டளையிட்டிருக்கிறார்.  உடனே அதற்கான பணிகளை முடுக்கிவிட்டார் ராணி. அப்போது வேலையாட்கள் அம்மன் வைத்திருந்த பேழையைத் திறந்த போது அம்மனின் திருமேனி வியர்வையில் நனைந்திருப்பதைக்  கண்டு ஆச்சரியப்பட்டனர்.

உடனே ராணி தீர்த்தவாரி நாளன்று அன்னையை கருவறையினுள் பிரதிஷ்டை செய்யத் திட்டமிட்டார். அனைத்தும் தயார் நிலையில் இருந்தது.  காளி கோவிலை கட்டி முடிப்பதற்குள் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருந்தாலும், செலவு, சக்தி, என அனைத்தும் மிக அதிகமாக ஆனாலும், எல்லாப் பணிகளும் செவ்வனே நடந்து முடிந்தபோதிலும், இறுதியாக அந்த பிரம்மாண்டமான பிரச்சனையில் வந்து நின்றது. ஆம், சாதிப்பிரச்சனை தலை தூக்கியது அங்கு!  ராணி பிராமணர்கள், மற்ற உயர் சாதிப் பிரிவினரின் அபிமானம் பெற்றிருந்தாலும், அத்துனை பெரிய சொத்திற்கு அதிபதியாக இருந்தபோதிலும் அவர் ஒரு கீழ் சாதிப்பிறப்பாகவே பார்க்கப்பட்டார். அதனால் அவர் கோவிலின் சொந்தக்காரராகவும், பிராமணர்களுக்கு உணவு சமைப்பதையும் விரும்பக்கூடிய நிலையில் இருக்கமுடியவில்லை. ராணி பல பண்டிதர்களுடனும் ஆலோசனை பெற்றாலும் ஒருவராலும் இதற்கான தீர்வைச் சொல்ல முடியவில்லை. இந்த நேரத்தில்தான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் மூத்த சகோதரர் ராம்குமார் அந்த காலகட்டத்தில் இருந்த கட்டாயமான பிராமணிய சட்டத்தைக் கடைபிடிக்கும் முகமாக ஒரு தீர்வைச் சொன்னார்.



ஆலயம் ராணியின் குரு மற்றும் ராம்குமார், அதிகாரப்பூர்வமான அர்ச்சகர் ஆகியோரின் பெயரில், காளிதேவியின் சிலையை, ஒரு வியாழன்று, மே மாதம் 31ம் நாள் 1855ம் ஆண்டில் கருவறையில் பிரதிஷ்டை செய்தார். பல பிரபலமான சாஸ்திரிகள், பிராமண பண்டிதர்கள், பக்தர்கள்,  ஞானிகள், காசி, ஒரிசா, நவதீப் போன்ற வெகு தூர தேசத்திலிருந்தும் வந்திருந்தனர். மிகப்பரந்த மனம் கொண்ட ராணி சாதி, மதம் என்ற எந்த பாகுபாடும் இன்றி, காளிமாதேவி ஆலயத்தை நிர்மாணிக்கும் குறிக்கோளை அடைந்துவிட்டார். சாதுக்களும், மத குருமார்களும், யாத்ரீகர்களும், கங்காசாகர் அல்லது பூரி ஆலயத்திற்குச் செல்லும் வழியில் தக்சினேசுவரத்தில் தங்கி அன்னையின் தரிசனமும் பிரசாதமும் பெற்று தியானம் செய்து வழிபட்டு நிறைவாகச் சென்று கொண்டிருந்தனர்.

ஸ்ரீ ராமகிருஷ்ணர், தன்னுடைய 19 வயதில் விஷ்ணு ஆலயத்தில் பூசாரியாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டபோது முதலில் மறுத்தவர் பின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஒப்புக்கொண்டார். பல விதமான சாதுக்களின் தரிசனங்கள் பற்றியும் சிலாகித்துக் கூறுகிறார் இவர். அவர் முன்னிலையிலேயே ஒரு துறவி நிர்வாணமாக உடல் முழுவதும் சாம்பலைப் பூசிக்கொண்டு நீண்ட முடியும், நகங்களும் கொண்டு, எரிந்த உடலிலிருந்து எடுக்கப்பட்டது போன்ற சாம்பலை மேனியில் பூசிக் கொண்டிருந்தவர், காளி தேவியைப் பற்றிய பாடலை கோவிலே அதிரும் வகையில் உரக்கப் பாடியதை அன்னை மகிழ்ச்சியுடன் புன்னகைத்து ரசித்ததை ஸ்ரீராமகிருஷ்ணர் நேரில் கண்டதாகக் கூறுவார். ஒரே வருடத்தில் ராம்குமார் இறந்துவிட, ஸ்ரீராமகிருஷ்ணர் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ராணி இவருடைய காளி பக்தியில் மனமுறுகிப்போவார். காளி மீதான அவருடைய பாடல்களை மெய் மறந்து கேட்டுக் கொண்டிருப்பார்.

ஒரு நாள், ஸ்ரீராமகிருஷ்ணர் அன்னை காளிமாதேவியை ஆழ்ந்த ஏக்கத்துடன் அழைத்து மனமுறுக பாடிக் கொண்டிருக்கும்போது, எதிரில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்த ராணியை திடீரென்று ஓங்கி கன்னத்தில் அறைந்துவிட்டார். அதிர்ந்து நின்றிருந்தவரைப் பார்த்து, “என்ன செய்கிறாய் நீ, இந்த புனிதமான இடத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு உலக விசயங்கள் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறாயா” என்று சப்தமிட, உடனே காவலர்கள் ஓடிவந்து அவரை வெளியில் இழுத்துவிட முயற்சிக்க, ராணியோ அதைத் தடுத்து அன்னை காளிதேவியே ராமகிருஷ்ணர் உருவில் வந்து தன்னை மிரட்டியதாக எடுத்துக்கொண்டார். உண்மையிலேயே தான் ஒரு வழக்கு பற்றி எண்ணிக் கொண்டிருந்தது அவருக்கு எப்படித் தெரிந்தது என்று மிகவும் அதிசயப்பட்டார்.

1861ம் ஆண்டில் ராணி மிகவும் நோய்வாய்ப்பட்டார். தன் இறுதி நாட்களை உணர்ந்து கொண்டவர், தென் கொல்கத்தா நகரின் காலிகட் பகுதியில் இருந்த தோட்டவீட்டில் குடியேறினார். ஆதி கங்கையின் கரையில் இருந்த இல்லம் அது. தன் இறுதிக் காலம் வந்துவிட்டதை அறிந்து தான் முடிக்காமல் விட்ட ஒரு பணியான தக்சிணேசுவர கோவிலின் நிர்வாகப் பணிகளுக்கான கையிருப்புப் பணத்திற்கான சொத்தை கோவில் பெயரில் மாற்ற வேண்டிய பெரும் பணியை உடனடியாகச் செய்து முடித்த அடுத்த நாளே தன்னுயிரையும் இழந்தார். 1861, பிப்ரவரி 19ம் நாளில் இயற்கை எய்தினார். இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால், அவர் கங்கை நதிக்கரைக்கு கொண்டுவரப்பட்டார். அது இரவு வேளையாதலால் விளக்குகள் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தன. ராணி ராசுமணி, “அந்த விளக்குகளை நிறுத்துங்கள். இந்த செயற்கையான பிரகாசம் இனி எனக்குத் தேவையில்லை. இதோ என் தாய் வந்துவிட்டாள். அவளுடைய ஞான ஒளி இந்த இடம் முழுவதும் நீக்கமற  நிரம்பியிருக்கிறது.” என்று சத்தமிட்டவர் சற்று நேரத்திலேயே, “அம்மா, நீங்கள் வந்துவிட்டீர்களா!” என்று சொல்லிக்கொண்டே தன் இன்னுயிரை விட்டார்.  அன்னையே நேரில் வந்து தன் அன்பு மகளை அள்ளி அணைத்துச் சென்றாள்!

நீண்ட தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு பெண்ணாக இருந்தாலும், ராணி ராசுமணி தன் கோவில் நிர்வாகத்திற்காக சேர்த்து வைத்திருந்த சொத்தை பயன்படுத்த முடியாத அளவிற்கு அவரே எதிர்பார்க்காத, 1947ம் ஆண்டின் இந்தியப் பிரிவினை வந்தது. இவருடைய நிலம் பங்களாதேச எல்லைக்குட்பட்டிருந்ததாலும், அரசாங்கம் அவருடைய அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்ததாலும் அன்று முதல் தக்சிணேசுவரத்தின் காளி கோவில் இவருடைய சொத்திலிருந்து வந்த வருமானத்தில் நிர்வகிக்கப்படவில்லை என்பதுதான் வருத்தமான செய்தி. அனைத்தும் அன்னையின் விளையாட்டு!