Tuesday, April 19, 2022

அணிநடை எருமை


  — ஆர். பாலகிருஷ்ணன்


எத்தனை முறை தோண்டினாலும் சங்கச்சுரங்கத்தில் ஏதோ ஒன்று புதிதாகக் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. எப்படித் தவறவிட்டோம் என்ற ஆதங்கம்; இப்போதாவது கவனித்தோமே என்ற ஆறுதல். ‘அண்ணல் ஏறு' என்றும் 'அணிநடை எருமை' என்றும் எருமைக்குப் பொன்னாடை போர்த்திய இலக்கியம் வேறெதுவும் இருக்கிறதா?   அண்ணல் என்பது எவ்வளவு பெரிய வார்த்தை. தலைமை. அரசன். பெருமையில் சிறந்தோன். முல்லைநிலத் தலைவன். கடவுள் என்று பொருள்விளக்கம் அளிக்கிறது தமிழ்க்களஞ்சியம். 2020 செப்டம்பர் 5-ம் தேதி அணிநடை எருமை பற்றி இணைய வழியில் இரண்டு மணி நேரம் கொட்டித்தீர்த்தேன். மனசு ஆறியது. 

பண்பாட்டிற்கும் மொழிக்குமான உறவு எத்தகையது? வார்த்தைகளைப் பண்பாடு செதுக்குகிறதா? அல்லது, பண்பாட்டு அசைவுகளை வார்த்தைகள் வழிநடத்துகின்றனவா?   சங்க இலக்கிய அணி நடை எருமைக்கும், 'எருமை மாடு மாதிரி வளர்ந்திருக்கான்', 'எருமை மாட்ல மழை பேஞ்ச மாதிரி’, ‘சொரண கெட்ட எருமை', 'மேய்க்குறது எரும, அதுல என்ன பெரும' என்ற சமகாலச் சொல்லாடல்களுக்கும் எவ்வளவு தூரம்! அது நாம் இந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் சறுக்கிவிழுந்த தூரம். 

நீர் எருமை இந்தியாவின் பெருமை. 6300 ஆண்டுகளுக்கு முன்பே வீட்டு விலங்காகப் பழக்கப்பட்டது. சிந்துவெளி மக்கள் மெசபடோமியாவுக்கு எருமைகளை ஏற்றுமதி செய்தார்கள்.  சிந்துவெளி முத்திரைகளில் எருமையின் உருவம்: எருமைக்கொம்பைத் தலையில் சூடிய மனிதன்;  செம்பில் செய்த எருமை உருவ பொம்மை: மண்பாண்டங்களில் எருமை ஓவியங்கள்; வழிபாட்டு முறையில் எருமைப் பலி. 





சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் பகுதியில் காட்டெருமைக் கொம்புகளைத் தலையில் அணிந்து ஆடும் முரியா என்ற திராவிடப் பழங்குடிகளைப் பார்த்தேன். சிந்துவெளிப் பொறிப்பு நினைவுக்கு வந்தது. நீலகிரித் தோடர்களின் உலகம் எருமைகளால் ஆனது. எருமைகளே தோடர்களின் செல்வக்குறியீடு. எருமைப் பால்தொழுவம்தான் புனிதக் கோயில். ஈமச் சடங்குகளில் எருமைப்பலி. 






இதுவரை எனது புரிதல் இது தான். சிந்துவெளிப் பண்பாடு, சங்க இலக்கியம், பழங்குடிகளின் வாழ்வியல் ஆகிய மூன்று தளங்களில் ஒரு கருத்தியல் முன்னிலை பெறுகிறது என்றால் அது இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டின் தொப்புள்கொடிகளோடு தொடர்புடைய  அடித்தளங்களில் ஒன்று என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்வேன். எருமை சார்ந்த பண்பாட்டு மரபும் அப்படிப்பட்ட ஓர் அடையாளம். 

எருமைக்கொம்புகள் சங்ககாலத் திருமணச் சடங்குகளில் வழிபாட்டுக்குரிய வளமைக்குறியீடு. இப்போது, எருமை எதிரே வந்தால் சகுனம் சரியில்லை என்று தெறித்து ஓடுகிறோம்.  எங்கள் வீட்டில் ஓர் எருமை வளர்த்தோம். பிறகு அந்த எருமையை விற்றுப் பசுமாடு வாங்கியது திடீரென்று நினைவுக்கு வந்தது. இவ்வளவு காலம் கழித்து, அண்மையில் தான் அம்மாவிடம் தொலைபேசியில் காரணம் கேட்டேன். "எருமை மாடு குடும்பத்திற்கு ராசி இல்லை" என்று ஜோசியர் சொன்னாராம். ஆனால் எனக்கு எருமையைப் பிடிக்கிறது. 

“கோடை விடுமுறையில் எருமைகளோடு குளித்த தாமரைக்குளம். 
‘நல்லது' என்று மிதித்த
யானை லத்திகள்"
என்று கவிதை எழுதினேன் ('அன்புள்ள அம்மா', 1991). 

1985-ல் ஒடிசாவில் கட்டாக் நூலகம் ஒன்றில் எதேச்சையாகக் கண்ணில்பட்டது நீலகிரி தோடர்கள் பற்றிய நூல். எருமைகள் பற்றிய எனது முதல் வாசிப்பு. 1988-ல் கோராபுட்டில் ஒரு பழங்குடி கிராமத்தில் பலி எருமையின் இறைச்சியைப் பங்கிடுவதைப் பார்த்தேன் 1989-ல் கதபா பழங்குடிகளின் நீத்தார் நினைவுச் சடங்கில் மொய்க்கொடையாகக் கைமாறும் உபரி எருமை சுழல் விநியோக முறையை ஆராய்ந்தேன். 1989-ல் ராஞ்சியில் இந்தியப் பழங்குடிகள் விழாவில் நீலகிரி பழங்குடிகளைச் சந்தித்துப்பேசினேன். 1990களில் நீலகிரி பழங்குடி கிராமங்களுக்குச் சிலமுறை சென்றேன். ஆனால் சிந்துவெளிக்கும் பழந்தமிழகத்திற்குமான தொடர்புகள் பற்றிய புரிதல் எனக்குள் துலங்கிய பிறகே தோடர்களின், எருமைகளின் புலப்பெயர்வு திசைகளை இடப்பெயர் சான்றுகளால் நிறுவ முடியுமா என்று தோண்டித் துருவினேன். தோடா எருமைகளின் மரபணு பற்றிய ஒப்பீட்டு ஆய்வுகள் இப்போது உதவுகின்றன. 

அணிநடை எருமைக்காகக் கணிப்பொறியில் எனது பழைய ஆவணங்களைத் துழாவினேன். குறிப்பேடுகளைப் புரட்டிப் பார்த்தேன். தோடர்கள், தோடா எருமைகள், துளு மொழிப்பகுதிகளின் கம்பலா என்ற எருமைப் பந்தயம், கேரளத்தின் எருமை ஓட்டம், ஒடிசாவின் சிலிகா எருமைகள் என்று எவ்வளவு தரவுகளைத் தேடித்தேடிக் குறிப்பெடுத்திருக்கிறேன், எத்தனை இரவுகள், விடுமுறைகள் இப்படிக் கழிந்தன. இவற்றையெல்லாம்  எப்போது எழுதப்போகிறேன்? தமிழ் நெடுஞ்சாலை மலரும் நினைவுகள் மட்டுமல்ல; வளரும் கனவுகளும்கூட. 

இந்தியாவில் 11 கோடி எருமைகள். எண்ணிக்கையில் உலகில் முதலிடம். இந்தியாவின் பால் உற்பத்தியில் கிட்டத்தட்ட 50 விழுக்காடு எருமைப்பால். பசுமாட்டுப்பால் உற்பத்தியில் சீமைப்பசு எனப்படும். கலப்பு மாட்டுப்பால்தான் அதிகம். ஆனால் எருமை வகைகளில் சீமை எருமை என்று ஏதுமில்லை. எருமை 100 விழுக்காடு இந்தியன்! பாக்கெட் பால் பெரும்பாலும் பசும்பால், எருமைப்பால் இரண்டும் சேர்ந்த கலவைதான் என்பது போன்ற தகவல்களை எனது ஆட்சிப்பணி நண்பர் தருண் ஸ்ரீதர் எழுதிய கட்டுரை மூலம் அறிகிறேன். ஒன்றிய அரசின் கால்நடை வளர்ப்புத்துறைச் செயலராக இருந்தவர். 'Don't allow it to be cowed down' என்ற இவரின் கட்டுரைத் தலைப்பே கவர்ந்திழுத்தது. 'மெரிட்' படி பார்த்தால் எருமைதான் அருமை என்று அடித்துச் சொல்கிறார் ஸ்ரீதர். 

2018-19-ம் ஆண்டு இந்தியாவி லிருந்து ஏற்றுமதியான எருமை இறைச்சியின் மதிப்பு 25,168.31 கோடி ரூபாய். "பசு மாடுகளை நேசிப்போர் எருமைகள்மீது காட்டும் பாராமுகத்தைக் கண்டு நான் அதிர்ச்சிஅடைகிறேன்" என்கிறார் மேனகா காந்தி. "எருமை இனப்படுகொலை உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான், பீகார், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகம்” என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். 'பசு புனிதமானது என்றால் எருமையும் புனிதமானது' என்பது மேனகா காந்தியின் நிலைப்பாடு. இதில் எனது அக்கறை மாட்டிறைச்சி பற்றியது அல்ல. எருமைகளுக்கு எதிரான ஓரவஞ்சனையைப் புலன்விசாரிப்பது. 

சிந்துவெளியில் குதிரைகள் இல்லை. காளை பொறிப்பு இருப்பதால் கட்டாயம் பசு  இருந்திருக்கும். ஆனால் பொறிப்புகளில் பசுக்கள் இல்லை. 




எருமை, நல் ஆன், கருநாகு, இருள் நிறமை ஆன், நீல இரும்போத்து, கயவாய் எருமை என்று எருமைகளை விழுந்து விழுந்து வர்ணிக்கிறது சங்க இலக்கியம். நீரில் படகுபோல மிதக்கும் எருமை. எருமையின் முதுகில் சவாரி செய்யும் சிறுவன், பொதுத் தொழுவில் இருக்கும் மன்ற எருமைகள் என்று கூர்ந்த கவனிப்பு உள்ளது. சங்க இலக்கியங்களில் எருமை பற்றிய இழிவான குறிப்பு எதுவுமே இல்லை. 

எருமை கூடிவாழும் குடும்ப விலங்கு. எருமையைச் சிறுவர்கள்கூட எளிதில் கையாளலாம். ஐங்குறுநூற்றில் ஓரம்போகியார் எழுதிய 'எருமைப்பத்து' எருமைகளின் உளவியல், செயல்பாடுகளின் ஊடான காதல் வாழ்வியல். அஞ்சாமல் போரிடும் வீரன் பற்றிய புறப்பாடல் துறையின் பெயர் 'எருமை மறம்'. அகமும் புறமும்தானே தமிழ்! பாண்டிய மன்னனை எதிர்த்துப் போரிட்ட குறுநிலத்தலைவர்களில் ஒருவன் பெயர் எருமையூரன். எருமையூரான மைசூரில் (மஹிஷாசுர்) சாமுண்டி மலையில் நிற்கையில் நினைவில் சங்க இலக்கியம். 

பசு மாடுகளின் சமயம் சார்ந்த புனிதத்தன்மையை முன்னிறுத்தும் மரபு சங்க இலக்கிய காலத்திலேயே காலூன்றத் தொடங்கிவிட்டது. மதுரையை எரித்த கண்ணகியின் விதிவிலக்குப் பட்டியலில் பசு இருந்தது; எருமை உள்ளிட்ட பிற விலங்குகள் இல்லை, 

இந்தியாவில் சாலையில் திரியும் கால்நடைகளின் எண்ணிக்கை 50 லட்சத்திற்கும் மேல். ஆனால், அநாதையாகத் திரியும் எருமைகளைக் காண முடியாது. அதுவே எருமையின் பெருமைதான். தோடர்களில் அநாதை என்று எவருமில்லை என்று தோடர் பழங்குடிப்பெண் வாசமல்லி கூறும் காணொளி நினைவுக்கு வந்தது. பெருமைக்காக மேய்க்காவிட்டாலும் பொருளியல் அடிப்படையிலாவது எருமையின் அருமையைப் பேசலாம்.  'எப்பிடி இருந்த எருமை இப்பிடி ஆகிருச்சு' என்று உச்சுக்கொட்டி நகர்வதற்கு இல்லை இந்த அணிநடை எருமை. 'பசுக்கப்பட்ட' எருமை என்பது வேறொன்றுமில்லை. நசுக்கப்பட்ட மக்கள் வரலாற்றின் இன்னொரு முகம்தான். 

அறியப்படாத தமிழகம்' நூலில் தொ.பரமசிவன் சொல்கிறார். "இன்றைய நிலையில் 'கறுப்பு-சிவப்பு' என்பது வெறும் அழகுணர்ச்சி சார்ந்த பிரச்சினையன்று. அது மரபுவழி அழகுணர்ச்சியிலிருந்து திசைமாற்றப்பட்டவர்களின் அதிகார வேட்கைக்கும் மரபுவழிச் சங்கிலியால் பிணைக்கப்பட்ட எளிய மக்களுக்கும் இடையிலே நிலவிவரும் ஒரு முரண்பாடு ஆகும். மேட்டிமையின் சிவந்த நிறம் அழகு நிறைந்ததாகக் காட்டப்படுகிறது" என்கிறார் அவர்.  'மணமகள் தேவை' விளம்பர வாசகங்கள் மனதில் தோன்றுகிறது. எனக்குள் சிரிக்கிறேன். 

அணிநடை எருமை எமனின் வாகனம் ஆனது எப்போது? எருமை அரசன் எப்போது மஹிஷாசுரன் ஆனான்? தாய்த்தெய்வமான கொற்றவை துர்க்கையாகி மஹிஷாசுரனை யாருக்காக வதைத்தாள்? சிந்துவெளியில் இல்லாத சிங்கத்தின் மீது ஏன் அமர்ந்து கொன்றாள் இந்திய எருமையை?" என்ற கேள்விகள் என்னைத் துரத்தின. 

டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதப் பேராசிரியர் உபேந்தர் ராவை ஒருமுறை சந்தித்தபோது சில புதிய தகவல்கள் கிடைத்தன இப்போதெல்லாம் சமஸ்கிருத ஆவணங்கள் இணையத்தில் ஆங்கில மொழிபெயர்ப்புடன் கிடைப்பதும் வசதியாகப் போய்விட்டது. வட மொழியில் 'அஷ்வரிபு' என்ற சொல்லுக்கு 'குதிரையின் எதிரி' 'எருமை' என்று இரண்டு பொருள். எருமையைத் தொடக்கத்தில் ஒரு காட்டு விலங்காகவே (ஆரண்யபக) ஆரியர்கள் கருதினர். வேதங்களில் எருமையைக் குறித்த 'உஷ்ட்ரா' என்ற வார்த்தைப் பின்வந்த இலக்கியங்களில் ஒட்டகத்தையும் ஓர் அசுரனையும் குறித்தது. 'கக்ஷஹ' என்றால் பாவமும் (sin) எருமையும். அழுக்கானது, துர்நாற்றம் என்ற பொருளில் வழங்கும் 'கலுஷா' எருமையையும் குறிக்கிறது. 'க்ரோடீ என்ற சொல் காண்டாமிருகத்தையும் எருமையையும் சுட்டுகிறது. 'கால வாகன' என்பதில் எருமை எமனின் வாகனம். மஹிஷத்வஜ, மஹிஷாக, மஹிஷவாஹன போன்ற பதங்கள் எமனைக் குறிக்கின்றன. பசு வதை செய்பவர்களைத் தண்டிப்பது, கொல்வது பற்றி ரிக், யஜூர், அதர்வண வேதங்கள் குறிப்பிடுகின்றன. 

சமஸ்கிருத மொழி பேசியவர்கள் தொடக்கத்தில் எருமை, காண்டா மிருகம், ஒட்டகம் போன்ற விலங்குகளை நெருக்கமாக அறிந்திருக்கவில்லை. சமஸ்கிருத மொழியினரால் எருமை ஒரு காட்டு விலங்காகக் கருதப்பட்டது. சிந்துவெளி மக்கள் எப்படி குதிரையை அறியாதவர்களோ அதுபோல சமஸ்கிருத மொழி பேசியோர் எருமையை ஒரு வீட்டு விலங்காக அறியாதவர்கள். எனவே அவர்கள் எருமையை  குதிரையின் எதிரியாகக் கருதியதில் வியப்பில்லை. 

எருமையோடு புழங்கி சிந்துவெளி முத்திரையில் எருமை உருவத்தை பொறித்து, வணிகப் பொருளாக ஏற்றுமதி செய்து, வழிபாட்டு முறைகளில் எருமைப்பலி நடத்திய சிந்துவெளிப் பண்பாட்டு மரபில் வந்த மக்களுக்கும், குதிரையை மிக முக்கியமாகக் கருதிய, அஸ்வமேத யாகங்கள் நடத்திய மக்களுக்கும் மோதல்கள் முரண்பாடுகள் இயல்பானதே. மொத்தத்தில் வாழ்வியலுக்கும் மொழிக்குமான உறவு என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. 

கவிஞர் வெய்யில் எழுதியுள்ள 'ஞான எருமை' என்ற எதிர் ஆன்மிகக் கவிதைகளை (இன்னும் வெளியாகவில்லை!) படித்து அசைபோடுகிறேன். 
“தெய்வங்கள் 
வைக்கோல் படப்பைக் கொளுத்துகின்றன 
பேய்கள் 
மழையைப் பொழிவிக்கின்றன 
எருமை 
நனைந்தபடி 
எரியும் வைக்கோலைத் 
தின்கிறது". 

கல்வெட்டு, கட் அவுட், முண்டாசு, முதல் மரியாதை என்ற எந்தக் கவலையும் இல்லாமல் 'அணிநடை எருமை' நடந்துபோகிறது ஆதியின் அசைவாய். 

நான் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எருமையின் மீது எதற்கு இந்த ஓரவஞ்சனை? யார் வைத்த எந்த நுழைவுத் தேர்வில் இந்த எருமை தேர்ச்சிபெறவில்லை?


(ஆனந்த விகடனில் வெளியான "தமிழ் நெடுஞ்சாலை" தொடரில் இடம்பெற்ற ஒரு கட்டுரை இது )







Wednesday, April 13, 2022

தலையங்கம்: எளிய வகையில் வரலாற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்போம்

 



வணக்கம். 

தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வுத்துறை என்பது அத்துறை ஆய்வாளர்களின் கவனத்தில் மட்டுமே இருந்த ஒரு துறை என்ற நிலை மாறி கடந்த சில ஆண்டுகளில் பொது மக்களின் கவனத்தையும், ஆர்வத்தையும் ஈர்க்கும் ஒரு துறையாகப் பரிணாம மாற்றம் அடைந்துள்ளது. இந்த நிலைக்கு பல்வேறு செயல்பாடுகளைக் காரணமாகக் கூறலாம்.

குறிப்பிடத்தக்க வகையில் வரலாற்று மற்றும் தொல்லியல் கள ஆய்வுச் செய்திகள் பத்திரிக்கை மற்றும் சமூக ஊடகங்களில் வெளிவருவது பொதுமக்களின் கவனத்திற்கு அவை பற்றிய செய்திகளைக் கொண்டு சென்றிருக்கிறது. அடுத்து பல்வேறு சமூக மற்றும் கல்வி நிறுவனங்களும் சமூக ஆர்வலர்களும் ஏற்பாடு செய்யும் மரபுப் பயணங்கள், கல்விச் சுற்றுலா, வரலாற்றுப் பயணங்கள் ஆகியன குறிப்பிடத்தக்க வகையில் பொதுமக்களிடையே வரலாற்றுச் செய்திகளை நேரில் பார்த்து அறிந்து கொள்ளவும் அவற்றின் சிறப்பைப் புரிந்து கொள்ளவும் தங்கள் வாழ்க்கையோடு அவற்றை தொடர்புப்படுத்திக் காணும் வாய்ப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றன.

இதற்கு அடுத்ததாக, தற்சமயம் வெளிவருகின்ற ஏராளமான வரலாறு மற்றும் தொல்லியல் துறை சார்ந்த பொதுமக்கள் வாசிப்பிற்கான நூல்களைக் கூறலாம். இத்தகைய நூல்கள் பொதுமக்களின் கைகளில் கிடைக்கும் வகையில் தமிழகமெங்கும் புத்தகக் கண்காட்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது பொதுமக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. வரலாறு மற்றும் தொல்லியல் துறை சார்ந்த அறிஞர்களின் நூல்கள் மட்டுமன்றி சமூகவியல், மானுடவியல் மற்றும் செய்தித்துறை, தமிழ்த்துறை போன்ற மாறுபட்ட துறைகளைச் சார்ந்த அறிஞர்களது தீவிரமான ஆர்வம் என்பது தரமான ஆய்வுத் தரம் கொண்ட நூல்கள் உருவாக்கம் பெறுவதில் பங்களித்திருக்கின்றன. இதுவே இன்று குறிப்பிடத்தக்க வகையில் வரலாற்று ஆய்வு நூல்கள் வெளிவருவதற்குக் காரணமாகின்றன எனலாம்.

பொதுமக்களிடம் வரலாற்றுச் செய்திகளைத்  தரமான வகையில் உறுதியான சான்றுகளுடன் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு அதன் ஒரு பிரிவாகப் பதிப்பகப் பிரிவை 2019ஆம் ஆண்டு தொடங்கினோம். இப் பதிப்பக பிரிவின் முதல் நூலாக 'திருவள்ளுவர் யார்- கட்டுக்கதைகளைக் கட்டுடைக்கும் திருவள்ளுவர்' என்ற நூல் வெளியீடு கண்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த மூன்று ஆண்டுகளில் 13 நூல்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடுகளாக வந்துள்ளன. 




தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் நூல்கள் ஆய்வுத் தரமும் வரலாற்றுச் செய்திகளின் உண்மைத் தன்மையும் கொண்ட வகையில் அமைந்திருக்க வேண்டும் என்பதில் பதிப்புத்துறை மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றது. இப்பதிப்பகத் துறையின் பொறுப்பாளராகச் செயல்படும் என்னுடன் இணைந்து தமிழ் மரபு அறக்கட்டளையின் செயலாளர் முனைவர் தேமொழி, மற்றும்  மலர்விழி பாஸ்கரன், முனைவர் பாப்பா,  முனைவர் பாமா, ஹேமலட்சுமி ஆகியோர் கொண்ட குழு சிறப்பாக பணியாற்றி வருகின்றது.

வரலாறு மற்றும் தொல்லியல் துறை செய்திகள் என்பன கல்வித் தளத்தில் இருக்கின்ற அறிஞர்களுக்கு மட்டுமல்ல, மாறாக எல்லா தளத்திலும் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கும் எளிய வகையில் வரலாற்றைக் கொண்டு சேர்ப்பது தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகப் பிரிவின் நோக்கமாகும்.



தமிழகத்தில் இருக்கின்ற வரலாற்று ஆர்வலர்களுக்கு புத்தகக் கண்காட்சிகளின் வழியாகவும், இணைய வழி புத்தக விற்பனையாளர்களின் வழியாகவும் தமிழ் நூல்கள் வாசிக்கக் கிடைக்கின்றன. இதேநிலை உலகில் அதிலும் குறிப்பாகத் தமிழ் மக்கள் மிக அதிகமாக வாழ்கின்ற மலேசியா, சிங்கை, இலங்கை, அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளிலும் புத்தகக் கண்காட்சிகளை ஏற்படுத்துவதன் வழி நூல்கள் வாசிப்பது, அதிலும் குறிப்பாக வரலாற்றுத் தகவல்கள் கொண்ட நூல்களைப் பொதுமக்கள் வாசிக்கும் வழி செய்வது அவசிய தேவையாகின்றது. தமிழக அரசின் சீரிய பற்பல பணிகளில் இதனையும் ஒன்றாகக் கொண்டு, தமிழகத்திற்கு வெளியே புத்தகக் கண்காட்சிகளை ஏற்பாடு செய்ய அரசு முன்வந்தால் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம் போன்ற தரமான பல்வேறு நூல்களை உருவாக்கி வழங்கும் பதிப்பகங்கள் அதனை நல்வாய்ப்பாகப் பயன்படுத்தி தரமான ஆய்வு நூல்களைத் தமிழ்நாட்டிற்கு வெளியே வாழும் மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதில் வெற்றி பெற முடியும். இது தமிழ் நூல் வாசிப்பில் ஒரு மாபெரும் புரட்சியை நிச்சயம் உருவாக்கும்!

தமிழால் இணைவோம்.



அன்புடன் 
முனைவர் க. சுபாஷிணி
தலைவர் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

அம்பேத்கரின் மனிதர் - நூல் மதிப்புரை



-- முனைவர் க. சுபாஷிணி 




எளிய முறையில் புரிந்து கொள்ளும் வகையில்  சட்டமேதை  டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களைப் பற்றி வெளிவந்திருக்கும் ஒரு நூல் இது.  கேள்விகளுக்குப் பதில் விளக்கம் என்ற வகையில் இந்த நூல் அமைந்திருக்கின்றது. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இந்திய சமூக நிலை மாற்றத்திற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள், செயல்படுத்திய சட்ட மாற்றங்கள் ஆகியவற்றைச் சுருக்கமாக, அதேவேளை தெளிவாக இந்த நூல் வாசகர்களுக்குக் கொண்டு சேர்க்கின்றது.

நூலின் தலைப்பு வாசிக்கும் நம்மை யோசிக்க வைக்கின்றது. அம்பேத்கர் விவரிக்கும் மனிதர்,  அம்பேத்கரின் பார்வையில் மனிதர், இந்தியாவில் ஒரு மனிதர் எவ்வகையில் உணரப்படுகின்றார் போன்ற செய்திகளைத் தத்துவார்த்த அடிப்படையில், அதேவேளை சமூகவியல் பார்வையில், சமூக நீதி சிந்தனையை இணைத்து நூலாசிரியர் விளக்குகின்றார்.  நூலாசிரியர் கௌதம சன்னா நீண்டகாலமாக அண்ணல் அம்பேத்கர் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டவர் என்பது இந்த நூலில் அவர் வழங்கும் விளக்கங்களின் வழியாக வாசகர்களுக்கு வெளிப்படுகிறது.

அண்ணல் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மட்டுமே செயல்பட்டார் என்றும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தலைவர் என்றும் காணப்படும் குறுகிய பார்வை எவ்வளவுக்கு எவ்வளவு தவறானது என்பதை நூலை வாசிக்கும் வாசகர்களுக்குத் தெளிவு படுத்துகிறது.  நவீன இந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு மாற்றங்கள், இன்று இந்தியாவில் தொழிலாளர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் பல்வேறு சலுகைகள், இந்தியப் பொருளாதாரக் கட்டுமானம்.. அரசியல் அமைப்பு... என நூல் தரும் விளக்கங்கள் நம்மை வியக்க வைக்கின்றன.

அண்ணல் அம்பேத்கரின் சமூகநீதி செயல்பாடுகளை மட்டுமன்றி நவீன இந்தியாவின் கட்டமைப்பில் அவர் ஆற்றிய பணிகளை ஒவ்வொரு இந்தியரும் புரிந்து கொள்ள உதவும் ஒரு கையேடாக இந்த நூல் அமைகின்றது என தாராளமாகக் கூறலாம்.  அண்ணல் அம்பேத்கர் அவர்களது பிறந்த நாளில் வெறுமனே இரண்டு வார்த்தைகளில் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறுவதோடு மட்டுமல்லாது, அம்பேத்கரின் சிந்தனையை, அம்பேத்கரின் செயல்பாட்டை விவரிக்கும் இந்த நூலை வாங்கி வாசித்து அவரது செயல்பாடுகளைப் புரிந்து கொள்வது நிச்சயம் பயனளிக்கும்.

சமத்துவ நாள் மற்றும் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


நூல் விவரம்:
அம்பேத்கரின் மனிதர் : எளிய தத்துவார்த்த உரையாடலுடன்
நூலாசிரியர்: கௌதம சன்னா
நூல் விலை: 100₹
பதிப்பகம்: எழிலினி
பதிப்பாண்டு - 2022 
நூலைப் பெற: Google pay - 9840696574





தமிழகத்தின் நாயகி

படம்: சந்தோஷ் நாராயணன்
பாடல்: அமீர் 

தமிழகத்தின் நாயகி

⁠ — அமீர்


தமிழகத்தின் தாயாகி
அம்மக்களின் செல்லச் சேயாகி 
மொழி தாகத்தைத்
தீர்க்கும் வற்றா காவிரியே...
தமிழே.....
இன்று நீ
கோபம் கொண்டது ஏன்?

பணிவுக்கும்
அன்பிற்கும்  அடையாளமான நீ 
ஆவேசமாவது ஏன்?

ஆதிக்கக் கும்பலின் 
சத்ரிய  போதையின்
மொழிவெறியைக் கண்டா?

சுயமரியாதை சுடர்விடும் மண்ணில் 
உன்னை சூறையாட வந்த
சாஸ்திரத்தை கண்டா?

அல்லது

கட்டங்களில் கணக்கிட்டு
உன்னை வழிப்பறி செய்யவந்த 
கோத்திரத்தை கண்டா?

சூறையாடப்பட
நீ சொப்பன சுந்தரியல்ல 
கட்டடக்கரர்கள்
நினைப்பது போல்
நீ  பத்தாண்டு திட்டமும் அல்ல 

சான்றோருக்கு அழகு
சான்றாண்மை
அதை மறந்து 
மத வேற்றுமை போல்
மொழி வேற்றுமைக்கு
நடக்கிறது இன்று 
ஒரு ராஜசூய யாகம்

யாணர்களோ
வாணர்களோ 
அரசியலில் பிழை செய்தோருக்கு 
அறமே எமன் என்பது முதுமொழி

பூவின் மென்மையை
மேலுடுத்திய திருமகளே 
பாரதி சொன்னது போல்
தண்டச் சோறுண்ணும்
அவர்களுக்குத் தெரியாது
நீ
ஆபரணங்கள் விரும்பும் 
ஆரணங்கு அல்ல
கண்ணகி எனும் தீயை ஈன்ற
தமிழணங்கு என்று 

- அமீர் -






தமிழ்த்தாய்: ஒரு கலை விமர்சனப் பார்வை



  —  இந்திரன் ராஜேந்திரன், கலை விமர்சகர்  


ஏ. ஆர். ரகுமான் சமூக வலைத்தளத்தில்  பதிவு செய்த,  ஓவியர் சந்தோஷ் நாராயணன் வரைந்த தமிழணங்கிற்கு   பழுப்புத் தோல் மேனி, கையில் 'ழ' எனும் எழுத்து ஆயுதம், வெள்ளை உடை, விரிந்த கூந்தல், காலில் சிலம்பு, இடையில் மேகலை, உக்கிர தாண்டவம், காதில் குண்டலம் இல்லை. ஓவியர் சந்தோஷ் படைப்பு புதுமைக்குப் புதுமை செய்கிறது.  

ஆனால் இதற்கு முந்திய  தமிழ் அன்னையை சிவந்த மேனியுடன் ஓவியர் மணியம் செல்வன் ஓவியமாகத் தீட்டி இருக்கிறார்.  


தமிழன்னையை கவியோகி சுத்தானந்த பாரதியார்  கீழ்க்கண்டவாறு வர்ணிக்கிறார்.
"காதொளிரும் குண்டலமும் கைக்குவளை
         யாபதியும் கருணை மார்பின்
    மீதொளிர்சிந் தாமணியும் மெல்லிடையில்
         மேகலையும் சிலம்பார் இன்பப்
    போதொளிரும் திருவடியும் பொன்முடிசூ
         ளாமணியும் பொலியச் சூடி
    நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
         தாங்குதமிழ் நீடு வாழ்க" 

தமிழ் முன்னர் ஓவியமாகத் தீட்டப் பட்டதற்கும் இன்று தீட்டப் படுவதற்கும் தான் எத்தனை வேறுபாடு.  அன்று திருக்குறளைச் செங்கோலாய்த் தாங்கியது. இவ்வாறு தமிழ் மொழி காலம் தோறும் மாறி வருவதால் தான் என்றுமுள தென்தமிழ் என தொடர்ந்து வளர்கிறது.

1.  1891இல் தமிழ் எனும் ஒரு மொழியை ஒரு தமிழ்த் தாயாக முதல் முதலில் உருவகப்படுத்தியவர்  மனோன்மணியம் சுந்தரனார்  (1855 – 1897).  இவர்   தனது  மனோன்மணீயம் நூலில் உள்ள பாயிரத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து எழுதினார். இது எம். எஸ். விஸ்வநாதனால் இசையமைக்கப்பட்டது.  1967 இல் தி.மு.க.  வெற்றிபெற்று ஆட்சியமைத்தபோது  தமிழ்நாட்டின் முதலமைச்சரான அறிஞர் அண்ணாதுரை “நீராரும் கடல் உடுத்த” எனும் இப்பாடலைச் சில திருத்தங்களோடு தமிழ்த் தாய் வாழ்த்தாக தேர்வு செய்தார்.  அவர் மறைவிற்குப் பிறகு இப்பாடலை 1970 மார்ச் 11 அன்று தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது. இதன் மூலம் தமிழ்த்தாய் எனும் சொல்லாடல்  புகழ் அடைந்தது. “பிதா, சுதன் ஆவி “ என்பதில் தந்தையை முன்னிறுத்தியதுபோல் அல்லாமல் மொகஞ்சதாரோ ஹரப்பா காலத்திலிருந்து தொடரும் தாய்த்தெய்வ வழிபாட்டை இது அடியொற்றியது.


2.  இதன் அடுத்த கட்டமாக தமிழ்த்தாய் கோயில் காரைக்குடியில் அமைக்கப்பட்டு, 1975, ஏப்ரல் 23 அன்று தமிழ்த்தாய்க் கோயிலுக்குக் கால்கோள் விழா நடந்து, கட்டுமானப் பணிகள் தொடங்கப்பெற்றன. பின்னர்  16 ஏப்ரல் 1993 இல் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியால்  திறந்து வைக்கப்பட்டது. அதில் தமிழன்னைக்கு சிற்பி வை.கணபதி ஸ்தபதி வடிவம் கொடுத்தார். இதனை கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் உள்ள சோழர் காலத்திய ஞான சரஸ்வதி வடிவத்தை அடியொற்றி படைத்ததை கணபதி ஸ்தபதியும், சோழமண்டல் ஓவியர் கிராமத்துச்  சிற்பி கே.எம் .கோபாலும் நேரில்  சந்தித்தபோது எங்களிடம் தெரிவித்தனர்.  இதில் தமிழ்த்தாய் உருவம் நான்கு கைகளுடன் வலக்கால் கீழே தொங்க இடக்கால் மடித்த நிலையிலும், தாமரைப் பீடத்தில் அமர்ந்தவாறு செதுக்கப்பட்டது. நான்கு கைகளில் சுவடி,  செங்கோட்டு யாழ், சுடர்,  உருத்திராட்ச மாலை ஆகியவை சித்தரிக்கப்பட்டன. கால்களில் சிலம்பும், தண்டையும் உள்ளன.  மூவேந்தர்களின் சின்னங்களான வில், புலி, மீன் ஆகியவை பின்புறத்தில் திருவாச்சியில் பொறிக்கப்பட்டுள்ளன. 


3.  இதன் அடுத்த கட்டமாக ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டுக்காக 1981 இல் மதுரையில் அமைக்கப்பட்ட சிலை தாமரையில் இரண்டு கைகளுடன்  அபய முத்திரையுடன் அமர்ந்திருப்பது போன்று உருவாக்கப்பட்டது. உலகத் தமிழ் மாநாட்டின் நிறைவு நாளான 10.1.1981-ம் நாள் அன்று இச்சிலையை அன்றைய முதல்வர் பாரத ரத்னா எம்ஜிஆர் முன்னிலையில் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி திறந்து வைத்தார். இன்றைக்கும் தமுக்கம் மைதான நுழைவுவாயிலில் தமிழன்னை தேரில் அமர்ந்திருப்பது போன்ற சிலையை நீங்கள் காணலாம்.

தமிழ்ச் சமூகத்தில் இப்போதுதான் தமிழ் அழகியல் கூறுகளுடன் கூடிய படைப்புச் செயல்பாடு தீவிரம் அடைந்துள்ளது. ஓவியர் சந்தோஷ் நாராயணனின் பழுப்பு நிறம் கொண்ட”தமிழணங்கு” ஓவியம் அத்தகைய ஒன்று. ஏ.ஆர் ரகுமான் டுவிட்டரில் பதிவிட்ட பின்னர்  என் பிறந்த மண் புதுச்சேரி அரசுப் பள்ளியில் பயிலும் முத்தமிழ்ச்செல்வன், பாரதியார் ஆண்கள் பாகூர் அரசு மேல்நிலைப் பள்ளி 11 வகுப்பு மாணவன் அதைச் சிற்பமாக வெளிப்பாடு செய்திருக்கிறான். 


ஒரு கலை விமர்சகன் என்ற வகையில் இதனை மிக உன்னதமான தமிழ்  மண்ணின் அடையாளத்தோடு கூடிய அசல் படைப்புக் கலை வெளிப்பாடாக கருதுகிறேன்.  மேல்நாட்டுச் சூரியனிடமிருந்து கடன் வாங்கித்தேய்ந்து போகும் நிலாக்களாக நிறைய படைப்புகள் நவீனத் தமிழ் ஓவியர்களால் செய்யப்படும்போது மாணவன் முத்தமிழ்ச் செல்வனைன் படைப்பு மிகவும் அசல் உயிரோட்டத்துடன் விளங்குவதாக நான் கருதுகிறேன்.  முற்றிலும் தமிழ் மண்ணில்  இயற்கைப் பொருட்களைக் கொண்டு செய்யப்பட்ட தமிழன்னையின் தமிழணங்கு  வடிவம் சோள இலை மற்றும் மூங்கிலால் செய்யப்பட்டது (ஆடை வடிவமைப்பு: குணா).   

இதனை ஏ.ஆர் ரகுமான் பகிர்ந்திருப்பது மிகவும் சிறப்பு. நமது கலை தமிழ் அடையாளம் கொண்டதாக மாற வேண்டும் என்று  கடந்த 30 ஆண்டுகளாக நான் எனது “தமிழ் அழகியல்” நூலில் வற்புறுத்தி வருவது இன்று இயல்பாகவே  கள்ளம் கபடமற்ற நிலையில் நனவாகிறது.




Sunday, April 10, 2022

கருத்தான தமிழணங்கு


  —  ஆர். பாலகிருஷ்ணன்




கருத்தான தமிழணங்கு 
கறுத்திருக்கிறாள். 
ஏனெனில் அவள் 
பொறுப்பாக இருக்கிறாள்.
அதனால் பொங்கி எழுகிறாள்.
சினத்தின் நிறம் 
சிவப்பு மட்டுமல்ல.
கறுப்பும் சிவப்பும்.
ஐயம் இருந்தால்
தொல்காப்பியரை 
கேளுங்கள்...
"கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள
நிறத்துரு உணர்த்தற்கும் உரிய என்ப"*
தாலாட்டி பாலூட்டும் போது 
அவள் தாய் 
தாக்கும் போது அணங்கு.
அதனால் தான் 
" தாக்கணங்கு" என்றார் 
வள்ளுவர்.
தமிழணங்கின் 
கையில் 
தனித்துவ படைக்கலம்.
ழகர வேல்!
எவரும் இதை மறவேல்.

-- ஆர். பாலகிருஷ்ணன்


* "கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள
நிறத்துரு உணர்த்தற்கும் உரிய என்ப". ( தொல். 855)






Friday, April 8, 2022

முத்தமிழ் விரும்பியின் தேநீர் கவிதைகள்



  -- முனைவர்.செ. இராஜேஸ்வரி


நான் நேசிப்பதும் அதுதான் முப்பொழுதும் 
என் மோகம் தீர்ப்பதும் அதுதான் 

தத்தரிகிட தித்தோம் என்று கவிஞர் தேநீரைப் பாராட்டினார். கவிஞர்களின் உற்சாக ஊற்றாக விளங்குவது தேநீர். மது போதைக்கு ஆட்படாத கவிஞர்கள் கூட தேநீர் போதையிலிருந்து தப்புவதில்லை. முத்தமிழ் விரும்பியும் நண்பர்களோடு தேநீர் சுவைத்து மகிழ்ந்து கதைத்து உரையாடி உறவாடிய பொழுதைக் கவிதையாக படைத்திருப்பதைக் காணலாம். தேநீர் என்பது உலகப் பாடுபொருளாக விளங்குகிறது. தேநீர் பாடுபொருளாக அமைவதன் சிறப்பை அறிவதற்கு அதன் வரலாற்றை முன் அறிவது இன்றியமையாததாகும்.

தமிழகத்தில் தேநீர் (டீ) அல்லது காப்பி  என்பது வெறும் சுடுநீர் அல்லது பருகுநீர் அல்ல. அது  நண்பர்களுக்கு  விருந்து அனுபவம் (tea party) ஆகும். பலருக்குப் பசி தீர்க்கும் உணவாகும். சிலருக்குத் துன்பம் தீர்க்கும் மருந்தாகும். களைப்பைப் போக்கும் காயகல்பம் ஆகும். தேநீர் தொழிலாளியின்  அடையாளம். காபி மேட்டுக்குடியின் ஆடம்பரச் சின்னம்.  ஆனால் காபி அல்லது தேநீர் பயிரிடல் என்பது உலகில் மிகப் பெரிய சூழலியல் சீரழிவைக் கொண்டுவந்தது.  

தேநீரின் வரலாறு சுவையானது. கி. மு. 2737இல்  ஒரு சீன மன்னன் காட்டில் இளைப்பாறிக் கொண்டிருந்த வேளையில் அவனுடைய குடிநீரில் காற்றில் பறந்து வந்த சில காய்ந்த இலைச் சருகுகள் விழவும் அந்த குடிநீரின் நிறமும் சுவையும் மாறியது.  அந் நீரைக் குடித்த பின்பு மன்னன் உற்சாக மனநிலையை எய்தினான். மேலும் வேண்டுமெனக் கேட்டான். பணியாட்கள் அந்த இலையைத் தேடிப்பிடித்துக் கொண்டு வந்து தண்ணீரில் காய்ச்சி வடிகட்டி தேநீர் தயாரித்து மன்னனுக்கு வழங்கினர். அந்த இலையைத் தே இலை என்றனர்.

காபிக்கும் ஒரு கதை வழங்குகிறது. எகிப்து நாட்டில் ஒரு நாள் ஆடுகள் உறங்காமல் இருந்ததைப் பார்த்து ஆட்டிடையர்கள் மறுநாள் அந்த ஆடுகள் ஒரு செடியின் இலையைத் தின்றதால் தான் அவை தூங்காமல்  விழித்திருந்ததைப் புரிந்து கொண்டனர். அன்று முதல் அவர்களும் இரவில் ஆடுகளைக் காவல் காக்கும் பணியின் போது அந்த இலையைக் கொதிக்க வைத்து அதன் சாற்றைப் பருகினர். இவ்வாறு காபி அருந்தும் பழக்கத்திற்கு அடிமை ஆயினர். 

 கிபி பதினேழாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் தேநீர் மேலை நாடுகளில்  பிரபலமாயிற்று. பிரிட்டிஷ் அரசாங்கம் தன் ஆளுகையின் கீழ் இருந்த நாடுகளில் மலையில் இருக்கும் மரங்களை அழித்து அங்குத் தேயிலையும் காப்பியும் பயிரிட்டது. முதலில் அரசு தம் குடிமக்களுக்கு இலவசமாகக் கொடுத்துப் பழக்கியது. பிறகு காசு கொடுத்தால் தான் தருவோம் என்று விலைக்கு விற்கத் தொடங்கியது. பின்னர் உலகம் முழுக்க தேநீர் தவிர்க்க இயலாத ஒரு பருகு நீராகப் பரவிற்று. ஒவ்வொருவரின் அதிகாலைப் பொழுதும் தேநீர் அல்லது காபியுடன் தொடங்கியது. உலக அளவில் குடிநீருக்கு அடுத்தபடியாகத் தேநீர் தான் அதிகளவில் பருகப்படுகிறது. 

சீனாவின் யுனான் மாகாணம் தேநீரின் பிறப்பிடமாக அறியப்படுகிறது. ஜப்பான், கொரியா, தைவான் போன்ற நாடுகளில் தேநீர் சடங்கு என்பது விருந்தினர்களை வரவேற்கும் முக்கியச் சடங்காகும். கிமு 300 க்கும் முன்னாடியே இந்நாடுகளில் தேநீர்ச் சடங்கு நடைபெற்றதாக அறிகிறோம். இந்தியாவில் மணி ராம் தேவான் என்பவர் முதன் முதலில் தேயிலையைப் பயிரிட்டார். தே என்பது 1500 மீட்டர் உயரத்தில் வளரக்கூடிய மரம் . ஆனால் இதன் இலக்காக செடி போல இடுப்பளவிற்கு மட்டும் வளர்க்கின்றனர்.  இதன் குருத்து இலைகள் பறிக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டு தேயிலைத் தூள் தயாரிக்கப்படுகிறது. 

அசாம் மாநிலத்தில் பெரிய அளவு தேயிலைகளும் சீனாவில் சிறிய தே இலைகளும் வளருகின்றன.  நடுத்தர அளவிலான தேயிலையும் உண்டு.  உலக அளவில் தேயிலை சீனாவில் 36 சதவீதமும் இந்தியாவில் 23 சதவீதமும் விளைகின்றது. உலகின் தேநீர் பருகுகின்றவர்களில் கால் பகுதி இந்தியாவில் தான் இருக்கின்றனர். இந்தியாவிலுள்ள அசாம் மாநிலம் தேயிலை விளைச்சலில் முதல் இடத்தில் உள்ளது. சுமார் 3 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் இங்குத் தேயிலை பயிரிடப்படுகின்றது. இது தேயிலை  சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்றதாகும். 

காபி என்பது பெரியவர்களின் பருகுநீர் என்று வெளிநாடுகளில் கருதப்படுவதால் அங்குக் குழந்தைகளுக்கு இதனைக் கொடுப்பது கிடையாது. ஆனால் இந்தியாவில் குழந்தைகளும் காப்பி அருந்தும் பழக்கத்திற்கு ஆட்பட்டு உள்ளனர். சர்வதேச அளவில் சுமார் 10 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் காபி  பயிரிடப்படுகிறது. கொடைக்கானலில் மட்டும் 50 ஏக்கர் நிலத்தில் காபி விளைகிறது. காபியில் இரண்டு வகை உண்டு ஒன்று அராபிகா இன்னொன்று ரோபஸ்டா. ரோபஸ்டா என்பது பெரிய அளவிலான காப்பிக் கொட்டைகளை உடையது.

ஆங்கிலேயர் ஆட்சியின் போது இலங்கையில்  தேயிலைத் தோட்டங்கள் உருவாக்க தமிழ்நாட்டிலிருந்து ஆட்கள்  அழைத்துச் செல்லப்பட்டனர். சாதிப்பாகுபாடு தீரும் என்ற நம்பிக்கையில் அல்லது சாதிக்கொடுமைகள் ஒழியும் என்ற நம்பிக்கையில் தமிழ்நாட்டிலிருந்து லட்சக்கணக்கில் கூலிகள் புறப்பட்டனர். மதுரை, நெல்லை, இராமநாதபுரம், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, வட ஆற்காடு மாவட்டங்களிலிருந்து தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த லட்சம் பேருக்கு அதிகமானோர் நடைப்பயணமாக இராமநாதபுரம் கடற்கரைக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து கப்பலில் ஏற்றப்பட்டனர்.  ஒருமுறை ஆதிலட்சுமி என்ற கப்பலில் பயணம் செய்தவர் பலர் கப்பல் கவிழ்ந்ததால் நூற்றுக் கணக்கில் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். படகுகளின் மூலம் அங்கிருந்து  கண்டி மாநிலத்திலுள்ள காடுகளுக்குத் தமிழ் கூலிகள் கொண்டு செல்லப்பட்டனர். இவர்களைக் கொண்டு கண்டி மலைப்பகுதியில் உள்ள மரங்களை வெட்டி அங்குத் தேயிலை பயிரிடுவதற்கான நிலம் பண்படுத்தப்பட்டது. அங்குச் சென்ற பல்லாயிரம்  தொழிலாளிகள்   காட்டுயிர்களுக்குப் பலியாயினர். 1841 முதல் 1849 வரை சுமார் 70 ஆயிரம் பேர் இவ்வாறு உயிரிழந்தனர் எஞ்சியவர்கள் மலையகத் தமிழர் என்ற பெயரில் தேயிலைத் தோட்டங்களில் பணி செய்து அங்கேயே வாழ்ந்து வந்தனர். இலங்கைக்கு 70 சதவீத வருமானம் மலையகத் தமிழர்களின் உழைப்பால் அவர்களின் வியர்வையால் கிடைத்தது. ஆரம்பத்தில் காப்பி செடி பயிரிடப்பட்டது. அதற்கு நோய் வந்தபோது காபியை விடுத்துத்  தேயிலையை அதிகமாகப் பயிரிட்டனர். இவர்களுக்குப் பத்துக்கு எட்டு அடி அளவில் தகரக் கொட்டகை வீடுகள் என்ற பெயரில் வழங்கப்பட்டன. அவற்றில் அவர்கள் குடியிருக்க நேரிட்டது.  ஸ்ரீலங்கா விடுதலைக்குப் பிற்பாடு, 1974இல் இக் கூலிகள் கட்டாயமாக இந்தியாவுக்குக் கப்பலில் திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் இராமேஸ்வரம் கடற்கரைக்கு அனாதைகளாக வந்து சேர்ந்தனர். இங்குள்ள சொந்த ஊர்களின் தொடர்பும் விட்டுப் போனதால் அவர்கள் இங்கு இலங்கை அகதிகளாக இருக்கும் நிலை ஏற்பட்டது. ஏழைகளாகச் சென்று ஏழைகளாகவே தாயகம் திரும்பினர். 

தேயிலை உற்பத்தியில் சீனா முதலிடத்திலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது. ஆனால் தேநீர் அருந்துவதில் துருக்கி மக்கள் முதல் இடத்தில் இருக்கின்றனர். இவர்கள் ஒரு நாளைக்கு 3 லிட்டர் அளவுக்குத் தேநீர் பருகுகின்றனர்.  இவ்வாறான முக்கியத்துவம் பெற்ற தேநீர் கவிஞர்களுக்கும் மிகவும் விருப்பமான உற்சாகப் பானமாக, சோர்வு நீக்கி சுறுசுறுப்பு ஊட்டும் பருகுநீராக விளங்குகிறது.

 மழலை கவி என்பவர்,  
"மழையில் குடையாக நான் 
இதழில் இதமான தேநீராக நீ" 
என்று தேநீரின் சுவையைத் தனது கவிதையில் வடித்தார். 

நளினி விநாயகமூர்த்தி என்ற சென்னைக் கவிஞர், 
"என்னவளே 
நீ பருகித் தந்த  தேநீரை 
நான் பருகப் பருக 
என் இளமை இன்னும் நீள்கிறது"
 என்கிறார். 

சுமையா என்பவர், 
"இனிப்பும் 
சற்று தூக்கலாகவே தெரிகிறது 
உன் இதழ் தொட்டபின் 
பருகும் தேநீரில் "
என்றும், 

"நுரைத்த குளம்பியில் 
நிரம்பித் தவிக்கிறது 
சுடச்சுட காதல் குமிழிகள்" 
என்றும் தேநீரையும் காப்பியையும் காதலோடு இணைத்துக் கவிதை பாடினார்.

கவிஞர் முத்தமிழ் விரும்பியின் தேநீர் கவிதைகள்: 
கவிஞர் முத்தமிழ் விரும்பியின் தேநீர் கவிதைகள் பல சூழல்களில் உருவெடுத்துள்ளன. கவிஞர் முத்தமிழ் விரும்பி தேநீர் பருகுவதை நண்பர்களோடு நடத்தும் கலந்துரையாடலின் ஓர் அங்கமாகக் கொள்கிறார் அடுத்தடுத்து அவர்கள் தேநீர் பருகுகின்றனர். இன்னொரு சூழலில் இயற்கை அழகில் மயங்கித் திளைக்கும் போது அந்த இரசனைக்கு இன்னும் சுவை ஊட்டுவதாக தேநீர் பருகும் பழக்கம் அமைகின்றது. 

1. நட்பு:
இன்பத்திலும் துன்பத்திலும் தேநீர் கவிஞர் முத்தமிழ் விரும்பியின்  வாழ்க்கையின் ஓர் அங்கமாகி இருப்பதைக் காணலாம். தான் காப்பி குடிப்பது மட்டுமின்றி அடுத்தவன் காபிக்கு என்ன செய்வான் அவன் எங்கே போய் காபி குடிப்பான் என்று அடுத்தவனுக்காகக் கவலைப்படும் நிலையையும் இவர் கவிதைகளில் காணலாம். உறவுகளையும் நட்புகளையும் கொண்டாட முடியாத ஏக்கத்தையும் காப்பி அருந்தும் போது அவர் உணர்கின்ற நிலையைப் பார்க்கலாம். தனக்குத் தேநீர் குடிக்க வேண்டும் என்ற ஓர் உந்துதல் இல்லாவிட்டாலும்கூட நண்பர்களுக்காக அவர்களின் வேண்டுகோளுக்காக காப்பி அருந்துகின்ற பழக்கம் இருந்து வருவதை அவரது கவிதைகளில் காணலாம். இது நட்புக்கு வழங்கும் கௌரவம் ஆகும்.

 "முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
 நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்"
 என்ற இலக்கிய வரிகளை நினைவூட்டும் வகையில் விரும்பாத நேரத்திலும் நண்பர்களின் விருப்பத்திற்காக தேநீரும் காபியும் குடிக்கும் மரபு இருப்பதை அறியலாம். 

பூமர நிழல்  என்ற கவிதைத் தொகுதியில், 
"தேநீர் கூட
நண்பர்களின் வற்புறுத்தலுக்காக 
விரும்புவதில்லை எனினும்
தருணங்களைக் கருதி அருந்துவது தப்பாது" 
என்கிறார்.

பல்வேறு சாதி மற்றும் தொழில் செய்யும் குடும்பங்களில் பிறந்தவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து தேநீர் பருகும் சூழ்நிலையை ஏற்படுத்தும் போது நண்பர்கள் சாதி, தொழில் வேறுபாடுகளை மறந்து நட்பு என்ற ஓர் அன்புத் தளத்தில் இணைகின்றனர். அவர்களை அங்கு இணைக்க தேநீர் ஒரு கருவியாகச்  செயல்படுகிறது. எனவே

"இந்தத் தேநீர்
சில கோடுகளையாவது
அழிக்கிறது" 
என்று நுட்பமாக எடுத்துரைக்கிறார்.

"எனக்கும் இன்னொரு
வெல்லம் போட்ட தேநீர் சொல்லு" 
என்று கவிஞர் கவிதையை முடிக்கும்போது  'கோடுகளை அழித்த' மன நிறைவு தொனிக்கிறது. 

தேநீர் குடிப்பதற்காக அனைவரையும் அழைக்கின்ற பாங்கும் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தெருவைச் சேர்ந்தவர்கள் என்று சுட்டும் போது அவர்களுடைய அவர்களுடைய சாதி மற்றும் தொழில் வேறுபாடுகள் அதில் நுட்பமாகக் குறிக்கப்படுவதும்  உணர்ந்து இன்புறத்தக்கது. இதுபோன்ற பாகுபாடுகளைத் தவிர்க்க தேநீர் விருந்து உதவும் என்ற நம்பிக்கையோடு கவிஞர் கவிதையைப்  படைத்திருக்கிறார். 


2. காதலின் அழகு:
காதலின் அழகை மேம்படுத்தவும்  காதல் உணர்வுகளின் ஆழத்தையும் அழுத்தத்தையும் புலப்படுத்தவும் காப்பி காதலர்களின் ஓர் அங்கமாக விளங்குகின்றது. நுண்கலை மருத்துவன் என்ற கவிதைத் தொகுதியில்,
"நீண்ட 
காலத்திற்குப் பிறகு 
ஒரு பனிக் காலத்தில் 
நாம் சந்தித்தபோது 
அவசரம் கருதி உடனே 
பிரிந்தோம் 
அன்று மாலையில் 
நாம் 
அருந்த வேண்டிய சர்க்கரை இல்லாத 
காபி இன்னும் மீதமிருக்கிறது
 எப்போது வரும் 
அந்த மாலை 
அதே மாலை
பச்சையிலைத் தேநீருடன்"
என்ற கவிதை காதலி அருகில் இருக்க அவளோடு  மனநிறைவாக உரையாட முடியாத சூழ்நிலையில் பிரிய வேண்டிய வேளையில் குடித்து முடிக்கப்படாத காப்பி ஒரு குறியீடாகக் காட்டப்படுகின்றது. மீண்டும் அந்த மாலைப் பொழுதை எதிர்பார்க்கும் மனம் சர்க்கரை இல்லாத காப்பி பச்சையிலைத் தேநீராக மாறி இருப்பதையும் உணரலாம் 

காதலியோடு குடித்து முடிக்காத காப்பிக்காகக் கவலைப்பட்டு எழுதிய கவிதையைப்  போலவே இன்னொரு கவிதை காதலனைப் பற்றி அமைந்துள்ளது.  தேநீர் பருகும்போது கனவில் நுழையும் காதலனைக் குறிப்பிடும் தொடரும் என்ற கவிதை, 
"அரைகுவளை
 பச்சையிலைத் தேநீர் 
அருந்திய சில நிமிடங்களில் கனவில் நுழைகிறான் 
கையில் 
பீங்கான் கோப்பையுடன்" 
ஒரு காதலி தேநீர் அருந்தத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அவளுடைய காதலனும் கையில் தேநீர்க் கோப்பையுடன் அவள் கனவில் நுழைகிறான். ஒருவர் தேநீர் அருந்தும் போது கனவில் இன்னொருவரும் இணைந்து கொள்வது காதலின் சிறப்பியல்பாகும். தேநீர் காதலையும் ஊற்றெடுக்கச் செய்யும் சுவை நீராக விளங்குவதை இக்கவிதையில் காணலாம்.

3. வேடிக்கை: 
தூறல் மழை பெய்யும் நேரங்களில் தேநீர்க் கடையில் நின்று காப்பியோ தேநீரோ குடித்துக்கொண்டு வேடிக்கை பார்க்கும் வேளைகளில் மழையின் அழகை ரசிப்பதும் அங்கு வரும் மனிதர்களின் நடவடிக்கைகளைக் கவனிப்பதும் இனிய அனுபவம் ஆகும்.  கவிஞர் முத்தமிழ் விரும்பி இவ் அனுபவத்தைக் கவிதைகளாகப் புனைந்துள்ளார். அவற்றில் ஒன்று எதிர்ப்பு என்ற கவிதையாகும்.

"காத்திருப்பின் சுவரெங்கும் 
பிளாஸ்டிக் இலைகள் படர்ந்திருக்க 
இலை திணற வெள்ளாடாய்
காலம் 
சிறு தூறல் விழும் இக்கணத்தில் 
வரசித்தி விநாயகர் கோவில் 
அரசமரத்தடிக் கடையில் 
இனிப்பில்லாத தேநீர்ச் சாறு குடிக்கும் 
என் முகத்தில் அவசரமாய் வந்து புகைக்கிறார்"

யாரோ ஒருவர் தான் மழையின் அழகை ரசிக்கும் வேளையில் வேகவேகமாக வந்து இவர் இருப்பதை உணராதவர்  போல முகத்தில் புகையை ஊதி விட்டுச் செல்கிறார்.  இவர் முகத்தில் பட்ட புகை மழைத் தூறலின் அழகையும் ரசிக்க விடாமல் பருகும் தேநீர் சாற்றையும் ருசிக்க விடாமல் இரண்டுக்கும் இடையூறாக அமைந்து விட்டது. 

உள்ளங்கை என்ற கவிதை கவிஞர் பயன் தரு மழையையும்  குளிர் தரு காற்றையும் தேநீர் குடித்தபடி  ஒரு சேர அனுபவித்துப் பாடியதாகும்.  ஏரியின் அழகைக் கண்டு ரசிக்கும் வேலையில் தென்மேற்கு பருவக்காற்று சில்லென்று வீசும் பொழுதில் ஒரு தேநீர்க்  கடையில் தேநீர் குடித்த படி அந்த அழகை உள்வாங்கித் திளைக்கும் அனுபவத்தைக் கவிதையாகப் படைத்துள்ளார்.  

"துறையூர் அண்ணா பேருந்து நிலையத்தில் 
தேநீர் 
குடித்தபடி 
எதிரே நீர் தளும்பும் 
ஏரியைப் பார்க்கிறேன்.

செங்கொன்றைப் பூக்கள் 
ஆனி மாதம் 
நீர்ப்பரப்பில் 
அலையாடுகின்றன. 

தென்மேற்குப் பருவக்காற்று கொல்லிமலை 
புளியஞ்சோலை பச்சைமலை தொட்டுத் 
தவழுகிறது. 

உள்ளங்கையில்  மழை பெய்ததால் ஏரி நிறைந்து காணப்படுகிறது. ஏரிக்கரை ஓரத்தில் இருக்கும் செங்கொன்றை மரங்களின் பூக்கள் நீர்ப்பரப்பின் அலைகள் மீது விழுந்து அலையலையாக அசைகின்றன. அத்தருணத்தில் தென்மேற்குப் பருவக்காற்று கொல்லி மலை, பச்சை மலை வழியாகத் தவழ்ந்து வந்து தேநீர் அருந்தும் கவிஞரின் உள்ளங்கையைத் தொட்டு சிலிர்ப்பூட்டுகிறது. 

4. ஒரு பொருள் ஒரு இடம் இரு கவிதை:
ஒரு நீண்ட இரவு ரயிலில் பயணம் முடித்து அதிகாலையில் தமிழகத்தின் தலைநகரில் காலடி எடுத்து வைத்து  அங்குள்ள ஒரு தேநீர்க் கடையில் தேநீர் அருந்தியபடி சென்னை மாநகரின் அதிகாலைப் பொழுதை அதன் குறைந்த பரபரப்பை ரசித்து எழுதப்பட்ட கவிதை விடிந்தது கண்டேன்.  இதே இடத்தில் மீண்டும் ஏழு மாதங்களுக்குப் பிறகு தேநீர் பருகும் போது அங்குக் காணப்படும் மாற்றங்களைத் திரும்ப எழுதிய கவிதை   விவரிக்கின்றது.  இவ்வாறு ஒரே இடம் ஒரே சூழ்நிலை தேநீர் பருகும் அனுபவம் ஆனால் அங்கே இருக்கும் மனிதர்கள் மற்றும் செயல்பாடுகளில் காணப்படும் மாற்றங்கள் ஆகியவை விடிந்தது கண்டேன் என்றும் பின்பு திரும்ப எழுதிய கவிதை என்றும் இரண்டு கவிதைகளாக வடிக்கப்பட்டுள்ளன.

விடிந்தது கண்டேன்  கவிதையில் கவிஞர் தேநீர் பருகும்போது அந்தக் கென்னத் சந்தின்  பெயர்க் காரணத்தை அறிய விரும்புகிறார்.  ஆனால் அந்த பெயரைத் தவறாகப் புரிந்து கொண்ட ஒரு பெரியவர் தன் பெயர் தான் அது என்று சொல்லி தனது ஊரின் பெயரையும் சேர்த்துச் சொல்கிறார். தேநீர் குடித்த பிறகு  சிறிது தூரம் நடந்து வேனல்ஸ் சாலை சென்ற கவிஞர் மீண்டும் ஒரு கடையில் தேநீர் பருகுவதோடு கவிதை நிறைவு பெறுகிறது. அடுத்தடுத்து தேநீர் பருகும் இவரது பழக்கத்தை இன்னும் ஒரு சில கவிதைகளிலும் பதிவு செய்துள்ளார். 

விடிந்தது கண்டேன் 
எழும்பூரில் 
தொடர்வண்டி நிலையத்திலிருந்து 
வெளியே வந்து 
இம்பாலா விடுதியில்
 பச்சை தேநீர் அருந்த 
மார்கழியின் முற்பகுதிப் 
பனிமூட்டம் கலைகின்றது 

தொடர்வண்டி நிலையத்தை விட்டு வெளியே வந்து பச்சை இலை தேநீர் அருந்தும் வேளையில் அது வரை இருள் படர்ந்திருந்த அதிகாலைப் பொழுது மெல்லமெல்ல தன் இருட்டை விலக்கி அருணோதயத்தைக் காண்கிறது. பனிமூட்டமும் விலகத் தொடங்குகிறது. அப்போது அவர் தேநீர் அருந்தியபடி கென்னத் விடுதியில் கென்னத் யார் என்று விசாரிக்கிறார். அங்கு படுத்திருந்த பெரியவர் என் பெயர் கென்னடி என்றார். என் ஊர் மம்சாபுரம் என்றார்.  கவிஞர் அங்கிருந்து அகன்று வேனல்ஸ் சாலையில் திரும்பித் திரும்பவும் தேநீர் வருந்துகிறார். இப்போது நன்றாக விடிந்து விட்டது. 
புதிய மனிதர்கள் நடமாடத் தொடங்கிவிட்டனர்

திரும்ப எழுதிய கவிதையில்   ரயிலை விட்டு இறங்கியதும் எழும்பூரில் புதிதாக அழகுமுத்துக்கோன் என்ற விடுதலை வீரனுக்கு ஒருசிலை எழுப்பப்பட்டு இருப்பதைக் கவிஞர் காண்கின்றார். பிறகு சென்னையில் உள்ள குதிரைகளுக்குத் தீவனமாக இலை தழைகள் வெளியூர்களிலிருந்து பேருந்தில் கொண்டு வரப்பட்டு அங்கு இறக்கி வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறார். உள்ளூர்க்காரர்கள் வந்து உடனடியாக வாங்கிச் செல்கின்றனர். நோய்த்தொற்று காலத்தில் பேருந்துகள் ஓட்டம் இல்லாத போது பாவம் இந்த குதிரைகள் எதைத் தின்று இருக்கும் என்று குதிரைகளுக்காகக் கவலைப்படுகிறார்.  கிராமங்களின் தோட்டத்து மூலிகைகள் காய்ந்துபோய் இருக்குமே அந்த விவசாயிகளுக்கு அது பேரிழப்பை ஏற்படுத்தி இருக்குமே என்று விவசாயிகளுக்காக வருந்துகின்றார். அதன்பிறகு இங்கு வேலை செய்யும் முனியப்பன் எங்கே போய் தேநீர் குடித்திருப்பான். தேநீர்க் கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டிருந்த வேளையில் அவன் தேநீருக்கு என்ன செய்திருப்பான் என்று அவனை நினைத்தும் கவலைப் படுகிறார். தேநீர் குடித்த படி பல ஊர்க்காரர்கள் அங்கு  கதைகள் பேசுவதைக் கவனிக்கிறார்.  நிறைவாக இந்த ஆண்டு நல்ல மழை பெய்யட்டும் நான் மீண்டும் இந்த ஊருக்கு வரும்போது எல்லோரும் மகிழ்ச்சியாக ஊர்க் கதைகளைப் பேசிக்கொண்டு இருக்க வேண்டும் அப்போது நானும் வருவேன் காலை தேநீருடன் உங்கள் கதைகளைக் கேட்க என்று தன் மனதுக்குள் சொல்லிக் கொள்கிறார்.

இவ்வாறாக இந்த திரும்ப எழுதிய கவிதை பல நிகழ்வுகளை எதிர்பார்த்துப் பல எண்ணங்களை விவரிப்பதாக அமைகின்றது.  எழும்பூரில் எழுந்துள்ள 
தமிழக விடுதலை வீரன் ஒருவனது இடது கையில் கேடயம் இருக்கிறது.

 வேனல்ஸ் சாலையில் நடைமேடையில் 
புத்தம்புதுக் கட்டுகளாக பசுமை மாறா 
தழைகளும் இலைகளும் 
நடைப்பயிற்சி செய்வார் ஒதுங்கிப் போவர்
 இது என்னவாக இருக்கும்?

இராமநாதபுரம் 
சிவகங்கை 
திருவாடானைப் பகுதியிலிருந்து 
தினமும் 
ஆம்னி பஸ்களில் இருந்து இறக்கப் படுகின்றன
இருபது நிமிடங்களில் 
இடம் காலி 

ஏதெனக்கேட்டான் கவிஞன் 
குதிரைகளுக்குத் தீவனம் மூலிகைச் செடிகள்
என்றார் முனியப்பன்
கோவிட்-19 காலத்து 
ஏழு மாதங்களில் 
பெருநகரத்துக் குதிரைகள் 
எதைத் தின்றன 

தோட்டத்து மூலிகை காய்ந்திருக்கலாம் 
தென் மாவட்ட வேளாண்மை 
என்னவாய் இருந்திருக்கும்
முனியப்பன் எங்கே வேலை செய்து 
தேநீர் குடித்திருப்பார்?

பெருநகரத்துச் சாலைகள் நடமாட்டம் 
குதிரையோட்டம் 
யாதென நினைத்தல் 
இனி வேண்டாம் 
பசுமை படரட்டும் 

ஸ்ரீராம் விடுதியருகே 
மக்கள் குழுவாய்த் 
தேநீர் அருந்தும் பொழுதில் 
சொந்த ஊர் கதையாடட்டும்

கிபி 2021 நலமாய்க்
கிடைக்க 
இந்த ஐப்பசி மாதம் 
வடகிழக்குப் பருவமழை சேதாரமின்றிச்
சரியாய்ப் பொழியட்டும்
நண்பா 

நானும் வருவேன் 
காலைத் தேநீருடன் 
கதைகள் கேட்க 

திரும்ப எழுதிய கவிதை முதலில் எழுதப்பட்ட கவிதையில் இரண்டாவது தேநீர் பருகிய வேனல்ஸ் சாலையிலிருந்து தொடங்குகிறது. அந்தச் சாலையில் குவிக்கப்பட்ட குதிரை தீவனத்தை பற்றிய சிந்தனையோடு தொடர்ந்து தொடங்கி நாடு செழிக்க வேண்டும், நல்ல மழை பெய்ய வேண்டும், நண்பா என்ற நல்லெண்ண வெளிப்பாட்டுடன்   கவிதை நிறைவு பெறுகிறது.

தேநீர்  என்பது உற்சாகத்துக்குப் பருகப்படும் வெறும் பருகுநீர் மட்டும் அல்ல.  ஒரு சமூக அலசலை உள்ளுக்குள்ளே தூண்டுகின்ற ஊக்க நீராகவும் அமைகின்றது. இவ்வாறான தேநீர் அல்லது காபி பற்றிய கவிதைகளில் பச்சை இலை தேநீர், சர்க்கரை இல்லாத தேநீர் காபி போன்றவை  அடிக்கடி வருகிறது. காபி அல்லது தேநீரில் பால் அல்லது சர்க்கரை சேர்க்கப்பட்டதாக குறிப்பு காணப்படவில்லை. ஒரு கவிதையில் மட்டும் வெல்லம் குறிப்பிடப்பட்டுள்ளது.  பச்சை இலைத் தேநீரும் சர்க்கரை இல்லாத தேநீரும் மேட்டுக்குடியினரின் பருகு நீராக விளங்குவது இவண் குறிப்பிடத்தக்கது.  

பாலுக்கு வழியற்று கடுங்காப்பி குடிக்கும் ஏழைகளின் காபி அனுபவம் எதுவும் எந்தக் கவிதையிலும் காணப்படவில்லை.  ஆரோக்கிய சிந்தனையுடன் பாலில்லாத சர்க்கரை சேர்க்காத மேட்டுக்குடி காப்பியும் தேநீரும் தான் கவிதைகளில் இடம் பெற்றுள்ளது. இனிப்புக்  காப்பியை விட  கசப்புக் காப்பி, கசப்பு தேநீர் அதிகம்  இடம்பெறுவதைக் காண முடிகிறது.  கவிஞரின் பிற கவிதைகளிலும் ஆதொண்டங்காயின் கசப்பு சுவை,  சோற்றுக் கற்றாழையின் கசப்புக்  கூழ்மம் என கசப்பின் சுவை ரசிக்கப் படுவதைக் காணலாம். 

ஆங்கிலேயர்கள் அல்லது வெளிநாட்டவர் காபி மோச்சா, கப்புச்சினோ, எக்ஸ்பிரசோ என்று பலவகையான சுவையில் காபி குடிக்கின்றனர். தமிழ்நாட்டில் காப்பி பார்ப்பனர்களுக்கு என்று தனிச் சுவையில் தயாரிக்கப்படுவதாக தொன்றுதொட்டு ஒரு கருத்து நிலவுகின்றது  அதற்கு கும்பகோணம் டிகிரி காபி என்ற பெயரும் சூட்டி உள்ளனர். அது கசப்புச் சுவை மிகுந்தது. இங்கு  காபி வசதியானவர்களின் பருகுநீராகவும் தேநீர் என்பது உழைப்பாளர்களின் பசியைப் போக்கும் உணவாகவும் கருதப்படுகின்ற நிலை உள்ளது. இந்த இரண்டுக்குமான வேறுபாடு எதுவும் முத்தமிழ் விரும்பியின் கவிதைகளில் காணப்படவில்லை.  சில கவிதைகளில் காபி என்று என்று குறிப்பிட்டாலும் அதுவும் சர்க்கரை இல்லாத மேட்டுக்குடிக் காப்பியைத் தான் குறிக்கிறது.  அல்லது மேட்டுக்குடியினரின் பச்சை இலைத்  தேநீர்  இடம் பெற்றுள்ளது.   கவிஞர் மாநிலத்தின் ஓர் அரசு உயர் அதிகாரி ஆவார். அவர் கவிதைகளில் எங்கும் ஏழைகளின் தேநீர் பற்றிய தகவல்கள் எதுவும் இடம்பெறவில்லை. பணக்காரர்களின் பச்சைத் தேநீர் இடம்பெற்றுள்ளது.

காதலர்கள் பருகும் காபி அல்லது தேநீர் அனுபவத்தை விட நட்பு மற்றும் சமூக அக்கறை சார்ந்த காப்பி பருகும் அனுபவம் கூடுதலாகக் கவிதையில் இடம் பெற்றுள்ளது.  காவிரி ஆற்றங்கரையின் நெல்  விவசாயி என்பதால் பருவ மழை, வேளாண்மை, ஊர்க் கதைகள் போன்ற கிராமத்துத் தகவல்கள் கவிதைகளின் உள்ளடக்கக் கூறுகளாக விளங்குகின்றன.

 கவிதையின் சரளமான நடையும் போக்கும் வாசிப்பு அனுபவத்தை சுவைமிக்கதாக ஆக்குகிறது. எதிர்மறைச் சொற்கள், வன்மம், வெறுப்பு, வசை  போன்றவை இல்லை.  அன்பும் நட்பும் சமூக அக்கறையும் காதலும் ஏழைகளின் பால் இரக்கமும் மழை, காற்று போன்ற இயற்கை நேசமும் நிறைந்திருப்பதால் கவிதைகள் சிறப்பு நிலை பெறுகின்றன. 





Thursday, April 7, 2022

இன்று...



-- ருத்ரா இ. பரமசிவன்




இன்று நாள் நல்ல நாள்.
நேற்று அந்த தந்திக்கம்பத்து சிட்டுக்குருவி
ஜோஸ்யம் சொல்லிவிட்டது.
மனசுக்குள் இந்த இன்பச்சுமையை
திணித்து திணித்து சுமையாக்கி
சுமப்போம் வாருங்கள்.
எல்லா நிகழ்வுகளுக்கும்
நாம் "சந்தோஷம்" என்றே பெயர் சூட்டுவோம்.
பாருங்கள்
நம் பாரங்கள் இலேசாகி விட்டன.

இன்றுகளின் 
முகமூடிகள் தான்
நேற்றுகளும் நாளைகளும்!
இப்போது
அந்த சுட்டெரிக்கும் கண்ணீர்த்துளிகள் 
கூட‌
நம் முகத்தின் எதிரே படலம் காட்டும்
மனத்திரையில்
நிறப்பிரிகை செய்து காட்டுகிறது.
புற ஊதாக்கதிர்களும் அகச்சிவப்புக்கிரணங்களும்
"சந்தோஷ"ப்பிசிறுகளை
மாலையாக்கி விட்டது.

அழுவதும் ஆனந்தம்.
ஆனந்தமும் அழுகை.
தீம் திரிகிட..தீம் திரிகிட..
அக்கினிக்குஞ்சுகளும்
அல்வா இனிப்புகள்.
சாம்பலாய் விழுவதிலும்
சண்பக‌ப்பூ பனித்துளியை 
சுமந்து நிற்கிறது.
விஞ்ஞானிகளின் "க்ராண்ட் யூனிஃபிகேஷன்"
இந்த எல்லா பிரபஞ்சங்களையும்
க்ரஷ் செய்து அதோ கோப்பையில் நீட்டுகிறது.
அந்த ஜனன மரண ரசம்
பஜகோவிந்த ரசமாய் மழைபெய்கிறது.
ஏமாந்து கொள்வதே பரம சுகம்.
அதுவே எல்லாவற்றையும் நனைக்கட்டும்.
அறியாமை அறிவை விழுங்கித்தீர்க்கட்டும்.
சுபம்..சுபம்..சுபம்!




விளையாடிய தமிழ்ச்சமூகம் - நூல் மதிப்புரை

விளையாடிய தமிழ்ச்சமூகம் - நூல் மதிப்புரை

-- முனைவர் வா.நேரு



விளையாட்டு என்றாலே நம் கண் முன்னால் விரிவது நம் இளமைக்காலம்தான். கிராமங்களில் காடு, மேடுகளில் ஓடியதும், ஆடியதும், தொட்டுப் பிடித்து விளையாடியதும், தொடர்ந்து ஓடி, ஓடித் தொட்டுப் பிடித்ததும் என நம் மனக்கண் முன்னால் விரியும் காட்சிகள் பல பல. 40, 50 ஆண்டுகளுக்கு முன்னால் சிறுவர்,சிறுமிகளால் விளையாட்டுக்களமாய் இருந்த தெருக்கள் இன்று நகரம் என்றாலும், கிராமம் என்றாலும் அமைதியாக இருக்கும் நிலையில், ஒரு கல்லூரிப் பேராசிரியர் ஆய்வுக்காக அந்த விளையாட்டுகளை ஆய்வுக் களமாக எடுத்துக்கொண்டு, கள ஆய்வாக கிராமங்களுக்குச்சென்று, அங்கு விளையாடும் பிள்ளைகளைக் கண்டு, அதனைப் போல பிள்ளைகளை விளையாடச்சொல்லி அவற்றை எல்லாம் ஆவணப்படுத்தி ஒரு புத்தகமாகக் கொடுத்திருக்கின்றார், அந்தப் புத்தகத்தின் தலைப்பு 'விளையாடிய தமிழ்ச்சமூகம்'.  அட்டையிலேயே தலைப்பிற்குக் கீழ் 'விளையாட்டில் கட்டமைக்கப்பட்ட தமிழ்ச்சமூக உறவுகள் குறித்த ஓர் அலசல் ' என்று கொடுத்திருக்கிறார்கள்.


நூல் ஆசிரியர் பற்றி பின் அட்டையில் குறிப்பிட்டுள்ளார்கள். முனைவர் ஆ.பாப்பா அவர்கள் மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி, தமிழ் உயராய்வு நடுவத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். 'நாட்டுப்புற விளையாட்டுக்கள்: சமூகவியல் உளவியல் பகுப்பாய்வு'  என்னும் தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். விளையாட்டுக்கள் பற்றியும் தமிழ் இலக்கியங்கள் பற்றியும் முப்பத்தைந்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதிப் பல நூல்களில் வெளியிட்டுள்ளார் போன்ற பல தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

"தமிழ் மக்களின் வாழ்வியல் கூறுகளில் விளையாட்டு மரபுகள் பண்பாட்டு விழுமியங்களாக அமைகின்றன. இதனை வலியுறுத்தும் வகையில் தமிழ் நாட்டின் நிலப்பரப்பில் தற்சமயம் மேற்கொள்ளப்படுகின்ற அகழாய்வுகளில் விளையாட்டுப்பொருள்கள் கண்டுபிடிக்கப்படுகின்ற செய்திகள் வெளிப்படுத்தியுள்ளன.  இதற்குச்சான்றாக அண்மைய காலக் கொடுமணல், கீழடி, சிவகளை போன்ற பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளைக் கூறலாம்." என்று குறிப்பிட்டு தமிழ்ச்சமூகம் 3000 ஆண்டுகளாக விளையாடிய சமூகம் என்பதனை நினைவுபடுத்திப் பதிப்புரையை தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் முனைவர் க.சுபாஷிணி அவர்கள் கொடுத்துள்ளார்.

இந்த நூல்  நான்கு  இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் இயல் 'நாட்டுப்புற விளையாட்டுக்களும் சமூகவயமாதலும்' என்னும் தலைப்பில் அமைந்துள்ளது.'சமூகவயமாதல்   என்கிற சொல் கற்றுக்கொள்ளுதல் அதாவது சமூகச்செயல்பாடுகளை, சட்ட திட்டங்களைக் கற்றுக்கொள்ளுதல் என்கிற பொருளைக் குறிக்கிறது ' என்று குறிப்பிட்டிருக்கிறார் நூலாசிரியர். சமூகவயமாதல் இல்லை என்றால் மனிதனும் விலங்காகவே வாழ்வான் என்பதைச்சொன்ன மேனாட்டு அறிஞர்களின் மேற்கோள்களை எடுத்துக்காட்டுகிறார்.

விளையாட்டினால் குழந்தைகளுடைய திறன் வளர்வதையும், புதுமை உருவாக்கும் மனப்பான்மை தோன்றுவதையும், பிறரின் தந்திரங்களை அறிவது மட்டுமல்லாது தானே தந்திரங்களை உருவாக்கக் கற்றுக்கொள்வதும் உண்டாகிறது என்று குறிப்பிடுகிறார். சிறு குழந்தையாக இருக்கும்பொழுதே விளையாடுவதால்,விளையாட்டில் இருக்கும் சட்ட, திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு விளையாடுவதால் பின்னால் சமூக கட்டுப்பாடுகளுக்கும் கட்டுப்பட்டு நடக்கும் மனிதர்களாக உருவாகிறார்கள்.  விளையாட்டில் ஒரு தலைவனுடைய கட்டளைக்கு அடிபணிந்து நடக்கும் அவர்கள் பின்னாட்களில் தலைமைக்குக் கட்டுப்பட்டு  நடப்பது என்பதைக் கற்றுக்கொள்கிறார்கள். விளையாடுவதின் மூலமாக குழந்தைகள் சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், உதவி மனப்பான்மை, கவனமாக இருத்தல், சுறுசுறுப்பு, தன்னம்பிக்கை வளர்தல் போன்ற பல குணங்களை வளர்த்துக் கொள்கிறார்கள்.  சமூகம், அரசியல், பண்பாடு, உறவு போன்ற பலவற்றைப் புரிந்து கொள்வதற்கு உதவும் ஒரு கருவியாக விளையாட்டு இருக்கிறது என்று குறிப்பிடுகிறார்.

இரண்டாவது இயலில் 'நாட்டுப்புற விளையாட்டுக்களும் பாலினமும் ' என்னும் தலைப்பில் ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கும் நூலாசிரியர் நிறைய கள ஆய்வின் வழியாகக் கண்டறிந்ததை ஆவணப்படுத்தியுள்ளார்.  பாலினப்பாகுபாடு என்பது குழந்தைப் பருவத்திலிருந்தே தமிழ்ச்சமூகத்தில் காட்டப்படுகிறது என்பதனை பட்டியலிடுகிறார். வாய்மொழி இலக்கியங்களில் ஆண்களை விடப் பெண்களின் பங்கே அதிகம் எனக்குறிப்பிடுகிறார்.  "பொதுவாக நமது சமூகத்தில் ஓர் ஆண் குழந்தையின் பிறப்பைவிட ஒரு பெண் குழந்தையின் பிறப்பு சிறப்பற்றதாகக் கருதப்படுகிறது.  இதுவே பாலினப் பாகுபாட்டிற்கு அடிப்படையாகும்," என்று குறிப்பிடுகின்ற நூலாசிரியர் பெண் குழந்தை தாலாட்டிற்கும் ஆண் குழந்தை தாலாட்டிற்கும் உள்ள வேறுபாட்டை ஆதாரங்களோடு சுட்டிக்காட்டுகிறார். இந்தப் பாலினப் பாகுபாடு தொட்டிலை ஆட்டும்போதே ஆரம்பிக்கிறது என்பதையும், ஆண் எப்படி உயர்ந்த நிலையில் வரவேண்டும் என்பதையும், பெண் எப்படி அடுப்பங்கரைக்கு மட்டும் உரியவள் என்பதையும் தாலாட்டுப் பாடல்களின் உட்பொருள் உணர்த்துவதைச்சொல்கிறார்.

நாட்டுப்புற விளையாட்டுகளில் பாலினக்கூறுகள் வெளிப்படையான நிலை,உள்ளார்ந்த நிலை என்று இரண்டு நிலைகளில் இருப்பதைக் கூறுகின்றார். விளையாட்டை விளையாட்டாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதைச் சுட்டும் விதமாக சிறுவயது விளையாட்டிலேயே, விளையாடும் விளையாட்டுப் பெயர்களிலேயே பாலினப்பாகுபாடு இருப்பதைக் காட்டுகிறார்.  விளையாட்டுப் பொருள்கள், விளையாட்டின் அமைப்பு, விளையாடும் நேரம், இடம்,விளையாட்டில் பயன்படுத்தும் சொற்கள் என நூலாசிரியர் சுட்டிக்காட்டுவதை யோசிக்கும்போது பாலினப் பாகுபாடு விதைக்கப்படும் இடம் எது என்பது தெளிவாகத் தெரிகிறது. "உடல் திறன் மற்றும் அறிவுத்திறன் கொண்ட வன்மை விளையாட்டுகள் சிறுவனுக்குரியதாகவும் பொழுது போக்கு விளையாட்டுகள் சிறுமிக்குரியதாகவும் நம் சமூகத்தில் பாகுபடுத்தப்பட்டிருக்கின்றன" என்று குறிப்பிடும் நூல் ஆசிரியர் சில பயமுறுத்தல்களையும் ஆவணப்படுத்தியுள்ளார்.
 
"இருபாலரும் இணைந்து விளையாடுவதற்குச் சமூகம் சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. சிறுமிகள் பையன்களோடு சேர்ந்து விளையாடக்கூடாது.  குறிப்பிட்ட வயதிற்கு(எட்டு வயதிற்கு) மேல் சிறுமிகள் பையன்களோடு சேர்ந்து விளையாடினால் சிறுமிகளின் மூக்கு விழுந்துவிடும், காது அறுந்து போகும், வயிற்றில் கை முளைத்துவிடும்" என்று ஒரு பெண் (தாயம்மாள்,48,மதுரை) சொன்னதைப் பதிவு செய்து எப்படிப் பெண் குழந்தைகள் பயமுறுத்தப்படுகிறார்கள் என்பதைச்சுட்டியுள்ளார். பிராய்டு அவர்களின் மேற்கோள்களோடு விவரிக்கப்பட்டிருக்கும் 'கற்பனைத் தோழமை ' என்னும் பகுதியை இன்னும் விரிவாக ஒரு தனிப்புத்தகமாகவே நூல் ஆசிரியர் எழுதலாம்.  அவ்வளவு ஆர்வம் ஊட்டும் பகுதியாக அந்தப் பகுதி உளவியலோடு சேர்த்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

"நாட்டுப்புற விளையாட்டுக்களின் இன்றைய நிலை" என்பது அடுத்த இயல்.  கடந்த 50,60  ஆண்டுகளில் நடந்த மாற்றங்களை.சமூகத்தில் நடந்த மாற்றங்கள்,  அதனால் விளைந்த விளைவுகளின்  விவரிப்பாக இந்த இயல்...  அடுக்குமாடிக் குடியிருப்பில் குழந்தைகள் விளையாட இடமெங்கே? அடுத்தடுத்து டீயுசனுகளுக்குப் பறக்கும் குழந்தைகளுக்குத் தரையில் விளையாட நேரமிருக்கிறதா?  இன்றைக்கெல்லாம் தனிக்குடித்தனங்கள் மட்டுமே... நாமிருவர் நமக்கொருவர் என்றாகிவிட்டது.  ஒற்றைக்குழந்தை யாரோடு விளையாடும்? வேலைக்கு ஓடும் பெற்றோர்களுக்கு பிள்ளைகளைக் கவனிக்க நேரமிருக்கிறதா? கூட்டுக்குடித்தனங்கள் சிதைந்தது குழந்தைகளின் விளையாட்டிற்குப் பேரிடர் போன்ற பல சிக்கல்களைப் பேராசிரியர் பாப்பா அவர்கள் போகிறபோக்கில் சுட்டிக்காட்டுகிறார்.

இன்றைய குழந்தைகள் இயந்திரத்தனமாக வாழப் பழக்கப்படுத்தப்படுகிறார்கள். அதனால் இயந்திரங்களோடு விளையாடுவதையே விரும்புகிறார்கள் என்று சொல்கின்றார்.  கணினி, இணையம், வாட்சப், முக நூல், வீடியோகேம் என விரிந்திருக்கும் இணைய உலகம் ஒரு புதிய பாதையைக் காட்டினாலும் இதனால் விளைந்த ஓர் இழப்பை விவரிக்கும் இயலாக இந்த இயல் உள்ளது எனலாம்.  "இன்றைய தலைமுறைக்கு உடல் அசைவும் உடல் உழைப்பும் குறைவு.  இவர்களது செயல்கள் அனைத்தும் லாப/நட்டக் கணக்கை அடிப்படையாகக் கொண்டவை.  அதனால் தேவையில்லாமல் உடல் அசைவு மிகுந்த விளையாட்டுக்களை விளையாட இவர்கள் தயாராக இல்லை.  மேலும் கேட்புத்திறன்(Auditory) ,  பார்க்கும் திறன்(Visual) என்று பார்த்தால் இவர்கள் கேட்கும் திறனைவிடப் பார்க்கும் திறனையே அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்.  அதனால் மற்றவர்களோடு பேசுவதும் அவர்கள் சொல்வதைக் கேட்பதும் குறைவு.  தனி நபராகவே வாழப்பழகிக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதனால் குழு விளையாட்டுத் தன்மை அதிகமாகக் கொண்ட நாட்டுப்புற விளையாட்டுக்களை விளையாட இவர்கள் விரும்புவதில்லை " என்று நூலாசிரியர் தன் கருத்தாகக் கூறியுள்ளார்.  இது விவாதத்துக்குரியது.  இன்றைய தலைமுறை இப்படி ஆனதற்கு சென்ற தலைமுறைதானே காரணம்.

இந்த நூலின் மிகச்சிறப்பாக நான் கருதுவது 'நாட்டுப்புற விளையாட்டுகள்" என்னும் பகுதி.  முழுக்க முழுக்க, களத்தில், கிராமங்களுக்குச்சென்று, நாட்டுப்புற விளையாட்டுக்களை விளையாடுபவர்களிடம் பேட்டி எடுத்து, விளையாடச்சொல்லி, அதனை எப்படி விளையாடுகிறார்கள் என்பதனை ஆவணப்படுத்திக் கொடுத்திருக்கும் பகுதி.   காலஞ்சென்ற தமிழ் அறிஞர் பேரா.தொ.பரமசிவம் அவர்களின் ஆய்வேடான 'அழகர் கோவில்' மிகப்புகழ் பெற்றது.  அதற்கு முதன்மையான காரணம் கள ஆய்வு.   களஆய்வின் அடிப்படையில் அமைந்த தொகுப்பு நூல் அது.  அதைப் போலவே இந்த இயல் களப்பணியால் விளைந்த கனி.  இந்த நூலின் ஆசிரியர் "களப்பணியில் சேகரிக்கப்பட்ட வடிவத்திலேயே அதே மொழி அமைப்புடன் விளையாட்டுகள் பனுவலாகத் தரப்பட்டுள்ளன. இப்பகுதியில் தரப்பட்டுள்ள விளையாட்டுகள் சிறுவர்கள் விளையாடிய விளையாட்டின் அடிப்படையில் அப்படியே தரப்பட்டுள்ளன." என்று குறிப்பிட்டு, களப்பணி அனுபவங்களையும் கொடுத்துள்ளார்.

வண்ணாம்பாறைப்பட்டி என்னும் ஊரில் கள ஆய்வில் கண்ட வெத்தலக்கட்டு பிடியாத விளையாட்டு, வலையபட்டியில் சேகரித்த வெத்தலப்பட்டி வருது விளையாட்டு, தேன்கல்பட்டியில் கண்ட 'ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது விளையாட்டு,  வலையபட்டியில் கண்ட திரிதிரியம்மா திரிதிரி விளையாட்டு,  கச்சைகட்டியில் பார்த்த கிளித்தட்டு விளையாட்டு, புளியங்குளத்தில் சேகரித்த கிச்சு கிச்சு தாம்பாளம் எனப்படும் தில்லி தில்லி பொம்மக்கா விளையாட்டு,  இந்த விளையாட்டில் பயன்படுத்தப்படும் பாட்டு, சின்ன உடைப்பு ஊரில் கண்ட தென்னை மரம் விளையாட்டு கச்சை கட்டியில் கண்ட கொல கொலயா முந்திரிக்கா விளையாட்டு என்பன போன்ற  முப்பத்து மூன்று விளையாட்டுகளைப் பற்றி மிக விரிவாக, ஆவணமாகக் கொடுத்துள்ளார்.  இந்த முப்பத்து மூன்று விளையாட்டுகளையும் ஆவணப்படுத்துவதற்கு உதவிய 91 பேர்களின் பெயர்களை நன்றியோடு ஊர்ப்பெயரோடு சேர்த்துக்கொடுத்திருக்கிறார்.

நூன்முகம் எனத் தலைப்பிட்டு நூல் ஆசிரியர் பாப்பா அவர்கள் தன்னுரையைக் கொடுத்திருக்கிறார்.   அதில் தன்னுடைய பால்ய காலத்தை ஓவியம் போல வடித்திருக்கிறார்." சிறு வயது முதல் வளரிளம் பருவம் வரையிலும் வீட்டினுள் இருந்ததை விடத் தெருவிலும் திறந்த வெளிகளிலும் விளையாடியதே அதிகம்.  வெயிலிலும் பனியிலும் இரவிலும் பகலிலும் கால நேரமின்றித் திரிந்ததும் விளையாடியதும் கொஞ்சங்கூட இப்பொழுது நினைத்துப்பார்த்தாலும் அலுக்கவேயில்லை.   பாகுபாடின்றிப் பையன்களோடு விளையாடிச்சுவரேறிக் குதித்ததே அதிகம்.  சிறுவயதில் படித்ததைவிட விளையாடியதே அதிகம்.  படிக்காமல் விளையாடி வீணாகி விடவில்லை.  அனுபவப் பாடம் அறிய முடிந்தது" என்று குறிப்பிடுகிறார். சமூகத்தை நேசிக்கும் ஒருவராக அன்றைக்கும் இன்றைக்குமான வேறுபாட்டை உணர்ந்து ஆவணப்படுத்தி இருக்கிறார்.

இந்த நூலுக்கு மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி முதல்வர் டாக்டர் கிறிஸ்டியானா சிங் அவர்கள் வாழ்த்துரை அளித்திருக்கிறார். அக்கல்லூரியின் தமிழ் உயராய்வு நடுவத்தின்  தலைவர், பேரா.முனைவர் கவிதாராணி அவர்கள் அணிந்துரை கொடுத்துள்ளார்கள்.  அதில் "திரையில் மட்டுமே விளையாடி மகிழும் இன்றைய இளம் தலைமுறைக்குத் தரையில் விளையாடும் விளையாட்டுக்களின் சிறப்புகளையும் அவற்றின் பன்முகத் தன்மைகளையும் சமூகப்பரிவோடு இந்நூல் பரிந்துரைக்கிறது.மேலும் விளையாட்டு என்றாலே இருவராகவோ அல்லது குழுவாகவோ இணைந்து விளையாடுவது என்கிற நிலை மாறி தானும் தன் கைபேசியும் எனும் ஒற்றைமயமான இன்றைய நிலை குறித்துக் கவலைப்பட வைக்கிறது.   நூலாசிரியர் முனைவர் பாப்பா பூச்சு இல்லாத பேச்சுக்காரர்.  அவ் வெளிப்படத்தன்மையையும் இயல்புத் தன்மையையும் இந்நூலுள் நம்மால் இனங்காண முடிகிறது " என்று குறிப்பிட்டுள்ளார்,  உண்மைதான்.    இன்றைய சமூகச்சூழலை மிக வெளிப்படையாக பேசும் நூலாகவும், நமது தமிழ்ச்சமூக விளையாட்டுக்களை ஆவணப்படுத்தி, நமது அடுத்த தலைமுறையை தரையில் விளையாட வைக்கும் உண்மையான முயற்சியாகவும் இந்த நூல் திகழ்கிறது, வாங்கிப் படிக்கலாம்.  பாதுகாத்து வைத்து நாம் விளையாடிய விளையாட்டுகளை குழந்தைகளுக்குச்சொல்லி மகிழலாம்.  அதன் மூலம் அவர்களையும் தரையில் விளையாடப் பழக்கப்படுத்தலாம்,  ஊக்கப்படுத்தலாம்.


நூல் விவரம்: 
 விளையாடிய தமிழ்ச்சமூகம்
ஆசிரியர் : முனைவர் ஆ.பாப்பா
வெளியீடு : தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
பதிப்பு : முதலாம் பதிப்பு பிப்ரவரி 2022
பக்கங்கள்:  256 
விலை: ரூ  300/=

நன்றி: சங்கப்பலகை, வல்லினச்  சிறகுகள் - மார்ச் 2022 




திருவள்ளுவர் யார் ?

- முனைவர் சிவ. இளங்கோ, புதுச்சேரி 


     திருவள்ளுவர் யார் என்று நெடுங்காலத்திற்கு முன்பே தொடங்கிய ஆராய்ச்சி இன்று வரை  முற்றுப்பெறவில்லை. அவரைக் குறித்து வரலாறு என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள கதைகளில் பெரும்பான்மையானவை புராணக் கதைகளைப் போன்றே உள்ளன. இவற்றையெல்லாம் கேட்க நேர்ந்தால் வள்ளுவரே அசந்துவிடுவார்.  நான் அவனில்லை  என்று கூடக் கூறலாம். இக்கதைகள் வரலாற்றுக்குப் பொருந்துவதாக இல்லை என்பதால் ஆய்வாளர்களால் அவைகள் புறந்தள்ளப்படுகின்றன. இருக்கின்ற ஒரே சான்று அவர் எழுதிய திருக்குறள் என்பதால் அதிலிருக்கும் சொல்லாட்சி, மொழிநடை, இடம்பெறும் பெயர்கள், உவமைகள், கதைகள், மேற்கோள், பழமொழி முதலானவற்றை வைத்துத் திருவள்ளுவர் யார் என்று அறுதியிடும் முயற்சிகளும் பன்னெடுங்காலமாக நிலவி வருகின்றன. இம்முயற்சிகளால் அவர் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர், தங்கள் சமயத்தைச் சேர்ந்தவர் என்றெல்லாம் அவரவர் விருப்பத்திற்கும், பயன்களுக்கும் உள்ளாக்கப் படுகிறார். மேலும், அவர் மீது பல முத்திரைகளும், பல வண்ணங்களும், பல முகமூடிகளும் அணியப்பட்டு பல்வேறுவித அடையாளங்களுடன் பார்க்கப்படுகிறார். தற்போதைய அடையாளம் காவி தரித்த உருவம். ஒருமை, ஒற்றுமை, மாந்தநேயம் ஆகிய பிம்பங்கள் சிதையுமளவில் இவ்வேற்றுமைகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றுக்கெல்லாம் இடம் கொடுத்தது திருக்குறளா, இத்தனை நூற்றாண்டுக்கால இடைவெளியா, எழுத்துருக்களின் வளர்ச்சி நிலையா, இடைச்செருகல்களா, உரையெழுதியோரின் உள்மன விகாரங்களா, அதிகார மாற்றங்களா, சமயச் சண்டைகளா என்று பன்னோக்கில் எழுந்து நிற்கும் வினாக்களுக்கு விடை காண்பது எளிதாக இல்லை. 

     திருக்குறளில் பாதிக்கு மேற்பட்ட குறள்கள் தமிழ் படித்தோர்க்கு எளிதில் விளங்கிவிடும். மீதியில் பெரும்பாலானவற்றை உரையாசிரியர்கள் மூலம் புரிந்து கொள்ள முடியும். ஒருசில பகுதிகள் உரையாசிரியர்களாலும் விளங்க வைக்க முடியாதவை.  அவற்றுள் ஒருசில உரையாசிரியர்களுக்கே விளங்காதவை. மிகக் குறிப்பிட்ட சில குறள்கள் வள்ளுவருக்கு மட்டுமே விளங்கக்கூடியவை. அவர் வாய்திறந்தால்தான் உண்டு. அப்படிப்பட்ட  குறள்களில் ஒன்றுதான் முதல் குறள். அந்த ‘ஆதி பகவன்’ யார்தானென்று இதுவரை நடந்த ஆய்வுகளை எழுதியும், படித்தும் மாளவில்லை. பலவாறாகப் பொருள் கூறப்பட்ட அந்த ‘ஆதிபகவன்’ சொல்லாய்வில் ஏதோ ஒரு கூற்றில் உண்மை இருக்கக் கூடும். ஆனால் அது அனைவரும் ஏற்றுக் கொள்ளும் உண்மையாக இருக்க முடியாது என்ற நிலை திருக்குறளில் ஒருமை இல்லையோ என்ற எண்ணத்தைக் கூட ஏற்படுத்திவிடும். இருமையைப் பற்றிப் பல இடங்களில் கூறிச் செல்லும் அவருடைய கருத்தினால் ஒருமையும் இருக்கும், இருமையும் இருக்கும் என்பதையே குறளின் சிறப்பாகக் கொள்ளலாம். அதே நேரம், திருக்குறளை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் இந்தியாவின் தொடக்கக்காலச் சமயங்களான சமணம், பௌத்தம், ஆசீவகம் ஆகிய மூன்று சமயங்களுக்கும் திருக்குறளுக்கும் உள்ள தொடர்பினை அறிந்தாக வேண்டும்.

திருக்குறளும் சமணமும்:
     திருக்குறள் இயற்றப்பட்ட காலத்திலிருந்து (கி.மு. மூன்று) ஆயிரம் ஆண்டுகள் வரை கற்றோர் இடையில் அந்நூல் செல்வாக்குடன் இருந்து வந்தது. பதினான்காம் நூற்றாண்டுக்குப்பிறகு சமணம், பௌத்தம், ஆசீவகம் ஆகிய சமயங்கள் தமிழகத்தில் செல்வாக்கிழந்த பின்னர், திருக்குறளும் மறக்கடிக்கப்பட்டு விட்டது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டிஷ் இந்தியாவின் சென்னை மாகாண ஆட்சியர் பொறுப்பேற்ற பிரான்சிஸ் வைட் எல்லீஸ் (1777 – 1819) காலத்தில், அவர் வெளியிட்ட திருக்குறள் (1812) நூல்தான் மீண்டும் திருக்குறளைத் தமிழகத்திற்கு நினைவில் கொண்டுவந்தது. (இதற்கு முன்பும் வீரமாமுனிவர் உள்ளிட்ட சிலரின் பதிப்புகள் வெளிவந்துள்ளன). அயோத்திதாசனாரின் பாட்டனார் கந்தப்பன் வழி, அவருடைய அதிகாரி ஆரிங்டன் வழி திருக்குறள் ஓலைச்சுவடி எல்லீசை அடைந்தது. அது ஒரு சமண நூலாகவே எல்லீஸ் குறிப்பிட்டுத் திருக்குறளின் முதல் பதின்மூன்று அதிகாரங்களில் இருந்து தெரிந்தெடுத்த குறள்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நீண்ட விளக்கங்களுடனும், பிற இலக்கிய மேற்கோள்களுடனும் 1812 இல் வெளியிட்டார். அந்தக் காலத்தில் நிலவிய கருத்துப்படி அவர் திருவள்ளுவரைச் சமணராகவே அவரது நூலில் அடையாளப்படுத்தினார். எல்லீஸ் காலத்தில் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் திருவள்ளுவர் தங்க நாணயங்களை வெளியிட்டது. நாணயத்தில் திருவள்ளுவர் உருவம் சமண முனிவராகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

     திருக்குறளின் முதல் குறளில் இடம் பெறும் ‘ஆதிபகவன்’ முதற்றே உலகு’ என்னும் தொடரில் வரும் ஆதிபகவன், சமணத்தின் முதல் தீர்த்தங்கரரான ஆதிநாதரைக் குறிப்பதாகச் சமண நூல்கள் குறிப்பிடுகின்றன. ஆதிநாதரும், ஆதிசிவனும், ஒருவரே என்றும், சமணமும், சித்தமும் அதிலிருந்தே தொடங்குகின்றன என்றும் ஆய்வாளர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர். சிந்துவெளி முத்திரைகளில் எருமைக் கொம்புகள் அணிந்து தவ நிலையில் காணப்படும் உருவம் ஆதிநாதர் என்றும், இடப (ரிஷப) தேவரே என்றும், சிந்துவெளி வரை பேசப்பட்ட மொழி தமிழே என்றும், சமணம் தமிழ்ச் சமயமே என்றும், சமண இலக்கியங்களே தமிழில் அதிகம் என்றும் அண்மைய ஆய்வுகள் கருத்துரைக்கின்றன.  பிற சமயக் குரவர்கள் அனைவரும் விருஷபதேவருக்குப் பின்னர் தோன்றியவர்களே என்று திருவள்ளுவர் சைனர் (சமணர்) என்ற கட்டுரையில் திரு.வி.க. குறிப்பிடுகிறார். சமணம் தமிழகத்தில் இறக்குமதியானதல்ல, ஆதிநாதர் (சிந்துவெளி) காலந்தொட்டே தமிழர்களின் சமயமாக சமணம் இருந்துள்ளது. தமிழ்ச் சமணர்களின் தமிழ்த் தொண்டாக இலக்கணம், இலக்கியம், அற இலக்கியம், உரைகள் ஆகிய தொண்டுகள் உள்ளன என்கிறார் பேரா. க.ப.அறவாணன். சமணர்களின் காலமே தமிழ் நாகரிகத்தின் பொற்காலம் என்கிறார் கால்டுவெல். காப்பியங்கள், புராணங்கள் உட்பட 22 இலக்கிய நூல்களும், தொல்காப்பியம், நன்னூல் உட்பட 20 இலக்கண நூல்களும், திருக்குறள், நாலடியார் உட்பட 16 அற நூல்களும், நீலகேசி உள்ளிட்ட நான்கு தருக்க நூல்களும், பெருங்குருகு, செயிற்றியம் உள்ளிட்ட ஒன்பது இசை நூல்களும், பிற இலக்கிய வகைகளான நிகண்டு, ஓவியம், சோதிடம், பிரபந்தம், சதகம், கணிதம், நாடகம் ஆகிய வகையில் திருக்கலம்பகம், சூடாமணி நிகண்டு உள்ளிட்ட 36 நூல்களும் ஆக மொத்தம் 107 இலக்கிய நூல்கள் தமிழ்ச் சமணர்களால் இயற்றப்பட்டுள்ளன என்ற செய்தி, தமிழக அரசு வெளியீடான தமிழரசு இதழில் (1.11.1974) வெளியிடப்பட்டுள்ளது (தகவல் இரா.பானுகுமார், சென்னை–மின் தமிழ், தமிழ் மரபு அறக்கட்டளை).

     திருவள்ளுவரைக் கொண்டாடும் சைவ, வைணவ மதங்களின் வழிபாட்டு இடங்களில் அவருடைய உருவம் அமைக்கப்படுவதில்லை. அடியவர் வாழ்த்தில் அவர் சேர்க்கப்படுவதில்லை. இதற்குத் திருவள்ளுவர் முன்னாளில் சமணர் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்கமே காரணம் என்கிறார் திரு. வி.க. திருவள்ளுவரை எச்சமயத்தின் சார்பாகப் பார்த்தாலும் அவை அத்தனையுமே அருகதேவர் (மகாவீரர்) கண்ட அருள்நெறியின் பாற்பட்டன வென்பதும் திரு.வி.க. வின் ஆழ்ந்த கருத்து. கொல்லாமையைத் திருவள்ளுவர் வலியுறுத்தியதைப் போல் அவர் காலத்துப் புலவர்கள் யாரும் வலியுறுத்தவில்லை (அறவினை யாதெனின் கொல்லாமை – குறள் - 321). மேலும் அறத்தைப் பாயிரத்தில் அமைக்கும் மரபாட்சியும் சைனருடையதே என்றும் திரு.வி.க. கூறுகிறார். ‘பிரபோத சந்திரோதயம்’ என்ற வேதாந்த நாடக நூலில் சமணர் சார்பில் ‘அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்துண்ணாமை நன்று’ என்ற குறள் இடம் பெற்றிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். பொறிவாயில் ஐந்தவித்தான் என்பது ஆதிபகவனையே குறிக்கும். அவரே ஆதிநாதர் (ரிஷப நாதர்). இதுவே திருவள்ளுவர் தம் நூலில் வைத்துள்ள திறவுகோல் என்று தன் ஆய்வில் திரு.வி.க. உரைக்கிறார்.
 
     சைன (சமண) சமயம் விதிக்கின்ற ஐவகை நோன்புகளான கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, பிரமச்சரியம், உடமை நீக்கம் ஆகியவற்றைப் பல குறள்களில் வலியுறுத்தியும், தனித்தனி அதிகாரத்தில் இக்கருத்துகளை அமைத்தும் இருப்பது திருக்குறள் சைன சமய நூலே என்று நிறுவப் போதுமானதென்று அ.சக்கரவர்த்தி நயினார் ‘திருக்குறள் வழங்கும் செய்தி’ (1959) எனும் கட்டுரையில் விளக்குகிறார். ஜைன சமயத்தில் நான்கு விழுமியங்களாக (மங்களமாக) அருகன், சித்தன், சங்கம், தருமம் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. இவற்றைப் பாகத மொழியில் திருவள்ளுவர் இயற்றிய ஒரு பாடலில் அமைத்திருப்பதாகக் கூறும் சக்கரவர்த்தி நயினார், இதனைப் பின்பற்றியே திருக்குறளில் கடவுள் வாழ்த்து, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் ஆகிய அதிகாரங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், இதே கருத்தையும், முறையையும் திருத்தக்க தேவர், சீவக சிந்தாமணியில் பின்பற்றியிருப்பதாகவும் தெரிவிக்கிறார். தேவர், நாயனார் என்பவை சமண முனிவர்களுக்கு வழங்கும் பெயர் என்று சமணத்தின் பன்மொழி நூல்களும் தெரிவிக்கின்றன.

திருக்குறளும் பௌத்தமும்:
     புத்த சமயம் இந்தியாவிலும், பிற நாடுகளிலும் பரவியமைக்கு மாமன்னர் அசோகனே காரணம். புத்தர் (கி.மு. 623 – 543) பரிநிர்வாணம் எய்தி (இறந்தபின்) 300 ஆண்டுகள் கழித்து மௌரிய மாமன்னனான அசோகன் புத்த சமயத்தைத் தழுவி, அதை அரசாங்க மதமாகவும் ஆக்கினார். அதே காலத்தில் சமணம், ஆசீவகம் ஆகிய சமயங்களும் செல்வாக்குப் பெற்றிருந்தன. வைதிகமும் கொஞ்சம் வளர்ந்திருந்தது. அசோகனின் தூதுவர்களாகப் புத்த சமயம் பரப்ப வந்தவர்கள் முக்கியமான இடங்களில் கல்வெட்டுகளையும், அசோக சக்கரம், தூண்களை நிறுவினார்கள். சில இடங்களில் புத்தர் இன்னார் என்று அறிய அவரது பாத உருவங்களைப் பொறித்தார்கள். இதுதான் இந்தியாவில் முதன்முதலாக உருவ வழிபாடுகளைத் தோற்றுவித்தது. அதற்கு முன்னரும் சில வழிபாடுகள் இருந்திருந்தன. தமிழர்களைப் பொறுத்தவரையில் முன்னோர் வழிபாடும், தாய்த் தெய்வ வழிபாடும், நடுகல் வழிபாடும் தமிழ்ச் சமுதாயத்தில் இருந்தன. முன்னோர் வழிபாடு உருவமில்லாதது. ஆனால் இடம் சார்ந்து கிடைக்கும் பொருட்களால் அடையாளப் படுத்தப்படுவது. தாய்த்  தெய்வ வழிபாடு ஒரு பெண்ணுருவம், குறிப்பாகத் தாய் உருவம் சிறியதாக வடிவமைக்கப்பட்டது. நடுகல் வழிபாட்டில் தொடக்கத்தில் உருவம் இல்லை. பெயரும் அவரைச் சார்ந்த ஏதோ ஒரு அடையாளமும் இடம்பெற்று வந்தன. இந்நிலையில்தான் கௌதமபுத்தரின் திருவடிகளைத் தொழும் வழிபாடு அசோக மாமன்னரால் கி.மு. 300 இல் உருவாக்கப்பட்டது. திருக்குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்தில் (திருக்குறளில் கடவுள் என்ற சொல் எங்கும் இடம் பெறாத நிலையில் கடவுள் வாழ்த்து எனும் தலைப்பு இடைச்செருகலே என்ற கருத்தும் நிலவுகிறது) பாதங்களைத் தொழும் தன்மை மிகுதியாக இடம்பெற்றுள்ளது. வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின், மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார், வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார், தனக்குவமை இல்லாதான் தாள், அறவாழி அந்தணன் தாள், எண்குணத்தான் தாளை, இறைவன் அடி சேராதார் என்று தாள், அடி ஆகிய காலடி அல்லது பாத வணக்கத்தைத் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். இதில் கூறப்படும் தாள், அடி என்பவை புத்தருடையதே என அதற்குரிய அடைமொழிகளான, வாலறிவன், மலர்மிசை ஏகினான், எண்குணத்தான் போன்றவைகளைச் சுட்டிக்காட்டிப் புத்த சமயத்தினர் கூறிவருகின்றனர். இவை மகாவீரருக்குச் சொல்லப்பட்டவை என சமண சமயத்தவரும் கூறுகின்றனர்.

     புத்தரின் ஒழுக்க இயலைப் பாலிமொழி நூல்களான விநயபிடகம், சூத்திரபிடகம் ஆகிய தொகை நூல்கள் விவரிக்கின்றன. இந்நூலில் புத்தரின் போதனைகளாகக் குறிக்கப்பெறும் ஒழுக்கவியல் திருவள்ளுவர் கூறும் திருக்குறள் ஒழுக்கவியலோடு பெரிதும் ஒத்துப் போவதைத் தனிநாயகம் அடிகளார் விவரித்துள்ளார். சாதி வேற்றுமைகளை ஒழித்த புத்தரின் கருத்து புண்ணிய பூமியை விரிவாக்கியது. அதைத் தென்னாட்டில் விரிவுபடுத்தியது திருக்குறள். புத்த தன்மங்களான பஞ்சசீலம் (ஐவகை நெறி), அஷ்டசீலம் (எண்குணத்தான்), தசசீலம் (பத்துக்கட்டளைகள்) ஆகியவற்றைத் திருக்குறளில் பொய்யாமை, அகந்தூய்மை வாய்மையாற் காணப்படும், கொல்லான், புலாலை மறுத்தானை, எவ்வுயிர்க்கும் செந்தண்மை போன்றவும் இன்னும் பல குறள்களிலும் காணலாம். அதே நேரம் துறவறத்தை அதிகமாகப் புத்தர் வலியுறுத்தியபோதும் திருவள்ளுவர் இல்லறத்தை வலியுறுத்தி அதுவே அறம் என்று மொழிவதை ‘அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை’ என்று மொழியும் குறள்கள் மூலமாக அறியலாம் என்றும் தனிநாயகம் அடிகளார் கூறுகிறார். துன்ப நீக்கத்திற்கு வழியாக இறப்பை வள்ளுவர் வலியுறுத்தவில்லை. மாறாக வாழ்க்கையைச் சுவைத்து வாழும் முறையையும் இன்பத்துப் பாலாகக் கொடுத்திருக்கிறார்.

     புத்தரின் போதனைகளான தன்மபீடம், சூத்திரபீடம், விநயபீடம் ஆகிய மூன்று பிடகக் (திரிபிடகம்) கருத்துக்களையே மெய்யறம், மெய்ப்பொருள், மெய்யின்பம் என்னும் மூன்று பிரிவாகத் திரிக்குறள் நூலை திருவள்ளுவர் இயற்றினார் என்று அயோத்திதாசர் குறிப்பிடுகிறார். வள்ளுவர், சாக்கையர், நிமித்திகர், வேந்தன், மாதானுபங்கி, செந்நாப்போதார், பொய்யாமொழி என்று வழங்கும் பெயர்களைத் திவாகரம், பின்கலை நிகண்டு, மணிமேகலை, சிந்தாமணி, சூளாமணி, நன்னூல் இன்னும் பிற இலக்கியங்களில் இருந்தும் பண்டிதர் மேற்கோள் காட்டியுள்ளார். மேலும், திருவள்ளுவர் மன்னர் குலத்தைச் சேர்ந்தவர் என்றும், இறுதியாகத் தின்னனூர் அருகில் இராகுல வியாரத்தில் தங்கி நல்லுரைகள் ஆற்றிப் பின் காலமானார் என்றும் ‘தியானப் பஞ்சரத்தினப்பா’ என்னும் ஓலைச் சுவடிச் செய்தியையும் கூறுகிறார். திருவள்ளுவர் நினைவிடம் கட்டப்பட்ட இராகுல வியாரம் தற்போது வீரராகவர் ஆலயமாக வைணவ சமயத்தார் வசம் உள்ளதாகவும் பண்டிதர் கூறுகிறார். இந்த உண்மைகளைத் திரித்து திருவள்ளுவரை வேறு சமயத்தவராகவும், வேறு இனத்தவராகவும் காட்டவேண்டும் என்பதற்காகவே எழுவரோடு உடன்பிறந்தார் என்று கூறும் ‘கபிலர் அகவல்’ போன்ற பொய்யான வரலாறுகள் புனையப்பட்டதாகக் கூறும் அயோத்திதாசர், எல்லீஸ் வெளியிட்ட திருக்குறள் (1812) நூலிலும், அதன் பின்னர் 1831 இல் வெளிவந்த நூலிலும் திருவள்ளுவர் வரலாறு இல்லையென்றும், 1935 இல் விசாகப் பெருமாளையரும், 1937 இல் சரவணப் பெருமாளையரும் ஆதி, பகவன் ஆகியோருக்குப் பிறந்தவர் வள்ளுவர் என்ற கட்டுக்கதைகளைச் சேர்த்து விட்டனர் என்றும் கூறுகிறார். இப்படியான கட்டுக்கதையிலிருந்து விடுவித்துத் திருக்குறளை புத்த சமயக் காப்பியம் என்று நிறுவுதற்குத் திரிக்குறள் உரை விளக்கத்தினை தன்னுடைய ‘தமிழன்’ இதழில் 1911 முதல் 1914 ஆம் ஆண்டு வரையில் எழுதிவந்தார். முதல் 55 அதிகாரங்களுக்கு உரை எழுதி அயோத்திதாசர் இறப்பைத் தழுவிய நிலையில், அவரது உரைகளும், அவர் எழுதிய திருவள்ளுவர் வரலாறும் இலக்கியச் சான்றுகளுடன் புத்தசமய வழிநூலாகத் திருக்குறளை நிறுவி உள்ளன.

திருக்குறளும் ஆசீவகமும்:
     சமணம், பெளத்தம் ஆகியவை அமைப்பாக உருவான காலத்தில்தான் ஆசீவகமும் அமைப்பாக உருவகம் பெற்றது. மகாவீரர், கெளதம புத்தரின் சமகாலத்தவராக ஆசீவகத்தின் மூன்றாம் திருத்தங்கரரான மற்கலி கோசாலர் இருந்தார். மாமன்னர் அசோகனின் தந்தை பிம்பிசாரர் ஆசீவக சமயத்தைச் சேர்ந்தவர். அசோகர் புத்தமதம் தழுவினாலும்  ஆசீவகமும் செல்வாக்கோடு திகழ்ந்தது. வடபுலம் மட்டுமன்றித் தென்புலத்திலும் இம்மூன்று சமயங்களும் பெரும் செல்வாக்கோடுதான் இருந்தன. ஆசீவகம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை வடபுலத்திலும், கி.பி. 14 ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டிலும் இருந்தது. சமணமும், பௌத்தமும் தமிழில் பல இலக்கிய, இலக்கண நூல்களை அளித்துள்ளன. ஆசீவகத்தின் ‘ஒன்பது கதிர்’ என்னும் தமிழ் நூல் இன்று கிடைக்கப்பெறவில்லை. இன்னொரு நூலான சினேந்திரமாலை (வெண்பா) ஆசீவகம் செல்வாக்கிழந்த நிலையில் சமண நூலாக அறியப்படுகிறது.

     ஆசீவகத்தின் கோட்பாடுகள் தமிழிலக்கியங்களில் அதிகமாகவே உள்ளன. திருமந்திரம், பரிபாடல், புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, நீலகேசி, சிவஞான சித்தியார், அருங்கலச் செப்பு ஆகிய நூல்களில் ஆசீவகக் கருத்துகள் விரவிக் காணப்படுகின்றன. திருவள்ளுவர் காலத்தில் இம்மூன்று சமயங்களுமே தமிழகத்தில் செல்வாக்கோடு திகழ்ந்தன. ஆசீவகத்தின் கருத்துகளில் உயர்ந்தவையும், உடன்பாடானவையும் திருக்குறளில் பயின்று வருகின்றன. ஆசீவகம் பிறவியை ஏழு வண்ணங்களில் குறிக்கிறது. திருக்குறளில் ஏழு என்பதை மையப்படுத்தும் எட்டுக் குறட்பாக்கள் உள்ளன. எழுமையும், எழுபிறப்பும் என்ற சொல்லாட்சிகள் குறிப்பிடத்தக்கவை. ஆசீவகத்தின் ஊழ்க் கோட்பாடு திருக்குறளின் ஊழ் அதிகாரத்தில் ஊடுருவி இருப்பதை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆசீவகத்தின் அணுக் கொள்கை அறிவியல் முன்னோட்டத்தின் முதற்படியாகக் கருதப்படுகிறது. அதேநேரம் அணுவைப் பிளக்க முடியாது என்ற ஆசீவகத்தின் கொள்கையை 2600 ஆண்டுகளுக்குப் பின்னர் பிளந்தவர் விஞ்ஞானி ஆல்பிரட் ஐன்ஸ்டீன். அறிதலையும், அறிவித்தலையும் உயிரின் தொழில்களாக ஆசீவகம் குறிப்பிடுகிறது. ‘எண்பொருளவாக செலச் சொல்லித் தான் பிறவாய் நுண்பொருள் காண்பதறிவு’ (குறள்-424) என்னும் திருக்குறள் ஆசீவகக் கருத்தோடு பெரிதும் ஒத்துள்ளதாக அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ஆசீவகம், தமிழ்நாட்டில் தோன்றி வடபுலம் வரை சென்ற அறிவியல் சமயம் என்று பேரா. க. நெடுஞ்செழியன் தனது ‘ஆசீவகமும் ஐயனார் வரலாறும்’ நூலில் குறிப்பிடுகிறார்.

திருக்குறளும் வடபுலமும்:
     வடபுலம் என்பதில் ஆரியம், சமஸ்கிருதம், வேதம், புராணங்கள், மனுஸ்மிருதி ஆகியவை அடங்கும். ஆரியர் என்பதை இனமாகக் கொள்ளாமல் ஆடவரில் உயர்ந்தவர் என்ற பொருளில் புத்தர் வழங்குவார். ஆனால் திருவள்ளுவர் ஆரியரைப் போற்றவில்லை. மனுதர்மத்தின் வர்ணாசிரமத்திற்கு எதிர்ப்புக் காட்டுகிறார். நாம் இன்று வழங்கும் பொருளில் அந்தணர் அன்று குறிக்கப்படவில்லை. சிரமணர்களில் உயர்ந்த அறஹத்துகளே அந்தணர் எனப்பட்டனர். அவர்கள் சமூகத்தில் உயர்நிலையில் மதிக்கப்பெற்றனர். திருவள்ளுவர் காலத்தில் வேள்விக் கொலை புரிந்துவந்த ஆரியர், சமூக மதிப்புக் கருதித் தங்களையும் அந்தணர் என்று சொல்லிக்கொண்டனர். அதனால் தான் அந்தணர் என்போர் அறவோர் என்று வள்ளுவர் விளக்கம் கொடுக்க நேர்ந்தது. இப்படி அகச்சமயங்களான சமணம், பௌத்தம், ஆசீவகம் ஆகியவற்றை எதிர்த்தழிக்கத் தொடங்கிய புறச்சமயமான வைதிகத்தை நேரடியாகவும், மறைபொருளாகவும் தோலுரித்துக் காட்டும் குறள்கள் நூல் முழுவதும் விரவியுள்ளன.

     வடபுலத்தை முற்றாக எதிர்க்கவே தென்புலத்தார் என்கிறார் வள்ளுவர். தென்புலத்தார் என்பது முன்னோர் வழிபாட்டையும், தென்மதுரை, குமரிக்கண்டங்களில் கடல்கோளால் அழிந்தவர் நினைவையும் போற்றுவதற்கான வழிபாடு என்று பாவாணர் கூறுகிறார். தங்கள் புலன்கள் தென்பட சாதிக்கும் (ஐந்தவிக்கும்) சமண முனிவர்களையும், அறஹத்து களையும் குறிக்கும் சொல்தான் தென்புலத்தார் என அயோத்திதாசர் குறிப்பிடுகிறார். ஆரியத்தையும், வடபுலத்தையும் பல்வேறு நிலைகளில் எதிர்க்கும் குறள்களை மேற்கூறிய இருவருமே பெரும் பட்டியல் இட்டுள்ளனர். வயதான பெற்றோர், மனைவி, குழந்தைகள் பசியால் வாடும் நிலையில் எப்பாவம் செய்தாயினும் அவர்களைக் காப்பாற்றுக என்று ஆரிய நூல்கள் அறம் உரைக்கின்றன. ஆனால் அதையெல்லாம் மறுத்து எத்துணை இடர்வந்தாலும் பாவகாரியம் எதுவும் செய்யக்கூடாது என்று திருவள்ளுவர் உரைப்பதாகத் திருக்குறளுக்கு வைதிகப் போர்வை போர்த்திய பரிமேலழகரே கூறுகிறார். (செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை (குறள் - 656), குன்ற வருப விடல் (குறள் - 961). 

     உயர் பிறப்பாளர்களுக்கே மேலுலகம் என்று கூறி அவர்கள் வீடுபேறடைந்தால் அவர்களை மேலோர், உயர்ந்தோர், வானோர், தெய்வம், தேவர் என்று கூறும் வழக்கமிருக்க ‘தேவர் அனையர் கயவர்’ என்றும், ‘நன்று அறிவாரில் கயவர் திருவுடையர்’ என்றும், ‘மக்களே போல்வர் கயவர்’ என்றும் திருவள்ளுவர் குறிப்பிடுவது கயவர்களைத் தேவர்களுக்கு ஒப்பிட்டு, மக்களிலும் தேவர்கள்  தாழ்ந்தவர் என்ற கருத்தில் அமைந்ததே என்று புலவர் குழந்தை மதிப்பீடு செய்துள்ளார். திருக்குறளில் உரைகளில் பின்னர் சேர்க்கப்பட்ட ‘திருவள்ளுவ மாலை’  நூலிலும் சில இடைச் செருகல்கள் போக பெரும்பாலான வெண்பாக்கள் வள்ளுவரின் வருண, வேத, வடபுல எதிர்ப்பினைச் சுட்டியே செல்கின்றன.

     வடபுலத்து அரசுகள் தொடக்கக் காலங்களில் 23 ஆவது தீர்த்தங்கரரான பார்சுவநாதரின் அறக் கொள்கைகளை ஏற்று அமைதி வழிப்பட்ட அதே காலத்தில், வைதிகத்தின் மனுஸ்மிருதிக் கொள்கை ஆரியர்வழி வர்ணாசிரமக் கொள்கையாக அரசுகளின் மீது திணிக்கப்பட்டது. இதில் அசோக மாமன்னனும் தத்தளித்திருந்த வேளையில்தான், நால்வருணம் சாராத அரசையும், அறவழியில் அரசு மற்றும் குடிகளை இணைக்கும் சமூக அமைப்பினைப் புத்தரின் போதனையில் இருந்து அசோகர் பெற்றார். பல்வேறுபட்ட மனிதர்கள், இனங்கள், சமயங்கள் சேர்ந்து வாழும் சமுதாயம், அடிப்படையில் அறநிலையில் அமைய வேண்டிய இன்றியமையாமையை அவர் புத்தரிடம் இருந்து பெற்றார். இதையொட்டி தமது அரசியல் கொள்கைகளை வகுத்துக் கொண்ட அசோகரின் அரசில் ராஜகுரு, மத குருக்களுக்கு இடமில்லை. உயிர்ப்பலி கொடுக்கும் வேள்விகள் அசோகரால் தடைசெய்யப்பட்டன. அனைத்து உயிர்களையும் சமமாகப் பாவிக்கும் புத்தரின் போதனை, வைதிகத்தின் வேரை ஆட்டம் காண வைத்ததுடன் அவர்களின் கூட்டத்தைப் புலம் பெயரவும் வைத்தது. 

     வடபுலம் பெயர்ந்தால் தென்புலத்தைத் தவிர வேறு வசதியுள்ள புலமில்லை. இதனால் தமிழர்கள் மீதும், தமிழ் அரசுகள் மீதும் மிகப்பெரிய பண்பாட்டுத் திணிப்பும், போரும் நடை பெற்றபோது அவர்களுக்கு வடபுலத்தில் புத்தர் கிடைத்ததைப் போல் ஒரு தத்துவ வழிகாட்டி கிடைக்கவில்லை. ஆனால் அப்படிப்பட்ட அறிவுசார் சமயங்களை அறிந்திருந்த வள்ளுவர் தமிழர்களுக்கு அரணாக இருந்தார். மனுஸ்மிருதி, புராணம், வருணம் ஆகியவற்றைத் தடுக்கும் நோக்கிலேயே மதகுரு இல்லாத அரசன் – அமைச்சர் கொண்ட அரசியலைத் தத்துவக் கோட்பாடாகத் தந்தார். அரசன் அருள் உள்ளம் உடையவனாகவும், செங்கோல் செலுத்துபவனாகவும் அறம்பிறழாமல் ‘ஐந்து சால்பு ஊன்றிய தூண்’ (குறள் – 983) போல ஆட்சிபுரியவேண்டும் என்ற வள்ளுவரின் அரசியல் கோட்பாடுதான் அன்றைய தமிழ் அரசுகளுக்குப் பெரும் அரணாக விளங்கியது. மனுநீதி வெறுக்கும் உழவுத் தொழிலைத் தலைமைத் தொழிலாக உயர்த்திப் பிடித்தவர் வள்ளுவர். வருணங்கள் நுழையாத பழந்தமிழ்ச் சமுதாயம் காதலை உயர்த்திப்பிடித்தது. அதை இலக்கியங்களில் பாடி வைத்தது. வைதிகத்தின் வழியாக வருணம் தமிழ்நாட்டில் நுழைந்த காலத்தில் அறமும், பொருளும் பாடித்தந்த வள்ளுவர், இன்பத்துப் பாலையும் பாடிவைத்து சமத்துவச் சமுதாயம் நிலைத்திருக்கும் வகை செய்தார்.

     பௌத்தத்திற்கும், வைதிகத்திற்கும் இரண்டு முக்கியமான வேறுபாடுகளை அண்ணல் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். முதலாவதாக, பௌத்தத்தில் கூறப்படும் தம்மம் என்பது ஒழுக்கமே. அது கடவுளுக்கு நிகரானது. ஒழுக்கநெறி இல்லையென்றால் பௌத்தமே இல்லை. ஆனால் வைதிகம் ஒழுக்கத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டதல்ல. வைதிக  தர்மம் என்பது சடங்கு, யாகம், பலி, பெண் போகப்பொருள் என்ற தன்மையைக் கொண்டது. இரண்டாவதாகச் சமத்துவம். பௌத்தம் நால்வருணத்தின் எதிரி. மனுதர்மம், நால்வருணம் ஆகியவற்றின் எதிர்ப்பை நீண்டகாலப் போராட்டமாகப் பௌத்தம் கைக்கொண்டது. ஆனால், வைதிகத்தில் ஒருவருக் கொருவர் சமம் இல்லை. ஆண்களுக்குள் சமம் இல்லை. ஆண் – பெண் சமம் இல்லை. பிறப்பினால் கடைநிலையில் உள்ளவர்களும், பெண்கள் அனைவரும் சன்னியாசம் பெறமுடியாது. கடவுளை அடைய முடியாது. மேலும் இதை மீறினால் அருவருக்கத்தக்கத் தண்டனைகள். இதுவே வேதத்தின் ஆணை. இதைத் தடுக்கத்தான் வள்ளுவர் தமிழ் மக்களுக்கு அரணாக நின்று, அவர் காலத்து நன்னெறிகளைத் திரட்டித் திருக்குறளாகத் தந்தார் என்று கொண்டால் தமிழர்கள் ஒற்றுமை பூண்டு, எதிரிகளை அடையாளம் கொள்ளவேண்டிய தேவை விளங்கும். 

துணை நின்ற நூல்கள்:
1.  G.U. Pope, Thirukkural, 2018, சாரதா பதிப்பகம், சென்னை.
2.  க. அயோத்திதாசப் பண்டிதர், திரிக்குறள்., 2015, மெத்தா பதிப்பகம், சென்னை.
3.  ஞா. தேவநேயப் பாவாணர், திருக்குறள் தமிழ் மரபுரை, 2000, இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை.
4.  புலவர் குழந்தை, திருக்குறள், 2007, பூம்புகார் பதிப்பகம், சென்னை.
5.  பி.எஸ். சுப்ரமணிய சாஸ்திரி, திருக்குறள்–அறத்துப்பால், 1939, திருச்சி.
6.  திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும், 1967, கழகம், சென்னை.
7.  ப.மருதநாயகம், எல்லீசின் திருக்குறள் விளக்கக் கையெழுத்துப் பிரதி, 2009, சீதைப் பதிப்பகம், சென்னை.
8.  திருக்குறள் பன்முக வாசிப்பு, 2009, மாற்று, சென்னை.
9.  மருதமுத்து, திருக்குறள் – தமிழ்த் தேசிய அரசியல் நூல், 2013, போர்க்கொடி பதிப்பகம், சென்னை.
10.  தர்மானந்த கோசம்பி, பகவான் புத்தர் (மொழிபெயர்ப்பு கா.ஶ்ரீ.ஶ்ரீ.) 2018, சாகித்ய அகாதமி, புதுதில்லி.
11.  டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், புத்தரும் அவர் தம்மமும் (தமிழில் வீ.சித்தார்த்தா), 1996, பௌத்த ஆய்வு மையம், சென்னை.
12.  மயிலை சீனி. வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும், 1940, கழகம், சென்னை.
13.  மயிலை சீனி. வேங்கடசாமி, சமணமும் தமிழும், 2017, நாம் தமிழர் பதிப்பகம், சென்னை.
14.  க.நெடுஞ்செழியனின் ஆசிவகமும் ஐயனார் வரலாறும், 2014, பாலம், சென்னை.
15.  சாகர் முனிமகராஜ், குழந்தை ஞானம் (5 தொகுப்புகள்), 2015 பகவான் 1008 ஶ்ரீ நேமி தீர்த்தங்கரர் பஞ்சகல்யாண விழா, ஏதாநெமிலி.
16.  சோ.ந. கந்தசாமி, இந்தியத் தத்துவக் களஞ்சியம் (3 தொகுதிகள்), 2016, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.
17.  ஆர்.பி.சேதுப்பிள்ளை, திருவள்ளுவர் நூல் நயம், 1931, கழகம், சென்னை.
18.  திருவள்ளுவர் நினைவுமலர், 1935, திருவள்ளுவர் திருநாட்கழகம், சென்னை.
19.  தமிழ் மரபு அறக்கட்டளை இணையதளம். 


முனைவர் சிவ. இளங்கோ,
6, கவிஞர் புதுவைச் சிவம் வீதி,
வெங்கட்ட நகர்,
புதுச்சேரி – 605 011.
பேசி: 99940 78907.
Mail ID:   ilangosiva57@gmail.com


-------