Saturday, July 26, 2014

1 பில்லியன் எழுச்சி






ரோஜா, கரடி பொம்மை, ஜிகினா வாழ்த்து அட்டை போன்ற எதுவும் இல்லாமல் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்குக் குரல் கொடுக்கும் தினமாக இந்த ஆண்டு காதலர் தினம் அமைந்து விட்டது. பெண்-களுக்கும், சிறுமிகளுக்கும் எதிரான பாலியல் வன்முறைகளுக்கு முடிவு கட்டவும், ஆண், பெண் பாகுபாடுகளைக் களைந்து இருவருக்கும் சமஉரிமை வேண்டும் என்று வலியுறுத்தவும் நடந்த இந்த நிகழ்வு ‘ஒன் பில்லியன் ரைஸிங்’ என்ற உலகம் தழுவிய பிரசாரத்தின் ஒரு பகுதி.
ஏன் இந்தப் பெயர்? ஒரு பில்லியன் (100 கோடி) பெண்கள் தங்களது வாழ்வில் பாலியில் வன்-முறைக்கோ அல்லது வேறு விதமான வன்முறை-களுக்கோ ஆளாகிறார்கள் என்னும் புள்ளிவிவரத்தின் அடிப்படையில் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதை நினைவுபடுத்தவும், இந்தப் பெண்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கவும், பெண்களின் ஒற்றுமையையும், பலத்தையும் உலகுக்கு நிரூபிக்-கவும் இந்தப் பெயரை வைத்துள்ளதாக இந்த இயக்கத்தை ஆரம்பித்த ஈவ் என்ஸ்லர் கூறுகிறார். உலகெங்கும் உள்ள ஒரு கோடி பெண்கள் சேர்ந்து தங்கள் ஒட்டுமொத்த வலிமையைக் காட்ட நடனம் ஆடவேண்டும் என்பதற்காகவே இந்த அறைகூவல் என்கிறார் இவர். பெண்களுக்கு எதிரான வன்முறை-களுக்கு ஒரு முடிவு கட்டுவோம் என்று இந்த நிகழ்ச்சி-யில் கலந்துகொண்டவர்கள் உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர்.

செப்டெம்பர் 20, 2012 அன்று 160 நாடுகளிலிருந்து வந்திருந்த மக்கள் பிரதிநிதிகள் இந்தப் பிரசாரத்தில் பங்கு கொள்வதாக கையெழுத்திட்டனர். இந்த வருடம் பிப்ரவரி 14 அன்று 190 நாடுகளில் ஊர்வலங்-கள் நடைபெற்றன. பொதுமக்களுடன் பல்வேறு துறை-களைச் சார்ந்த பிரபலங்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், மகளிர் அமைப்புகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்கள் ஆதரவையும் ஒத்துழைப்பையும் பிரகடனப்படுத்-தினார்கள்.
டில்லியில் இந்த நிகழ்ச்சி காதலர் தினத்தன்று பார்லிமென்ட் ரோட்டில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடந்தது. டில்லியிலுள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரி, மிராண்டா ஹவுஸ் மற்றும் கமலா நேரு கல்லூரி மாணவ, மாணவிகள் சிறப்பு நிகழ்ச்சிகள் வழங்கினர். தொடர்ந்து, டில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளின் நடன நிகழ்ச்சி-களும் நடந்தன.
சென்னை மெரினா கடற்கரையில் ஒன் பில்லியன் ரைசிங் நிகழ்ச்சியையொட்டி, பெண்கள் கலந்து கொள்ளும் மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்-பட்டது. ‘இந்த எழுச்சி ஆண்களுக்கு எதிரானது அல்ல; பெண்ணியம் பேசவோ, ஆண்களை மட்டம் தட்டவோ இங்கு கூடவில்லை. இருபாலாருக்கு-மிடையே சமத்துவம் இருக்க வேண்டும் என்பதே நாங்கள் சொல்லும் செய்தி,’ என்று வந்திருந்த பிரபலங்க-ள் தெரிவித்தனர்.

இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் ஒன் பில்லியன் எழுச்சி தொடர்பான நாடகங்கள், நடனங்கள், ஃபிளாஷ் மாப் (FLASH MOB) என்ற திடீர் நடனங்-கள் ஆகியவை நடைபெற்றன. தெற்காசியாவுக்கான ஒன் பில்லியன் ரைசிங் நிகழ்ச்சிப் பொறுப்பாளர் கம்லா பாசின், இந்திய சிறுமிகள் மற்றும் பெண்கள்மீதான வன்முறைக்கு எதிரான சுதந்தரப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளதாகவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் இருந்து சுதந்தரம் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு தலாய் லாமா, பூடான் ராணி சங்கே சோடன் வாங்சக் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

சமீபத்தில் புது தில்லியில் நடந்த வன்புணர்வு சம்பவத்-துக்குப் பிறகு ஒன் பில்லியன் ரைஸிங் நம் நாட்டில் ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்பலாம். இந்த எழுச்சியின் மூலம் கீழ்த்தட்டுப் பெண்கள் மட்டுமல்ல; மேல்தட்டுப் பெண்களும் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர் என்பது தெரிய வந்திருக்கிறது.

புது தில்லி மாணவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட காணொளி ஒன்றில் பிரபல சிதார் மேதை ரவிசங்கரின் பெண் அனுஷ்கா சங்கர் தான் அனுபவித்த பாலியல் வன்முறையைப் பற்றிக் குறிப்பிடுகிறார்: ‘சின்ன வயதில் என் பெற்றோர்கள் மிகவும் நம்பிய ஒரு நண்பரால் நான் பல வருடங்கள் தவறான வழியில் நடத்தப்பட்டேன். என்னால் இன்னும் அந்த அதிர்ச்சி-யிலிருந்து மீள முடியவில்லை. ஒரு பெண்ணாக நான் எப்போதும் ஒருவிதமான பயத்தில் வாழ்ந்து வருகிறேன். இரவு வேளைகளில் தனியாக நடக்க பயம்; யாராவது ஒரு மனிதன் என்னிடம் நேரம் கேட்டால் பதில் சொல்ல பயம்; அதுமட்டு-மல்ல; என்னைப் பற்றிய எண்ணங்கள் நான் அணியும் உடையினாலும் என் ஒப்பனை-யினாலும் மட்டுமே உருவாக்கப்படுகின்றன. போதும் போதும்! நான் ஜோதிக்காகவும், என்னைப் போன்ற பெண்களுக்-காகவும், என்னுள்ளே இருக்கும் இன்னும் தனக்கு ஏற்பட்ட அவமானத்தி-லிருந்து மீளாத சிறுமிக்காகவும் குரல் எழுப்பப் போகிறேன்!’


இந்த ஒருகோடி எழுச்சியின் பின் இருப்பவர் ஈவ் என்ஸ்லர். ஒரு நாடக ஆசிரியரும், சமூக ஆர்வலரு-மான இவர்தான் ஒன் பில்லியன் இயக்கத்தை ஆரம்பித்-தவர். இவர் வி-டே என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் 15 வது வருடம் இது. இவர் தனது ‘வஜைனா மொனோலாக்’ என்ற நாடகத்தின் மூலம் பிரபலமானவர். இந்த வஜைனா என்ற சொல்லை 50 மொழிகளில் 140 நாடுகளில் சொல்லியிருப்பதாக இவர் சொல்லு-கிறார்.

பெண் என்பவள் வெறும் உடல் சுகத்துக்காகப் படைக்கப்பட்டவள்; அவளது உறுப்புகள் ஆணின் இன்பத்துக்கே; அவளது உறுப்புகள் பற்றி பேசுவதே அசிங்கம் என்ற பலதரப்பட்ட கருத்துக்களை உடைத்து அவளும் ஒரு உயிரும் உணர்வும் உள்ள ஒரு பிறவி என்று சொல்லும் ஒரு வரி வசனங்களைக் கொண்ட நாடகம் இது.

ஒன் பில்லியன் ரைஸிங் பற்றி ஈவ் என்ஸ்லர் கொடுக்கும் முக்கிய அறிமுகம் இது.
‘ஒன் பில்லியன் ரைஸிங் என்ற இயக்கம் பெண்களுக்-கெதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வர தொடங்கப்பட்ட ஒன்று. ஒரு பில்லியன் பெண்கள், இவர்களை நேசிக்கும் ஆண்கள் எல்லோரும் இந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி அவரவர்களது அலுவலகங்-கள், பணியிடங்கள், பள்ளிகள், வீடுகள் ஆகியவற்றை விட்டுவிட்டு பெண்களுக்கெதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வர வீதியில் திரண்டு வாருங்கள் என நாங்கள் அறைகூவல் விடுத்து இன்னும் சரியாக ஒரு வருடம்கூட ஆக-வில்லை. அதற்குள் எங்களுக்குக் கிடைத்திருக்கும் வெற்றிகள் மிகப் பெரியவை.

‘பெண்களுக்கு எதிரான சமூகக் கட்டுக்களை, பலத்த மௌனங்களை உடைத்திருக்கிறோம். பல சமூக ஆர்வலர்களை ஆதரித்து அவர்கள் மூலம் பெண்களுக்கெதிரான பல விதிகளை மாற்றியிருக்-கிறோம். ஆனாலும் எங்கள் நோக்கம் இன்னும் முழுமை அடையவில்லை. ஐக்கிய நாடுகளின் ஆய்வறிக்-கையின்படி மூன்று பெண்களில் ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள்; வேலை செய்யும் இடங்களில் முதலாளிகளால் அடிக்கப்படுகிறாள். பல்வேறு விதமான வன்முறைக்கு ஆளாகிறாள். பெண் என்ற காரணத்தால் பலவிடங்களிலும் உரிமை மறுக்கப் பட்டிருக்கிறாள். இதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவையெல்லாம் சமூக மடமைகள்.

‘பெண்களுக்கெதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வர நாங்கள் மேற்கொண்டுள்ள இந்தப் பயணம் நீண்டது; எங்கள் முயற்சிகளை இன்னும் அதிகமாக்க வேண்டும். சக்தி வாய்ந்ததாகச் செய்யவேண்டும். ஆணாதிக்க அடக்குமுறை, பெண்ணுக்குரிய உரிமையை மறுத்தல் என்னும் சுவர்களை உடைத்து, பெண்களுக்கெதிரான வன்முறையை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் மனப்பான்மையை மாற்ற வேண்டும். இத்தகைய கொடுமைகளுக்கு இலக்காகி, உயிர் பிழைத்து வாழ்ந்து வரும் பெண்களுக்கு அவர்களது உடல், பலம், மனஉறுதி, ஆற்றல், அதிகாரம் ஆகியவற்றை மீட்டுத் தந்து, எங்களுக்கெதிரான கொடுமைகளை இனியும் பொறுக்க மாட்டோம் என்று இந்த உலகுக்குத் தெரிவிக்க வேண்டும்.

‘ஒன் பில்லியன் ரைஸிங் இத்தனை சீக்கிரம் பரவும் என்றோ வெற்றிகரமாக நிகழும் என்றோ நாங்கள் நினைக்கவே இல்லை. எங்களது குறிக்கோள் இந்த விழிப்புணர்வை மேலும் பரவலாக்குவது. நாங்கள் எந்தவிதமான அடையாளத்துக்குள்ளும் சிறைப்பட விரும்பவில்லை.

‘பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக ஒவ்வொரு நகரமும், ஊரும், கிராமமும், மனிதனும் மன உறுதியுடன் எழ வேண்டும். நாம் எதற்காக விழிப்புணர்வு பெற்று எழ வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும். பாலியல் அடிமைகளாக பெண்கள் இருப்பது நிறுத்தப்படவேண்டும். பெண்களின் பிறப்புறுப்பு சிதைக்கப்படுவதை நிறுத்த வேண்டும். நமது பெண்கள், அக்கா, தங்கைகள் கற்பழிக்கப்-படுவது நிறுத்தப்படவேண்டும். இளம் ஆண்களும் பெண்களும் வன்முறை இல்லாத பாலியல் உறவு-களை பற்றிய கல்வியறிவு பெற வேண்டும்.

‘இந்த ஒன் பில்லியன் ரைஸிங் பலரையும் ஒன்று  சேர்த்திருக்கிறது. இதுவரை ஒன்றாக இணையாத குழுமங்களும், தனி நபர்களும் இந்த நற்செயலுக்காக இணைந்திருக்கிறார்கள். புதிய மனிதர்கள், புதிய குழுமங்கள், பொதுமக்கள் என்று திரள், திரளாக கை கோர்த்திருக்கிறார்கள். இதனால் பெண்களுக்-கெதிரான வன்முறைகள் உலகம் முழுவதும் பட்டி-மன்றங்களில் பேசப்படும் விஷயமாகி-விட்டது. தனி மனிதர்களிடையே ஒரு தீவிர வெளிபாட்டை உருவாக்கியிருக்கிறது. பெண்களுக்கெதிரான வன்முறை-களுக்குக் காரணம் உலகெங்கும் பரவி-யுள்ள ஆணாதிக்க அடக்குமுறை என்ற உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. பெண்களுக்-கெதிரான அடக்குமுறை என்பது ஒரு தேசத்துக்கோ, இனத்துக்கோ, மதத்துக்கோ மட்டும் சொந்தமான விஷயம் இல்லை; இந்த வன்முறைகளுக்கு ஆளானது தங்கள் பிழை இல்லை; தங்களது குடும்பத்தின் தவறோ, தேசத்தின் தவறோ இல்லை என்பதை பெண்கள் உணர்ந்து தன்னம்பிக்கை பெறவும் இந்த ஒன் பில்லியன் ரைஸிங் உதவும்’.


எதிர்பாராத பல பகுதிகளில் இருந்தெல்லாம் இந்த எழுச்சிக்கு ஆதரவு கிடைத்திருப்பது ஆச்சரிய-மூட்டக்-கூடியதாக இருக்கிறது. ஆப்கனிஸ்தானிலும் பங்களாதேஷிலும் மக்கள் பேரணியாக நடந்து  சென்றிருக்கிறார்கள். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஒன் பில்லியன் எழுச்சி குறித்தும் பாலியல் கல்வி மற்றும் உறவுமுறை குறித்தும் விவாதங்கள் நடை-பெற்றிருக்கின்றன. பாலியல் வன்கொடுமைகள் குறித்தும் சட்டப்படியாக அவற்றை எதிர்கொள்வது குறித்தும் ஜெர்மனியில் 126 நகரங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. சோமாலியாவிலும் ஆஸ்திரே-லியா-விலும் உள்ள பெண்கள் ஒன் பில்லியன் எழுச்சியில் பங்கேற்றிருக்-கிறார்கள்.

எதற்காக இந்த எழுச்சியில் பங்கேற்கிறீர்கள் என்று கேட்கப்பட்டபோது ஓர் ஆப்கனிஸ்தான் பெண் சொன்ன பதில் இது.‘பெண்கள் கடத்தப்படு-வதை-யும் விற்கப்படுவதையும் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதையும் எதிர்க்கவேண்டும் என்பதற்காக இதில் கலந்துகொள்கிறேன்.’

உலகம் முழுவதிலும் ஆக்ரோஷமான அலைகளை ஏற்படுத்தியிருக்கும் ஒன் பில்லியன் இயக்கம் பெண்களின் விடுதலைப் போராட்டத்தில் ஒரு முக்கிய அத்தியாயமாகத் திகழும் என்று நம்பலாம்.

ஆழம் மாத இதழில் வந்த எனது கட்டுரையை படிக்க: 1 பில்லியன் எழுச்சி சொடுக்கவும்


எழுதியவர் திருமதி ரஞ்சனி நாராயணன்.

Saturday, July 12, 2014

தமிழரின் அளவை முறைகள்...

தமிழரின் அளவை முறைகள்...
<http://srikarpagasakthivinayagar.blogspot.com/2012/11/blog-post_8.html>

இந்த வலைப்பதிவின் மிக முக்கியமான பதிவு இது. தொடர்ந்து படித்து வரும்
நண்பர்கள் இந்த பதிவினை அச்செடுத்து வைத்துக் கொள்ளலாம். சித்தர்களின்
பாடல்களில் குறிப்பிட்டிருக்கும் அளவை முறைகள் குறித்து பலருக்கும் சந்தேகம்
இருக்கிறது.

சித்தர்களின் பாடல்களில் குறிப்பிட்டிருக்கும் அளவை முறைகளுக்கு ஈடான தற்போதைய
அளவைகளை குறித்த சந்தேகங்களுடன் தொடர்ந்து நிறைய மின்னஞ்சல்கள் வந்து
கொண்டிருக்கிறது.

எனவே அனைவரின் சந்தேகங்களை விளக்கும் பொருட்டும், மற்றவர்கள் அறிந்து கொள்ளவும்
இந்த பதிவினை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்...


முகத்தல் அளவைகள்


ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.

ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.

ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.

ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.

ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.

ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.

ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.

ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.

ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.



முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.

ஐந்து சோடு = ஒரு அழாக்கு.

இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.

இரண்டு உழக்கு = ஒரு உரி.

இரண்டு உரி = ஒரு நாழி.

எட்டு நாழி = ஒரு குறுணி.

இரண்டு குறுணி = ஒரு பதக்கு.

இரண்டு பதக்கு = ஒரு தூணி.

மூன்று தூணி = ஒரு கலம்.



நிறுத்தல் அளவைகள்


மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை.

முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.

பத்து விராகன் எடை = ஒரு பலம்.

இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.

ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.

மூன்று தோலா = ஒரு பலம்.

எட்டு பலம் = ஒரு சேர்.

நாற்பது பலம் = ஒரு வீசை.

ஐம்பது பலம் = ஒரு தூக்கு.

இரண்டு தூக்கு = ஒரு துலாம்.



ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.

ஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.

ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)

ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.

ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.

ஒரு விராகன் = நான்கு கிராம்.



கால அளவுகள்


இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாளிகை.

இரெண்டரை நாளிகை = ஒரு மணி.

மூன்றே முக்கால் நாளிகை = ஒரு முகூர்த்தம்.

அறுபது நாளிகை = ஒரு நாள்.

ஏழரை நாளிகை = ஒரு சாமம்.

ஒரு சாமம் = மூன்று மணி.

எட்டு சாமம் = ஒரு நாள்.

நான்கு சாமம் = ஒரு பொழுது.

ரெண்டு பொழுது = ஒரு நாள்.

பதினைந்து நாள் = ஒரு பக்கம்.

ரெண்டு பக்கம் = ஒரு மாதம்.

ஆறு மாதம் = ஒரு அயனம்.

ரெண்டு அயனம் = ஒரு ஆண்டு.

அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.

தமிழறிந்த அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இவை... எனவே
இயன்றவரையில் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...


தொகுத்து அளித்தவற்றைப் பகிர்ந்தவர் திரு வெ.ஓம்,சுப்பிரமணியன் ஐயா அவர்கள்.


ரெண்டு கண்ணிமை = ஒரு நொடி; ரெண்டு நொடி = ஒரு  மாத்திரை; ரெண்டு மாத்திரை = ஒரு குரு; ரெண்டு குரு = ஒரு உயிர்; ரெண்டு உயிர் = ஒரு சணிகம்; பன்னிரெண்டு சணிகம் = ஒரு விநாடி; அறுபது விநாடி = ஒரு நாழிகை; இரண்டறை நாழிகை = ஒரு ஓரை; மூன்றரை நாழிகை = ஒரு முகூர்த்தம்; ரெண்டு முகூர்த்தம் = ஒரு சாமம் ; நாலு சாமம் = ஒரு பொழுது; ரெண்டு பொழுது = ஒரு நாள்; பதினைந்து நாள் =  ஒரு பக்கம்; ரெண்டு பக்கம் = ஒரு மாசம்; ஆறு மாசம் = ஒரு அயனம்; ரெண்டு அயனம் = ஓராண்டு; அறுபது ஆண்டு = ஒரு வட்டம்


அளித்தவர் திரு பிரகாஷ் சுகுமாரன்


Sunday, July 6, 2014

யானை வலசை.. நிகழ்வின் பதிவு


--பிரகாஷ் சுகுமாரன்



   
 ” ஆனை மலை “ - தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அடர்ந்த வனம் சூழ்ந்த மலைகள் இப்பெயரில் வழங்கப்படுகின்றன.  இன்றைக்கு அந்த மலைகள் எல்லாம் யானையின் வடிவை பிரதிபலிக்கிறது என்பது மட்டும்தான் பெயருக்கு சுட்டி காட்டப்படும் ஒரே காரணம். ஆனால் வடிவத்தை கடந்து இன்னும் ஒரு ஒற்றுமை உள்ளது. எங்கெல்லாம் ஆனை மலை உள்ளதோ, அந்த வனப்பகுதிகள் எல்லாம் ஒரு காலத்தில் ஏராளமான யானைகள் கூட்டம் கூட்டமாக வசித்த வனச்சரணாலயங்களாக இருந்தவை என்பதுதான்.

 பரந்த பாரதத்தின் பல்வேறு வனங்களையும், மலைகளையும், ஆறுகளையும் கடந்து சென்ற தமிழர்கள் பல நாடுகளை வெற்றி கொள்ள உதவிய 94 யானை பாதைகள் கண்டறியப்பட்டு உள்ளன. பிற்காலத்தில் இந்த பாதைகள் பெரு வழிப்பாதைகளாகவும், ராஜபாட்டைகளாகவும் மாறிய பிறகு மறையத் தொடங்கிய யானைகளின் வழித்தடங்களுடன், யானைகளும் அழியத் தொடங்கின. தற்போது இந்தியா முழுவதும் உருவாக்கப்பட்டுள்ள தேசிய - மாநில நெடுஞ்சாலைகளும், நான்கு கரச் சாலைகளும், யானை வலசை செல்லும் பாதைகளை முற்றிலும் ஆக்கிரமித்து விட்டதால், யானைகளின் வாழ்வியல் கேள்விக்குறியதாகி, அருகி வரும் இனமாக, விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன, “ காட்டு யானைகள் ”.

 மனித இனப்பரவலுக்கும், நாகரீக வளர்ச்சிக்கும் காரணமாக இருந்தவை ஆற்றங்கரைகள். அதற்கு அடுத்தபடியாக பல்வேறு குழுக்களாக, சமூகங்களாக வாழ்ந்த மனிதர்கள் பல நாடுகளுக்கும், தொலைதூர பகுதிகளுக்கும் இடப்பெயர்ச்சி செய்யவும், பரந்த நிலப்பகுதிகளில் ஆங்காங்கே வசித்தவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தொடர்புகளுக்கும் அதி முக்கிய காரணமாக இருந்தது, “ யானை வலசை “ எனப்படும் யானை பாதைகள். கடல் சூழ்ந்த கண்டங்களுக்கு இடையே உள்ள இடைவெளியை கடக்க, மனிதர்களின் கடல் வழி பயணத்துக்கு எப்படி ஆமைகள் வழிகாட்டி உதவி செய்தனவோ, அதேபோல மனிதர்கள் உருவாக்கிய நாடுகளுக்கு இடையிலான அடர்ந்த காடுகளை கடந்து, வேற்று நாட்டு எல்லைகளை சென்றடைய யானைகளின் வழித்தடங்கள் உதவி செய்தன. இயற்கையில் பிறந்து, இயற்கையோடே வளர்ந்த மனித இனம், நாகரீக வளர்ச்சியின் வேகத்தில் தங்களின் இயல்புகளையும், இயற்கையையும் மறந்து போனதால், சக உயிரினங்களுடன் மட்டுமல்ல, சக மனிதர்களுடன் ஒருமித்து வசிக்கும் சகிப்புத் தன்மையை கூட இழந்து வருகிறார்கள்.

 திருவண்ணாமலையின் அருகே தண்டராம்பட்டை ஒட்டி, சேலம் செல்லும் பாதையில் ஒரு ஆனை மலை உள்ளது. அடர்ந்த வனப்பகுதியாகவும், வன உயிரினங்களுக்கு தேவையான உணவும், நீர்வளமும் நிறைந்த, யானைகளுக்கு சிறந்த மறை-உறைவிடமாகவும் இருப்பது இந்த ஆனைமலை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை இந்த ஆனைமலை, மத்திய - மாநில அரசுகளின் ” ஆப்பரேஷன் மலை “ என்ற செயல்திட்டத்தின்கீழ், கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. காரணம், ஏப்ரல் மாதம் ஜவ்வாது மலையில் இருந்து வலசை கிளம்பிய யானை கூட்டம் ஒன்று திரும்ப வரும்போது அவற்றை உயிரோடு பிடித்து முதுமலை மற்றும் ஆனைமலை வனச்சரணாலயங்களுக்கு கொண்டு செல்வது அரசாங்கத்தின் திட்டம். சுதந்திரமாக தாங்கள் வசிக்க யானைகளே தேர்ந்தெடுத்து கொண்டுள்ள, இயற்கையான இந்த ஆனைமலையில் இருந்து யானைகளை பிடித்து சென்று, வன விலங்குகளின் வதை முகாமாக மாற்றப்பட்டு விட்ட வேறொரு ஆனைமலைக்கு கொண்டு செல்வது என்பது அப்படியொரு சிறப்பான திட்டமா என்ற கேள்வி தானாகவே எழுகிறது. இப்படியொரு முடிவை அரசாங்கம் எடுப்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ளும் முன்பாக, வலசை சென்ற யானைகளின் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.

 தென்னிந்திய மாநிலங்களான தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் உள்ள வனப்பகுதிகளில், தற்போது 4000 யானைகள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வருகின்றன. இடப்பெயர்ச்சி என்பதை தங்கள் வாழ்வியல் பாதையாக கொண்டுள்ள யானைகள், காவேரி, பாலாறு, வடபெண்ணை, தென்பெண்ணை ஆகிய ஆறுகள் உற்பத்தியாகும் கர்நாடக மாநிலத்தின், நந்திமலை, குடகு மலை ஆகிய மலைகள் அமைந்துள்ள மைசூர் வனப்பகுதியில் இருந்து, வடபெண்ணை ஆற்றையொட்டிய வனப்பகுதிகள் வழியாக தங்கள் வலசையை தொடங்கும். ஆந்திர மாநிலத்துக்குள் நுழைந்து, அங்கிருந்து பாலாற்றங்கரையில் பயணித்து தமிழக எல்லையில் உள்ள வேலூர் மாவட்டத்துக்குள் நுழையும் யானைகள், அங்கு பிரியும் இரு யானை பாதைகளில் ஒன்றான கிருஷ்ணகிரி - தர்மபுரி வனங்களின் வழியாக பயணித்து, ஜவ்வாது மலையை அடைந்து அங்கே சில காலம் தங்குவது வழக்கம். பிறகு விழுப்புரம் அருகே கல்வராயன் மலை - சேலத்தின் அருகே உள்ள சேர்வராயன் மலை - கோவை வழியாக பயணித்து மீண்டும் மைசூர் வனப்பகுதியை சென்றடையும். இதில் கோவை வழியாக பயணிக்கும் யானைகள் அங்குள்ள ஆனைமலை, நீலகிரியை கடந்து கேரளாவுக்குள் சென்று திரும்புவது, யானைகளின் வேறொரு வலசை பாதை.

 ஒருகாலத்தில் முதுமலை வனச்சரணாலயம் என்பது கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தமிழகம் ஆகிய பகுதிகளை சேர்ந்த யானை கூட்டங்கள் சந்தித்து, தங்கி, ஒன்றையொன்று அளவளாவி செல்லும் உண்மையான வனச்சரணாலயமாக விளங்கியது. யானை பாதைகள் முழுவதுமாக துண்டிக்கப்பட்டு விட்ட நிலையில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான யானை கூட்டங்களையும், வன உயிர்களையும் வாழ்வித்த அந்த முதுபெரும் மலை, இன்று யானைகளை அடைத்து வைக்கும் முகாமாகி விட்டது.


 
கர்நாடகம், ஆந்திரா ஆகிய பகுதிகளிலிருந்து வரும் யானைகள் வேலூரில் பிரியும் மற்றொரு வலசை பாதை வழியாக பேரணாம்பட்டை கடந்து, ஆந்திர மாநிலத்தின் குப்பம் - சித்தூர் வனப்பகுதியில் பயணித்து, திருப்பதி மலையை சூழ்ந்துள்ள சேஷாசலம் வனப்பகுதியில் தங்கும். பிறகு அங்கிருந்து வலசை தொடங்கி, சென்ற வழியிலேயே திரும்பி வந்து ஜவ்வாது மலையில் தங்கும். அங்கிருந்து விழுப்புரம் - அரூர் - தர்மபுரி - கிருஷ்ணகிரி, வேலூர் வழியாக பேரணாம்பட்டு அருகே ஆந்திரத்துக்குள் திரும்ப செல்லும். ஜவ்வாது மலை, சேஷாசலம் வனப்பகுதிகள் இரண்டுமே சந்தன மரங்களுக்கு மிகவும் பெயர் பெற்ற பகுதிகள். கடந்த 30 ஆண்டுகளில் இந்த யானை பாதைகள் சிறிது, சிறிதாக ஆக்கிரமிக்கப்பட்டு, தற்போது முற்றிலுமாக மறைந்து விட்டதால், அந்தந்த வனப்பகுதிகளில் இருந்த யானைகள் மற்ற பகுதிகளுக்கு வலசை செல்ல முடியாமல் ஆங்காங்கே தங்கிவிட்டன.

 கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பாக ஜவ்வாது மலையை வந்தடைந்த யானை கூட்டம் ஒன்று மீண்டும் தங்கள் வனத்தை சென்றடைய முடியாததால், ஜவ்வாது மலையிலேயே தங்கி அங்கிருந்து விழுப்புரம் - சேலம் - தர்மபுரி - கிருஷ்ணகிரி - வேலூர், மீண்டும் ஜவ்வாது மலை என தங்கள் பாதையை புதிதாக மாற்றி அமைத்து கொண்டன.

 வன உயிரின சங்கிலியின் முக்கிய இடத்தை பெற்றுள்ள யானைகள் வலசை செல்வதன் முக்கிய நோக்கம் இனப்பெருக்கம். கோடைக்காலம் தொடங்கியதும் தங்களின் வசிப்பிடத்தை விட்டு கூட்டமாக கிளம்பும் யானைகள் இனப்பெருக்கம் செய்வதற்கான இடத்தை தேடி செல்லும். காலாகாலமாக சென்று வரும் வழித்தடங்கள் அவற்றின் நினைவில் பதிந்து இருப்பதால், அதே வழிகளில் தடம் மாறாமல் வலசை செல்லும். யானை கூட்டங்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகியவை நிறைந்திருக்கும் வழித்தடங்களை சிறிதும் மாற்றாமல், மிகச்சரியாக அதே பாதைகளில் பயணிப்பதாலேயே, அவை ” யானை பாதைகள் “, என அழைக்கப்படுகின்றன.

தற்போது மனிதர்களின் பெருக்கத்தாலும், பேராசையாலும் காடுகளின் எல்லைகள் குறுகி வருவதுடன், யானைகள் வலசை செல்லும் பாதைகள் ஆக்கிரமிப்புக்குள்ளாகி கிராமங்களாகவும், ஊர்களாகவும் மாறி விட்டன. அடர்ந்த வனப்பகுதிகளையும் நிரவி உருவாக்கப்பட்டு வரும் ரிசார்ட்டுகள், கேலிக்கை விடுதிகள் ஆகியவை யானைகளின் வழித்தடங்களை முற்றிலுமாக அழித்து விட்டன. எனவே வலசை செல்லும் யானைகள் தங்களின் குடியிருப்புகளையும், வயல்வெளிகளையும் சேதப்படுத்துவதாக மனிதர்கள் எழுப்பிய கூக்குரல், யானைகளின் உயிர்களுக்கு சேதம் விளைவிக்கத் தொடங்கியது.

 கடந்த 8 ஆண்டுகளில் ஜவ்வாது மலையில் இருந்து வலசை சென்ற யானைகளின் வழியில் எதிர்பட்டும், விரட்ட முயன்றும் இறந்த மனிதர்களின் எண்ணிக்கை 15. அதே காலகட்டத்தில் மனிதர்கள் ஏற்படுத்திய மின்சார வேலிகளிலும், ரயில் விபத்து, சாலை விபத்துகளிலும் சிக்கி இறந்த யானைகளின் எண்ணிக்கை 30ஐ தாண்டி விட்டது. தந்தங்களுக்காகவும், வீர தீர விளையாட்டுக்களுக்காகவும் கொல்லப்பட்ட யானைகளின் எண்ணிக்கை அரசாங்கத்தின் தாள்களில் இடம் பெறுவதில்லை என்பதால், எண்ணிக்கை தெரியாமல் போனது.

 யானைகளால் மனிதர்களுக்கும் - மனிதர்களால் யானைகளுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அறிவதற்கு முன்பாக, யானைகளின் வாழ்வியலை அறிந்து கொள்வது ஆறறிவு படைத்ததன் அடிப்படை என்பதால், கடந்த 8 ஆண்டுகளாக தங்கள் சொந்த வனங்களுக்கு செல்ல முடியாமல் தவித்த யானை கூட்டம், மக்கள் கூட்டத்திடம் பிடிபடுவதற்கு முன் உணர்த்திய வாழ்வியல் தகவல்களை பதிவு செய்வது அவசியம்.

 பெரும் எண்ணிக்கை கொண்ட கூட்டமாக வந்த யானைகள் சிறிது சிறிதாக குறைந்து 8 ஆண்டுகளுக்கு முன் 34 யானைகள் கொண்டதாக சுருங்கியது. ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தில் உணவு, நீர் தேவைக்காகவும், இயற்கையான தங்கள் இயல்பின்படி இனப்பெருக்கத்துக்காகவும் இந்த யானைகள் வலசை கிளம்பும். யானைகளை பொறுத்தவரையில், ஆண்டுதோறும் அந்த கூட்டத்தின் தலைவனாக ஒரு ஆண் யானை தேர்வு செய்யப்பட்டு, அந்த கூட்டத்தில் உள்ள பெண் யானைகள் அதற்கு உரியவையாக மாறி இனப்பெருக்கம் செய்வது வழக்கம். எனவே ஆண் யானைகளுக்குள் யார் பலசாலி என்ற போட்டி ஏற்படுவதுடன், பெண் யானைகளின் நம்பிக்கைக்கும், நேசத்துக்கும் உரிய ஆண் யானை தலைவனாக தேர்ந்தெடுக்கப்படும். கிட்டதட்ட 2-3 டன் எடையுடன், பருத்த உடல் கொண்ட யானைகள், இயல்பாக இனப்பெருக்கம் கொள்வது எளிதான காரியமல்ல. யானைகளின் கூட்டத்தில் உள்ள பெண் யானைகளில் மூத்தது, அந்த கூட்டத்தை வழி நடத்துவதாக ஒரு கருத்து காலாகாலமாக உள்ளது. ஆனால் கூட்டத்தின் வரிசையில் முதலில் செல்லும் அந்த பெண் யானை, தனது கூட்டம் செல்ல வேண்டிய பாதையை நினைவில் வைத்து செல்லுமே தவிர கூட்டத்துக்கு தலைவியாக இருப்பதில்லை. யானைகளின் இயல்புகளை அறிந்தவர்களால் டஸ்கர், டரிக்கி, ஒத்த கொம்பன் என பல பெயர்களில் குறிப்பிடப்படும் ஆண் யானையின் தலைமையில்தான் மற்ற யானைகளும், குட்டிகளும் வலசை செல்லும். தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண் யானை எப்போதும் வரிசையாக செல்லும் யானை கூட்டத்தின் கடைசியில் வரும். அந்த யானைகளுக்கு ஆபத்து வரும் நேரங்களில் மட்டும், இந்த டரிக்கி முன்னால் சென்று மற்ற யானைகளை பாதுகாப்பான வனப்பகுதிகளுக்குள் விரட்டி விட்டு, ஆபத்துகளை தனியாக எதிர்கொள்ளும்.

 கூட்டத்தின் தலைவனாக உள்ள ஆண் யானை தங்களை காப்பாற்ற தவறும் நிலையில், அந்த கூட்டத்தில் உள்ள பலசாலியான, புத்திசாலியான வேறொரு ஆண் யானையை தங்கள் தலைவனாக ஏற்று கொண்டு, மற்ற யானைகள் வலசையை தொடரும். இனப்பெருக்கத்துக்கு உகந்த சூழல் அமையும் போதெல்லாம் பெண் யானைகளுடன் தலைவனாக உள்ள ஆண் யானை கூடத் தொடங்கும். வலசை முடிந்து தங்கள் சொந்த வனத்துக்கு திரும்பியதும் பெண் யானை குட்டிகளை ஈனும். வலசை முடிந்து திரும்பும் வரை கூட்டத்தில் உள்ள யானைகளை, குறிப்பாக குட்டிகளை, தனது உயிரை கொடுத்தாவது பாதுகாக்க வேண்டும் என்பது தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட்ட யானையின் முக்கிய கடமை. அதில் தவறினால், அந்த ஆண் யானை கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, தனித்து விடப்படும். இப்படி தனித்து விடப்படும் யானைகளே, ஒத்தை யானைகள் என்ற பெயரில் மதம் பிடித்து அலைந்து, காட்டை துவம்சம் செய்யும்.

 பொதுவாகவே கூச்ச சுபாவமும், வெட்கமும் கொண்ட காட்டு யானைகள், காட்டை விட்டு வெளிப்படவே அச்சப்படும். வனங்களுக்குள் அவை செல்லும் பாதையில் மனிதர்கள் தென்பட்டால், உடனே அருகில் உள்ள மரங்கள், புதர்கள், பாறைகளுக்கு பின் சென்று மறைந்து கொள்ளும் வழக்கம் கொண்டவை. இதையெல்லாம் மீறி அவை வழக்கத்துக்கு மாறாக வெளிப்படுவதே அபூர்வம். அப்படி வெளிப்படுகிறது எனில் அவற்றின் வாழ்வியல் தன்மையில், பாதையில் தடை, மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.

 கடந்த ஆண்டு 9 யானைகள் கொண்ட கூட்டமாக வலசை செல்ல தொடங்கிய யானைகள், ஜவ்வாது மலையை விட்டு இறங்கும்போது, கூட்டத்தின் பாதுகாப்பில் ஓடியாடி விளையாடிய குட்டி யானை ஒன்று, அத்திப்பட்டு என்ற கிராமத்தில் வயல்வெளியை பாதுகாக்க போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்தது. இதனால் வருத்தத்தில் ஆழ்ந்த யானைகள் குட்டி யானையின் உடலுக்கு பாதுகாப்பாக 3 நாட்கள் உணவருந்தாமல் நின்றன. பிறகு வலசை செல்வதை கைவிட்டு மீண்டும் ஜவ்வாது வனப்பகுதிக்கு திரும்பும் வழியில் இருந்த 3 மின்கம்பங்களை முட்டி தள்ளி சாய்த்தன.

 கடுமையான கோடையில் வறண்டிருந்த வனத்திற்குள் இரண்டு வார கால துக்கம் கழிந்து, மீண்டும் வலசை கிளம்பியபோது, ஜவ்வாது மலை - அத்திப்பட்டு - கலசபாக்கம் - புதுப்பாளையம் - ஆனைமலை என்று இருந்த தங்கள் வழக்கமான பாதையை மாற்றி, மேல்பட்டு - பரமனந்தல் - செங்கம் வழியாக ஜவ்வாது மலையிலிருந்து செங்குத்தான, ஆபத்து நிறைந்த, மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத மலைப்பாதையில் கீழிறங்கிய யானைகள், பெங்களூர் நெடுஞ்சாலையை கடந்து தண்டராம்பட்டு வனத்தில் புகுந்து ஆனைமலையை சென்று அடைவதற்குள், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டு வெடிகளும், ராக்கெட்களும், பட்டாசு சரங்களும் அவற்றின் உடலை பதம் பார்த்தன. நீர் நிலைகளின் அருகில் வைக்கப்பட்டிருந்த தீப்பந்தங்களையும், வயல்வெளிகளை சுற்றி அமைக்கப்பட்ட மின்சார வேலிகளையும் கண்டு காட்டு யானைகள் மிரண்டு ஓடின. அப்படி ஓடிய யானை கூட்டத்தின் வழக்கமான பாதையில் உருவாகியிருந்த குடியிருப்புகளில் ஓரிரு வீடுகள் யானைகளின் கால்களில் சிக்கி சின்னாபின்னமாகின. இதன் எதிரொலியாக காட்டு யானைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு என ஊடகங்கள் பெரிதாக கொளுத்தி, தங்களை சுற்றி உருவாக்கிய காட்டுத்தீயை பாவம் அந்த யானைகள் படித்து அறிந்திருக்க வாய்ப்பில்லை. வழக்கத்துக்கு மாறாக 20 நாட்களுக்கும் மேல் ஆனைமலையை விட்டு வெளிப்படாமல் தங்கியிருந்த யானைகள் மீண்டும் வலசை கிளம்பி, சேலம் நெடுஞ்சாலையை கடந்து சாத்தனூர் வனத்தை அடைந்து, சில நாட்களுக்கு பிறகு விழுப்புரம் மார்க்கத்தில் அரூர், தர்மபுரி வழியாக கிருஷ்ணகிரியை சென்று அடைந்தன.

 பல வருடங்களாக ஆந்திரத்துக்கு செல்ல முடியவில்லையே என்ற கோபமோ, ஏக்கமோ ஏற்பட்டதால், அங்கிருந்து நான்கு கரச் சாலையை கடக்க முயன்றபோது, வனத்துறை மற்றும் காவல்துறையினரின் கைகளில் இருந்து வெடித்த துப்பாக்கி தோட்டாக்கள் அவற்றின் கால்களில் காயங்களை ஏற்படுத்தின. அந்த இடி சத்தத்தில் இருந்து தப்பி பிழைக்க ஓடிய யானைகளின் கூட்டம் கலைந்து, சேலம் மார்க்கத்தில் வனத்தை தேடி ஒரு கூட்டம், தர்மபுரி மார்க்கத்தில் ஒரு கூட்டம் என இரண்டு பிரிவாக பிரிந்தன. இதில் சேலம் நோக்கி விரைந்த கூட்டத்தில் ஒரு யானை மீது துப்பாக்கி மூலம் பொருத்தப்பட்ட ஜிபிஆர்எஸ் கருவி, அவற்றின் நடமாட்டத்தை தெரிவித்ததால், நின்று நிதானிக்க கூட நேரமில்லாமல், அந்த யானைகள் தொடர்ந்து விரட்டப்பட்டன.

 தடம் தெரியாமல் ஓடிய யானைகள் அரூரை கடந்தபோது, தங்கள் வழித்தடத்தை உணர்ந்து மீண்டும் தர்மபுரிக்கு திரும்பத் தொடங்கின. அங்கு ஏற்கனவே பிரிந்து சென்ற யானைகளை கண்டுபிடித்து சென்றடைந்தபோது, சில நாட்களுக்கு முன் 9 யானைகளாக இருந்த கூட்டம் ஏழாக குறைந்திருந்தது. இதனால், யானைகளை பாதுகாக்க தவறிய, கூட்டத்தின் தலைவனான டரிக்கி யானையை விட்டு பிரிந்த மற்ற 6 யானைகள் மீண்டும் ஜவ்வாது மலைக்கு திரும்பின. இப்படி ஓராண்டுக்கு முன் தனது கூட்டத்தில் இருந்து விரட்டப்பட்டு, தனித்து விடப்பட்ட ஆண் யானை இப்போதும் தர்மபுரி வனத்தில் ஒத்தை யானையாக திரிந்து வருகிறது. மீண்டும் இதனால் தன் கூட்டத்துடன் இணைய முடியாது.

 இந்த ஆண்டு புதிய தலைவனாக தேர்வான டரிக்கி யானை, வலசை கிளம்பியதில் இருந்து, திரும்பும் வரை ஒரே ஒரு மனிதனை கூட தாக்காமல் கவனமாக கூட்டத்தை வழி நடத்தியது. மீறி அருகில் வந்து தாக்க முயன்றவர்களை விரட்டியதுடன் சரி, யாரையும் தாக்கவில்லை. குட்டிகளின் மீது வெடிகள் விழாமல் வழிமாற்றி நடத்தியபோது, தன் மீது விழுந்த வெடிகள் ஏற்படுத்திய பெருங்காயங்கள், கடுமையான வலியை ஏற்படுத்திய நேரங்களில் மட்டும், ஆத்திரமடைந்தது. அப்போதும் மாடுகள், ஆடுகள் ஆகியவற்றை மட்டும் தாக்கி கொன்று தன் கோபத்தை வெளிப்படுத்தியது. மாலை 6 மணிக்கு மேல் உணவு - நீர் தேடி, காட்டை விட்டு வெளிப்பட்டு அதிகாலையில் திரும்பி காட்டுக்குள் சென்று விடும் தங்கள் வழக்கத்தை கூட மாற்றி கொண்டு, பிற்பகல் 3 மணிக்கு வெளிவந்து, 6 மணிக்கு யானைகள் திரும்பி செல்ல தொடங்கின. சில ஆண்டுகளுக்கு முன் ஒருநாளைக்கு சராசரியாக 140 கிலோ உணவும், 30 லிட்டர் தண்ணீரும் குடித்து வந்த இந்த யானைகள், இதற்காக தாங்கள் படும் காயங்களுக்கு பயந்து, இப்போது சராசரியாக 10 கிலோ உணவும், 5 லிட்டர் நீரும் மட்டுமே உட்கொள்கின்றன. இனப்பெருக்கக் காலத்தில் மட்டுமே கூடுதல் உணவு தேடுகின்றன. அப்போது தங்கள் வழியில் குறுக்கிட்டவர்களையும், விரட்டியவர்களையும் கண்டு அஞ்சி, ஒதுங்கி சென்றன.
 
 நெடுஞ்சாலையில் யானைகளை விட பெரிய உருவில் வரிசை கட்டி நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் நவீன ரக துப்பாக்கிகளுடனும், மயக்க மருந்து நிரம்பிய தோட்டாக்களுடனும் காத்திருந்த வேட்டைக்காரர்கள், வாகனங்களில் இருந்த சிறு துவாரங்களில் கண் பதித்திருந்தனர். யானைகள் வழக்கமாக வந்து செல்லும் அந்த பாதையில் கரும்பு கட்டுகளும், கம்பு, கேழ்வரகு, வெல்லம், மரக்கிளைகள் உள்ளிட்ட யானைகளுக்கு பிடித்தமான உணவுகள் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டு உள்ளன. சொகுசு வாகனங்களில் அமர்ந்திருந்த உயரதிகாரிகள் தங்களுக்கு வேண்டப்பட்ட சிலரை யானை வேட்டையை பார்க்க அழைத்து வந்திருந்தனர். தண்டராம்பட்டு முதல் தானிப்பாடி வரை நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. அரசு - தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், வியாபார நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. சுற்றுவட்டாரத்தில் 48 பஞ்சாயத்துகளில் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு, பொதுமக்கள் வெளியேறாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

 அதையெல்லாம் மீறி கிட்டதட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அருகில் இருந்த குன்றுகள், மின்தடை செய்யப்பட்ட டிரான்ஸ்பாரங்கள், உயர்ந்த கட்டிடங்களில் நின்றபடி நடப்பதை ஆவலுடன் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். உயர்ந்த கோபுரங்களில், குன்றுகளில் ஏராளமான சீருடை பணியாளர்கள் சப்தமெழுப்பிய பொதுமக்களை அதட்டி விட்டு, பைனாகுலரில் வனத்தையே உற்று பார்க்கின்றனர். ஆனைமலை பகுதிக்கு வரும் சாலைகள் 5 கட்டங்களாக முழுவதுமாக சுற்றி வளைக்கப்பட்டு, போக்குவரத்து அடைக்கப்பட்டு இருந்தது. காட்டுக்குள் கும்கி யானைகள் மீதேறி சென்ற பாகர்கள், யானைகளின் நடமாட்டத்தை அவ்வப்போது உயரதிகாரிகளுக்கு வாக்கி டாக்கிகளில் சொன்னபடி இருந்தனர். உயரதிகாரிகள் தவிர்த்து சுமார் 400 வனத்துறை ஊழியர்கள், 1400 காவல்துறையினர், 300 அதிரடி படையினர், 150 வருவாய் துறையினர், 120 பாகர்கள், 6 கும்கி யானைகள், 800 பேர் கொண்ட தன்னார்வலர்கள் ஆகியோர் யானை வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

 மூன்றாவது நாளாக யானைகளின் வேட்டைக்காக காத்து கொண்டுள்ளனர். காட்டுக்குள் சென்று அந்த யானைகளை பிடிக்க வாய்ப்பில்லை என்பதால், அவை காட்டை விட்டு வெளியேறும் அத்தனை வழிகளிலும் இதுபோன்ற ஒரு கூட்டம் காத்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் மனிதர்களின் தந்திரங்களை உணர்ந்து, யானைகள் தங்கள் பாதைகளை மாற்றி கொள்வதால் அவற்றை பிடிக்க முடியாத நிலை நீடிக்கிறது. கும்கி யானைகளுடன் காட்டுக்குள் செல்லும் பாகர்கள், காட்டு யானைகளை நெருங்கும்போதெல்லாம், டரிக்கி யானை முன்வந்து விரட்டுவதும், பெண் யானை மற்ற யானைகளை அடர்ந்த வனத்துக்குள் அழைத்து சென்று விடுவதும் தொடர்ந்ததால், முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. டரிக்கி யானை மிகவும் சாமர்த்தியமாக மற்ற யானைகளை விரட்டி, வழிநடத்தி காப்பாற்றியது. எனவே இந்தமுறை காட்டை விட்டு வெளியேறும் யானைகளை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்பது உயரதிகாரிகளின் கண்டிப்பான உத்தரவு. எனவே வேட்டைக்காரர்களை போலவே யானை பாகர்களுக்கும் நவீன ரக துப்பாக்கிகள் வழங்கி, அவற்றை கையாளும் முறைகளை சொல்லி கொடுத்திருந்தனர்.

 கடந்த வாரம் வலசை முடித்து விழுப்புரம் அருகே கல்வராயன் மலை வழியாக திரும்பி வந்த காட்டு யானைகள் மீண்டும் காட்டுக்குள் சென்று விட முடியாதபடி, 5 குழுவாக வனத்துறை மற்றும் காவல்துறையை சேர்ந்த சுமார் 1500 பேர், மணலூர்பேட்டையில் இருந்து சாலை வழியாகவே சுமார் 40 கிலோமீட்டர் தூரம் விரட்டி வந்தனர். இம்முறை வலசை சென்றதன் சாட்சியாக, அந்த கூட்டத்தில் பெரிதாக இருந்த பெண் யானை கர்ப்பமாகி இருந்தது. அதன் கால் உயரம் கூட இல்லாத குட்டி யானை உட்பட ஐந்து யானைகளும், கர்ப்பிணி யானையை வரிசையின் நடுவில் நிறுத்தி முன்பின்னாக பாதுகாப்பு அளித்து நடந்தன. சாலையை விட்டு இறங்க முயன்ற போதெல்லாம் யானைகளின் அருகில் வெடிகள் வீசப்பட்டன.  சுற்றி நடப்பதை புரிந்து கொள்ள முடியாத யானைகள், என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் என்ற எண்ணத்தில் பலமாக ஒலித்த முரசுகளின் சத்தத்தில், தார் சாலையில் வரிசையாக நடைபோட்டன. தலையாம்பள்ளம் என்ற இடத்தை நெருங்கியதும் வட்டமாக சிறிது நேரம் நின்று சுற்றுமுற்றும் பார்த்த யானைகள், சட்டென ஓட்டமெடுத்து, அதிகாரிகள் சுதாரிப்பதற்குள் சாலையை விட்டு இறங்கி, கரும்பு தோட்டங்களுக்கு இடையில் ஓடி, அடர்ந்த வனப்பகுதிக்கு சென்று விட்டன. ஆட்களை, வெடிகளை திரட்டி சுற்றி வளைப்பதற்குள், பிரம்மாண்டமான உடல்களுடன் காணாமல் போன யானைகள், இரு தினங்களுக்கு பிறகு சாத்தனூர் அணை அருகே திரிவதாக தகவல் கிடைத்தது. அத்தனை கிராம மக்களின் கண்களில் மண்ணை தூவி விட்டு, 50 கிலோமீட்டர் தொலைவை எந்த தடமும் இல்லாமல் எப்படி கடந்தன என்பது அத்தனை பேருக்கும் ஆச்சரியமாகவே இருந்தது.
சாத்தனூர் வனத்தில் இருந்து ஆனைமலை வழியாக செங்கம் சென்று அங்கிருந்து ஜவ்வாது மலைக்கு செல்வது யானைகளின் வழக்கம். எனவே அவற்றின் பாதையில் குறுக்கிடாமல் ஆனை மலைக்கு வரும்போது, மீண்டும் சாலை வழியாகவே செங்கம் வரை ஓட்டி சென்று, அங்குள்ள 14000 ஏக்கர் பரப்பளவுள்ள பண்ணையில் வைத்து யானைகளை மயக்கமடைய செய்து, கொண்டு செல்வது அதிகாரிகளின் முதல் திட்டம். இதை புரிந்து கொண்டதாலோ என்னவோ, இரவு நேரத்தில் கண்காணிப்பு வளையத்தை மீறி வேறு வழியில் ஆனைமலை வனத்துக்குள் புகுந்த யானைகள் அங்கிருந்து வெளியேறாமல் நின்று விட்டதால், அவற்றை வேட்டையாட வந்தவர்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. தங்களை பிடிக்கவென்றே போடப்பட்டிருந்த உணவையும் உட்கொள்ளாமல், வறண்ட காடுகளிலும் உணவு கிடைக்காமல் தவித்த யானைகள், வேறு வழியில்லாமல் வெளியேறும் போது, அவற்றை அங்கேயே சுட்டு பிடிக்க புதிய திட்டம் உருவானது. குறிப்பாக கர்ப்பிணியான பெண் யானைக்கு உணவு உட்கொண்டே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

 மாலை 5 மணியளவில் குன்றுகளில் இருந்த உயர் கோபுரங்களின் மீதமர்ந்த ஊழியர்கள் யானைகள் கூட்டம் இருந்த திசையை சுட்டி காட்டியதும், அந்த திசையில் கும்கி யானைகள் விரைந்தன. ஏற்கனவே முந்தைய தினம் இந்த முயற்சியில் ஈடுபட்ட ” கபில் “ என்ற யானை, திடீரென மதம் பிடித்து மற்ற கும்கி யானைகளை தாக்கி விட்டு காட்டுக்குள் தப்பியோடியது. அதனை பின் தொடர்ந்து மடக்க விரைந்த ” சுஜை ” என்ற பெண் யானையும் காட்டுக்குள் காணாமல் போனது. மீதமிருந்த 4 கும்கிகளின் உதவியுடன் தேடிய பாகர்கள், அங்கிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செங்கத்தில், இரு யானைகளையும் பிடித்து, கட்டி போட வேண்டி வந்தது.

 எனவே இம்முறை காட்டு யானைகளை அதிகம் நெருங்காமல், தூரத்திலிருந்து பின் தொடர்ந்தனர். யானைகள் காட்டை விட்டு வெளியேறும் பாதையை பாகர்கள் தெரிவித்ததும் துப்பாக்கிகளுடன் வேட்டைக்காரர்கள் தயாராகினர். வரிசையாக காட்டுக்குள் இருந்து வந்த யானைகள், சாலையை ஒட்டி இருந்த மரங்களுக்கு இடையில் நின்றன. முதலில் வெளிப்பட்ட டரிக்கி யானை சாலையில் இருந்த வாகனங்களை பார்த்து விட்டு, மற்ற யானைகளை காட்டுக்குள் விரட்டியது. அவை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்த பிறகு டரிக்கியும், பெண் யானையும் மட்டும் காட்டிலிருந்து வெளிப்பட்டு, வேட்டைக்காரர்கள் வைத்திருந்த உணவை நெருங்கி முகர்ந்து பார்த்தன. சுற்றிலும் வழக்கத்துக்கு மாறான அமைதியை உணர்ந்த ஆண் யானை, பெண் யானையை பின் நோக்கி விரட்டியபடி, தானும் ஓட முயன்றது. ஆனால் அதே நேரத்தில் அடுத்தடுத்து வெளிப்பட்ட தோட்டாக்களில் சில ஆண் யானை மீது தைத்து விட்டது. அலறியபடி ஓடிய ஆண் யானை, பெண் யானையை மறைத்தபடி காட்டுக்குள் விரைந்தது.

 ஒரு மயக்க மருந்தின் வீரியம் வழக்கத்தை விட ஐந்து மடங்கு அதிகம் என தெரிவித்த அதிகாரிகள், சில நிமிடங்களில் யானை மயக்கமடையும் என காத்திருந்தனர். சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு கும்கி யானைகளின் மீதேறிய பாகர்கள், யானைகளை தேடி காட்டுக்குள் சென்றனர். சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் அடர்ந்த வனத்தில் நின்ற நிலையில் மயக்கமடைந்த ஆண் யானையை சுற்றி நின்ற மற்ற காட்டு யானைகள், கும்கிகளை நெருங்க விடாமல் விரட்டியடித்தன. மயக்க மருந்தின் வீரியம் 2 மணி நேரம் மட்டுமே இருக்கும் என கணித்த அதிகாரிகள், கும்கி யானைகளின் பாதுகாப்புடன்     துப்பாக்கி ஏந்திய வீரர்களை அனுப்பி, யானைகளை நோக்கி சுட செய்தனர். ஆண் யானையை அப்படியே விட்டு விட்டு தப்பியோடிய மற்ற யானைகள் அடர்ந்த வனத்தில் மறைந்தன. இவற்றில் ஒரு யானை மலையடிவாரப் பாறைகளுக்கு இடையே சிக்கியது. அதனை மீட்க கடும் போராட்டத்தை நடத்திய யானைகள், காயமடைந்த யானையுடன் தப்பி சென்றன. பெண் யானை மட்டும், அவ்வப்போது மயங்கியிருந்த ஆண் யானை இருந்த பகுதிக்கு வந்து, கும்கிகளை விரட்ட முயன்றது.

கடும் இருட்டில் அடர்ந்த வனத்துக்குள் ஜேசிபிக்களை கொண்டு, மரங்களை வெட்டி பாதை அமைத்த அதிகாரிகள், மயக்கத்தில் இருந்த ஆண் யானையின் இருபுறங்களிலும் இரு கும்கிகளை நிறுத்தி, வேறொரு கும்கியை, அதன் பின்புறம் முட்டச்செய்து, இரவு முழுவதும் நடந்த பெரும் போராட்டத்துக்கு இடையில் லாரியில் ஏற்றி முதுமலைக்கு கொண்டு சென்றனர். இயந்திரங்களின் ஓசை கேட்டு, மரங்களின் மறைவில் தூரவே நின்ற 5 யானைகள் ஒன்றும் செய்ய முடியாமல் அனைத்தையும் அமைதியாக பார்த்து விட்டு விலகி சென்றன. அவற்றில் 4 யானைகள் சிறியவை. மூன்று நாள் போராட்டத்தில் ஒரு யானை பிடிபட்டதற்கு பலதரப்பில் இருந்து கிடைத்த பாரட்டு அளித்த உற்சாகம், ஒரே நாளில் மொத்த யானைகளையும் பிடித்து புதிய சாதனை நிகழ்த்தும் ஆவலை தூண்டியது. பலதுறை அதிகாரிகள் நீண்ட ஆலோசனைக்கு பிறகு அன்று பகலிலேயே யானைகளை பிடிக்க திட்டமிட்டனர். 120 பாகர்கள் வழிநடத்திய 4 கும்கிகளின் உதவியுடன், 600 பணியாளர்கள் 4 குழுக்களாக பிரிந்து சென்று காடு முழுவதும் தேடியதில், காயமடைந்த சிறிய யானை மட்டும் பிடிபட்டது. அதற்கு மயக்க மருந்து செலுத்தி பிடித்த பிறகு, சாலையோர மரத்தில் கட்டி வைக்கப்பட்டது.

 காட்டுக்குள்  இனி உணவும், நீருமில்லை - மறைவும், பாதுகாப்புமில்லை என்ற நிலையில் எப்படியும் மாலையில் யானைகள் வெளிவந்து விடும் என்று, அவை வெளியேறக்கூடிய அனைத்து வழிகளிலும் வேட்டைக்காரர்களும், யானை பாகர்களும், பாதுகாப்பு வீரர்களும் வனத்தையே உற்று பார்த்தபடி காத்திருந்தனர். வனத்தை சுற்றியிருந்த சாலைகளில் 10 அடிக்கு 30 பேர் கொண்ட குழு கண்காணிப்பில் ஈடுபட்டது. ஆனால் மாலை வெளிச்சம் மறைந்து இருள் சூழ தொடங்கிய 7 மணி கடந்தும் இருண்ட பிறகும் யானைகள் வெளிப்படவில்லை. காவலுக்கு நின்ற கும்கி யானை ஒன்று தும்பிக்கையை காற்றில் வீசியபடி, வித்தியாசமாக குரலெழுப்புவதை உணர்ந்த பாகன், சந்தேகமடைந்து சாலையின் மறுபுறத்தில் இருந்த வயல்வெளியை நோக்கி கும்கியை விரட்டினார். கும்கியை தொடர்ந்த ஏராளமான பணியாளர்கள் பரவலாக பிரிந்து பல ஏக்கர் பரப்பளவுள்ள பகுதியை அலசியதில், யானைகளின் கால் சுவடுகளை மட்டுமே கண்டறிய முடிந்தது. அவற்றை பின்பற்றி பெரும்படை விரைந்தது.

 
 ஆங்கிலேயர் அடிமைப்படுத்திய பரந்த பாரதத்தை, அதற்கு முன்பு வெல்ல முயன்ற கிரேக்கர், பாரசீகர், இரானியர், ரோமர், முகலாயர் உட்பட பல தேசத்தை சேர்ந்தவர்கள், பல நூற்றாண்டுகள் போராடியும், முழுமையான பாரதத்தை வெல்ல முடியாமல், அடிமை படுத்த முடியாத மக்கள் நிறைந்த தேசமாக பாரதம் பெருமையுடன் விளங்க காரணம், வேற்று நாட்டு படைகளை எல்லைக்குள் நுழைய விடாமல், மதில் போல நின்று, பாதுகாத்த பாரத தேசத்தவரின் யானைப்படைகள் என்பது வியக்கத்தக்க உண்மை. அப்படிப்பட்ட யானைகளை தெய்வமாக உருவகப்படுத்தி வணங்கி வரும் அதே மக்கள், அவற்றின் வாழ்வை ஒடுக்கி, இன்று ஒட்டுமொத்தமாக யானைகளை அழிக்கும் செயலில் இறங்கி வருவது வேடிக்கையானது.

 அடிக்கு அடி போடப்பட்டு இருந்த காவலையும், பல கிலோமீட்டர் தூரத்துக்கு இரவை - பகலாக்கும் விளக்குகளையும் மீறி காட்டில் இருந்து குட்டிகளுடன் வெளிப்பட்ட பெண் யானை, இருட்டின் துணையுடன் சிறு ஓடை வழியாக சாலையை  கடந்து, காவலுக்கு நின்றிருந்த பெரும் கூட்டத்தின் கண்களில் மண்ணை தூவி விட்டு, செங்கம் செல்லும் வனப் பாதையை தவிர்த்து, எதிர்திசையில் விழுப்புரம் செல்லும் சாலையை ஒட்டியிருந்த வயல்வெளிகளின் வழியாக, கல்வராயன் மலையை நோக்கி அதி வேகத்தில் தப்பி சென்றது. யானையின் நோக்கத்தை அறிந்து கொண்ட மாவுத்தர்கள் அளித்த தகவலின்படி, சாலை வழியாக விரைந்த வேட்டைக்காரர்கள், யானைகள் மீது மயக்க மருந்துகள் நிரம்பிய தோட்டாக்களை செலுத்தினர். இதில் ஒரு குட்டி யானையின் மீது 2 தோட்டாக்கள் பாய்ந்ததும் அது சிலையானது. நான்கைந்து முறை சுடப்பட்ட மயக்க மருந்தின் வீரியத்தையும் மீறி, மீதமிருந்த இரு குட்டிகளை காலால் உதைத்து விரட்டியபடி விரைந்த பெண் யானையின் பிளிறல் சத்தம், அந்த பகுதியை உறைய செய்தது.

 ஒரு லட்சம் விளக்குகளை ஒரே நேரத்தில் போட்டது போல, திடீரென வானத்தை கீறியபடி, சரம் சரமாக வெளிப்பட்ட மின்னல்கள், எட்டு திக்குகளை பொய்யாக்கி எட்டாயிரம் திக்குகளில் பாய்ந்தன. ஒட்டுமொத்த உலகமும் ஒரே ஒரு மனித தலையாகி, அதற்குள் பலாயிரம் குண்டுகள் வெடித்தது போல எழுந்த அடுத்தடுத்த இடிகளின் ஓசை பல்லாயிரம் காதுகளுக்குள் புகுந்து அடங்கி, ஒடுங்கின. மாலை வரை மேக மூட்டமில்லாமல் இருந்த தெளிந்த வானத்தில் இருந்த ஒட்டுமொத்த நீரும் ஒரே நேரத்தில் கொட்டியதை அந்த இரவில் அனைவரும் கண்ணெதிரில் கண்டு அதிசயமடைந்தனர்.

 
 
 கர்ப்பிணியான அந்த பெண் யானையின் ஓலம் வானத்தை எட்டிய அளவுக்கு, அந்த காட்டில் இருந்தவர்களின் செவிகளை எட்ட முடியாமல், இடிகளின் சத்தத்தில் செவிகள் பழுதடைந்திருந்தன. அடுத்த இரு தோட்டாக்களையும் தாங்கியபடி பல கிலோமீட்டர்களை கடந்த அந்த பெண் யானை, சிறிது நேரத்தில் கண்களில் நீர் வழியும் சிலையாக மாறியது. அதன் கால்களுக்கு இடையில் புகுந்து, அவற்றை அசைக்க முயன்ற இரு குட்டி யானைகளும், தங்கள் முயற்சியில் தோல்வியுற்று, கால்களை ஒட்டியபடி ஓலமிட்டு நின்றன. இந்த ஆனைமலையை உயிரற்றதாக மாற்றி விட்ட பெருமிதம் அரசுக்கு. இனி வரும் காலங்களில் தன்னிச்சையாக சுற்றி திரியும் காட்டு யானைகளை கண்டு குதூகலிக்கவும், கூச்சலிடவும் மனிதர்கள் இல்லை என்பதே நிதர்சனம்.


பிரகாஷ் சுகுமாரன்
prakashvlr@gmail.com

Friday, July 4, 2014

மழை நீர் சேமித்தல்

-நடராஜன் கல்பட்டு













மழை நீர் சேமித்தல் என்ற உடன் என் நினைவுக்கு வருவது டைம்ஸ் ஆஃப் இண்டியா என்ற தினசரியில் வந்த ஒரு கார்டூன்,


இது சிரிப்பை வரவழிக்கப் போடப் பட்ட சித்திரமானாலும் இதில் ஒரு உண்மை ஒளிந்திருக்கிறது.

“வான் நின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று”


மழை உலகின் எல்லா உயிர்க்கும் சாகா மருந்து என்றார் வள்ளுவர்.  அந்த சாகா மருந்தினை எந்த அளவுக்கு நாம் சாக்கடை வழியோடி வீணாகாது காத்து உபயோகிக்கிறோம்?

தமிழ் நாட்டின் ஒரு முதன் மந்திரி ஒரு சட்டம் கொண்டு வந்தார்.  ஒவ்வொருவரும் கட்டாயமாக மழை நீர் சேமிப்புக்கான எற்பாடுகளைச் செய்ய வேண்டும்.  புது வீடுகள் கட்ட முனைவோர் அவர் செய்யப் போகும் மழை நீர் சேமிப்பிற்கான ஏற்பாடுகள் என்ன என்பதை வரை படத்தில் காட்டினால் தான் சம்பந்தப் பட்ட அதிகாரிகள் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் உத்திரவிட்டார் அவர்.

அந்த உத்திரவினை ஒரு சதவிகித மக்கள்கூட ஒழுங்காகக் கடை பிடிக்க வில்லை என்பது என் கணிப்பு.  அந்த உத்திரவுகள் வந்த உடன் அவசர அவசரமாக சென்னை வாசிகள் மண்ணில் ஒரு சிறு பள்ளம் தோண்டி அதற்குள் நான்கு கற்களைப் போட்டு வீட்டுக் கூரைகளிலிருந்து வரும் மழை நீர்க் குழாய்களை அதற்குள் விட்டு மூடிவிட்டார்கள்.  இந்த வேலை செய்து தந்தவர்களின் காட்டில் நல்ல பண மழை பெய்தது.

ஒரு நல்ல மழை பெய்த உடன் மூடியிருந்த பள்ளத்தைத் திறந்து கொண்டு மீண்டும் மழை நீர் சாக்கடைகளைத் தான் சென்றடைந்தது.

மழை நீரை சேமிக்க வேண்டுமானால் இரண்டு விதமாகச் செயல் படலாம்.  ஒன்று மழை நீரை நிலத்தடி நீரோடு சென்றடையச் செய்வது.  மற்றொன்று அப்படியே உபயோகத்திற்காக சேமித்து வைப்பது.

நிலத்தடி நீரோடு சென்றடையச் செய்ய ஒரு சுமார் மூன்றடி விட்டமும் 8 -10 அடி ஆழமும் கொண்ட பள்ளம் தோண்டி அதில் உடைந்த செங்கற்களை சுமார் 6 – 8 அடிக்கு நிறப்பிப் பின் அதன் மேல் 1 – 2 அடி உயரத்திற்கு மணல் நிரப்பி, கூரையில் இருந்து வரும் மழை நீர்க் குழாயைக் கொண்டு அதற்குள் விட வேண்டும்.  இப்படிச் செய்தால் தான் மழை நீர் நிலத்தடி நீரைச் சென்றடையும்.  வீட்டில் கிணறு உள்ளவர்கள் இந்தக் குழியின் அடியில் இருந்து ஒரு குழாய் மூலம் நீரைக் கிணற்றுக் குள்ளும் விட்டுக் கொள்ளலாம்.

ஆனால் நடை முறையில் செய்யப்படுவதெல்லாம் ஒரு கண் துடைபு தான்.

இப்படிச் செய்யாமல் நேரடியாகவே மழை நீரைத் தொட்டிகளில் சேமித்து வைக்கலாம்.  எல்லா உபயோகத்திற்காகவும் சேமித்து வைக்க வேண்டும் என்றால் இரு நபர்கள் உள்ள குடும்பத்திற்குக் குறைந்த பட்சம் 1,10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி தேவைப்படும், ஒரு நாளைக்கு ஒரு ஆளுக்கு 150 லிட்டர் நீர் என்ற கணக்கில்.

இது நடை முறையில் சாத்தியமாகாத ஒன்று நமக்கு.  ஆனால் வேறு வழி இல்லை என்னும் போது இதைச் செய்பவர்களும் உண்டு.

வேதாரண்யத்தில் கோடியக்கரையில் ஒரு கலங்கரை விளக்கு.  இது சமுத்திரக் கரையில் உள்ளது.  சுற்றிலும் கடற்கரை மணலும், என்றுமே பசுமையாக இருக்கும் கடற்கரை காடும்.  மணல் வெளியில் ஆங்காங்கே புல் திட்டுகள், தண்ணீர் திட்டுகள்.
ஆனால் எங்கு தோண்டினாலும் உப்பு நீர்.  கலங்கரை விளக்கினைப் பராமரிக்க ஒரு ஊழியர்.  அவருக்கு அங்கேயே வீடு.  குளிக்க, குடிக்க, உணவு சமைக்க தண்ணிருக் கெங்கே போவார் அவர்?  அவர் வீட்டை ஒட்டி ஒரு பெரிய திறந்த தொட்டி.
சுமார் 40,000 லிட்டர் அளவு இருக்கும்.  வீட்டுக் கூரையில் விழும் நீர் பூராவும் அந்தத் தொட்டியைச் சென்றடைகிறது.  தொட்டிக் குள்ளே தவளைகளும், மீன்களும் சர்வ சுதந்திரமாக நீந்திக் கொண்டிருக்கின்றன.  அவை இலை என்றால் கொசு வளர்ப்புக்கு உதவும் அந்தத் தொட்டி.

ஆஸ்திரேலியாவில் மலைக் காட்டில் நிலம் வாங்கி வசித்து வந்த ஒரு நண்பரை காணச் சென்றேன்.  அவர் வீட்டிலும் இதே முறையில் நீர் சேமிப்பு ஆனால் மூடிய இரும்புத் தொட்டிகளில்.

நாம் செய்யக் கூடியது இரண்டு.  ஒன்று மழை நீரை நிலத்தடி நீரோடோ, கிணற்று நீரோடோ சேர்ப்பது.  மற்றொன்றும் நமக்கு வருடம் பூராவுக்கும் தேவையான குடி நீர் சேமித்து வைத்தல்.

சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பிருந்து எங்கள் வீட்டில் மழை நீர்தான் குடி நீர்.

குடி நீருக்காக மழை நீரை சேமிப்பதில் இரண்டு தொந்திரவுகள் உண்டு.  ஒன்று முதல் மழையில் வரும் நீர் குப்பை கூளத்தோடு இருக்கும்.  அதன் பின் வரும் மழை நீரில் கொசு முட்டை இருக்கும்.  பிடித்து வைத்த பத்தே நாட்களில் தொட்டி பூராவும் கொசுப் புழுக்களாக இருக்கும்.  இதைத் தவிர்க்க மழை நீரை ஒரு பில்டர் தொட்டி வழியே செலுத்திப் பிடிக்க வேண்டும்.  அப்படிப் பட்ட ஒரு பில்டர் தொட்டியின் அமைப்பை கீழே உள்ள படத்தில் பார்க்கவும்.





சுமார் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஹெச்,டி.பி.இ. டேங்க் போதும்.  வருடம் பூராவும் யார் கையையும் எதிர் பார்க்க வேண்டாம் குடி நீருக்கு.  முதலீடு செய்யும் பணம் மூன்று நான்கு வருடங்களில் திரும்பி விடும் உங்களுக்கு.

(குறிப்பு – 1. வடிகட்டிய நீர் வெளியேரும் குழாய்க்குள்ளே நீர் செல்வதற்கான துளைகள் கீழ்ப்புறம் இருப்பதைக் காணவும்.  இது தப்பித் தவறி சிறு மணல் துகள்கள் மேலிருந்து வந்தாலும் அது குழாய் வழியே வெளியேறி வால்வுகளை பழுதடையச் செய்திடாமல் இருப்பதற்காகவே.

2.  இப்படி சேகரித்த தண்ணீரரை கிண்டியில் உள்ள கிங்க் இன்ஸ்டிட்யூட்டில் பரிசோதனை செய்து பார்த்து இது மிக பரிசுத்தமான குடிநீர் என்று சொல்லியுள்ளனர்.)

பில்டர் தொட்டியினை சுமார் ஏழடி உயரத்தில் அமைத்து விட்டால் சுத்தம் செய்யப்பட்ட தண்ணீரை நேரடியாக ஹெச்டிபியி தொட்டிகளில் சேமித்து வைத்திடலாம்.


நடராஜன் கல்பட்டு
knn1929@gmail.com

எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……
http://kalpattaarpakkangkal.blogspot.in/



நகல் மனிதர்கள்

- செல்வன்


ஒவ்வொரு மதமும், சமூகமும் ஒரு லட்சிய மனிதனை, உதாரண புருஷனை முன்னிறுத்துகின்றன.அந்த லட்சிய மனிதன் போல் அனைத்து மனிதர்களும் ஆகவேண்டும் என அந்த மதம்/சமூகம் விரும்புகிறது.

பெண்கள் என்று எடுத்துகொண்டால் அவர்கள் பின்பற்ற கண்ணகி,நளாயினி என பல லட்சிய மனுஷிகள் உண்டு. அக்கால சமூகம் உருவாக்கிய பிரதிபிம்பங்கள் அவர்கள். அக்கால சமூகங்கள் அனைத்து பெண்களும் இவர்களின் பிரதிபிம்பங்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்தன.

உலகின் அனைத்து மதங்களும் இப்படி லட்சியபுருஷர்களை முன்னிறுத்தி உலகம் முழுவதும் இவர்களை பின்பற்ற வேண்டும் என எதிர்பார்த்தன."இதோ பார் லட்சிய புருஷன்" என ஒரு மனிதனை அவை முன்னிறுத்தின. "இந்த லட்சிய புருஷன் நீ எப்படி வாழவேண்டும் என்பதற்கான முன்னுதாரணம். இவனது நகலாக நீ மாறவேண்டும். அப்படி மாறினால்தான் சமூகம் நிலைக்கும், நீ சொர்க்கத்துக்குபோவாய், இவனைப் போல் நீ ஆகாவிட்டால் நீ அழிந்து போவாய்" என அவை மிரட்டின.

பெயர் வைப்பதிலேயே இந்த நகல் மனப்பான்மை துவங்கிவிடுகிறது. லட்சியபுருஷனின், லட்சிய புருஷியின் பெயரையே பலர் தங்களின் குழந்தைகளுக்கு வைக்கின்றனர்.பிறந்ததிலிருந்து "இவரைப் போல் நீ ஆகவேண்டும்" என அந்தக் குழந்தை உருவேற்றி வளர்க்கப்படுகிறது

இதன் விளைவு என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட சமூகம் முழுவதும் காலப்போக்கில் பிரதிபிம்பங்களாக மாறிவிடுவதுதான். அந்த சமூக மனிதர்கள் அனைவரும் அந்த லட்சிய புருஷனின் நகல்களாக மாறிவிடுகின்றனர்.

காலங்கள் மாற மாற சில சமூகங்கள் லட்சிய புருஷர்களை மாற்றிக்கொள்கின்றன. சிலவருடங்கள் முன்பு வரை நளாயினி, கண்ணகி போன்றவர்கள் இந்திய பெண்களின் முன்னிறுத்தப்பட்டனர். ஆனால் இப்போது வேறு ரோல்மாடல்கள்.

தன்னை ஒரு நகலாக தனது சமூகம் உருவாக்க முயல்வதை நீட்ஷே கண்டுபிடித்துவிட்டார். ஒரு நகல் மனிதனாக வாழ்வதை அவர் விரும்பவில்லை..

'உடைத்து எறி சமூகம் உருவாக்கிய உன்னை" என்று நீட்ஷே முழங்கினார்."அடுத்தவன் உன் எண்ணங்களை, உனக்கான சிந்தனைகளை, உன் வாழ்க்கையை உருவாக்குவது நீ ஒரு மனிதனாக தோற்று விட்டாய் என்பதன் பொருள்" என்றார் அவர்.

தான் எப்படி சிந்திக்க வேண்டும் என்பதை வேறொருவர் திட்டமிடுவதை அவர் வெறுத்தார். சமுதாயத்தின் பல்வேறு கட்டமைப்புக்களும் தன் வாழ்கை, எண்ணம், சிந்தனை எப்படி இருக்கவேண்டும் என்று நிர்ணயித்து வைத்திருப்பதையும், தான் அது போலவே உருவாகி இருப்பதையும் அவரால் தாங்க முடியவில்லை


கவிதாயானி ப்ளூம் நீட்ஷேயை விஞ்சினார்.அவர் தன் வாழ்வில் மிகப்பெரும் அதிர்ச்சி தன்னைப் போல் பலரைக் கண்டதுதான் என்று எழுதினார். அவர் குறிப்பிட்டது தான் தன் சமூகத்தால் உருவாக்கபட்ட ஒரு ப்ரதிபிம்பம் என்பதைத்தான். தன்னைப் போலவே பல நகல்களை சமூகம் உருவாக்கி இருப்பதையும் அதில் தானும் ஒருத்தி என்பதை அறிந்ததும் தன் வாழ்வில் மிகப்பெரும் அதிர்ச்சியை சந்தித்ததாக ப்ளும் எழுதினார்.(My horror is finding myself to be only a copy or replica). தன் நம்பிக்கைகளை, எண்ணங்களை, விருப்பு வெறுப்புகளை சமூகம் உருவாக்குவதை அந்த கவிதாயினியால் தாங்க முடியவில்லை.


"இந்த உலகம், நான் வாழும் உலகம், நான் உருவாக்கியது அல்ல" என்ற எண்ணமே அவருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.(The world one lives is an inherited world,A world which one never made) "தான் தன்னை உருவாக்கிக் கொள்வது தனக்குத் தானே பிறப்பளிப்பது" என்றார் ப்ளும்.(Giving birth to oneself)

சுயத்தை இழந்து பழங்கால மனிதர்களின் நகல்களாக தாங்கள் வாழ்வதை இந்த இரு தத்துவ மேதைகளும் விரும்பவில்லை.இவர்கள் இருவரும் நகல்களல்ல. ஒரிஜினல்கள்.






நன்றி: சாரல்,  13 பிப்ரவரி 2006
http://www.nilacharal.com/