Monday, February 21, 2022

மாந்தர் பெற்ற மகத்தான வரம் !

 -- முனைவர் ஔவை அருள் 





தாய்மொழி என்பது உலகில் மாந்தர் மட்டும் பெற்ற மகத்தான வரமாகும்.

மனித இனத்தில் உணர்தல், புரிதல் என்ற நிலையிலிருந்து அறிதல் என்ற அடுத்த உயர்நிலைக்குப் புலன்கள் பெற்ற உணர்வுகளைத் தரும் உள்ளுணர்ச்சியின் ஊற்றாகும்.  எண்ணங்களுக்கும் மனத்தில் ஓட்டத்திற்கும் அடிப்படையாக நாம் நமக்குள்ளேயே பேசிக் கொள்வதற்கும் பயன்படும் உள்ளோசையே மௌனத்திலும் நம் மனத்தின் குரலாக உருவாகி உள்ளோடிக் கொண்டிருக்கும் என்பர்.

தாயின் வயிற்றுக்குள்ளிருக்கும் குழந்தைக்குத் தாயின் இதய ஒலி கேட்கும்; வெளியே பேசப்படும் மக்களின் மொழி தெரியாவிட்டாலும், அதன் ஒலியினை மூளை உள்வாங்கும், எதிர்வினையும் செய்யும். அது ஒலியின்  அதிர்வினைப் பொறுத்ததாகும். அந்தச் செயல், வெளிவந்த குழந்தையின் ஆழ்மனங்களிலும்  பதிவாகியிருக்கும். தாய் முகம் பார்த்துப் புன்னகைத்து வாயசைவை உற்றுநோக்கித் திரும்பத் திரும்பச் செய்து மழலையாக உதிர்த்துப் பழகும் மொழி உணர்ச்சியுடன் வளர்வதனால் தாய்மொழி வடிவமும் வளர்ச்சியும் பெறுகிறது.

ஒவ்வொரு குழந்தையும் பிறக்கிறபோதே தாய்மொழியின் கூறுகளுடன் பிறப்பதால்தான், எளிதாக தாய்மொழியைக் கற்றுக்கொள்ள முடிகிறது என்று மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி குறிப்பிடுவது இங்குக் கருதத்தக்கது. வாழ்கிற இடத்தில் சூழலுக்கு ஏற்றபடி தான் நம் மொழி அமைகிறது.  இந்த மொழி எங்கே மூளையில் அமைகிறது என்றால், யார் குழந்தைக்கு அதிகமான ஒலிக்குறிப்புகளை அறிவிக்கிறார்களோ அவர்களே முதலிடம் பெறுகிறார்கள். 

காது தான் மூன்றாவது மாதத்திலேயே செவிப்புலன் கொண்டுள்ளது. கருப்பையிலும் கூட ஒலியைக் கேட்கிற பழக்கம் உள்ளது.  திருவள்ளுவர், செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை என்று கூறுகிறார். நம் மூளையின் வளர்ச்சியில் நடக்கும் மாற்றம் அறிவியல் அதிசயங்களில் ஒன்று. பிறக்கும்போது உள்ள செல் அமைப்புகள், இணைப்புகள், இணைப்புகளின் இடைவெளிகள் ஒன்றுக்கொன்று செய்தி பரவுவதற்கும், பரிமாறிக் கொள்வதற்கும் உருவாகும் புரத மூலக்கூற்றுக் குமிழ்கள், சோடியம் - பொட்டாசியம் அயான்கள் எனப்படும் மூலப் பகுதிகளில் பாதைகள், வேதியியல் மின்னணு உருவாக்கங்கள், செல்களுக்குள் சென்று சேமித்து வைக்கப்படும் கருத்தாக்கங்கள் எனக் கணக்கிலடங்கா வேதியியல்-பெளதிக செயல்முறைகள் மூளையில் நடந்து கொண்டே இருக்கும்.

மூளையியல் வளர்ச்சி மிக நுட்பமானது. மூளை இணைப்புகளிலும், சுற்றுப் பொறி இயல்புகளிலும் ஏற்படும் மாற்றங்கள், சொல் பொருள் வாக்கியங்களாகப் பதிவாக ஏற்படும் புதுப்புது அமைப்புகள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்காகவும் ஒன்றுக்குள் ஒன்றான சுழலமைவாகவும் நுண்ணிய அளவில் அமைகின்றன . அவை கற்றுக்கொள்ளும் பகுதி நினைவுப் பகுதியான உள்மூளையில் அமைந்துள்ளன.  குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே தன்னைச் சுற்றி வரும் ஒலியில் பேச்சு ஒலியையும் மொழியற்ற ஓசைகளை பிரித்தறியக்  கற்றுக்கொண்டு விடுகிறது. அது கேட்கும் முதல் மொழி, மூளைக்குள் பதியத் தொடங்கி, கருத்துருவாக்கங்களை உருவாக்கித் திரும்பத் திரும்ப அச்சொற்களைக் கேட்பதனாலும், பார்த்து கொள்வதாலும், புரிந்து கொள்வதாலும் தான் அது சொந்தமொழி, அம்மொழியின் ஒலி இவற்றைப் பதித்து வைத்துக் கொள்ளத் தொடங்குகிறது. அதனைத் தாய்மொழி எனக் கூறுவதைவிட தன் இனமொழி என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் போது  " ஒருவரின் மொழிதான் அவரின் எண்ணத்தின் இயற்கையையும், உட்கருவையும் உருவாக்குவதைத் தீர்மானிக்கின்றது.  எனவே ஒருவரின் சிந்தனையையும், சிந்தனை சார்ந்த எண்ணத்தையும் கருத்தையும் மொழிதான் தீர்மானிக்கிறது எனக் கொள்ளலாம் என்பது அறிஞர் பெஞ்சமின் லீ வார் கூறியுள்ள கருத்தாகும்.

ஒருவன் கற்றுப்பழகி அன்றாட வாழ்வில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மொழி அவனின் சிந்தனையை ஆட்சி செய்து கொண்டிருப்பதால் அவனின் மொழி தான் அவனின் ஆளுமையை உருவாக்கும்.  இதற்கு மொழியில் தீர்மானிக்கும் பண்பு  (லிங்குஸ்டிக் டெட்டர்மினேஷன்) என்பது புதிய பெயராகும்.  ஒரு மொழியில் சிந்திக்கும் பண்பு அம் மொழியின்படி இருப்பவற்றை அறிந்து அதற்கேற்றவாறுதான் சிந்திக்க உதவும்.  சிறு வயது முதல் ஒருவரின் தொடக்க மொழியாகவும், உள்ளத்திலும் உணர்விலும் ஒன்றாய்க்  கலந்த மொழியாகவும், அவரின் குணத்தையும், ஆளுமையையும் உருவாக்கும் சக்தி படைத்ததாகவும் இருப்பதே அவரின் தாய்மொழியாகும். பின்னர் கற்றுப்பழகும் அலுவலக மொழியானது அயல் மொழி அல்லது இரண்டாம் மொழியாகும். அந்த மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர் போன்றோ அல்லது அதே ஆழத்திலோ சிந்திப்பது மற்றவர்களுக்குக் கடினமானது.

மொழி வெளிப்படுத்தும் இடர்ப்பாட்டால், இச்சிந்தனையில் வேறுபாடு உண்டாகிறதே தவிர, சிந்தனை  வளையத்தின் ஆற்றல் குறைவினால் அல்ல, பண்பாட்டு குழ்நிலை ஒரே அளவில் இருக்கும் இடங்களில் சிந்திக்கும் திறனுடன் வெளிப்படும் சக்தியை வளப்படுத்திக் கொள்பவர்களுக்கு இந்த வேறுபாடு அதிக மாற்றம் தருவதில்லை. அறிஞர்கள் கு - காரி ஆகியோரின் ஆராய்ச்சி முடிவுகளின்படி, குழந்தைகள் ஒரு வயதிலிருந்தே சொற்களின் பொருள் புரிந்து எதிர்வினை செய்யத் தொடங்குவர்.   எனவே அப்போதே தெரிந்துகொண்ட மொழிதான் தாய்மொழியாகும். அடுத்துக் கற்கும் இரண்டாம் மொழியில் சொல் அமைவுகளும், வாக்கிய அமைப்புகளும், உருவாவது கண்கூடு .

தமிழல்லாத தெலுங்கு, கன்னட, உருது, சொராஷ்டிர சமூக குழந்தைகளும் அவர்கள் பெற்றோரிடம் பேசிக்கொள்ளும் தாய் மொழியில் தான் சிந்திப்பார்.  ஆனால், பழகு மொழியாலும், வளரும் சூழ்நிலையாலும் வளமான அறிவு பெற்று எடுத்துச் சொல்லும் திறனையும் வெளிப்படுத்தும் செயலின் கூர்மையையும், உறுதிப்படுத்திக் கொண்டு சிறந்த சிந்தனையாளர்களாக அவர்கள் வளர்ந்து வருவதைக் காணலாம்.   புலம்பெயர்ந்த தமிழர்களில் குடும்பங்களிலும், பெற்றோர் பேசும் தமிழிலிருந்து, மொழியைக் கற்றுக் கொள்ளும்போது, அதன் அழகைப் புரிந்து கொண்டு வளரும் போது நம் பண்பாட்டு விழுமியங்களை விளங்கிக் கொள்கின்றனர். வெளிப்புறச் சூழ்நிலைகளால், நாடு, அலுவலகம், வேற்றுமொழியாக இருந்து, கற்றுக் கொள்ளும் போது வேற்று மொழியையும் எளிதாக அவர்கள் கற்று அறிந்து பழகி, சிந்திக்கும் செயல்களை வளர்த்துக் கொள்ள இயலும் என்பது அறிஞர் ஸ்பவன் பிங்கரின் கூற்றாகும் .

ஆனால் அதனை ஆரம்ப மொழி என புலம் பெயர்ந்தோர் புரிந்து கொண்டு, சூழ்நிலை மொழியையும், அலுவலக மொழியையும் ஆரம்ப மொழியாக ஆக்கி விடுவதும், சிந்தனை வளத்தினைக் கூர்மையாக்குவதும் இன்னலைத் தரும் என உணர்ந்து தங்கள் இனத்தையும், பண்பாட்டையும் ஆர்வத்தோடு காட்டி வளர்ப்பது மிகவும் நல்லது.  பாவியர் கேட்டால் எடால் என்ற அறிஞர் கொரியக் குழந்தைகள் தத்தெடுக்கப்பட்ட சிறுவயது முதலே பிரெஞ்சு நாட்டில் பிரஞ்சு மொழி பேசி வளர்ந்தவர்களாக உள்ளனர். அவர்களைப் பொறுத்தமட்டில் பிரெஞ்சு மொழிதான் அவர்களின் தாய்மொழி, அவர்கள் கொரிய மொழியினைக்கேட்கும் போது மூளையில் கேட்கும் மொழி அணுக்களில் மாறுதல்கள் ஏற்படுகின்றன என்று விளக்கினார்.

இங்கிலாந்தில் பஞ்சாபியர்கள் அதிகமாக உள்ள சௌத் ஹால் பாதிக்கு ஆங்கிலேயர்கள் செல்ல வேண்டுமென்றால் கூடப் பஞ்சாபி மொழி தெரிந்திருக்கவேண்டும் அதே போல, கோயில் வளாகங்களைக் கொண்டுள்ள " ஈஸ்டம் பகுதியில் தமிழ் மொழி தழைத்துள்ளது.  நம்மையும் அறியாமல் தாய்மொழியின் மீது நம் ஆழ்மனத்தில் பற்று ஒன்று படிந்து விடுகிறது. அதனால்தான் தாய்மொழி அரவமே கேட்காத அந்நிய தேசத்திற்கு நாம் சென்றால் யாராவது தாய்மொழியில் திட்டினால்கூட நமக்குத் தித்திக்கிறது.

சூழல் மூலம் இரண்டாவது மொழி கற்றல் மிக எளிதாக குழந்தைகளுக்கு வந்து விடும் என்பதை நன்கு உணர வேண்டும். மக்கள் பேசிக் கொண்டிருக்கும் மொழிதான் உயிருள்ள மொழியாகும். காலங்காலமாகப் பேசிப் படித்து இலக்கியம் படைத்து வளரும் மொழி செவ்விலக்கிய மொழியாகும்.  வளரும் தலைமுறையினர் பலருக்குத்  தாய்மொழிச் சொற்களே தெரியாத நிலை ஏற்படும் போது, மொழியின் வளர்ச்சி அச்சம் தரத்தக்க நிலையை எட்டி, காலப்போக்கில் தேய்வுற்று தடுமாற்ற மொழியாக வழக்கொழிந்துவிடுகிறது. 

வங்காளத்தில் வங்க மொழிதான் ஆட்சி மொழியாக வரவேண்டுமென்று இளைஞர்கள் போராடிய போது அன்றைய அரசு நால்வரை சுட்டுக்கொன்றது. சுடப்பட்ட இளைஞர்களுக்கு ஒரு பெரிய நினைவுச் சின்னம் அமைத்தார்கள். வங்க இளைஞர்களின் எழுச்சி மற்றும் புரட்சியைத் தொடர்ந்து மொழியால் தானே வங்க நாடு உருவானது' என்பதை நினைவுபடுத்தும் விதமாக ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆண்டுதோறும் பிப்ரவரி 21-ஆம் நாளை தாய் மொழி நாள் என்று இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது.

இன்று உலகெங்கிலுமுள்ள இருநூறு நாடுகள் இந்நாளைக் கொண்டாடி வருவது பெருமிதமான நிகழ்வாகும். மொழி என்பது வரலாற்றுச் சான்றாக விளங்குவதால், தாய்மொழி காக்க பேச்சு மொழியாக மட்டுமின்றி, எழுத்தறிந்து ஏனைய இலக்கியமறிந்து, தொன்மையில் நின்று, பண்பாட்டுடன் தலைநிமிர்ந்து வாழ இத்திருநாளை நினைந்து போற்றுவோம் !


முனைவர் ஔவை அருள் 
இயக்குநர் 
மொழிபெயர்ப்புத்துறை 
தமிழ்நாடு அரசு 

நன்றி: தினமணி -  உலக தாய்மொழி நாள் - சிறப்புக்கட்டுரை   








Sunday, February 20, 2022

சாதி எதிர்ப்பும் கிறித்தவமும்!!

 -- முனைவர் த. ஜான்சி பால்ராஜ்


சாதி, சமயச் சடங்குகள், மரபுசார் நம்பிக்கைகள், பண்பாடு, கலாச்சாரம் என்ற பெயரில்  மக்களின் மூளைக்கு விலங்கிட்டு சமூகத்தில் ஆங்காங்கே ஒருசிலர் தங்களை மேல்மட்டத்தினராகக்  காண்பிக்கும் ஒரே நோக்கத்தில் அடுத்தடுத்த அடிமைமுறைகளை அறிமுகப்படுத்திக் கொண்டே தங்களின் வசதியான வாழ்கையைத் தக்கவைத்துக் கொண்டிருந்த சமூகத் தீமை இன்றுவரையிலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையின் ஆரம்பக் காலகட்டம் மிகக் கொடூரமானதாக இருந்திருப்பதை வரலாற்றுப் பின்புலங்கள் சுட்டி நிற்கின்றன. அறியாமைகளின் அளவைப்பொறுத்தே ஒரு நாடு அல்லது சமூகம் அயலார்களின் கொடுக்குப் பிடிக்கு இலக்காகும் தன்மையை தெளிவாக வெளிப்படுத்தும்.  இயற்கை வளமும் சிறந்த கலாச்சார மரபுகளையும் தாங்கி நின்ற நமது நாடும் அதன் சிறப்புகளை மக்கள் மற(றை)க்கும் அளவுக்கு அறியாமை திரைகளுக்குள் மூழ்கிக்கிடந்தது. 

பல இனத்தவரும் மதத்தினரும் ஒன்றிணைந்து வாழ்ந்த கூட்டுச் சமூகத்தில் சொந்த நாட்டினரே ஒருவரையொருவர் சாதி சமய பொருளாதார மற்றும் அரசியல் சார்ந்த அடிமைத் தனங்களைப் போட்டிப்போட்டுத் திட்டமிட்ட ஆதிக்கத்தைச் செலுத்திவந்தனர்....!  வேடிக்கையான இந்நிலையை நமது நாட்டிற்கு நாடு கண்டு போகவந்தோர் பலரும் வியந்துரைத்துப் போயிருக்கின்றனர். இதுவே ஐரோப்பியர்களின் இந்தியக் காலனியாதிக்கத்திற்கும் அடிகோலியது என்பர்...!

இந்தியக் கலாச்சாரத்தின் ஒருபகுதியான சாதியவெறி தங்களுக்குக் கீழிருந்த சாதியினரை ஆதிக்கம் செய்து மகிழ்வதிலேயே தன்நிறைவைப் பெற்றுக் கொண்டிருந்தன.  தங்களுக்கு மேல்நிலையிலிருந்தோருக்கு அடிபணிந்து போவதைப் பெருமையாகக் காண்பித்தும் தங்களுக்குக் கீழிருந்தோருக்கு அதைப் பாடமாக கற்பித்தும் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தனர். இதன் நிறுத்தமற்ற, கண்செருகிப் போன, மிக மலிவான எண்ணத் தாக்குதல்களால் சமூகம் கூறுபட்டுக் கிடந்தது...!

இந்நிலையில் வாணிப நோக்கில் வந்த ஐரோப்பியர்களாலும்,  சமயப் போதனைகளையும் வழிபாட்டு முறைமைகளையும் மேற்கொள்ள வந்த பாதிரிமார்களாலும்  இந்தியர்களிடையே கிறித்தவம் பரவத் தொடங்கியது. ஆரம்பத்தில் வந்த கத்தோலிக்கப் பாதிரிமார்கள் பலரும் இங்கிருந்த மக்களின் சாதி சமய நிலைமைகளை முழுமையாக அறிய இயலாமல்  அவர்களிடமிருந்த சாதியத்தையும் சேர்த்தே கிறித்தவத்தில் சேர்த்தனர். அவரவர் சாதி முறைமைகளை விட்டு விட வேண்டியதில்லை, கிறிஸ்துவை ஏற்றால் போதும் என்ற விதத்திலேயே சுவிசேஷத்தை நற்செய்தியாக அறிவித்தனர். குறிப்பாக ராபர்ட்_டி_நொபிலி தன்னை இத்தாலிய பிராமணன் என்று சொல்லிக் கொண்டு உயர் சாதியினராக கருதப்பட்ட பிராமணர்களுக்கு கிறிஸ்துவை நற்செய்தியாக அறிவிக்க முயன்றார். அவரது நோக்கம் சமூகத்தின் உயர்மட்டத்தினரை ஏற்க செய்துவிட்டால் ஏனையோர்களும் எளிதில் 'போலச்செய்தல்' என்ற பின்பற்றும் இயல்பினால் எளிதில் ஏற்கச் செய்துவிடலாம் என்றிருப்பினும்,  மறைமுகமாக கிறித்தவம் உயர்சாதியினருக்கானது என்ற தவறான போக்கிற்கு அவரது செயல்பாடு வழிவகுத்து நின்றது.

கான்ஸ்டன்டைன் நோபிள் எனப்பட்ட வீரமாமுனிவரைத் தவிர மற்றவர் அனைவருமே தமிழகத்தின் சாதியக் கொள்கைகளை அதன் விஷமம் புரியாமல் அப்படியே ஏற்றிருக்கின்றனர்.  இதன் நீட்சியாகவே இந்தியாவில் சமத்துவத்தை உலகிற்குப்  போதித்த கிறித்தவ  தேவாலயங்களுக்குள்ளும் சாதிப்பாகுபாடு கடைபிடிக்கப்பட்டது. மிகக் குறைவான எண்ணிக்கைகளில் தான் அன்றைய உயர்ந்த சாதியினராக கருதப்பட்டோர் கிறித்தவத்தை ஏற்றிருந்தனர்.

அவர்களும் ஆலயத்திற்குள் மற்ற தாழ்த்தப்பட்ட சாதியினர்களோடு அமரவோ புனிதத் திருவிருந்தென்ற "ஐக்கியத்தில்" பங்குபெறவோ மாட்டோம் என்றதால்  அவர்களுக்கு ஒரு திசையிலும் மற்றவர்களுக்கு நேர் எதிர் திசையிலும் இடமளிக்கப்பட்டு ஆராதனைகள் நடைபெற்றிருக்கின்றன...!   ஆரம்பக்கால தமிழகக் கிறித்தவத்தில் அனுமதிக்கப்பட்ட இப்பிழையான அனுசரிப்பால்  இன்றுவரை ஒரே ஊரில் சாதிக்கொரு சபையென்பது கிறித்தவக் கொள்கைகளுக்கு எதிரான தவறென்ற உணர்வின்றி மிக எதார்த்தமாக எடுத்துக்கொள்ளும் மனப்போக்கை ஏற்படுத்தியிருக்கிறது என்பது உண்மை.

இந்நிலை சுமார் இரு நூறாண்டுகள் தொடர்ந்து கிறித்தவத்தில் புரையோடிப் போய் சாதியத்தின் தாக்கத்தை அதிகப்படுத்தியிருந்தது. பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட கிறித்தவ சமய எழுப்புதலினால் இந்தியாவிற்கு மிஷனெரிமார்களின் வருகை அதிகரித்தது. இவர்கள் புராட்டஸ்டண்ட் (Protestant) பிரிவு கிறித்தவத்தினர். இவர்களும் ஏற்கனவே இருந்துவந்த சாதியக் கொள்கைகளை ஏற்பது தான் சமயப்பணிக்குச் சாத்தியம் என்று கருதிச்  செயல்பட்டனர். இதற்கு விதிவிலக்காக ஒன்றிரண்டு மிஷனெரிகள் சாதிப் பாகுபாட்டினால் மக்கள் அடையும் இன்னல்களையும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளையும் நீக்க முயற்சித்திருக்கின்றனர்.

திருநெல்வேலி அப்போஸ்தலன் - ரேனியஸ்:
அவர்களுள் 'திருநெல்வேலி அப்போஸ்தலன்' என்ற பெருமைக்குரிய சார்லஸ் தியாப்பிலஸ்  ஈவால்ட் ரேனியஸ் (Charles Theophilus Ewald Rhenius;  November 5, 1790 – June 5, 1838) என்பவர் முதன்மையானவர். ஜெர்மன் தேசத்தினரான இவர் கி.பி 1814 ஆம் ஆண்டு இந்தியா வந்து,  1820 ஆம் ஆண்டு பாளையங்கோட்டையைத் தலைமையிடமாக கொண்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் ஒரு சிறு பகுதியைக் கூட விடாமல் சுவிசேஷத்தை நற்செய்தியாய் அறிவிக்க அரும்பாடு பட்டார். இருப்பினும்,  அவரது பணிகளை ஆய்வு செய்தால் அவர் வெறுமனே கிறித்துவ  சமயப்பணிகளை மட்டுமே செய்யவில்லை, மக்கள் மீது உண்மையான அன்பும் கரிசனையும் கொண்டார், தமிழகத்தில் காணப்பட்ட சாதியம் சார்ந்த அடக்குமுறைகளையும் தீண்டாமை கொடுமைகளையும் கண்டு அவற்றைக் களைய முற்பட்டார் என்பது புலனாகும். குறிப்பாக, சாதிப்பாகுபாடற்ற தமிழ்ச் சமூகம் உருவாக வேண்டுமென கனவு கண்டார். எனவே முதலில் கல்விப்பணியைத் துவங்கிய அவர், அதில் எள்ளளவும் சாதிப்பாகுபாடுகள் இருந்துவிடக்  கூடாதென்பதில் மிகக் கவனமாக செயல்பட்டார். மாணக்கர்கள் தங்களுக்குள்  எவ்வித ஏற்றத் தாழ்வுகளும் இன்றி கல்வி கற்க வேண்டும் என வலியுறுத்தினார். தாம் சமயப்பணி செய்த ஊர்களிலெல்லாம்  பள்ளிகளையும் ஏற்படுத்தினார்.


அதில் பணியாற்ற ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகளை அளிக்க வேண்டி, தங்கும் விடுதியுடனான ஆசிரியப் பயிற்சிப் பள்ளியும் (செமினெரி) நடத்தினார். அவற்றில்  சாதி வேறுபாடு பாராட்டிய உயர்சாதி மாணாக்கர்கள் தங்களுக்கும் தாழ்ந்தசாதியின மாணாக்கர்களுக்கும் இடையே தடுப்புச் சுவர் அல்லது தட்டி மறைவு வைக்க வேண்டும் என்று ரேனியசோடு வாதிட்டனர். ஆனால் எவ்விதத்திலும் சாதி வேறுபாட்டை செமினெரியில் அனுமதிக்க மாட்டேன் என்று மறுத்து விட்டார் ரேனியஸ். 'அவர்களது  பார்வையில் இல்லாமலாவது நாங்கள் இருந்து உணவு உண்கிறோம், இல்லையேல் எங்களை சாதியை விட்டே நீக்கிவிடுவர்'  என்று அவர்கள் கெஞ்சியும் அனுமதி தர மறுத்து சாதி வேறுபாட்டை அனுசரித்துத்தான் இதை நடத்தியாக வேண்டுமென்றால் இந்தச்  செமினெரியே வேண்டாமென்று அதை மூடிவிட்டார். 1818 ல் துவக்கப்பட்ட அச்செமினெரி அவரது இப்புரட்சிகரமான சிந்தனையால் 1821ல் மூடப்பட்டது. ஆனாலும் மிகவிரைவில் சாதிமதப் பேதமற்ற ஆசிரியப் பயிற்சிப் பள்ளியாக திறக்கப் படும் என்ற அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. மீண்டும் அது 1822ஆம் ஆண்டு திறக்கப்பட்டு சாதிப் பாகுபாடற்ற பள்ளியாக நடைபெற்றது. அதில் ஒருபோதும் சாதி வேறுபாடு  கடைபிடிக்கப்படவில்லை.

கிறித்தவ மிஷனெரிமார்கள் இந்தியாவில் கல்விப் பணியையும் இன்னும் பிற சமூகப்பணிகளையும் அவர்களது சமயப்பணியின் வளர்ச்சிக்காகவே செய்து போயினர் என்ற வரலாற்றாசிரியர்கள் சிலரின் கூற்று ஏற்கத்தக்கதல்ல...!    இந்தியர்களிடையே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இச்சாதியத்தை அயல்நாட்டினரான மிஷனெரி ரேனியஸ் தான் முதன் முதலில் எதிர்த்தவர் என்பது இந்திய சாதி எதிர்ப்பு வரலாற்றில் மறைக்கப்பட்ட அல்லது கண்டு கொள்ளப்படாத உண்மை.

தமிழகத்தில் ரேனியஸ் மேற்கொண்ட இதே சாதி எதிர்ப்பைக் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்குப் பிறகு கி.பி 1924 ஆம் ஆண்டு சமத்துவத்தை விரும்பிய சில அரசியல் தலைவர்களால்  திருநெல்வேலியில் உள்ள சேரன்மாதேவியில் ஏற்படுத்தப்பட்ட 'தமிழ் குரு குலத்திலும்' ரேனியஸ் செமினெரியில் நடந்த அதே சாதிப்பாகுபாடு காணப்படுவதை அறிந்து அதற்கு எதிராக நடந்த சர்ச்சைகள் ஏராளம். அந்தச் சமூக ஆரோக்கியத்திற்கு அடிகோலிய அப்போராட்டம் 'குருகுலப் போராட்டம்' (கி.பி1925) என்று வரலாற்றில் குறிப்பிடப்பட்டு வியக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

மனிதச் சமூகத்தின் உள்ளார்ந்த வளர்ச்சிகளுக்கு முக்கியம் அளிக்கப்படாத வெற்று சமயப் பக்திகளும் அதுசார்ந்த செயல்பாடுகளும் என்றும் நிலைப்பதில்லை, மக்கள் மனத்திலும், இறைவனின் பார்வையிலும்..!! 
       
     

முனைவர் த.ஜான்சி பால்ராஜ்,  வரலாற்று ஆய்வாளர்

------

Sunday, February 13, 2022

தமிழ்ச் சொத்தெழுதிச் சென்ற பாட்டன்


  -- இறை.மதியழகன்


"உண்ணச் சிறிது போதும், உறங்கப் படுக்கை போதும், 
எண்ணப் பொழுது வேண்டும், எழுத உரிமை வேண்டும்” 
என்று தன்னை உள்ளிருந்து இயக்கும் குரலுக்குச் செவிமடுத்து, அயராது இயங்கி, 500க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும், "அன்னை மொழியின்றி அன்னிய மொழி இல்லை” என்ற முழக்கத்துடன் தமிழ்நெறித் திருமணங்களுக்குப் புதிய முறைவகுத்து 4000க்கும் மேற்பட்ட திருமணங்களை நடத்திவைத்தும் வாழ்ந்து மறைந்த இளங்குமரனாரின் வாழ்க்கையையும் தமிழ்ப்பணிகளையும் களப்பணிகளையும் ஒரு கோட்டுச் சித்திரமாக இக்கட்டுரையில் அளிக்க முயல்கிறேன்.

இளங்குமரனார் திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரத்தில் 1927, ஜனவரி 30 அன்று பிறந்தார். இளங்குமரனாரின் தந்தை இராமு. அவர் எப்போதும் படித்துக் கொண்டே இருந்ததால் 'படிக்க இராமு' என்று ஊர்மக்களால் அழைக்கப்பட்டவர். தாயார் வாழவந்தம்மையார்.

திருக்குறளை 12 வயதிலும், தொல்காப்பியத்தை 16 வயதுக்குள்ளும் முழுமையாகக் கற்று, 18 வயதில் சங்க இலக்கியத்திலும் நல்ல தேர்ச்சி பெற்றார். ஆழ்வார் பாடலில் கிருட்டிணனுடைய பெயர் 'இளங்குமரன்' என்று தமிழில் குறிப்பிடப்பட்டிருப்பதை அறிந்து, இளம் வயதிலேயே தனித்தமிழ்ப் பற்றினால் இளங்குமரன் எனப் பெயரை மாற்றிக்கொண்டார்.

இளங்குமரன் எட்டாம் நிலை படித்த முடித்தவுடன் ஈராண்டு ஆசிரியர் பயிற்சி முடித்து வாழவந்தாள்புரத்தில் உள்ள பள்ளியிலேயே 1946-ஆம் ஆண்டு தனது ஆசிரியப் பணியைத் துவங்கினார். அதே ஆண்டு 16-ஆவது வயதில், செல்வம் அம்மையாரை மணந்து மணவாழ்க்கையையும் துவங்கினார். அந்தப் பள்ளி மூடப்படும் சூழல் உண்டானபோது இளங்குமரனாரே தனது சேமிப்பிலிருந்து அந்தப் பள்ளியை வாங்கி அதில் பணிபுரிந்து கொண்டே பள்ளியைச் சிலகாலம் நடத்தி வந்தார்.

பின்னர் 1951-ஆம் ஆண்டு கரிவலம்வந்தநல்லூரில் உயர் நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார். ஆசிரியப் பணியோடு நிற்காமல் மேடைப் பேச்சு, பட்டிமன்றம், திருமணங்கள் நடத்தி வைப்பது எனத் தமிழ்வலம் வந்தார். தலைமை ஆசிரியரோ பெருஞ்சினம் கொண்டார். இளங்குமரனாரை அழைத்து அவற்றையெல்லாம் விட்டுவிடச் சொன்னார். ஆனால் இளங்குமரனார் அப்பள்ளியில் பணியாற்றுவதை விட்டுவிட்டார். பிறகு, 6 ஆண்டுகள் தளவாய்புரத்திலும் மதுரை திருநகர்ப் பகுதியிலுள்ள பள்ளியிலும் சுமார் 27 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றிக் கொண்டே இளங்குமரனார் செய்த தமிழ்ப் பணிகள் கணிசமானவை.

அப்பணியிலிருந்து 1985ஆண்டு விருப்ப ஓய்வு பெற்று, மதுரைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் தமிழண்ணலின் அழைப்பின் பேரில், தமிழியப்புல ஆய்வறிஞராகவும், வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றத் தொடங்கினார். ஆசிரியராகப் பணியாற்றினால் பெறக்கூடியதைவிடக் குறைவான ஊதியம் என்றபோதும்கூட ஆய்வின் மீதிருந்த பேரார்வத்தால் அப்பணியில் இணைந்தார். “செல்வம் என்பது சிந்தையின் நிறைவே" என்ற உண்மைப் பொருளை அந்தச் செந்தமிழ் அந்தணர் உணர்ந்திருந்தார்.

மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டுகள் பணிபுரிந்து பின் 62-ஆம் வயதில் பணிஓய்வு பெற்ற நாளை “முழுதுறு பொதுவாழ்வைத் துவங்கிய நாள்” என்று அவர் குறிப்பிடுவது, தன்னை முழுமையாகப் பொதுவாழ்வுக்கு அர்ப்பணிக்கும் நாளுக்காகக் காத்திருந்த அவரது ஆழ்மன ஏக்கத்தை வெளிப்படுத்துகிறது.

'செந்தமிழ்ச் செல்வி', தமிழ்ப் பொழில்' ஆகிய இரு இதழ்களிலும் ஆசிரியர் குழுவில் இணைந்து சீரிய எழுத்துப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டார். குளித்தலையில் கா.சு.பிள்ளை நினைவுக் கூட்டங்கள் உட்பட பல்வேறு இலக்கியக் கூட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளை வழங்கியிருக்கிறார். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இவர் ஆற்றொழுக்காக வழங்கிய பொழிவுகள் (சொற்பொழிவைப் பொழிவு என்றே இளங்குமரனார் குறிப்பிடுவது வழக்கம்) ஆயிரக்கணக்கில் இருக்கக்கூடும்.

பின்னாளில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தால் தொடங்கப்பட்ட பல சீரிய திட்டங்களுக்கு இளங்குமரனார் பெரும்பங்காற்றினார். 'அகர முதலி” திட்டத்தின் ஆய்வுக்குழு உறுப்பினர், 'சுவடிப் புல'த்தில் கருத்துரைஞர் குழு உறுப்பினர், 'இராசராசன் விருது'க்கான தேர்வுக்குகுழு உறுப்பினர் போன்ற பல பொறுப்புகளில் பணியாற்றினார்.

தமிழுக்கு இளங்குமரனாரின் மிக முக்கியக் கொடையாக கருதப்படுபவை 550-க்கும் மேலான எண்ணிக்கையில் அவர் வெளியிட்டிருக்கும் நூல்கள். இவ்வளவு நூல்களை ஒருவர் எழுத இயலுமா என்று மலைப்பாக இருக்கலாம். இந்த எண்ணிக் கை துல்லியமானதுதானா என்ற ஐயமும் எழலாம்.   

இளங்குமரனார், 1962-64 மூன்று ஆண்டுகளில் மட்டும் வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை 64 என்பதையும், 2009-ல் வெளியான தன்வரலாற்று நூலான 'ஒரு புல்' நூலின் முதல் பகுதியில் அவரது 330 நூல்களை அவர் பட்டியலிட்டிருப்பதையும், தனது 75-ஆவது அகவை நிறைவு நாளில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டு 81 நூல்களை இயற்றி, மாபெரும் வெளியீட்டு நிகழ்வை நடத்தினார் என்ற தகவல்களையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால் 550 என்ற அந்த எண்ணிக்கையைப் பற்றி இருந்த ஐயம் நீங்கிவிடும்.


அவர் கொடையாக விட்டுச் சென்ற நூல்கள் நூற்றுக்கணக்கில் இருப்பினும் அவற்றுள் ஒரு சிலவற்றைக் குறிப்பிடத்தக்கக் காரணங்களுக்காக இங்கு சற்று விரிவாகக் காண்பது பொருத்தமானதாக இருக்கும்.

தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான, கி.பி. 10-ஆம் நூற்றாண்டுக் காப்பியமான, குண்டலகேசியில் நமக்குக் கிடைத்திருப்பவை 19 பாடல்கள் மட்டுமே. குண்டலகேசி தொடர்பான பிற இலக்கியங்களை ஆராய்ந்து, அதனடிப்படையில் 1127 பாடல்களைத் தானே இயற்றி, அக்காப்பியத்தை மீட்டுருவாக்கம் செய்து தந்திருக்கிறார். அதற்கு இளங்குமரனார் கையாண்ட அணுகுமுறை தனித்துவமிக்கது.

குண்டலகேசி ஒரு பௌத்த சமய நூல். அதற்கு எதிரான தருக்க நூலாக வெளியானது ஐஞ்சிறுங் காப்பியங்களில் ஒன்றான சமண சமய நூல் 'நீலகேசி'. நீலகேசி முழுமையாகக் கிடைத்திருக்கிறது. நீலகேசியை ஆராய்ந்து அதன் அடிப்படையில் புனைவுக் காப்பியமாகக் குண்டலகேசியை மீட்டுருவாக்கி 1958-ஆம் ஆண்டு மதுரை அங்கயற்கண்ணி ஆலயத்தில் வெளியிட்டார் இளங்குமரனார். இந்த நூலுக்குத் தமிழறிஞர் சோமசுந்தர பாரதியார் வாழ்த்துரை வழங்கியிருக்கிறார். இந்த நூலுடன் சிங்கப்பூருக்கும் ஒரு வலுவான தொடர்புண்டு. 

குண்டலகேசி நூலுக்குப் புரவலராக இருந்து வெளியிட்டவர் சிங்கப்பூரைச் சேர்ந்த கோவலங்கண்ணனார். இவர் பாவாணர் அறக்கட்டளையை நிறுவியவர். இந்த நூல் மட்டுமன்றி இளங்குமரனாரின் 'அகல்' எனும் ஆராய்ச்சி நூலையும், வாழ்க்கை வரலாற்று நூலின் முதல் தொகுதியையும், 'தேவநேயப்பாணம்' என்ற பன்னூல் தொகுதிகளையும் வெளியிட்ட பெருமையும் சிங்கைக் கோவலங்கண்ணனாருக்கே உரியது.

குண்டலகேசியைப் போலவே பெருமுயற்சி செய்து இளங்குமரனார் மீட்டுருவாக்கம் செய்த இன்னொரு நூல் 'காக்கைப்பாடினியம்'. தொல்காப்பியத்துக்குப் பின் இயற்றப்பட்ட அரிய இலக்கண நூல். பெண்பால் புலவர் ஒருவர் இயற்றிய உலகின் முதல் இலக்கண நூல்.

இலக்கிய உரையாசிரியர்களின் உரைகளில் எங்கெல்லாம் தமிழ் இலக்கண நூற்பாக்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளதோ அவை அனைத்தையும் (20000-க்கும் மேற்பட்டவை) தேடியெடுத்துத் தொகுத்து அகரவரிசைப்படுத்தி 'மேற்கோள் விளக்க நூற்பா அகரவரிசை' என்னும் ஒரு நூலை இளங்குமரனார் வெளியிட்டார்.

அதன் பின்னர், அந்த நூலில் இருக்கும் நூற்பாக்களை, இயற்றிய ஆசிரியர் பெயரால் அடைவு செய்து காக்கைப்பாடினியார் நூற்பாக்களைத் தனியாக எடுத்தார். அந்நூல் யாப்பிலக்கணத்தை மட்டுமே வரையறுத்த நூல் என்பதைக் கண்டறிந்து, எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா, இனம், ஒழிபு என யாப்பிலக்கண வைப்பின்படி வகைப்படுத்தி உரையும் வழங்கி ஒப்படைத்திருக்கிறார் இந்த முதுமுனைவர். இந்த நூலுக்கு மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார் அணிந்துரை வழங்கியிருக்கிறார்.

தான் இயற்றிய நூல் ஒன்றுக்கு முன்னுரை வாங்க, பாவேந்தர் பாரதிதாசனை ஒருமுறை சென்று சந்தித்திருக்கிறார் இளங்குமரனார். அப்போது "எங்கே, நீ எழுதிய பாட்டொன்று சொல்!" எனப் பாவேந்தர் கேட்க, 'களிற்றானைக் கூட்டங்கள்' என்று தொடங்கும் ஒரு பாடலைப் பாடிக் காண்பித்திருக்கிறார்.

“இது களவழி நாற்பது போல் இருக்கிறதே" என்று பாராட்டிவிட்டு, "உனக்கொன்று சொல்வேன். இனி அவன்ட்டப் போய் முன்னுரை, இவன்ட்டப் போய் முன்னுரை என்று கேட்காதே. ஏன்னா, வேட்டி கட்டத் தெரிஞ்சவனுக்குக் கோவணம் கட்றது எப்படின்னு யாரும் சொல்லித்தரத் தேவையில்லை!" என்று அவருக்கே உரிய பாணியில் அறிவுரை வழங்கியிருக்கிறார் பாவேந்தர். அதன் பின்னர், தான் எந்த நூலுக்கும் யாரிடமும் சென்று முன்னுரை வாங்கவில்லை.

இளங்குமரனார் மதிப்பூதியமாகவோ அன்பளிப்பாகவோ தனக்கு வழங்கப்படும் ரொக்கத் தொகைகளை, பெரும்பாலும் அப்பொழுதே "இன்ன நூல் வெளியீட்டுக்குப் பயன்படுத்தப் போகிறேன்" என்று அறிவித்துவிடுவார் அல்லது "தாங்கள் வழங்கிய தொகையை இந்த நூலாக்கத்துக்குப் பயன்படுத்திக் கொண்டேன்” என்று அந்த நூலிலேயே பதிவு செய்து விடுவார்.

அவரை நாடிவந்த பல விருதுகளைத் தவிர்த்து, தமிழக அரசின் 'நல்லாசிரியர் விருது', 'திரு.வி.க. விருது' உட்பட சில பெருமை வாய்ந்த விருதுகள், குன்றக்குடி அடிகளார் வழங்கிய 'குறள் ஞாயிறு' விருது எனத் தவிர்க்க இயலாமல் சிலவற்றை மட்டும் ஏற்றுக்கொண்டார். தமிழ் மொழிக்காகவும் தமிழருக்காகவும் கருத்துப் பணியோடு நின்றுவிடாமல், களப்பணியாளராகவும் தொடர்ந்து செயல்பட்டிருக்கிறார்.

திராவிட இயக்கங்கள் தோன்றியபின் வைதீக முறையைத் தவிர்த்து, இயக்கத் தலைவர்கள் முன்னிலையில் பல திருமணங்கள் நடைபெற்றன என்றாலும் அவை பெரும்பாலும் சொற்பொழிவுகளாலும் அரசியல் தொண்டர்களாலும் சூழப்பட்ட ஒரு நிகழ்வாக இருந்ததால், அரசியல் சார்பற்ற தமிழ்ப் பண்பாட்டை விரும்பியோருக்கு வேறு திருமண நெறிமுறை வகுக்கப்படாத சூழல் இருந்துவந்தது.

"திருமணமோ அல்லது மற்றைய சடங்குகளோ அவரவர் தாய்மொழியிலேயே நடத்துதல் முறைமையும் அறமும் ஆகும். ஏனெனில், என்ன செய்கிறார்கள் என்ன சொல்கிறார்கள் என்பது புரிய வேண்டும். புரியாமல் நடத்தும் சடங்கு பொருந்தாச் சடங்கு என்பது வெளிப்படை" என்பது இளங்குமரனாரின் எண்ணம். பிறமதங்கள் தாய்மொழியில் சடங்குகளை நடத்த அனுமதிக்கும் போது நாம் இனிமேலும் பிறமொழியைத் தெய்வ மொழியெனக் கருத வேண்டியதில்லை என்பது தனித்தமிழ் முன்னோடியான அவரது எண்ணம்.

தமிழர்தம் இல்லத் திருமணங்கள் தமிழ் நெறிப்படி நடத்தப்படவேண்டும் என்றும் அவ்வாறு நடத்திட முடியும் என்றும் உறுதியோடு வழிகாட்ட, தனி ஒருவராகக் களம் இறங்கினார் இளங்குமரனார். அது ஒரு புரட்சிகரமான சமுதாய மாற்றம் என்பதால் எல்லா நிகழ்வுகளும் முழு வரவேற்போடும் வெற்றியோடும் நிகழ்ந்தன எனக் கூறிட இயலாது.

சில இடங்களில் முதலில் ஒத்துக்கொண்டு பிறகு இறுதி நேரத்தில் தமிழ்வழியில் அல்லாமல் வைதீக முறைப்படி திருமணம் நடந்தது. முதலில் ஒப்புக்கொண்டோர் வெளியில் காத்திருந்து ஐயாவை வணங்கி மன்னிப்புக் கேட்டுத் திருப்பி அனுப்பிய நிகழ்வும் நடந்திருக்கிறது. ஆயினும் அவர் தளரவில்லை. 

அதேவேளையில் ஒரு சாரார் புரோகிதரை அழைத்து வருவதும், மறுசாரார் இளங்குமரனாரை அழைத்து வருவதும், பின் தமிழ்த் திருமண முறையை இறுதிவரை பார்த்து, புரோகிதரே பாராட்டிவிட்டுத் திரும்பிய நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன. மெல்லமெல்ல எதிர்ப்புச் சூழல்கள் குறைந்து, செந்தமிழ் அந்தணராக ஐயா தமிழ்ச் சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலை உண்டானது.

வாழவந்தாள்புரம் சுற்று வட்டாரத்தில் 1952-ல் தனது 22-ஆவது வயதில் திருமணம் நடத்தி வைக்கத் தொடங்கிய இளங்குமரனார் பின்னர் தமிழகத்தின் பல நகரங்களிலும் மலேசிய நாட்டில் பல இடங்களிலும் தமிழ்வழி நெறிப்படி நடத்தி வைத்தத் திருமணங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இளங்குமரனார் தமிழ் இலக்கியங்களை ஆய்ந்து பண்டைய தமிழர் திருமண முறைகளையும் தற்போதுள்ள நடைமுறைகளையும் தழுவி, தானே ஒரு புதிய நெறிமுறையை உருவாக்கி, அதன்படி ஒவ்வொரு திருமணத்தையும் வந்திருப்போர் ஈடுபாட்டுடன் விழாவில் ஒன்றி மனமார வாழ்த்தும் வகையில் நடத்தித் தருவார்.

ஐயாவின் மெல்லிய அதேநேரம் உறுதியான தெளிவான குரல் வளம், அனைவர் மனதையும் ஈர்த்து நிகழ்வில் ஒன்ற வைத்துவிடும். என்னுடன் பிறந்த ரெட்டைப் பிறப்பான தங்கை மணிமேகலை மனோகர் திருமணமும், கரூர் அருகில் உள்ள எனது சொந்த ஊரான, சின்னத்தாராபுரத்தில் இளங்குமரனார் நடத்தித் தந்த தமிழ்நெறித் திருமணங்களுள் ஒன்று. 

திருமணம் மட்டுமின்றி பிற குடும்ப நிகழ்வுகளான பெயர் சூட்டு விழா, காதணி விழா, பூப்பு நீராட்டு விழா போன்ற பத்து நிகழ்வுகளைத் தமிழ் நெறியில் நடத்துவது எப்படி என்பதை 'தமிழ்நெறிக் கரணங்கள்' என்ற நூலில் விளக்கியிருக்கிறார். மேலும் பலருக்குப் பயிற்சி அளித்து அடுத்த தலைமுறைச் செந்தமிழ் அந்தணர்களையும் உருவாக்கியிருக்கிறார். இளங்குமரனாரிடம் பயிற்சி பெற்று அவர் பணியினைத் தொடர்பவர்களில் மலேசியாவில் வாழும், தமிழ் தெறி வாழ்வியல் இயக்கத்தின் முன்னாள் தலைவர் திரு. அருள் முனைவர் அவர்களும் ஒருவர்.

இளங்குமரனாரின் மனைவி செல்லம் அம்மையார் 1977-இல் இயற்கை எய்தினார். பணி ஓய்வுக்குப் பின்னர் தமிழுக்காகத் தவவாழ்வு வாழ முடிவு செய்த இளங்குமரனார், திருச்சிக்கு அருகே அல்லூர் என்ற ஊரில் 'திருவள்ளுவர் தவச்சாலை'யை 1994-ஆம் ஆண்டு துவக்கி அங்கே 2014 வரை, 20 ஆண்டுகள் வாழ்ந்து தமிழுக்கு வளம் சேர்த்தார். அதன்பின் மதுரை திருநகரில் எழுத்துப்பணிகளைத் தொடர்ந்தார்.

அந்தத் தவச்சாலையை அவர் அமைத்துக்கொண்ட பாங்கு மிகவும் ஆழமான தமிழுணர்வால் எழுந்த சிந்தனைகளை உள்ளடக்கியிருக்கிறது. உள்ளே  நுழைந்தவுடன் வலதுபுறம் ஒரு சிறு திருவள்ளுவர் ஆலயம். அதன் கருவறையை அவர் அமைத்த விதம் புதுப்பாதை காட்டுவது. 

தான் திருமண நிகழ்வுகளை நடத்திவைக்கச் சென்ற ஆயிரக்கணக்கான ஊர்களில் ஒவ்வோர் ஊரிலிருந்தும், ஒரு சிறு கல்லை ஏற்கனவே சேமித்து வைத்திருந்திருக்கிறார். அதிலிருந்து அறத்துப்பாலைக் குறிக்க 380 கற்களாலான ஒரு வெண்ணிறக் குன்றும், பொருட்பாலைக் குறிக்க 700 கற்களாலான செந்நிறக் குன்றும், இன்பத்துப்பாலைக் குறிக்க 2500 கற்களால் ஆன நீலநிறக் குன்றும் அமைத்து, அவை ஒவ்வொன்றின் உச்சியிலும் குன்றின் வண்ணத்திலேயே ஒரு விளக்கையும் அமைத்திருக்கிறார். அவற்றின் முன் ஐம்பொன்னால் ஆன ஒரு திருவள்ளுவர் சிலையை நிறுவியிருக்கிறார். என் தந்தையார் பாவலர் இறையரசனாருடன், நான் தவச்சாலைக்குச் சென்ற போது ஐயாவே அதன் அமைப்புகளை விளக்கிக் கூறினார். 

அந்தத் தவச்சாலையில் இலக்கியக் கூட்டங்கள், மனநல ஆலோசனைகள், என மக்களுக்குப் பயனுள்ள பல நிகழ்வுகளைத் தொடர்ந்து ஏற்பாடு செய்து வாழ்ந்தார். இவைதவிர, ஆண்டு விழாக்கள், கவனக நிகழ்வுகள், இயற்கை மருத்துவம், மூச்சுப் பயிற்சி வகுப்புகள் என பல நிகழ்வுகளைத் தொடர்ந்து ஒருங்கிணைத்து தனி இயக்கமாகவே இயங்கிக் கொண்டிருந்தார் இளங்குமரனார். தவச்சாலையிலிருக்கும் 40,000 நூல்களைக் கொண்ட பாவாணர் ஆராய்ச்சி நூலகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்பவருக்கு, அங்கேயே தங்கி ஆய்வுசெய்ய வசதி இருந்தது.

மாதத்தில் 10 நாட்கள் பொழிவுகள், திருமணங்கள் நடத்தி வைத்தல், மீதம் 20 நாட்கள் எழுத்துப் பணி என்று 200 ஆண்டுகள்
அவர் தொடர்ந்து செயலாற்றினார். தவச்சாலையிலேயே திருமணம் நடத்த வேண்டுமெனில் அதற்கென சில விதிமுறைகளை வகுத்திருந்தார்.

காதல் மணமாக இருக்க வேண்டும். சாதி சமயம் பாராது நடைபெறும் திருமணமாக இருக்க வேண்டும். பெற்றோர் இசைவோடு திருமணம் நடத்தப்பட வேண்டும். திருக்குறள் ஓதித் திருமணம் நடத்த ஒப்புதல் தர வேண்டும். மணக்கொடை (வரதட்சணை) கூடாது. ஆக அதிகமாக 100 பேர் மட்டுமே கலந்து கொள்ளும் எளிமையான திருமணமாக இருக்க வேண்டும்.

தமிழர்தம் இல்லத் திருமணங்கள் தமிழ் நெறிப்படி நடத்தப்பட வேண்டும் என்றும், அவ்வாறு நடத்திட முடியும் என்றும் உறுதியோடு வழிகாட்ட, தனி ஒருவராகக் களம் இறங்கினார் இளங்குமரனார். தானே உருவாக்கிய தமிழ்நெறி முறைப்படி  இளங்குமரனார் தான் நடத்தி வைக்கும் திருமண நிகழ்வை மங்கல வாழ்த்து, மொழி வாழ்த்து கூறித் தொடங்குவார். வந்தோரை வரவேற்று, மணவிழா நிகழப் போவதை எடுத்துரைப்பார், தமிழ்ப்பண்பாட்டு விளங்களைக் கூறி தமிழர் திருமணச்சடங்கு நெறிமுறைகளை விவரிப்பார், 
 - "உலகம் வாழ்க... உயர்வெலாம் வாழ்க" என மணமக்களைக் கூறவைப்பார். 
 - ஒரு தட்டில் மண் பரப்பி, அதன் மேல் பூக்களைத் தூவி, திருக்குறள் நூலை வைத்து மணமக்களை அவற்றைத் தொட்டு வணங்கச் செய்து, "வள்ளுவம் வாழ்க - வாழ்வியல் வாழ்க" என மும்முறை அவர்களைக் கூறச் செய்து, வள்ளுவர் படத்துக்கு மலர் தூவ வைப்பார். 
 - "சான்றோர் வாழ்க சால்புகள் வாழ்க" என மும்முறை கூற வைப்பார் "மணமக்கள் வாழ்க வாழ்க" என பொதுமக்களைக் கூற வைப்பார்.
 - மணமக்கள், "பெற்றவர் வாழ்க பெருந்தகை வாழ்க" என மும்முறை கூற பெற்றோர்கள் மலர் தூவி "வாழ்க வாழ்க"எனக் கூற வண்டும். 
 - அகநானூற்றுப் பாடல்கள் 86, 136 ஆகியவற்றின் அடிப்படையில் மகளிர் நால்வரை அழைத்து மங்கல நாண் எடுத்துத் தர மணமகன் அதை மணமகள் கழுத்தில் அணிவிப்பார். 
 - மாலை, துணைமாலைகளை இருவரையும் மாற்றச் செய்து இடம் மாற்றியும் அமரச் செய்வார். 
 - மணமக்கள் இருவரும் இணைந்து விளக்கேற்றச் செய்து பொதுமக்களிடம் வாழ்த்து பெறச் செய்வார். 
 - அரசாணிக்கால் நடுதல், முளைப்பாலிகை வைத்தல், பட்டம் கட்டுதல், மெட்டி அணிவித்தல் ஆகிய முறைகளைச் செய்வார். 
 - திருக்குறள் கூறும் ஐம்புலத்து ஆறு ஓம்புதலுக்கு அடையாளமாக ஐந்து இலைகளை இட்டுச் சோறு படைக்கச் செய்வார்.

இவ்வாறு சடங்குகளின் விளக்கங்களை நம் செம்மொழியில் கூறி, குத்துவிளக்கை ஏற்றவைத்து, அவர் குடும்ப வாழ்க்கையைத் தொடங்கிவைத்து வளமாக வாழும் குடும்பங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.

தனது தனித்தமிழ் இயக்க வழிகாட்டியாக மறைமலை அடிகளையும், தனித்தமிழ் சொல்லாராய்ச்சிக்கு வழிகாட்டியாக தேவநேயப் பாவாணரையும், தமிழ்த்தொண்டுக்கு வழிகாட்டியாகப் பேராசிரியர் இலக்குவனாரையும், வாழ்வியல் வழிகாட்டியாக திரு.வி.க.வையும் கொண்டு வாழ்ந்த இளங்குமரனார் தனது 94- ஆம் வயதில் 2021 ஜூலை 25 அன்று தமிழோடு கலந்தார். அவரது இறுதி ஊர்வலம் தமிழக அரசு மரியாதையோடு நடத்தப்பட்டது.

இறுதியாக, இப்படிச் சொல்ல விழைகிறேன்;  நடமாடும் நல்லதமிழ்ச் சொற்களஞ்சியம், வியக்க வைக்கும் வேர்ச்சொல் ஆய்வாளர், தவச்சாலை அமைத்து வாழ்ந்த தமிழ் மாமுனிவர், இலக்கண இலக்கியங்களை மீட்டுருவாக்கம் செய்த முதுமுனைவர், பல்லாயிரம் திருமணங்களைத் தமிழ் நெறிப்படி நடத்திவைத்த செந்தமிழ் அந்தணர், இரா.இளங்குமரனார். அவர்தம் வாழ்க்கை , தமிழ் மொழியின் அரிய அறிவுச் செல்வங்களை அனுதினமும் ஆராய்ந்து அள்ளி ஒன்றுதிரட்டி உலகுக்குக்காட்டி ஒப்படைத்துச் சென்ற நீண்டதொரு பயணம்.

வயதும் முதுமையும் அவருக்குத் தடையாக ஒருபோதும் இருந்ததில்லை. “சோம்பல் என்பதைச் சுட்டெரிக்கும் பிறவி என் பிறவி" என்பது அவருடைய உற்சாகமூட்டும் சொற்றொடர். இன்று வாழும் தலைமுறையும், அடுத்தடுத்த தலைமுறைகளும் 'என் பாட்டன் சொத்து' என்று உரிமையுடனும் இறுமாப்புடனும் அனுபவித்துப்பயன்பெற' தமிழ் வளம்' என்று அனைத்து நூல்களையும் இளங்குமரனார் வழங்கிச் சென்றிருக்கிறார்.

ஓய்விலா உழைப்பு, சோர்வறியாப் பயணம், தன்னை முன்னிலைப்படுத்தாமல் தமிழை முன்னிலைப்படுத்திய உழைப்பு என அந்தத் தமிழ் முன்னோடி காட்டிய வழியில் நாமும் செயல்படுவோம்.


இறை.மதியழகன்
mathi.sconce@gmail.com
நன்றி: தி சிராங்கூன் டைம்ஸ் - பிப்ரவரி 2022




Thursday, February 10, 2022

நான் நானே தான்!

 -- சந்திரிகா சுப்பிரமணியம்  (ஆஸ்திரேலியா)



நான் காளியுமில்லை, 
சீதையுமில்லை 
நான் பெண் எனும் 
பெரும் அற்புதம் 
சிறுமை மண்ணில் கால் புதைந்து 
தடைகள் மழைத் தலை வாங்கி 
எதிர்ப்பு வெள்ளம் மீறி வந்து 
வீறு கொண்ட வித்து நான். 
வீழ்ந்தாலும் வெளிப்படுவேன் 
பயன் தரும் விருட்சமாக. 
வீழும் முன்பு 
நூறு வித்து, 
என் அறிவு தடவி 
அன்பு நனைத்துக் 
காடென சூழக் 
காலடி வீழ்வேன். 
வீழ்ந்த பின்னும் 
வித்தக வீணை தரும்
மரமாவேன்

சுடர் தூண்டத் தீயாகும் 
சருகாவேன் 
பிணியறு மருந்தாகும் 
வேராவேன் 
ஏனெனில் நான் 
கற்றலும் 
கற்பித்தலும் 
கற்ற படி நிற்றலும் 
கற்றதன் பயன் 
பெற்றலும் 
வாழ்க்கையாகக் கொண்டு 
கற்பிதம் தாண்டி 
அற்புதம் செய்யும் 
அறிவூட்டல் பணியின் 
அடித்தள அடிமை 
அறிவுப் பொறி ஏற்றும் 
பெண் எனும் பேராசான், 
நான் நானே !
சுயம்! அதுவே நான்.


---





பரதவர்...

 -- முனைவர். எஸ். சாந்தினிபீ


சாதிகள் இல்லாத காதல் திருமணத்தை வாழ்க்கை முறையாக, வரதட்சணைக் கொடுமை இல்லாத இன்றைய ஐரோப்பியச் சமுதாயத்தை ஒத்த சமூகத்தில் வாழ விரும்பாதவர் மிகச் சிலரே.   நமது முன்னோர் இனிமையாக இப்படி வாழ்ந்த காலம் சங்க காலம்.   மண்ணின் இயற்கை அமைப்பின் அடிப் படையில், வாழ்விடத்தை ஐந்து வகையாகப் பிரித்திருந்தனர்.   மனிதாபிமானத்திற்கும் அறிவியலுக்கும் தொடர்பில்லாத கருத்தான சாதி, பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு சொல்லும் மடமையைக் கடந்து வாழ்ந்திருந்தனர்.   நிலம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்தாகப் பிரித்து அறியப்பட்டது.   அப்பொழுது இந்த பிரிவு தான் நடைமுறையில் இருந்தது.

குறிஞ்சி என்பது மலையும் மலை சார்ந்த இடம்,  காடும் காட்டிற்கு அருகில் இருக்கின்ற இடங்களும் முல்லை,  விவசாய நிலம் மருதம்,  கடலும் கடற்கரையும் நெய்தல்,  இந்த நான்கில் ஏதேனும் ஒன்று தன்னுடைய இயல்பில் திரிந்து வறண்டு பயனற்றதாகப் போகுமானால் அதனை பாலை என்றனர்.  வாழும் நிலத்தில் விளைந்ததை உண்டார்கள். உணவை அடிப்படையாகக் கொண்டதே தொழில், தொழிலுக்குத் தக்க உடை.  இந்த ஐந்து பிரிவு நிலங்களிலும் வாழ்ந்த மக்களின் உணவும் உடையும் தொழிலும் பழக்கவழக்கங்களும் விளையாட்டுக்களும் பொழுது போக்குகளும் பாட்டுக்களும் இசைக்கருவிகளும் வேறு வேறு.  நெய்தல் நிலத்தில் பரதவர், நுழைஞர், உமணர் வாழ்ந்ததைச் சங்க நூல் தொல்காப்பியம் அறிமுகப்படுத்தும். 

பரதவர், மீன் மற்றும் கடற் பொருட்களை வாணிபம் செய்தனர். இவர்கள் தலைமை இனத்தினர் என்று தெரிகிறது, நுழைஞர் கடலுக்குள் நுழைந்து மீன் பிடிப்பவர், உமணர் உப்பு தயாரிப்பவர், இன்று பரதவர் மட்டும் காலம் பல கடந்தும் அறியப்படுகிறனர். இன்றும் மீன்பிடித் தொழில் செய்கின்றனர். ஒரே தொழிலைச் செய்யும் பலரும் இன்று சமயம்  சாதி அடிப்படையில் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார்கள். இந்த பரதவர் தொடர்பாக சில குறிப்புகள் பிற்காலச் சோழர் காலத்திய (8 ஆம் நூற்றாண்டு முதல் 13-ஆம் நூற்றாண்டு வரை) கல்வெட்டுகளில் காணக்கிடைக்கின்றன. 

கோயிலில் இருக்கும் கடவுளுக்கும் பிராமணர்களுக்கும் மன்னருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆடை நெய்து கொடுக்கும் பணியைச் செய்து வந்ததாக பல கல்வெட்டுக்கள் நமக்குச் சொல்கின்றன. மீன்பிடித் தொழிலிலிருந்து நெசவுத் தொழிலுக்கு எப்படி மாறினார்கள் இந்த பரதவர் ? இது நம் அனைவரின் பொதுச் சிந்தனையில் உதிக்கும் ஒரு கேள்வி.   இதற்கு உதாரணம் ஒன்று, இன்றைய எடப்பாடியில் நெசவைத் தொழிலாகக் கொண்ட பலர் தாங்கள் பரதவர் என்பர். மீன்பிடித் தொழிலிலிருந்து ஏதோ காரணத்தினால் முன்னோர்கள் இடம் பெயர்ந்து தொழிலை மாற்றிக் கொண்டதாக இன்றும் அவர்களிடம் வழக்கத்தில் உள்ள வாய்வழிச் செய்தியை நம்மில் பலரறிவோம், கல்வெட்டுச் செய்தியும் வாய்வழிச் செய்தியும் இணைந்து செல்கின்றன. 

இருதொழிலுக்கும் என்ன தொடர்பு என்று ஆழ்ந்து நோக்கும் போது பல உண்மைகள் தெரிய வந்தன. மீன் பிடிப்பதற்கு வலை பின்ன வேண்டும். மீனின் அளவுக்கு ஏற்ப வலை மாறுபடும், தொலை தூரம் சென்று ஆழ் கடலில் மீன் பிடிக்க வலுவான வலை தேவை.  இப்படி பலதரப்பட்ட வலைகள் பின்னுதல் அவசியம். வலை மட்டுமா? படகுகளில் கப்பல்களில் கடலில் நெடுந்தூரம் செல்கையில்,  கப்பல்களை  காற்றோட்டத்தின்  திசைக்கேற்ப   செலுத்துவதற்காகப் பெரிய திரைச் சீலைகள் கொண்ட பாய்மரங்கள் அமைக்கப்படும். நமக்குச் சட்டென்று நினைவுக்கு வருவது எம்ஜிஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் 'அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்' என்னும் பாட்டு.  அதில் பெரிய பெரிய திரைச் சீலைகள் கொண்ட பாய்மரங்களைப் பார்த்துள்ளோம். இவை பருத்தி நூலால் செய்யப் பட்டவையே. அவற்றை விரித்துப் பிடிப்பதற்காகக் கோல் வைக்க வேண்டும் எந்த இடத்தில் எப்படிக் கோல் வைத்தால் எந்தக் கோணத்தில் சரியாக இருக்கும் என்பதை மிகத் துல்லியமாக அறிந்திருந்த பரதவர் அந்தக் கோலை வைப்பார்கள். 

அவர்கள் இந்த திரைச்சீலைகளுக்குச் சாயம் முக்கி எடுப்பார்கள். அவ்வாறே  நூல் பிரித்தல், இழைகளைச் செம்மைப் படுத்துதல், பின்னுதல், சாயம் ஏற்றுதல் போன்ற இவர்களின் பணிகள் அனைத்தும் நெசவுக்கும் பொருந்தும். அங்கேயும் நூலை இழை இழையாக எடுத்து சிக்குகளை அகற்றவும் அதன்பின் தறியில் கோல்கள் வைத்து நூலை விரித்து, அதன் பின்னரே நூலைத் துணியாக நெய்து நமக்குக் கொடுப்பார்கள்.  தொழிலில் இத்தனை ஒற்றுமைகள் இருப்பதால் துணி நெய்வதற்கு பரதவர்கள் ஆடை நெய்வதில் வல்லவர்களாக மாறினர் போலும்.   தொழிலின் அடிப்படையில் இருக்கும் இத்தகைய ஒற்றுமையும் அனுபவமே துணி நெய்தலில் பயன்பட்டது.  துணி நெய்தலில்  இவ்வளவு திறமையும் அனுபவம் கொண்டவர்கள் பரதவர்கள். இதனால் தான் மன்னனுக்கும் கடவுளுக்கும் துணி நெய்யும் தகுதி பெற்றவர்களாக கருதப்பட்டு இருக்கிறார்கள். கோயில் பணியில் அமர்த்தப்பட்டும்  இருக்கிறார்கள். 

இன்றைய புதுச்சேரியில் இருக்கும் திருபுவனை பெருமாள் கோயில் கல்வெட்டு ஒரு தகவல் சொல்கிறது. சில பரதவர்களை இக்கோயிலுக்கும் அந்தணர்களுக்கும் ஆடை நெய்ய மன்னன் அனுப்பி வைக்கிறார். அவர்களிடத்தில் தன்னுடைய கட்டளையை ஓர் ஓலை மூலம் கொடுத்தார். அந்த ஓலை கொண்டு வருபவர் அந்த ஊரின் தலைமையிடம் கொண்டு சேர்க்க, தலைமை தன்னுடைய அங்கத்தினர் ஒப்புதலுடன் பணியும் சன்மானமும் தருவது அன்றைய நடைமுறை, *கல்வெட்டு இந்த செய்தி தான் சொல்கிறது. ஆனால் அதில் ஒரு வார்த்தை வருகிறது, இந்த பரதவர்களை இரு சாதியினரின் கலப்பு என்று பொருள்படும்படி வடசொல் ஆன "ஆயோகவர்" என்ற சொல் வருகிறது. அப்படிக் குறிப்பிட ஒரு காரணம் இருந்தது.  

நமது மண்ணில் நிலத்தின் அடிப்படையில் இயற்கையின் அடிப்படையில் அறிவியலின் அடிப்படையில் ஐந்து வகையான பிரிவுகள் இயங்கி வந்த அதே காலகட்டத்தில்,  வடக்கில் வேறு ஒரு பழக்கம் இருந்தது.   சாதிய முறை அல்லது சனாதன தர்மம் அங்கு நிலவியது.   மனிதர்களைப் பிறப்பால் உயர்வு தாழ்வு என அடையாளப் படுத்துவதுடன் அவர்களுக்கான  உணவு, உடை, வீடு, வாழ்விடம், தொழில் இவை அனைத்தையும்  சாதியின் அடிப்படையிலேயே அமைத்திருந்தார்கள் அவர்கள். ஒவ்வொரு சாதியினரும் அவரவர் சாதியைச் சேர்ந்தவர்களை மணம் முடிக்க வேண்டும். ஆனால் சட்டம் எப்படி இருந்தாலும் அன்றைய நடைமுறை வேறுவிதமாக இருந்திருக்கிறது. அது கிட்டத்தட்ட கிபி இரண்டாம் நூற்றாண்டிலேயே ஒரே சாதிக்குள் திருமணம் செய்து கொள்ளாத அவர்களின் எண்ணிக்கை அவர்களுடைய குழந்தைகளின் எண்ணிக்கை ஒரு கணிசமான தொகையை எட்டியது. 

அது வரையிலும் வேறு சாதியுடன் திருமணம் செய்து கொண்டவர்கள் சாதியை விட்டு நீக்கி வைக்கப்பட்டு அவர்களுக்குச்  சாதியும்  மறுக்கப்பட்டது. ஒரு கணிசமான மக்கள் தொகை சாதிக்கு வெளியே இருக்கிறது என்பதை உணர்ந்தார்கள் போலும், பின்னர் அவர்களுக்கும் ஒரு சாதியின் பெயர் கொடுத்து ஒரு தொழிலைக் கொடுத்துச் சாதி அமைப்புக்குள் சேர்த்துக் கொண்டார்கள். அதன்படி கணவன் உயர்ந்த சாதியாகவும் மனைவி தாழ்ந்த சாதியாகவும் இருந்தால் அவர்களின் குழந்தைகள் அனுலோமா என்றும்; ஆண்மகன் தாழ்ந்த சாதியாகவும் பெண் உயர்ந்த சாதியாகவும் இருப்பின் அவர்களின் குழந்தைகள் பிரதிலோமா என்றும் அழைக்கப் பட்டனர். அனுலோமா உயர்ந்தவர் பிரதிலோமா தாழ்ந்தவர் என்று கருதப்பட்டார்கள், அவர்களுக்கு சில தொழில்களையும் சொன்னார்கள். அனுலோமாவினருக்கு கோயிலைச் சார்ந்த பணிகள் இருந்தன. அப்படிப்பட்ட அனுலோமா பிரதிலோமாவை குறிப்பதுதான் இந்த ஆயோகவர் என்னும் சொல்.   

பரதவர்கள் எப்போது வேற்று சாதியுடன் மணம் புரிந்தார்கள்? அவர்களை ஏன் ஆயோகவர் என்று கல்வெட்டு குறிக்கிறது? இதுதானே நமக்குள் எழும் அடுத்த கேள்வி,  அதற்கும் ஒரு விடை உண்டு. வடக்கிலிருந்து தெற்கிற்கு வந்தவர்கள்  கோயிலையும் கோயில் கலாச்சாரத்தையும் உண்டாக்கினர். மன்னர்களும் அவர்களுக்கான நிலம், தொழில் வல்லுநர்கள், நீர் வசதி போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுத்தார்கள். அப்படித் தான் திறமை பெற்ற நெசவாளிகளான பரதவர்  மன்னரால் அனுப்பப் பட்டனர். ஆனால் வடக்கரின் பார்வையில் சாதி குறுக்கே நின்றது போலும், எனவே அந்த பரதவர்களை ஆயோகவர் என்று ஒரு சாதியின் பெயர் சூட்டி அவர்களை உயரிய சாதி என்று தங்களது மனதிற்கு ஒரு சமாதானத்தைச் சொல்லிக் கொண்டு துணி நெய்யும் அனுமதியும், ஊருக்குள் வாழும் தகுதியும் கொடுக்கிறார்கள். 

ராஜராஜசோழனின் காலத்திலும் ஊருக்குள் வாழும் ஒரு முக்கியமான கலைஞன் என்றால் அவர் நெய்தல் தொழிலாளியே, அன்று முதல் கோயில் பணியில் ஈடுபட்ட பரதவர்கள் ஆயோகவர் ஆகிப் போனார்கள். சில தலைமுறைகளுக்குப் பின் அதே பரதவர் வம்சாவளியினர் கோயில்களுக்கு தான தர்மங்களை வழங்கியதைக் கல்வெட்டுகள் சொல்கின்றன. பிற்காலச் சோழர்களின் இறுதிக்காலத்திலும் பின்னர் வந்த விஜயநகர மன்னர்கள் காலத்திலும் இந்த பரதவர்கள் கோயில் நிர்வாகத்தில் பங்கு பெறத் தொடங்கியிருந்தார்கள்.

இதில் வரும் அடிப்படை அடிநாதம் என்னவெனில் சாதி இல்லாது வாழ்ந்த மக்களின் மீது தங்களின் தேவைக்கு ஏற்ப சாதிப் பெயர்கள் ஏற்றப்பட்டன. சாதி, மனிதன் தோன்றிய போதே பிறந்துவிட்ட ஒன்றல்ல. சாதியை மறுத்தால் மடிந்து போக அது நமது இதயத் துடிப்போ, மூச்சுக் காற்றோ அல்ல எனும் வரலாற்றுப் புரிதலோடு,  தீர்க்கமான மனிதராக முன்னோர்கள் சொல்லிச் சென்ற 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனும் உயரிய கருத்தை நம் மனதில் பதியவைத்து வாழ்வோமானால் எதிர்காலம் ஒளிரும். 


* Tribhuvani varadaraja Perumal temple (Naduvil Viranarayana Vinnagar) - The inscription, of the 9th year (of Vikrama Chola), records a gift of land for weavers of the anuloma class, who enjoyed the privilege of weaving and supplying clothes to temples and kings (ARE 208 of 1919).














- முனைவர். எஸ். சாந்தினிபீ, பேராசிரியர், வரலாற்றுத் துறை, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்
அலிகர், உத்திரப் பிரதேசம்.

நன்றி:  கடற்கரை;   ஜன-பிப் 2022 இதழ் 






Friday, February 4, 2022

ஐவகை மன்றம்

-- சொல்லாக்கியன் 





வேண்டும் வேண்டும் வேண்டும்
இலஞ்சி மன்றம் வேண்டும்
பசியும் பிணியும் வெறுப்பும் 
பொய்யும் புறணியும் புரட்டும்
இந்திய மண்ணில் அறுத்திட
இலஞ்சி மன்றம் வேண்டும். 

வேண்டும் வேண்டும் வேண்டும்
வெள்ளிடை மன்றம் வேண்டும்
மக்கள் பணத்தைச் சுருட்டியக்
கயவர் கழுத்தை ஒடித்திட
கனவிலும் களவை ஒழித்திட
வெள்ளிடை மன்றம் வேண்டும். 

வேண்டும் வேண்டும் வேண்டும்
நெடுங்கல் மன்றம் வேண்டும்
மதவாத வஞ்சம் உண்டோர்
சாதிபேத நஞ்சம் கொண்டோர்
நெஞ்சம் தெளிந்து அமைதியுற
நெடுங்கல் மன்றம் வேண்டும்.

வேண்டும் வேண்டும் வேண்டும்
பாவை மன்றம் வேண்டும்
எளியர்க்கும் வலியர்க்கும் சமநீதி
பெண்ணுக்கும் ஆணுக்கும் ஒருநீதி
அதையும் விரைந்து அளித்திட
பாவை மன்றம் வேண்டும். 

வேண்டும் வேண்டும் வேண்டும்
சதுக்கப் பூதங்கள் வேண்டும்
பெண்கள் மோசம் செய்வோர்
மழலைகள் நாசம் செய்வார்
நையப் புடைத்து உண்ணும்
சதுக்கப் பூதங்கள் வேண்டும்.


(பூம்புகாரில் வெள்ளிடை மன்றம், பூதச்சதுக்கம், இலஞ்சிமன்றம், நெடுங்கல் நின்ற மன்றம், பாவைமன்றம் ஆகியவை ஐவகை மன்றங்கள் இருந்ததாய் 'சிலம்பு' செப்பும்.)




-----

Thursday, February 3, 2022

அறம் என்றால் என்ன?


- சொல்லாக்கியன் 


மனித வாழ்வின் பயன் யாது? காம இன்பம் துய்ப்பதும், குழந்தை பெறுவதும், செல்வம் சேர்ப்பதும் என்றால், அதாவது இன்பமும் பொருளும் என்றால், மனிதரில் பலரும் வாழ்வின் பயனை அடைந்து விட்டனர் என்றே சொல்லலாம். இவை எல்லாவற்றையும் பெற்றப் பின்பும், மனம் எதையோ வேண்டி நிற்கின்றதே, அது எது? அறம். அது விளைவிக்கும் அமைதியும் ஆனந்தமும்தான் வாழ்வின் பண்பும் பயனுமாகின்றது.

திருவள்ளுவர் காலத்தில், களப்பிரர் காலத்தில், பௌத்தமும், சமணமும் மேலோங்கி இருந்திருக்க வேண்டும். துறவு வாழ்வும் மிகுந்திருக்க வேண்டும். பெரும்பாலான அத்துறவிகளும், தங்களின் மிக அடிப்படையான தேவைகளுக்கு, சமூக உழைப்பாளர்களையே சார்ந்திருக்க வேண்டி இருந்திருக்கும். துறவிகள் மிகுந்து, உழைப்பாளர் குறைந்ததால், சமூகத்தின் சமநிலை கெட்டிருக்கும். சமூக சமநிலையை மீட்க, எக்காலமும் நிலைக்க, ஒரு புதிய புரட்சிகரமான கருத்தொன்றை முன்வைக்கின்றார், திருவள்ளுவர். அதுதான், இல்லறம். 

சமூகத்தில், கணவன், மனைவி, பிள்ளை என குடும்பமாய் வாழ்ந்தும், உற்றார், உறவினர், நட்பு, விருந்தினர், சான்றோர் ஆகியோருடன் இனிமையாய் பழகியும் உதவியும், புலன்களை ஒழுங்குபடுத்தியும், மனத்தை தூய்மைப்படுத்தியும், உயிர்மையை உணரலாம், இறைமையை அடையலாம், பிறப்பும் அறுக்கலாம்.

அறவழியில் பொருள் ஈட்டி, பொருள் கொண்டு இன்பம் துய்த்து, இன்பத்தாலேயே வீடு எய்தும் நுணுக்கம்தான், திருக்குறள் காட்டும் இல்லறம். மேலும், இளவயதில், துறவு பூணுதல் கடினம். குடும்ப வாழ்க்கைக்கு ஏங்க நேரலாம். தவறான, அறமற்ற வழிகளில் போக நேரலாம். ஆனால், அறவழியில் வாழ்ந்து, அனுபவித்து, பின் முதுமையில் துறவு போதல் எளிது. எனவேதான், அறத்துப்பாலில், இல்லறத்தை அடுத்து, துறவறத்தை இயலாக்கினார். 




'அறம்' என்பதற்கான வரையறையும், இலக்கணமும், சான்றும் இறைமை என்பதால், அறத்துப்பாலில், 'கடவுள் வாழ்த்'தை முதல் அதிகாரமாய், திருவள்ளுவர் அமைத்துள்ளார். பிரபஞ்சக் கடலே, அருமை மற்றும் பொருண்மை என இறைமைக்குள் இரண்டாய் இருக்கும்போதும், அவன் அருமையான உயிர்மையாய் நிலைக்கின்றான். மனிதரின் உயிர்மை, இறைமையுடன் ஒன்றாமல், இல்லற வாழ்விலோ, துறவு வாழ்விலோ, பிறப்பறுக்க முடியாது.

'அன்பே' எளிமையாக இறைமையை அடையும் குணம். துறவு வாழ்வில், அன்புக்கு, இயல்பான இடமில்லை. குடும்ப வாழ்வில், அன்பு செலுத்துவது இயல்பானது, எளியது, இனியது. அன்பால் இறைமையுடன் ஒன்றலாம். எல்லா இடத்தும், எல்லாரிடத்தும், எல்லா உயிரிடத்தும் அன்பு செலுத்துவது, இறைமையாகும். துறவறத்தாலாவது, இல்லறத்தாலாவது, இறைமையுடன் ஒன்றியவர் பிறப்பறுப்பர். ஒன்றாதவர், ஊழ்வினைக்கேற்ப மீண்டும் பிறப்பெடுப்பர்.

அறத்துப்பாலில், கடவுள் வாழ்த்துக்கு அடுத்த அதிகாரமாக, வான் சிறப்பை அமைக்கிறார், திருக்குறளார். இறைமையின்றி எப்படி இவ்வுலகம் இல்லையோ, அதே போன்று, நீரின்றி உயிர் தோன்றுவதோ, மனித இனம் நிலைப்பதோ இல்லை என்பதால், இச்சிறப்பு. இறைமையை உணர்வதற்கு, மனித முயற்சியோடு, இறைவனின் அருள் தேவை என்பதுபோல், இயல்பாக, இயற்கையாக உணவு போதாதபோது, உணவை உற்பத்தி செய்யும் உழவு முயற்சிக்கும், மழையின் அருள் தேவை.

மழையின்றி, இறைவழிபாடும், உதவியும், ஓகமும், தியானமும், ஒழுக்கமும் சமூகத்தில் நிகழாது, நிலைக்காது. மழையின், நீரின் முக்கியத்துவத்தைக் கூறுவதன் மூலம், மழை பெய்ய வேண்டி மரங்களைக் காப்பதையும், வளர்ப்பதையும், பெய்த நீர் வீணாகாமல் சேமிக்க வேண்டியும், உழவுக்கும், குடிப்பதற்கும் பகிர்ந்தளிக்க வேண்டியும், பூமிப்பந்து மிகுந்த வெப்பமாகாமல் தடுக்க வேண்டியும், சமூக செயல்பாடுகளும், ஒழுங்கும் நிலைக்க வேண்டியும் நாம் செயலாற்ற அறிவுறுத்துகிறார், வள்ளுவப் பெருந்தகை.

குடும்ப வாழ்வு தன்னிலையை முன்னிலைப்படுத்துகின்றது. துறவு வாழ்வோ, சமூகநிலையை முன்வைக்கின்றது. ஆனாலும், குடும்ப வாழ்வில் கிடைக்கும் மனைவி, பிள்ளை, நட்பு, உறவால் ஏற்படும் சுகங்கள், துறவு வாழ்வில் கிடைப்பதில்லை. குடும்ப வாழ்வே, இயல்பான தெரிவு. எனவே தான், இல்லறவியல், துறவறவியலுக்கு முன்னதாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால், சமூகத்தின் சீரான இயக்கத்திற்கு, தன்சுகத்தை தியாகம் செய்யும் துறவறமும் தேவைப்படுகின்றது. இல்லறமா? துறவறமா?, இது ஒரு மனச்சிக்கல். முதலில் இல்லறம், பின்பு துறவறம் என, இச்சிக்கல் தீர்க்கப்படுகின்றது. இரண்டிற்கும் இலக்கு, உயிர்மையை உணர்ந்து, இறைமையில் ஒன்றி, பிறப்பறுத்தல் என்பதும், முடிவற்ற அமைதியிலும், நிபந்தனையற்ற ஆனந்தத்திலும் திளைப்பதும்தான். நடைமுறையில், குடும்ப வாழ்வும், சமூக வாழ்வும் பிணைந்த வாழ்க்கை முறைகளும் உள்ளன.

முதுமையில் செய்து கொள்ளலாம் என்று எண்ணாமல், உயிர்மையை உணர்ந்து, இறைமையுடன் ஒன்றும் 'அறம்' என்பதை இன்றிலிருந்தே செய்க. அம்முயற்சியும் பயிற்சியும், இறைமையுடன் ஒன்றும்போது, ஐயம் நீக்கும் பொலிவான துணையாகும். இறைமையுடன் ஒன்றும் போது அகத்தில் இருந்து இன்பம் வருகின்றது, பிறப்பும் அழிகின்றது. மற்ற இன்பங்கள் அனைத்தும் புறத்தில் இருந்து வருபவை, அவை பிறப்பை அறுக்காது. ஒருவர் செய்ய வேண்டியது எல்லாம், புலன்களை அடக்கி, உயிர்மையை உணர்ந்து, இறைமையுடன் ஒன்றும் அறம்தான். இயல்கின்ற இளமைக் காலத்தில் செய்யாமல், முதுமையில் செய்ய முடியாமல் போனால், அவர் மீதமுள்ள வாழ்நாள் எல்லாம், பழிதான் மிஞ்சும்.

குடும்ப வாழ்வின் மூலமே எவ்வாறு சிறிது சிறிதாக புலனடக்கி, மனத்தைத் திருத்தி, செயலைக் கட்டுப்படுத்தி, உயிர்மையை உணர்ந்து, இறைமையுடன் ஒன்றலாம் என்று, ஒரு புரட்சிகரமான ஒருங்கிணைந்த மாற்று வாழ்வியலை வடிவமைத்துத் தந்திருக்கிறார், எம்மான். துறவறத்தால் கிடைக்கும் பலன்கள் எல்லாம், இல்லறத்தில் எவ்வப்பொழுதெல்லாம் இன்பநலன்களாய் கிட்டுகின்றது என்று, ஒப்பீட்டு ஆய்வினை இல்லறவியல் நெடுக நிகழ்த்துகிறார்.

தன்னலமாக இல்லாமல், பசித்தவர்க்கும், வறியவர்க்கும், துறவிகளுக்கும், முதியவர்களுக்கும் உதவி, குடும்ப வாழ்வை மேற்கொள்பவரின் பிறப்பும் அறும் என்கிறார், வள்ளுவர். மனைவியிடமும், பிள்ளைகளிடமும், நண்பர்களிடமும், உறவினர்களிடமும், விருந்தினரிடமும், பிற உயிர்களிடமும் அன்பாய்ப் பழகினாலேயே, புலனடக்கத்தின் விளைவான, உயிர்மையை உணர்தலும், இறைமையுடன் ஒன்றுதலும் நிகழும். இயல்பாக, கட்டாயமின்றி, அன்பான குடும்ப வாழ்க்கை வாழ்பவன், துறவிகளைக் காட்டிலும் சிறந்தவன். குடும்ப வாழ்வே அறம் என்கிறார், குறளடியார். துறவிகள், தம் பிறப்பறுக்க வேண்டும் எனும் தன்னலத்தவர். ஆனால், குடும்பனோ, மனைவி, பிள்ளைகள், நண்பர்கள், உறவினர்கள், விருந்தினர், பிற உயிர்கள் என அனைவருக்காகவும், தன்னலனை குறைத்து வாழ்கின்றான். பயனடைந்தவர்கள் யாவரும், அவனை தெய்வமாகவே மதித்து வணங்குவர்.

ஐம்பூதங்களை அடக்கி ஆட்டுவிக்கும் திறன், துறவிக்கு மட்டும் கிட்டுவதல்ல. அன்பான வாழ்க்கை நடத்தும் கணவனை மட்டும் வணங்கும் பெண்ணாலும் மழையை நினைத்த நேரத்தில் வரவழைக்கக் கூடிய திறனைப் பெற முடியும். முழுமையாக ஒன்றும் தன்மை, பலவற்றை ஆளும் திறனை அளிக்கின்றது. நல்ல மனைவியைப் பெறுவதே அறம். 

அறிவறிந்த பிள்ளைகளை, குடும்ப வாழ்வில் பெற்றால், அது, உலக வாழ்வில் பெறும் எல்லா சுகங்களிலும், பெருமைகளிலும் சிறந்ததாகும். அப்பெருமையே, மனதை, நன்றியுடன் இறையுடன் ஒன்ற வைத்து, பிறப்பறச் செய்யும். பண்புடைய பிள்ளைகளைப் பெற்றால், பிறப்பு எடுக்க வேண்டியதாயின், அப்பெற்றோர்களுக்கு தீங்கு நேராது. தம் குழந்தை சிறிய கைகொண்டு அடித்துக் கலக்கிக் குழப்பித் தெறிக்கும் கூழ், அமிழ்தத்தினும் இனிதாம். குழந்தையின் கூழ் ஒழுகும் கையை பெற்றோர் சுவைத்து எடுக்கையில் ஏற்படும் ஆனந்தம், இறைமையுடன் ஒன்றுவதற்கு ஈடானது. தம் பிள்ளைகளின் மேனியை மெல்ல தொடுதலும், அவர்களுடைய அன்பான சொற்களைக் கேட்டு இன்புறுதல், மெய்யுணர்வை அடைவது போன்றது, மந்திரத்தால் விளையும் தெளிவைப் போன்றது. கல்வியும், செல்வமும் ஊழின் விளைவுகள் என்பதால், தம்மைக் காட்டிலும் தம் மக்கள் அறிவு கொண்டு இருந்தால், மேலும் நன்மையுற, நல்வினையே புரிவர். உலக மக்களும் அவ்வாறே செய்ய முனைவர். தன் மகனைச் சான்றோன் என கேட்கும் போது, பிள்ளை பெற்ற போது கிடைத்த இன்பத்தைக் காட்டிலும் மிகுதியான ஆனந்தத்தை அடைவாளாம், தாய். நன்மக்களே அறம்.

மனைவியும், கணவன் மனைவிக்குப் பிறந்த பிள்ளைகள் மட்டும், குடும்ப வாழ்வில் இன்பம் அளிப்பதில்லை. குடும்ப நண்பர்களும் அன்பாலும், பழகும் ஆர்வத்தாலும் இன்பம் சேர்க்கின்றனர். இத்தகைய உலக இன்பம், ஓக தியானத்தில், இறைமையுடன் ஒன்றி விளையும் ஆனந்தத்திற்கு ஒப்பானது. அறமே முழுமைபெற அன்பைச் சார்ந்திருக்கின்றது. அறத்தை அறியாத மறவர்க்கும் அன்பே காரணமாகின்றது. அன்பில்லாமை, பிறப்பை மீண்டும் உண்டாக்கும். இல்லற வாழ்வு, அன்பில்லாமல், மிகுந்த வலிமையான உடல் உறவினால் கிட்டும் இன்பத்தால் மட்டும், நிறைவுறாது. அன்பு என்பது உயிரின் இயல்பு. அன்பு இல்லாதவர், வெறும் எலும்பும் சதையும் தோலால் போர்த்தப்பட்ட பிணமாவர். அன்பே அறம். முகமலர்ச்சியுடன் விருந்தோம்புபவன் இல்லத்தில், செல்வம் மனமுவந்து தங்கும். விருந்தினரின் தேவையறிந்து செய்யும் விருந்தோம்பல், வேள்விக்கும் ஓக தியானத்திற்கும் ஒப்பானது. விருந்தோம்பல் அறம்.

இல்லற வாழ்வில் இருந்து, அன்புடன் கூறிய இனிமையான சொல், துறவு வாழ்க்கையில், இறைமையுடன் ஒன்றியவரின் அருள் மிகுந்த சொல்லுக்கு, இணையானது. முகத்தில் அமைதி நிலவ, இனிமையாக பார்த்து, மனம் நிறைந்த இனிமையான சொல்லைக் கூறுதலே அறம். 

இங்கே, துறவறத்தில் உள்ள புலனடக்கம், மனவடக்கம், செயலடக்கம் ஆகிய யாவற்றையும் ஒருங்கே காணலாம். எல்லார் இடத்தும் இனிமையான சொல்லைக் கூறினால், பிறப்பறும். நல்லதையே நினைத்து, இனிமையாக கூறினால், ஏற்கனவே சேர்ந்துவிட்ட தேவையற்ற குணங்களும் குறையும், அறத்தின் பயனும் விளையும்.

அறம் எனும் சொல் ஒற்றைப் பொருளைக் குறிப்பது அல்ல. அது பலபொருள் குறிக்கும் ஒரு சொல். இம்மையில் இடையறா இன்பமும் மறுமையில் பிறப்பறுதலும் எய்த வைக்கும், இறைமையில் ஒன்றுதலும், உயிர்மையை உணர்தலும், மனம் அடங்கலும், புலன் அடங்கலும், செயல் இல்லாமையும், இவற்றை அடைய துணைபுரியும் நல்ல மனைவி, நன்மக்கள், அன்புடைமை, விருந்தோம்பல், இனியது கூறல், அடக்கம், ஒழுக்கம், பொறுமை, அருளுடைமை, கொல்லாமை, புலால் உண்ணாமை, வாய்மை, தவம், துறவு, மெய்யுணர்தல் ஆகிய ஊழால் விளைந்த பண்புகள், செயல்பாடுகள், இலக்குகள், வீடு அடைதல் யாவுமே அறம்.

இறுதிச்சொல்லாக, எப்பண்பு, எச்செயல் எல்லாம், புலனடங்கி, மனமடங்கி, உயிர்மையை உணர்ந்து, இறைமையுடன் ஒன்றி, இன்பம் எய்தி, பிறப்பறுக்கின்றதோ அவை யாவும் அறமே!!


நன்றி: குறள் நெறி - பிப்ரவரி இதழ்

-------------








Wednesday, February 2, 2022

நீதிக்கு வாதிப்பேன் நின்று



-- நிவேதிதா லூயிஸ் 
தொல்லியல் மற்றும் வரலாற்று ஆர்வலர், எழுத்தாளர்


தமிழகத்தின் முதல் கிறிஸ்தவப் பெண் சட்டமன்ற உறுப்பினர் என ஜெபமணி மாசிலாமணி அம்மாளின் பெயர் பதிவாகியுள்ளது. எனது "முதல் பெண்கள்" நூலாக்கத்தின்போது மானுடவியல் ஆய்வாளர் முனைவர் ஆ.சிவசுப்பிரமணியன், பிலோ ஜாண் அம்மாள்தான் ஜெபமணி அம்மாளின் பெயர்த்தி என தகவல் தந்து, அவரைத் தொடர்புகொள்ள வழியேற்படுத்தித் தந்தார். முதல் பெண்கள் நூலில் ஜெபமணி அம்மாளைப் பற்றி எழுதிய தகவல்கள் பிலோ அம்மாள் தந்தவையே. நூல் வெளியீட்டு விழாவுக்கு அவரால் வர இயலவில்லை என்பதால், ஜெபமணி-மாசிலாமணி தம்பதியின் உறவினரை மனமுவந்து அனுப்பினார். தொடர்ச்சியாக அவர்கள் குடும்பத்துடன் பேசிவருகிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. பெரியவர் வ.உ.சிதம்பரனார், திரு வி.க., ம.பொ.சி. உள்ளிட்டவர்கள் பற்றி அவ்வப்போது அம்மாவுடன் பேசிக்கொள்வதில் ஓர் ஆனந்தம். விடுதலைப் போராட்டத்தில் முழுமூச்சாக ஈடுபட்டிருந்த அன்றைய காலத்தையும் ஒவ்வொருவர் பட்ட துன்பத்தையும், சின்னச் சின்ன விஷயங்களில் அவர்கள் கொண்ட மகிழ்வையும் பேசிக்கொண்டிருப்போம். 

கொரோனா பெருந்தொற்று காலத்திலும், பிலோ அம்மாவின் கணவர் மறைந்த ஜாண் ஐயாவின் நூலைப் பெறுவதற்காக ஒரு நாள் இரவு 9 மணிக்கு அவர் வீட்டுக்குச் சென்று பேசிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் தன் தாத்தா மாசிலாமணி, பாட்டி ஜெபமணியின் வாழ்க்கை வரலாற்றைத் தான் நன்றாக இருக்கும்போதே தொகுக்கப் போவதாக பிலோ அம்மா சொன்னார். மிகுந்த உற்சாகத்துடன் அவரை ஊக்கப்படுத்தி, பாராட்டிவிட்டு வந்தேன். 

அதன்பின் அவ்வப்போது பேசுவார். கொம்பாடி, சில்லாநத்தம் என மாசிலாமணியுடன் தொடர்புடைய ஊர்களுக்குச் சென்று வரும்போதெல்லாம் சிறு குழந்தை போன்ற குதூகலத்துடன் அங்கு சென்று வந்ததை அழைத்து விவரிப்பார். தன் 84வது வயதில் இவ்வளவு அலைந்து திரிந்து தன் குடும்ப வரலாற்றை ஆய்ந்து, தமிழ் மக்களுக்கு பிலோ அம்மா அளித்திருக்கும் நூல், 'நீதிக்கு வாதிப்பேன் நின்று'. 

இந்நூல் நாம் கண்டிராத ஒரு புதிய தமிழ்நாட்டை நமக்கு அறிமுகம் செய்கிறது. மாசிலாமணி, ஜெபமணி இருவரது வாழ்க்கை வரலாறு மட்டுமல்லாது, அவர்கள் வழி வ.உ.சி., ரோச் விக்டோரியா, ரோட்ரிக்ஸ், முத்தையா தாஸ், ஐயாத்துரை பாகவதர், ராஜாஜி, என நாம் நன்றாக அறிந்த, அறியாத தலைவர்களை நூல் பேசுகிறது. ஏரியூர் அரசியல் மகாநாடு உள்ளிட்ட நாம் வாசிக்க மறந்த வரலாற்றின் பக்கங்களை இந்த நூல் கண்முன் விரிக்கிறது. 

என்னை மிகவும் கவர்ந்தவை என நூலின் சில பகுதிகளைச் சுட்டலாம். தாதாபாய் நௌரோஜி குறித்து மாசிலாமணி எழுதிய கவிதை, மாசிலாமணியை பிபின் சந்திர பாலுடன் ஒப்பிட்டு தமிழ்நாட்டின் சந்திரபாலர் என வழங்கியது, சாதியை மாசிலாமணி சாடியது போன்றவை மிக முக்கியப் பதிவுகள். 

                 "மானிடவர்க்கத்துள்ளே மாபழி மேல் கீழ் என்னும்
                 பாரிடை நிற்கச் செய்த பாவமே பற்றிற் றென்னக்
                 கூறிட வழியுமாகிக் குறைகளும் மெத்த வாச்சே
                 யாரிடை செப்பச் சொல்லாய் யாமுறுந் துயரைத் தீராய்" 
என்று மாசிலாமணி பாடியுள்ள கவி அவரது எண்ண ஓட்டத்தைச் சொல்கிறது. வ.உ.சி. யின் உண்மையான ஆத்ம நண்பர் என முத்தையா தாஸ் மாசிலாமணியைக் குறிப்பிட்டுக் கைப்பட எழுதியுள்ள குறிப்பு நூலில் இடம்பெறுகிறது. சில்லாநத்தத்தில் மாசிலாமணி ஏற்படுத்திய கதர் தொழிலும், அங்கிருந்து வார்தாவிலிருந்த காந்திக்கு நூல் அனுப்பப்பட்டதையும் அறியமுடிகிறது. தனி நபர் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்க காந்தியிடம் மாசிலாமணி சிறப்பு அனுமதி பெற்றது, அவரது கூட்டங்களில் மொழிபெயர்ப்பாளராக மேடையேறியது, கராச்சி மாநாட்டில் மாசிலாமணி ஆங்கில உரை நிகழ்த்தியது என வாசிக்க, அன்றைய காலத்தில் விடுதலைப் போராட்டம் எப்படி மாநிலங்களின் எல்லைகளை விரிவாக்கியிருந்தது; வடவர் தெற்கைச் சேர்ந்தவர்களுக்கு இடையே இருந்த இணக்க உணர்வு போன்றவற்றைத் தெரிந்துகொள்ள முடிகிறது. 

தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம் எப்படி விடுதலைப் போரில் மேடையாக மாறியது என்பதையும் அங்காங்கே நூல் சுட்டிச்செல்கிறது. ஆலயத்தின் முன்பு நடந்த 'நாத்திக அக்கிரமப் பிரச்சாரத்தைக் கண்டிக்கும் கூட்டம்', அதில் மாசிலாமணி ஆற்றிய உரையையும், அதே மாசிலாமணி பெரியாருடன் அமர்ந்திருக்கும் படத்தையும் ஒருங்கே நூலில் காணமுடிகிறது. பெரியாரை எதிர்த்து அவரது கூட்டத்திலேயே பேசி, அதனால் பல சங்கடங்களுக்கு மாசிலாமணி ஆளானதாகவும் நூல் குறிப்பிடுகிறது. ஆனாலும் இருவருக்கும் இடையே இருந்த புரிந்துணர்வு, அரசியல் நாகரிகம் வியப்பு கொள்ளச்செய்கிறது. 

அதே சமயம் இந்த நூல் மாசிலாமணியை 'அரசியல்ரீதியாக சரியான' மனிதராகக் கட்டமைக்கவும் இல்லை. அவரது முரண்களை பூடகமாகக் கண்முன் விரிக்கிறது. சாதியத்தை சாடிப் பாடல் எழுதிய மாசிலாமணி, சிறையில் தன் மூத்திரக் கலயத்தை எடுக்க மறுத்து, தோட்டியை வரச்செய்யும் கதையும் நேர்மையாக நூலில் எடுத்தாளப்படுகிறது. ஒரு படைப்பின் சிறப்பு அதன் நேர்மையில் இருக்கிறது என்பதைத் திடமாக நம்புவதால், தன் தாத்தாவின் பண்புகளை எந்த ஒளிவு மறைவுமின்றி குறிப்பிடும் பிலோ அம்மாவைப் புரிந்துகொள்ளமுடிகிறது; அவர் மேல் மதிப்பு இன்னும் கூடுகிறது. 

கடைசி வரை தன்னை 'கத்தோலிக்கர்' என்ற அடையாளத்துக்குள் மாசிலாமணி வைத்திருந்தார் என பிலோ அம்மாள் எழுதுகிறார். 'இந்தியக் கத்தோலிக்கன் என்ற அடைமொழிகளுக்குள் கத்தோலிக்கனுக்கே அவர் முன்னுரிமை கொடுத்தார். அது அவர் அறியாமை என்று கொண்டாலும், தமது கருத்தில் உறுதியாக இருந்தார்', என நூல் குறிப்பிடுகிறது. போலவே ஜெபமணி அம்மாள் தினமும் காலையில் ஜெபமாலையையும், குறிப்பிடம் நூலையும் எடுத்துக்கொண்டு ஆலயம் போகும் வழக்கம் உள்ளவர் எனவும் பிலோ பதிவு செய்கிறார். கத்தோலிக்கக் கிறிஸ்தவம் என்ற அமைப்புக்குள் இருந்துகொண்டே, விடுதலைப் போராட்டத்தில் தாங்களும் பங்கேற்று, பலருக்கு வழிகாட்டியாகவும் இந்தத் தம்பதி இருந்துள்ளனர். 

1909ம் ஆண்டே திருமணம் ஆனாலும், 1937ம் ஆண்டு தான் இவர்கள் திருமணம் சான்று பெற்றுள்ளது. ஒருவேளை ஜெபமணி அம்மாள் தேர்தலில் பங்கேற்கும் எண்ணம் வந்த பிறகு, அதற்குச் சமர்ப்பிக்கவேண்டிய அஃபிடவிட்டுக்காக மணச்சான்று பெற்றிருக்கக் கூடும். 'ஆர்ப்பாட்ட அரசியலை' மாசிலாமணி செய்யவில்லை எனக் குறிப்பிட்டு மூத்த கிறிஸ்தவ ஆய்வாளர் கலாபன் வாஸ் (Kalaban Vaz) எழுதிய கடிதம், நூலில் இடம்பெற்றுள்ளது. நூலின் பல பகுதிகள் மாசிலாமணி-ஜெபமணி தம்பதியின் மகன் அலாஷியஸ் ராஜ் நேரடியாகக் கண்டுணர்ந்து எழுதிய 'நீதிக்கு வாதிப்பேன் நின்று' நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன என்பதால் முதன்மை சான்றுகள் அவை என்பது தெளிவாகிறது. ம.பொ.சி. இந்த நூலைப் பள்ளிகளில் பாடநூலாக்க வேண்டும் என பாராட்டுக் கடிதம் எழுதியுள்ளார். 

'தேசியப் போராட்டத்தில் ஈடுபட்ட முதல் கிறிஸ்தவர்; தென்னாடு விழிப்படையக் காரணமாயிருந்த தலைவர்களில் ஒருவர்' என தமிழ்மணி இதழ் மாசிலாமணியைப் பாராட்டியிருப்பதை நூல் குறிப்பிடுகிறது. 'கத்தோலிக்கப் பிரமுகர்களின் சத்தியாகிரகம்: இந்த ஜில்லாவின் பிரபல நீண்டநாள் காங்கிரஸ்வாதியான ஸ்ரீ. ஏ. மாசிலாமணியும், அவரது மனைவி ஜெபமணி எம்.எல்.ஏ.வும் இன்று காலை மாதா கோவில் முன் ஆயிரக்கணக்கான கத்தோலிக்கரிடையில் யுத்த எதிர்ப்பு கோஷம் செய்து சத்தியாகிரகம் செய்தனர்' என தினமணி பதிவு செய்துள்ளதையும் நூல் சுட்டுகிறது. விடுதலைப் போராட்டத்தில் கிறிஸ்தவர்களின் பங்கு அதிகம் பேசப்படவில்லை என்ற என் நீண்ட நாள் ஆதங்கத்தை இந்த நூல் ஓரளவுக்கேனும் தீர்க்கிறது. 

நூலின் பின் இணைப்புகள் இன்னும் சுவாரசியமானவை. மாசிலாமணி குறித்து மற்றவர்கள் படைப்புகள் மட்டுமல்லாமல், அவரது படைப்புகளும் இடம்பெற்றுள்ளன. 'பஞ்ச நிவர்த்திப்பா', 'இந்திய பிரலாபப் பத்து', 'சட்டசபை நிராகரணச் சிந்து', 'பாரதமாதா புலம்பல்' போன்றவை ஐந்தாவது ஃபார்ம் (அன்றைய பத்தாம் வகுப்பு) வரை கற்ற மாசிலாமணியின் மொழிப்புலமையை எடுத்துச் சொல்கின்றன. இவை தவிர அவரது ஆங்கிலக் கவிதை, உரைநடையும் இடம்பெற்றுள்ளன. (கர்ப்பத்தடை எதிர்ப்பு குறித்த அவரது பாடலும் உண்டு; எனக்கு அதில் முற்றிலும் உடன்பாடில்லை)

1935 முதல் 1956 வரை சென்னை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் ஜெபமணி அம்மாள். 'அகில இந்திய அளவில் இப்பெருமை பெற்ற கிறிஸ்தவப் பெண்மணி அவர் ஒருவரே' என 1973ம் ஆண்டு வெளியிடப்பட்ட அன்னையின் அருட்சுடர் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிலோ அம்மாள் பதிவு செய்கிறார். தியாகிகளுக்கு வழங்கப்பட்ட நிலத்தையும் வாங்கவில்லை, தாமிரப் பத்திரமும் அம்மையார் பெற்றுக்கொள்ளவில்லை எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நாட்டுக்காகவும், தாய் திருச்சபையின் நலனுக்காகவும் வாழ்ந்து தியாகம் செய்த மாசிலாமணி அவர்களைக் கிறிஸ்தவத் தமிழ்ச் சமுதாயம் விழித்தெழுந்து நினைத்துக் கொள்ளுமா? என லயோலா கல்லூரி முன்னாள் பேராசிரியர் எம்.எக்ஸ். மிராண்டா கேள்வி எழுப்பியிருக்கிறார். அதே கேள்வியை நானும் முன்வைக்கிறேன். தமிழ்க் கிறிஸ்தவச் சமூகம் இந்தத் தம்பதியைக் குறித்துக் குறைந்த பட்சம் அறிந்துகொள்ள முன்வருமா? 150 ரூபாய் மதிப்புள்ள நூலை 100 ரூபாய்க்குத் தரமுடியும் என பிலோ அம்மாள் குறிப்பிடுகிறார்.


"நீதிக்கு வாதிப்பேன் நின்று" 
பிலோ ஜாண்
செல்வி பதிப்பகம், 9443702800
சிறப்புச் சலுகை விலை ரூ.100/-
தொடர்பு கொள்க: திரு. இளங்கோ- 9443702800



---


Tuesday, February 1, 2022

மேக்களூரில் யானையின் நினைவாக வைக்கப்பட்ட சிற்பக் கல்வெட்டு

– ச.பாலமுருகன்
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் 



திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த பாலமுருகன் குழுவினர் கீழ்பெண்ணாத்தூர் அருகே மேக்களூர்  நவநீதக் கோபால கிருஷ்ணசாமி கோவிலில் யானையின் நினைவாக வைக்கப்பட்ட சிற்பமும், கல்வெட்டும், கீக்களூர் கோவிலில் சம்புவராயர் கால கல்வெட்டும் கண்டறிந்தனர்.

மேக்களூர் கோவிலில் உள்ள யானைச்சிற்பம் 4 அடி உயரமும், 2 அடி அகலமும் உள்ள கல்லின் மேல் பகுதியில் பாதி வட்டமாகவும் கீழ்ப்பகுதி நீளமாகவும் உள்ளது.  மேல் பகுதியில் உள்ள வட்டத்தில் யானையின் உருவம் தனது தும்பிக்கையை மடக்கிய நிலையில் பொறிக்கப்பட்டுள்ளது. கல்லில் உள்ள யானையின் கீழ் யானையின் பெயரை தனியாக ஒரு வரியில் கோடிட்டு எழுதப்பட்டுள்ளது. இதற்குக் கீழ் 5 வரியில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு உள்ளது. 

இக்கல்வெட்டைப் படித்த கல்வெட்டு அறிஞர் சு.ராஜகோபால், இந்த யானை சிற்பத்தின் கீழ் உள்ள கல்வெட்டில், ஸ்ரீபுத்தன் புவந திவாகரன் என்பவர் இந்தப் பட்டத்து யானைக்கு நீலகண்டரையன் என்று பெயர் கொடுத்துள்ளான். இது 10 அல்லது 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகலாம்.  யானையின் உருவம் பொறித்து அதன் கீழ் நீலகண்ட ரையன் என்று எழுதப் பட்டுள்ளது. இது திருவண்ணாமலை பகுதியில் கிடைக்கும் அரிய வகைக் கல்வெட்டாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


அதேபோல் கீக்களூர் சிவன் கோவிலில் கருவறையின் பின்புறம் உள்ள சுவரில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஜநாராயண சம்புவராயரின் 2 நிலதானக்கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகள் சிமெண்ட் பூச்சுகளால் முழுமையற்று உள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


---