Tuesday, September 30, 2014

மங்கள்யான்: நாசாவை விஞ்சிய இஸ்ரோ


-- செல்வன்.

செவ்வாய்க்கு இதுவரை விண்கலம் அனுப்பிய நாடுகள், ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜன்ஸி, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகியவை மட்டுமே. சீனா செவ்வாய்க்கு அனுப்பிய யுங்ஹோ விண்கலம் தோல்வியில் முடிந்தது. இஸ்ரோவின் சாதனை, செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பிய முதல் ஆசிய விண்வெளி ஏஜென்ஸி என்பது மட்டுமல்ல, அதில் அது செய்த டெக்னலாஜிக்கல் சாதனைகளும் தான்.

மங்கள்யான் மிகக் குறைந்த செலவில், மிகக் குறைந்த எரிபொருள் செலவில் செவ்வாய்க்குச் சென்றுள்ளது. நிலவுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தை விட, பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையே உள்ள தூரம், 100 மடங்கு அதிகம். ஆனால் நிலவுக்கு ஒரு விண்கலம் செல்ல எத்தனை எரிபொருள் பிடிக்குமோ, அதே அளவு எரிபொருளில் செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பிச் சாதனை புரிந்துள்ளது இஸ்ரோ. 1998இல் செவ்வாய்க்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம் எரிபொருள் தீர்ந்து, விண்வெளியில் காணாமல் போய்விட்டது குறிப்பிடத்தக்கது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியது போல் "செவ்வாய்க்கு மங்கள்யான் அனுப்ப ஆன செலவு, கிராவிட்டி எனும் ஹாலிவுட் படத்தை எடுக்க ஆன செலவை விடக் குறைவே". ஒரு சராசரி ஹாலிவுட் படம் எடுக்க இன்று நூறு மில்லியன் டாலர் ஆகும். ஆனால் மங்கள்யான் வெறும் $74 மில்லியன் செலவில் செவ்வாய்க்குச் சென்றுள்ளது. சமீபத்தில் செவ்வாய்க்குச் சென்ற மேவன் எனும் நாசா விண்கலம், சுமார் ஏழு பில்லியன் டாலர் செலவில் சென்றுள்ளது.


இத்தகைய தொழில்நுட்பச் சாதனையை இஸ்ரோ எப்படி சாதித்தது?

ஒரு விண்கலனை மேலே எழுப்பத் தான் எரிபொருளில் பெரும் பங்கு செலவாகும். அதன்பின் விண்வெளியில் பயணம் செய்யவும் எரிபொருள் அவசியம். நாசா, ஐரோப்பிய ஸ்பேஸ் எஜென்ஸி விண்கலன்கள் விண்வெளிக்குச் சென்ற பின்னும் எரிபொருளைப் பயன்படுத்தி எங்கேயும் நிற்காமல் நேராகச் செவ்வாய் சென்றன.

ஆனால் மங்கள்யான் புவியீர்ப்பு விசையையையும், விண்வெளியின் எடையற்ற தன்மையையும் மிக அழகாகப் பயன்படுத்தியது. இதன்படி பூமிக்கு மேலே உயர்ந்த மங்கள்யான், உடனே செவ்வாய் செல்லாமல் பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரத் தொடங்கியது. பூமி எப்படி சூரியனைச் சுற்றிவர எரிபொருள் தேவையில்லையோ, அதே போல் மங்கள்யான் பூமியைச் சுற்றி வரவும் எரிபொருள் தேவைப்படவில்லை. இப்படியே மங்கள்யான் பூமியை மணிக்குப் பல்லாயிரம் மைல் வேகத்தில் சுற்றிவரும் சூழலில் கொஞ்சம், கொஞ்சமாக மங்கள்யானின் நீள்வட்ட பாதையை விரிவுபடுத்தி ஒரு கட்டத்தில் மங்கள்யானின் எஞ்சினை இயக்கி, மங்கள்யானைச் சூரியனை நோக்கித் தள்ளியது இஸ்ரோ. செவ்வாய், சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் தருணம் இதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

அந்த ஒரே உந்தில் சூரியனை நோக்கி விரைந்த மங்கள்யானுக்கு அதன்பின் எரிபொருள் தேவைப்படவில்லை. காரணம் மங்கள்யானை அதன்பின் சூரியனின் ஆகர்ஷண சக்தி தன்னை நோக்கி இழுத்தது. இந்தச் சூழலில் செவ்வாய், சூரியனுக்கு அருகில் வரவும் எஞ்சினை மீண்டும் இயக்கி, தன் வேகத்தைக் குறைத்து, செவ்வாயை நெருங்கி அதன் ஈர்ப்பு விசையால் செவ்வாயைச் சுற்றிவரத் தொடங்கியது மங்கள்யான். இது நிகழ்ந்ததும் மங்கள்யான் தன் நோக்கத்தை எட்டிவிட்டது.

ஆக, மங்கள்யானின் வெற்றி வெறுமனே "நானும் செவ்வாய்க்குப் போனேன்" என இல்லாமல் தொலைதூர விண்வெளிப் பயணங்களை மிகக் குறைந்த எரிபொருள் செலவில் புவியீர்ப்பு விசையைப் பயன்படுத்தி எப்படி சாதிக்க முடியும் என்பதை உலகுக்கே சுட்டிக் காட்டுவதாகவும் அமைந்து உள்ளது. அவ்விதத்தில் மங்கள்யான் இந்தியாவின் மிகப் பெரும் வெற்றிச் சின்னம் என்பதில் சந்தேகம் இல்லை.











செல்வன்
email:  holyape@gmail.com

Monday, September 15, 2014

அறிஞர் அண்ணா அவனி வந்த நாள்!

 -- மேகலா ராமமூர்த்தி.


தமிழக அரசியல் வரலாற்றில் தந்தை பெரியாரின் தொண்டராய்த் திராவிடர் கழகத்தில் (நீதிக் கட்சியே பின்பு திராவிடர் கழகமாக மாறியது) களமிறங்கிய காஞ்சிபுரம் திரு. நடேசன் அண்ணாதுரை அவர்கள் பின்பு பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாய்த் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கியதும், தி.மு.க என்று அழைக்கப்பட்ட/படுகின்ற அவ்வரசியல் கட்சி பின்பு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்ததும் தமிழர்களாகிய நாம் நன்கறிந்ததே.

மிகச் சிறந்த பேச்சாளர்; எழுத்தாளர், பத்திரிகையாளர் என்ற பன்முகத் திறன்வாய்ந்த திரு. அண்ணாதுரை அவர்கள் ’அறிஞர் அண்ணா’ என்று கழகத் தொண்டர்களாலும், தமிழக மக்களாலும் அன்போடும், ஆசையோடும் அழைக்கப்பட்டவர்.

தமிழ் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் ’spontaneous overflow’ என்று வியக்கத்தக்க வகையில் ஆற்றொழுக்காகப் பேசக்கூடியவர் அண்ணா. அதுமட்டுமா? மொழிபெயர்ப்புக் கலையிலும் வித்தகர்!

அதற்கான சான்று…

ஒருசமயம், சென்னையில் ஒருவிழாவில் ஆங்கிலத்தில் உரையாற்றவிருந்த சிறந்த கல்வியாளரான திவான் பகதூர் சர். ஏ. இராமசாமி முதலியார் அவர்களின் ஆங்கிலப் பேச்சைத் தமிழில் மொழிபெயர்க்க அண்ணா அழைக்கப்பட்டிருந்தார்.

இந்தியாவில் வியாபாரம் செய்வதற்காக வந்த வெள்ளையனான இராபர்ட் கிளைவ் பின்பு இந்தியாவையே கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரனாக மாறினான் எனும்பொருளில் “He came to India as Robert Clive and became Robber Clive” என்று தன் பேச்சினூடே சொல்விளையாடல் நிகழ்த்தினார் இலட்சுமணசாமி முதலியார். அவையிலிருந்தோர் அனைவரும் இதனை மிகவும் ரசித்ததோடல்லாமல் அண்ணா இத்தொடரை எவ்வாறு தமிழில் மொழிபெயர்க்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்போடும் ஆவலோடும் முதலியாருக்கு அருகில் நின்றிருந்த அண்ணாவையே விழி இமைக்காது பார்த்தபடி அமர்ந்திருந்தனராம்.

அண்ணாவோ, "திரு. கிளைவாக இந்தியா வந்தவன் பின்பு திருடன் கிளைவாக மாறினான்" என்று அநாயாசமாக அதனை மொழிபெயர்க்கவும் அனைவரும் வியப்பில் விழிவிரிய விண்ணதிரக் கரவொலி எழுப்பினராம். அண்ணாவின் மொழிபெயர்ப்புத் திறன்கண்ட முதலியாரும் அவரை ஆரத்தழுவித் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாராம்.

அறிஞர் அண்ணாவைப் பொறுத்தவரை அவர் அரசியல் தலைவராக மட்டுமல்லாது திரைப்பட வசனகர்த்தாவாகவும், நாடக ஆசிரியராகவும் முத்திரை பதித்துத் தமிழ்நாட்டு ‘பெர்னார்ட்ஷா’ எனும் சிறப்புப் பெற்றவர்.

“வேலையற்றதுகளின் உள்ளங்களில் விபரீத எண்ணங்கள்; சாலையோரத்திலே சலசலப்பு; மரத்திலே பிணம்; மடியிலே பணம்; அரசே இது காலத்தின் குறி” என்பது (எஸ்.எஸ். ராஜேந்திரன், கே. ஆர். ராமசாமி போன்றோர் நடித்த) ’சொர்க்க வாசல்’ எனும் படத்தில் அவர் எழுதிய புகழ்பெற்ற வசனம்.

’மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு’ என்பது அண்ணாவின் மற்றொரு புகழ்பெற்ற வசனம்.

தன் மேடைப் பேச்சுக்களால் அனைவரையும் சொக்கவைத்தவர் ஒருவர் தமிழகத்தில் உண்டென்றால் அது அண்ணாவாகத்தான் இருக்கமுடியும்!!

ஒருமுறை அரசியல் கூட்டமொன்றில் பேசுவதற்காக அண்ணா ஓரிடத்திற்குச் (ஊரின் பெயர் நினைவில்லை) செல்லவேண்டியிருந்தது. அவர் வருவதாகச் சொன்னநேரம் கடந்துவிட்டிருந்தது; அவர் பேச்சைக் கேட்க ஆவலோடு வந்தவர்களோ இரவு எத்தனை மணியானாலும் சரி…அண்ணாவின் பேச்சைக் கேட்டுவிட்டுத்தான் அவ்விடம் விட்டு நகர்வது என்ற உறுதியோடு அங்கேயே பாய், தலையணை சகிதம் உட்கார்ந்துவிட்டனர். கடைசியாக விழா நாயகர் ‘அண்ணா’ வந்தார். தன் கடிகாரத்தைப் பார்த்தார். அப்போது மணி இரவு 10:30.

’சர்’ என்று யாருமறியாவண்ணம் மூக்குப் பொடியை உறிஞ்சினார். தொண்டையைச் செருமிக் கொண்டார். தன் வெண்கலக் குரலில்

"மாதமோ சித்திரை
மணியோ பத்தரை
உங்களைத் தழுவுவதோ நித்திரை 
மறக்காது இடுவீர் எமக்கு (திமுக) முத்திரை"
என்றாரே பார்க்கலாம். எழுந்த கரவொலியில் வானமே அதிர்ந்ததாம்! 

 "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு", "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" போன்றவை அண்ணாவின் புகழ்பெற்ற வேறுசில சொல்லாடல்கள். இவற்றில் ’ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்பது திருமூலரின் திருமந்திரம்; அண்ணா இதனை அடிக்கடிப் பயன்படுத்தியதால் பலர் இது அண்ணா உருவாக்கிய சொற்றொடர் என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு அண்ணாவின் மொழியாளுமை மக்களைக் கட்டிப்போட்டிருந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

அரசியலிலே அண்ணாவை ஓர் மிதவாதி என்றே குறிப்பிடலாம். எதிலும் தீவிரவாதப் போக்கை அவர் கைக்கொண்டதில்லை. (அதனை அவருடைய குறையாகவும் சிலர் விமரிசித்தனர்.) அரசியலில் எதிர்க்கட்சியினரையும் எதிரிகளாய் எண்ணாமல் அவர்களோடும் அன்பாகப் பழகியவர் அவர். தரக்குறைவான சொற்களால் யாரையும் விமரிசிக்காதவர்; அரசியலிலும் நாகரிகத்தைப் பேணியவர்.

கடவுள் மறுப்பிலும் பெரியார் அளவிற்கு அவர் முனைப்புக் காட்டினாரில்லை. நான் ”தேங்காயும் உடைப்பதில்லை; பிள்ளையாரும் உடைப்பதில்லை” என்பதே அண்ணாவின் கொள்கையாக இருந்தது. (It sounds he must be an Agnostic like Pandit Nehru.)

தமிழக முதலமைச்சராக இரண்டாண்டுகள்கூட முழுதாகப் பதவி வகிக்கவில்லை அண்ணா என்பது மிகவும் வருந்தத்தக்கது. எனினும், தான் பதவியிலிருந்த சிறிது காலத்திலேயே ‘மதராஸ்’ எனும் பெயரை மாற்றித் ’தமிழ்நாடு’ எனும் புதிய பெயரைத் தமிழகத்திற்குத் தந்தார். 1968-இல் சென்னையில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடத்திக் காட்டினார்.

அசாதாரணத் திறமைகளும், பல்துறை அறிவும், பகட்டற்ற எளிமையும் கொண்ட அறிஞர் அண்ணா எப்போதும் படித்துக் கொண்டிருப்பதையே விரும்புவாராம் (he was an avid reader). தன் உடல்நிலை மிகவும் மோசமடைந்து எமனின் வரவை அவர் எதிர்பார்த்திருந்த வேளையிலும்கூடத் தன் மரணம் பற்றிக் கவலைப்படாமல் தன் தலைமாட்டில் வைத்திருந்த புத்தகங்களைப் படித்துமுடிக்காமல் போகப் போகிறோமே என்றுதான் கலங்கினாராம்.

தன் கவிதைகளால் பாமரர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பாரதிபோல், தன் தனித்தன்மை வாய்ந்த மேடைப் பேச்சுக்களாலும், அற்புதமான எழுத்துக்களாலும் பாமர மக்களின் உள்ளங்களில் பாசமிகு ’அண்ணனாக’ இடம்பிடித்தவர் அறிஞர் அண்ணா.

அவருடைய பிறந்தநாளான (செப்.15) இன்று அவருடைய நினைவைப் போற்றுவோம்!








மேகலா ராமமூர்த்தி
megala.ramamourty@gmail.com

Thursday, September 11, 2014

பஞ்சலோக விக்ரஹம் செய்வது எப்படி? பகுதி 2

பாகம் 2.

உலகிலேயே மிகப் பெரிய சிவன் நடராஜன் விக்ரகத்தை  இந்த ராஜன் இன்டஸ்ட்ரி நிறுவனத்தினர்   செய்திருக்கிறார்கள், அந்த விக்ரகம் இப்போது ஸ்விட்சர்லாந்தில் ஜெனிவாவில் உள்ள ப்ரூஸ்லன்ட் என்னும் இடத்தில்  அட்டாமிக் காஸ்மிக் சென்டரில்  நியூக்ளியர்  அட்டாமிக் ஆராய்ச்சி செய்கிறார்கள். அங்கே இந்த நடராஜர் விக்ரகத்தை வைத்திருக்கிறார்கள். அங்கே  ஏன்  வைத்திருக்கிறார்களென்றால்  இந்த நடராஜரின் நடனத்துக்கும்  அணுவுக்கும்  தொடர்பு உள்ளது.அங்கே அணுவை எப்படி உருவாக்குவது, எப்படி அழிப்பது என்று ஆராய்ச்சி செய்கிறார்கள். அதற்கு இந்த நடராஜரின் நர்த்தன அமைப்பு முறையாக ஒத்துப் போகிறது  என்று நிரூபித்திருக்கிறார்கள். அதற்காக இந்திய அரசாங்கமே இந்த சிலையை செய்யச்சொல்லி  அங்கே வைத்திருக்கிறார்கள்  என்று ஒரு அருமையான செய்தியைச் சொன்னார் திரு சுரேஷ் அவர்கள்.
அவர்களின் தொழில் நுணுக்கத்தைப் பற்றிப் பேசும்போது அவர் சொல்கிறார் டெல்லியிலே உள்ள மொரதாபாத் என்னும் இடத்திலே இப்படிப்பட்ட விக்ரகங்களைக் கொண்டு சென்று அந்த விக்ரகத்தை பாகம் பாகமாக வெட்டி ப்ரதி எடுத்து அப்படியே மோல்டிங் முறையில் செய்து  விற்கிறார்கள் என்று.  விவரம் தெரியாத பலர் அவர்களிடம் விக்ரகங்களை வாங்கி ஏமாறுகிறார்கள். ஆனால் விக்ரகங்களின் நுணுக்கம் தெரிந்தோர் இவரிடம் வந்து செய்யச்சொல்லி எடுத்துப் போகிறார்கள் என்கிறார் இவர்.

விக்ரகம் செய்யும் முன்னர் அந்த விக்ரகம் எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானித்து அதன் பின்னர்தான் விக்ரகம் செய்யத் தொடங்குவார்கள்.ஒவ்வொரு விக்ரகத்தின் கைகளும்  அந்தந்த விக்ரகத்துக்கு ஏற்ப என்ன முத்திரையைத் தாங்கி இருக்க வேண்டும் என்று முடிவு செய்து அந்த முத்திரைக்கேற்ப விரல்களை அமைக்கவேண்டும்.
அபய ஹஸ்தம் என்றால்  உள்ளங்கை  அந்த விக்ரகத்தை பார்ப்பவர்களுக்கு ஆசி வழங்குவது போல்   ஆள்காட்டி விரல் முதல் சுண்டு விரல் வரை ஒன்றாக இணைந்து மேல் நோக்கியும் , கட்டை விரல் பக்கவாட்டில் சற்றே விலகியோ அல்லது சேர்ந்தோ இருக்கவேண்டும்
நர்தன சிவன் என்றால் கால்கள் அந்த நர்த்தனத்தில் எந்த பாகத்தைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவு செய்து  கால்கள் மே நோக்கியோ, அல்லது ஒரு கால் மடித்து மறுகால் அகலமாக  தரையைத் தொடுவது போலவோ அமைக்கவேண்டும்.
விரித்த செஞ்சடையோடு ஆக்ரோஷ நடனம் என்றால் அதற்கு  கால்கள், கைகளின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து நடன முத்திரைகளை முறையாக புரிந்துகொண்டு அதற்கேற்ப    அந்தந்த முத்திரைகளை அமைப்பது பொருத்தமனாது .
ஆலிலை மேல் படுத்துக் கிடக்கும் கிருஷ்ணன் என்றால்  அந்தக் கிருஷ்ணனின்  பாதம் எப்படி இருக்க வேண்டும், கைகள் எப்படி இருக்க வேண்டும், அல்லது  காலிங்க நர்த்தனத்தில்  இருக்கும் கிருஷ்ணன் என்றால் கால்களும்  ,கைகளும்   அங்க அசைவுகளின் வடிவம்    நடன பாவத்துக்கேற்ப ஒத்துப் போவது போல் அமைக்க வேண்டும்.
ஆக இந்த விக்ரகம் செய்வோருக்கு  மிக நுணுக்கமாக  கூர்ந்து கவனித்து வடிவங்களை அமைக்க பொறுமையும்  நுணுக்கமும் வேண்டும்.

முத்திரைகள் என்றால் அவற்றில் யோக முத்திரைகள் , நாட்டிய  முத்திரைகள் உண்டு,
.
யோக முத்திரைகள் : . கை விரல்----குறிக்கும் மூலம்
1. பெரு விரல்---    சூரியன்
2. ஆட்காட்டி விரல்---     காற்று
3.நடு விரல்--- ஆகாயம் (வானம்)
4.  மோதிர விரல்--- மண்
5. சுண்டு விரல்--- நீர்
என்று நம்முடைய ஐந்து விரல்களும்  ஐந்து பூதங்களாகிய பஞ்ச பூதங்களோடு  தொடர்புடயவையே.

நம் உடல் நலக் குறைவு வரும்போது  அந்தக் குறையை நீக்க இந்த விரல்களைப் பயன்படுத்தி எந்த விரலோடு  எந்த விரலை சேர்த்துப் பிடித்தால் அந்த நோய் தீரும்  என்று தெரிந்து கொண்டு  ,அல்லது பஞ்ச பூதங்களில்  எந்த பூதத்தை எந்த பூதத்தோடு சேர்த்து வைத்தால் நோய் தீரும் என்று தெரிந்துகொன்டு அதற்கேற்ப  முத்திரைகளை அமைத்து நிவாரணம் பெறுவது யோக முத்திரையின் சிறப்பு.
நாட்டிய முத்திரைகள்:
நாட்டிய முத்திரைகள் அவர்கள் ஏற்றுக் கொள்ளும் பாத்திரத்துக்கு  ஏற்ப  அந்தப் பாத்திரம் செயல்படும் கதைக்கேற்ப அமையவேண்டும். நட்டுவனாருக்கு இந்த முத்திரைகள் அவசியம் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் நாட்டியம் ஆடுவோருக்கு அவர் சரியான முத்திரைகளை, அடவுகளை சொல்லித்தர முடியும்.  நடன முத்திரையில் பாவங்களைக் காட்ட எந்த விரலோடு எந்த விரலை சேர்த்தால் அந்தக் குறிப்பிட்ட பாவம் வரும் என்று  தெரிந்துகொண்டு  அமைத்து பாவம் காட்டி  நடனமாடுவது.
1.பதாகம்    கொடி பெருவிரலை மடித்து பக்கத்தில் பிடித்தல்.  
2.திரிப்பதாகம்      மூன்று பாகம் கொண்ட கொடி அல்லது மரம்  பதாகத்தில் மோதிர விரலை மடித்தல்.
3.அர்த்தப்பதாகம்   அரைக்கொடி திரிப்பதாகத்தில் சுண்டி விரலை மடித்தல்.  
4.கர்த்தரீமுகம்     கத்தரிக்கோல்      திரிப்பதாகத்தின் மடித்த விரல்களுடன் பெருவிரலை சேர்த்தல்.  
5.மயூரம்     மயில் திரிப்பதாகத்தில் மடித்த மோதிர விரலுடன் பெருவிரலை சேர்த்தல்.  
6.அர்த்தச்சந்திரன்   அரைச்சந்திரன்     பதாகத்தில் உள்ள பெருவிரலை நீட்டுதல்.  
7.அராளம்    வளைந்தது  சுட்டு விரலுடன் பெருவிரலை சேர்த்துப் பிடித்தல்.
8.சுகதுண்டம் கிளி மூக்கு  பதாகத்தில் சுட்டு விரலையும் மோதிர விரலையும் மடித்தல்.  
9.முட்டி(முஷ்டி)    முட்டிகை   அனைத்து விரல்களையும் பொத்துதல்.
10.சிகரம்     உச்சி  முட்டியில் உள்ள பெருவிரலை விரித்தல்.
11.கபித்தம்   விளாம்பழம் சிகரத்தின் பெருவிரலை சுட்டு விரலால் பொத்துதல்.
12.கடகாமுகம்      வளையின் வாய்   நடுவிரல் பெருவிரல் மற்றும் சுட்டுவிரல் ஆகியவற்றை சேர்த்துப் பிடித்தல்.
13.சூசி ஊசி  முட்டியில் உள்ள சுட்டு விரலை நீட்டுதல்.
14.சந்திரகலா பிறைச்சந்திரன்     சூசியில் உள்ள பெரு விரலை நீட்டுதல்.
15.பத்மகோசம்     தாமரை மொட்டு   கையின் விரல்களை அரைவாசிக்கு மடித்தல்.
16.சர்ப்பசீசம் பாம்பின் படம்     பத்மகோசத்தைவிட சற்று மடித்து S வடிவில் சுற்றல்.  
17.மிருகசீசம் மான் தலை பெருவிரல் மற்றும் சுண்டிவிரல் தவிர்ந்த விரல்களை 45° இல் மடித்தல்.
18.சிம்மமுகம்      சிங்கத்தின் முகம்   நீட்டியபடியுள்ள நடுவிரலையும் மோதிரவிரலையும் பெருவிரலுடன் சேர்த்தல்.
19.காங்கூலம் அங்குலத்தை விட குறைந்தது   மோதிரவிரலை மடித்து மற்ற விரல்களால் மடித்துப் பிடித்தல்.
20.அலபத்மம் மலர்ந்த தாமரை   சுண்டி விரலை அதிகம் மதிப்பதோடு மோதிரவிரலையும் சற்று மடித்தல்.
21.சதுரம்    சாதூர்யம்   மிருகசீசத்தில் உள்ள பெருவிரலை உள்ளே மடித்தல்.
22.பிரமறம்  வண்டு      ஆட்காட்டி விரலை உள்ளே மடித்து பெருவிரலையும் நடு விரலையும் சேர்த்துப் பிடித்தல்.
23.கம்சாசியம்      அன்னத்தின் அலகு பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் நீட்டியபடி சேர்த்தல்.மற்ற விரல்கள் விரிந்து இருக்கும்.
24.கம்சபக்சம் அன்னத்தின் சிறகு  மிருகசீசத்தில் நீட்டி உள்ள பெருவிரலை ஆட்காட்டி விரல் பக்கமாக சேர்த்தல்.
25.சம்தம்சம் இடுக்கி      விரல்களை நீட்டியபடி மூடி திறந்து மூடுதல்.
26.முகுளம்  மொட்டு     விரல்களை நீட்டியபடி சேர்த்துப் பிடித்தல்.
27.தாம்ரசூடம்      சேவல்      மற்ற விரல்கள் பொத்திய நிலையில் ஆட்காட்டிவிரலைஅரைவாசி மடித்தல்.
28.திரிசூலம்  சூலம் மற்ற விரல்கள் மூடிய நிலையில் சுண்டிவிரளையும் பெருவிரலையும் சேர்த்துப் பிடித்தல்.    ஆகிய முத்திரைகள் உள்ளன.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
பஞ்சலோகம்  என்றால் ஐந்து உலோகங்கள்
அதுபோல் ஐந்து என்னும் சிறப்பானவை வேறு என்னென்ன  இருக்கின்றன என்று ஆராய்ந்தேன். அவற்றில் விக்கிபீடியாவில், மற்றும்  இணையத்தில்  கிடைத்த விவரங்களைக் கீழே எழுதியுள்ளேன்.
பஞ்ச  என்றால் ஐந்து   இந்த ஐந்தில் அமைந்தவை எவை எவை என்று ஆராய்ந்தால்
பஞ்சபூதத் தலங்கள் : காஞ்சிபுரம், திருச்சி திருவானைக் காவல், திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம்
பஞ்சலோகங்கள்:  செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம் (copper, silver, gold, zinc and lead)
பஞ்சபுராணம் : தேவாரம் ,திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம்
பஞ்சலிங்கத் தலம்  : அர்கேசுவரர் லிங்கத்தலம், பாதாளேஸ்வரர் லிங்கத்தலம், மரனேஸ்வரர் லிங்கத்தலம் மல்லிகார்ச்சுனர் லிங்கத்தலம் , வ, வைத்திய நாதேஸ்வரர் லிங்கத்தலம்.
பஞ்சபட்ஷிகள் :  வல்லூறு ஆந்தை காகம் கோழி மயில்
பஞ்ச கங்கை: ரத்தின கங்கை, தேவகங்கை, கையிலாய கங்கை, உத்திரகங்கை, பிரம்ம கங்கை.
பஞ்சாங்கம் –     திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்.                      
பஞ்ச ரிஷிகள் –    அகத்தியர்,புலஸ்தியர்,துர்வாசர்,ததீசி, வசிஷ்டர்.                                                                                                      
பஞ்ச குமாரர்கள் –     விநாயகர்,முருகர்,வீரபத்திரர்,பைரவர்,சாஸ்தா.                                                                                                            
பஞ்ச நந்திகள் –  போக நந்தி, வேத நந்தி, ஆத்மா நந்தி,மகா நந்தி,தர்ம நந்தி,                                                              



பஞ்ச மூர்த்திகள் –  விநாயகர், முருகன்,சிவன்,அம்பாள் ,விஷ்ணு.                                                                                                                
பஞ்சாபிஷேகம் –  வில்வ இலை கலந்த நீர் , ரத்தினங்கள் போடப்பட்ட நீர்,பச்சை            கற்பூரம், குங்குமப்பூ கலந்த நீர் ,கிராம்பு,கொரோசனம் கலந்த நீர் ,    விளாமிச்சை வேர் , சந்தனாதி தைலம் ஆகியவாசனை       பொருட்கள் கலந்த கந்த தோதகம்.                                                          
பஞ்ச பல்லவம் –    அரசு,அத்தி,வில்வம்,மா,நெல்லி.                                                                                                  
பஞ்ச இலைகள் –   வில்வம்,நொச்சி,விளா,துளசி,கிளுகை.                                                                                                                  
பஞ்ச உற்சவம் –   நித்ய உற்சவம்,வார உற்சவம்,பட்ச(மாதம் இருமுறை)உற்சவம்,    மாதாந்திர உற்சவம், வருடாந்திர உற்சவம்.                                                    
பஞ்ச பருவ உற்சவம் – அமாவாசை,பௌர்ணமி, தேய்பிறை சதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி,மாதப்பிறப்பு.                                                                                          
                                                                     
பஞ்ச சபைகள் –    ரத்தின சபை, கனக சபை, வெள்ளி சபை, தாமிர சபை, சித்திர சபை.                                                        
பஞ்ச ஆரண்யம் –     உஷத் காலம், கால சாந்தி, உச்சிகாலம், சாயரட்சை,  அர்த்தஜாமம்.                                                
பஞ்ச முகங்கள் (சிவன்)- தத்புருஷம்,அகோரம்,சத்யோஜாதம்,வாமதேவம்,ஈசானனம்                                              
பஞ்ச முகங்கள் (காயத்திரி)- பிரம்மன்,விஷ்ணு,சதாசிவன்,ருத்ரன்,ஈஸ்வரன்.                                                                                          
பஞ்ச மாலைகள் –   இண்டை, தொடை, தொங்கல், கண்ணி, தாமம்.                                                                    
பஞ்சமா யக்ஞம் –    பிரம்ம யக்ஞம், பிதுர் யக்ஞம், தேவ யக்ஞம், பூத யக்ஞம், மானுஷ்ய யக்ஞம்.                                        
பஞ்ச ரத்தினங்கள் –  வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.
                                                       
பஞ்ச தந்திரங்கள் –  மித்ரபேதம், சுகிர்லாபம், சந்திவிக்ரஹம், லப்தகானி, அசம்ரேசிய காரித்வலம்.                                                    
பஞ்ச வர்ணங்கள் – வெண்மை,கருமை,செம்மை,பொன்மை,பசுமை.                                                                                                                
பஞ்ச ஈஸ்வரர்கள் –  பிரம்மா,விஷ்ணு,ருத்ரன்,மகேஸ்வரன்,சதாசிவன்                                                                                                            
பஞ்ச கன்னியர்கள் –  அகலிகை, திரௌபதி, சீதை, மண்டோதரி, தாரை.
                                                               
 பஞ்ச பாண்டவர்கள் – தர்மன், அர்ச்சுனன், பீமன், சகாதேவன், நகுலன்.
                                                               
 பஞ்ச ஹோமங்கள் –      கணபதி ஹோமம், சண்டி ஹோமம், நவக்ரஹ ஹோமம், மகா சுதர்சன ஹோமம், ருத்ர ஏகாதச ஹோமம்.                                            
பஞ்ச சுத்திகள் –  ஆத்ம சுத்தி, ஸ்தான சுத்தி, திரவிய சுத்தி, மந்த்ர சுத்தி, லிங்க சுத்தி.                                                        
பஞ்ச கோசம் –     அன்னமய கோசம், பிராணமய கோசம், ஆனந்தமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம்.                        
பஞ்ச காவ்யம் (பசு)-     பால், தயிர், நெய், கோமியம், சாணம்.                                                              
பஞ்ச லோகம் –   தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, ஈயம்.                                                                                                                      
பஞ்ச ஜீவநதிகள் –  ஜீலம், ரவி, சட்லெட்ஜ், பீஸ்(பீயாஸ்), ரசனாப்.                                                              
பஞ்ச ஆயுதங்கள்(மகாவிஷ்ணு) – சங்கு, சக்கரம், கதை, வாள், வில்.                                                                        
பஞ்ச நிலங்கள் –   குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை                                                                                                                        .பஞ்ச காப்பியங்கள் – மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, சிலப்பதிகாரம்.                            
பஞ்சமா பாதகங்கள் – காமம், கள்ளுண்டல், களவு, கொலை, பொய்.                                                                  
பஞ்ச சயனம் –   அழகு, குளிர்ச்சி, வெண்மை, மென்மை, மணம்                                                                                                                        
பஞ்ச புராண ஆசிரியர்கள் –  நால்வர், கரு ஆருத்தேவர், சேத்தனார், சேக்கிழார், கச்சியப்பர்.                                                                                          
 பஞ்சராத்ரங்கள், பஞ்சாங்கம், பஞ்சமுத்திரைகள் பஞ்சபட்ஷி சாஸ்திரம் பஞ்ச புராணம், பஞ்சலிங்கம், பஞ்சமுகக் குத்துவிளக்கு, பஞ்சரத்தினக் கீர்த்தனைகள்
ஆகமொத்தம் பஞ்ச பூதங்கள்  ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் உள்ளே பொருந்தி  பஞ்சபூதங்கள் இல்லாமல் இந்த ப்ரப்ஞ்சத்தில் எதுவுமே இல்லை என்று நிரூபித்த வண்ணமாக இருக்கிறது.
பஞ்சலோக விக்ரகங்கள் செய்யும் முறை பாகம் 2  காணொளியைக் கண்டு மகிழ
https://www.youtube.com/watch?v=zWQ_U72P8-4

அன்புடன்
தமிழ்த்தேனீ

Wednesday, September 10, 2014

பஞ்சலோக விக்ரஹம் செய்வது எப்படி?

எனக்கும் என் துணைவியாருக்கும் திருமணமாகி 40 ஆண்டுகள் ஆயிற்று, அதைக் கொண்டாட எங்கள் குல தெய்வமான ஶ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலையில் எழுந்தருளி இருக்கும் ஶ்ரீ ஆதி வினாயகரையும், ஶ்ரீலக்‌ஷ்மி சமேத ஶ்ரீனிவாசனையும் தரிசிக்க சென்றோம்.
அங்கிருந்து ராமநாதபுரம் சென்று ராமநாதபுரத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் இருந்த பஞ்சலோக விக்ரகம் செய்யும் இடத்தைப் பார்வையிட்டு அங்கே உரிமையாளரிடம் பேட்டி எடுத்து அதைக் காணொளியாக அளித்திருக்கிறேன்.

“ விஸ்வகர்மா “

மஹாசக்தி என்பது விஸ்வரூபம் ,அதிலிருந்து பிரிந்து இப்புவனத்தில் ஜீவராசிகளாகப் பிறந்து நீந்துவன, பறப்பன, தவழ்வன, ஓடுவன, நடப்பன என்று பலரூபங்களாகப் பிரிந்து அதிலிருந்து சற்றே அறிவை மேம்படுத்திக் கொண்டு பரிணாம வளர்ச்சியால் மனிதன் என்னும் உருக்கொண்டு மானுடராக வாழ்ந்துகொண்டிருக்கிறோம் நாம் . பல கலைகளைக் கற்றுக் கொண்டிருக்கிறோம் நாம் .

நம் முன்னோர்கள் முதலில் பஞ்ச பூதங்களின் வழியாகத்தான் இறைவனை உணர்ந்தனர், அதன் பின்னே ஆத்ம யோகம், ஆழ்ந்த பக்தி, தியானம், தவம் போன்றவைகளால் இறைவனை அடைய முயற்சித்தனர்.

அப்படி அவர்கள் கண்டு பிடித்த பல வழிகளில் கலை பிறந்தது. அவை ஆய கலைகள் அறுபத்தி நான்காக பரிமளித்தது. இசை வடிவமாகவும், நாட்டியம் நடனம் மூலமாகவும், கல்லினால் சிற்பங்கள் வடித்து அவற்றை மூல விக்ரகமாகவும் பஞ்ச லோகத்தை வைத்து விக்ரகங்கள் செய்து அவற்றை உற்சவ மூர்த்தியாகவும் ஆவிர்பவித்து அவற்றை வணங்குதல் மூலமாகவும் மொத்தத்தில் கலைகளின் மூலமாகவும்

இறைவனையே துதிக்கவும் நம் முன்னோர்கள் பலவிதமான பயிற்சிகளையும், நல்ல உற்சவங்களையும், நல்ல பண்டிகைகளையும் ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர்.
நம் முன்னோர்கள் கற்றுவைத்திருந்த பல கலைகளை, அவைகளின் நுணுக்கத்தை பாரம்பரியமாகப் போற்றி நாமும் கற்றுக்கொண்டிருக்க வேண்டும், ஆனால் தவறிவிட்டோம்.
ஆயினும் இக்காலத்திலும் சிலராவது பாரம்பரியமாக

தங்களின் ஆதி கலைகளை மறக்காமல் கற்றுக் கொண்டு முறையாக பராமரித்து கடைப்பிடிப்பதால்தான் இன்னமும் பல கலைகள் முற்றிலும் அழிந்துவிடாமல் பாதுகாக்கப்படுகிறது.
அப்படிப்பட்ட கலைகளில் சிற்ப சாஸ்திரத்தைக் கைக்கொண்டு கல் விக்ரகங்கள் வடித்தல், உலோக விக்ரகங்கள் வடித்தல் என்னும் கலை அபூர்வக் கலையாகும்.

கல்லிலே விக்ரகங்களை வடிப்பவர்களை சிற்பிகள் என்று அழைக்கிறோம். உலோகங்களில் முறையாக சிற்பங்களை வடிப்பவர்களை விஸ்வகர்மா என்றழைக்கிறோம்.
இந்த விஸ்வகர்மா என்னும் பாரம்பரியத் தொழில் கலைஞர்கள், இன்றளவும் பஞ்ச லோகங்களை உருக்கி அவற்றின் கலவையால் விக்ரகங்களை வடிக்கிறார்கள்.
ராமநாதபுரத்திலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் தஞ்சாவூர் மாவட்டத்திலே ஸ்வாமிமலையருகே திம்மக்குடி என்னும் ஊரிலே உள்ள ராஜன் இண்டஸ்ட்ரீஸ் என்னும் இடத்திலே பஞ்சலோக விக்ரகங்களை சிற்ப சாஸ்திர முறைப்படி முறையாகக் கற்றுக் கொண்டு வம்சாவழியாக செய்து வருகிறார்கள் என்று கேள்விப்பட்டு அந்த விக்ரக ஆலையினுள் ஆர்வத்துடன் நுழைந்தோம்.

அங்கே அந்த ஆலையின் நிறுவனராக திரு சுரேஷ் என்பவர் எங்கள் ஆர்வத்தைக் கண்டு மரியாதையாக உள்ளே அழைத்து அவர்கள் எப்படி பஞ்சலோக சிற்பங்களைத் தயாரிக்கிறார்கள் என்று இதமாக பதமாக பொறுமையாக விளக்கினார்
அங்கே முதன்மையாக இருக்கும் திரு ஶ்ரீனிவாசன் என்பவர் பஞ்சலோக விக்ரகங்களை வடிக்கும் முறையை எங்களுக்கு தெளிவாக விளக்கினார்.

இந்தப் பஞ்சலோகங்களை . எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று அவர் கூறினார். இந்தப் பஞ்ச லோகங்களுக்கு அடிப்படை பஞ்ச பூதங்கள் என்றும்
பிரிதிவி ---- அப்பு ---- தேயு ---- வாயு ---- ஆகாயம்
மண் ---- நீர் ---- நெருப்பு – காற்று ---- வெளி ஆகியவையே என்று குறிப்பிட்டார்.
உலகில் இவை ஐந்தும் குறிப்பிட்ட சதவிகித அளவிலேதான் இருக்கின்றன
பஞ்சலோக சிலைகளின் இரசாயன ஆய்வு முடிவுகள்
உலோகங்கள்
கி.பி. 9ம் நூற்றாண்டு கி.பி. 10-11ம் நூற்றாண்டு கி.பி. 13ம் நூற்றாண்டு கி.பி. 15ம் நூற்றாண்டு கி.பி. 17ம் நூற்றாண்டு
செம்பு
Copper 83 - 39 86 - 88 91 - 05 96 - 29 91 - 25
தகரம்
Tin 16 - 61 10 - 44 2 - 86 2 - 58 6 - 66
ஆர்செனிக்
Arsenic Tr Tr Tr Tr Tr
ஈயம்
Lead Tr 1 - 48 6 - 09 1 - 9 2
இரும்பு
Iron Tr 1 - 19 Tr 0 - 06 0 - 07
நன்றி விக்கிபீடியா
ஆகவே இந்த மண் ---- நீர் ---- நெருப்பு – காற்று ---- வெளி என்கிற பஞ்ச பூதங்களை அடிப்படையாகக் கொண்டு செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம் (copper, silver, gold, zinc and lead) ஆகிய உலோகங்களைக் கொண்டு அவைகளை உருக்கிக் கலந்தே இந்தப் பஞ்சலோக விக்ரகங்கள் வடிக்கப் படுகின்றன.
மண், நீர்,நெருப்பு,காற்று, ஆகாயவெளி ஆகிய ஐந்துமே நம் வாழ்க்கையில் ப்ரதான இடம் வகிக்கிறது.இந்த ஐந்தும்தான் நாம் நோயற்று வாழ உதவும் சாதனங்கள்.

இவற்றை நன்கு உணர்ந்த சித்தர்கள், யோகிகள், தவஸ்ரேஷ்டர்கள் இந்த ஐந்தையும் நம் வாழ்க்கையில் இன்றியமையாமல் நாம் முறையாக உபயோகித்து நலமுடன் வாழ வழிகாட்டுகிறார்கள்.

இந்த ஐந்தையும் கலந்தே வியாதிகள் நீக்கும் மருந்துகளாக்கி நமக்களிக்கிறார்கள், ஆயினும் இப்பிறவியில் நம் ஆயுள் முடிந்து போகுமானால் ஜீவராசிகள் எல்லாமே மீண்டும் பிரிந்து பஞ்ச பூதங்கள் என்னும் இந்த ஐந்துடன் மறுபடியும் ஒன்றிப் போகிறது.

ஆகவே ஆதியும் அந்தமும் , தொடக்கமும் முடிவும் இந்தப் பஞ்ச பூதங்களிலேதான் உருவாகிறது , அடங்குகிறது
இப்படி பஞ்ச பூதங்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு ஐந்து உலோகங்களைக் கொண்டு வடிக்கப்படும் விக்ரகங்கள்தான் சக்தி பெற்று ஆலயங்களில் உற்சவ மூர்த்தியாக இருக்கின்றன.

இப்படி பஞ்ச பூதங்களை அடிப்படியாகக் கொண்டு இந்த விக்ரகங்களை வடிப்பதால் இயற்கையான அடிப்படை சக்தி இந்த பஞ்ச லோக விக்ரகங்களுக்கு கிடைத்துவிடுகிறது, அதன் பின்னர் ஆகம முறைப்படி அந்த விக்ரகங்களுக்கு தேவையான அபிஷேக ஆராதனைகள், பூஜை புனஸ்காரங்கள் மேலும் சக்தியை ஊட்டுகின்றன.

ஆலயங்களுக்கு வந்து கர்பக்கிருஹ கடவுளை வணங்க இயலாத பெரும்பாலான மக்களின் குறைதீர்க்க இந்தப் பஞ்சலோக உற்சவ மூர்த்திகள் மாடவீதிகளில் உலாவந்து ஜீவராசிகளுக்கு அருள் தரவே திருமாடவீதி புறப்பாடு என்பது நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளது.

ஆகவே இந்தப் பஞ்சலோக தயாரிப்பு முறையைக் கண்ணால் கண்டு இன்புற்ற நாங்கள் “ நாம் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெறட்டுமே” என்று அங்கே நடந்த எங்கள் சந்திப்பை ஒளி,ஒலிப்படமாக ஆக்கி அந்தக் காணொளியை கணிணியிலே செதுக்கி அளித்திருக்கிறேன். கண்டு களியுங்கள்.

இந்தத் தொடுப்பை உபயோகித்து என்னுடைய வலைப்பூவான http://thamizthenee.blogspot.com தளத்திலும் காணொளியைக் காணலாம்

https://www.youtube.com/watch?v=nYL_YBnM0pQ&list=UUVfKwpJPdHKd-FAQFSNG8lA

அன்புடன்
தமிழ்த்தேனீ

Thursday, September 4, 2014

60 வருட திரைப்பயணம்: ஸர் ரிச்சர்ட் அட்டன்பரோ

நம்மில் எத்தனை பேர்கள் மகாத்மா காந்தியைப் பார்த்திருப்போம்? ’48 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைத்திருக்காது. இதற்கு முன் பிறந்தவர்களிலும்  எத்தனை பேர்களுக்கு அந்த பாக்கியம் கிடைத்திருக்கும்? அவரைப்பற்றிக் கேள்விப்படும்போதும், புகைப்படங்களில் அவரைப் பார்க்கும்போதும் இந்த மகாத்மா நம்மிடையே இப்போது நடமாடினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நம்மில் பலர் நினைக்காமல் இருந்திருக்கவும் முடியாது. இந்தியர்கள் பலரின் இந்தக் கனவு நனவாகியது 1983 ஆம் ஆண்டு,  ஸர் ரிச்சர்ட் அட்டன்பரோ என்கிற இங்கிலாந்து இயக்குனர் மூலம். வாழ்க்கை வரலாற்றுச் சித்திரங்களை எடுப்பதில் மன்னன் என்று பெயர் பெற்ற இவர் தனது ‘காந்தி’ திரைப்படம் மூலம் நம் கண் முன்னே காந்தியை நடமாடவிட்டார்.

சமீபத்தில் மறைந்த ரிச்சர்ட் அட்டன்பரோவின் வெள்ளித்திரையின் மீதான காதலுக்கு வயது 60. முதல் முதலில் மேடை நடிகராக வெள்ளித்திரைப் பயணத்தைத் தொடங்கிய அட்டன்பரோ இயக்குனராக மாறினார். நடிகராக எந்த அளவிற்கு விரும்பப்பட்டாரோ, அதே அளவு இயக்குனராகவும் எல்லோராலும் விரும்பப்பட்டார். இரண்டு துறைகளிலும் வெற்றிக் கோடி நாட்டினார்.

1923 ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள கேம்ப்ரிட்ஜில் பிறந்த அட்டன்பரோ தனது 12 ஆம் வயதில் நடிக்கத் துவங்கிவிட்டார். ராயல் அகாதமி ஆப் டிராமடிக் ஆர்ட் –இல் பயிற்சி பெற்ற இவர் 1941 ஆம் ஆண்டு முதன்முதலில் மேடை ஏறினார். இதற்கு ஒரு வருடத்திற்குப் பிறகு நோயல் கவர்ட் – இன் ‘இன் விச் வி சர்வ்’ (In Which We Serve) என்ற படத்தில்  தன்னை நம்பியவர்களை கைவிட்டுவிட்டு ஓடும்  கப்பல் மாலுமியாக, சிறிய ஆனால் மிகவும் கனமான பாத்திரத்தில் நடித்து பார்வையாளர்களைக் கவர்ந்தார். தொடர்ந்து வந்த திரைப்படங்களில் இதே போன்ற கதாபாத்திரங்களே இவருக்குக் கிடைத்தன. 1947  ஆம் ஆண்டு ‘ப்ரைடன் ராக்’ (Brighton Rock) படத்தில் மனநோய் பீடித்த இளம் தாதாவாக நடித்த திரைப்படம் இவரது வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தது.

அடுத்த முப்பது ஆண்டுகளில் பல பிரித்தானிய படங்களில் நடித்தார். ‘50 களில் பல படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்தார். இவர் தனது மேடை வாழ்க்கையின் துவக்கத்தில் நடித்த அகாதா கிறிஸ்டியின் நாடகம் ‘தி மௌஸ்ட்ராப்’ உலகத்தில் நீண்ட நாட்களுக்கு நடிக்கப்பட்ட நாடகங்களுள் ஒன்று. இவரும் இவர் மனைவியும் இந்த நாடகத்தில் நடித்த ஆரம்ப கால நடிகர்கள். 1952 இல் மேடையேறிய இந்த நாடகம் 2007 வரை நடந்து வந்திருக்கிறது.

1969 இல் வெளிவந்த ‘ஓ! வாட் அ லவ்லி வார்’ (O! What a Lovely War!) என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். அப்போதிலிருந்து நடிப்பதை குறைத்துக் கொண்டார். 50 களின் இறுதியில் திரைப்படங்களை தயாரிக்கவும் தொடங்கினார். திரைப்படத் துறையைச் சார்ந்த பல அமைப்புகளில் தலைவர் பதவியையும் வகித்தார்.

இரண்டாம் உலகப் போரில் ராயல் விமான படையில் பணியாற்றிய இவர்  ஆங்கில நடிகை ஷீலா சிம் என்பவரை 1945 ஆண்டு மணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள். 2004 ஆம் ஆண்டு மூத்தமகள், பேத்தி ஆகியோரை ஆசிய சுனாமியில் பறிகொடுத்தார். இவரது மகன் மைக்கேல் அட்டன்பரோவும் ஒரு இயக்குனர். அட்டன்பரோவின் தந்தை லீசெஸ்டர் பல்கலைக் கழகத்தின் முதல்வராக இருந்தவர். ரிச்சர்ட் அட்டன்பரோ இந்தப் பல்கலைக்கழகத்தின் புரவலர். 1997 ஆம் ஆண்டு ரிச்சர்ட் அட்டன்பரோவின் பெயரில் அவரை கௌரவிக்கும் வகையில் ‘ஊனமுற்றோர்களுக்கான கலை மையம்’ இந்த பல்கலைக்கழகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

காந்தி திரைப்படம் மட்டுமல்ல, இவரை இந்தியர்களுக்கு அடையாளம் காட்டியது; நாம் மிகவும் ரசித்துப் பார்த்த ‘ஜுராசிக் பார்க்’ படத்திலும் நடித்தவர் இவர். ஜான் ஹம்மண்ட் என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்த ‘ஜுராசிக் பார்க்’ படத்தை அவ்வளவு சுலபமாக நம்மால் மறக்க முடியாது. இந்தப் படத்தின் ஆரம்பத்தில் அழிந்த விலங்கினத்தைச் சேர்ந்த டைனோசர்களை மறுபடியும் தாம் உருவாக்கியிருக்கும் விந்தையை மிகவும் பெருமையுடன் சொல்லும்போதும், இறுதியில் தான் உருவாக்கிய ஜுராசிக் பார்க்கை தானே மூடும் நிலை வரும்போது கடைசி முறையாக அந்த இடத்தை திரும்பிப் பார்த்து வேதனைப்படும்போதும் இவரது நடிப்பை நாம் மிகவும் ரசிக்கலாம்.

காந்தி திரைப்படம்:

இந்தத் திரைப்படம் அட்டன்பரோவின் நீண்ட நாளைய கனவு. ஏற்கனவே காந்தியைப் பற்றிய திரைப்படம் எடுக்க வேண்டும் என்று 1952 இல் கேப்ரியல் பாஸ்கல் என்பவர் அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தார். ஆனால் பாஸ்கலின் மறைவினால்  (1954) இத்திட்டம் கைவிடப்பட்டது. 1962 இல் அட்டன்பரோவிற்கு இந்திய வெளிநாட்டுத் தூதரகத்திலிருந்து மோதிலால் கோத்தாரி தொலைபேசினார். காந்தியைப் பற்றி ஒரு திரைப்படம் அட்டன்பரோ எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். லூயிஸ் ஃபிஷர் எழுதிய காந்தியின் வரலாற்றைப் படித்த அட்டன்பரோ அடுத்த 18 ஆண்டுகளை இந்தத் திரைப்படம் தயாரிப்பதில் செலவிட்டார். லார்ட் லூயிஸ் மவுண்ட்பேட்டன் மூலம் நேருவையும் இந்திரா காந்தியையும் சந்தித்தார். நேரு, காந்தி படத்திற்கு தனது ஒப்புதலைத் தெரிவித்து அதன் தயாரிப்பிற்கு உதவுவதாகவும் கூறினார். நேருவின் மறைவு (1964) படத்திற்கு மறுபடியும் பின்னடைவை உண்டுபண்ணியது. மனம் தளராத அட்டன்பரோ 1976 இல் திரும்பவும் வார்னர் பிரதர்ஸ் உதவியுடன் படத்தைத் துவக்கினார். இந்தியாவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டு இந்தியாவில் திரைப்படத்தை படமாக்க முடியாத நிலை ஏற்பட்டது. இறுதியாக 1980 இல் படம் எடுப்பதற்கு தேவையான நிதி உதவியும், இந்தியாவில் படமெடுக்கக் கூடிய சூழ்நிலையும் உருவானது. பட ஒளிப்பதிவு 26 நவம்பர் 1980 ஆம் ஆண்டு துவங்கி மே 10, 1981 ஆண்டு முடிவடைந்தது. காந்தியின் இறுதிச்சடங்கில் பங்கு கொள்ள மூன்று லட்சம் உதவி நடிகர்கள் பயன்படுத்தப்பட்டனர். இது ஒரு கின்னஸ் சாதனை. இந்தப் படம் எடுத்த போது அட்டன்பரோவிற்கு 60 வயது.

‘காந்தி’ திரைப்படம் அட்டன்பரோவிற்கு சிறந்த இயக்குனர் என்ற ஆஸ்கார் விருதைப் பெற்றுத் தந்தது. பதினோரு பிரிவுகளில் இந்தப் படம் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டது. எட்டு பிரிவுகளில் விருதுகளை வாங்கிக் குவித்தது. இந்தப் படத்திற்காக தனது லண்டன் வீட்டை அடமானம் வைத்தும், தனது கலைப் பொக்கிஷங்களை விற்றும் பணம் சேர்த்தார் அட்டன்பரோ. ஆஸ்கர் விருதுகளை மட்டுமல்லாமல் செலவழித்த பணத்தைப் போல 20 மடங்கு அதிகப்பணத்தையும் அள்ளிக் கொடுத்தது இந்தப் படம்.

இவரது மனைவி மறதி நோயால் பாதிக்கப்பட்டு டென்வில் ஹாலில் உள்ள முதியோர் நலப் பாதுகாப்பு இல்லத்திற்குச் சென்றுவிட்ட நிலையில், சென்ற ஆண்டு தானும் தனது மனைவியும் வாழ்ந்து வந்த லண்டன் வீட்டை 18.4 மில்லியன் டாலருக்கு விற்றுவிட்டு, அட்டன்பரோவும் அங்கு தன் மனைவியுடன் சேர்ந்து கொண்டார்.

இவரது மறைவு குறித்து ஜுராசிக் பார்க் படத்தை இயக்கிய ஸ்பீல்பெர்க் கூறுகிறார்: ‘தான் விரும்பியதையெல்லாம் செய்ய நேரம் ஒத்துக்குவார் அட்டன்பரோ. இந்தத் திரைப்பட உலகிற்கு அவர் விட்டுச் சென்றுள்ள பரிசு காந்தி திரைப்படம். அவரை ரசித்த பல கோடி மக்களின் வரிசையில் நானும் நின்றுகொண்டிருக்கிறேன்’

நமது மனம் கவர்ந்த இந்த இயக்குனருக்கு நாமும் நம் இறுதி அஞ்சலியை செலுத்துவோம்.

எழுதியவர் ரஞ்சனி நாராயணன்.

வெப் துனியாவில் வெளியிட்டது.



இல்லாளுக்கு ஒரு இனிய கவிதை!

அன்புள்ள நண்பர்களுக்கு   வணக்கம்

எனக்கும்  என்னுடைய  இல்லத்தரசிக்கும் திருமணம் நடைபெற்று இந்த செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி  40 வருடங்கள்  நிறைகிறது

எங்களை விட  வயதிலும் அறிவிலும் மூத்தவர்கள்  எங்களை ஆசீர்வதிக்கலாம்
வயதில்   சிறியவர்கள்    வாழ்த்தலாம்

இந்த நன்நாளை ஒட்டி  எங்கள் குலதெய்வமான  ஶ்ரீவில்லிபுத்தூர்  திருவண்ணாமலையில் எழுந்தருளி இருக்கும்   ஆதி வினாயகரையும்  மஹாலக்‌ஷ்மி சமேத  ஶ்ரீனிவாசனையும் தரிசிக்க  நாளை 4 ஆம் தேதி சென்னையிலிருந்து கிளம்பி ஶ்ரீரங்கம் சென்று  அங்கிருந்து  ஶ்ரீவில்லி புத்தூர்  செல்கிறோம்

  மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார்கோயிலுக்கும்   சென்று வினாயகரை தரிசிக்க இருக்கிறோம் ,ஶ்ரீரங்கநாதனையும் தரிசித்துவிட்டு

ஆண்டாள் ரங்கமன்னாரையும்  ஶ்ரீவில்லி புத்தூரில் தரிக்க இருக்கிறோம்

அங்கிருந்து ராமநாதபுரம் சென்று   ரகுவீர்தயாள் அவர்களை சந்தித்து  திருப்புல்லாணி பெருமானையும்  சேவிக்கப் போகிறோம்.

இத்துணை வருடங்கள்  எனக்கு உற்ற துணைவியாய் இருந்து   என்னுடன்  இல்லறம் நடத்திய  என் மனைவி  ஆனந்தவல்லிக்கு  நன்றி சொல்லும் விதமாய்

இந்தக் கவிதையை வடிக்கிறேன்

                          “ இல்லறம்  “
உன்னைக் கரம் பிடித்த நாள் முதலாய் ஆதரவாய் கைகொடுத்துஎன்னைக்
கைவிடாமல் எப்போதும் காக்கின்றாய் என் தாயாய்.மனமிறங்கி உன்சுற்ற
வயல்தனிலே நாற்றாய் நீ இருக்க கருணை கொண்டு சுற்றமெல்லாம்-
என் வயலில் நட்டார்கள்  வந்தாய்நீ  வயல்செழிக்க எம்குலம் தழைக்க
முன்னைச் செய்த பயன் முழுமையாய்க் கிடைத்தாற்போல் முன்னிருந்து
நடத்துகிறாய் முழுவாழ்வை செழிப்பாக்கி   பண்பால் ஆளுகிறாய் அன்பை
முன்னிறுத்தி அருங்குணங்கள் அத்தனையும் அணுக்கி உள்ளே தெம்பாய்
உள்ளடக்கி தெள்ளிய அமுதாய்  தேனடைத் தேனாய் ஆனாய் நீ
பொன் பொருளென்று சொத்துக்கள் யாதுமிலை எனக்கென்று சொந்தமென்று
வந்த பின்னே அத்தனையும் சேர்த்துவிட்டாய் என் வாழ்வில் தானாய்
சேர்ந்ததெல்லாம் சிக்கனமாய் முடிந்து வைத்து மொத்தமாய் என்னிடத்தே சோர்ந்த
போதெல்லாம் முன்கூட்டி அளிக்கின்றாய் தேவைதனையறிந்து
சேர்த்துவைக்கும் குணமறியேன் எனக்கும் சேர்த்து சேர்த்துவைத்து குணக்குன்றாய்
இணைந்தே வாழுகிறாய்  எனக்கும் சேர்த்து பொன் கொடுத்தாய் பொருள் கொடுத்தாய்
போதாது போதாது என்றே நீயும் இளந் தளிராய் என்குலம் தழைத்திடவே  வாரிசுகளும்
எமக்களித்தாய் கண்ணிமைக்கும் நேரத்திலே கடின்மிகு சுமைகளெல்லாம் காணாமல் ஆக்குகிறாய்
களிப்பே ஊட்டுகிறாய்  கலைகளெல்லாம் ஊட்டுகிறாய் கவிஞனாய் ஆக்குகிறாய் கலையெல்லாம்
எனை நோக்கி களிப்புடனே ஓடிவந்து  கருணைகொண்டு சேர்ந்திடவே வகை செய்து
எனைப்பட்டை தீட்டுகிறாய் சாணைக் கல்லாய் நீயிருந்து சாத்திரமாய் தீட்டி என்னை
கலைமகள் கைப்பொருளாய் மீட்டுகிறாய் கவின் மிகு சுவையூட்டி களிப்பாக மாற்றுகிறாய்
.கவலை போக்குகிறாய் சொக்கவைத்து சுழலவைத்து  எக்கட்டு ஆனாலும் இக்கட்டுதனைக்
களையும் இயந்திரமாய் ஆனவள்  நீ
அடகுவைத்த அத்தனையும் மீட்டுகிறாய் அன்பான வட்டி தந்து அருமையாய் கட்டுக்குள்ளே
கட்டியெனை ஆட்படுத்தி  ஆளுகின்றாய் பரிவுடனே பலநூல் கற்றேன் பல்கலைக் கழக பட்டங்கள்
நான் பெற்றேன்-பட்டையங்கள் பல பெற்றேன்  மதிப்பார் யாருமில்லை மறந்தே போகின்றார்.
ஒரு நூலெடுத்து உறுளி மஞ்சள் உரைத்தே தடவி உன் கழுத்தில் நாண் இட்டேன் மங்கலமாய்
முடிச்சிட்டேன்  அது முதலாய் , ஆண்மகனாய் ஆனேன் நான் மாப்பிள்ளையாய் ஆனேன் நான்
குடும்பஸ்தன், தந்தை,  பெரியப்பா, சித்தப்பா, அத்தான், என்றெல்லாம் பலபட்டம் பெற்றேன் நான்
எல்லோரும் துதிக்கின்றார் நினைவில் என்னை மதிக்கின்றார். வேறென்ன வேண்டுவது இத்தனையும்
உன்னாலே வந்ததென்று நானறிவேன் உனையன்றி வேறு துணை  வேண்ட மாட்டேன்
இல்லறத்தின் மாற்று வழி போகமாட்டேன் பிணைக் கைதிபோலாகி  பிணைப்பால் நான் மனிதனானேன்
எப்பிறவி எடுத்தாலும் உன்தனையே நாடிடுவேன்  உன் துணையாய் ஆகிடுவேன் உயிர் அளித்த என்தாயின்
உற்ற துணையானவளே -தாய்க்குப் பின்தாரமென்று பெரியோர்கள் சொல்லிவைத்தார் இன்றுணர்ந்தேன்
அதிசியத்தை நான் சேயான ரகசியத்தை ஒரு  கணமும் மறக்க மாட்டேன் இத்தனையும் செய்தாய்
இன்றளவும் என் நலமே நாடி நாடி-உருகாத வெண்ணையும் ஓரடையும் செய்து வைத்தே வேன்டுகின்றாய்
என் நலம் நாடுகின்றாய் உனக்கோர் நன்றி  சொல்ல நாவெடுத்தேன் ஆணென்ற கர்வமது அடக்கியே
ஆண்டதம்மா சொல்ல வேறு வழியில்லை- எழுத்தாணி ஏந்தியே நன்றியினை நானெழுத நானெழுத
நானெழுத  முடிப்பதற்கோர் வழியுமிலை முடித்திடவே  வழியுமிலை உன் பெருமை உணர்ந்ததனால்
இலக்கணங்கள் ஏதுமில்லா இக்கவிதை எம் தமிழால் நானெழுதி நன்றி உரையாய் உன்னிடத்தே அளிக்கின்றேன்
எம்போன்றோர் தலைக்கனமும் தானிறங்கி நன்றி சொல்ல ஒரு வாய்ப்பாய்  உன்னிடம் அளித்துவிட்டு
மறைந்து நின்று  பார்க்கின்றேன்  உன் முகவிகசிப்பை தானியங்கி கருவியான  தாய்மையது போற்றுகின்றேன்
-ஆட்பட்டேன் ஆட்பட்டேன் ஆட்கொண்டாய்  தாயாய் நீ-முத்தாய்ப்பாய் ஒரு முத்தம் அளித்தே மகிழ்கின்றேன்
வேறு வழி தெரியவில்லை ஓரடையும் வெண்ணையும் சுசிருசியாய் நெஞ்சினிலே சுவையாய்
இறங்குதம்மா  நோன்பெல்லாம் உன்னுடனே  இணைந்தே செய்திடுவேன்
உன்நலமும் வேண்டிநின்று நன்றியுடன் நானும் சேர்ந்து




 அன்புடன்
தமிழ்த்தேனீ

திரு தமிழ்த் தேனீ அவர்களின் 40 ஆவது திருமண நாள் நிறைவு விழாவில் அவர் தன் மனைவிக்காக எழுதிய கவிதை!