Friday, July 22, 2022

தலையங்கம்: தமிழ் மரபின் வரலாற்று ஆய்வை மேம்படுத்துவோம்


வணக்கம்.
அனைவரையும் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆய்வுக் காலாண்டிதழின் ஊடாகச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய பயணம்... இந்தக் காலாண்டிதழோடு தமிழ் மரபு அறக்கட்டளையின்  30  ஆய்வுக் காலாண்டிதழ்களாக வெளிவந்துள்ளன. இந்த 30 காலாண்டிதழ்களும் தன்னுள்ளே சேகரித்து வைத்து வரலாற்று ஆய்வாளர்களுக்கு வழங்கி இருக்கும் வரலாற்றுச் செய்திகள் ஏராளம்...  ஏராளம். தொடர்ச்சியாக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரலாற்றுச் செய்திகளை ஆவணப்படுத்த வேண்டும் என்ற முனைப்போடு இயங்கிக் கொண்டிருக்கும் பல ஆர்வலர்களின் ஆய்வு நாட்டமும் முயற்சியுமே இதனை சாத்தியப்படுத்தியுள்ளன.

வரலாறு, தமிழ்மொழி சார்ந்த ஆய்வுகள், சமூகவியல் பார்வை, மானுடவியல் பார்வை, தொல்லியல் அகழாய்வுச் செய்திகள் எனப் பன்முகத்தன்மையோடு இந்த 30 காலாண்டிதழ்களும் இதுவரை வெளிவந்திருக்கின்றன. இவை மட்டுமின்றி கவிதைகளும் இந்தக் காலாண்டிதழ்களை  அலங்கரித்திருக்கின்றன.

தொடர்ச்சியாக எந்தத் தொய்வும் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் பல்வேறு செயல்பாடுகளும், நாம் வெளியிட்ட அறிக்கைகளும், நமது பரிந்துரைகளும் கூட இந்த காலாண்டிதழ்களில் இடம் பெற்றிருக்கின்றன. அந்த வகையில் நாம் நடத்திய கல்வெட்டுப் பயிற்சிகள், மரபுப் பயணம் தொடர்பான செய்திகள், சமூக அக்கறையுடன் அவசர காலங்களில் தேவையுள்ளோருக்கு நாம் வழங்கிய இடர் கால உதவிகள் பற்றிய அறிக்கைகள், கருத்தரங்குகளில் நமது பங்களிப்பு, தமிழக அரசுக்கு நமது பரிந்துரைகள், நமது ஆய்வுக் காணொளிகள் மற்றும் ஆய்வாளர்களுடன் பேட்டிகள் எனத் தகவல் களஞ்சியமாக நமது மின்தமிழ் மேடை காலாண்டிதழின் 30 தொகுப்புகளும் திகழ்கின்றன.

இந்த 30 தொகுப்புகளையும் அதன் முதல் இதழ் தொடங்கி இன்று வரை  தொகுத்து, முறையாக அவற்றை நூல் வடிவில் வடித்து, தரமான முறையில் ஒவ்வொரு காலாண்டிதழையும் உருவாக்கி அளித்திருப்பவர் இதன் பொறுப்பாசிரியர் முனைவர் தேமொழி.  எடுத்துக்கொண்ட பணியை ஆய்வு திறத்துடனும், கடமை உணர்ச்சி சிறிதும் குறையாமலும் மேன்மேலும் காலாண்டிதழ்களின் தரத்தை உயர்த்தி சிறப்புற வடிவமைத்து வெளியிடும் பணியை மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். அவருக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுதல்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் இந்த 30 காலாண்டிதழ் தொகுதியும் கொண்டிருக்கும் செய்திகள் ஆய்வு மாணாக்கர்களுக்கும் பொதுமக்களுக்கும் மிகப் பல செய்திகளை வழங்குகின்றன. மின்னிதழ்களாக உள்ள இவற்றை அச்சு வடிவத்தில் அச்சுப்பதிப்பாக்கம் செய்து உங்கள் வீட்டு நூலகங்களில் இணைத்து வைத்துக் கொள்ளுங்கள். அவை நிச்சயம் உங்கள் வாசிப்பிற்கும், ஆய்விற்கும், சிந்தனைக்கும் உதவும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

இன்றைய நமது கல்விச்சூழல் என்பது  ஆய்வுத் தரம் குறைந்தும், அவசரகதியிலும், சான்றிதழ் பெறுவதையே நோக்கமாகக் கொண்டும் என்பன போன்ற வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இத்தகைய போக்கு தரமான ஆய்வுகள் வெளிவர உதவாது. இத்தகைய போக்கு மாற வேண்டும்.

வரலாற்றுச் செய்திகளையும் தொல்லியல் அகழாய்வுச் செய்திகளையும் ஆர்வத்துடன் வாசிக்கும் தமிழ் மக்கள் இந்த வாசிப்புக்கான எல்லையை தமிழ்நாடு என்ற நில அளவில் குறுக்கிக்கொள்ளாமல், உலகளாவிய வகையில் தங்கள் ஆய்வுப் பார்வையைச் செலுத்த வேண்டும். அத்தகைய பார்வை மனித இனத்தின் வரலாற்றை அறிந்து கொள்வதில் புதிய தெளிவுகளை நிச்சயம் உருவாக்கும்.

மேற்கூறிய குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் ஆய்வுக் காலாண்டு இதழ்களான மின்தமிழ்மேடை இதழ்கள் உயர்ந்த, தரம் மிக்க பல கட்டுரைகளைக் கொண்டிருக்கின்றன. இவற்றைத் தரவிறக்கி நீங்கள் வாசிப்பதோடு உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இந்த அறிவு களஞ்சியங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தமிழால் இணைவோம்!

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி

Thursday, July 14, 2022

தமிழி எழுத்து மற்றும் வாசிப்பு பயிலரங்கம்

தமிழி எழுத்து மற்றும் வாசிப்பு பயிலரங்கம்  - ஜூன் 2022 

 -- முனைவர் மு. பாமா


இன்றிலிருந்து சுமார் 2500 ஆண்டுகள் பழமையானதாகக் கணிக்கப்படும் எழுத்து வரிவடிவமான தமிழியில் அன்று பாறைகளில் செய்திகள் கீறிப் பதிந்து வைக்கப்பட்டன. அப்படிப்பட்ட தொல் தமிழ் எழுத்தான தமிழியில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிடைக்கின்றன.  இவற்றைப் பொதுமக்களான நாமும் வாசிக்க முடியுமா என்றால், தகுந்த பயிற்சியின் வழியாக நிச்சயம் வாசிக்க முடியும்.


இதனைக் கருத்தில் கொண்டுதான் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு, கடிகை இணைய வழி பல்கலைக்கழகப் பிரிவின் கீழ்     2022 ஆண்டு ஜூன் மாதம் 18-ஆம் தேதி ஜூம் வழியாகத்  தமிழி எழுத்து மற்றும் வாசிப்பு பயிலரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்து இருந்தோம்.  இந்த பயிலரங்கில் மொத்தம் 78 பங்கேற்பாளர்கள்  பல்வேறு நாடுகளிலிருந்து  கலந்து கொண்டு  பயன் அடைந்தார்கள். இதில் 32 மாணவர்கள், 46 பேராசிரியர்கள்  மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றார்கள்.   பயிற்சிக் கட்டணமாக ரூபாய் 500க்கு பதிலாக  மாணவர்களுக்கானப் பயிற்சி  200 ரூபாய் சலுகை கட்டணத்தில் வழங்கப் பட்டது. மேலும் பத்து மாணவர்களுக்கு இலவசமாகவும்  பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிலரங்கத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் முனைவர் சுபாஷிணி, மற்றும் குந்தவை மகளிர் கல்லூரி உதவி பேராசிரியர்  முனைவர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் பாடங்கள் நடத்தினர்.   ஜூம் செயலிலுள்ள எழுது பலகை கொண்டு ஒவ்வொரு தமிழி எழுத்துக்களாக முனைவர் சுபாஷிணி  அறிமுகப்படுத்தினர். உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து என்று வரிசையாக நடத்தியது மட்டும் இல்லாமல், பங்கேற்பாளர்களை அவர்களது குறிப்பு ஏட்டில்  எழுதிப் பழகவும் ஊக்கமளித்தார். இந்தப்  பாடத்தின் இறுதியில் தமிழி மொழியால்  வாக்கியங்களும் அமைத்து பங்கேற்பாளர்களை வாசிக்கச் செய்யும் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

பேரா. சிவராமகிருஷ்ணன் அவர்கள் தமிழி கல்வெட்டு வாசிப்புப்  பயிற்சி என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். எழுத்துகளின் தோற்றத்தில் பெண்களின் பங்களிப்பு முக்கியமானது என்பதை உலகம் எங்கும் உள்ள பல்வேறு சிற்ப சான்றுகளுடன் நிறுவினார். தொல்லியல் ஆய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளில் உள்ள தமிழி எழுத்துகள் காண்பித்து அவற்றை வாசிக்கவும் செய்தார். அவர்களுடைய உரையின் இறுதியாக தமிழி எழுத்துகளின் வளர்ச்சி வட்டெழுத்துக்கள் என்பதைக்  குறிப்பிட்டு, இந்த வட்டெழுத்தின் பரிணாம  வளர்ச்சிக்குச் சோழர்கள் அளித்த பங்களிப்பை  விளக்கினார்.  நிகழ்ச்சியின் இறுதியாக நடந்த கலந்துரையாடலில் பங்கேற்பாளர்கள் உற்சாகமாக தங்களின் கேள்விகளைக் கேட்டுத் தெளிவு பெற்றார்கள்.  

இந்த பயிலரங்கத்தை  திரு. எழுமாத்தூர் கார்த்திக் நெறியாள்கை செய்து வைத்து செவ்வனே நிகழ்ச்சியை நடத்தினார்.  நிகழ்ச்சியின் இறுதியாக, கடிகை இணைய வழி பல்கலைக்கழகத்தின் பொறுப்பாளர்,  முனைவர் மு. பாமா அனைவருக்கும் நன்றியுரை கூறினார். பயிலரங்கத்திற்குரிய அறிவிப்பு  பதாகையை எழுத்தோவியர் நாணா என்ற நண்பர்  திரு. நாராயணன்  செய்து தந்தார்கள். நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை மரபு பயணக் குழு பொறுப்பாளர் திரு. மணிவண்ணன் மற்றும்  கடிகை இணைய வழி பல்கலைக்கழகத்தின் பொறுப்பாளர்,  முனைவர் மு. பாமா செய்தார்கள்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மின்-சான்றிதழ் அவர்களுடைய  மின்னஞ்சல் முகவரி அனுப்பி வைக்கப்பட்டது. கூகுள் படிவம் வழியாகப் பெறப்பட்ட பின்னூட்டம் மூலம் நாம் அறிவது,  தமிழி எழுத்துகள் மற்றும் கல்வெட்டுகள் பற்றிய தகவல்கள் பலரையும் சென்று அடைந்துள்ளது.   தமிழி கல்வெட்டுகளை வாசிக்க மற்றும் பாதுகாக்க, வரலாற்றைப் பாதுகாக்கப் பல தன்னார்வலர்களை இந்தப்  பயிலரங்கம்  தயார் செய்துள்ளது. நம் தமிழ் மரபு வளரும் என உறுதியாக நம்புகிறோம்!  

அடுத்த பயிலரங்கம் வரும் அக்டோபர் மாதம் 29ம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. வாய்ப்புள்ளோர் கலந்து கொள்ளுமாறு தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.

வணக்கம்
முனைவர் மு. பாமா,
பொறுப்பாளர்,
கடிகை இணைய வழி பல்கலைக்கழகம்.

Sunday, July 10, 2022

நேற்றைய செய்தி.. இன்றைய வரலாறு !

நேற்றைய செய்தி.. இன்றைய வரலாறு ! 


தேமொழி 



புதிய தகவலைக் கூறுவது பத்திரிக்கைகளின் நோக்கம்.  தினசரி நடைபெறும் வழக்கமான நடைமுறையில் இருந்து மாறுபட்ட தகவலாக இருப்பது, பெரும்பாலான மக்களைச் சென்றடைய வேண்டிய, அவர்களது வாழ்வில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய, அவர்களுக்குப் பயன் தரக்கூடிய, அவர்களைப் பாதிக்கக் கூடிய கருத்து, அறிவிப்பு, நிகழ்ச்சி குறித்த தகவலாகவோ அது இருக்கலாம், அல்லது மக்கள் அறிய விரும்பலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இருப்பது செய்தியாக அடையாளம் காணப்படுகிறது. 

ஆனால் இவை யாவும் உண்மைத் தன்மை கொண்டவையாக இருக்கும்.  கட்டுக் கதைகளும், புனைவுகளும், ஊகங்களும்  இருந்தால் அவை செய்தியல்ல, அவை படைப்பிலக்கியம் என்ற பிரிவிற்குச்  சென்றுவிடும்.  இன்றும் பலருக்கு இந்த வேறுபாடு தெரியாமல் இருப்பதும், படிப்பவர்  செய்தியா கட்டுக்கதையா என்று விளங்கிக் கொள்ள முடியாத வகையில் எல்லாவற்றையும் கலந்து தரும் ஊடகங்களும் உள்ளன. அவர்களின் நோக்கம் வேறு, தன்னலமும் ஏமாற்றும் நோக்கம் தவிர வேறு அடிப்படை நோக்கம் இருக்க வழியில்லை. 

தமிழ் அச்சேறிய  பொழுது நூல்கள் அச்சாக்கம் பெற்று மக்களைச் சென்றடையத் துவங்கிய காலத்தில்,  நாட்டு நடப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கப் பல செய்தி இதழ்களும் துவக்கப் பட்டன.  இவை தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றின,  அத்துடன் சமூக வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றின.  பெரும்பாலான வெகுமக்களைச் சென்றடைய உருவாக்கப்பட்ட செய்தி நாளிதழ்கள் போலவே, சமுதாயத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் தேவைக்காக பற்பல சிறிய சிறப்பு இதழ்களாகப்  பல மாற்று இதழ்களும் வெளியாகின.  நாட்டின் சுதந்திரம், சமூக சுதந்திரம், தொழில்நுட்ப வளர்ச்சி, வணிகம்  மற்றும் பொருளாதாரம், காந்திய சித்தாந்தங்கள், இலக்கியம், பெண்ணுரிமை, மதம் முதலிய  பல செய்திகள் மற்றும் கருத்துக்களை பல்வேறு மாற்றுத் தமிழ் இதழ்கள் தேவையானவர்களுக்குக் கொண்டு சேர்த்துள்ளன. 

பெண்களுக்காகப் பெண்களால் நடத்தப்பட்ட, பெண்ணுரிமையைக் குறிக்கோளாகக் கொண்ட இதழ்களை மாற்று  இதழ்களுக்கான எடுத்துக் காட்டாகக் காட்டலாம்.   மாதர் மறுமணம் (1936), சிந்தாமணி (1923), தமிழ் மாது (1926), தமிழ் மகள் (1926),  மகளிர் குரல் (1926), சக்கரவர்த்தினி (1926), கிருகலக்ஷ்மி (1936) போன்ற இதழ்கள் சில சான்றுகள். இவை யாவும்  பெண்களின் முன்னேற்றத்திற்கான  நோக்கில் வெளியிடப்பட்ட சிறப்பிதழ்கள். 

மக்களைப் பற்றி மக்களுக்காக மக்களால் எழுதப்படுபவை செய்திகள் ஆகும். "இன்றைய செய்திகள் நாளைய வரலாறு" என்ற வழக்காறு உள்ளதை நாம் அறிவோம்.  நடைமுறைக்கும், இயற்கைக்கும் மாறுபட்ட புதுமையான நிகழ்ச்சிகள் செய்தியாகின்றன என்பதை அடிப்படை வரையறையாகக் கொண்டு; 
"நாய் மனிதனைக் கடித்தால், அது செய்தி அல்ல, 
ஆனால் மனிதன் நாயைக் கடித்தால் அது செய்தி" 
என்ற நகைச்சுவை விளக்கமும் செய்தி என்பதற்குக் கொடுக்கப்படும். 

பத்திரிக்கையின் தாக்கத்தைக் கவிதையில் வடித்த கவிஞர்களும் உள்ளனர். 
        "உலகம் இதிலே அடங்குது
        உண்மையும் பொய்யும் விளங்குது
        கலகம் வருது தீருது
        அச்சுக் கலையால் நிலைமை மாறுது"
என்று இதை விளக்கிய கவியரசர் கண்ணதாசனும் சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவரே.   

பத்திரிக்கை குறித்து அனைவருக்கும் நினைவில் நிற்கும்  மற்றொரு கவிதை பாரதிதாசனுடையது.  செய்தித்தாள்  பேராற்றலைக் கொண்டது என்பது பாரதிதாசனின் கருத்து, இதை, 
        "காரிருள் அகத்தில் நல்ல
                கதிரொளி நீதான்! இந்தப்
        பாரிடைத் துயில்வோர் கண்ணிற்
                பாய்ந்திடும் எழுச்சி நீதான்
        ஊரினை நாட்டை இந்த
                உலகினை ஒன்று சேர்க்கப்
        பேரறிவாளர் நெஞ்சில்
                பிறந்த பத்திரிகைப் பெண்ணே"
என்றார் பாரதிதாசன். அவரும் குயில், பொன்னி, முல்லை, புதுவை முரசு, தேச சேவகன், புதுவைக் கலைமகன், தேசோபகாரி, தேசபக்தன், ஆனந்த போதினி, துய்ப்ளேக்ஸ்  ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்தாம். கண்ணதாசனின் பாடல் 1963ஆம் ஆண்டு வெளியான 'குலமகள் ராதை' என்ற படத்திலும், பாரதிதாசனின் பாடலின் ஒரு பகுதி 1966ஆம் ஆண்டு வெளியான சந்திரோதயம் படத்திலும் இடம் பெற்றது.

சென்ற நூற்றாண்டின் தொடக்கக் கால கட்டத்தில், பிரிட்டிஷ் இந்தியா காலகட்டமான 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்,  அதாவது 1940ஆம் ஆண்டை ஒரு கால எல்லையாக நாம் வகுத்துக் கொண்டால், அக்காலத்தில் வெளியான,  பொதுமக்களை அடையும் நோக்கில் நடத்தப்பட்ட, புகழ் பெற்ற  நாளேடுகளான  இந்து, சுதேசமித்திரன் போன்றவற்றைத் தவிர்த்து சமூகத்தின் ஒரு சில பிரிவினரை மட்டும்  குறிவைத்துத்  துவக்கப்பட்ட சிறப்புச் சிற்றிதழ்களான மாற்று இதழ்கள் மூலமும், அவை பதிவு செய்த செய்திகளின் மூலமும் 20 ஆம்  நூற்றாண்டின் முற்பகுதியின் வரலாற்றை  நாம் அறியலாம்.  பெரிய அளவில் வெகுமக்களை அணுகுவதில் இருந்து மாறுபட்டு, ஒரு குறுகிய வாசிப்பு வட்டத்தை அணுகும் குறிக்கோளுடனும்,  அப்பிரிவினர்க்குச்  செய்திகளைக் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் எல்லையை வகுத்துக் கொண்டு வெளியான மாற்று இதழ்களும் சமூக மாற்றத்தில் பெரும் பங்கு வகித்துள்ளன.  அவை கொண்டு சேர்த்த செய்திகளுக்கும், அச் செய்திகள் ஏற்படுத்திய தாக்கங்களுக்கும் கூட வரலாற்றில் பங்கு உண்டு என்பதை மறுப்பதற்கு இல்லை.  

அச்சு இதழ்கள் இக்கால கட்டத்தில் செய்திகள் பகிர ஒரு புதிய வாய்ப்பாக அமைந்தது.  அச்சு இதழ்கள் பரவலான ஆரம்பக் காலத்தில் தமிழில் தோன்றிய இவ்வாறான சிறப்புப் பத்திரிக்கைகளின் இயக்கம் ஆங்கிலத்தில் 'Early alternate Tamil magazine movement' என்று கூறப்படுகிறது.  ஆரம்பக் கால மாற்றுப் பத்திரிக்கைகளைக் குறித்த துறையில் பலகாலமாக ஈடுபட்டிருப்பவராகவும், அவற்றை ஆவணப்படுத்துவதும், ஆய்வு செய்வதுமாக அறியப்பட்டிருக்கும் பேராசிரியர் வீ.அரசு அவர்கள், இத்தகைய இதழ்களைப் படிப்பதன் மூலம் பல அரிய வரலாற்றுத் தகவல்களை அறிந்து கொள்ள முடிவதாகக் கூறியுள்ளார். 

அன்றைய செய்தி இன்றைய வரலாறுதானே !!!

சிறப்பு நோக்கத்தைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் மாற்றுப் பத்திரிக்கைகளும் பொது இதழ்களைப் போன்றே  நாள், வாரம் ஒருமுறை, மாதம் இருமுறை, அல்லது பத்து நாட்களுக்கு ஒருமுறை என மாதம் மும்முறையாக  வெளியான இதழ்கள், மாத இதழ்கள், இரண்டு மாதத்திற்கு ஒருமுறை, அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை என வெளியான காலாண்டு இதழ்கள், அரையாண்டு இதழ்கள், ஆண்டு மலர் என்ற பலவேறு கால இடைவெளிகளிலும் வெளியாயின.  சில இதழ்கள் காலப்போக்கில் தேவைக்கு ஏற்ப வெளியிடும் கால இடைவெளிகளையும் மாற்றிக் கொண்டன.  இது போன்று வெளியான இதழ்களின் நோக்கங்களை  அவற்றின் தலைப்புகளின்  மூலமே நம் தெளிவாக அறிந்து கொள்ளலாம். சில பத்திரிக்கைகள் அன்றும் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளிவந்தன.  முதல் தமிழ் கம்யூனிஸ்ட் ம. சிங்காரவேலர் 1923இல் ‘லேபர் கிசான் கெசட்’ என்ற மாதமிருமுறை வெளியான ஆங்கில ஏட்டையும், வார ஏடாக 'தொழிலாளன்' என்ற தமிழ் ஏட்டையும் நடத்தினார். 

ஊடகங்கள் என எடுத்துக் கொண்டால், திரைப்படங்களின் போக்கு ஒரு தலைமுறைக்கு ஒருமுறை மாறுவது போலவே பத்திரிக்கைத் துறையும் காலப் போக்கில் மாறித்தான் வந்துள்ளது. இந்த மாற்றத்திற்கு சமூகச்  சூழலும், தொழில்நுட்ப வளர்ச்சியும் காரணமாக அமைந்திருக்கின்றன.  என் பார்வையில், ஒரு 60 ஆண்டுகளில்  கொஞ்சம் கொஞ்சமாக எழுதப்படும் எழுத்து நடை, சமூகம் எதிர்கொள்ளும் நிகழ்ச்சிகள், செய்திகள் மக்களைச் சென்றடையும் தொழில் நுட்பம் ஆகியன முற்றிலும் மாறிவிடுவதாகத் தெரிகிறது.  

1940ஆம் ஆண்டுக்கு  முன்னர் வெளியான இதழ்கள் என்ற கால  எல்லை வகுத்துக் கொண்டு பார்க்கும் பொழுது, விடுதலை அடையாத இந்திய மக்களின் போராட்டங்களும் வாழ்க்கைமுறையும் வேறு.  அக்காலத்தில் கல்வி கற்று எழுதப் படிக்கத் தெரிந்தவர் எண்ணிக்கையும் குறைவு. ஆனால்,  அந்த குறைவான எண்ணிக்கையில் உள்ளவர்களை அடைய விரும்பித்தான் பல பத்திரிக்கைகளும் துவக்கப் பட்டன என்பது சவால்கள்  நிறைந்த முயற்சி  என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க வழியில்லை.  அத்துடன், அக்கால மக்களுக்குப் பொழுது போக்கும் வாய்ப்புகளும் குறைவு. தமிழில் முதல் பேசும் படம் என மக்களுக்குத் திரைப்படங்கள் அறிமுகமாகத் தொடங்கியிருந்த காலம் அது.  நாடகம், இசைநிகழ்ச்சி, சொற்பொழிவு  இவை போன்றவையே நகர மக்களுக்குக் கிடைத்தன. அவற்றின் மூலம்தான் மக்களிடம் கருத்துக்களைக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள்.  ஆக, வெகுமக்களைக் கவரும் கலையுலகச் செய்திகள் மற்றும்  விளையாட்டுச் செய்திகளுக்குப்  பத்திரிக்கைகளில் வெற்றிடம் இருந்த காலம் அது.   இக்கால கட்டத்தில் நடத்தப்பட்ட இதழ்களின் ஆசிரியர்கள் 19ஆம் நூற்றாண்டில் பிறந்தவர்கள். 

1940 காலகட்டத்திற்குப் பிறகு தொடங்கிய இதழ்களின் ஆசிரியர்களாக உருவாகி இருந்தவர்கள் பெரும்பாலும் 20 ஆம் நூற்றாண்டின்  முற்பகுதியில் பிறந்தவர்கள்.  'திராவிட நாடு' என்கிற முழக்கம் 1940-ல்  தொடங்கி, 1940க்குப் பிறகு பத்திரிக்கைகளின் தாக்கம் திராவிட நாடு  ஆர்வலர்களின் கையில் என்ற வகையில் பத்திரிக்கைகளின் களம் மாறிவிடுகிறது. திராவிட இயக்க வழிவந்தவர்களும் எண்ணற்ற மாற்று இதழ்களை வெளியிடத் தொடங்கியிருந்தனர், விடுதலை பெற்ற இந்தியாவின் தமிழ்நாட்டில் அரசியல் களம் வேகமாக மாறிக் கொண்டிருந்த காலம் இது. 

மருதுபாண்டியர் வரலாறு சொல்லும் 'சிவகங்கை சீமை' திரைப்படத்தின் பாடலில் "வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது" என்றொரு வரியை கவிஞர் கண்ணதாசன் பாடலில் அமைத்தார்.   அத்துடன்,  திராவிட கழக ஆதரவு பத்திரிகைகளான 'மன்றம்', 'முரசொலி', 'நம்நாடு', 'தென்றல்' ஆகிய இதழ்களின் பெயர்களைக் குறிப்பிடும்படி,
        "மன்றம் மலரும், முரசொலி கேட்கும்
        வாழ்ந்திடும் நம்நாடு
        இளந்தென்றல் தவழும் தீந்தமிழ் பேசும்
        திராவிட திருநாடு" 
- என்றொரு பாடலும் அந்தப் படத்தில் இடம்பெற்றது. இவ்வரிகள் நுட்பமாக எழுதப் பட்டவை. 

"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ..கடமை அது கடமை"  என்ற வகையில் இருபொருள்பட எழுதப் பட்ட கவிஞர் வாலியின் அரசியல் குறிக்கும் வரிகள் போன்றது இந்தப் பாடலின் வரிகளும்.  தணிக்கைத் துறையினருக்குப்  பாடல்  வரிகளின் உட்பொருள் புரிந்தாலும் கவிஞர்கள் நுட்பமாக எழுதிவிட்ட காரணத்தால் தடை செய்ய வழியின்றி திணறும்படி செய்து,   தணிக்கைக்கு  உள்ளாகாமல் தப்பித்துக் கொண்ட பாடல்களைக்  கேட்கும் எவருமே புன்முறுவல் செய்வது வாடிக்கை. 

இத்தகைய இடைப்பட்ட காலமான 1940ஆம் ஆண்டுக்குப் பிறகு, விடுதலை பெற்ற இந்தியாவில் வெளியான பல சிறப்புச் சிற்றிதழ்களைத் தமிழ் இணையக் கல்விக்கழகம் மின்னூலகம் தளத்தில் பெறலாம்.  'பருவ வெளியீடுகள்' என்ற பிரிவின் கீழ்:ஆய்விதழ்கள், இதழ்கள், தமிழக அரசின் பருவ வெளியீடுகள் என்ற பிரிவுகளில் சுமார் 15,000 இதழ்கள் தமிழ் இணையக் கல்விக்கழகம் மின்னூலகம் தளத்தில் (https://www.tamildigitallibrary.in/) இடம் பெறுகின்றன.  இவையாவும் காலத்தின் பிரதிநிதிகளாகத் தமிழக நிகழ்வுகளை ஆவணப் படுத்தியுள்ளன.  எடுத்துக்காட்டாக மொழியியல், செந்தமிழ், திராவிட நாடு, புதுவாழ்வு, இஸ்லாம், குமரிமலர், தென்மொழி, போர் வாள் எனப் பல வேறுபட்ட தலைப்புகளில், வெவ்வேறு நோக்கத்தில் தொடங்கப்பட்ட இதழ்களை இத்தளத்தில்  காண முடிகிறது. 

அரசு சார் நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், ஆர்வலர்கள் எனப் பலரும் தொடர்ந்து கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மின்னாக்கப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவ்வாறு ஆர்வத்துடனும் அக்கறையுடனும் சேகரிக்கப் படுபவை பயன் கொள்வதற்காகத்தான்   என்பதை மறக்காமல் இருப்பது கற்பவர் கடமை. 
இந்தக் கட்டுரையில் 
[I] தமிழ்ப் பொழில்
[II] நாடார் குல மித்திரன் 
[III] தமிழன் / ஒரு பைசாத் தமிழன் 
[IV] குடி அரசு
ஆகிய இதழ்கள் குறித்து சற்று விரிவாகக் காணலாம்.  இந்த  நான்கு செய்தி இதழ்களை இந்த உரைக்குத் தேர்வு செய்த காரணம்;  பல்வேறு இதழ்கள் வரிசையில் வகைக்கு ஒன்றாக அமைந்த இந்த இதழ்களை எடுத்துக் காட்டுகளாகக்  கொள்ளலாம் என்பதும் ஒரு காரணம். அத்துடன், ஆய்வாளர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல் சேகரத்திலும் உள்ள இந்த இதழ்கள் குறித்து அறிமுகப்படுத்தலாம் எண்பதும் மற்றொரு காரணம்.   பார்க்கப் போகும் இதழ்கள் குறித்து முதலில் இதழின் பெயருடன் அது குறித்து மேலும் சில அடிப்படைத் தகவல்களான, இதழ் துவங்கப்பட்ட நோக்கம், வெளியான காலம், வெளியீட்டின் கால இடைவெளி, இதழின் ஆசிரியர் போன்ற தகவல்களையும் இப்பகுதியில் அறிந்து கொள்ளலாம். 

[I] கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப் பொழில் இதழ்கள்:
இதழ்:  தமிழ்ப் பொழில்
நோக்கம்: தமிழ் இலக்கிய வளர்ச்சி, ஆய்வு, தமிழ்க்கல்வி வளர்ச்சி 
வெளியான காலம்: 1925 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் - 1979  ஆண்டு மார்ச் வரை 
வகை: மாத இதழ் 
இதழின் ஆசிரியர்: முதல் பொழில் தொண்டராக  கவிஞர் அரங்க. வேங்கடாசலம் பிள்ளை  பொறுப்பேற்றார், அவரைத் தொடர்ந்து மேலும் பலர் தங்கள் பங்களிப்பை நல்கியுள்ளார்கள் 



தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கம் துவங்கக் காரணமாக இருந்த  த.வே. உமாமகேசுவரனார்  அவர்களின் திட்டங்களில் ஒன்று மாதம் தோறும் வெளிவரும் 'தமிழ்ப் பொழில்' என்னும் இலக்கிய இதழ் வெளியீடு செய்வது.  கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் நோக்கங்களையும் செயல்பாடுகளையும் தமிழுலகத்திற்கு அறிவிக்கவும், தமிழரின் மேன்மையையும்  தமிழின் தொன்மையையும் ஓங்கி ஒலித்து உலகறியச் செய்யவும், தமிழுக்கும் தமிழருக்கும் இழிவு ஏற்படுத்த முன்னெடுக்கப்படும் செயல்களை நியாய நெறியில்  கண்டிக்கவும்,  பிற நாட்டு இலக்கியங்களையும் கலைநூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளிக்கொணரவும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகவும் சங்கத்தின் சார்பில் ஓர் இலக்கிய இதழ் தேவை என்ற குறிக்கோளுடன் துவக்கப்பட்டது தமிழ்ப் பொழில் இலக்கிய இதழ்.

இதன் வெளியீட்டு ஏற்பாடுகளை 1913 ஆம் ஆண்டில் முன்னெடுத்த  த. வே. உமாமகேசுவரன் தலைமையிலான  குழுவின் முயற்சிகள், பொருள் பற்றாக் குறை உட்படத்  தடைகள் பல கடந்து, பன்னிரு ஆண்டுகளும் கடந்த பின்னர், நன்கொடை தந்த பல தமிழ் ஆர்வலர்களின் உதவியுடன்  1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில்  தமிழ்ப் பொழில் என்ற பெயரில்  முதல் இதழ் வெளியீடு கண்டது. இதழின் ஆசிரியர் பொழில் தொண்டர் எனக் குறிப்பிடப்பட்டார். கவிஞர் அரங்க. வேங்கடாசலம் பிள்ளை தமிழ்ப் பொழிலின்  முதல் பொழில் தொண்டராகப் பொறுப்பேற்றவராவார். ஒவ்வொரு மாதமும் தமிழ்ப் பொழிலின் இதழொன்று சராசரியாக 40 பக்கங்களைக் கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது.  

தஞ்சை கரந்தைத்  தமிழ்ச் சங்கம் வெளியிட்ட தமிழ்ப் பொழில் இதழ்,  தமிழ்  இலக்கிய உலகில் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளது.  அக்காலத்தில் தமிழ்ப் பொழிலுக்கு இணையாக 13 தமிழிலக்கிய இதழ்கள் வெளியானது. அவற்றுள் தமிழ்மொழி வளர்ச்சியில் அக்கறை கொண்டு முன்னிலை வகித்த இதழ்களான மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் இலக்கிய இதழாக 1902ஆம் ஆண்டு  முதல் வெளியிடப்பட்ட"செந்தமிழ்" என்ற இதழுடனும்; திருநெல்வேலிச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின்  இலக்கிய இதழாக 1923ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்ட"செந்தமிழ்ச்செல்வி" என்ற இதழுடனும், இணைத்து மதிக்கப்பட்ட நிலையில் தமிழ்ப் பொழில் விளங்கியது. 

மறைமலையடிகள், ஞா. தேவநேயப்பாவாணர், வ. உ. சிதம்பரம், தி.வை. சதாசிவப் பண்டாரம், மா. இராசமாணிக்கம்,  ஔவை சு. துரைசாமி என இன்று நாம் அறியும் பல தமிழறிஞர்களின் கட்டுரைகள் தமிழ்ப் பொழிலில் வெளிவந்தன.  தமிழ்ப் பொழிலில் வெளியான இவர்களது  கட்டுரைகளை பின்னர் நூல்களாகவும் தொகுத்து இந்தத் தமிழறிஞர்கள் நமக்குத் தந்து சென்றுள்ளனர். 

சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில், 'மொழி மறுமலர்ச்சி இயக்கம்' தோன்றி வளரத் துவங்கிய நாட்களில் தமிழ்மொழியின் நிலையை நாம் தமிழ்ப் பொழில் இதழ்கள் மூலம் அறியலாம்.   அந்நாட்களில் தமிழ்க் கல்வி பெற்றிருந்த மதிப்பற்ற நிலையையும், தமிழாசிரியர்கள் போற்றப்படாமல் மாற்றாந்தாய் பிள்ளைகள் நிலையில் நடத்தப்பட்டதையும், சரியான பதவியும் ஊதியமும் அங்கீகாரமும் கிடைக்கப்பெறாமல் தமிழறிஞர்கள்  வருந்தியதையும், தமிழுக்காகப் பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்கத் தமிழார்வலர்கள் முயன்றதையும், தமிழ் வளர்க்கும் நோக்கில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைத் துவக்கும் முயற்சிகளை மேற்கொண்டதையும், தமிழ் வளர்ச்சியில் அக்கறை கொண்டோர் சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலமொழி ஆதிக்கத்துடன் தொடர்ந்து போராடிக் கொண்டே இருந்த நிலை என இவையாவற்றையும் தமிழ்ப் பொழிலின் தமிழிலக்கியப் பதிவுகளின் வழியாக, அவை தரும் செய்திகள் மூலம் நாம் தெளிவாக அறிய முடியும்.

1925 ஆம் ஆண்டு  ஏப்ரல் தொடங்கி, இடையில் தடைப்பட்டாலும் மீண்டும் உயிர்த்தெழுந்து 50 ஆண்டுகள் தமிழ்ப் பொழில்  இலக்கிய திங்களிதழ் வெளிவந்தது,  1979  ஆண்டு மார்ச் மாதத்துடன்  தமிழ்ப் பொழிலின் வெளியீடு  நிறுத்திக் கொள்ளப் பட்டது.  அதுவரை, கரந்தை தமிழ்ச் சங்கத்தினர் தமிழகம், தமிழினம், தமிழ்மொழி உயர தமிழ்க் கல்வியின் வளர்ச்சி இன்றியமையாதது என்று தெளிவாக உணர்ந்து கொண்டு, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் குரலொலியாக வெளியிடப்பட்டது தமிழ்ப் பொழில். தமிழியல் ஆய்விலும், தமிழ்க் கல்வி வளர்ச்சிக்காகப் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக பாடத்திட்டங்களுக்கு ஆலோசனையும், பரிந்துரையும், நெறிப்படுத்துதலையும்  தமிழ்ப் பொழில் கட்டுரைகள் வழியே கரந்தை தமிழ்ச் சங்கத்தினர் செய்து வந்தனர்.  

இதற்கு எடுத்துக் காட்டாக ஒரு நிகழ்வைக் குறிப்பிடலாம்.  தமிழறிஞர் பின்னங்குடி சுப்பிரமணிய சாஸ்திரியின் தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு நூலை சென்னை பல்கலைக்கழகத்தின்  தமிழ் வித்துவான் தேர்வுக்குக்குரிய பாடநூலாகப் பல்கலைக்கழகம் அறிவித்தது. ஆனால், கருத்துப் பிழைகள் மலிந்த நூலாக இந்நூலைத் தமிழ் அறிஞர்கள் கருதினர்.   பாடநூலாக வைக்கத் தகுதியற்றது இந்தநூல் என்ற எதிர்ப்புக் குரலுடன், 'பின்னங்குடி சுப்பிரமணிய சாஸ்திரியார் எழுதிய 'தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது ஜூலை 1931 தமிழ்ப் பொழிலில் துவங்கிய மறுப்புரை கட்டுரைகள் ஜூன் 1937 இதழ் வரை 6 ஆண்டுகளாகத் தொடர்ந்தது.  மறுப்புரைகளும் அந்த மறுப்புரைகளுக்கு மறுப்புரைகளும் விளக்கங்களும் என 35 கட்டுரைகள் தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு நூலைக் குறித்து எழுதப்பட்டன. இவற்றில் 29 கட்டுரைகளை ம. நா. சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் மட்டுமே எழுதியுள்ளார்.

தமிழ்ப் பொழில் காட்டிய இத்தகைய விடாத தொடர் முயற்சியானது பிழையுள்ள பாடங்களை மாணவர்கள் ஏற்றுக் கொள்வதைத் தடை செய்ய வேண்டும் என்ற முனைப்பின்  அடிப்படையில் இருந்துள்ளது  தெளிவாகிறது.  இந்த நிகழ்ச்சி குறித்து  "பல்கலைக்கழகங்களின் தமிழ்ப் பாடநூல்கள் தரம் குறித்து படிப்பினை தரும் சென்ற நூற்றாண்டு நிகழ்வுகள்" என்ற தலைப்பில் வெளியான கட்டுரை விளக்கும்.  

[II] திரு.சூ.ஆ.முத்து நாடாரின் நாடார் குல மித்திரன் இதழ்கள்:
இதழ்:  நாடார் குல மித்திரன்
நோக்கம்: நாடார் குல மக்கள் வாழ்வில் முன்னேற்றம், சமவுரிமை 
வெளியான காலம்: 1919-செப்டம்பர் முதல் 1931ம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் வெளி வந்தது
வகை: வார இதழாக திங்கட் கிழமைகளில் வெளியிடப்பட்டன  
இதழின் ஆசிரியர்: அருப்புக்கோட்டை திரு.சூ.ஆ.முத்து நாடார்; உதவி ஆசிரியர் திரு.சொக்கலிங்க பாண்டியன் 


20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல சாதி குல இதழ்கள் தோன்றுவதற்குக்  காரணம் பிரிட்டிஷ் அரசு துவக்கிய சென்சஸ் என்னும் மக்கள் தொகை கணக்கெடுப்பு முறை.  இந்திய மக்களின் நிலையை, அவர்கள் இடையே நிலவும் சாதி இன பேதங்களால் அவர்கள் எதிர்கொண்ட உயர்வு தாழ்வு நிலைகளை சென்சஸ் தரவுகள் தெளிவாகக் காட்டிய பின்னரே மக்களுக்கு விழிப்புணர்வு  ஏற்பட்டது. ஒடுக்கு முறையால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருந்த ஒவ்வொரு குலத்திலிருந்தும் அக்குலத்தில் தோன்றி இருந்த கற்றறிந்த சான்றோர்கள் தங்கள் குலத்தை மேம்படுத்தப் பல முயற்சிகளை முன்னெடுத்தனர். 

தங்கள் குல மக்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக  அவர்களுக்கான பத்திரிகையை உருவாக்கி, அவர்களின் வாழ்வின்  முன்னேற்றத்திற்கான  விழிப்புணர்வை ஏற்படுத்துதல் அவர்களின் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.  உரிமை, சமத்துவக் குரல்கள் ஒலிப்பதாக அந்த இதழ்கள் அமைந்தன.  எடுத்துக் காட்டாக;  நாடார் குல மித்திரன் (1919), விஸ்வகர்மம் (1913),  வைசியன் (1923), யாதவமித்திரன் (1929), செட்டியார் குல மித்திரன்(1935),  கிராமணி குலம்(1936) போன்றவை அவ்வாறாக வெளிவந்த குல முன்னேற்றக் குறிக்கோள் கொண்ட இதழ்கள். அவற்றில் நாடார் குல மித்திரனுக்குச் சிறப்பிடம் உண்டு. 

நாடார் குல மித்திரன் இதழ்  1919-செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட பொழுது அது மாதம் தோறும் வெளிவரும் இதழாக இருந்தது. பின்னர் மாதம் இரு முறை என்ற இதழாக ஒவ்வொரு மாதமும்  1, 15 தேதிகளில் வெளிவரும் இதழாக மாறியது. அப்போது  பத்திரிக்கையின் தோற்றத்திலும் மாற்றம் நிகழ்ந்தது. செய்தித்தாள் வடிவத்திற்கு மாறியது.  அதன் பிறகு 1, 11, 21 தேதிகளில் வெளியீடு என மாதம் மும்முறை வெளியாகும் நிலைக்கு மாறியது, ஐந்தாம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் வெளியாகும் வார இதழாக வெளியீடு கண்டு வார இதழ்களாக 1931ம் ஆண்டு வரை வெளியானது.  12 ஆண்டுகள் தொடர்ந்து வெளி வந்தது நாடார் குல மித்திரன் இதழ்.  இதழின் பக்க எண்ணிக்கை 8 பக்கங்கள் என்ற அளவிலும்,  சிறப்பு இதழ்களாக வெளிவருகையில் மேலும் பல  இணைப்புகளுடன் பக்க எண்ணிக்கை அதிகரித்தும் இதழ்கள் வெளிவந்தன. 

திராவிட இயக்க ஆய்வாளராகவும், ‘சிந்தனையாளன்’ இதழின் ஆசிரியராகவும் இருந்த வே.ஆனைமுத்து அவர்கள் 'பெரியாருடைய சொற்பொழிவுகளும், கட்டுரைகளும்' என்று ஆய்வை மேற்கொண்டவர். பெரியார் ஈ.வெ.ரா. தொடங்கிய ‘குடியரசு’ பத்திரிகையில் வெளியானவை, ‘குடியரசு’க்கு முன்னால் வந்த ஆவணங்கள் என எல்லாவற்றையும் தொகுப்பதில் ஆனைமுத்து ஈடுபட்டிருந்தார்.  ஜூன் 2010 அன்று அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றில் வே. ஆனைமுத்து அவர்கள், அருப்புக்கோட்டை முத்துநாடார் குடும்பத்தில் இருந்து கிடைத்த நாடார் குல மித்திரன் இதழ்களைத் தனது பெரியாரின் செயல்பாடுகள் குறித்த வரலாற்று ஆய்வுக்குப் பயன்படுத்திக் கொண்டதாகக் கூறியுள்ளார்.  ஒருமுறை ஆனைமுத்து அவர்கள் முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களிடம் தரவுகள் வேண்டி நேர்காணலுக்குச் சென்றபொழுது காமராஜரும் அவரிடம் பெரியாரும் முத்து நாடாரும் நெடுநாள்  நண்பர்கள்,  முத்துநாடார் குடும்பத்தில் தடயங்கள் கிடைக்கலாம் என்று வழிகாட்டியதாகவும் ஆனைமுத்து குறிப்பிட்டுள்ளார். 

பெரியார் ஈ.வெ.ரா.வும், முத்து நாடார் அவர்களும் அன்றைய காங்கிரசில் இணைந்து நாட்டின் விடுதலைக்கானப் போராட்டங்களில் பங்கு பெற்றவர்கள்.  இறுதிவரை  நண்பர்களாக இருந்தவர்கள்.   ஈ.வெ.ரா. தனது சுயமரியாதை  இயக்கக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல குடியரசு இதழைத் துவக்கிய ஆண்டுக்கும் ஆறாண்டுகளுக்கு முன்னரே முத்து நாடார், நாடார் குல மக்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு நாடார் குல மித்திரன் என்ற பத்திரிக்கையைத் துவங்கி விட்டிருந்தார்.    ஈ.வெ.ரா. குறித்த பல செய்திகள், அவரது உரைகள் போன்ற குறிப்புகளை ‘நாடார் குல மித்திரன்’ இதழ்களிலிருந்து பெற்றிருக்கிறார் ஆனைமுத்து.  பெரியாரைப் பற்றி அச்சில் கிடைக்கும் முதல் கட்டுரை, இன்றிலிருந்து சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த பெரியாரின் நேர்காணல் ஒன்று. அருப்புக்கோட்டையை அடுத்த பாளையம்பட்டியில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநாடு அக்டோபர் 31, 1922இல் நடைபெற்றது. அம்மாநாட்டின் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா.  மாநாடு நடந்த அன்று அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சில  நாடார் இளைஞர்கள் அவரிடம் 15 கேள்விகளை எழுப்பி ஒரு நேர்காணல் செய்தார்கள். இந்த நேர்காணல்,  அடுத்து வெளியான நவம்பர் 11, 1922 ஆம் ஆண்டு நாடார் குல  மித்திரன் இதழின் 2 ஆம் பக்கத்தில் வெளியானது.   தனது  ஆய்வுக்கு உட்பட்ட வரையில், முதன் முதல் அச்சில் பதிப்பாகி வெளி வந்த பெரியாரின் பேட்டி இதுதான் என்றும்,  இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க பேட்டி என்றும்  வே. ஆனைமுத்து  கூறியுள்ளார்.  


இந்தப் பேட்டியில்  காங்கிரஸ் கட்சியில் செயலாளராகப் பொறுப்பிலிருந்த பெரியாரின் கவனத்திற்கு நாடார் குல மக்கள்  கொண்டு சென்ற ஒரு முக்கியக் கோரிக்கை நாடார் குல மக்களின் கோவில் நுழைவு உரிமை பற்றியது.  அவர்களிடம் தீண்டாமையை ஒழிக்கப் பாடுபடுவேன் என்று பெரியார் உறுதி அளிக்கிறார்.   அடுத்த இரண்டு மாதத்தில் திருப்பூர் நகரில் தமிழ் மாகாண காங்கிரஸ் மாநாடு நடந்த பொழுது, மாநாட்டில் கோவில் நுழைவு உரிமை குறித்த தீர்மானத்தைக் கொண்டு வருகிறார் ஈ. வெ. ரா.  ஆனால், காங்கிரஸ் கட்சியின் பெரும் பதவிகளிலிருந்த பார்ப்பனர்கள் இது மத சம்பந்தமானது, காங்கிரஸ் கட்சி அரசியல் சார்ந்தது, கோவில் நுழைவு உரிமை போன்ற கோரிக்கைகள் நமது கொள்கைக்கு அப்பாற்பட்டது  என்ற காரணம் சொல்லி மறுத்துவிடுகிறார்கள்.  அன்று மாலை நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தின் தீர்மான விளக்க நிகழ்ச்சியில்தான், மனித உரிமையை மதிக்காத மனுநீதியைக்  கொளுத்த வேண்டும்,  இராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்று  ஈ. வெ. ரா. முதன் முறையாக கருத்துரைக்க ஆரம்பித்தார் என்கிறார் வே. ஆனைமுத்து.   பிப்ரவரி  25,1929 அன்று வெளியான தனது நாடார் குல மித்திரன் இதழில், “ஈ.வெ. ராம சகாப்தம் 4” எனத் தலையங்கப் பகுதியில் பதிவு செய்தார் அருப்புக்கோட்டை சூரிய. ஆறுமுக. முத்து நாடார் என வே.ஆனைமுத்து குறிப்பிடுகிறார்.  

உரிமை இழந்தவர்களாகத் தமிழகத்தின் கோவில் நுழைவு போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் போராட்டங்கள் குறித்து இந்த இதழ்களில் வெளியான செய்திகள் மூலம் அறியலாம்.  காந்தியின் சத்திய சோதனை, அன்றைய இந்திய, தமிழக அரசியல் களம், போன்றவற்றையும் அறிய நாடார் குல  மித்திரன் பதிவுகள் உதவும். பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் வாழ்ந்த அன்றைய  அயலகத் தமிழர்கள் குறித்தும் செய்திகள் பதிவாகியுள்ளன. 

[III]பண்டிதர் அயோத்திதாசரின் தமிழன் இதழ்கள்:
இதழ்:  ஒரு பைசாத்தமிழன் மற்றும் தமிழன்
நோக்கம்:  தமிழரிடையே சமத்துவம், சமநீதி, பகுத்தறிவு, முன்னேற்றம், பௌத்தக் கருத்துகள் பரப்புரை 
வெளியான காலம்:  1907ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 1914 ஆண்டுவரை வெளி வந்தது 
வகை: வார இதழ், புதன்கிழமைகளில் வெளியிடப்பட்டன  
இதழின் ஆசிரியர்: அயோத்திதாசப் பண்டிதர். 





அயோத்திதாசர் ரெவரெண்ட் ஜான் ரத்தினத்துடன் இணைந்து 1885இல் 'திராவிடப்பாண்டியன்' என்ற இதழையும் தமிழன் இதழுக்கு முன்னர் நடத்தியுள்ளார்.  19ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வெளிவந்த 42 தலித் பத்திரிக்கைகள், இதழ்கள் பற்றிய தகவல்களைத் திரட்டி 'சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை - தலித் இதழ்கள் 1869-1943' என்ற தலைப்பில் ஜெ.பாலசுப்பிரமணியம் நூல் வெளியிட்டுள்ளார்.  இந்த 42 தலித் பத்திரிக்கைகள் அனைத்துமே தலித் சமூகத்தவரால் தொடங்கி நடத்தப்பட்டவை என்று அவர் நூலில்  குறிப்பிட்டுள்ளார்.    சூரியோதயம் என்ற இதழ்  திருவேங்கடசாமி பண்டிதர் என்பவரால் 1869ம் ஆண்டு சென்னையிலிருந்து வெளியிடப்பட்டது. பஞ்சமன்(1871), சுகிர்தவசனி (1872), இந்துமத சீர்திருத்தி (1883), ஆன்றோர் மித்திரன்(1886), மஹாவிகடதூதன் (1886), இரட்டைமலை சீனிவாசன்  அவர்களால்  வெளியிடப்பட்ட பறையன் (1893), இல்லற ஒழுக்கம் (1898), பூலோகவியாஸன் (1903) என சில இதழ்களின் பெயர்களை இந்த நூல் மூலம் அறிய முடிகிறது. 

பண்டிதர் அயோத்திதாசரின்  "ஒரு பைசாத் தமிழன்"  இதழ் சென்னை இராயப்பேட்டையில் இருந்து ஜூன் 19, 1907 முதல் புதன் கிழமை தோறும் வெளியானது, அன்றைய விலை காலணா, இதழின் பக்க எண்ணிக்கை  நான்கு.  பின்னர் மக்களின் வேண்டுகோளை ஏற்று,  மறு ஆண்டு முதல் "தமிழன்" என்று பெயர் மாற்றம் செய்து வெளியிட்டார் அயோத்திதாசர்.  இதழ் வெளியிடுவதன் நோக்கம் குறித்து: "உயர் நிலையும், இடை நிலையும், கடை நிலையும் பாகுபடுத்தி அறியமுடியாத மக்களுக்கு நீதி, சரியான பாதை, நேர்மை ஆகியவற்றைக் கற்பிப்பதற்காக சில தத்துவவாதிகளும் இயற்கை விஞ்ஞானிகளும், கணிதவியலாளரும், இலக்கியவாதிகள் பலரும் ஒன்று கூடி இப்பத்திரிக்கையை "ஒரு பைசாத் தமிழன்" வெளியிட்டிருக்கிறோம்" என்று அறிவித்திருந்தார் அயோத்திதாசர். தாமரை மலரின் இதழ்களில், பத்திரிக்கையின் பெயர் குறிக்கப்பட்டு, இடப்புறம் 'ஜெயது' என்றும் வலப்புறம் 'மங்களம்' என்றும் நடுவில் 'நன்மெய்க் கடைபிடி' என எழுதி, இருபுறமும் மலர்க் கொத்துகளுடன் உள்ள ஓர் அழகிய சின்னம் இதழின் முகப்பை  அலங்கரித்தது.  

சமூக மேம்பாட்டுக் கருத்தாடல்களாக;  மூட நம்பிக்கை, தீண்டாமை கொடுமைக்கு ஆதரவளிக்கும் வேத இதிகாசப் புரட்டுகள் குறித்தும்,   பிராமணிய மேலாதிக்கம் பற்றியும்  விரிவாக எழுதினார் அயோத்திதாசர். வேத மத எதிர்ப்பு, பிராமணிய எதிர்ப்பு, மூடப்பழக்கம் எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, சமூக நீதி, சமூக மதிப்பீடுகள், விளிம்பு நிலை ஒடுக்குமுறைகள் போன்ற பல கருத்துக்கள் இதழில் தொடர்ந்து வெளியாயின. 

அரசியல் கருத்தாடல்களாக; அதிகாரத்தில் பங்கு, பிரதிநிதித்துவ அரசியல், ஒடுக்கப்பட்டோர் விடுதலை, தமிழ் மொழியுணர்வு, பகுத்தறிவு, சுயமரியாதை, சாதி ஒழிப்பு, இந்தி மொழி எதிர்ப்பு, வேத மத, பிராமணிய எதிர்ப்பு, தீண்டாமை ஒழிப்பு போன்ற கருத்துகளை வெளியிட்டு வந்தார். 

பெண்ணியம் சார்ந்த செய்திகளாக;  மகளிர் பகுதியில் பெண்கள் கல்வி, வேலை வாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம் பற்றிய செய்திகள் தமிழன் இதழ்களில் இடம் பெற்றன. 

பூய்வத்தமிழொளி  என்ற தலைப்பில் அரசியல் தொடர்,  வர்த்தமானங்கள் என்ற தலைப்பில் நாட்டு நடப்புச் செய்திகள்,  சித்த மருத்துவ குறிப்புகள் போன்றவை இதழில் தொடர்ந்து வெளியாயின.  பொதுச் செய்தி பகுதியில் வானிலை அறிக்கை, வாசகர் கடிதங்கள், அயல் நாட்டுச் செய்திகள், விளம்பரங்கள் மற்றும் நூல் மதிப்புரைகள் போன்றவை இடம்பெற்றன.

கர்நாடக கோலார் தங்க வயல், குடகு, பர்மா, தென்னாப்பிரிக்கா, இரங்கூன், சிங்கப்பூர் போன்ற தமிழர்கள் அதிகம் வசித்த  பகுதிகளிலும் அயல் நாடுகளிலும் தமிழன் இதழ் விற்பனையானது. இதழியலிலும், அரசியலிலும் நவீனம் குறித்த கருத்தாக்கங்களுடன் வெளியான இதழ்களுக்கு எல்லாம் முன்னோடி  பண்டிதர் அயோத்திதாசரின் தமிழன் என்ற சிறப்பு இந்த இதழுக்கு உரியது. 

[IV]பெரியாரின் குடி அரசு:
இதழ்: குடி அரசு
நோக்கம்: தமிழரிடையே சுயமரியாதைக் கருத்துக்கள், பகுத்தறிவு, சமத்துவம், சமநீதி, முன்னேற்றக் கருத்துகளைப் பரப்புதல் 
தொடக்கம்: மே 2,  1925 ஆம் ஆண்டு 
வகை: வார இதழ் 
இதழின் ஆசிரியர்: பெரியார் மற்றும் பல சுயமரியாதை இயக்க எழுத்தாளர்கள் 


அறிஞர் அண்ணாதுரை, சிங்காரவேலர் போன்றவர்களும்  ஆசிரியர் பொறுப்பில் இருந்துள்ளனர்.  குடியரசில் சிங்காரவேலர் தொடர்ந்து பல பொதுவுடைமைக் கொள்கைக் கட்டுரைகள் எழுதினார். அந்தக் கட்டுரைகள் சுயமரியாதை இயக்கத்தினரிடம் கம்யூனிசக் கருத்துகள் பரவ உதவின.

இப்பத்திரிக்கை ஆரம்பிக்கும் நோக்கம் குறித்து பிப்ரவரி 5, 1925 இதழில்; "தேசாபிமானம், பாஷாபிமானம், சமயாபிமானம் இன்னும் மற்ற விஷயங்களையும் ஜனங்களிடை உணர்த்துவதற்கே யாம். ஏனைய பத்திரிக்கைகள் பலவிருந்து, அவைகள் தங்களது மனசாட்சிக்குத் தோன்றிய உண்மையான அபிப்ராயங்களை வெளியிட அஞ்சுகின்றன. அவைகளைப் போலல்லாமல் பொது ஜனங்களுக்கு விஷயங்களை உள்ளவற்றை உள்ளபடி தைரியமாகத் தெரிவிக்க வேண்டுமென்பது என் நோக்கம்" என்று பெரியார் ஈ. வெ. ரா. குறிப்பிட்டிருந்தார். 

1925 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1949 நவம்பர் முடிய வெளிவந்த ‘குடி அரசு’ வார ஏடுகளிலிருந்து  குறிப்பாக; சுயமரியாதை இயக்கம் தொடங்கப் பட்ட ஆரம்பக் காலமான 1925ஆம் ஆண்டு  முதல் 1938 ஆண்டு வரையிலான பதிவுகள்,  "பெரியாரின் எழுத்தும் பேச்சும்" என்ற தலைப்பில் குடி அரசு இதழில் வெளியான கட்டுரைகளின்  27 தொகுப்பு நூல்களாகத் தொகுக்கப்பட்டு வெளியாயின. 1925 ஆம் ஆண்டு முதல் 1938 ஆம் ஆண்டு வரை உள்ள  கால இடைவெளியில் ‘குடி அரசு’ ஏட்டில் வெளி வந்த பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் தொகுத்து வெளியிட  "பெரியார் திராவிடர் கழகம்"  எடுத்த முயற்சியில் உருவானவை இத்தொகுப்புகள்.  சென்ற நூற்றாண்டு தமிழகத்தின் சமூக மாற்றங்களை அறிய உதவும் கருவூலமாகவும் விளங்கும் இத் தொகுப்புகள்.  சமத்துவம், சீர்திருத்தம், பகுத்தறிவு ஆகியவற்றினை குறிக்கோள்களாகக் கொண்டு சமூக மாற்றங்களில் தீவிர செயல்பாடுகளை இயக்கம் முன்னெடுத்த காலத்தில்   வெளியானவை இத்தொகுப்புகளில் இருக்கும் பதிவுகள்.   

இவற்றிலிருந்து,    பெரியாரின் சுயமரியாதை இயக்கம் செய்த பரப்புரைகளின் நோக்கம் என்ன, எவற்றை நோக்கி அந்த இயக்கம் பாடுபட்டது, அக்கலாச் சூழ்நிலை (environment) என்ன? அரசியல் சூழமைவு (context) என்ன? என்பதையெல்லாம் அறியத் தரும் பதிவுகள் நிரம்பியதாக இத்தொகுப்புகள் அமைந்திருக்கும். பெரியாரின் கருத்துகள் போலவே அவர் சமூகச் சூழலில் நிகழ்ந்தவற்றுக்கு  அவர் ஆற்றிய எதிர்வினைகளும்  முக்கியத்துவம் பெற்றவை. இவை அக்காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் என்ன, அவற்றுக்குப் பெரியாரும் அவரது இயக்கமும் எவ்வாறு எதிர்வினையாற்றியது,   எவ்வாறு சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த கருத்துகளை மக்களிடம் இயக்கத்தின் தொண்டர்கள் கொண்டு சென்றனர் போன்றவற்றையும் அறிய மிக உதவும் ஆவணமாக விளங்குகிறது.   அத்துடன், பெரியாரின்  செயல்பாடுகள் மூலம் அக்காலத்தின் தமிழக வரலாற்றுப் போக்கையும் அதனோடு தொடர்புள்ள இந்திய வரலாற்றுப் போக்கையும் புரிந்து கொள்ள குடி அரசு இதழில் வெளியான கட்டுரைகள் மிக உதவும். 

நிறைவாக; 
தமிழ் அச்சேறிய  பொழுது,  நூல்கள் அச்சாக்கம் பெற்று மக்களைச் சென்றடையத் துவக்கிய காலத்தில்  நாட்டு நடப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்க பல செய்தி இதழ்களும் துவக்கப் பட்டன.  இவை தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றின,  சமூக வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றின என்பதை அறிய முடிகிறது.   தமிழகத்துத் தமிழ்ச் செய்தி ஏடுகளும், அத்தோடு தமிழர் குடியேறிய, வாழும் மலேசிய சிங்கை இலங்கை, தென்னாப்பிரிக்கா என எந்த ஒரு நாட்டில் வெளியான தமிழ்ச் செய்தி ஏடுகளும், காலம் தோறும் தமிழர்களின் வாழ்வையும்  வளர்ச்சியையும் பதிவு செய்து  வந்துள்ளன.   

இலக்கியம் காலத்தின் கண்ணாடி என்று அறியப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் வெளியான ஒரு நூலின் அல்லது இதழின் உள்ளடக்கச் செய்திகளை  ஆராயும் பொழுது, அவை தரும் தகவல்கள் அடிப்படையிலேயே பிற்காலத்தில்  நூலின் காலத்தின் இருந்த சூழ்நிலையை நாம் அறிய முடிகிறது.   இவ்வாறு தொகுக்கப்பட்ட சென்ற நூற்றாண்டின் செய்தி இதழ்களை  ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் படிப்பதன் மூலமும், தாங்கள்  அறிந்தவற்றைப் பிறரும் அறியும் வண்ணம் பதிவு செய்வதன் மூலமும் நாம் நம் வரலாற்றை அறிந்து  எதிர்கால வளர்ச்சியை மேலும் செம்மைப் படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. History repeats itself - வரலாறு திரும்பும்  என்பது அனைவரும் அறிந்த ஒரு பழமொழி.  


நேற்றைய செய்தி.. இன்றைய வரலாறு !
காணொளியாக 
— முனைவர் தேமொழி



----------------------------------------------
உதவிய வெளியீடுகள்:
The Tamil written word and its mass appealhttps://www.newindianexpress.com/cities/chennai/2018/aug/25/the-tamil-written-word-and-its-mass-appeal-1862286.html

தமிழ் மரபு அறக்கட்டளை - மின்னூல்கள் https://tamilheritage.org/

பருவ வெளியீடுகள் தமிழிணையம் - மின்னூலகம்: (தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு) http://www.tamildigitallibrary.in/

பல்கலைக்கழகங்களின் தமிழ்ப் பாடநூல்கள் தரம் குறித்து படிப்பினை தரும் சென்ற நூற்றாண்டு நிகழ்வுகள், தேமொழி Journal of Tamil Peraivu, Vol. 6 No. 1 (2017) https://ejournal.um.edu.my/index.php/tamilperaivu/article/view/12945

சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை - தலித் இதழ்கள் 1869-1943; நூல் விமர்சனம்
முனைவர்.க.சுபாஷிணி, மின்தமிழ்மேடை: காட்சி 13 [ஏப்ரல் 2018]

மின்தமிழ் கூகுள் குழும உரையாடல்கள்:  
- mintamil thread - nadar kulamithran [2013] - https://groups.google.com/g/mintamil/c/X6VR9tdwfI8/m/dSqVFTEWZLAJ 
- mintamil thread - kudi arsu [2014] - https://groups.google.com/g/mintamil/c/KaGEGuTY2sk/m/7TK2IVfgQfkJ 
- mintamil thread - thamizhan [2015] - https://groups.google.com/g/mintamil/c/PrOJv0VAY6U/m/Z6wMF0sWAgAJ 
- mintamil thread - tamil pozhil [2016] - https://groups.google.com/g/mintamil/c/T9FebJbKPLA/m/xk8LqxRkAQAJ





தொல்காப்பியம்-பொருளதிகாரமும், சங்க இலக்கியங்களும் காட்டும் பெண்களின் சமூகநிலை

தொல்காப்பியம்-பொருளதிகாரமும், சங்க இலக்கியங்களும் காட்டும் பெண்களின் சமூகநிலை


பேரா. முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ்
அண்ணாமலைக் கனடா,
(அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடாத்தும் கல்வித் திட்டம்)
ரொறொண்டோ, கனடா


சங்ககாலத்தில், ஆண், பெண் இருபாலரும் நல்லதொரு சமூகத்தை உருவாக்குவதற்குத் தமக்குப் புலனான சமூக ஒழுங்கு முறைகளையே நடைமுறைப்படுத்தியுள்ளார்கள். அந்தச் சமூகத்தில் ஆள்பவன், ஆளப்பட்டவன் என்ற பாகுபாட்டிற்கே இடமிருந்ததாகத் தெரியவில்லை. காலப்போக்கில் இந்நிலையில் பல மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதும், சங்க கால மகளிர் நிலையை இக் காலத்தவர் விளங்கிக் கொள்ள முடியாமைக்குத் தலைமுறை இடைவெளி காரணமாக இருக்கலாம் என்பதும் இவ் ஆய்வின் கருதுகோளாகும். ஆய்வுப் பரப்பெங்கும் இக் கருதுகோள் உள்நுழைந்து அதற்கான விடையைக் காண முயன்றிருக்கிறது. இவ்வாய்வு, கீழ்க்காணும் தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. 

1. தொல்காப்பியம், கி. மு. 5 ஆம் நூற்றாண்டிற்கு முன்னையது. சங்கத் தொகை நூல்கள் வெவ்வேறு காலப்பகுதியில் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு. தொல்காப்பியர் காலத்திற்கும் சங்க இலக்கியங்களின் காலத்திற்கும் இடையில் ஆகக் குறைந்தது 200 ஆண்டுகள் இடைவெளி இருந்திருக்கவேண்டும். இந்த 200 ஆண்டுகள் கால இடைவெளியில், வாழ்வியல் மாற்றங்கள் மிகக் குறைந்த அளவில், நடை பெற்றிருப்பது அறியக் கிடக்கிறது.

2. பொருளதிகாரம் சமூகத்தில் மிகக் குறைந்த தொகையினரான (5% இலும் குறைவான) உயர்குடி மக்களின் வாழ்வியலைப் பெரிதும் காட்டிநிற்கிறது. உயர்குடித் தலைவன் தலைவியரது வாழ்வியலை அளவுகோலாகக் கொண்டு ஒட்டுமொத்தச் சமூகத்தையும் அளவிடமுடியாது. தொல்காப்பியம், பொருளதிகாரத்திலும், சங்க இலக்கியங்களிலும், மேல்மட்டக் குடிகளின் வாழ்வியலோடு தொடர்புபடுத்திக் கூறப்பட்டவை, கூறப்படாதவை, மௌனம் காத்தவை, அணிகளில் ஆங்காங்கே கூறப்பட்ட தகவல்கள் முதலியவற்றிலிருந்து பொதுமக்களின் வாழ்வியல் குறித்து அறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 

3. அகத்திணை இலக்கணமும் இலக்கியமும் காட்டும் பெண்களை உழைக்கும் வருக்கத்தினர், உயர்குடியினர் என இரு வகையாகப் பிரித்துக் காணலாம். மேற்கண்ட அடிப்படையில், தொல்காப்பியம் - பொருளதிகாரமும் சங்க இலக்கியங்களும் காட்டும் பெண்களின் சமூகநிலையின் முடிவுரை, அரசியல், கல்வி, பொருளாதாரம், சமூகம் என்னும் அடிப்படையில் தரப்படுகிறது. வரலாற்றில் பெண் அரசாண்டிருக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் சங்க இலக்கியத்தில் காணப்படினும் பெண் அரசாண்டமைக்கான சான்றுகள் இல்லை. ஆனால், அரசுரிமை பெண்களுக்கு மறுக்கப்படவில்லை என்று ஊகிக்கக்கிடக்கிறது. 

பெண் அரசு செய்ததற்கான வலுவான சான்றுகள் இல்லாதபோதும், சேர நாட்டில், சங்ககாலத்தில் நிலவிய பெண்ணின் அதிகார நிலையை, சொத்துரிமையை, எடுத்துக் காட்டுவதாக மருமக்கள் தாயமுறை ஆட்சி வழக்கில் இருந்திருக்கிறது. இது, தாய்த் தலைமையின் எச்சம் என்று கொள்ளலாம். ஆனால் இது பெருவழக்காக இருந்ததாகத் தெரியவில்லை. சங்ககாலத்தில், கல்வி தொடர்பாகப் பொது மக்களிடையே காணப்பட்ட விழிப்புணர்வும், கல்வி கற்பதில் காட்டிய ஆர்வமும் உயரியது. வறிய மாணாக்கர்கள், ஊர்விட்டு ஊர் சென்று பொது மன்றுகளில் தங்கி, வீடுகளில் விருந்தினராக நுழைந்து தமது ஏழ்மை நிலையிலும் கல்வி கற்றிருக்கிறார்கள். பாணர் குடியினர், தம்முள் ஒரு கல்விமுறையைக் கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள். 

பெரும்பாலான சங்கப்புலவர்கள், வசதி வாய்ப்பற்ற பொதுமக்களே. பெண்பாற் புலவர்களில் பெரும்பான்மையானவர்கள் பொதுமக்களே. 473 சங்கப் புலவர்களில் பெண்பாற் புலவர்கள் 45 பேர் என்றும், அவர்கள் பாடிய பாடல்கள் 196 என்றும் அறிகிறோம். போக்குவரத்து வசதிகள் குறைந்த அக்காலச் சூழலில்; 10 விழுக்காடு பெண்கள் கவி பாடியதே அதிகம். பாடியோர் எண்ணிக்கையை விடப் பாடல் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். சங்க காலத்தில் பெண்கள் கல்வியில் சிறந்தவர்களாகவும் புலவர்களாகவும் துணிச்சல் காரர்களாகவும் மனவுறுதி படைத்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு மக்களிடமும் மன்னரிடமும் பெருமதிப்பும் மரியாதையும் இருந்திருக்கிறது. அவர்களை யாரும் அடக்கியாளவில்லை என்பதும் அவர்கள் பெண் என்ற முறையில் எங்கும் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படவில்லை என்பதும் எந்த ஆணுக்கும் அவர்கள் எந்த வகையிலும் தம்மைக் குறைத்துக் கணக்கிட்டது கிடையாது என்பதும் நிரூபிக்கப்பட்டது. வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவது ஆண்மகன் கடமை என்று கூறும் ஒரு சமுதாய அமைப்பையே தொல்காப்பியர் காட்டுகிறார். 

உயர்குடிச் சமூகத்தில் பெண் வீட்டு நிருவாகம் செய்வதைக் கூறிய அவருக்குச் சராசரிப் பெண், வீட்டுத் தேவைகளுக்காக தன்பங்கிற்குச் சிறுகச் சிறுகத் தொழிலும் வியாபாரமும் செய்திருக்கிறாள் என்பதைக் கூறும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் சங்க இலக்கியங்கள் அவற்றைக் கூறத் தவறவில்லை. உயர்குடிப் பெண் கணவனோடு இருக்கும் வரை கணவனின் சொத்து அவள் சொத்து என்னும் நிலைப்பாடே அக்காலத்தில் நிலவியிருக்க வேண்டும். கணவனை விட்டு அவள் விலகிய நிலையில் அவளுக்குச் சொத்தும் இல்லை, காப்புமில்லை என்ற அளவில் அவள் கணவனைச் சார்ந்தே இருக்கிறாள். கணவன் ஊரில் இல்லாத வேளைகளில் மனைவி தன்விருப்பப்படி புலவர்களுக்குப் பரிசில் வழங்கியிருக்கிறாள் என்ற அளவில் அவளுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் இருந்திருக்கிறது. 

ஒரு சராசரிப் பெண்ணுக்குச் சொத்துரிமை என்று ஒன்று தனியாக இருக்கவில்லை. ஆணுடன் சேர்ந்து தொழில் செய்பவளுக்கு கணவனுடையது எல்லாம் அவளுடையதே; 

தந்தையோ தமையனோ கணவனோ கடலிலிருந்து கொண்டு வரும் மீன், கொண்டு வரும் வரை தான் ஆணின் சொத்து. அதனைக் கூடையில் ஏற்றி விலைப் பொருளாக்குவதும் உப்புப் போட்டுக் கருவாடாக்குவதும் பெண்ணின் கடமையாக இருந்திருக்கிறது. அப்படியானால் மீன் யார் சொத்து? 

நெல் விற்று எருது வாங்கி வரும் பெண், இந்த எருதை யார் பெயரில் சொத்தாக எழுதிக் கொள்ளுவாள்?

வண்டியில் உப்பை ஏற்றி, நெடுஞ்சாலையில் ஓட்டி, உப்பு வணிகத்தில் பெரும் பங்கு கொள்ளும் பெண்ணுக்கு இவ்வாணிபத்தில் பங்கு என்ன? 

ஆணுக்குச் சமமாக வயலில் வேலை செய்கிறாள் பெண். விளைபொருளுக்குச் சொந்தக்காரர் யார்? 
இவ்வாறு தொழிலைச் சமமாகப் பங்கு போட்டுச் செய்யும் சமூகத்தில்; சொத்துரிமை ஒரு சிக்கலாக இருக்கவில்லை. 

அகவிலக்கியத்தில் தலைவியே முக்கிய பாத்திரம் என்பது புள்ளிவிவர அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது. தலைவியின் வாழ்வின் பிற்கூறு இப்படித்தான் இருக்கும் என்பதை நற்றாயைப் பார்த்து அறிந்து கொள்ளலாம். குடும்பத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் தந்தையிடமும், மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரம் தாயிடமும் இருந்திருக்கிறது. ஆனால், தந்தையைத் தனது முடிவிற்குச் சாதகமாக மாற்றும் ஆற்றல் தாயிடம் இருந்திருக்கிறது. எனவே இறுதித் தீர்மானங்கள் பெண்களாலேயே எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆண், பெண் கடமைகள் சமமானவையாகத் தொல்காப்பியம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. ஆணும் பெண்ணும் உடலமைப்பில் ஒத்தவர்கள் போலக் காணப்பட்டாலும் அடிப்படையில் உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் வெவ்வேறு அமைப்புக்களைக் கொண்டவர்கள். உடல் சார்ந்த தொழிற்பாடுகளை ஆணால் திறமையாக ஆற்ற முடியும். பெண் இனப் பெருக்கத்திற்குக் காரணமானவள், மென்மையானவள், உள்ளம் சார்ந்த செயல்களில் திறமைசாலி. உலகோடு தன்னை இணைத்துக் கொள்ளும் அணுகுமுறையிலும் ஆணிலும் பல வழிகளில் வேறானவள். அவர்கள், தமது தன்மைகளுக்கு ஏற்ற முறையில், தம்மிடையே ஏற்படுத்திக் கொண்ட எழுதா ஒப்பந்தத்தின்படி தொழிற்பாடுகளைப் பகிர்ந்து வாழ்ந்த வாழ்க்கையை ஆராயும் நாம் அதனைப் புரிந்து கொள்வதற்குத் தற்கால நடைமுறைகளை அளவுகோலாகக் கொண்டிருக்கின்றோம். 

மகளிர், மொழிவழி அல்லாத மறைமுகத் தொடர்பியலே பெரும்பாலும் கொள்கின்றனர் என்பது தொல்காப்பியர் மீது சுமத்தப்படும் ஒரு குற்றச்சாட்டு. இது தொடர்பான நூற்பாக்களும் விளக்கங்களும் அவற்றிற்கு எதிரான கருத்துக்களும் ஆராயப்பட்டன. ‘தொடர்பாடல்’ என்னும் சொல் விரிவாக ஆராயப்பட்டு, அதன்வழி தொல்காப்பியம் பெண்ணிற்குக் கூறியிருக்கும் தொடர்பாடல் இரட்டைத் தொடர்பாடலே என்பதும் களவிலும் கற்பிலும் அவளது தொடர்பாடல் அவளது இணையான தலைவனது தொடர்பாடலுக்கு எந்த வகையிலும் மாறுபட்டதோ, தாழ்வு பட்டதோ அல்ல என்பதும் நிறுவப்பட்டுள்ளது. பெண் ஆணின் விருப்பத்திற்கு ஏற்பக் கற்பிக்கப்பட்டவளாகக் கூறப்படுகிறது. 

களவில் தலைவியின் இயக்கத்தில் தலைவன் ஒழுகினானே தவிரத் தலைவனின் இயக்கத்தில் தலைவி இயங்கவில்லை. தலைவி, யாருடைய ஆலோசனையோ அனுமதியோ இன்றித் தோழிக்கும் தெரியாமல், தலைவனைத் தெரிந்தெடுக்கிறாள். பெண்ணை, ஆண் கட்டாயப்படுத்தி எதையும் சாதித்துக் கொண்டதாகத் தெரியவில்லை. சங்ககாலப் பெண், தனது மனத்துக்குப் பிடித்தவனைக் கணவனாகத் தெரிந்தெடுக்கும் மனத் துணிவையும் சுதந்திரத்தையும் அக்காலச் சமூகம் அவளுக்குக் கொடுத்திருக்கிறது. தொல்காப்பியர் காலத்தில் களவில் மெய்யுறுபுணர்ச்சி நடந்திருப்பதை மறுப்பதற்கில்லை. ஒத்த குணவியல்புகளும் ஆளுமையும் கொண்ட தலைவியின் சம்மதமின்றித் தலைவனுக்கு எதுவும் சாத்தியமில்லை என்பது தெளிவு. தொல்காப்பியர் இலக்கணப்படி ‘கற்பு’ என்பது ‘கன்னித்தன்மை’ யுடன் தொடர்புடைய பொருளில் ஆளப்படவில்லை. திருமணத்தின் முக்கிய நிகழ்வான புணர்ச்சி திருமணத்திற்கு முன்னமே நடந்து முடிந்து விட்டது. எனவே புணர்ச்சிக்கும் கற்புக்கும் தொடர்பில்லை. காட்டலாகாப் பொருளான ‘கற்பு’ என்பது நிறை என்னும் உள்ளத்து உணர்வு. துணைக்கு யாருமற்ற நிலையில் மதுரைத் தெருக்களில் நின்று நீதி கேட்ட வணிகர் குடிப்பிறந்த கண்ணகி தனது கற்பு வழித் தீர்வு கண்டாள். ஒரு சராசரிப் பெண்ணுக்கு இதுவும் சாத்தியமே. 

தொல்காப்பியர் காலத்தில், நிறை என்னும் பொருளில் ஆளப்பட்ட கற்புக்குப் பிற்கால ஆய்வாளர்கள், தம் காலக் கருத்தைப் புகுத்திப் பொருள் காண விழைவது பொருந்துவதாக இல்லை. தலைமுறை இடைவெளியைத் தாண்டிப் பொருள் காணவேண்டும். 

பெண் உடைமைப் பொருள் என்று கூறப்படுகிறது. மகட்பாற்காஞ்சி போன்ற துறைகள் பெண்ணை உடைமைப் பொருளாகக் காட்டுகின்றன. பிற்காலத்தில் பாடல்களுக்குத் துறைகள் அமைத்தலில் சில  தவறுகள் நேர்ந்திருக்கின்றன. புறநானூற்றில், மகட்பாற்காஞ்சிப் பாடல்களும் பெண் காரணமாக எழுந்த போரைக் குறிப்பிடவில்லை. சீறூர்த் தலைவரின் வீரமும் குடிச்சிறப்பும் மான மாண்பும் புகழ்வதற்குப் புலவர்கள் மேற்கொண்ட புனைவு நெறியே மகட்பாற்காஞ்சியாகும். சங்ககாலத்தில், பெண் உடன்கட்டை ஏறும்படி கட்டாயப்படுத்தப்படவில்லை. ‘சதி’ என்னும் கட்டாய வழக்கம் சங்ககாலத்தின் பின் சிறிது சிறிதாக வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. மனைவி இறந்த கணவனுக்கு, காதலியை இழந்த ‘தபுதார நிலை’ மட்டும் ஒரு புறநடையாகும். அதுவும் வருந்தி நிற்பது மட்டும் தான். பெண்ணுக்கு மறுமணம் செய்து கொள்ளும் உரிமை இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் மனைவி உயிரோடு இருக்கும் போதே கணவன் வேறொருத்தியை மணந்து கொள்ளும் இருதாரமணம் சங்ககாலத்தில் இருந்திருக்கிறது. 

சங்ககாலப் பெண்களும் காலத்தைப் பிரதிபலிப்பவர்களாக, மறக்குடி மரபிற்கேற்ற மனநிலையை வளர்த்துக் கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். தன் ஒரே மகனைப் போருக்கு அனுப்பும்  வீரத்தாயாகவும், தன் கணவன் போர்க்களத்தில் இறந்தான் என்பதை அறிந்து தானும் உயிர் நீக்கும் பதிவிரதையாகவும், தன் கணவன் உயிர் குடித்தவனைக் கொன்று பழி தீர்த்த பின் தன் உயிரை மாய்த்துக் கொள்ளும்; மறக்குடி மகளாகவும், மாண்ட தலைவனின் தலையை அணைத்தபடி உயிர்விடும் வீரத்தலைவியாகவும் தமிழ் மறக்குடி மகள் காட்டப்படுகிறாள். 

மறக்குடி மாதருக்குத் தமிழர் வரலாற்றில் தனியிடம் தரப்பட்டிருக்கிறது. பாதுகாப்புக் காரணத்தாலேயே பெண்ணுக்குக் கடல் பயணம் மறுக்கப்பட்டது. சங்க காலத் தமிழர் பண்பாட்டில் பெண்கள் மடலேறியிருக்கமுடியாது என்பது நிறுவப்பட்டது. பாசறைக்குப் பெண்கள், தொழில் தொடர்பாகப் போயிருக்கிறார்கள் என்பதும் எவரும் போரில் நேரடியாகக் கலந்து கொள்ளவில்லை என்பதும் நிறுவப்பட்டது. எனவே, மறுக்கப்பட்டதாகக் கூறப்பட்டவை யாவும் நன்நோக்குடனேயே மறுக்கப்பட்டன, பெண் என்ற காரணத்தால் அல்ல. 

கலை வளர்த்த ஒரு குடிக்கும் பணமும் அதிகாரமும் வாய்ப்பும் மிக்க உயர்குடி மக்களுக்குமிடையே ஏற்பட்ட கொடுக்கல் வாங்கலில் உருவானவர்களே பரத்தையர் குலம். எனலாம். கலைமக்களாக இருந்த விறலியரை விலைமகளாக்கியதில் பாணரது பங்கும் பெரியது. தமது வாழ்வாதாயத்தின் பொருட்டுத் தம் குலப் பெண்டிரைப் பொருளுக்கு விற்றனர் என்பது தான் உண்மை. போரின் விளைவாக ஆண் பெண் சமநிலை அற்றுப் போனதும், போரில் கைதிகளாகக் கொண்டுவரப்பட்ட மகளிருக்கும் இதுவே தொழிலாக ஆக்கப்பட்டதும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலைப்பாட்டைத் தமிழர் போற்றி வந்தமையும் சங்ககால இறுதிப் பகுதியில் பரத்தையர் பெருக்கத்திற்கான வேறு காரணங்களாக அமைந்தன எனலாம். பரத்தையருக்குக் குழந்தைகள் பிறந்திராவிட்டால் பரத்தையர் குடி அருகி இல்லாமற் போயிருக்கவேண்டும். மாறாகப் பரத்தையர் எண்ணிக்கை பல்கிப் பெருகியிருக்கிறது. இது, பரத்தையரது மகப்பேறு, தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் தவிர்க்கப் பட்டிருக்கிறது என்ற கருத்தை உறுதி செய்கிறது.

தலைவன் பரத்தையிற் பிரிதலை ஒரு சாதாரண நிகழ்வாகத் தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் கூறுகின்றன. சுவை கருதிப் பரத்தையர் ஒழுக்கம் அதிகமாகப் பேசப்பட்டிருக்கிறது என்பது தான் உண்மை. பரத்தையிடம் ஆண் செல்வது அவனது பலவீனம். இதுவே தலைவியின் பலமாகவும் ஆகிவிடுகிறது. தலைவிக்குத் தலைவனின் பரத்தைமையைப் பொறுத்துப் போகும் பண்பு கூறப்படுகிறது. இது, தலைவி, தலைவனின் பரத்தமையை ஏற்று நடக்காவிட்டால், அவள் ஒதுக்கப்படக்கூடியதொரு நிலை உருவாகும் என்று அச்சுறுத்துவது போல இருக்கிறது. 

கற்பு வாழ்க்கையில் கணவனின் பரத்தைமை ஒழுக்கம் அவளுக்கு ஒரு தலையிடியாக இருந்ததே ஒழிய அது அவள் வாழ்க்கையைத் தகர்க்கும் ஒழுக்கமாக இருக்கவில்லை. அவள் அதனை அக்கால வாழ்க்கை நெறியின் ஒரு அம்சமாகக் கொண்டு பெரிதாக அலட்டிக் கொள்ளாத நிலையே காணப்பட்டிருக்கிறது. தலைவன் தலைவியரிடையே புலவியும் ஊடலும் ஏற்படுவதற்குத் தலைவனின் பரத்தைமை தவிர வேறு காரணம் உள்ளதாகப் பாடல் இல்லை. கணவனை ஊடியும் கூடியும் ஏசியும் பணிந்தும் நயந்தும் கடிந்தும் அவனது தவறுகளை எடுத்துக் கூறும் உரிமையும் தகுதியும் கடமையும் பெற்றவள் தலைவி ஒருத்தியே. 

பரத்தை, தலைவன் மேல் உண்மையான அன்பு கொண்ட நிலையிலும் கூட, பிற்கால மாதவி போன்று, தலைவன் வாழ்க்கையில், தனக்கென நிலையான ஒரு இடத்தை நிலைநாட்டிக் கொள்ள முடியாத நிலையில் இருந்தவள். சங்க காலப் பிற்பகுதியில் தனக்கும் தலைவன் மேல் உரிமை உண்டு என்பதைத் தலைவி, தோழி, உற்றார் காணப் பொது இடத்தில் உரிமை கோரிக் கொள்ளும் நிலை உருவாகியிருந்தது. காலமும் சமூகமும் பரத்தைக்கு இழைத்த அநீதி பல நூற்றாண்டு காலத்திற்குச் சமூகத்தைப் பழிவாங்கத் தவறவில்லை. மிக அண்மைக் காலம் வரை இதன் கொடுமை நீடித்திருந்திருக்கிறது. பெண் சமூகத்தின் ஒரு பகுதி, பரத்தை என்னும் பெயரால், பல நூற்றாண்டுகளாக மீளமுடியாத ஒரு கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வந்தது என்பது மறுக்கமுடியாத ஒரு விடயமாகும்.

தொல்காப்பியம் ஆணாதிக்க சமூகத்தைப் பிரதிபலித்தபோதிலும், பெண்ணுக்கு முழுச் சுதந்திரமும் கொடுக்கப்பட்டிருந்தது, பெண்ணை உயரிய இடத்தில் வைத்துப் பாராட்டத் தவறவில்லை என்பதையும் மறுப்பதற்கில்லை. பெண் ஆணையும், ஆண் பெண்ணையும் சார்ந்து வாழவேண்டியதன் தேவையைக் காட்டி நிற்கிறது பாரிமகளிர் வரலாறு. இளம்பெண் ஒருத்தி, வீட்டிற்கும் ஊருக்கும் அஞ்ச வேண்டிய ஒரு பண்பாட்டுக்குக் கட்டுப்பட்டிருந்ததையும் நக்கண்ணையார் பாடல்கள் காட்டி நிற்கின்றன. சமூகம், குடும்பம் என்னும் தாபனங்கள் ஆரோக்கியமாக இயங்குவதற்குச் சில கட்டுப்பாடுகள், சட்டதிட்டங்கள் அத்தியாவசியமானவை. சங்ககாலத்தில் கட்டுப்பாட்டுடன் கூடிய ஒரு சமூக அமைப்பையே நாம் காணக்கூடியதாக உள்ளது. 

சங்க காலத்தின் பின் தொடங்கிப் படிப்படியாகக் காலங்காலமாக வளர்த்தெடுக்கப்பட்ட ஆண் பெண் பாலாரிடையேயான சமனற்ற தன்மை சமூகத்தில் ஓர் அதிகாரப் படிநிலையை  உருவாக்கி இருக்கிறது. சங்ககாலத்தில் இல்லாதிருந்த இந் நிலைப்பாட்டைச் சங்ககாலத்தின் மேல் ஏற்றிப்பார்க்கும் முயற்சி வலுவற்றது. சங்க காலப் பெண் கல்வியில் உயர்நிலையில் இருந்திருக்கிறாள். வீரத்தில் போற்றப்படும் இடத்தில் இருந்திருக்கிறாள். மிகவும் சுதந்திரமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறாள். குடும்பத்தைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் இல்லத்தலைவியாக இருந்திருக்கிறாள். சமூகத்தில் அவளுக்கென்று உயரியதொரு இடம் இருந்ததை யாரும் மறுப்பதற்கில்லை. 

ஆண், பெண்பாலாருக்கு இருக்கவேண்டிய பத்துப் பண்புகளில் சமநிலை தவறுவது விரும்பப்படாவிடினும் அப்படி ஒருவர் உயர்ந்திருக்கும் வேளையில் அது ஆணாக இருக்கலாம் என்னும் மரபைத் தொல்காப்பியர் கூறியிருப்பது, இந்நிலைப்பாடு சிறந்த குடும்பம் உருவாக வழி வகுக்கும் என்னும் கொள்கையின் அடிப்படையிலேயே என்று ஊகிக்கக் கிடக்கிறது. இன்றைய நவீனத்துவச் சமூதாயச் சிந்தனையாளர்கள், இன்றைய சமூகச் சிந்தனையை அளவுகோலாகக் கொண்டு, இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னைய ஒரு சமூகத்தின் நிலைப்பாட்டை அளக்க முயல்வது, பொருத்தமானதல்ல. 

உயர் சமூகம் உருவாக்கப்பட வேண்டும் என்னும் கொள்கைக்கு அடிப்படையாகப் பெண்மைப் பண்புகள் காக்கப்படவேண்டும் என்னும் கருத்துத் தொல்காப்பியம் எங்கனும் ஊடுருவி நிற்கிறது. இன்று, சங்ககாலத்து நடைமுறைகளைப் புரிந்து கொள்ள முடியாமைக்குத் தலைமுறை இடைவெளியே காரணம் என்னும் முடிவு கொள்ள வேண்டியிருக்கிறது. 





Monday, July 4, 2022

சோழர் காலக் கோயில் நிர்வாகமும் செப்பேடு ஆதாரங்களும்

சோழர் காலக் கோயில் நிர்வாகமும் செப்பேடு ஆதாரங்களும்


 —  முனைவர் எஸ். சாந்தினிபீ



அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் இல்லாத கோயில்கள் சார்ந்த நிதி முறைகேட்டுப் புகார்கள் அவ்வப்போது எழுகின்றன. இப்படிப் புகார்கள் எழும்போது, அதில் அரசு தலையிட முயன்றால், கோயிலை நிர்வகிப்பவர்கள் எதிர்ப்பதையும் காண முடிகிறது. இதுபோன்ற நிர்வாகச் சிக்கல்கள், அந்தக் கால அரசர்களின் ஆட்சிக் காலத்தில் வந்ததில்லையா? அந்தக் காலத்தில் கோயில்களை அமைத்த அரசர்கள் அதற்கான நிதி நிர்வாகத்தைத் தெளிவாக முறைப்படுத்தி வைத்திருந்தனர். இதற்காக எழுதப்பட்ட செப்புப் பட்டயங்கள் இன்றும் அரசர் காலத்துச் சாட்சிகளாக உள்ளன.

கோயில் நிதியையும் நிர்வாகத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பணியை அக்காலம் முதல் நம் ஆட்சியாளர்கள் தொடர்ந்து செய்துவருகின்றனர். கோயிலைக் கட்டிய அந்தக் கால மன்னர்கள், அவற்றின் நிர்வாகத்தில் இன்றைய அரசு மற்றும் நீதித் துறைகளைக் காட்டிலும் பன்மடங்கு அதிகக் கவனம் செலுத்தி வந்துள்ளனர். குறிப்பாக, சோழ மன்னர்கள் காட்டிய கவனத்தில் எந்தக் குறையையும் காண முடியாது. இவர்கள் ஆழ்ந்து ஆலோசித்து, முடிந்த வரையில் தவறான பயன்பாடுகளைத் தடுக்க முயன்றுள்ளனர்.

எனினும், அவர்களாலும் கோயில்களின் நிதி நிர்வாகத்தில் நூறு சதவீதம் புகார் எழாமல் பராமரிக்க முடியவில்லை. அதே நேரம், இது சார்ந்து சோழ மன்னர்களின் முயற்சிகள் பெரும் பாராட்டுக்குரியவை. இதற்கான ஓர் உதாரணம், அன்று கச்சிப்பேடு என்றழைக்கப்பட்ட காஞ்சிபுரத்து உலகளந்தப் பெருமாள் கோயிலின் செப்பேடு.   'மெட்ராஸ் மியூசியம் செப்பேடு' என்று பரவலாக அறியப்படும் ஐந்து ஏடுகளைக் கொண்ட இது.   சென்னை அரசு அருங்காட்சியகத்தில் இன்றும் பாதுகாத்துவைக்கப்பட்டுள்ளது. இவற்றில் முக்கியச் செய்திகள் கிடைத்தாலும் முடிவில் மட்டும் ஒன்றிரண்டு ஏடுகள் காணாமல் போயுள்ளதால், சில விஷயங்கள் கிடைக்கவில்லை.

மன்னருக்கு நினைவூட்டல்:
உத்தம சோழனின் 16வது ஆட்சி ஆண்டில் (பொ.ஆ. 965) வெளியிடப்பட்டது இந்தச் செப்பேடு, அவருக்குப் பின் பேரரசர் முதலாம் ராஜராஜன் அரியணையில் அமர்ந்தார். சோழ மன்னர்களுக்குப் பொதுவாக நாட்டின் பல பகுதிகளுக்கும் நேரில் சென்று தங்கி, நிர்வாகத்தைக் கவனிக்கும் வழக்கம் உண்டு. ஒருநாள், தலைநகர் தஞ்சையிலிருந்து காஞ்சிபுரத்திற்கு அலுவல் நிமித்தமாக மன்னர் உத்தம சோழன் சென்றிருந்தார். அரண்மனையின் தென்புறத்தின் சித்திர மண்டபத்தில் அமர்ந்திருந்தவரிடம் ஒரு அலுவலர், காஞ்சியிலுள்ள பெருமாள் கோயில் நிர்வாகத்தைச் சீரமைக்கும் கடமை உள்ளதாக மன்னரிடம் நினைவூட்டினார்.

அன்று 'ஊரகப் பெருமாள் கோயில்' என அறியப்பட்டதுதான் இன்றைய காஞ்சிபுரத்தின் உலகளந்த பெருமாள் கோயில். இக்கோயிலின் வரவு செலவுக் கணக்கு, திருவிழா செலவு,  திருவிழாக் காலப் பணிப் பங்கீட்டு முறை போன்ற பல செய்திகளை இச்செப்பேடு பதிவுசெய்துள்ளது. இதன்படி பல ஊர்சபைகள் இக்கோயில் இருப்பிலிருந்து பொன்னைக் கடனாகப் பெற்று அதற்கான வருடாந்திர வட்டித் தொகை, கோயில் நிலங்களிலிருந்துவரும் வருமானம் ஆகியவை வரவாகக் கணக்கிடப்பட்டுள்ளன. இதில் சங்கராந்தி, சித்திரை விஷு (இன்றும் கேரளத்தில் கொண்டாடப்படுகிறது) ஆகிய இரண்டு திருவிழாச் செலவுகளும் சொல்லப்பட்டுள்ளன.

இந்தத் திருவிழாக்களில் இறைவனுக்கான படையல் பொருட்கள், வாசனைப் பூச்சு, காய் பழம், வெற்றிலைப் பாக்கு, விளக்குக்கான எண்ணெய் சமையலுக்கான விறகு உட்பட பலவற்றிற்குமான தொகை கூறப்பட்டுள்ளது. கலைஞர்கள், தேவரடியார்,  பல்வகை இசைக்கருவி வாசிக்கும் உவச்சர்கள் உட்பட வழக்கமான பல வகைச் செலவுகளும் சொல்லப்படுகின்றன. ஆனால், இச்செப்பேட்டில் 'கண்டழிவற்காக' என ஒரு தொகை ஒதுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. திருவிழாக் காலத்தில் எதிர்பாராது ஏற்படும் செலவிற்கான தொகை இது.   அதாவது, இக்காலத்தில் நாம் 'இதர செலவுகள்' என்று குறிப்பிடுகிறோமே அதைத்தான் 'கண்டழிவு' என்று குறிப்பிட்டுள்ளனர். இதில், வரவு செலவுக் கணக்கு பார்க்கச் சொல்லப்பட்ட முறைதான் மிகச் சிறப்பானது.

கணக்குப் பார்ப்பது யார்?
"மாதந்தோறும் கணக்குப் பார்க்க வேண்டும்.   திருவிழாக் காலத்தில் விழா முடிந்த கையோடு கணக்குச் சரி பார்க்க வேண்டும்.  காஞ்சிபுர நகரத்தார் குழுவின் தலைவரும் ஆண்டு வாரியத்தாரும், ஏற்றுவழிச்சேரி, கஞ்சகப்பாடி குடியிருப்புகளைச் சேர்ந்தாரும் இக்கோயில் திருவிழாக்கள் முடிந்ததும் கோயில் கணக்குகளைப் பார்வையிட வேண்டும்.  கஞ்சகப்பாடியாரும் ஏற்றுவழிச்சேரியாருமே கோயிலுக்கு மெய்க்காப்பாளரை நியமிக்க வேண்டும்;  கோயில் செயல்பாடுகளை மேற்பார்வையிடுவார், திருமெய்க்காப்பு (பாதுகாவலர்), கணக்கெழுதுவார் ஆகியோரை நகரத்தாரே தேர்ந்தெடுத்துப் பணியமர்த்த வேண்டும்.   கோயில் செயல்பாடுகளில் இடையூறு ஏற்பட்டால், பதினெட்டு நாட்டு அடியார்கள் மட்டுமே ஒன்றுகூடி நேர்செய்தல் வேண்டும் எனச் செப்பேடு குறிப்பிடுகிறது.

அதாவது, கோயில் வழிபாடு செய்யும் பூசாரிகளுக்கும் கோயிலின் சொத்து வரவு செலவுகளுக்கும் தொடர்பில்லை. வரவு செலவான நிதி நிர்வாகம் பார்ப்பவர்கள் வேறு பல ஊர்களையும் குடியிருப்புகளையும் சேர்ந்தவர்களே. இவர்களுடன் கோயில் பணி செய்பவர்களுக்கு எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. இவர்கள் சேர்ந்தால் ஊழல் ஏற்படும் எனக் கருதி, கோயில் பணியாளர்களையும் கணக்கு மேற்பார்வை செய்பவர்களையும் சோழர்கள் தனித்தனியே வைத்துள்ளனர். மேலும், நிதி நிர்வாகம் செய்பவர்களுடன் வேறு பல அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் அமர்த்தி, அதிலும் ஊழலைத் தடுக்க முயன்றுள்ளனர்.

காவிரிப்பாசன மாவட்டங்களில் உள்ள பெருங்கோயில்கள் அனைத்தும் சோழர் கால நிதி நிர்வாகப் பட்டியலைச் சேர்ந்தவைதான். இந்தப்பின்னணியில் ஒருசில கோயில்கள் மட்டும் வரவு செலவுக் கணக்கைக் காண்பிக்க மறுப்பது சரியா என்கிற கேள்வியை வரலாற்று ஆதாரங்கள் எழுப்புகின்றன.



பேராசிரியர் முனைவர் எஸ்.சாந்தினிபீ 
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியர்
நன்றி: ஜூலை 3, 2022- இந்து இதழ் 




Wednesday, June 22, 2022

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஹோமோ எரெக்டஸ்

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஹோமோ எரெக்டஸ் — முனைவர்.க.சுபாஷிணி



அண்மையில் 16 ஜூன் 2022, ஸ்பெயினின் மனித பரிணாம வளர்ச்சிக்கான தேசிய ஆராய்ச்சி மையம் (CENIEH) வெளியிட்ட அறிக்கையின்படி, 1.6 மில்லியன் ஆண்டுகள் பழமையான ஹோமோ எரெக்டஸ் புதைபடிமங்கள் சீனாவின் கோங்வாங்லிங் (Gongwangling) பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக இன்ஸ்டிடியூட் ஆஃப் வெர்டிபிரேட் பேலியோண்டாலஜி மற்றும் பேலியோ ஆந்த்ரோபாலஜி, CENIEH ஆய்வாளர்கள் மற்றும் சீனாவின் லியு வூ உள்ளிட்ட விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.


இந்த எலும்புக் கூட்டுக்குச் சொந்தமான ஹோமோ எரெக்டஸ் சீனாவின் கோங்வாங்லிங் பகுதியை அடைந்த முதல் ஹோமினின்களில் ஒருவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. படிமத்தின் மண்டை ஓடு, தாடை எலும்பு மற்றும் ஐந்து பற்களில் மைக்ரோ-கம்ப்யூட்டட் டோமோகிராபி, ஜியோமெட்ரிக் மோர்போமெட்ரி மற்றும் கிளாசிக்கல் மோர்பாலஜி நுட்பங்களுடன் ஆய்வு நடத்தப் பட்டது. ஆய்வின் முடிவு சீனாவில் உள்ள ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட மற்ற ஹோமோ எரெக்டஸ் தளங்களில் 400,000 மற்றும் 800,000 ஆண்டுகளுக்கு முன்பான புதைபடிமங்களில் காணப்பட்டதைப் போலவே உள்ளன என்றாலும் சில மாறுபாடுகளையும் இவை வெளிப்படுத்துகின்றன என்பதை இந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஹோமோ எரெக்டஸ் என்பது அழிந்து போன பண்டைய மனித இனங்களுள் ஒன்று. 2 மில்லியன் ஆண்டுகள் காலகட்டத்தில் இவை வாழ்ந்ததற்கானச் சான்றுகள் உலகின் பல்வேறு இடங்களில் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. தமிழகத்தின் அத்திரம் பாக்கம் பகுதியில் கிடைத்த தொல் மனித எச்சங்களும் இவ்வகை ஹோமோ எரெக்டஸ் இனமாக இருக்கலாம். ஆரம்பக்கால ஆப்பிரிக்க ஹோமோ எரெக்டஸ் புதைபடிமங்கள் (சில சமயங்களில் ஹோமோ எர்காஸ்டர் என்றும் அழைக்கப்படுகின்றன) மனிதனைப் போன்ற நவீன உடல் விகிதாச்சாரத்தில் ஒப்பீட்டளவில் நீளமான கால்கள் மற்றும் உடற்பகுதியின் அளவைக் காட்டிலும் குறுகிய கைகளைக் கொண்ட பழமையான மனிதர்கள் இவர்கள். இவர்களின் உடற்கூறுகள் தரையில் வாழும் வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் மனித உடல் உடல் பரிணாம வளர்ச்சி கண்டதை வெளிப்படுத்துகின்றன. மரம் ஏறுதலிலிருந்து நடக்கக்கூடிய மற்றும் நீண்ட தூரம் ஓடக்கூடிய திறனை வெளிப்படுத்தும் வகையில் இந்த பரிணாம வளர்ச்சி அமைகிறது. டச்சு அறுவை சிகிச்சை நிபுணரான யூஜின் டுபோயிஸ் தான் 1891 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் முதல் ஹோமோ எரெக்டஸ் மனித இனத்தின் புதைபடிமத்தைக் கண்டுபிடித்தார். 1894 ஆம் ஆண்டில், டுபோயிஸ் இந்த இனத்திற்கு பிதேகாந்த்ரோபஸ் எரெக்டஸ் என்று பெயரிட்டார். தமிழ்நாட்டின் மலையடிவாரங்களிலும் குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் அகழாய்வுகளை நிகழ்த்தினால் இவ்வகை தொல் மனிதர்களின் எச்சங்களைக் கண்டறிவதற்கு வாய்ப்பு அமையும். குறிப்பு: https://www.cenieh.es/en/press/news/homo-erectus-gongwangling-could-have-been-earliest-population-china ---

Saturday, June 18, 2022

இலக்கியங்களில் பெண்ணிய அடக்குமுறை குறித்த பதிவுகள்

இலக்கியங்களில் பெண்ணிய அடக்குமுறை குறித்த பதிவுகள்

 - முனைவர் பா.சத்யா தேவி



உடல், அரசியல் இரண்டும் இரு வேறுபட்ட தளங்கள் உடல் தோன்றியபோது அரசியல் தோன்றவில்லை. ஆனால் அரசியல் உடலை முன்னிறுத்தித் தோன்றியது எனலாம். அரசியல் என்பது என்ன? அதிகாரத்தை நிலை நிறுத்துதலை அல்லது செயல்படுத்துதலை அரசியல் எனக் கூறலாம். ஆனால் இது மட்டும் தான் அரசியலா என்றால் இல்லை. அதற்குள் பல்வேறு பட்டுணர்வுகள் அல்லது கருத்துகள் நிலவுகின்றன. அதிகாரம் செய்தலும் அரசியல் அந்த அதிகாரத்திற்கு எதிராகக் குரல் எழுப்புவதும் அரசியல்.

உடல் அரசியல் எனில் எதைக் கூறலாம்? எந்த வரையறைக்குள் அதை நிலைப்படுத்துவது என்ற பல சிந்தனைகள் உள்ளன. மனித உயிர் தனக்கான வாழ்வை வாழவும் கொண்டாடவும் முக்கிய கருவியாக இருப்பது உடல். அந்த உடல் தனிமனித நனவிலி மற்றும் விருப்பம் சார்ந்து மட்டும் இயங்கக்கூடியதா எனக் கேட்டால் இல்லை. அவ்வுடல் சமூகம் வரையறுத்த பண்பாடு அதிகாரம் அனைத்திற்கும் உட்பட்டு இருக்கக் கூடியதாகும். உடலின் இயக்கம் மனம் மற்றும் அறிவு சார்ந்து இயங்கக் கூடியது. ஒரு தனி மனிதனை எவ்வாறு சமூக மற்றும் பொதுவெளியில் ஒரு கட்டுக்குள் இயக்க இயலுகிறது, என்ற கேள்விக்கு அரசு அதிகாரம் அல்லது சமூக பண்பாடு எனப் பதிலுரைக்கலாம்.

சமூகம், கலாச்சாரம், மதம், இனம், அரசு போன்ற அனைத்தும் அதிகாரத்தின் கருத்தியலை மட்டுமே உள்வாங்கி இயங்கக்கூடியதாகும் ஆகும். எனவே மனித உயிரும் உடலும் ஒரு அதிகாரத்தின் பாற்பட்டே இயங்க நேர்கிறது. இந்த அதிகாரம் யார் கையில் உள்ளது; அரசின் கையில் அரசு புரியக்கூடிய அரசியலில். எனவே தினம் தினம் மனிதர்கள் அரசியலைக் கடக்காமல் அல்லது அரசியல் இன்றி இயங்க இயலாது. முன்பே கூறியது போல அதிகாரம் செலுத்தக் கூடிய அரசியல் என ஒன்று இருந்தால் அதற்கு எதிராகக் குரல் கொடுப்பதும் செயல்கள் புரிவதும் மற்றொரு வகையான அரசியல்.

மனித உடல் மீது நிகழும் வன்முறை என்பது மிகப்பெரிய அத்துமீறல் ஆகும். அந்த வன்முறைக்கு எதிராகக் குரல் எழுப்புவது உடலரசியல் ஆகும். “அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்” என்ற சொல்லாடல் நமது சமூகத்தில் பரவலாக இயங்கக்கூடியது. இதன்வழி அறிவது மனித உடலை வன்முறை எனும் அத்துமீறல் வழி கட்டுக்குள் கொண்டு வருதல் காலங்காலமாக நிகழக் கூடியது என்பதாகும்.

மனித உடலின் மீது நிகழும் வன்முறையானது அனைவருக்கும் ஒன்றுபோலவே உள்ளதா எனில் இல்லை ஆண் உடலில் நிகழ்தலும் பெண் உடலில் நிகழ்தலும் பல்வேறு மாற்றப்பாடுகள் உடையது. அதிலும் உட்பிரிவுகள் பல உள்ளன. பொதுவெளி, நிர்வாகம், அலுவல், குடும்பம் எனும் பல வழிகளில் பல்வேறு வகையாக நிகழும் ஒவ்வொரு மனித உயிரும் ஒவ்வொரு மாதிரியான அத்துமீறல்களை எதிர்கொள்ள நேரிடும்.

அத்துமீறல்களைப் பேசுதல் மட்டும்தான் உடலரசியலா? நிச்சயமாக இல்லை. உடலின் உழைப்பை, வலியை, வேட்கையை, கொண்டாட்டத்தைப் பேசுதலும் உடலரசியல் தான். ஆனால் இத்தகைய உடல் அரசியல் பாலின வகையில் நிச்சயமாக மாறும் தன்மையுடையது. சான்றாக ஜவுளிக்கடையில் வேலை செய்யும் இருபாலினத்தோரில் ஆணுக்குச் சற்று அதிகமாகவும் பெண்ணுக்குச் சற்று குறைவாகவும் ஊதியம் வழங்குவர். ஆனால் வேலைப்பளுவும் வேலை நேரமும் மாறுபடுவதில்லை. இந்த பெண்கள் தங்களது உழைப்பு சுரண்டலைப் பேசுகையில் அதில் வெளிப்படுவது உடலரசியல். திருப்பூரில் சிவகாசியில் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்களும் மேற்கூறிய உடல் அரசியலில் பேசப்பட வேண்டியவர்கள் தான். இத்தகைய உழைப்புச் சுரண்டல் ஆணுக்கு நிகழும் போது அங்குக் கேள்வி கேட்கப்படும் அல்லது செயல்படும் உடலரசியல் வேறுவிதமானது,

          மண்ணில் உழைப்பா ரெல்லாம் வரியராம்
          உரிமை கேட்டால் அவர் மீது அம்பு பாய்ச்சும்
          புலையர் செல்வாராம்
          இதை பகலெல்லாம் தம் கண் மீது கண்டு கண்டு
          அந்திக்கு பின் விண்மீனாய் கொப்பளித்த
          விரிவானம் பாராய் தம்பி
என்ற பாவேந்தர் பாரதிதாசனின் பாடலில் வெளிப்படுவதும் உடலரசியல். உரிமையைக் கேட்கும் உரிமை கூட இல்லாது இருந்த நிலையும் கேட்க நேரிடும் போது உடல் துன்புறுத்தப்படுவதும்; உடல் வலியின் வழி உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பைச் சுரண்டுவதும் தெளிவாக வெளிப்படுகிறது. இது அதிகாரத்திற்கு எதிரான உடலரசியல். மனித உழைப்பைச்சுரண்ட உடலைக் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் எவ்வாரெனில் தொடர் வலியைக்கொடுத்து ஒரு மிருகத்தைப் பழக்கப்படுத்துவது போன்று மனித உடலை வலி கொடுத்து அத்துமீறி கட்டுக்குள் வைத்துக் கொள்வது அதிகாரம் செலுத்தும் உடலரசியல். இவ்விரண்டையும் இப்பாடலில் உணரமுடிகிறது.

          சமத்துவம் சமத்துவம் சமத்துவமேயெனப்
          பிரெஞ்சு புரட்சியில் ஒலித்ததுவே யின்று
          பெண்டிர் உலகத்திலும் ஒலிக்குதுவாம்
          ஆண்களைக் காட்டிலும் அனைத்திலும் முன்னிற்கும்
          அதிகாரம் வேண்டுமென்னும் அர்த்தமில்லை
          சமமாக நிற்கின்றாள்
          சமமாக உழைக்கின்றாள்
          சவமாக கருதாமல்
          சமமாக நினையீரோ?
என்ற கவிஞர் மணிமேகலையின் கவிதை உரத்துச் சொல்வது ஒன்றைத்தான் பாலின சமத்துவம்.

மனித உயிர் என்கிற ரீதியில் பலர் ஒடுக்கப்பட்டாலும் பெண் என்கிற பாலின ரீதியிலும் இங்கு அவள் ஒடுக்கப்படுகிறாள். இதன் மூலம் இரு வகையான ஒடுக்குதல் பெண் மீது நிகழ்கிறது. பொதுவாக ஆணின் உடல் உழைக்கும் கருவியாக மாற்றப்பட்ட நிலையில் பெண்ணின் உடல் கூடுதலாக, போகப்பொருளாகவும் நோக்கப்படுகிறது.

பெண் கவிஞர்கள் எழுதும் எழுத்து புலம்பல்கள் அல்லது சுய கழிவிரக்கம் என்கிற முன்முடிவுகளுடன்தான் எழுத்துலகம் நோக்குகிறது. முற்போக்கு பேசினாலோ, புதிய சிந்தனைகளை வெளிப்படுத்தினாலோ பெண்ணின் உடலரசியல் பிழையான கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுகிறது. எனினும் கவிஞர்கள் தனக்கான சொல்லை மொழியைத் தயக்கமின்றி வெளிப்படுத்துகின்றனர்.

          அத்தனை எளிதில்லை - ஒரு
          அலைபேசி அழைப்பை பற்றிக்கொண்டு
          அன்பின் வழிநடத்தல்
          அன்பின் மறுதலிப்பை அன்போடு ஏற்றுல்
          பசித்த கொடிய மிருகத்தை
          புன்னகைக்க வற்புறுத்தல்

பெண்ணின் உடலில் நிகழும் தேடல் அது நிகழாத போது கோபமாக மாறும் நிலையை க்ருஷாங்கினியின் கவிதை சூசகமாகச் சொல்லிச் செல்கிறது. தன்னுடைய விருப்பத்தைக் காதலைக் காமத்தை அவள் வெளியில் சொல்லக் கூடாது என்பதே சமூகம் வகுத்த நியதி அதை வெளிப்படுத்தும் பெண்ணைப் பொது வெளியில் பொது உடைமையாகக் கருதும் நிலையே உருவாகிறது. பெண்ணின் உடலரசியலை ஏற்க சமூகம் தயாராக இல்லாத நிலையில் ஒழுக்கம் கெட்டவள் என்கிற வார்த்தை அத்துமீறலைத் தொடங்குகிறது. அதன் பின்பு அது செயல்களை வெளிப்படுகிறது இறுதியில் உடம்பின் மீதான வன்முறையாகவும் மாறுகிறது.

பெண்கள் அணியும் நாகரீக உடை கூட எத்தனை எத்தனை பேரைக் கோபப்படுத்துகிறது அல்லது எரிச்சலூட்டுகிறது. இருசக்கர வாகனத்தில் பெண்கள் செல்லும் போது ஏதாவது ஒரு ஆணின் வாகனத்தை முந்திச் சென்று விட்டால் அதைக் கூட அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலாது தனது வாகனத்தை இன்னும் அழுத்தமாகத் திருகி அதிக சத்தத்துடன் அப்பெண்ணின் வாகனத்தை முந்திச் செல்வது ஆணின் ஆதிக்கத்தைக் கூறும் உடலரசியல். பாலின பாகுபாடுகளை மீண்டும் மீண்டும் நிகழ்த்தும் செயல்களை இதுபோல இன்னும் கூறிக்கொண்டே போகலாம். சமூகத்தில் பெண்கள் சமமானவர்கள் போல ஒரு பாவனை தான் உள்ளது.   அந்த பாவனையைப் பல ஆண்கள் நிஜம் என மீண்டும் மீண்டும் தான் நம்பிக்கொண்டு பெண்கள் மீது திணிக்க முற்படுகின்றனர். பெண்களின் பொருளாதாரமோ, பதவியோ, கல்வியோ, அறிவார்ந்த செயல்களோ தான் மதிக்கப்படுகின்றன. ஆனால் பெண் உடல் என்கிற ரீதியில் பல்வேறு வகையில் தொடர்ந்து ஒடுக்கப்படுகிறாள்.

நாட்டுப்புறப் பாடலில் ஒரு பெண் பாடும் பாடல் பெண்ணின் நிலையைக் கூறுகிறது.

          ஆணாய்ப் பிறந்திருந்தால்
          அப்பன் வீட்டு அரண்மனையில்
          அம்பெடுப்பேன் வில்லெடுப்பேன்
          ஐவருடன் பந்தடிப்பேன்
          வீரவாழ்வு வாழ்ந்திருப்பேன்
          மாரியம்மன்கோயிலாண்டை
          மண்ணாய் பிறந்திருந்தால் - எனக்கு
          மாசம் ஒரு பூசை வரும்
          பெண்ணாய் பிறந்த குறை
          புலம்பிக் கிடைக்கலாச்சு

மண்ணுக்கு இருக்கும் மரியாதை மதிப்பு கூட சக உயிரான பெண்களுக்கு இல்லை. ஊதியம் பெற்று இருந்தாலும் வீட்டில் பெண் தனக்கான வேலையை மறுக்க இயலாது. சமூகம் குடும்பம் என்கிற ரீதியில் ஒடுக்கப்பட்டாலும் அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கான தேடலைத் தொடங்கிவிட்டனர். தனது உடல் தனது என்பதையும் உணரத்தலைப்பட்டு விட்டனர். எனினும் பாலின சமத்துவம் என்கிற ஒன்று நிகழ சில நூற்றாண்டுகள் ஆகலாம்.



முனைவர் பா.சத்யா தேவி,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி,மதுரை
bsathya2217@gmail.com





Wednesday, June 15, 2022

வள்ளுவமும் விஞ்ஞானமும்

வள்ளுவமும் விஞ்ஞானமும்

வெ.தோதாத்திரி


ஒப்புரவு அறிதல்:
ஒப்புரவு என்பது கைம்மாறு கருதாத உதவி. பிரதி உபகாரம் எதிர்பார்த்துச் செய்வது ஒப்புரவு ஆகாது. மற்றவர்களுக்கு நம்மால்  இயன்ற  உதவிகளைச் செய்வது, பணத்தால் உதவுவது, உடலால் உதவுவது இதற்குப் பிரதி பயனை எதிர்பாராமல்  செய்ய வேண்டும். இதற்கு உதாரணமாக வள்ளுவர் நான்கு திருக்குறள்களைக் காட்டியுள்ளார்.
    
          கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
          என் ஆற்றும் கொல்லோ உலகு          (211) 
இந்த உலகத்தார் தமக்கு உதவும் மழைக்கு என்ன கைம்மாறு செய்கின்றனர்? மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைம்மாறு வேண்டாதவை.

மழை பொழியும் மேகத்திற்கு நாம் என்ன பிரதி பலன் செய்கின்றோம்? ஒன்றுமில்லை. மேகமும் நம்முடைய பிரதி பலனை எதிர்பார்த்து மழை பொழிவதில்லை. மழையைப் பொழிவது மேகத்தின் குணம், இயல்பு. அதே போன்று பிரதி பலனை எதிர்பாராமல் பிறர்க்கு உதவி செய்ய வேண்டும்.
          ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்
          பேரறிவாளன் திரு.          (215)
ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தது போன்றது பேரறிவாளனிடம் உள்ள செல்வம். ஊரார் ஊருணியில் நீரை எடுத்துப் பலவகையிலும் பயன்படுத்துகிறார்கள். அந்த ஊருணிக்கு அவர்கள் எந்தவித கைம்மாறும் செய்வதில்லை. அவ்வாறே பேரறிவாளனிடம் உள்ள செல்வம் ஊராருக்குப் பயன்படும். எத்தகைய கைம்மாறும் பேரறிவாளன் எதிர் பார்ப்பதில்லை.

          பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
          நயன் உடையான் கண்படின்          (216)
ஊரின் நடுவே பயன் மிகுந்த மாம்பழங்கள் பழுத்தாற் போன்றது நற்பண்புடையானிடன் செல்வம் சேர்தல். ஊரின் நடுவே பயன்மிகுந்த மா பலா வாழை போன்ற மரங்கள் கனிகளுடன் இருந்தால் அவற்றை ஊரார் உண்டு களிப்பர். அதற்காக இம்மரங்களுக்கு எவ்வித கைம்மாறும் செய்வது கிடையாது.

          மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
          பெருந்தகையான் கண்படின்          (217)
அனைத்து உறுப்புகளும் மருந்தாகிப் பயன்படத்தவறாத மரம் போன்றது பெருந்தகைமை உடையவனிடம்  செல்வம் சேர்தல். சில மரங்களின் காய்கள், இலைகள், பழங்கள், பட்டை மற்றும் வேர் அனைத்தும் மருந்தாகப் பயன்படும். அவற்றைத்தக்க  முறையில் உபயோகித்து மக்கள் பயனடைகிறார்கள். இருந்தாலும் அவர்கள் அந்த மரத்துக்கு எந்த வித உதவியோ கைம்மாறோ செய்வதில்லை. அதைப் போலவே பெருந்தகைமையுடையான் தன் செல்வத்தைப் பிறருக்காகவும் பயன்படுத்துவான். இதற்கு அவன் பிரதி  பலனை எதிர்பார்ப்பதில்லை.

கைம்மாறு கருதாமல் செய்யும் உதவி ஒப்புரவு என்று பார்த்தோம். அப்படி உதவி செய்வதால் விளையும் நன்மைகள் யாதென்று பார்த்தோம். உதவி செய்பவர்கள் அந்தப் பலனை எதிர்பார்ப்பதில்லை என்றாலும் அந்த நன்மைகள் தாமாகவே உதவி செய்பவர்களுக்கு வந்து சேரும். விஞ்ஞானம் அவ்வாறே கூறுகிறது. அது எங்ஙனம் என்பதைப் பார்ப்போம்.

தன்னையும் தன் குடும்பத்தைப் பற்றி மட்டுமே எண்ணாமல் பிறரைப் பற்றி எண்ணும் போது நமது மனவழுத்தம் (stress) குறைகிறது. இதனால் நமது ஆரோக்கியம் கூடுகிறது. மற்றவர்களுக்கு உதவும் போது தன்னைப்பற்றிய சிந்தனை (self centeredness) போய்விடுகிறது. இதனால் நமக்கு ஏற்படும் கவலைகளும் போய்விடுகின்றன. மற்றவர்களுக்கு உதவும் போது மூளையில் நம்மை அமைதிப்படுத்தும் endorphins, oxytocin போன்ற  hormones உற்பத்தியாகி நமக்கு மன அமைதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கின்றன. அதனால்தான் திரு.இரவீந்திரநாத் தாகூர் அவர்களும் ‘service is joy ’  அதாவது "தொண்டு மகிழ்ச்சி" என்றார். மற்றவர்களுக்குச் சேவை செய்யும் போது நமது கோபம், குரோதம் போன்ற குணங்கள் மறைந்து விடுகின்றன. இதனாலும் நமது ஆரோக்கியம் கூடுகிறது. 

எதிர்மறை எண்ணங்களான, கோபம், பழி வாங்குதல் போன்ற சிந்தனைகள் நம்முடைய ஆரோக்கியத்தைக் கெடுக்கின்றன.. அந்த உணர்ச்சிகள் வரும் போது நமது நெஞ்சு படபடக்கின்றது.. நமது இரத்த அழுத்தம் கூடுகிறது. நமது ஜீரணம் தடைப்படுகிறது. இவற்றினால் நமது ஆரோக்கியம் கெடுகிறது. இந்த உணர்ச்சிகள் எல்லாம் நாம் மற்றவர்களுக்குச் சேவை செய்யும் போது மறைந்துவிடுகின்றன. இதனால் நமது ஆரோக்கியம் பேணப்படுகிறது.





"தொல்காப்பியர் பிள்ளைத் தமிழ்"



தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ.காளியப்பன்
                இயற்றிய
ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர் பிள்ளைத்தமிழ்




தாலப்பருவம்:
"தாலப்பருவம் அல்லது தாலாட்டு"
பிள்ளைத்தமிழில் மூன்றாம் பருவம் தாலப்பருவம் ஆகும்.   இது குழந்தையின் ஏழாம் திங்களில் நிகழ்வது ஆகும்.   தால் என்பது நாக்கு.   நாக்கை அசைத்துக் குழந்தை பேசிப் பழகும் பருவம் மேலும் நாக்கை அசைத்துத் தாலாட்டிக் குழந்தையைத் தூங்க வைப்பதும் இப்பருவமாகும்.   பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் ஒரு பருவமாக விளங்கும் தாலாட்டு.    நாளடைவில் தனியொரு சிற்றிலக்கியமாக உருப்பெற்றது எனலாம் (சான்றாக மாரியம்மன் தாலாட்டு போன்றன).

பாடல்— 1:
          உந்தி [83] முதலா  முந்துவளித் தோன்றி                                                      
                    உரசு நாவால் தோன்றிய ஒலியே
          செந்தமிழ் எழுத்தெனச் செப்பினர் புலவர்
                    சேர்த்தே பாடினர் உன்னைத் தாலாட்டி
          முந்தித் தாயே கற்றிடச் செய்தாள்
                    முக்கனி மொழியைத் தாலாட்டி என்றும்
          தீந்தமிழுக்(கு) இலக்கணம் ஆனது தாலாட்டு
                    தீதறக் கற்றனர் தெளிந்து புலவோர்கள்                      
          முந்தையர்  குலத்தின் பெருமை யோடு
                    முன்னோர் வாழ்வியல் நெறிமுறை கூறி
          சந்தவிசை பாடி ஆட்டினர் தொட்டிலையே
                    சிறுகண் மூடி சிறுவா உறங்காயோ
          அந்தமிலா ஐவகை இலக்கணம் உரைத்தவனே
                    அதங்கோட் டாசாற்கு அரில்தப உணர்த்தியவா
          செந்நாப் போதார் உன்வழிக் குறளை
                    உரைக்கச் செய்தவா தாலோ தாலேலோ         [1]

குறிப்பு:  83  என்பது  தொல்காப்பிய நூற்பாவைக் குறிக்கும்.

அருஞ்சொற்பொருள்:
உந்தி— மூலாதாரம்; முந்துவழி— மேலேவரும் காற்று; தீந்தமிழ்— தீம்+தமிழ் இனிமையான தமிழ்; அந்தம்— அழிவு முடிவு; அரில்தப— மயக்கம் நீங்க

இதன்பொருள்:
உந்தியிலிருந்து காற்றுத் தோன்றி மேலே வரும் போது நாவால் உரசப்பட்டு ஒலியாக மாறுகிறது. இந்த ஒலிகளைச் செந்தமிழ் எழுத்துகள் என்று செந்தமிழ்வாணர்கள்   கூறினார்கள். அந்த எழுத்துக்களைச் சேர்த்துச் சொற்களை உருவாக்கினர். முதன்முதலாக தாயால் நாவை அசைத்துப் பாடிய பாட்டே தாலாட்டு எனப்பட்டது. இதைத்தான்  தாய்மொழி என்று கூறுவர். இத்தாலாட்டே  முக்கனி மொழிக்குத் தொடக்க இலக்கணம் ஆகும். இவ்விலக்கணத்தைக் குற்றமறக் கற்றுத்தெளிந்தவர்களே புலவர்கள் எனப்பட்டனர். அவர்கள் நம்முன்னோர்களின் குலப்பெருமையோடு வாழ்வியல் நெறிமுறைகளையும் இசையோடு பாடி தாலாட்டுச் செய்கிறார்கள். தாலாட்டித் தொட்டிலை ஆட்டுகின்றார்கள். எனவே சிறுகண்மூடிச் சிறுவா உறங்காயோ? அழிவில்லாத ஐந்து இலக்கணங்களை உரைத்தவனே! அதங்கோட்டாசான் தடைகளுக்கு விடைகூறி இலக்கணத்தை மயக்கமின்றி  உணர்த்தியவனே! திருவள்ளுவரையும் உன்வழியிலேயே குறளை இயற்ற வைத்தவனே! தாலோ தாலேலோ

இலக்கணக்குறிப்பு:
உரசு நா— வினைத்தொகை; செந்தமிழ், முக்கனி, தீந்தமிழ்,சிறுகண் செந்நாப்போதார் — பண்புத்தொகைகள்; அந்தமிலா— ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்;  உன்வழி— ஆறாம் வேற்றுமைத்தொகை

__________________________________________

பாடல்— 2:
          தமிழர் வாழ்வைக் களவு கற்பெனத்
                    தனித்தனி பிரித்துத் துறைபல தந்தவனே!  
          தண்டமிழ் நிலத்தை நான்காய்ப் பிரித்துத்
                    தனித்தே ஐவகை ஒழுக்கத்தை நிறுத்தியவா
          தமிழர் பெருமையைத் தரணிக்கு உரைத்தவா!
                    தலைவன் தலைவி அறத்தொடு நிற்றலும்
          தோழியும் பாங்கனும் உற்றிடத் துதவலும்
                    தாயர் இருவர் தன்மை உரைத்தவனே!
          இமிழ்கடல் சீற்றத்தால் இறந்தன நூலெலாம்
                    எனினும் உன்நூல் இறவாது மீண்டதே
          இடைகடைச் சங்கத்தார்க்கு இலக்கணம் தந்தவா!
                    எங்கள் காப்பியா தாலோ தாலேலோ      
          அமிழ்தாம் தமிழுக்கு அரணாய் உள்ளவா!
                    ஐவகை நிலத்தின் தெய்வம் உரைத்தவா!
          அணிக்குத் தலைமை உவமை என்றவா!
                    அனைத்தும் அறிந்தவா தாலோ தாலேலோ         [2]

அருஞ்சொற்பொருள்:
தரணி— உலகம்; தாயர் இருவர்— செவிலித்தாய்;  நற்றாய்; பாங்கன்— தோழன்;  இமிழ்கடல்— ஒலியை உடைய கடல்; அரணாய்— பாதுகாப்பாய்

இதன்பொருள்:
தமிழர் அகவாழ்க்கையைக் களவென்றும் கற்பென்றும் பிரித்து, அதை விளக்கத்  துறைகளாகப் பிரித்துக் கூறியவா! தமிழர் வாழும் நிலப்பகுதியைக் குறிஞ்சி முதலாக நான்காய்ப் பிரித்தவா! அதேசமயம் ஒழுக்கத்தை ஐந்தாகக் கூறியவா! தமிழர் பெருமையை உலகிற்கு எடுத்துச் சொன்னவனே! தலைவன் தலைவியர்  பேசிக்கொள்ளும் இடத்தினையும், தோழியும் தோழனும் தலைமக்கள் காதல் வளர உதவி செய்தலையும் நற்றாய் செவிலித்தாய் இருவர் தன்மைகளையும் உரைத்தவா! முன்னொரு காலத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலையால்  அனைத்து நூல்களும் மறைந்தன. ஆனால் உன்நூல் மட்டும் இறவாமல் மீண்டது. அதுவே இடைச் சங்கத்தார்க்கும், முதற்சங்கத்தார்க்கும் (ஏன் இக்காலத்தார்க்கும்) இலக்கண நூலைத்திகழத் தந்தவனே! எங்கள் தொல்காப்பியனே! நாவினை அசைத்துப் பேசாயோ! தமிழ் தமிழ் என்று சொல்லச் சொல்ல அமிழிதாக மாறும் தமிழ் மொழிக்குப் பாதுகாப்பாக விளங்குபவனே! ஐவகைத்திணைக்கும் உரிய தெய்வங்களை எடுத்துக்  கூறியவா! அணிகளுக்கெல்லாம் முதன்மையானது உவமையணி என்றவா! அனைத்தும் அறிந்த ஆன்றோனே! தாலோ தாலேலோ!

இலக்கணக்குறிப்பு:  
களவு கற்பு, தலைவன் தலைவி— உம்மைத்தொகைகள்; தண்டமிழ்— பண்புத்தொகை;  தோழியும் பாங்கனும்— எண்ணும்மை; இமிழ்கடல்— இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை; உன்நூல்— ஆறாம் வேற்றுமைத் தொகை.

__________________________________________

பாடல்— 3:
          பிரிவுகள் என்பது பாலையின் உரிப்பொருள்
                    களவிலும் கற்பிலும் இருவேறு நிலையிலும்
          பிரிவுக்கு இலக்கணம் பற்பல சொன்னவனே
                    பொருள்வயிற் பிரிதலும் உண்டென மொழிந்தவா!
          உரித்தென மொழிந்தாய் ஓதலும் காவலும்
                    உயர்ந்த தூதும் ஒருவழி உண்டென்றாய்
          உரிய காலத்தை ஓதினாய் அன்றே
                    ஒருவழித் தணத்தலும் உடந்தான் ஓதியவா!
          உரிமை கோரார் உயர்ந்த மங்கையர்
                    மடல்மேல் ஏறவும் கடல்மேற் செல்லவும்
          உடன்போக்கும் ஒருவகைப் பிரிவாய் உரைத்தவா!
                    உள்ளம் உவக்கத் தாலோ தாலேலோ
          பரத்தையர் பிரிவால் ஊடலும் வந்தால்
                    பற்பல வாயில்கள் பலவாய்த் தேற்றுவதைப்
          பலவகை மொழியால் பாங்காய் உரைத்தவா!
                    பாரோர் மகிழத் தாலோ தாலேலோ         [3]                

அருஞ்சொற்பொருள்:
ஒருவழித்தணத்தல்— உடன்போக்கு; பார் உலகம்; வாயில்கள் தலைவனுக்கும் தலைவிக்கும் சிறு பிணக்கு ஏற்படும்போது உடன்பாடு செய்பவர்கள்

இதன்பொருள்:
பிரிவு என்பது பாலைத்திணையின் உரிப்பொருள். இது களவு, கற்பு என்ற இருவேறு நிலைகளிலும் நடைபெறும் எனப் பிரிவுக்கு இலக்கணம் சொன்னவனே! பொருள் தேடச் செல்லும் பிரிவு, கற்பதற்காகவும் நாட்டைக்காப்பதற்காகவும், தூது செல்வதற்காகவும் பிரியும் பிரிவுகள் உள்ளன.  உடன்போக்கையும் ஒரு பிரிவாகக் கூறயவனே! பெண்கள் மடல் ஏறுதல் வழக்கம் இல்லை. அதேசமயம் பெண்கள் தனியாகக் கலம் ஏறி கடல்கடந்தும் செல்வதில்லை என்றுஇலக்கணம் உரைத்தவா! நாங்கள் உள்ளம் மகிழும்படி கண்ணுறங்காயோ! கற்புக்காலத்தில் பரத்தையர்ப்பிரிவால் தலைவி ஊடும்போது பலவகையான வாயில்கள் பல்வேறுமுறையில் தேற்றுவர்கள் என உரைத்தவனே! உலகமக்கள் மகிழும்படித் தாலோ தாலேலோ!

இலக்கணக்குறிப்பு:  
ஓதலும் காவலும்— எண்ணும்மை      

__________________________________________

பாடல்— 4:    
          ஒலியைக் கணக்கிட உரைத்தாய் மாத்திரை
                    ஒருவிர லோடு பெருவிரல் சேர்த்து
          ஓசை செய்தல் ஒருமாத் திரையாம்
                    ஒருவர் இயல்பாய்க் கண்ணிமைத் தலுமாம்
          ஒலிக்கும் மாத்திரை ஒருநான்கு கூறாம்
                    ஒலிக்க மனதால் நினைத்தல் காலாம்
          ஊன்றல் அரையே முறுக்கல் முக்கால்
                    விடுத்தல் ஒன்றென விளம்பினர் தமிழர்
          ஒலிக்கும் எழுத்தைக் குறில்நெடில் ஒற்றென
                    ஒலிக்கும் அலகால் ஒருபெயர் வைத்தவனே!
          ஒன்றே குறிலாம் இரண்டே நெடிலாம்  
                    ஒற்றே அரையென ஓதிய புலவன்நீ
          வலிமெலி இடையென வகுத்தாய் எழுத்தினை
                    வாய்பாட்டில் நீளும் எழுத்தின் இலக்கணம்
          வருமிசை நூலில் காண்க என்றவனே!
                    வல்லோர் மகிழத் தாலோ தாலேலோ         [4]            

இதன் பொருள்:
எழுத்துக்கள் உச்சரிக்க ஆகும் நேரத்தைக் கணக்கிட மாத்திரை என்னும் அலகினை உரைத்தாய்.   சுட்டு விரலோடு பெருவிரலைச் சேர்த்துச் சொடுக்க ஆகும் நேரமே ஒருமாத்திரை நேரமாகும்.  அதைக்கூட நான்கு கூறாக்கி எழுத்தை உச்சரிக்க நினைப்பது கால் மாத்திரை, இருவிரல்களையும் சேர்ப்பது அரை, முறுக்குதல் முக்கால், விடும்போது ஒருமாத்திரை ஆகும் என எடுத்துச் சொன்னவர்கள் நம்தமிழர்கள். ஒலிக்கும நேரத்தை வைத்துக்  குறில்,நெடில், ஒற்று எனப்பெயர் வைத்தவனே!  ஒரு மாத்திரை பெறுவது குறில் என்றும்,இரண்டு மாத்திரை நேரம் ஒலிப்பது நெடில் என்றம், அரைமாத்திரை அளவு ஒலிப்பதை ஒற்று என்றும் வகுத்துக் காட்டிய புலவன் நீயே!  ஒற்று எழுத்தினை வல்லினம், மெல்லினம், இடையினம் என்று வகுத்துக் காட்டினாய்! வாய்ப்பாட்டில் நீண்டு ஒலிக்கும் எழுத்தின் அளவுகளை இசை நூலில் கண்டுகொள்க என்றவனே! வல்லோர் மகிழத்தாலோ தாலேலோ!

இலக்கணக்குறிப்பு:  
ஒரு விரல்,பெருவிரல்— பண்புத்தொகைகள்; நினைத்தல்,ஊன்றல் தொழிற்பெயர்கள். வலிமெலி இடை உம்மைத்தொகை
   
__________________________________________

பாடல்— 5:    
          எல்லா எழுத்தும் பிறக்கும் இடமும்
                    எடுக்கும் முயற்சியும் தொகுத்துச் சொல்லியவா
          எண்ணிய சார்பாய் இருக்கும் மூன்றும்
                    அதனதன் முதலே அடிப்படை என்றவனே!
          எல்லா [102] எழுத்தும் வெளிப்படக் கிளந்து
                    சொல்லிய பள்ளி எழுதரும் என்றவனே!
          அகத்தெழு வழிஇசை அரில்தப நாடி
                    அளபிற் கோடல் அந்தணர் மறையென்றாய்
          எல்லா[103] எழுத்திலும் இருபத்தி ரண்டே
                    சொல்லுக்கு முதலாம் என்று சொல்லியவா!
          இருபத்து நான்கே இறுதியில் வருவதொடு    
                    இடைநிலை மயக்கமும் இயம்பிய காப்பியனே!
          எல்லாப் புணர்ச்சியும் இயையும் போது
                    இடையில்[118] சாரியை வருவதை உரைத்தாயே
          எல்லாம் தொகுத்து தொகைமரபு உரைத்தவா!
                    எல்லாரும் மகிழத் தாலோ தாலேலோ         [5]        

குறிப்பு: 102,103 118 என்பன தொல்காப்பிய நூற்பாக்களைக் குறிக்கும்.

இதன் பொருள்:
முதலெழுத்து, சார்பெழுத்து ஆகிய எல்லா எழுத்துகளும் பிறக்கும் இடமும், ஒலிக்கும் முயற்சியும்    ஆகிய அனைத்தையும் தொகுத்துச் சொல்லியவா! சார்பெழுத்துகள்அதன்அதன் முதல் எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டு வரும் என்றவனே! எல்லா எழுத்துகளும் முன்பு கூறிய பிறப்பிடங்களிலிருந்து பிறக்கும் ஓசை காற்றினால், வெளிப்படக் கேட்குமாறு சொல்லும்போது உள்ளே உறுப்புகளில் தங்கிச் சுழன்று எழும் ஓசைக்காற்றுக்கு அளபு கூறுதல் அந்தணர் இலக்கண நூல்களில் காணப்படும்  என்றவனே!  முப்பத்து மூன்று எழுத்துக்களில்  இருபத்து இரண்டு எழுத்துகள் மொழிக்கு முதலிலும், இருபத்து நான்கு எழுத்துகள் மொழிக்கு இறுதியிலும் வரும் என்று கூறியதோடு மொழிக்கு இடையில் எந்த எந்த  எழுத்துகளோடு எந்த எந்த  எழுத்துகள் சேர்ந்து  வரும் என்று கூறியவா!  எல்லா வகைப் புணர்ச்சியிலும் சாரியைகள் இடையிலும் வருவதை உணர்த்தியவா! இவற்றை எல்லாம் தொகுத்து தொகைமரபு என்னும்  இலக்கணம் உரைத்தவா எல்லோரும் மகிழத் தாலோ தாலேலோ !
   
இலக்கணக்குறிப்பு:  
எழுத்தும்— முற்றும்மை; அகத்தெழு— ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை; தொகை மரபு— இருபெயரொட்டுப் பண்புத்தொகை

__________________________________________

பாடல்— 6:                                  
          எல்லா ஈற்றுக்கும் சாரியை உரைத்து
                    இருவகைப் புணர்ச்சிக்கும் இலக்கணம்  இயம்பியவா!
          இகர இறுதிப் பெயர்நிலை முன்னர்
                    வல்லெழுத்து மிகமென இலக்கணம் வகுத்தவனே!  
          எல்லாப் பருவத்தும் உழைத்தான் என்பதை
                    பனிவளி வெயில்மழை  யுடன்அத்துச் சாரியை
          இயைந்து வருமென எடுத்துக் காட்டியவா  
                    இலக்கணத் தூடே பண்பாடு பகன்றவா!
          எல்லாச் சொல்லிலும் எகரமும் ஒகரமும்
                    ஈற்றலில் வாராது என்று இயம்பியவா!
          எல்லா ஈற்றுக்கும் எடுத்துக் காட்டுடன்
                    இலக்கணம் சொன்னாய்த் தாலோ தாலேலோ                                        
          நல்லது அல்லாச் சொல்லுக்குக் கூட
                    நற்றமிழில் இடக்கர் அடக்கல்  என்றவனே!
          நல்லதல்லா மலத்தைப் ‘பகர ஈ’ என்றவனே!
                    நாங்கள் மகிழ தாலோ தாலேலோ         [6]        

அருஞ்சொற்பொருள்:  
வழி— காற்று; ஊடே— இடையே; பகறல்— கூறுதல்

இதன்பொருள்:
வேற்றுமை, அல்வழி என்னும் இருவகைப் புணர்ச்சிகளிலும் உயிரீறு மெய்யீறு குற்றியலுகர ஈறு என எல்லா வகை ஈறுகளுக்கும் சாரியை கூறியவனே! இகர இறுதி பெயர் சொல்லின்(அப்படி இப்படி எப்படி) முன்னர் வல்லெழுத்து மிகும் என இலக்கணம் வகுத்தவனே! தமிழன் பனி, காற்று, வெயில், மழை என்னும் எல்லாப்பருவ காலத்திலும் உழைத்தான் என்பதை அத்துச் சாரியை கூறும் போது சான்றுகூறியவனே! இவ்வாறு இலக்கணம் கூறும்போது  இடையிடையே தமிழ்ப் பண்பாட்டையும்  கூறியவனே! எந்தச் சொல்லுக்கும் இறுதியில் எகரமும் ஒகரமும் வாரா என்று கூறியவனே! இவ்வாறு எல்லா ஈறுகளுக்கும் இலக்கணம் சொன்னவனே! மலத்தை  ‘பீ’ என்று கூறாமல் இடக்கர் அடக்கலாகப்  ‘பகர ஈ’ என்றவனே! நாங்கள் மகிழத் தாலோ தாலேலோ.

இலக்கணக்குறிப்பு:  
ஈற்றுக்கும் — முற்றும்மை; இருவகை,நற்றமிழ்— பண்புத்தொகைகள்; பனிவழிவெயில் மழை— உம்மைத்தொகை;  இலக்கணம் சொன்னாய்— இரண்டாம் வேற்றுமைத்தொகை

__________________________________________

பாடல்— 7:
          எண்ணல் எடுத்தல் முகத்தல் நீட்டலென
                    எல்லா அளவையும் எடுத்துச் சொன்னவனே!
          எள்ளையும் கொள்ளையும் நெல்லையும் குறித்தே
                    எல்லா நிலத்தார் உணவைக் கூறியவா!  
          கண்ணியும் மாலையும் தாரும் பூத்தானே
                    கழுத்திலும் மார்பிலும் அணிகையில் வேறாமே
          காலம் இடத்திற்கு முன்பின் பொதுவெனக்
                    காட்டிய காப்பியனே தாலோ தாலேலோ
          விண்ணும் [1589] மண்ணும் வளியொடு நெருப்பும்
                    வான்மழை நீரும் கலந்த உலகத்தில்
          பெண்ணும் ஆணும் நீங்கிய அலியை
                    பேடியெனக் கூறியே மரபினைப் போற்றியவா  
          பெண்ணைப் பெற்றோர் கொடுப்பக் கொள்ளாது
                    பாங்கன் பாங்கியைத் தூதாய் விடுத்து
          பெண்ணுடன் போதல் உடன்போக் காமென
                    பேசிய காப்பியா தாலோ தாலேலோ         [7]        

குறிப்பு:  1589  என்பது  தொல்காப்பிய நூற்பாவைக் குறிக்கும்.
           
அருஞ்சொற்பொருள்:
கண்ணி —  தலைமாலை;  தார் — மார்பணிமாலை; வளி — காற்று;  பாங்கன் — தோழன்; பாங்கி — தோழி

இதன்பொருள்:
அளவைப் பெயர்களாகிய எண்ணல், எடுத்தல் (நிறை) நீட்டல், முகத்தல் என்று எல்லா வற்றையும் எடுத்துச் சொன்னவனே! எள்,கொள், நெல் என்ற சொற்களால் ஐவகை நிலமக்களின் உணவுகளைக் குறித்துக் கூறியவா! கண்ணி, மாலை, தார் என்பன யாவையும் பூக்களால் ஆன தொடர்களே, இருப்பினும் தலையில் அணியும்போது கண்ணி என்றும், கழுத்தில் அணியும் போது மாலை என்றும், மார்பில் அணியும்போது தார் என்றும் பெயர்களைப் பெறுகின்றன. இவற்றின் வேறுபாடுகளை எல்லாம் உரைத்தவனே!   இடத்திற்கும்   காலத்திற்கும் முன் பின் என்ற சொற்கள் பொதுவாக வரும் என்று காட்டிய காப்பியனே தாலோ தாலேலோ! வானமும்,நிலமும், காற்றும்   நெருப்பும்  நீரும் கலந்த சேர்க்கையே உலகம் என்றவனே! அவ்வுலகத்தில் ஆண் தன்மையும், பெண்தன்மையும் அற்ற பிறவியைப் பேடி என்று கூறி மரபினைக் காத்தவனே! தலைவியின் பெற்றோர்களால் கொடுக்கப்படாத போது, தோழியையும் தோழனையும் தூதாக விடுத்துப் பெண்ணை    அழைத்துக்கொண்டு செல்லுதலை உடன்போக்கு என்று கூறிய காப்பியனே! தாலோ தாலேலோ.

இலக்கணக்குறிப்பு:  
எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் உம்மைத்தொகைகள்; எள்ளையும், கொள்ளையும் — எண்ணும்மை

__________________________________________

பாடல்—8:    
          ஈருயிர் [140 ]சேர்ந்தால் இடையில் தோன்றும்
                    எழுத்தைக் கூட ‘ய்.வ்’  என்றவனே!
          எழுதும் போது மகரம்  வரும்முறை
                    உட்பெறு புள்ளி உருவாகும் என்றவனே[143]
          ஆரிய மொழியை அண்ட விடாது
                    அன்றே காத்தவனே  அதையும் மீறினால்
          அம்மொழிக்  கிளவி அவ்வெழுத் தொரீஇ
                    எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும் என்றவனே [884]  
          சீரிய புலவர் அவையில் கேட்ட
                    தடைக்கு விடையைத் தகும்படி உரைத்தவனே!
          திருவிற் பாண்டியன் திருமுன் அரங்கேற்றத்
                    தொடங்கிய காப்பியா தாலோ தாலேலோ![பாயிரம்]
          ஊரொடு[1031] தோற்றம் உரித்தென மொழிந்து
                    உலாத்தோன்ற ஒருவித் திட்டவனே!  உன்னை
          ஊரில் உள்ளதேரில் வைத்து இழுப்போம்
                    உள்ளம் மகிழ்ந்து தாலோ தாலேலோ             [8]        

குறிப்பு:  பாயிரம் மற்றும் 140, 143, 884, 1031 என்பன தொல்காப்பிய நூற்பாக்களைக் குறிக்கும்.

அருஞ்சொற்பொருள்:
மகரம் ம் என்னும் மெய்யெழுத்து; கிளவி—சொல்;சீரிய- சிறந்த

இதன்பொருள்:
புணர்ச்சியில் வருமொழி முதலிலும் நிலை மொழி ஈற்றிலும் உயிர் எழுத்துகள் வரும்போது அவற்றை உடன்படுத்த ய், வ் என்னும் எழுத்துகள் தோன்றும் என்றவனே! எழுதும் போது மகரக்குறுக்கத்திற்கு உள்ளே புள்ளி  உருவாகும் என்றவனே! அன்றே ஆரிய மொழியைத் தமிழில் கலக்க விடாது   காத்தவனே! அதையும் மீறிய எழுதவேண்டும் என்ற சூழ்நிலையில் அவ்வெழுத்துகளின் வரிவடிவத்தை நீக்கி தமிழ் ஒலிக்கு ஏற்றாற் போல் மாற்றி எழுதவேண்டும் என்றவனே! சிறந்த புலவர்கள் வீற்றிருக்கும்  நிலந்தரு திருவில் பாண்டியன்  அவையில் புலவர்கள் வினவிய வினாக்களுக்கெல்லாம் விடைகளைக் கூறி நூலினை அரங்கேற்றம் செய்தவனே! சிற்றிலக்கியங்களில் ஒன்றாகிய உலா இலக்கியம் தோன்ற அடிப்படை  இட்டவனே! ஊரில் உள்ள நாங்கள் அனைவரும் ஒருங்குகூடி உள்ளமாகிய தேரில் வைத்து இழுப்போம். ஆகவே உள்ளம் மகிழ்ந்து தாலோ தாலேலோ.
 
இலக்கணக்குறிப்பு:
ஒரீஇ – சொல்லிசை அளபெடை        
   
__________________________________________

பாடல்—9:        
          ஒன்பதின் மீதுனக்கு நாட்டம் உள்ளதால்
                    ஓரதி காரத்தை ஒன்பதியல் ஆக்கினையோ
          ஓராயிரத் தறுநூற்று பதினொரு நூற்பா
                    உரைத்தாய் என்றே ஒத்துக் கொண்டோமே
          ஒன்பதி னோடு ஒருநூறு ஆயிரம் [463]
                    ஒட்டி வருவதை உரைத்தாய் இலக்கணத்தால்
          தொண்ணூறு தொள்ளா யிரமாகும் முறையைத்
                    துளைந்து உரைத்த தொல்காப் பியனே
          நன்றாய் சோற்றை ஆக்கல் போல
                    நவின்றாய் இலக்கணம் கிளவி ஆக்கத்தில்
          நம்தமிழ் வாழ நல்லரண் அமைத்த
                    நற்றமிழ்ப் புலவா தாலோ தாலேலோ
          உந்தன் நூலை நூலெனத் தொடங்கி
                    நூலென முடித்த நுனித்தகு புலவோனே
          உனக்கீடாய் இனியொரு நூலை படைக்க
                    உள்ளா ரிலையே தாலோ தாலேலோ             [9]    

குறிப்பு:  463  என்பது  தொல்காப்பிய நூற்பாவைக் குறிக்கும்.

அருஞ்சொற்பொருள்:
துளைந்து—ஆய்ந்து

இதன்பொருள்:
ஒன்பதின் மீது உனக்கு அளவிலா நாட்டம் இருப்பதால்தான் என்னவோ ஒவ்வொரு அதிகாரத்தையும் ஒன்பது ஒன்பது இயல்களாகப் பகுத்துள்ளாய் அதனால் நூற்பாக்களின் எண்ணிக்கையும் 1611  ஆக உள்ளதோ? மேலும் புணர்ச்சியில் ஒன்பது என்ற எண்ணை மட்டும் சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளாய். தொண்ணூறு தொள்ளாயிரம் தோன்றும் முறைகளை ஆயந்து  கூறிய  தொல்காப்பியனே! குருணை, கல், கறுப்பு அரிசி இவற்றை எல்லாம் களைந்து உணவு சமைப்பதைச்  சோறு ஆக்கல் என்பர். அதை மனத்தில் கொண்டே சொல் அதிகாரத்தின்  முதல்  இயலைக் கிளவி ஆக்கம் என்று பெயர் வைத்தவனே! நம் தமிழ் மொழியின் காப்பரண் ஆக தொல்காப்பியம் தந்த புலவா!  தாலோ தாலேலோ. உன்றன் நூலை நூல் மரபு என நூலில் தொடங்கி,  புலவர் கூறிய நூலே என நூலில் முடித்த  கூர்த்த அறிவுள்ளவனே தாலோ தாலேலோ!

இலக்கணக்குறிப்பு:
நம் தமிழ்—ஆறாம் வேற்றுமைத்தொகை; நல்லரண்—பண்புத்தொகை; உன்றன் என்பது உந்தன் என எதுகைக்காக எழுத்தப்பட்டது. இலை—இல்லை என்பதன் இடைக்குறை
9 இன் சிறப்பு — விளக்கம்:  
9உடன் எந்த எண்ணைப் பெருக்கினாலும்  'விடையின் கூட்டுத்தொகை 9ஆகவே வரும்'
சான்று:  9x9  =81 → 8+1= 9;  8x9  =72 → 7+ 2 = 9

9 உடன் எந்த எண்ணை கூட்டினாலும்  'விடையின் கூட்டுத்தொகை கூட்டப்பட்ட எண்ணாக இருக்கும்'
சான்று:   9+ 9  =18→1+8= 9;   9+ 7  =16 →   1+6= 7

அதனால்தான் சிறப்பு தலைமை எனும் பொருள்தரும் ஓரெழுத்து ஒரு மொழியாகிய ஐ யை ஒன்பதாவது எழுத்தாகத் தமிழ் நெடுங்கணக்கில் வைத்துள்ளனர். இக்காரணத்தினாலேயே அய் என எழுதக்கூடாது என்கிறோம். அக்காரணம் பற்றியே தொல்காப்பியர் ஒவ்வொரு அதிகாரத்தையும் ஒன்பது ஒன்பது இயல்களாகப் பிரித்துள்ளார்.

திருமூலரும்  இவ்வாறே திருமந்திரத்தை  ஒன்பது உட்பிரிவுகளைக் கொண்டதாகச்செய்துள்ளார்.
ஒவ்வொரு பிரிவும் ஒரு ‘தந்திரம்’ எனக் குறிக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்பது தந்திரங்களும், ஆகமங்கள் ஒன்பதின் சாரமாக அமைந்துள்ளன. அந்த எண்ணில் நீண்ட வாழ்வு எனும் அர்த்தம் பொதிந்திருப்பதாகச் சொல்கின்றனர், சீனர்களின் சொர்க்க கோபுரம், ஒன்பது வளையங்களால் சூழப்பட்டுள்ளது.   எகிப்து, ஐரோப்பா, கிரீக் முதலான நாடுகளும் 9-ஆம் எண்ணை விசேஷமாகப் பயன்படுத்திப் போற்றுகின்றன.  புத்த மதத்தில், மிக முக்கியமான சடங்குகள் யாவும் ஒன்பது துறவிகளைக் கொண்டே நடைபெறும்.   தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் சுத்தத்தை 999 என்று  மதிப்பிடுவார்கள்.    பெண்களின் கர்ப்பம், பூரணமாவது ஒன்பதாம் மாத நிறைவில்தான்!
ஒன்பது என்ற எண்ணுக்கு வடமொழியில் நவம் என்று பெயர்.  நவ என்ற சொல் புதிய, புதுமை எனும் பொருள் உடையது.        
(5-27-20222)    
__________________________________________

பாடல்—10:
          களவல ராயினும்[1061] காமத்துப் படினும்
                    கண்ட ஊரார் காதொடு பேசினும்
          கட்டினும் கழங்கினும் வெறியாட்டு அயர்தலும்
                    செவிலிக் கூற்று நிகழும் என்றவனே!
          களவில்  பழகிய காதலர் இருவர்
                    காவிலும் பூம்பொழில் சோலையில் சேர்ந்தே
          கனவில் மிதந்தது போதுமென்றே கற்புக்காக
                    கடிமணம் புரிவர் என்று சொன்னவனே!
          அளவிற்கும்[170] நிறையிற்கும் மொழிமுத லாகி
                    உளவெனப் பட்ட ஒன்பதிற் றெழுத்தென
          அகரவுகரம் கசதப நமவ என்றவனே!
                    அனைத்தும் அடக்கி இலக்கியம் சொன்னவனே
          உளமகிழ்ந் துன்னைப் போற்றினோம் ஐயனே
                    உவந்து நீயும் தாலோ தாலேலோ
          ஒருபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்கா
                    பெற்றதால் உன்னை தாலோ தாலேலோ             [10]        
           
குறிப்பு:  170,  1061 என்பன   தொல்காப்பிய நூற்பாவைக் குறிக்கும்.

அருஞ்சொற்பொருள்:
அலர்— ஊரார் தூற்றிப் பேசல்; கட்டு—கட்டாக உள்ள ஓலைச்சுவடி பார்த்துக்கூறல்; கழங்கினும்— கழற்சிக்காயின் எண்ணிக்கையை வைத்துக் கூறல்;  வெறியாட்டு— வேலன் மீது வந்து கூறல்; கா—பூங்கா; கடி மணம்—திருமணம்

இதன்பொருள்:
தலைவனும் தலைவியும்  பழகுவதை ஊரார் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் போதும், காமம் மிகுதியால் தலைவியின் உடலில் தோன்றும் நிறவேறு பாட்டின் போதும், ஊர் மக்கள் தங்களுக்குள் கமுக்கமாகப் பேசிக் கொள்ளும் போதும்,    ஓலைக்கட்டு,கழற்சிக்காய்,இவற்றின மூலமும் வேலன் வந்து ஆடிச் சொல்லும் போதும் செவிலி கூற்று நிகழும் என்றவனே! காதலர் இருவரும் பூங்காவிலும், சோலையிலும் சேர்ந்து சுற்றி மகிழ்ச்சியாக இருந்தது  போதும் என்று திருமணம் செய்து கொள்ளுவர் என்று கூறியவனே! அளவைகளாகிய எண்ணுதல் முகத்தல் நீட்டல் மற்றும் நிறுத்தல் முதலிய அளவுப் பெயர்கள் மொழிக்கு முதலாக வரும் போது வரக்கூடிய எழுத்துகளை அ, உ, க,ச,த,ப,ந,ம,வ என்னும் ஒன்பது எழுத்துகளும் வரும் என்றவனே! இவற்றையெல்லாம் உள்ளடக்கி தமது நூலை இலக்கியம் போல் கூறியவனே!  எங்கள் உள்ளம் மகிழ்ந்து போற்றினோம் தலைவா நீயும் உள்ளம் மகிழ்ந்து நாவை அசைத்துப் பாடுவாயாக!எந்தப் பிறவியிலும் எங்களை தீயவை தீண்டாமல் இருப்போம். ஏனெனிலே பழிசேராத உன்னை நாங்கள் மகவாகப் பெற்றுள்ளோம். தாலோ தாலேலோ

இலக்கணக்குறிப்பு:
கட்டினும் கழங்கினும் எண்ணும்மை; பூம்பொழில்- இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத்தொகை; தீண்டா — ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்                        
   
__________________________________________
தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ.காளியப்பன்
அலைபேசி:  9788552993