Saturday, August 18, 2018

தரங்கம்பாடி - சீகன்பால்கும் ஜெர்மானிய தொடர்புகளும்

  முனைவர்.க.சுபாஷிணி





ஜெர்மனியில் மார்ட்டின் லூதரால் 16ம் நூற்றாண்டு உருவாகி வளர்ந்த லூதரன் அல்லது சீர்திருத்த கிருத்தவ சமயம், இந்தியாவில் முதலில் தன் தடம் பதித்தது தரங்கம்பாடியில். தரங்கம்பாடி தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதியில் சில நூற்றாண்டுகள் வரை உலகமெங்கும் பிரசித்திபெற்ற ஒரு கடற்கரை நகரமாக விளங்கியது. டேனீஷ் ஈஸ்ட் இந்தியா வர்த்தக நிறுவனத்தைத் தொடக்கி, தரங்கம்பாடியைத் தமது வர்த்தக அமைப்பிற்குத் தளமாக அமைத்த பின்னர், டென்மார்க்கின் பேரரசர் நான்காம் ஃப்ரெடெரிக் தமிழகத்தில் சமயப் பணிக்காக சீர்திருத்த மறைபரப்பும் பணியார்களை அனுப்பி வைத்தார். ஜெர்மனியின் கிழக்குப் பகுதி நகரான ஹாலே நகரில் இயங்கிக் கொண்டிருந்த ஹாலே கல்விக்கூடத்தின் தலைமைப்பீடத்தில் இருந்த பேராசிரியர் ஃப்ரான்ங்கெ தனது மாணவர்கள் இருவரை இப்பணிக்காக அனுப்பி வைக்க எடுத்த முடிவுதான் தரங்கம்பாடி லூதரன் திருச்சபை உருவாகிய நிகழ்வுக்கு வித்தாக அமைந்தது. 

லூதரன் திருச்சபையை முதன் முதலில் ஆசியாவில், அதாவது இந்தியாவின் தமிழகத்துத் தரங்கம்பாடியில் அமைத்தவர் பார்த்தலோமஸ் சீகன்பால்க் ஆவார். ஜெருசலம் இலவசப் பள்ளிக்கூடத்தினைத் தொடக்கியவர்; தரங்கம்பாடியில் 1712ம் ஆண்டு அச்சகத்தை நிறுவியவர்; தமிழ் மொழியைக் கடமைப்பாட்டுடன் கற்றுத் தமிழ் இலக்கண நூற்களை லத்தீன், ஜெர்மானிய மொழிகளில் எழுதியவர்; தமிழ் மொழியின் சிறப்பினையும் தமிழக மக்களின் இலக்கிய இலக்கண மேன்மையும், வாழ்வியல் கூறுகளையும் ஐரோப்பாவில் விரிவாக அளித்தவர் என்ற பெருமைக்குரியவர் இவர். 

தரங்கம்பாடியின் கடற்கரைப் பகுதியில் அமைந்திருக்கின்றது டேனீஷ் கோட்டை. ஏறக்குறைய 400 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டது டென்ஸ்போர்க் கோட்டை என்றழைக்கப்படும் இக்கோட்டை. இக்கோட்டைக்குள் இன்று தமிழக தொல்லியல் துறையின் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த அருங்காட்சியகத்தில் தமிழகத்தில் டேனிஷ் ஈஸ்ட் இந்தியா நிறுவனம் செயல்பட்ட வரலாற்றுச் செய்திகளோடு இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட புராதனச் சின்னங்களும் பாதுகாக்கப்படுகின்றன. 

1616ம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் தேதி டென்மார்க்கின் பேரரசர் நான்காம் கிறிஸ்டியன், டேனிஷ் ஈஸ்ட் இந்தியா நிறுவனத்துக்கு, தன் நாட்டை பிரதிநிதித்து ஆசியாவில் பன்னிரண்டு ஆண்டுகள் வர்த்தகம் செய்யும் உரிமையை வழங்கினார். 

1620ம் ஆண்டு அக்டோபர் மாதம் தஞ்சை நாயக்க மன்னரின் அரசவைக்கு வந்து மன்னரைச் சந்தித்து, டென்மார்க் மன்னரின் வர்த்தகம் தொடர்பான விருப்பத்தைத் தெரிவித்து, வர்த்தக புரிந்துணர்வு உடன்படிக்கைத் தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினார் டென்மார்க் மன்னரின் பிரதிநிதியாகிய ஒவே ஜேட். இந்தப் பேச்சு வார்த்தைகள் இரு நாடுகளுக்குமிடையே வணிக ரீதியிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாகும் வாய்ப்பை உருவாக்கியது. நாயக்க மன்னர் தரங்கம்பாடியில் டேனீஷ் அரச பிரதிநிதிகள் வந்து தங்கவும், வர்த்தகத்தைத் தொடங்கவும், அங்குக் கோட்டை கட்டிக் கொள்ளவும் அனுமதி அளிக்கும் வகையில் பட்டயம் ஒன்று கையெழுத்திடப்பட்டது . இதன் அடிப்படையில் இக்கோட்டை இங்கு அமைக்கப்பட்டது 

1622ம் ஆண்டு வாக்கில் தரங்கம்பாடியில் டேனீஷ் வர்த்தகத்தைச் செயல்படுத்தும் முழுப் பொறுப்பையும் ரோலான்ச் க்ரெப் எடுத்துக் கொள்ள, ஓவே ஜேட் டென்மார்க் திரும்பினார். தரங்கம்பாடியில் டேனீஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனியைத் தொடங்கிய பின்னரும் கூட, டேனீசாருக்குத் தமிழகத்தில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வது ஆரம்பகாலகட்டத்தில் சிரமமான பணியாகவே அமைந்தது. 

வர்த்தக முயற்சிகள் தொடங்கிய பின்னர் போர்த்துக்கீசியர்களும் அரேபியர்களும் அளித்த கடும்போட்டிகளையும் பல இடையூறுகளையும் சமாளித்தே தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது டேனீஷ் ஈஸ்ட் இந்தியா நிறுவனம். இது ஒரு அரிய முயற்சிதான் எனினும் கூட, ஆங்கிலேயர்களின் ஈஸ்ட் இந்தியா நிறுவனம் அடைந்த வெற்றியைப் போன்ற வெற்றியினை இந்த வர்த்தக நிறுவனம் பெறவில்லை. 

டேனீஷ் ஈஸ்ட் இந்தியா நிறுவனம் முப்பத்து நான்கு ஆண்டுகள் மட்டுமே இயங்கியது. இந்த முப்பத்து நான்கு ஆண்டு காலகட்டத்தில் ஏழு முறை மட்டுமே ஆசிய நாடுகளிலிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு டென்மார்க்கின் கோப்பன்ஹாகன் வந்தன டேனீஷ் கப்பல்கள் . ஆக, ஒரு வெற்றிகரமான வர்த்தக வாய்ப்பினை இந்த டேனீஷ் வர்த்தக முயற்சி அளிக்கவில்லை. ஆயினும் ஜெர்மனியிலிருந்து வந்தடைந்த மறைபரப்பும் பணியாளர்களின் வரவும் அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த சமூக மாற்றங்களும் குறிப்பிடத்தக்க சமூக, வரலாற்று மாற்றங்களைத் தரங்கம்பாடி மட்டுமன்றி தமிழகத்தின் திருநெல்வேலி, கடலூர், மதராசப்பட்டினம் போன்ற பகுதிகளில் ஏற்படுத்தியது. ஜெர்மனியில் இதன் தொடர்ச்சியாக 18ம் நூற்றாண்டில் ஹாலே கல்விக்கூடத்தில் தமிழ்மொழி ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு நிலைகளில் தமிழ் மொழி போதிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வும் குறிப்பிடத்தக்கது. 

தரங்கம்பாடி சங்ககாலத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாக திகழ்ந்துள்ளது. தரங்கம்பாடிக்கு அருகில் உள்ள பொறையாறு குறித்த செய்திகள் அகநானூற்றுப் பாடல்களிலும்(100:11-12) ) நற்றிணையிலும் (131:6-8) இடம்பெறுகின்றன. 

இங்கு டேனீஷ் கோட்டைக்கு இடப்புறமுள்ள மாசிலாமணீஸ்வரர் கோயில் ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்ததொரு கோயிலாகும். இது இன்று வழிபாடுகள் இன்றி பராமரிப்பின்றி காணப்படுகின்றது. கடற்கரையை நோக்கியவாறு மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டது இக்கோயில். இக்கோயிலில் பாண்டிய மன்னன் குலசேகரப் பாண்டியனின் முப்பத்தேழாவது ஆட்சியாண்டில் (கி.பி.1305)ல் செதுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று உள்ளது. ‘சடங்கன்பாடியான குலசேகரன் பட்டினத்து உடையார் மணி வண்ணீகரமுடையார்க்கு’ என்று இக்கல்வெட்டு கூறுகின்றது.

இக்கல்வெட்டின் அடிப்படையில் இன்று தரங்கம்பாடி என நாம் அறியும் இவ்வூர் அன்று சடங்கன்பாடி என அழைக்கப்பட்டதாக அறிய முடிகின்றது இந்த ஊரை குலசேகரப்பாண்டிய மன்னன் தன் பெயரோடு தொடர்பு படுத்தி குலசேகரப்பட்டீனம் என்று பெயர் மாற்றம் செய்த செய்தியும் இக்கல்வெட்டில்னால் அறிய முடிகின்றது. 

அதே போல தஞ்சை நாயக்கமன்னன் அச்சுதநாயக்கரின் முற்றுப் பெறா ஒரு கல்வெட்டும் இவ்வூரை ”சடங்கன்பாடி” எனக்குறிப்பிடுகின்றது. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை தரங்கம்பாடி “சடங்கன்பாடி” என அழைக்கப்பட்டு வந்தமை இக்கல்வெட்டின் வழி அறியப்படுகின்றது. இதே கோயிலில் உள்ள மற்றுமொரு கல்வெட்டு, ‘இதுக்கு தாழ்வு சொன்னார் உண்டாகில் பதினெண் விஷயத்துக்கும் கரையார்க்கும் துரோகியாகக் கடவர்களாகவும்” என்று குறிப்பிடுகின்றது. “பதினெண் விஷயம்” என்பது வணிகக் குழுவைக் குறிக்கும் என்று ஆ.சிவசுப்பிரமணியன் தனது ‘தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி’ என்ற நூலில் குறிப்பிடுகின்றார். இக்கோயிலுக்கு வணிகர்கள் கொடைகள் தந்து பாதுகாத்த செய்தியும் கல்வெட்டுக்களினால் அறியமுடிகின்றது. 

பராமரிப்பின்றி இன்று காணப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயில் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு புராதனச் சின்னமாகும். 

தமிழக கடற்கரை நகரங்களில் தரங்கம்பாடி முக்கியத்துவம் பெறும் ஒரு நகரமாகும். அதுமட்டுமன்றி ஐரோப்பாவில் அதிலும் குறிப்பாக டென்மார்க், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் சீர்திருத்தக் கிறித்துவத்தோடு தொடர்பு கொண்ட ஒரு நகரமாகவும் இது முக்கியத்துவம் பெறுகின்றது. 


துணை நூல்கள்
  • ஆ.சிவசுப்பிரமணியன், தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி, 2015 
  • Daniel Jeyaraj, Bartholomäus Ziegenbalg, the Father of Modern Protestant Mission: An Indian Assessment (Chennai 2006)
  • History of the Tranqubar Mission, J.Ferd. Fenger (Tranquebar 1863)

தக்கோலப்போர்

— து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.


போர்ப்பின்னணி:
          முதலாம் பராந்தகன், பிற்காலச் சோழப் பேரரசை நிறுவிய விசயாலயனின் பேரன்; முதலாம் ஆதித்தனின் மகன். பராந்தகனின் ஆட்சிக்காலம் கி.பி. 907-955. ஆதித்தனையடுத்துச் சோழப்பேரரசின் எல்லையை விரிவாக்கிய பராந்தகனுக்குப் பகைச் சூழல்கள் மிகுந்தன. இராட்டிரகூடர்கள், கீழைச் சாளுக்கியர்கள், வாணர், வைதும்பர் எனப் பல்வேறு பகையரசர்கள்.  இந்நிலையில், மேலைக்கங்கரும் ஆநிரை கவர்தலில் ஈடுபட்டுத் தொல்லை தரத்தொடங்கினர். வரலாற்றுப் பேராசிரியர் கே.கே.பிள்ளையவர்கள் தம்முடைய “தமிழக வரலாறு - மக்களும் பண்பாடும்”  என்னும் நூலில் கீழ்வருமாறு எழுதுகிறார்:

          “வட ஆர்க்காடு மாவட்டத்தில் நிகழ்ந்த கங்க மன்னனின் பசுக் கவரும் படையெடுப்பு ஒன்றின்போது சோழ மறவன் ஒருவன் அவனை எதிர்த்துப் போராடிப் போர்க்களத்தில் புண்பட்டிருந்தான். அவனுடைய தொண்டின் சிறப்பையும், வீரத்தையும் பாராட்டிய பராந்தகன் அவனுக்கு வீரக்கல் ஒன்று எடுப்பித்தான். சோழ நாட்டின்மேல் சுழன்று, புரண்டு வீசத் தொடங்கிய   பகைப்புயலைப் பராந்தகன் நன்கு அறிந்துகொண்டு முன்னராகவே தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலானான். திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூரில் அவன் தன் மூத்த மகன் இராசாதித்தனை ஒரு பெரும் படையின் தலைமையில் நிலைப்படுத்தியிருந்தான்.  அப்படையில் யானையணிகளும், குதிரையணிகளும் அடங்கியிருந்தன. பகைப்படைகள்  இராசாதித்தனைத் தக்கோலம் என்னும் இடத்தில் எதிர்த்து நின்றன.  அங்குப் பெரும் போர்  விளைந்தது (கி.பி. 949).”

தக்கோலம்:
          தக்கோலம், அரக்கோணத்துக்கருகில் அமைந்துள்ள ஓர் ஊர். இவ்வூருக்குத் திருவூறல் என்னும் பழம்பெயர் ஒன்றுண்டு. இங்குள்ள கங்காதீசுவரர் கோயிலில் உள்ள நந்திச் சிற்பத்தின் வாய்ப்பகுதியினின்றும் எப்போதும் நீர் வடிந்துகொண்டிருப்பதன் காரணமாக இவ்வூருக்குத் திருவூறல் என்னும் பெயர் அமைந்தது என்பர்.

போரும் இராசாதித்தனும்:
          தக்கோலத்துப் போர் மிகக் கடுமையாக நிகழ்ந்தது என்று குறிப்பிடப்படுகிறது. இராட்டிரகூட மன்னன் மூன்றாம் கிருட்டிணன் (இவன் கன்னரதேவன் என்றும் அழைக்கப்பெறுகிறான்), கங்க அரசன் இரண்டாம் பூதுகன், வைதும்ப அரசன் ஆகியோர் ஒன்றாய் இணைந்து இராசாதித்தனை எதிர்க்கின்றனர். இருபுறமும் நூற்றுக்கணக்கான யானைகளும், ஆயிரக் கணக்கான குதிரைகளும் போரில் ஈடுபடுத்தப்பட்டன.  போர் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, யானை மேல் அமர்ந்து போரிட்டுக்கொண்டிருந்த இராசாதித்தன் கொல்லப்படுகிறான். இந்நிகழ்ச்சியை, பேராசிரியர் கே.கே. பிள்ளை,  ”இராஷ்டிரகூடப் படைத்தலைவர்களுள் பூதுகன் என்பான் ஒருவன் இராசாதித்தன் அமர்ந்திருந்த யானையின்மேல் துள்ளியேறி இராசாத்திதனைக் கத்தியால் குத்திக்கொன்றான். போரின் முடிவில் வெற்றிவாகை இராஷ்டிரகூடனுக்குக் கிடைத்தது. அவனும், தன் படைத்தலைவனான பூதுகன் தனக்காற்றிய அரிய தொண்டுக்காகவும் அவன் துணிவைப் பாராட்டியும் அவனுக்கு வனவாசி - 12000, வெள்வோணம் – 300 ஆகிய நாடுகளை வழங்கித் தன் நன்றியைத் தெரிவித்துக்கொண்டான்”   என்று குறிப்பிடுகிறார்.

பூதுகன் யார்?
          இந்தப் பூதுகன் யார் என்று சற்றுத் தேடுதல் பணி மேற்கொண்டதில், கூடுதலாகச் சில செய்திகள் தெரியவந்தன. விக்கிப்பீடியா இவனை மேலைக் கங்க அரசன் இரண்டாம் பூதுகன் என்று குறிப்பிடுகிறது. இவன் இராட்டிரகூட மன்னன் அமோகவர்சனின் உதவியோடு, அரசபதவியிலிருந்த தன் அண்ணன் மூன்றாம் இராச்சமல்லனை ஆட்சியிலிருந்து இறக்கிவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டான் என்றும், தக்கோலப் போரில் இராட்டிரகூடனுக்குப் படை உதவி அளித்துப் போரில் நஞ்சு தோய்ந்த அம்புகொண்டு இராசாத்திதனைக் கொன்றான் என்றும்  விக்கிப்பீடியா குறிப்பிடுகிறது. இராசாதித்தன் அமர்ந்து போரிட்ட யானை மீதே பாய்ந்து ஏறிக் கத்திகொண்டு அவனைக்கொன்றான் என்னும் பேராசிரியர் கே.கே. பிள்ளையவர்களின் கூற்றுக்கு இது முரணாக அமைகிறது.

கருநாடகக் கன்னடக்கல்வெட்டு:
          கருநாடகக் கல்வெட்டுகளின் தொகுதிகள் (தமிழ்க் கல்வெட்டுகள் அடங்கியவை)  சிலவற்றை அவ்வப்போது படிப்பதுண்டு. அவற்றில் ஏழாம் தொகுதியில் (EPIGRAPHIA CARNATICA-Vol 7), மண்டியா மாவட்டத்து மத்தூர் வட்டத்தில் இருக்கும் ஆதக்கூர் என்னும் ஊரில் உள்ள ஒரு கன்னடக் கல்வெட்டு, மேற்குறித்த  தக்கோலப் போரினைப்பற்றிக் கூறுகிறது. இக்கல்வெட்டு, ஆதக்கூரில் இருக்கும் சல்லேசுவரர் கோவிலின் முன்புறம் உள்ள ஒரு தனிக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் காலம் சக ஆண்டு 872. இந்தச் சக ஆண்டுக்கிசைந்த ஆங்கில ஆண்டு கி.பி. 949-950 –ஆகும்.

          தற்போது, இக்கல்வெட்டு பெங்களூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டுச் செய்தி:
          இரண்டாம் பூதுகன் என்பான், இராச்சமல்லனைக் கொன்று கங்க நாடு - 96000 என்னும் பகுதியை ஆண்ட கங்க அரசன் ஆவான். இவன், இராட்டிரகூட மன்னன் கன்னரதேவன் சோழர் மீது போர் தொடுத்தபோது, இராசாதித்தன் அமர்ந்து போரிட்ட யானையின் அம்பாரியிலேயே  ஏறி இராசாதித்தனுடன் போரிட்டுக் கொன்றான் என்று இக்கல்வெட்டு கூறுகிறது. கன்னரதேவனைப் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு, அவனை இராட்டிரகூட அரசன் கன்னரதேவன் என்றும், கச்சக கிருஷ்ணராஜா என்னும் பெயரும் அவனுக்கிருந்தது என்றும், அவன் தக்கோலப்போரில் மூவடிச் சோழனை வென்று வெற்றி வலம் வந்தவன் என்றும் குறிப்பிடுகிறது. பூதுகனைப் பற்றிக் கூறும்போது, கல்வெட்டு, கங்கன் பெர்மானடி பூதுகன்  என்று குறிப்பிடுகிறது. இராசாதித்தனைக் கொலை செய்ததைப் பாராட்டிக் கன்னரதேவன், பூதுகனுக்கு பனவாசி-12000 (BANAVASI), பெ-ளவொல-300 (BELVOLA) , கிசுக்காடு-70 (KISUKAADU), பாகிநாடு-70 (BAGI-NAD) ஆகிய நாட்டுப்பகுதிகளைக் கொடையாக அளித்தான். பூதுகன் நேரடியாக இராசாதித்தனை எதிர்த்துப் போரிடும்போது அவன் முன்பு நின்று வீரத்துடன் போரிட்ட பூதுகனின் அணுக்கப் பணியாளனாகிய (அங்ககாரன்) மணலெரா என்பவனை மெச்சி அவனுக்குப் (மணலெராவுக்கு) பூதுகன் ஆதக்கூர்-12 , பெ-ளவொல பகுதியில் இருக்கும் காடியூர் ஆகிய பகுதிகளைக் கொடையாக அளித்தான்.  தமிழகத்தில் இருக்கும் கன்னரதேவனின் கல்வெட்டுகள் அவனைக் “கச்சியும் தஞ்சையும் கொண்ட”  என்னும் அடைமொழித் தொடரால் குறிக்கின்றன. ஆனால், ஆதக்கூர் கல்வெட்டு, “கச்சக”  என்று குறிப்பதால், கி.பி.949-50-இல் தக்கோலத்தில் சோழரை முறியடிக்கும் வரை, அவன் கச்சி என்னும் காஞ்சியை மட்டும் வென்றான் எனக்கொள்ளுதல் தகும். எனவே, கன்னர தேவன் பற்றிய தமிழகக் கல்வெட்டுகள் கி.பி.949-50-ஆம் ஆண்டுக்குப் பின்னரே “தஞ்சையும்கொண்ட” என்பதைச் சேர்த்து எழுதப்பட்டிருக்கவேண்டும். கன்னடச் சொல் “கச்சக” என்பது “காஞ்சிகொண்ட”  என்பதன் திரிபு (குறுகிய வடிவம்) எனக் கல்வெட்டுத்தொகுதியின் பதிப்பாசிரியர் கருதுகிறார்.

கட்டுரை ஆசிரியர் கருத்து:
          கங்கநாடு-96000, பனவாசி-12000 ஆகியவற்றில் உள்ள எண்கள் குறிப்பிடுவது எதை என்னும் ஐயம் எழுவது இயல்பு. பலவாறான கருத்துகள் உள்ளன.  கருநாடகக் கல்வெட்டுகளில், கங்கநாட்டைப் பற்றிய  குறிப்புகளில் கங்கநாடு-32000 என்றும், கங்கநாடு-96000 என்றும் இரண்டு குறிப்புகள் காணப்படுகின்றன. சில இடங்களில் கங்கநாடு-96000 கொங்குப் பகுதியையும் சேர்த்து என்று பதிப்பாசிரியரின் குறிப்புள்ளது. கொங்குப்பகுதி கங்கநாட்டில் சேர்க்கப்படுவதற்கு முன்பு 32000 என்றும், கொங்குப்பகுதி சேர்க்கப்பட்ட பின்னர் 96000 என்றும் குறிக்கப்படுவதால், இந்த எண்ணிக்கைப் பெயர், நாட்டின் ஆட்சிப்பரப்பைக் குறிப்பது கண்கூடு. கொங்குப்பகுதியின் பரப்பு 64000 என்பது பெறப்படுகிறது. இந்த எண்ணிக்கைப் பெயர்கள் ஊர்களைக் குறித்தன எனில், கொங்கில் 64000 ஊர்கள் இருந்தன என்று பொருள் கொள்ளவேண்டியுள்ளது. அவ்வாறு 64000 ஊர்கள் இருக்க வாய்ப்பில்லை எனத் தோன்றுகிறது. கால்நடை வளர்ப்புச் சமுதாய நிலையை அடுத்து, நிலத்தை மையமாகக் கொண்ட மன்னர் ஆட்சி நிலை ஏற்பட்டபின்னர், நிலவுடைமை என்பது முதன்மை இடத்தைப் பெற்றது. நிலம் பற்றியே போர்களும் நிகழ்ந்தன. நிலமும் நிலவருவாயுமே அரசர்களின் மேம்பாட்டை நிலை நிறுத்தின. எனவே, மேற்குறித்த எண்ணிக்கைப் பெயர்கள் நில வருவாயை அடிப்படையாய்க் கொண்ட வருவாய்ப் பிரிவுகள் அல்லது நிலப்பரப்பைக் குறித்தன எனக் கருதலாம். கங்கநாடு-32000 என்பது, கொங்கு நாடு இணைந்ததும் கங்கநாடு-96000 என மாறியது இக்கருத்தை வலியுறுத்துகிறது.

கல்வெட்டு கூறும் கூடுதல் செய்திகள்:
          பூதுகனின் அணுக்கப்பணியில் இருந்த மணலெரா, சகர குடிவழியினன்; வளபீ புரவரேசுவர(ன்) என்னும் பட்டப்பெயர் கொண்டவன். அவன், பூதுகனிடம் ஒரு வேண்டுகோள் வைக்கின்றான். போரில் அவன் காட்டிய வீரத்துக்கு அடையாளமாக இவ்வேண்டுகோள் வைக்கப்படுகிறது. காளி என்னும் பெயருடைய நாய்தான் அந்த வேண்டுகோள் மூலமாகக் கேட்கப்பட்ட பரிசு. பூதுகன் அதை ஏற்றுக் காளி என்னும் நாயைப் பரிசாக அளிக்கிறான். களலெ நாடு (களலை நாடு) என்னும் நாட்டுப்பிரிவைச் சேர்ந்த பெ-ளத்தூரை ஒட்டியுள்ள ஒரு குன்றுப்பகுதியில், காட்டுப்பன்றி ஒன்றுடன் போட்டியாக மோதுவதற்கு காளி என்னும் அந்த நாய் ஏவப்பட்டது. கடுமையாகச் சண்டையிட்டு, இரண்டுமே ஒன்றையொன்று கொன்று உயிர் துறந்தன. இந்த நிகழ்ச்சியின் நினைவாக நடுகல் ஒன்று சல்லேசுவரர் கோவில் முன்பு எழுப்பப்பட்டது. அந்த நடுகல்லே மேற்குறித்த கல்வெட்டாகும்.  நடுகல் வழிபாட்டுக்காக நிலக்கொடையும் அளிக்கப்பட்டது. நாய், பன்றியுடன் சண்டையிடும் காட்சி புடைப்புச் சிற்பமாக அந்த நடுகல்லில் வடிக்கப்பட்டு, அதன் கீழே கல்வெட்டு பொறிக்கப்பட்டது. கல்வெட்டின் இந்தப்பகுதியில், மேற்சொன்ன வேண்டுகோள், நாய்-பன்றிச் சண்டை பற்றிப் பொறிக்கப்பட்டது. சிற்பப் பகுதிக்கு மேற்புறத்திலும், கல்லின் பக்கவாட்டுப் பகுதியிலும், பூதுகன் ராச்சமல்லனைக் கொன்றது, கன்னர தேவன் சோழனை எதிர்த்துப் போரிட்டது, இராசாதித்தனைப் பூதுகன் கொன்றது, கன்னர தேவன் பூதுகனுக்குக் கொடை அளித்தது ஆகிய செய்திகள் பொறிக்கப்பட்டுள்ளன.


ஆதக்கூர்-கன்னடக்கல்வெட்டு


கல்வெட்டின் பாடம்:
1     ஸ்வஸ்தி சக நிருப காலாதீத ஸம்வத்ஸர ஸதங்கள் எண்ட்டுநூறு எற்பத்தெரடனெய சோம்யம் எம்ப

2      சம்வத்ஸரம் …………………………………பிரிதுவி வல்லப ……………

3    ………………………………………….கச்செக கிருஷ்ணராஜ ஸ்ரீமத்

4     கன்னரதேவ மூவடிசோழ ராஜாதித்யன மேலெ [வ]ந்து தக்கோலதொள் காதி கொந்து விஜயம் கெய்யுத்திர்து

5    ஸ்வஸ்தி ஸத்யவாக்ய கொங்குணிவர்ம தர்ம மஹாராஜாதிராஜ \ கோளால புரவரேச்வர நந்தகிரிநாத

6    ஸ்ரீமத் பெர்மனடிகள் நன்னிய கங்க ஜயதுத்த ரங்க கங்க காங்கேய கங்க நாராயணநாதன் ஆளுத்திர்து

7     …………………………………………………..ஸகர வம்ச வ

8        ளபீ புரவரேச்வர ……………………………………………………………………………

9         ………………………பூதுகனங்ககார ஸ்ரீமத் மணலெர அனுவரதொள் மெச்சி பேடிக்கொள் எந்தொ

10    டெ …………………….காளிய ……………………நாய கெ-ளலெ நாட பெ ளத்தூர…

11       ……………..மொரடியொள் பிரிதும் பந்திகெ விட்டொடெ பந்தியும் நாயும் மொடசத்துவதர்க்கெ

12   ……. சல்லேச்வரத முந்தெ கல் நடிசி …………………………கண்டுக

13       மண்ணு கொட்டரா ……………………….

[...]

20 ஸ்வஸ்திஸ்ரீ எறெயப்பன மக ராச்சமல்லன பூதுக காதி கொந்து தொம்பத்தறு ஸாஸிரமும் ஆளுத்திரெ கன்னரதேவ சோழன காதுவந்து பூதுக ராஜாதித்யன பிசுகெய களனாகி சுரிகி இறிது

21  காதி கொந்து பனவசெ பன்னிரு ஸாஸிரமும் பெள்வொல  முனூறும் புரிகெரெ முனூறும் கிசுகாடு எற்பத்தும்  பாகி நாடு எற்பத்தும் பூதுகங்கெ கன்னரதேவ மெச்சு கொட்ட பூதுகனு மணலெர த

22  ன்ன முந்தெ நிந்திறிதுதர்க்கெ மெச்சி ஆதுக்கூர் பன்னெரடும் பெள்வொலத காடியூரமும் ..

23  …..கொட்ட மங்கள மஹாஸ்ரீ

கல்வெட்டின் தமிழாக்கம்:
1    ஸ்வஸ்தி(ஸ்ரீ)  சக மன்னர்களின் காலத்து ஆண்டுகளில் எண்ணூற்று எழுபத்திரண்டு சௌம்ய

2   ஆண்டு …………………………………………………………………………………… பிருதிவி வல்லபன்….

3 ……………………………………………………..கச்சக கிருஷ்ணராஜன் ஸ்ரீமத்

4    கன்னரதேவன் மூவடி சோழ ராஜாதித்தனை தக்கோலத்துள் போரிட்டுக் கொன்று வெற்றி கொண்டான்

5 ஸ்வஸ்தி(ஸ்ரீ) சத்தியவாக்கியன் கொங்குணிவர்மன் தர்ம மஹாராஜாதிராஜன் கோளால புரவரேசுவரன் நந்தகிரி நாதன்

6    ஸ்ரீமத் பெர்மானடிகள் ..கங்கன் …….. கங்ககாங்கேயன்  கங்கநாராயண நாதன் ஆட்சிசெய்திருந்தான்

7    ………………………………………………………………….. சகர வம்சத்து

8    வளபீ புரவரேசுவரன்……………………………………….

9    ………………….பூதுக(னி)ன் அங்ககாரன் ஸ்ரீமத் மணலெரனை … மெச்சி வேண்டிக்கொள் என்றதும்

10  ……………….. காளி என்னும் நாய்……………கெ-ளலெ நாட்டு பெ-ளத்தூர்

11  …………..குன்றுனுள் பன்றி மேல் (ஏவி)விட்டபோது பன்றியும் நாயும் இறந்து போனதற்காக

12  ………………. சல்லேசுவரர் (கோயில்) முன்பு கல் நட்டுவித்து  …. கண்டுக

13     நிலம் கொடுத்தான்

[...]

20  ஸ்வஸ்திஸ்ரீ எறெயப்பனின் மகன் ராச்சமல்லனைப் பூதுகன் போரிட்டுக் கொன்று தொண்ணூற்றாறு ஆயிரம் ஆண்டுகொண்டிருக்கையில் கன்னரதேவன் சோழனோடு போரிடும்போது பூதுகன் ராஜாதித்தனை …..

21  போரிட்டுக் கொன்று பனவாசி பன்னிரு ஆயிரமும் பெள்வொல முன்னூறும் புரிகெரெ முன்னூறும் கிசுக்காடு எழுபதும்  பாகி நாடு எழுபதும் பூதுகனுக்குக் கன்னரதேவன் மெச்சிக் கொடுத்தான் பூதுகன் மணலெர

22   தன்முன்பு நின்று போரிட்டதற்கு  மெச்சி ஆதக்கூர் பன்னிரண்டும் பெள்வொலத்துக் காடியூரும்

23   …..கொடுத்தான்  மங்கள மஹாஸ்ரீ

விளக்கம்:
வரி-1 எண்ட்டுநூறு- தமிழில் உள்ள எட்டு நூறு என்பதன் வடிவம், கன்னடத்தில் ஏறக்குறைய அதே வடிவில் வந்துள்ளது. அதே போல் எழுபது- எற்பத்து.

வரி-4  இராசாதித்தன், மூவடிச் சோழன் என்று குறிப்பிடப்படுகிறான். மும்முடிச் சோழன் என்பதன் திரிபாகலாம். ’சோழ’ என்னும் சொல்லில் உள்ள சிறப்பு ‘ழ’கரம் ஆய்வுக்குரியது. பழங்கன்னட எழுத்துகளில் ‘ழ’ எழுத்துக்குத் தனியே ஒரு வடிவம் கல்வெட்டுகளில் இருந்துள்ளது. காலப்போக்கில், கன்னட எழுத்துகளில் இந்த சிறப்பு ‘ழ’கரம் மறைந்துபோனதன் பின்னணி தெரியவில்லை. தக்கோலதொள் என்பது தக்கோலத்தில் என்பதன் திரிபு. பழங்கன்னடத்தில் பயின்ற சொல். பழங்கன்னடம், தமிழின் ஒரு வடிவம் என்று சொல்லலாம்.  காதி என்பது போரிட்டு (சண்டையிட்டு) என்னும் பொருளுடைய கன்னடச் சொல்.  தமிழ்ச் சொல்லின் சாயல் இதில் இல்லை.  ஆனால், அடுத்து வரும் ‘செய்யுத்திர்து’ என்னும் சொல், தமிழின் வேர்ச்சொல்லான “செய்”  என்னும் வினையின் அடிப்படையில் பழங்கன்னடமாக வழங்குகிறது. இதேபோல், வரி ஆறில், “ஆளுத்திர்து” என்பது “ஆள்” என்னும் வினையின் அடிப்படையாக எழுந்த பழங்கன்னடச் சொல். அடுத்து, ”கொந்து”  என்னும் சொல், ’கொன்று’  என்பதன் திரிபு எனலாம். கன்னடத்தில் பயிலும் பல தமிழ்ச் சொற்களில் இதுவும் ஒன்று. இறத்தலைக் குறிக்கும் ‘சாவு’, செத்து என்னும் வினை வடிவம் கொள்கிறது. அதுவே, கன்னடத்தில் “சத்து” என்றாகிறது (வரி-11). கொன்று – கொந்து என்னும் திரிபு, மன்று – மந்து,  குன்றி மணி – குந்து மணி ஆகியவற்றிலும் காணலாம். “என்று”  என்னும் தமிழ்ச்சொல், கன்னடத்தில் ”எந்து”  என்று வருவதையும் (வரி-9), ‘பன்றி’ என்னும் தமிழ்ச் சொல் பழங்கன்னடத்தில் ‘பந்தி’ என்று வருவதையும் (வரி-11) காண்க.  தற்காலக் கன்னடத்தில் இச்சொல் ‘ஹந்தி’ என்று வழங்கும். ப->ஹ எழுத்துத் திரிபு கன்னடத்தில் பல சொற்களில் காணப்படுகிறது. எடுத்துக்காட்டு : பல்-ஹல்லு, பால்-ஹாலு. ’பம்பா’ நதி, ’ஹம்பி’ என மாற்றமுற்றதும் இவ்வகையே.

பழங்கன்னட எழுத்து - சிறப்பு 
“ழ”கரம் - வட்டமிட்டது.

வரி-5  கோளால புரவரேசுவரன் – கோளால என்பது குவளால என்பதன் திரிபு. குவளால என்பது குவளாலபுரம் ஆகும். இது இன்றைய கோலார் ஊரின் பழம்பெயர் ஆகும். தமிழ்க் கல்வெட்டுகளில் கோலார், குவளாலபுரம் என்றே வழங்குகிறது. கோலார், கங்கர்களின் தலைநகராக இருந்துள்ளது.

வரி-6  பெர்மானடிகள் -   தமிழில் வழங்கும் பெருமானடிகள் என்னும் சொல், கன்னடத்தில் பெர்மானடிகள் எனத் திரிந்தது எனலாம்.

வரி-9  அங்ககாரன் -  மெய்க்காப்பாளன் என்னும் பொருள் தருகிறது எனலாம்.  பேடிக்கொள் எந்தொடெ – பேடிக்கொள் எந்து -  வேண்டிக்கொள் என்று. தமிழின் திரிந்த வடிவம் கன்னடத்தில் பயில்கிறது. ’மெச்சி’ என்னும் தமிழ்ச் சொல்லும் மாற்றமின்றிக் கன்னடத்தில் பயின்றுவந்துள்ளது.

வரி-11 சத்துவதர்க்கெ – செத்துப்போனதற்காக. பந்தியும் நாயும் – பன்றியும் நாயும். மீண்டும் பழங்கன்னடத்தில் தமிழின் சாயலைக் காண்கிறோம்.

வரி-12  கல் நடிசி -  கல் நட்டுவித்து.  நடுகல்லைக் குறிப்பது.

வரி-21  ஸாஸிரம்-ஆயிரம். பழங்கன்னடத்தின் ஸாஸிரம், தற்போதைய கன்னடத்தில் ’சாவிர’ எனப் பயில்கிறது.  கொட்ட-கொட்ட(னு). ’கொடு’  என்னும் தமிழ் வேர்ச்சொல் கன்னடத்திலும் அவ்வாறே பயில்கிறது. கொடை என்பது கன்னடத்தில் ’கொடகெ’ என்று வழங்குவது இதன் அடிப்படையில்தான்.

காளி என்னும் வேட்டை நாய்:
          காளி என்னும் நாய் பற்றிப் புதுமையான செய்தியொன்றைக் கல்வெட்டுத்தொகுதியின் பதிப்பாசிரியர் கூறுகின்றார். சீதாராம் ஜாகிர்தார் என்பவர் தெரிவித்த கருத்தாக இக்கூற்று அமைகிறது.  சீதாராம் ஜாகிர்தார் என்பவர், ‘காவ்யாவலோகன’  என்னும் நூலில் உள்ள செய்யுள் வரியொன்றின் அடிப்படையில் ‘க3ண்ட3 மார்த்தாண்ட3’ என்னும் மூன்றாம் கிருட்டிணன் (கன்னரதேவன்) வேட்டை நாய்களின் ஒரு தொகுப்பைக் காவலுக்கு வைத்திருந்தான் என்றும், கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் காளி என்னும் நாய், கன்னரதேவனின் நாய்களுள் ஒன்று என்றும், அதை விரும்பிக்கேட்ட பூதுகனின் பாதுகாவலனான மணலெரனுக்குக் கொடையாகக் கொடுத்திருக்கவேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.  வேட்டை நாய்களை அரசர்கள் வளர்த்திருந்தனர் என்பதும், அவற்றுக்குப் பெயர்களும் சூட்டப்பட்டன என்பதும், நடுகல் எழுப்பும் தகுதியை அவை பெற்றிருந்தன என்பதும் நாம் அறியலாகும் செய்திகள்.

தக்கோலம் கோயிலும் சில கல்வெட்டுகளும்:
          தக்கோலம் கோயிலில் எத்தனைக் கல்வெட்டுகள் பதிவாகியுள்ளன எனத்தெரியவில்லை. ஆனால், தற்போதைய நிலையில் கல்வெட்டுகள் மிகக் குறைவாகவும், தேய்ந்தும், துண்டுப்பகுதிகளாகவும், படிக்கும் வகையில் புலப்படா நிலையிலும் உள்ளன. ஒளிப்படங்கள் எடுத்துக் கணினியில் பெரிது  படுத்திப் பார்க்கும்போதுகூட எழுத்துகள் புலனாவதில்லை என்பது வருத்தமளிக்கத் தக்கது. பல நிலைகளில் திருப்பணிகளின்போது கல்வெட்டு உள்ள கற்களையும் பொறிகளைக்கொண்டு செம்மைப்படுத்தும் வழிமுறைகளாலேயே இவ்வாறான சேதங்கள் நிகழ்கின்றன. 2017, செப்டம்பர் மாதத்தில் நான் தக்கோலம் சென்றபோது, ஒளிப்படமாக எடுத்த துண்டுக்கல்வெட்டுகளின் படங்களையும், பாடங்களையும் இங்கு தந்துள்ளேன்.

கல்வெட்டு-1
1    ஸ்வஸ்திஸ்ரீ கோ..
2    தித்த பன்மற்கு யாண்டு 2 ஆ
3    வது தக்கோலத்துத் திருவூ
4    றல் தேவநார் மகள் திருவூறல் நங்
5    கை மகள் அத்தியூர் ந[ங்]கை திருவூற
6    ல் மாஹாதேவர்க்கு வைத்த நொந்
7    தா விளக்ககொன்றினுக்கு
8    . . . . . . . . . . . . . . . . . .
9    [சா]வா மூவாப் பேராடு
10  இவ்வி(ளக்) கிட்டக்கட
11  (வான்) நாட்டு மன்றாடி

கல்வெட்டு-1

விளக்கம்:
கல்வெட்டில் அரசர் பெயர் தெளிவாகத் தெரியவில்லை. எனினும், ”தித்த பன்மற்கு” என்னும் தொடரின் அடிப்படையில், கல்வெட்டு முதலாம் ஆதித்தன் காலத்தது எனக் கருதலாம். முதலாம் ஆதித்தனின் ஆட்சிக்காலம் கி.பி. 871-907. எனவே கல்வெட்டின் காலம் கி.பி. 873. தக்கோலத்தைச் சேர்ந்த தேவனார் என்பவரின் மகளான திருவூறல் நங்கையின் மகள் அத்தியூர் நங்கை தக்கோலத்து இறைவனான திருவூறல் மகாதேவருக்கு நொந்தா விளக்கு வைத்ததற்காக சாவாமூவாப் பேராடு கொடை அளித்திருப்பதைக் கல்வெட்டு கூறுகிறது. கொடையாகக் கொடுத்த ஆடுகளை ஏற்றுக்கொண்டவன் அவ்வூர் மன்றாடி (இடையன்) ஒருவனாவான்.

கல்வெட்டு-2
1    (ஸ்வஸ்தி)ஸ்ரீ சாலைக்கலமறுத்த
2    . . . ற்கு யாண்டு (. .3) 
3    . . . . . தேவநார் மகள் திரு . . .
4    . . . . . .  கைய்யால் பங் . .
5    . . . . . . தன்ம கட்டளைக்கல் . .
6    . . . . [நி]றை (இருப)த்து முக்கழஞ்சு
7    . . . . (வூர்) தேவற்க்கு திருவமி[ர்து]
8    . . . .  (வ)ரிசி குறுணி இ . . .
9    . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
10  . . . . . . . . து சந்த்ராதி(த்தவற்)
11  . . . . . . . . நோம் . . . .
12  . . . . . . . . (கு)டுத்தோம் சி . . . .

கல்வெட்டு-2

                                        
விளக்கம்:
கல்வெட்டு தெளிவாயில்லை. ‘சாலைக்கலமறுத்த’  என்னும் தொடர் முதலாம் இராசராசன், காந்தளூர்ச் சாலை வெற்றிக்குப் பின்னர் தன் மெய்க்கீர்த்தியில் இணைத்துக்கொண்ட தொடராகும். ஆனால், அவனுடைய மெய்க்கீர்த்தியில். காந்தளூர்ச் சாலை என்றே காணப்படும். அவனுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அவன் மகன் முதலாம் இராசேந்திரன், பெயரன் முதலாம் இராசாதிராசன், இன்னும் முதலாம் குலோத்துங்கன் ஆகிய பல அரசர்கள் ‘சாலைக்கலமறுத்த’ புகழைத் தங்களுக்கு ஏற்றிக்கொள்கிறார்கள். எனவே, இக்கல்வெட்டில் வரும் அரசன் இவர்களில் ஒருவராக இருக்கக் கூடும். முதல் கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் நங்கை என்பவளே இக்கல்வெட்டிலும் குறிப்பிடப்பெறுகிறாள் எனக் கருதலாம். இறைவர்க்குத் திருவமிர்து படைப்பதற்கான பரிகலன்களுள் (பாத்திரம்) ஒன்றோ பலவோ கொடைப் பொருளாக அளிக்கப்பட்டிருக்கவேண்டும். அதன் நிறையும் குறிப்பிடப்பட்டுள்ளது எனலாம். நிறை காணப் பயன்படுத்தப்பட்ட பொன் எடைக்கல் ’தன்ம கட்டளைக்கல்’  என்னும் பெயரால் வழங்கியது.

கல்வெட்டு-3
1    . . . . . . . . . . . . . . . . . .
2      . . க்கு மேற்கும் வட(பா)ற்
3      . . புளிக்கும் பெரிய கு . .
4      .  தெற்கும் மேல்பா(ற்)[கெல்லை]
5      . . . தாவாய் சூலக்க(ல்)
6      . . . நல்லாற்றுக்கு ..
7      . .  பாற்கெல்(லை)

கல்வெட்டு-3

விளக்கம்:
நிலக்கொடை அளிக்கப்பட்டுள்ளது; நிலத்தின் எல்லைகள் விளக்கப்பட்டுள்ளன.
நல்லாறு என்னும் ஓர் ஆற்றின் பெயர் குறிக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டு-4
1    . . . .  கு யாண்டு . . .
2    . . . . . . . . . . . . . . . . . .
3    . . . . ட்டி காமுண்[ட]
4    . . .  (மி மான) கேசுவைய . .
5    . ப்பல்லவன் ப்ரஹ்மாதரா(யன்)
6    . . தக்கோலத்துத் திருவூறல்

கல்வெட்டு-4

விளக்கம்:
அரசு உயர் அதிகாரிகளில் ஒருவனான பல்லவன் பிரம்மாதராயன் என்பான் தக்கோலத்துத் திருவூறல் இறைவர்க்குக் கொடை அளித்துள்ளான் எனத் தெரிகிறது.

கல்வெட்டு-5
கல்வெட்டின் படம் தெளிவாக இல்லை. படிக்க இயலாதவாறுள்ளது. இருப்பினும், முதல் வரியில் இராசநாராயண சம்புவரயர் என்னும் பெயரைக் காண முடிகிறது. எனவே, இக்கல்வெட்டு சம்புவரையர் காலத்துக் கல்வெட்டு எனக் கொள்ளலாம்.

கல்வெட்டு-5








___________________________________________________________
தொடர்பு: து.சுந்தரம்
doraisundaram18@gmail.com
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.அலைபேசி :  9444939156.



Friday, August 17, 2018

எல்லைக்கோடுகள்

——    தமிழ்மைந்தன் சரவணன்



மூலம்:  பாரதி நாயக் 
தமிழாக்கம் : தமிழ்மைந்தன் சரவணன்


என் இனிய சகோதரனே! 
உன்னால் உணர முடிகிறதா? 

அருகருகே அமைந்த நிலப்பரப்பையும் 
பிணைந்திருக்கும் மனிதர்களையும்
துண்டாடும் 
இந்த எல்லைக்கோடுகளை? 
எல்லைக்கோடுகள் உண்மையல்ல.
எல்லைக்கோடுகள் உண்மையல்ல.

அவை கற்பனையானவை
மனிதர்களால் வரையப்பட்டவை
பிரித்து ஆளும் சூழ்ச்சிக்காக.

தென்றலுக்குக் கடிவாளம் போடக் கூடுமோ? 
தென்றலின் இயக்கத்திற்கு 
தடை போட முடியுமா? 
சூரியன் ஒளி வீசுவதை 
நிறுத்த முடியுமா? 
என்னதான் முடியும் 
அற்ப எல்லைக்கோடுகளால்? 

தென்றலை போலவும் 
சூரியனின் ஒளியைப் போலவும்
அன்பு 
கட்டுக்குள் அடங்காது
எல்லைகளுக்குள் முடங்காது
வாருங்கள் சகோதரர்களே! 
கைகோர்த்திடுவோம்
இந்த உலகத்தையே 
ஒன்றாக்கி பிணைத்திடுவோம்





________________________________________________________________________
தொடர்பு: தமிழ்மைந்தன் சரவணன் (saravananmetha@gmail.com)



Wednesday, August 15, 2018

ரோஜா


——  ருத்ரா இ.பரமசிவன்.



காதலைச்சொல்ல
இந்தப் பூவை விட்டால்
வேறு எந்தப்பூ இருக்கிறது
என்று
ஒரு ரோஜாச்செண்டை
அவளிடம் நீட்டினேன்.

ஆங்கிலத்தை விட்டால்
வேறு என்ன மொழியில்
என் காதலை ஒலிப்பது
என்று
"ஐ லவ் யூ" என
அவளிடம் சொன்னேன்.

அவள் பூவை வாங்கிக்கொண்டாள்.
"ஐ லவ் யூ"க்கு முறுவலித்தாள்.
பின் குளிர்ச்சியாகச் சொன்னாள்!

"நீ
கொடுத்ததையும் சொன்னதையும் தான்
அதோ
அங்கே நிற்கிறான் பார்
அவனுக்கு
கொடுக்கப்போகிறேன்.
சொல்லப்போகிறேன்."

"நன்றி.
அப்படித்தான் இந்த இரண்டையும்
அதோ
அங்கே நிற்கிறாள் பார்
அவளிடமிருந்து
நான் வாங்கி வந்தேன்!"



________________________________________________________________________
தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)





Friday, August 10, 2018

கலைஞராற்றுப்படையே!

——  ருத்ரா இ.பரமசிவன்.






தமிழினத்தலைவரே!
எங்கள் கலைஞரே!
வயதுகள் எனும்
வெற்று எண்கள்
வெறிச்சோடிக்கிடக்கின்றன.
அவற்றை எப்போதும்
நீ வரலாறு ஆக்கினாய்.

உன் எழுத்துக்களுக்கு
முற்றுப்புள்ளி இடும்போதெல்லாம்
அதில்
உதய சூரியனைத்தானே
கண்டாய்.
எங்கள் ஆட்சியில்
சூரியன் அஸ்தமிப்பதே இல்லை
என்றானே அந்த
பெருமைக்கார வெள்ளையன்!
உன் தமிழ்
உலகத்தின் எல்லா கிழக்குவிளிம்பிலும்
உதயசூரியனாய்த்தானே
சிரித்துக்கொண்டிருக்கிறது.
"கிழக்கிலே அஸ்தமிக்கும் சூரியனே"
என்று பாமரத்தனமாய்
இவர்கள் கூறினாலும்
அது கண்ணீர் கசியும்
"பா மரத்து" வரிகள் அல்லவா!

அந்தக்காவேரி
மில்லியன் மில்லியன்களாய்
தண்ணீரை டி எம் சி யாய் மாற்றியபோது
இந்தக்காவேரி
பில்லியன் பில்லியன் டி.எம்.சி களை
கண்ணீராக்கி
கலங்கடித்து விட்டதே
இத் தமிழ் நாட்டை.
உன் இழப்பின் சோகம்
எத்தனைக்கு எத்தனை
கொடுமையானதோ
அத்தனைக்கு அத்தனை
வீரம் செறிந்தது.

தமிழ் இனப்போராளியே!
திராவிட மானம் காக்க‌
அந்த நடுநிசியிலும்
நீதியரசர்களின் மரசுத்தியலை
மேசை தட்ட வைத்து
ஒரு சமூகநீதியை நிமிர்த்திவைத்தாயே.
விஸ்வரூபம் எடுத்த
அந்த நெத்தியடித்தீர்ப்பு தான்
உன் முரசொலியின்
கடைசி இதழில்
நீ இட்ட முற்றுப்புள்ளி.

தமிழ்க்கருவூலமே
இனி இந்த மெரீனா தான்
நம் தமிழின் "சங்கப்பலகை"
போராளிகளின் "பொருநராற்றுப்படையே!"
படைப்பாளிகளின் "கலைஞராற்றுப்படையே!"

தமிழ் வாழ்க!
கலைஞர் வாழ்க!



________________________________________________________________________
தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)




Wednesday, August 8, 2018

பெண்ணியவாதி ஒளவை

— முனைவர் ச.கண்மணி கணேசன்


முன்னுரை:
          சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று முருகப் பெருமானிடம் கேட்ட புராணத்து ஒளவை தவிர; தமிழ் இலக்கிய வரலாற்றில்- ஆத்திசூடி பாடிய 12ம் நூற்றாண்டுக்கால ஒளவை, விநாயகர் அகவல் பாடிய 14ம் நூற்றாண்டு ஒளவை, அதியனிடம் நெல்லிக்கனி பெற்ற பண்டைத் தமிழக ஒளவை என காலந்தோறும் இருந்த ஒளவைகளின்  எண்ணிக்கை நீள்கிறது. ஒளவை பாடியதாக எட்டுத்தொகையில் மொத்தம் 59 பாடல்கள் உள்ளன. அவற்றுள் 26 பாடல்கள் அகப்பாடல்கள். பிற புறப் பாடல்கள். இப்பாடல்கள் அவளது வாழ்க்கை பற்றிய வரைவியலையும், அவளது ஆளுமையையும் அறியத் துணை செய்கின்றன.    

பெயரின் பொருளும் காரணமும்:
          ஒளவை என்னும் பெயர் அழகிய தலைவி என்னும் பொருள் உடையதாகும். ஒளவை=அவ்வை =அ +ஐ ( ஐ =அய் என்றாற்போல் ஒள=அவ்)  
அ =அழகிய;  ஐ=தலைவி; ஒளவை =அழகிய தலைவி. அவ்வை என்னும் பெயர் அவள் குட்டையாக இருந்ததால் இடப்பட்ட காரணப் பெயராகலாம் என்னும் கருத்துடையோரும் உள்ளனர்.(மின்தமிழ் மடலாடலில் ஆய்வாளர் இராமகி 8.7.2018 அன்று பகிர்ந்து கொண்ட  கருத்து)
    
பிறப்பு:
          பாணர் குலத்தில் தோன்றியவள்  ஒளவை. இதற்கு சான்றாக அமைவன அவளது பாடலில் உள்ள அகச்சான்றுகள். ஒளவை பாணர்குழுத் தலைவி. அவளது குழுவில் விறலியும், கிணைப்பொருநனும் இருந்தனர். இதனை  புறம்.103ம் பாட்டு காட்சிப்படுத்துகிறது. தன்  மண்டை (உண்கலம்) கவிழ்ந்திருக்க அதை மலர்த்தி மெழுகு மெல்லடையிற் கொழுநிணம் பெருப்ப ஊட்டுவான் என்று தன்  கூட்டத்து விறலியிடம் பேசுவதாகப் பாடுகிறாள்.  தன்  குழுவிலிருந்த கிணைப்பொருநன் அதியனிடம்  பெற்று உவந்த வரிசைகளை  அவள் பாடுவதும் நோக்கத் தக்கது. அதியன் இறந்த பிறகு அவன் மகன் பொகுட்டெழினியிடமும் அவளது கிணைப்பொருநன் பல சிறப்புக்களைப்  பெற்றதாக அவளே பாடியிருக்கிறாள்.(புறம்.-பா.-390&392 ) இவ்விரு பாடல்களை அடியொட்டி  ஒளவை  பாடல்கள் கற்பனையின் அடிப்படையில் பாடப்பட்டவை என்றும் அவள் பாண்மகள் என்பது ஐயத்திற்குரியது என்றும் ஆய்வாளர் கருத்துரைத்துள்ளனர் (க.கைலாசபதி -The Heroic Poetry). ஆனால் பின்வரும் தரவுகள் ஒளவை பாணர்மகள் என்பதை உறுதிப்படுத்துகின்றன. 

          பாண்பாட்டு என்னும் துறையிலமைந்த பாடலும் ஒளவையின் பாடல்களில் ஒன்று. இது வீரமரணமடைந்த ஒருவனின் ஆற்றல் பாடி ஈமக்கடன் செய்வது.  'களிறெறிந்து வீழ்ந்தவரைக் கைவல் யாழ்ப்பாணர் கடன் இறுப்பது  பாண்பாட்டு' ஆகும் என புறப்பொருள் வெண்பாமாலையும் கூறுகிறது. 'செருவத்து ஒருவருமில்லை மாதோ ' என புறநானூறு 311ம் பாடல்  சுட்டி; வீரமரணம் அடைந்த ஒருவனுக்கு ஈமக்கடன் செய்ய யாருமில்லை என்பது குறித்து ஒளவை வருந்தித் தானே அக்குறை தீர்க்க முனைவதைக் காட்டுகிறது. பாணர் குலத்தைச் சேர்ந்தவளாதலால் யாருமில்லாத வீரனுக்குத் தன்  குழுவோடு சேர்ந்து இறுதிக்கடன் ஆற்றுகிறாள். 

          புறப்பா.-206ல் "எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே "எனச் சினந்து எழும்போது,"காவினம் கலனே "என 'விசுக்'கென்று தன்  இசைக் கருவிகளைக்  காவடியில் கட்டி எடுப்பதைத்  தன்கூற்றாகப் பாடியிருப்பது நோக்கத்தக்கது. சினத்தோடு  வெளிப்படும் பாடலில் உண்மை வெளிப்படும். இல்லாத கற்பனை இடம்பெற வழியில்லை. அவள் பாணர்குலப்பெண் ஆதலால் இசைக்கருவிகளைக் கட்டித் தூக்குவது; கிளம்பும் முன் அவள் செய்யும் முதற்செயல் ஆகிறது.

          அதியமான் மறைந்தபோது அவன் மார்பைத் துளைத்த வேல் பாணரின் உண்கலத்தைத் துளைத்து இரந்து நிற்பவர் கைகளைத் துளைத்து புலவர் நாவில் சென்று வீழ்ந்தது என்கிறார்.(235). இங்கே முதலிடம் பெறுவது பாணர் உண்கலமே

          தமிழ்ச் சமுதாயம் ஒளவைப்பாட்டி என்று அழைத்த காரணத்தை ஆய்வாளர் கூறுவதும் நோக்கத்தக்கது(சிறகு -7.7.18-தேமொழி -ஒளவைப்பாட்டி). பாணன் என்ற இனப்பெயர்க்குரிய பெண்பாலாக 'பாட்டி' என்ற சொல் வழங்கியமை தொல்காப்பியப்  பொருளதிகார கற்பியல் சூத்திரத்தால்( 52) விளக்கமுறுகிறது. அத்துடன் அச்சொல்லை அதே பொருளில் பரணரும், மாங்குடி மருதனாரும், கரும்பிள்ளைப்  பூதனாரும் தம் பாடல்களில் எடுத்தாண்டுள்ளமையையும் அவர் எடுத்துக் காட்டியுள்ளார். (அகநானூறு-196, மதுரைக்காஞ்சி-748-750, பரிபாடல்-10-அடி-36-37)

          பாணர்கள் வாய்மொழிப்பாடல்கள் பாடியோர் ஆவர். எனவே அவர்களது பாடல்களில் வாய்மொழிக் கூறுகள் மிகுந்திருப்பது இயற்கை. ஒளவையின் பாடல்களிலும் வாய் மொழிக் கூறுகள் மிகுதியாக உண்டு. அதியன் இறந்த போது அவள் பாடிய ஒப்பாரி குறிப்பிடத் தக்கது. தமிழகத்து ஒப்பாரியில் இடம் பெறும் இரண்டு தவிர்க்க முடியாத கூறுகள்: இழுவையும் ,சிளுக்கும் ஆகும். இழுவை என்பது ஒலியோடு நீண்ட மூச்சை உள்வாங்குவது. சிளுக்கு என்பது உள்வாங்கிய மூச்சை ஏக்கம் கலந்த ஒலியோடு சேர்த்து வெளிவிடுவது. இந்த ஒப்பாரி தான் புறம்.-பா.-235. இது வாய்மொழி இலக்கிய வகைகளுள் ஒன்றான ஒப்பாரி என்பதற்கு இதன் யாப்பமைதியே சான்று. முதலடியில்  நான்கு சீர்கள்; இரண்டாமடியில் இரண்டு சீர்கள்; இங்கு மூன்றாவது சீராக அமைய வேண்டியது இழுவை; நான்காவது சீராக அமைய வேண்டியது சிளுக்கு; எட்டாவது அடியில் மீண்டும் ஒரு இழுவையும் சிளுக்கும் இடம்பெறும்; அதற்கேற்ப அந்த அடியில் மூன்று சீர்களே உள்ளன. அதேபோல் பதினொன்று , பதினான்கு,பதினைந்தாம் அடிகளிலும் ...(திருமதி விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணன் 1990வாக்கில் ஒளவையின் ஒப்பாரியை இழுவையோடும் சிளுக்கோடும் எம் கல்லூரி இலக்கியமன்றக் கூட்டத்தில்  பாடிக்காட்டினார். நேரில் கேட்டிருக்கிறேன். அது ஒரு வெள்ளிக்கிழமை. சுமங்கலிப் பெண்கள் வெள்ளிக்கிழமையன்று மாரடிக்கக் கூடாது. ஆகையால் மாரடிப்பது போல் சைகை செய்து பாடினார். இழுவை, சிளுக்கு என்ற பெயர்களும் அவை ஒளவை பாட்டில் பொருந்தியுள்ளன  என்பதும் விஜயலக்ஷ்மிநவநீதகிருஷ்ணனிடம் இருந்து தெரிந்து கொண்டவை.) 

          அவளது கலைப் பயணம் நாஞ்சில் வள்ளுவனிடம் தொடங்குகிறது(பா.-140). இப்பாடலிலும் தன் குழுவிலிருந்த விறலி பற்றிக் குறிப்பிடுகிறாள். எனவே ஒளவை பாண்மகளே .

வளரிளம் பருவம்:
          எல்லோரையும் போல்  ஒளவைக்கும் இளமைக்கால நிகழ்வுகள் உண்டு. தான் காதலித்த தலைவனோடு அவள் பொழிலில் விளையாடினாள். (நற்றிணை 187) அவளது காதலன் தேரில் வந்து அவளைச்  சந்தித்துத் திரும்பினான். அவளுக்காக அறத்தொடு நிற்பதற்கும்  ஒரு தோழி வாய்த்திருந்தாள் (குறுந்தொகை -பா.-23). அவளது காதலும் சமுதாயம் போற்றும் திருமணத்தில் முடிந்தது.(குறுந்தொகை -பா.-15)

அகவாழ்க்கை:  
          தன்  இல்லறத்தில் பெரும் அவலத்தை அனுபவித்தவள் ஒளவை. தனக்கும் தன் கணவனுக்கும் இடையிலிருந்த பாலுறவுச் சிக்கலை வெள்ளந்தியாக வெளித்தெரிய விட்டவள். தனது காமம் நெஞ்சில் வேர்விட்டு;  ஊரார் தம்முள் கூடிப் பேசும்படி கிளைத்து; காதல் பரப்பி;  புலவோர் போற்றும் நாணமே சிறிதும் இல்லாத பெரிய மரமாக மாறி; நிலம் முழுதும் பரவி;  அலர்ந்த அரும்புகள் கொத்துக்  கொத்தாகச் சொரியும் நிலை அடைந்து விட்டது(அகநானூறு -273) என்று தன் ஏமாற்றத்தை விவரிக்கிறாள். மேற்சுட்டிய பாடலில் தன் உணர்ச்சியைத் தான் அவள் பாடுகிறாளே அன்றி இந்த ஏமாற்றம் அடுத்தவர் உணர்வைக் கடன் வாங்கிப் பாடுவதன்று. ஒளவையின்  அகப்பாடல்கள் தன்னுணர்ச்சிப் பாடல்கள் ஆகும் தகுதி பெற்றவை. 

          ஒளவையின்  காமஉணர்வை அவளது தலைவன் முற்றும் தணிக்கவில்லை என்று முனைவர் மு.பழனியப்பன் கூறும் விளக்கம் ஏற்றுக் கொள்ளத்  தக்கதாகவும், அவளது நிலையைத் தெளிவாக்குவதாகவும் அமைகிறது('பெண்ணிய வாசிப்பும் பெண்ணெழுத்துத் திறனாய்வும்'-பெண்ணிய வாசிப்பு-ப.68). இயற்கையாக ஒரு பெண்ணுக்கு ஏற்படும் பாலியல் வேட்கை நிறைவேறாத போது சினம் ஏற்படுவதும் இயற்கையே.   ஒளவையின் குறுந்தொகைப் பாடல்(28) அந்த சினத்தைத் தான் விலாவாரியாக வருணிக்கிறது.
"முட்டுவேன் கோல் ? தாக்குவேன் கோல்?
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
'ஆஅ ', 'ஓ ', 'ஒல்' எனக் கூவுவேன் கொல் ?
அலமரல் அசைவளி அலைப்ப என்
உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே. "

          என்னுங்கால் தனது  நிறைவடையாத வேட்கை; தான் மருவியவனின் இயலாமையால்  ஏற்பட்ட சிக்கல்; ஊரெல்லாம் தெரிந்து எல்லோரும் அதுபற்றிக் கூடிக்கூடிப்   பேசித்தீர்க்கின்றனர். பாவப்பட்ட நிலையில் இருந்தவள் யார்மேல் தன் சினத்தைக் காட்டுவாள்? தன்னைத் தானே வருத்திக் கொள்ளும் மனநிலைக்கு ஆளாகிறாள். அதனால் தான்  'முட்டுவேனோ என்று கேள்வி கேட்கிறாள்; யாரைத் தாக்குவேன் என்று படபடக்கிறாள்; நிதானமாக சிந்திக்கவும் இயலவில்லை; ஏதாவது காரணத்தைக் கூறி கத்திக்கத்தி இந்த ஊரை எழுப்பலாமா?  புறம் பேசத் தெரிந்த ஊருக்கு பிரச்சினையைத் தீர்க்கும் வழிசொல்லத் தெரியவில்லையே;   வாடைக்காற்றில் பெருகும் என் துயரம் அறியாமல் இவ்வூர் தூங்குகிறதே.' என்று அங்கலாய்க்கிறாள். இது தான் அவளது அகவாழ்க்கையின் நிலை.

          நற்றிணை 295ம் பாடலில்; தன் துன்பத்தை அறிந்து தோழியர் கூட்டம் துன்புற்றது என்கிறாள். அன்னைக்கும்  எல்லாம் புரிந்து விட்டது; என்னை இற்செறித்து விட்டாள்  என்கிறாள். கள்ளின் சாடி போன்ற தன்  இளமைநலம் வீட்டிற்குள்ளேயே இருந்து முதுமை அடையும்  என்கிறாள். ஏன்?

          கொண்டவன் இயலாமையை மறைக்கத் தெரியாமல்;  தன் ஆறாக்காதலையும் மூடி வைக்கத் தெரியாமல்; தோழியர் தொடங்கி ஊர் முழுதும் அம்பலாக்கக் காரணமான மகளை---ஒளவையை இற்செறிக்காமல் பெற்றவளால் வேறென்ன செய்ய இயலும்? அந்த இற்செறிப்பு தானே அவளுக்குப் பாதுகாப்பு என்று தாய் எண்ணுவாள் !?

          அதையடுத்து அவள் வாழ்வில் நிகழ்ந்த சோகம்; அந்த சோகத்தை எண்ணிப் பார்க்கும் பொழுது அவள் மனம் வெந்து சாம்பலானது .   அந்த சோகத்தை எண்ணாமல் புறந்தள்ளி விட்டு; எல்லோரையும் போல் கலகலப்பாக அன்றாடம் பொழுது போக்கினால்; காமநோய் வானளவு உயர்ந்து; துன்பத்தைக் கொடுத்தது (குறுந்தொகை -பா.-102). ஆனால் அந்நோய்க்குக் காரணமான தலைவன் திரும்பவில்லை. சிக்கலுக்குக் காரணம் ஆனவனுக்குத்  தப்பிக்கும் எண்ணம் தவிர வேறேதும் தோன்ற வழியில்லை என்பது உலகறியும். அதனால் தான் அவன் ஒளவையைத் தேடி மீண்டு வரவில்லை. பொருளைக் காரணம் காட்டிப் பிரிந்து சென்ற கணவன்; மீண்டு வருவேன் என்று சொன்ன காலம் கடந்தும் வரவே இல்லை.    

          அவர்களது இல்லறச் சிக்கல் கணவனைத் துரத்தியது. தன்  கணவன் வந்து  விடுவான் என்று எல்லாப் பெண்களையும் போல் அவளும் காத்திருந்தாள் (குறுந்தொகை -பா.-158,183&200).  இந்தப் பிரிவு நிரந்தரம் என்று புரிந்த போது அவள் நொந்து புலம்புவதை அகநானூறு -11ல் காணலாம். இருவருடைய உடற்கூறியல் அடிப்படையிலான சிக்கலைக் கூடப்  பொருட்படுத்தாமல் அவள் ஒருவாறு தன்னைத் தேற்றிப் பாடுவதாக அமைந்துள்ளது இப்பாடல். அவளது காதல்மனம் தன்  கணவனின் இயலாமையைப் பொருட்படுத்தாமல் சேர்ந்து இருக்கும் வழியையே நாடுகிறது.  பிரிந்து சென்ற தலைவனுடன் தானும் சென்றிருந்தால்; காட்டாற்றின் கரையிலே மரக்கிளைகள் தாழ்ந்துள்ள மணல்மேட்டில், "மெய்புகுவன்ன  கைகவர் முயக்கம் அவரும் பெருகுவர் மன்னே;"  என்கிறாள். இங்கு தம் இருவருக்கும் இடையிலிருந்த பாலுறவுச் சிக்கலை அடியொற்றி அதற்கு மாற்றாகவே; 'கலவிக்கூட்டம் இல்லாமல்; அதையொத்து  கைகளால் அணைத்துத் தன்  கணவனோடு  இருந்தால் அவனும் இன்புறுவான்; தானும் அழ நேராது' என்கிறாள். ஆனால் தன்னை அவன் நிரந்தரமாகப் பிரிந்த காரணமும் அவளுக்குத் தெரிந்ததால் அவள் ஆற்றாது அரற்றியதை குறுந்தொகை-39ல் காண்கிறோம். அந்த விரக்தியின் எல்லையில் அவள் தன்  கணவனை 'முலையிடை முனிநர்' என்கிறாள்.

          ஒளவைக்கும் அவளது கணவனுக்கும் இடையில் பாலுறவுச் சிக்கல் இருந்தபோதும் அவர்களிடையே இருந்த காதல் மறையவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டவர்; ஆதலால் வினைவயின் பிரிவைத் தன் கணவன் கூறிய போது அவள் அதைப் பெரிது படுத்தவில்லை. உன்னோடு சேர்ந்து வந்தால் காட்டுவழிச் செலவும்  இனிதாகவே இருக்கும் என்று சொல்லி நின்றாள்(குறுந்தொகை-பா.-388)
 
ஒளவையும் வெள்ளிவீதியும்:
          ஒளவை போலவே அகவாழ்வில் துன்புற்ற இன்னொரு பெண் வெள்ளிவீதி . வெள்ளிவீதியாரின் பெண்மொழி பற்றி சு.மலர்விழி ஒரு ஆய்வுக்கட்டுரையில் 'பெண்கள் வெளிப்படையாகப் பேசக்கூடாது என்று வரையறுக்கப்பட்ட காமத்தை வெளிப்படுத்தி;  பிரிந்து சென்ற காதலனுக்காக காத்திருக்க வேண்டும் என்ற மரபை உடைத்து; அவனைத் தேடி அலைந்து; தன்  உடலில் ஏற்பட்ட மாற்றத்தையும், நோயையும் நுட்பமாகப் பதிவு செய்ததன் மூலம் சமூகக் கட்டுக்களைத் தகர்த்து; தன் இருப்பைப் பதிவு செய்த ஒற்றைக் கலகக் குரல் '  என்று முடித்துள்ளார். (காவ்யா தமிழ்- இதழ் -ஏப்ரல் -ஜூன் 2018-சு.ஷண்முக சுந்தரம் -ப.ஆ .,சென்னை-ப.32).

" நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரின்
கெடுநரும் உளரோ நம் காதலோரே "

          என்று பாடி ஊர் ஊராய், காடுகளைக் கடந்து; ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு குடியிருப்பிலும் சென்று தன் காதலுக்குரியவனைத் தேடி அலைந்தவர் வெள்ளிவீதியார். இந்த வெள்ளிவீதியின் செயலை ஒளவை தன் பாடலில் விபரமாகவே எடுத்துச் சொல்கிறார். (அகநானூறு -147) வெள்ளிவீதியைப் போல நானும் தேடித்தேடி அலைய என் மனம் நாடுகிறது என்கிறாள். அவன் சொன்னபடி வந்து விடுவான் என்று நம்பி வீட்டில் தனித்து இருந்து துன்புறுபவள் நான்(நற்றிணை -129). சொன்ன காலம் கடந்து விட்டது; இனி அவனைத்தேடி யானும் செல்வேன் என்று தன் மனதோடு பேசுகிறாள் (அகநானூறு -303)

ஒளவையின் ஆளுமை:    
          பெண் எழுத்து ,பெண் மொழிக்குச் சான்றாக ஒளவையார் பாடல்களைச் சுட்டலாம் என்கிறார் அரங்க மல்லிகா. (பெண்ணின் வெளியும் இருப்பும் -அரங்க மல்லிகா -ப.13)  தனது அடங்காத காமநோயை "முலையிடைத் தோன்றிய நோய்" என்றே ஒளவை சுட்டுகிறாள்.  ஒரு பெண்ணின் காமத்தை அவளது மார்பு வெளிப்படுத்தும் என்பதால் ஒளவை அதை வெளிப்படையாகப் பாடும் போது; காமம் ஆணுக்கு மட்டும் அங்கீகரிக்கப்பட்டதாக உள்ள கருத்தாக்கத்தை ஒளவையின் பாடல் உடைக்கிறது. பெண்ணின்  ஆழ்மனஉணர்வுகளை கட்டற்று வெளிப்படுத்த அனுமதிக்கப்படாத சூழலில் ஒளவையின் பாடல் இயல்பாக வீரியமிகுதியுடன் வெளிப்படுத்துகிறது.  அகநானூறு 273ம் பாடலின்படி "தனது காமம் ஒருதலைக்கொருகால் பெருகிச் செல்வதன்றித் தணியவில்லை; தோழி ஆற்றியும் அடங்கவில்லை; ஊரெல்லாம் அறிந்து பேசும்படி வெளிப்பட்டுவிட்டது " என்று பாடியிருப்பதால் அது 'தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம் ' என்று வ.சுப.மாணிக்கனார் கூறுவதையும் எடுத்துக் காட்டியுள்ளார்.  

          கடக்க இயலாக் காமவேட்கைப்பட்டவளாகவே ஒளவையின் குறுந்தொகைப் பாடலும் அவளைக் காட்டுகிறது (பா -102). தன் காமம் வானளவு மிகுதியானது என்றும்; தன்னால் மருவப்பட்ட தலைவன் சான்றோன் அல்லன் என்றும் பாடுகிறாள்.  நிறைவு பெறாத பாலுணர்வு வேட்கையை வெளிப்படுத்தத் தயங்காத பெண்ணாக ஒளவை இலக்கிய உலகில் உலா வருகிறாள். இன்றைய 21ம் நூற்றாண்டில் கூட பெண்கள் வெளிப்படையாகப் பேசத் தயங்கும் சிக்கல் இது. இந்தச் சிக்கலால் ஏற்படும் மன உளைச்சலைத் தான் அவளது அகநானூற்றுப் பாடலும் (பா.-273) சித்தரிக்கிறது. 

"..............................நம் துயர் அறியார் கொல்லோ
தாமே அறியினும் நம் மனத்தன்ன மென்மை இன்மையின்
நம்முடை உலகம் உள்ளார் கொல்லோ
யாங்கென உணர்கோ யானே ...... "

          என்றெல்லாம் புலம்புவதும்; இறுதியில் அத்தலைவன் தன்னை நாடி வராமல் இருப்பதைக் கூறி நோவதும்; ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரே சமூகக் கட்டுப்பாடுகளைத் தகர்த்து தனக்கென ஒரு மொழிச்சுதந்திரத்தைத் தானாகவே அங்கீகரித்துக் கொண்ட பெண்ணியவாதியாகக் காட்சியளிக்கிறாள்.

          பிரிவைப் பற்றித் தன்  கணவன் பேச்செடுத்த போது 'செல்வார் அல்லர்' என்று இகழ்ந்து இருந்தாள். அவள் கணவனோ 'இவள் பிரிவுக்கு ஒருப்படமாட்டாள்' என்று நன்கு அறிந்து அமைதியாகவே இருந்தான். இருவருடைய அழுத்தமான மனங்களும் இரண்டு பேராண்மைகளாகத் தம்முள் பூசலிட்டன (குறுந்தொகை -பா.-43). இப்பாடலில் ஒளவை கையாளும் 'இரு பேராண்மை' என்ற தொடர் அவளது ஆளுமையை நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. தன்மனம் ஆண்மைத் தன்மை கொண்ட வலிமை வாய்ந்தது என்கிறாள். இப்படிச் சொல்வதற்கே எத்துணை துணிவு வேண்டும்!      

          பெற்றோர் பாதுகாப்பிலிருந்து மாறித் தன்  சொந்தக்காலில் நிற்கவேண்டிய நிலை வந்த போது; ஒரு கலை வாழ்க்கையையும், அரசியல் வாழ்க்கையையும் ஏற்றுக்கொண்டு பாரதத்தில் முதல் பெண்தூதராக அதியமானிடம் இருந்து தொண்டைமானிடம் சென்று சாதனை படைத்த முதல் தமிழ்ப்  பெண்ணியவாதி ஒளவை.

          தமிழ்ச் சமுதாயத்தின் பார்வையும் ஒளவையின் நிலையும்:
பெண்ணுக்குத் தோன்றும் வேட்கை இயற்கை; எனினும் அது பற்றிப் பெண் தன் வாயால் பேசுவதே இழுக்கு என்று எண்ணும் உற்றார், உறவினர் , பெற்றோர், பெரியோர், உடன்பிறப்புகள், உடன்பிறவா நட்புகள் ,ஊரார் அனைவரும் நிறைந்த  சமூகத்தில் தன்  வேதனையை மறைக்கவும் முடியாமல், உடலைத் துன்புறுத்திக் கொள்ளவும் அறிவு இடம் கொடுக்காமல் வாழ்ந்து சாதித்தவள் ஒளவை . 

குறுந்தொகை 99ம் பாடல் –
" உள்ளினென்  அல்லனோ யானே  உள்ளி
நினைந்தனென் அல்லனோ பெரிதே நினைந்து
மருண்டனென் அல்லனோ ,உலகத்துப் பண்பே
நீடிய மரத்த கோடு தோய் மலிர்நிறை
இறைத்து உணச் சென்று அற்று ஆங்கு
அனைப் பெருங் காமம் ஈண்டு கடைக் கொளவே."
இது தன்மை இடம் சுட்டி ஒளவை பாடியது. இதன் பொருளாவது ---
 
          நான் எண்ணிப் பார்த்தேன்; அங்ஙனம் எண்ணும் போது உலக இன்பங்களிற் பெரிதாகிய காமஇன்பத்தை நினைத்துப் பார்த்தேன். நினைத்தபோது உலகத்துப் பண்பைக் கருத்தில் கொண்டு மருண்டேன். நீண்டு உயர்ந்த மரம்; அதன் கிளை ஒன்று ஆறோடும் போக்கில் குறுக்கே தாழ்ந்து உள்ளது; ஓடிவரும் பெருவெள்ளம் அந்தக் கிளையைத் தோய்ந்து செல்கிறது; கிளையில் இருந்து கொண்டு அந்த வெள்ளநீரை இறைத்து உண்டு தாகம் தீர்க்க இயலுமா? வெள்ளத்தின் வேகம் கிளையில் அமர்ந்து இருப்பவரையும் அடித்துச் செல்லும்;கிளையையும் சேதமாக்கும்; அத்தகைய காமம்  என்னிடம். இது தான் இந்தத் தன்னுணர்ச்சிப்பாவின் கருத்து. தன்னுடைய வேட்கை தன்  உயிரைக் கொல்லும் தன்மை உடையது என்கிறாள். பாடலின் இறுதி மூன்றடிகள் இறைச்சிப் பொருள் தருகின்றன. தனக்கும் தான் மருவிய தலைவனுக்கும் இடையே இருந்த பாலுறவுச் சிக்கலை குறிப்பாகச் சொல்கிறாள்.

          இப்பாடலுக்குப்  பொருள் எழுதிய பெருமழைப் புலவரும் அவருக்கு முன்னர் கொளு எழுதியோரும் இது ஒரு தலைவன் கூற்று என்கின்றனர். அவன் பொருள் தேடித் சென்ற பொழுது தலைவியை நினைத்தானா என்று தோழி கேட்டாளாம் .அதற்குத் தலைவன் பதில் கூறினானாம் . பாடலை வரிசைப்படுத்துவோரும், உரை எழுதுவோரும் இவ்வளவு வலிந்து ஒரு கற்பனை செய்யக் காரணம்? வெள்ளம் போல் பெருக்கெடுக்கும் காமம் பற்றி ஒரு பெண் பேசுவது அவளுக்கு   இழுக்கு என்னும் கொள்கையே; இத்தகைய பொருத்தமற்ற விளக்கத்தின் காரணம் ஆகும். எனவே உரைக்கும் கொளுவிற்கும் பனுவல் செய்திக்கு அடுத்த சிறப்பிடமே தர வேண்டும் .  

          ஒளவையின் இன்னொரு பாடலையும்  தலைமகன் கூற்றாகவே உரையாசிரியரும், கொளு எழுதியோரும் பார்க்கின்றனர். அவ்வாறு சொல்வதன் காரணம் அதில் இடம் பெற்றிருக்கும் உவமை. 

"நல்லுரை இகந்து புல்லுரை தாஅய்ப்
பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல
உள்ளம் தங்கா வெள்ளம் நீந்தி
அரிது அவா உற்றனை நெஞ்சே நன்றும்
பெரிதால் அம்ம நின் பூசல் உயர்கோட்டு
மகவுடை மந்தி போல
அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே ."(குறுந்தொகை -29)

          மழை நீர் நிறையும் பச்சை மண் பானை கரைந்து ஓடுவதைப்போல; உள்ளத்தால் தாங்க முடியாத ஆசைப்பெருக்கை நீந்திக்கடக்க அவா உற்ற நெஞ்சே என்று தன் மனதோடு புலம்புகிறாள். இவ்வாறு ஒரு பெண் பேசுவது அழகல்ல என்று நினைத்தோர் பாடலைத் தலைமகன் கூற்றாக்குகின்றனர். இதை அடுத்து இன்னொரு உவமையும் இப்பாட்டில் இடம் பெற்று நம்மை நெஞ்சு நெகிழ வைக்கிறது. ஒளவையை இற்செறித்த அவளது தாய் தன் ஆற்றாமையை எங்கே கொட்டியிருப்பாள்? தன் மகள் மீது தானே; பெற்றவளிடமிருந்து பாசத்தில் நனைந்த நல்ல சொற்களை அவளால் கேட்க முடியவில்லை. மாறாக சுடுசொற்களே; மரத்தின் உச்சியில் குட்டியைத் தழுவிக் கொண்டிருக்கும் மந்தி போல என்னைத் தன் நெஞ்சோடு தழுவி என் குறையைக் கேட்பவர் எவருமில்லையே என்று விம்முகிறாள். அவளுக்கு துன்பத்திற்கு மேல் துன்பம் பெருகுகிறது. இந்தப் பாடலை இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைமகன் தன் நெஞ்சை நோக்கிப் பேசுவதாகப் பொருள் கூற முயன்றுள்ளனர்.ஆனால் குட்டியை அணைக்கும் தாய்க்குரங்கு என்னும் உவமை இப்பாடல் ஒளவையின் தன்னுணர்ச்சியைப் புனைகிறது என்ற கருத்தை உறுதி செய்கிறது.

கலைக்குழுத் தலைவியின் மேலாண்மைத் திறன்:
          ஒளவையின் கலை வாழ்வும் அரசியல் வாழ்வும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. புறம்.390&392ம் பாடல்கள்; ஒரு கிணைப் பொருநன் பாடுவதாக ஒளவை பாடியன. பெண்ணாகிய ஒளவை ஒரு ஆண்  பாடியது போல் பாடியிருப்பதன் காரணம் தன்  குழுவைச் சேர்ந்த பொருநனின் நன்றியுணர்வை குழுத்தலைவி என்ற முறையில் மன்னனிடம் இவள் வெளிப்படுத்தும் மேலாண்மை நடைமுறை எனலாம்.

அரசியல் தொடர்பு:   
          நாஞ்சில் வள்ளுவனை விட்டு வடக்கு நோக்கி மேலே சென்ற ஒளவை தன் பாணர் குழுவோடு கொங்கு நாட்டுப் பகுதியில் இருந்த இனக்குழுக்களில் ஊடாடுகிறாள். பசுக்கள்/கறவைகள் மிகுந்த கொங்கு நாட்டுப் பகுதியில் வெட்சிப் போர், கரந்தைப்போர் நிகழ்ந்த இடங்களில் அவளது பாடல்கள் பிறந்துள்ளன. அத்தலைவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.(புறம்.-பா.-269&290)

          முதன்முதலாக அதியமானைக் காணச் சென்ற அவளது சொல்லாடல்; பரிசில் வாழ்க்கைக்குரியோரின் செம்மாந்த பண்பைத் தாங்கி நிற்கிறது(புறம்.-பா.-206). அதியனைச் சந்தித்த ஒளவை உடன் அவனுடன் நிரந்தரமாகத் தங்கவில்லை. தன்  பாணர் குழுவோடு அவள் பல்லூரும் சுற்றி வந்தாள். (நற்றிணைக்கு உரை எழுதிய பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் பாடினோர் வரலாறு கூறுங்கால் ஒளவை கொண்கானத்து நன்னன் பற்றியும் பாடியதைக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதற்குரிய பாடல் சான்று ஏதும் கிட்டவில்லை. ஒருவேளை இருந்து அழிந்திருக்கலாம்.அதையொட்டிய பழைய செய்தியை இவர் குறித்திருக்கலாம்-ப.11)  மீண்டும் மீண்டும் அதியனிடம் வந்து பாடிப் பரிசில் பெற்றாள்(புறம்.-பா.-101&103). அதியமானுடன் அவள் தங்கியிருந்த காலத்தில் அவன் தன்னைச் சூழ்ந்திருந்த எழுவரோடு--- இனக்குழுத்தலைவரோடும்,வேளிரொடும்  , திருக்கோவலூர் மலயமானோடும், தொண்டைமானோடும், சேரமான் பெருஞ்சேரலிரும்பொறையோடும் பகையுற்றிருந்தான்; போரிட்டான் என்ற வரலாற்றுச் செய்திகள்  புறநானூறில் பதிவாகியுள்ளன. இனக்குழுத் தலைவருடன் செய்த போர்-புறம்.-87,88,89,90;  தொண்டைமானுடன் கொண்ட பகை காரணமாக ஒளவை தூது செல்லல்-புறம்.-பா.-95;  கதிர்நெல்லின் செம்மல் மூதூருடைய வேளிருடன் செய்த போர்-புறம்.-பா.-97,98;  திருக்கோவலூரை வென்றமை -புறம்.-பா.-99&93

ஒளவை அதியன் உறவு:                
          அதியனுக்கும் ஒளவைக்கும் இடையிலிருந்த உறவு தந்தையின் முன் நிற்கும் புதல்வரின் உறவு போன்றது என்று அவளது பாடலே பகர்கிறது. ஒளவைக்கு நெல்லிக்கனி கொடுத்த நிகழ்வு (புறம்.-91) அவர்களது நட்பின் நெருக்கத்தைக் காட்டுகிறது. உன் அன்பால் என்சொல் தந்தையர்க்குப் புதல்வர் சொல்லும் சொல் போல் அருள் சுரக்கும் தன்மையன என்கிறாள் (புறம்.92). எனக்கு நீ இனியவன்; பகைவர்க்கு நீ கொடியவன் (புறம்.பா.-94) என்கிறாள். அதியனை தாட்பாடு சின்னீரில் இருப்பினும் களிற்றைக் கொல்லும் முதலை போன்றவன் என்கிறாள்(புறம்.-பா.-104). தீக்கடை கோல் போல அதியனின் வீரமும் வலிமையும் மறைந்திருக்கும்(புறம்.-பா.-315). அதியனின் மகன் எழினி பிறந்த போது ஒளவை உடனிருந்தாள். அதியனின் இறப்பு வரை அவள் இருப்பு தொடர்ந்தது. அதியன் இறந்த போது அவள் கையற்றுப் பாடினாள்(புறம்.-பா.-231,232,235). பின்னர் எழினி மன்னனாக இருந்த காலத்தும் அவள் தகடூரிலேயே இருந்தாள்(புறம்.-பா.-96,100).
 
          புறவாழ்க்கையில் சமுதாயத்தோடு ஒளவை கொண்ட உறவு புறம்.-பா.-286ல் பொதுமக்களுடன் நெருங்கிய உறவுடைய ஒளவையைப் பார்க்கிறோம். வெற்றி அல்லது வீரமரணம் தான் புத்தேள் உலகிற்கு இட்டுச் செல்லும் என்னும் கொள்கை உடைய சமுதாயத்தில் வாழ்ந்தவள் அவள். தன் மகனின் வீரத்தைப் போற்றித் தலைவன் அவனுக்கு சிறப்பாகக் கள் வழங்குவது கண்ட மறக்குடித்தாயை அருகிருந்து நெருங்கிப் பார்த்து அவளது உள்ளக்கிடக்கையைப் பாடுகிறாள்.   

          புறம்.-290ல் கரந்தைப்போர் தொடங்கப் போகிறது. முன்னதாக தலைவன் எல்லோருக்கும் கள் வழங்குகிறான். மக்களது நெருங்கிய உறவும் பழக்கமும் ஒளவைக்கு இருந்ததால் அவள் பின்வருமாறு கூறுகிறாள். "நுந்தை தந்தைக்கு இவன்றந்தைதந்தை கண்ணிமையாமல் பகைவர் எறிந்த படைகளை எல்லாம் தானேற்று மாண்டான். அதனால் முதலில் இவனுக்கு கள்ளைக் கொடு "என்கிறாள்.

          புறம்.-295ல் தன் மகன் வீரமரணமடைந்ததைக் கண்ட மறக்குடித் தாயின் மெய்ப்பாட்டு மாற்றத்தை விதந்தோதுகிறாள். இது சமுதாய மக்களோடு அவள் கொண்ட நெருக்கத்தின் விளைவே.

          புறம்.-பா.-311------போர்க்களத்தில் வீரமரணமடைந்து ஈமக்கடன் செய்ய யாருமற்ற வீரனுக்கு தன்  குழுவோடு சேர்ந்து இறுதிக்கடன் செய்யும் சமுதாயக் கடப்பாடுள்ளவளாக இருக்கிறாள்.

அன்றாட வாழ்வில் சாமானிய மக்களோடு ஒளவை கொண்ட நெருக்கமான உறவே அதியன் இறந்த போது கூடியிருந்து ஒப்பாரி பாட வைக்கிறது. ஒப்பாரி பாடும் பெண்கள் வட்டமாக அமர்ந்து இருபுறமும் அருகிருப்பவர் தோளில் கை போட்டுச் சேர்ந்து தான் குனிந்து இராகத்தோடு அழுதுகொண்டு பாடுவர்.(புறம்.-பா.-235)  

பாலிமொழி அறிந்தவள்:
          தம்மபதப் பாடலைத் தழுவி ஒரு புறப்பாடல் பாடியிருக்கிறாள் ஒளவை. அவள் பாலி மொழியும் பௌத்தக் கொள்கைகளும் அறிந்தவள் என்பது இதனால் புலனாகிறது. 
"காடா கொன்றோ நாடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே." -(புறம்.பா.187)

          காடாக இருந்தாலும், நாடாக இருந்தாலும், மேடாக இருந்தாலும், பள்ளமாக இருந்தாலும்; ஆடவர் செல்லும் வழியைப் பொறுத்தே நாட்டிற்கு நன்மை விளையும் என்பது பொருள்.   

ஒளவைக்குப் பிடித்தவை: 
          ஒளவையார்  ரசித்துக் கள் அருந்தியவர். அதியமான் இறந்தவுடன் அவருக்கு முதலில் நினைவுக்கு வந்தது அவன் கொடுத்த கள் தான். தான் பாடிய ஒப்பாரியில் "கள் கொஞ்சமாக இருந்தால் அதை அப்படியே எனக்குக் கொடுத்து விடுவான்; மிகுதியான கள் இருந்தால் என்னைப் பாடச்  சொல்லிக் கேட்டுக் கொண்டே அவன் குடித்து மகிழ்வான்" என்று தான் தொடங்குகிறார்.   

          விரும்பி ஊன் உணவை மிகுதியாக உண்டவர். சேர்ந்து உணவுண்ண அமர்ந்தால் பருத்த கறித்துண்டுகள் எலும்போடு சேர்ந்தனவாய் இருப்பதையெல்லாம் ஒளவைக்குக் கொடுத்து விடுவானாம் அதியமான் . 

          அதியமானின் தந்தைமை . 'புலவு நாறும் என்தலை  தைவந்தனன்' என்கிறார். கலைக்குழுத் தலைவியாகிய  தன்மேல் அதியமானுக்கு இருந்த பற்றையும் பாசத்தையும் அந்த ஒப்பாரிப் பாடலில் சொல்லோவியமாகக் கொடுக்கிறார். 

          தமிழ்நாட்டின் வெற்றிகரமான எதிர்காலம் ஒளவைக்குப் பிடித்த  கனவு ஆகும். அரசியலில் ஈடுபட்டிருந்த  இனக்குழுத் தலைவர்கள் , வேளிர்கள் , நாஞ்சில் வள்ளுவன் ,அதியமான் ,அவனது மகன் எழினி ,தொண்டைமான் இளந்திரையன், சேரன் மாவண்கோ ,பாண்டியன் கானப்பேரெயில் கடந்த  உக்கிரப்பெருவழுதி, சோழன் இராசசூயம் வெட்ட பெருநற்கிள்ளி  அனைவருடனும் அவ்வப்போது தொடர்பு கொண்டவள் ஒளவை .ஒவ்வொருவருடனும் அவள் ஒரு தலைமைத் தன்மை வாய்ந்த மதியூகி போல உரையாடுவதைப்  பார்க்கிறோம். புறம்.-367ம் பாடல் தக்க சான்று. இப்பாடல் சேரன் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேர்தந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் ராசசூயம் வேட்டபெருநற்கிள்ளி ஆகிய மூவரும் சேர்ந்து இருந்தமையை அவர் பாடியதாகக் கூறுகிறது. 

"நாகத்தன்னை பாகார் மண்டிலம்
தமவே ஆயினும் தம்மொடு செல்லா
வேற்றோராயினும் நோற்றோர்க்கு ஒழியும்
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்
பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து ..........."என்று பாடுகிறார்.

          'அதாவது நாகலோகத்தைப் போன்ற தமிழகம்; மூவேந்தர்க்குரியதெனினும் அவர்கள் இயற்கை எய்தும் போது அவர்களோடு செல்வதில்லை. தொடர்பற்ற  வேற்றுநாட்டவர் புகுந்து தமிழகத்தை அடிப்படுத்துவதற்கும் வாய்ப்புண்டு. எனவே பார்ப்பனருக்கு பூவும் பொன்னும் தாரை வார்த்து தானம் செய்க. இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசுக; அதாவது தன்னைப் போன்ற பாணர் கூட்டத்திற்கும் வரையாது வழங்க வேண்டும். அதுவே நல்வினை. இறக்கும் போது உயிர்க்குத் துணையாவது தாம் ஆற்றும் ஈகையே. ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர் முத்தீ போல அழகுற வீற்றிருக்கும் வெண்கொற்றக்குடை வேந்தர்களே!' என்பது பொருள். இப்பாடல் ஒளவையின் அரசியல் அறிவையும், தமிழகத்து மக்களின் அன்றைய நம்பிக்கைகளையும், கொள்கைகளையும் தெளிவாக்குகிறது. தமிழகத்தை மூவேந்தர் ஒழிந்த பிற வடநாட்டு அரசர்கள் அடிப்படுத்தும் முயற்சியில் இருந்தனர். (பார்ப்பனருக்கு பூவும் பொன்னும் தாரை வார்த்துக் கொடுத்தால் புண்ணியம் கிடைக்கும் என்று தமிழக  மக்கள் நம்பினர். மூவேந்தரும், ஒளவை போன்ற பாணர், பிற இனக்குழுக்களும் நால்வருணப்பாகுபாட்டையும் அந்தணர் தலைமைத்தன்மையையும் ஏற்றுக்கொண்டனர். மூவேந்தரும் வைதீகம் போற்றினர்.) 

          ஒரு சராசரிப்  பெண்ணாக சமுதாய மக்களுடன் ஊடாடிய ஒளவை; நாஞ்சில் வள்ளுவனிடம் முதலில் தன்  கலைக்குழுவோடு சென்று பரிசில் பெற்ற பின்னர்; அவள் சுற்றித் திரிந்த கொங்குநாடு; அங்கு  நிகழ்ந்த அரசியல் கொந்தளிப்பில்; வேளிர், அதியன், மலையமான், தொண்டைமான் , சேரர், சோழர் அனைவர்க்கும் இடையே நிகழ்ந்த அதிகாரப் போட்டியில் சிக்கித் தத்தளித்துக் கொண்டு இருந்தது, கொங்குநாடு சேரரால் முற்றிலும் வசப்படுத்தப்பட்டதையும், அதியன் இறப்பில் தன்  கண் முன்னர் கண்டாள். அதியனின் மகன் எழினி சேரனிடம் சிற்றரசனானான். இந்தச் சூழலின் இறுக்கம் தளர்ந்து சேரனும்,சோழனும்,பாண்டியனும் சேர்ந்து இருந்தபோது ஒளவை முதிர்ந்த அரசியல்வாதியாக தமிழகத்தில் அந்நியரின் ஆதிக்கத்திற்குரிய போர்மேகம் சூழ்ந்து இருந்தமையைக் கூறி; அவர்கள் ஒற்றுமையை வலியுறுத்துகிறாள். அவள் அவ்வாறு உரையாட மூவேந்தரும் இடம் கொடுத்தனர். அன்றைய தேவை; வெற்றி அல்லது வீர மரணத்திற்குத் தயாராக இருக்கும் இளைஞர்கள். அதனால் தான்; 

          தன் மகன் மன்னனிடம் வாங்கும் சிறப்பான சலுகைகளைக் காட்டிலும் அவன் கால்கழி கட்டிலில் வெள்ளுடை போர்த்திப் பெரும்பேறு பெற வேண்டுமென்று அவா கொண்ட தாயை ரசிக்கிறாள்.(புறம்.-286)

          தன் மகனின் வீர மரணத்தைக்கேட்டவுடன் அவனுக்குக் குழந்தைப் பருவத்தில் பாலூட்டிய தன்  வற்றிய மார்பில் மீண்டும் பால் சுரந்தது என்ற வீரத் தாயைப்  பாடுகிறாள் (புறம்.-295)

          கரந்தைப்போருக்குக் கிளம்பும் முன்னர் யாருக்கு முதல் சிறப்பு செய்யவேண்டும் என்று அறிவுறுத்தி  அந்தப்போரில் ஈடுபட இருந்த வீரக்குடிமகனை ஊக்குகிறாள்.(புறம்.-290) 

          அரசியல்வாதியாகிய அவளின் சமுதாய ஊடாடல் தமிழகத்திற்கு வீரர்கள் தேவை என்பதை உணர்கிறது. அவள் எழுதிய தம்மபதத் தழுவல் பாடலில் இடம்பெறும் 'ஆடவர்' போர்வீரர் ஆவர். அப்பாடலில் அவள் சுட்டும் நிலன் =தமிழகம். அதனால் தான் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று அகப்பாடல்கட்குரிய கலைச்சொற்களைக் கையாளாமல் நாடு=மருதம்; காடு=முல்லை; அவல் =நெய்தல்; மிசை =மலை என்று தமிழகம்முழுவதையும் இரண்டடிக்குள் அடக்குகிறாள். தமிழகத்து இளைஞர்கள் எந்த அளவுக்கு வீரயுகக் கொள்கைகளை ஏற்று நடக்கிறார்களோ; அந்த அளவுக்கு தமிழகம் நல்லநிலையில் இருக்கும் என்பதைப் புலப்படுத்துகிறாள் 

முடிவுரை:
          தமிழக வரலாற்றில் முதல் பெண்ணியவாதியாகிய ஒளவை என்னும் ஆளுமை ஒரு திறமையான கலைக்குழுத் தலைவி, ஒரு தேர்ந்த அரசியல்வாதி, ஒரு சராசரிப்பெண்  என்ற மூன்று பரிமாணங்களை உள்ளடக்கியது. மூன்று பட்டைகளைக் கொண்ட கண்ணாடி - prism - போல. ஊனும், கள்ளும்   விரும்பியவள். பாளி மொழியும் பௌத்தக் கொள்கையும் அறிந்தவள். தலைசிறந்த மேலாண்மையாளர். வேளிர் ஆண்ட நாஞ்சில் நாடு முதல் கொங்கு நாடு முழுமையும் சுற்றித் திரிந்தவள். தொண்டைமானிடம் தூது சென்றவள். அதியனின் அன்பிற்குப் பாத்திரமானவள். தந்தை முன் நிற்கும் புதல்வன் போல அவன் சொற்கேட்டு நின்றவள். வேளிருடனும், இனக்குழுத் தலைவருடனும் ஊடாடித் தமிழகத்தின் நிலைமையை நன்கு புரிந்து வைத்திருந்தாள்.   

          ஒளவையை முதியவளாக தமிழ்ச் சமூகம் சித்தரித்த காரணம் ' பாட்டி ' என்ற சொல்லின் பொருளை மறந்தமை ஆகும். எல்லா முதுபெண்டிரும் இளமையைக் கடந்து தானே முதுமை அடைவர். அவளது இளமையின் மன அவசத்தை ஏறிட்டுப் பார்க்கக் கூடத் தயாராக இல்லாத சமூகம் நம்முடையது என்பதை நாம் ஜீரணித்துத் தான் ஆகவேண்டும். ஒளவையின் அகவாழ்க்கையில் அவள் ஏங்கி ...அழுது ...கணவனைப் பிரிந்து ...தனித்து ...இற்செறிக்கப்பட்டு ...ஆதரவான தாய் அணைப்பும் கிடைக்காமல் ...நொந்து புலம்புவதைப் பார்த்தோம். ஆனாலும் அவளது காதல்மனம் தன்  கணவனின் இயலாமையைப் பொருட்படுத்தாமல் சேர்ந்து இருக்கும் வழியையே நாடியது. ஒளவைக்கு  வெள்ளை ஆடை உடுத்தி கோல் ஒன்றைப்  பிடித்துக் கொண்டு வளைந்த முதுகுடன் நிற்கும் உருவமாகக் காட்டுவது அவளது முழுப் பரிமாணத்தையும் அறியாதோர் செய்த செயலாகும் .  நமது சமூகம் தனது விருப்பத்திற்கு ஏற்பக்  கொடுத்த உருவமே கிழவி உருவம். 
                                                                                                                                                   


பயன்பட்ட நூல்கள்:
- குறுந்தொகை - திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
- அகநானூறு-களிற்றியானை நிரை - ந.மு.வேங்கடசாமி நாட்டார் & ரா.வெங்கடாசலம் பிள்ளை (உ.ஆ.) - திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் - 2009
- அகநானூறு -மணிமிடை பவளம் - ந.மு.வேங்கடசாமி நாட்டார் & ரா.வெங்கடாசலம் பிள்ளை (உ.ஆ.) - திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் -2007
- நற்றிணை -கு.வெ.பாலசுப்ரமணியன் (உ.ஆ.) - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மதுரை, முதல் பதிப்பு -2004
- புறநானூறு - கழக வெளியீட்டு எண் - 438 - முதற் பதிப்பின் மறு அச்சு - 2007
- புறநானூறு - கழக வெளியீட்டு எண் - 598 - முதற் பதிப்பின் மறு அச்சு - 2007
- அரங்க மல்லிகா - பெண்ணின் வெளியும் இருப்பும் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை -முதற்பதிப்பு -2008
- காவ்யா - தமிழிதழ் - ஏப்ரல் - ஜூன் 2018 - சு.சண்முகசுந்தரம், சென்னை.





________________________________________________________________________
தொடர்பு: முனைவர் ச.கண்மணி கணேசன் (kanmanitamilskc@gmail.com)




Saturday, August 4, 2018

எழுத்துடை நந்தி

— து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.



முன்னுரை:
          திருப்பூரில் இயங்கி வருகின்ற வீரராசேந்திரன் தொல்லியல்-வரலாற்று ஆய்வு மையத்தினர், பல்லடம் பகுதியில் சென்ற ஆண்டு அருமையான இரண்டு தொன்மைச் சிற்பங்களைக் கண்டறிந்து செய்திகள் வெளியிட்டதோடு அவற்றைத் தொல்லியல் கழகத்தாரின் ஆண்டிதழான “ஆவண”த்திலும் பதிவு செய்திருந்தனர். கோவை-திருப்பூர் பகுதியில் களப்பணித் தேடல்கள் மூலம் தொல்லியல் தடயங்களைக் கண்டறிந்து வெளிப்படுத்துவது, அவற்றைப் பதிவு செய்வது போன்ற பணிகளில் மேற்சொன்ன அமைப்பினரும், நானும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். மேற்குறித்த இரு சிற்பங்களை நேரில் ஒரு முறை கண்டு அவற்றில் பொறிக்கப்பட்ட எழுத்துகளைப் படிக்கவும் அவை கூறும் செய்திகளைப் பொதுத்தளத்தில் பகிர்ந்து கொள்ளவும் விருப்பம் உண்டாயிற்று. அதற்கான வாய்ப்பு இந்த (2018) ஜூலையில் ஏற்பட்டது. அதன் பகிர்வு இங்கே.

பயணம்:
          கண்டறியப்பட்ட இரு சிற்பங்களுள், ஒரு சிற்பம் நந்திச் சிற்பம். கோயில்களில் எங்கும் காணக்கிடைப்பதுதான். எங்காவது, இடிபாடுற்ற கோயில்களிலும், ஒரு காலத்தில் கோயில் இருந்திருக்கக் கூடும் என்பதற்கான எச்சங்களைக்கொண்ட ஊர்ப்புற வெளிகளிலும் நந்திச் சிற்பங்கள் தனியே காணப்படுவதுண்டு.  ஆனால், இந்த நந்திச் சிற்பங்களில் எழுத்துப்பொறிப்பினைக் காண இயலாது. நந்திச்சிற்பத்தின் பீடப்பகுதியில் எழுத்துப்பொறிப்புகளைப் பார்க்கவியலும். ஆனால், அதன் உடல் பகுதியில் எழுத்துகள் அமைவது பெரும்பாலும் இல்லை. மிக அரிதாக, ஆந்திராவில் நெல்லூர் மாவட்டத்தில் எழுத்துப்பொறிப்புடன் ஒரு நந்திச் சிற்பம் கிடைத்துள்ளதாக அறிகிறோம். அதனை அடுத்து தமிழகத்தில், எழுத்துப்பொறிப்புடன் நந்திச் சிற்பம் கிடைத்துள்ளது மேற்குறித்த அமைப்பினர் கண்டறிந்த சிற்பமே. எனவே, அச்சிற்பம் மிக அரிதான ஒன்று என்பதில் ஐயமில்லை. அதைக்காணும் ஆவலில் நண்பர் பல்லடம் பொன்னுசாமியுடன் தொடர்புகொண்டு அதன் அமைவிடம் பற்றிக் கேட்டபோது, அவரும் உடன் வருவதாகக் கூறி என் பயணத்தில் பல்லடத்தில் இணைந்துகொண்டார். வீரராசேந்திரன் வரலாற்று மையத்தில், தொல்லியல் தடயங்களைத் தேடிக் களப்பணி மூலம் சுற்றிக்கொண்டிருக்கும் உறுப்பினர்களுள் அவரும் ஒருவர். அவர் உடன் வருவது பயண இலக்கைச் சென்றடையும் என் பயணத்தை எளிதாக்கியது. கோவை-திருச்சி சாலையில் பல்லடம், அதனை அடுத்து அவிநாசிபாளையம் என்று பயணம் தொடர்ந்தது. (இந்த இடத்தில், ”பயணம்” என்னும் சொல்லைச் சிலர் கையாள்கின்ற முறை ஒன்று நினைவுக்கு வருகிறது. பயணத்தைக் குறிக்கும் “செலவு’  என்னும் சொல் “செல்”  என்னும் வினையின் அடிப்படையில் பிறந்த சொல். ஆனால், பயணம் என்னும் சொல்லுக்கு வினை வடிவில் வேர் எது வாயிருக்கும் என எண்ணுவதுண்டு. ஆனால், புலப்படவில்லை. பயணம் என்னும் பெயர் வடிவச் சொல்லைச் சிலர் வினை வடிவாக மாற்றி எழுதுவதைக் கண்டிருக்கிறேன். ”பயணித்தேன்”, ’பயணித்தான்”  என்பது போன்று எழுதுகிறார்கள். “மரணித்தான்”  என்னும் வினை வடிவமும் அது போன்றதே. மரணம் என்பது பெயர்ச்சொல். பெயர்ச்சொல்லை வினை வடிவத்துக்கு இவ்வாறு மாற்றி எழுதுவது இயல்பாகத் தோன்றவில்லை; வலிந்து ஆக்கிய ஒரு சொல்லாகவும், இது பிழையானது என்பதாகவும் எனக்குத் தோன்றுகிறது. இவ்வகைப் பெயர்ச்சொல்லை வினை வடிவிலான ஒரு துணைச்சொல்கொண்டு கையாள்கிறோம். பயணம் செய்தான், பயணம் மேற்கொண்டான், பயணப்பட்டான் என்று வழங்குகின்றோம். அது போலவே, மரணமுற்றான், மரணமடைந்தான் என்று வழங்குகிறோம். இவ்வகை வழக்கு இயல்பாயுள்ளதைக் காண்க). 

முதியானெரிச்சல்-நீலியம்மன் கோயில்:
          அவிநாசிபாளையத்தை அடுத்து, சற்று நேரத்தில் கண்டியன்கோயில், அலகுமலை ஆகிய இடங்களுக்குச் செல்லும் பிரிவுச் சாலைகள் வந்தன. அவற்றைக் கடந்த பின்னர் வருகின்ற ஒரு பிரிவுச்சாலையில் உள்நுழைந்து சென்றோம். முதியானெரிச்சல் என்னும் ஊர் வந்தது.  இங்குள்ள நீலியம்மன் கோயிலில் பழமையான ஒரு கொற்றவைச் சிற்பம் உள்ளதாக நண்பர் கூறி அழைத்துச் சென்றார். முதியானெரிச்சல் மிகச் சிறிய ஒரு கிராமம். நான் இதுவரை கேள்விப்படாத, சென்று பார்த்திராத ஒரு கிராமம். இது போன்று ஒரு வட்டத்தின் (தாலுகா) உட்கிடையாகப் பல குக்கிராமங்களில், பல நூறு ஆண்டுகளாக நாட்டுப்புற மக்கள் வழிபட்டு வருகின்ற தாய்த்தெய்வக்கோயில்கள் அமைந்துள்ளன. உட்கிடைப்பகுதி மக்களுக்கு மட்டுமே இத்தகைய கோயில்கள் தெரிந்திருக்கும். நண்பரைப்போன்றவரின் தேடுதல் வழியாகவே இக்கோயில்கள் வரலாற்று ஆர்வலர்களுக்குத் தெரியவரும். சில கோயில்கள், குலவழிபாட்டுக் கோயில்களாகவும் அமையும்.

கோயிலை நோக்கிப்பயணம்-மண்பாதை

          நீலியம்மன் கோயில் அமைந்திருக்கும் இடம் மிக அமைதியான ஒரு சூழலைக்கொண்டிருந்தது. பெரியதொரு ஆலமரமே அந்த இடத்தின் முதன்மையான காட்சி மையம். தொன்றுதொட்டு, மரம், வழிபடு தெய்வமாக இருக்கும்; அல்லது மரத்தடிச் சூழலே கோயிலாகவும், அங்கு வைக்கப்படும் கற்களே கடவுளர்களாக இருக்கும். நாட்டார் மரபில் கோவிலின் தொடக்கத்தோற்றம் இதுதான். இங்கு நாங்கள் பார்த்த ஆலமரம் பழமையானது. ஏராளமான விழுதுகள். தாய் மரத்தின் அடிப்பகுதி நெருப்புப் பிடித்ததன் காரணத்தால் பெரும்பகுதி அழிவு கண்டிருந்தாலும், அதன் விழுதுப்பகுதிகளே தனித்தனி மரங்களாகத் தாய் மரத்தைத் தாங்கி நின்றன. மரத்தின் உயரம் அதன் பழமையைச் சுட்டியது. மரத்தின் அடியில், கற்களைக்கொண்டு அமைத்த ஒரு மேடை. அதில், ஏழு சிறு கற்களும், ஐந்து பெரிய கற்களும் பதிக்கப்பட்டிருந்தன. இந்த ஒட்டுமொத்த அமைப்பு கன்னியாத்தா, கருப்புசாமி என அழைக்கப்பட்ட வழிபடு தெய்வங்கள். முன்புறத்தில் ஒரு கல்லும், நிறுத்தப்பட்ட ஒரு வேலும்.

ஆலமரத்தடி-கன்னியாத்தா, கருப்பராயன்


நீலியம்மன் கோயில்


நீலியம்மன் கோயில்-இன்னொரு தோற்றம்

நீலியம்மன் சிற்பம்:
          ஆலமரத்தின் அருகில், நீலியம்மன் கோயில். நான்கு சுவர்களும், ஒரு மேற்கூரையும் உள்ள ஒரே ஒரு கருவறையில், நீலியம்மன் கொற்றவையாக வீற்றிருக்கும் தோற்றம். பழமையான சிற்பம். எட்டுக்கைகள். வலது காலைக் குத்தாக மடக்கி, இடது காலைத் தொங்கவிட்டவாறு அமர்ந்திருக்கும் நிலை. இந்த ஆசனத்தைச் சிற்பக்கலை   உத்குடி ஆசனம் என்று குறிப்பிடும். அம்மனின் முகத்தில், கண்கள், மூக்கு, செவிகள் ஆகியனவற்றில் தெளிவான செதுக்கல் இல்லை. கொற்றவைக்குள்ள ‘ஜுவாலா மகுடம்’  என்னும் தழல் முடியும் தெளிவாகச் செதுக்கப்படவில்லை. தலையைச் சுற்றித் திருவாசி போன்ற ஒரு தோரண அமைப்பு தெரிகிறது. செவிகளில் குண்டலங்கள் இருப்பதும் தெளிவாகப் புலப்படவில்லை. கழுத்தில் அணிகலன்கள்  புலப்படுகின்றன. ஓர் அணிகலன் மார்புப்பகுதிக்குக் கீழேயும் தொங்கலாகக் காணப்படுகிறது. வலப்புறமுள்ள நான்கு கைகள் நன்கு தெரிகின்றன. அவை ஏந்தியுள்ள ஆயுதங்களும் தெளிவாகத் தெரிகின்றன. முன்புற வலக்கையில் நீண்ட தண்டம். வேல் என்றும் கொள்ளலாம். இன்னொரு கை மடக்கி உயர்த்திய நிலையில் உடுக்கை ஏந்தியுள்ளது. மற்ற இரு கைகளில் ஒன்றில் கட்கம் என்னும் வாள் உயர்த்திப்பிடித்த நிலையில் உள்ளது. நான்காவதாக உள்ள கையில், தரையை நோக்கித் தாழ்ந்த நிலையில் வளைவுள்ள குறுவாள் போல ஓர் ஆயுதம். இது, “வாங்கு”  என்னும் ஆயுதம் என்று பூசையாளரான செல்வி என்னும் பெண்மணி கூறினார். இது புதிய பெயராய்த் தோன்றியது. கட்டுவாங்கம் என்னும் ஆயுதமும் கடவுளர் கையில் ஏந்துகின்ற ஆயுதங்களில் ஒன்று. கட்டுவாங்கத்தைத் தான் பூசையாளர் பெண்மணி ‘வாங்கு’ எனக்குறிப்பிட்டுள்ளார். நூல்கள் வாயிலாக மட்டுமே நாம் அறிய நேரிடும் ஓர் ஆயுதத்தின் பெயர் இன்றும் ஊர்ப்புறத்தில் (நாட்டுப்புறத்தில்) எளிய மக்களின் வழக்கில் இருப்பது கண்டு வியப்பேற்பட்டது.

நீலியம்மன் சிற்பம்

          இடப்பக்கமுள்ள கைகளில் முன்கையில் கபால ஓடு. அதனை அடுத்த கையில் மணி. அதனை அடுத்து மேற்புறமாக உள்ள கையில் இருக்கும் ஆயுதம் இன்னதெனத் தெரியவில்லை. அதனை அடுத்துள்ள மேற்புறக்கை எதையும் ஏந்தியிருக்கவில்லை. ஆனால், விரல்களை விரித்துச் சாய்த்தவாறுள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்தார் வெளியிட்டுள்ள கடவுளர்களின் கை முத்திரைகளில் இடம் பெற்றுள்ள “விஸமய” முத்திரையில் இந்தக் கை உள்ளது. கீழே தொங்கவிட்ட காலும், காலின் கீழுள்ள உருவமும் சிதைந்துள்ளன. கருவறையில் இரண்டு பிள்ளையார் சிற்பங்களும் உண்டு. நீலியம்மனின் எதிரே ஒரு சூலம்.

கோயில் வளாகம்:
          அம்மன் கோயிலும், ஆலமரமும் இருக்கும் கோயில் வளாகத்தினுள் அரளிச் செடிகள். வளாகத்தின் சுற்றுமதிலாகக் பெருங்கற்களை அடுக்கியிருக்கிறார்கள். இவையெல்லாம் பழமையான அமைப்புகள். கோயில் பூசையாளராக இருக்கும் பெண்மணி செல்வியைப் பற்றிக் குறிப்பிட்டுக் கூறவேண்டியுள்ளது. முதியானூர் ஊர்மக்கள் போதிய அக்கறை எடுத்துக்கொள்ளாததால், கோயிலில் முறையாக ஆண் பூசையாளர் இல்லை; முறையான பூசையும் இல்லை. கோயிலுக்கருகில் குடியிருக்கும் செல்வி மட்டுமே நாள்தோறும் விளக்கேற்றித் தனக்குத் தெரிந்தவாறு பூசை செய்து வருகிறார். கோயிலில் சுடுமண் குதிரைச் சிற்பங்கள் ஒரு காலத்தில் இருந்துள்ளன என்றும் செல்வி சொன்னார். சிற்பத்தின் ஓரிரு ஓட்டுத்துண்டுகளையும் காண்பித்தார். கோயில் வளாகத்தில் வெள்ளருகு என்னும் செடியை நண்பர் காண்பித்தார். இச்செடியை நான் முன்னர் பார்த்ததில்லை. எனவே, ஒளிப்படமாகப் பதிந்துகொண்டேன்.

வெள்ளருகுச் செடி

ஒரு காலத்தில் குதிரைச் சிற்பங்கள் இருந்தன

சின்னாரியபட்டி- கம்பத்தீசுவரர் கோயில்:
          முதியானூரிலிருந்து அடுத்த பயணம் பூசாரிபாளையம் வழியே சின்னாரியபட்டி என்னும் ஊரிலிருக்கும் கம்பத்தீசுவரர் கோயிலை நோக்கித் தொடர்ந்தது. அங்குதான் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட, எழுத்துப்பொறிப்புள்ள நந்திச் சிற்பம் உள்ளது. வீரராசேந்திரன் வரலாற்று ஆய்வு  மையத்தினர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது, முள் மரங்களும் புதர்களும் சூழ்ந்து காடு போல் இருந்த இப்பகுதியில் கோயில் கட்டுமானங்களைக் கண்டறிந்துள்ளனர். மிகுந்த முயற்சி எடுத்துக் கோயில் பகுதியைச் சீராக்கி, ஊர் மக்களிடம் கோயிலின் பழமையைச் சுட்டிக்காட்டி அவர்களைக்கொண்டு சீரமைப்புப் பணிகளைச் செய்யவைத்துக் கோயிலைத் தற்போதுள்ள நிலைக்குக் கொணர்ந்திருக்கிறார்கள். சீரமைப்புப் பணியின்போது எழுத்துப் பொறிப்புகளுடன் கூடிய நந்திச் சிற்பம் தோண்டி எடுக்கப்பட்டது. அது போன்றே, எழுத்துபொறிப்புகளுடன் கூடிய ஒரு பழமையான அய்யனார் சிற்பமும் கண்டறியப்பட்டது. அய்யனாரின் சிற்பத்துடன் வேறு சில சிற்பங்களும் கிடைத்துள்ளன.

கருடகம்பம்

விளக்குத்தூண் கட்டுவித்தவர்

கோயிலின் அமைப்பு:
          கோயிலின் முன்புறத்தில் கருடகம்பம் என்னும் அமைப்பு உள்ளது. ஒரு சிறு மண்டபத்தின் நடுவிலிருந்து மேலெழும்பி நிற்கும் கல் தூணைக் கொங்குப்பகுதியில் ‘கருடகம்பம்’ என்று அழைக்கின்றனர். இது விளக்குத்தூணாகப் பயன்படுகிறது. உச்சியில் விளக்கேற்றப்படும். இக்கோயிலின் இந்த விளக்குத்தூண், மற்ற கோயில்களை ஒப்பிடும்போது  உயரம் மிகுதியாகத் தோற்றமளிக்கிறது. முப்பது அடிக்கும் மேல் உயரம் உடையது. வழக்கமாக விளக்குத்தூண்களில் தூணின் அடிச்சதுரப்பகுதியில் பிள்ளையார், சூலம், சிவலிங்கத்தின் மீது பால் சொரியும் பசு, முருகன் போன்றவைதாம் புடைப்புச் சிற்பங்களாக வடித்திருப்பார்கள். ஆனால், இத்தூணின் ஒரு சதுரப்பகுதியில், கூப்பிய கைகளுடன் ஆள் ஒருவருடைய சிற்பம் காணப்படுகிறது. தலையின் வலப்பக்கம் உள்ள கொண்டை, காதணிகள், முகத்தில் இருக்கும் பெரிய மீசை, இடுப்பளவில் நின்றுவிடுகின்ற ஆடைக்கட்டு, கழுத்திலும், கைகளிலும் காணப்படும் எளிய அணிகலன்கள் ஆகியவற்றைக் கொண்டு இச்சிற்பம் நாயக்கர் காலற்றது எனக்கணிக்கலாம். விளக்குத்தூண் கட்டுவித்தவர் உருவமே இது என்பதில் ஐயமில்லை. இவ்வமைப்பு மற்ற கோயில்களில் காணப்படுவதில்லை. மற்ற விளக்குத்தூண் அமைப்பில், அதன் மண்டபத்தூணின் அடிப்புறத்தில் மட்டுமே கட்டுவித்தவரின் உருவச் சிலை வடிக்கப்பட்டிருக்கும். 
கோயிலின் தோற்றம்-நுழைவு வாயிலிலிருந்து

கோயிலின் வேறு தோற்றம்-அதிட்டானமும், சுவர்க்கோட்டங்களும்

          விளக்குத் தூணைக்கடந்து நுழைவாயில். இது ஒரு கட்டுமானமல்ல. கோயிலின் முழு வளாகத்தையும் சுற்றிப் பெரிய கற்களை அடுக்கி அமைக்கப்பட்ட சுற்று மதிலின் இடைவெளியே நுழைவாயில். உள்ளே நுழைந்ததும் நடுவில் முதன்மைக் கோயிலான கருவறையும், அர்த்த மண்டபமும் சேர்ந்த கம்பத்தீசுவரர் கோயில். இறைவனின் பெயர், மாதேசிலிங்கம் என்னும் இன்னொரு பெயரையும் கொண்டுள்ளது. கோயில், கல் கட்டுமானம். கருவறையில் இலிங்கத்திருமேனி. ஜகதி, முப்பட்டைக்குமுதம், கண்டம், பட்டிகை, கண்டம், வேதி என்னும் அதிட்டானக்கூறுகளைக்கொண்ட அமைப்பு. கருவறைச் சுவரில் ஒரு கோட்டம் (கோஷ்டம்); அர்த்தமண்டபத்தில் ஒரு கோட்டம். சுவர்களில் அரைத் தூண்கள். அரைத்தூண்களின் கால்கள், அதிட்டானத்தின் முப்பட்டைக் குமுதம் வரையிலும் இறங்கியிருத்தலால், இக்கோயிலின் அதிட்டானம் ‘பாதபந்த’ அதிட்டான வகையைச் சேர்ந்தது என எளிதில் கணிக்க முடிந்தது. (கணிப்புக்கு உதவிய நூல் : முனைவர் அம்பை மணிவண்ணன் எழுதிய “கோயில் ஆய்வும் நெறிமுறைகளும்.”) கருவறை விமானம் ஒரு தளமுடைய திராவிட விமானம். அர்த்த மண்டபத்தின்  முன்புறம் நந்தி மண்டபம். அர்த்த மண்டபத்துக்கும் நந்தி மண்டபத்துக்கும் இடையில் தரையில் நம் இலக்கான எழுத்துப்பொறிப்புள்ள நந்திச் சிற்பம். கோயில் வளாகத்தில் வேறு இடத்திலிருந்து தோண்டியெடுக்கப்பட்டு இங்கு வைக்கப்பட்டுள்ளது.

கோயிலின் உட்புறத்தோற்றம்

          கம்பத்தீசுவரர் கருவறைக்கு இடப்பக்கம் இறைவியின் சன்னதி. மங்களாம்பிகை என்பது இறைவியின் பெயர். வளாகத்தில், முருகன், பிள்ளையார், காலபைரவர் ஆகியோருக்குத் தனியே சிறு சிறு சன்னதிகள்.

எழுத்துடை நந்தி:

நந்திச் சிற்பம் -  எழுத்து புலப்படா நிலையில்

நந்திச் சிற்பம் -  எழுத்துடன்

          எழுத்துடை நந்திச் சிற்பம் அழகானது. மிகுதியான வேலைப்பாடுகள் இல்லை. கழுத்தில் மணி இணைத்த ஓர் அணிகலன் புலப்படுகிறது. சிறிய திமிலும், குறுங்கொம்புகளும் உள்ளன. தலையைக் கவிழ்த்துப் புன்னகை பூக்கும் இந்தத் தோற்றம் இப்பகுதியில் வேறெங்கும் காண்பதற்கில்லை. நந்தியின் பின் முதுகில் வால் பக்கத்திலிருந்து தொடங்கி, மடித்த பின்னங்காலுக்கு மேற்புறமுள்ள தொடைப்பகுதி வரையிலான பரப்பில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. முதல் பார்வைக்கு எழுத்துகள் புலப்படவில்லை. மாவு பூசிய பின்னரே எழுத்துகள் புலப்பட்டன. எட்டு வரிகளில் எழுதப்பட்ட கல்வெட்டின் பாடம் கீழ் வருமாறு:

கல்வெட்டின் பாடம்
1    ஸ்வஸ்திஸ்ரீ
2    பெரும்பால
3    (*) றிச்சல்லி
4    ருக்கு[ம்]  பிராம
5    ணந் தேவ
6    நக்கனாந
7    காமிண்ட
8       நே[ன்]

விளக்கம்:
          மேற்குறித்த வரலாற்று ஆய்வு மையத்தினர், தொல்லியல் துறை முன்னாள் துணை இயக்குநரான முனைவர் பூங்குன்றன் அவர்களைக் கொண்டு கல்வெட்டினைப் படிக்கச் செய்து நாளிதழ்களில் செய்தி வெளியிட்டுள்ளனர்.  பெரும்பாலகுறிச்சல்லியைச் சேர்ந்த காமிண்டன் தேவ நக்கனேன் என்பவரால் இந்த எழுத்துடை நந்தி எடுப்பிக்கப்பட்டது என்பது செய்தி. இந்த தேவ நக்கன் இப்பகுதியை ஆண்ட அதிகாரி என்பதாகவும், அவருடைய  கால்நடையோ அல்லது அந்தக் கிராமத்திலுள்ள கால்நடைகளோ நோய்வாய்ப்பட்டபோது அந்த நோய் குணமானதும் அதற்கு உருவாரமாகச் செய்து வைத்ததாக இருக்கலாம்; இந்த நடைமுறை இன்றும் கொங்குப்பகுதியில் நீடிக்கிறது என்பதாகவும் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

          கல்வெட்டுப்பாடத்தில், மூன்றாம் வரியில், முதல் எழுத்துக்குத் தலைமாறாக (பதிலாக) அடைப்புக்குறிக்குள் உடுக்குறியைக் (ASTERISK MARK) காட்டியுள்ளேன். அதாவது, நான் படிக்கையில் இந்த எழுத்து, தெளிவாகத் தெரியவில்லை. இன்ன எழுத்தாக இருக்கலாம் என்று யூகம் செய்யவும் இயலவில்லை. பூங்குன்றன் அவர்கள் இந்த எழுத்தை “கு” எனப்படித்துள்ளார். அவ்வாறெனின், ஊர்ப்பெயர் “பெரும்பால குறிச்சல்” என்றாகும். கல்வெட்டின் தொடர் “பெரும்பால குறிச்சல்லிருக்கு(ம்)”  என்றாகும். நாளிதழில் செய்தியாளர் எழுதும்போது, “பெரும்பால குறிச்சல்லியைச் சேர்ந்த” என்று இரண்டாம் வேற்றுமை உருபைச் சேர்த்து எழுதியதால், ஊர்ப்பெயர் “பெரும்பால குறிச்சல்லி”  என்றாகும். இவ்வாறு, ஊர்ப்பெயரில் மாற்றம் அல்லது பாட பேதம் ஏற்படும்.  கொங்குப்பகுதியில், ‘குறிச்சி”  என்னும் பெயர் கொண்ட ஊர்கள் மிகுதியாக உள்ள போக்கினை எண்ணுகையில், கல்வெட்டில் காணப்பெறும் ஊர், “பெரும்பால குறிச்சி” என்பதாக அமையக்கூடும் என்றும் கல்வெட்டில் பிழையாக எழுதப்பட்டுள்ளது என்றும் கொள்ளலாம். கல்வெட்டை நேரில் படித்துப் பாடத்தை எழுதிக்கொண்டிருக்கையில், மேற்சொன்ன இரண்டாம் வரி-முதல் எழுத்து “எ”  என்பதாக இருக்கலாம் என மீள் சிந்தனையில் தோன்றியது. அவ்வாறெனில், ஊர்ப்பெயர் “பெரும்பால (எ)றிச்சல்”  என்றாகும். “எறிச்சல்”, “எரிச்சல்”  ஆகிய பெயர்கள் கொண்ட ஊர்களும் கொங்குப்பகுதியில் பரவலாக இருப்பதைக் காணலாம். செலக்கெரிச்சல், வள்ளியெறிச்சல், நெருப்பெரிச்சல் போன்ற ஊர்ப்பெயர்களைச் சான்றாகக் குறிப்பிடலாம். காட்டின் ஒரு சிறு பகுதியை எரித்துப் பண்படுத்தி விளைநிலமாக்கிய ஊர்ப்பகுதியே எரிச்சல் என்னும் பெயரால் வழங்கியது. கல்வெட்டு அமைந்துள்ள இந்த சின்னாரியபட்டியை அடுத்துள்ள ஊரே “முதியானெரிச்சல்”  என்று மேலே அவ்வூரின் நீலியம்மன் கோயிலைப் பற்றிக் குறிப்பிடுகையில் பார்த்தோம். எனவே, கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் ஊரின் பெயரைப் “பெரும்பால எறிச்சல்”  எனக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. கோயில் அமைந்திருக்கும் பகுதி பழங்காலத்தில் பெருமளவு பெரும்பூளைச் செடிகள் நிறைந்ததாய் இருக்கவேண்டும் என்று கருதுமாறு தற்போதும் செடிகள் உள்ளன. கல்வெட்டில் உள்ள சொல்லைப் ”பெரும்பால எறிச்சல்’  என்று கொண்டால் அதனைப் பெரும்பூளைச் செடிகள் நிறைந்த காட்டுப்பகுதியோடு தொடர்புப் படுத்திப்பார்க்கவும் வாய்ப்புள்ளது. 

பெரும்பூளைச் செடி

          அடுத்து, கல்வெட்டுப்பாடத்தின் நான்காம் வரியில், “ம்” எழுத்தையும் அடைப்புக்குறிக்குள் காட்டியுள்ளேன். இம்முறை அடைப்புக்குறி – சதுரக் கோட்டினால் அமைந்தது – மாறியுள்ளது. இந்தக் குறியைத் தொல்லியல் துறையின் நூல்களில் பயன்படுத்துகையில், கல்வெட்டில் இக்குறிக்குள் காட்டப்பெறும் எழுத்து, கல்வெட்டில் பொறிக்கப்படவில்லை என்பதற்காகவும், ஆனால் கல்வெட்டின் பொருள் வெளிப்படும் வகையில் நிரப்பப்படும் எழுத்து என்பதற்காகவும் கையாண்டுள்ளதைக் காணலாம்.

          அடுத்து, கல்வெட்டின் இறுதி வரியில், அடைப்புக்குறிக்குள் காட்டியுள்ள “ன்” எழுத்து, பிறை வடிவ அடைப்புக்குறிக்குள் உள்ளது. இவ்வகை அடைப்புக்குறி, கல்வெட்டில் எழுத்து உள்ளது என்பதையும், ஆனால் எழுத்து இன்னதென்று அறுதியாகத் தெரியவில்லை என்பதையும், யூகமாகக் காட்டப்பெற்றுள்ளது என்பதையும் சுட்டி நிற்கும்.

          மேற்சொன்னவை, கல்வெட்டுகளைப் படிக்கையில், சரியாகப் பொருள் கொள்ளும் ஆய்வு முயற்சிக்குத் துணை புரியும். நாளிதழ்ச் செய்தியாளர், நந்திச் சிற்பத்தைச் செய்வித்தவர் “தேவநக்கனேன்”  என்று குறிப்பிட்டுள்ளார். தேவ நக்கன் என்பதுதான் சரியான பெயராக அமையும். நக்கனேன் என்பது இலக்கண அமைப்பில் தன்மை இடத்தைக் குறிக்கும். கல்வெட்டுகளில் இவ்வாறு தன்மைச் சுட்டு, பெருமளவில்  பயில்வதைக் காணலாம்.

“பாண்டி மண்டலத்து திருக்கானப்பேற்றில் காளை பெருமாளான அதளையூர் நாடாள்வானேன்”   (அவிநாசிக் கல்வெட்டு 786/2003)

”தெரிந்த கைக்கோள சேநாபதிகளிற் தனபால ராயநேந்”  (அன்னூர்க் கல்வெட்டு 816/2003)

          தவிர, நாளிதழ்ச் செய்தியாளர், ”காமிண்டன் தேவ நக்கனேன்” என எழுதியுள்ளார். இது பிழை. கல்வெட்டில் “தேவ நக்கனாந காமிண்டநே(ன்)” என்றுள்ளதால், அவருடைய இயற்பெயர் தேவ நக்கன் என்பதும், காமிண்டன் அவருடைய அதிகார நிலை குறித்த சிறப்புப் பெயர் என்பதும் பெறப்படும்.  காமிண்டன் என்பது இடைக்காலத்துக் கல்வெட்டுகளில் காணப்படும் ஒரு பெயராகும். தலைமைப் பொறுப்பில் உள்ளவரைக் குறிக்கும் ஒரு சொல். ஊர்த்தலைவர், ஒரு சிரு பகுதியின் ஆட்சித் தலைமை பெற்றவர் என்பதைக் குறிக்க இப்பெயர் வழக்கில் இருந்தது. கருநாடகக் கல்வெட்டுகளிலும் இச்சொல் மிகுதியாகப் பயில்வதைக் காண்கிறோம். “காமுண்டன்”  என்பது இப்பெயரின் இன்னொரு வடிவம்.  காலப்போக்கில், கருநாடகத்தில் இப்பெயர் “கவுட(ர்)” எனவும், தமிழகத்தில் “கவுண்டன்”  எனவும் மருவி வழங்குகிறது. கல்வெட்டில், “பிராமணந் தேவநக்கனாந காமிண்டநே(ன்)”  என்றிருப்பதால், இந்த தேவ நக்கன் ஒரு பிராமணர் என்பதும் ஊர்த்தலைவராய் இருந்தவர் என்றும் கருதலாம். கல்வெட்டின் எழுத்தமைதியின் அடிப்படையில், இது கி.பி. 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனலாம்.

பத்துக்குடி ஓதாளர் பணி:
          கம்பத்தீசுவரர் கோயில், இப்பகுதியில் இருக்கும் கண்டியன் கோயிலைத் தாய்க்கோயிலாகக் கொண்டு, ஓதாளர் குலத்துப் பத்துக்குடியினரால் கட்டப்பெற்றது என்று ஒரு வழக்காறு உள்ளது. அதற்கேற்ப, நந்தி மண்டபத்தின் அடிப்பகுதியில் பத்துக்குடி ஓதாளரையும் அவர்களின் தலைவரையும் புடைப்புருவங்களாகச் செதுக்கியிருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர்.

பத்துக்குடி ஓதாளரும் தலைவரும்

கோயிலின் புத்தாக்கம்:
          கம்பத்தீசுவரர் கோயில், அதன் பழமையான கட்டுமானத்தோடு பேணுவாரின்றி, வழிபாடின்றிப் புதர் சூழ்ந்த நிலையில் இருந்த நிலையில், திருப்பூரில் இயங்கிவரும் வீரராசேந்திரன் வரலாற்று ஆய்வு மையத்தினரின் முயற்சியால், திருப்பூரில் இயங்கிவரும் உழவாரப்படை அமைப்பினரின் உதவிகொண்டும், ஊராரின் உதவிகொண்டும் புத்தாக்கம் பெற்றுள்ளது.  தற்போது பூசையாளர் ஒருவரைப் பணியில் அமர்த்தியுள்ளனர்.

கோயிலின் புறக்கணிக்கப்பட்ட பழைய தோற்றம்



கோயிலின் புதுத்தோற்றம்

அய்யனார் சிற்பமும் கல்வெட்டும்:
          கம்பத்தீசுவரர் கோயிலுக்கு வெளியே ஒரு தொல்லியல் எச்சமான அய்யனார் சிற்பம் ஒன்றுள்ளது என்றும், அச்சிற்பத்தின் பின்புறம் எழுத்துப் பொறிப்பு உள்ளது என்றும் நண்பர் கூறி அங்கு அழைத்துப்போனார். கோயிலுக்கருகிலேயே ஒரு சுனைக்குளமும் அதனை ஒட்டிய மேடும் காணப்பட்டன. மேட்டின் மீது சில சிற்பங்கள் உடைந்த உறுப்புகளோடு காணப்பட்டன. இரு பெண் தெய்வச் சிற்பங்கள், ஒரு நந்தி, ஒரு சிவலிங்கப்பீடம், ஓரிரு நாகச் சிற்பங்கள் ஆகியவற்றுக்கிடையில் ஒரு பெரிய அய்யனார் சிற்பமும் இருந்தது. மேற்படி வரலாற்று ஆய்வு மையத்தினர் நாளிதழில் தெரிவித்தவாறு அய்யனார் சிற்பம் மூன்றேகால் அடி நீளமும், இரண்டரை அடி உயரமும் உடையது. பலகைக் கல்லில் வடிக்கப்பட்ட சிற்பம். மையத்தில்  அய்யனார் சிற்பம் பெரிய உருவில். அவரின் இரு புறமும் பூரணை, புஷ்கலை இருவரின் உருவங்கள் சிறிய வடிவில். மேற்புறத்தில் சிறிய வடிவில் சாமரம் வீசும் பெண்ணுருவம். அய்யனாரின் சிற்பம் அழகாக வடிக்கப்பட்டுள்ளது. இடக்காலைக் குத்திட்டு வைத்தும், வலக்காலைத் தொங்கவிட்டும் உத்குடி ஆசனத்தில் அமர்ந்துள்ளார். தலையில் சடை முடி, “ஜடாமண்டலம்”  என்னும் சிற்பக்கலைக்கூற்று வடிவத்தில் உள்ளது. இடக்கையைக் குத்திட்ட காலின் முழங்காலின் மீது படியவிட்டு, விரல்களும் உள்ளங்கையும் தரையை நோக்கித் தளர்ந்து தொங்கிய நிலையில் வைத்திருக்கிறார். சிற்பக்கலை இலக்கணத்தில் இந்த அமைப்பைத் ”தண்ட ஹஸ்தம்” என்பர். “கஜஹஸ்தம்”  என்னும் இலக்கணமும் பொருந்துவதாகக் கொள்ளலாம். வலக்கை முன்கை மடிந்த நிலையில் செண்டு என்னும் ஆயுதத்தை ஏந்தியுள்ளது. முகத்தில் மூக்குப்பகுதி உடைந்திருக்கின்றது. செவிகளில் தடித்த குண்டலங்கள். கழுத்தில் மூன்றடுக்குகளாக அணிகலன்கள். இடது தோளிலிருந்து இறங்கி இடைப்பகுதி வரை வந்து பின்புறமாகத் திரும்பும் முப்புரி நூல். இடையில் உதரபந்தம் என்னும் அணி. இடையில் அணிந்திருக்கும் ஆடைக்கட்டு, அமர்ந்திருக்கும் பீடத்தில் தொங்கலாகத் தாழ்ந்துள்ளது. இடையாடையின் மீதும் இரு அணிகலன்கள்; ஒன்றில் பதக்கமும் உள்ளது. தோள்களிலும், முன்கைகளிலும் வளைகள். கால்களில், சிலம்பை ஒத்த கழல்கள். பீடத்தின் கீழே, பன்றி உருவமும், அதன் பின்னால் நாய் உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. அய்யனார் சிற்பம், சடை மண்டலத்தை ஒட்டி மேலிருந்து கீழாக முழுதும் உடைந்து விரிசல் கண்டுள்ளது. உடைந்த விரிசல் பகுதியில் சிமெண்ட்டுப் போன்ற பூச்சு கொண்டு ஒட்டவைத்திருக்கிறார்கள். இடக்கையின் தோளருகே கல்லின் துண்டம் உடைந்து விழுந்துள்ளது. அய்யனார் சிற்பத்தின் அருகிலேயே இப்பகுதியில் கிடைத்த முதுமக்கள் தாழி ஒன்றையும் வைத்திருக்கிறார்கள். சின்ன ஆரியபட்டிக்கருகில் பெருங்கற்கால வாழ்விடப்பகுதியும் (சாம்பல் மேடு என்று கிராமத்தில் குறிப்பிடுவர்) உள்ளது என நண்பர் தெரிவித்தார்.

சுனைக்குளம்


அய்யனார் சிற்பம் உள்ள மேடு


அய்யனார் சிற்பம் - அண்மைத்தோற்றம்


பெருங்கற்கால முதுமக்கள் தாழி

அய்யனார் பற்றி:
          தொல்லியல் அறிஞர் பூங்குன்றன் அவர்களிடம் பல்வேறு சமயங்களில் அய்யனார் பற்றிக் கேள்விகள் கேட்டு அவர் கூறிய பல்வேறு செய்திகளை நினவிலிருந்து மீட்டு நோக்குகிறேன். அய்யனார், நாட்டார் வழக்காற்றில் வணங்கப்படும் சிறு தெய்வங்களுள் ஒருவர். தொன்மைக் காலத்தில், இனக்குழு, அதைத் தொடர்ந்த பழங்குடி ஆகிய சமூக நிலைகளில் குழு அல்லது குடித் தலைவர் ஒருவரை, அவர் இறந்த பின்னர் வழிபடுகின்ற மரபில் அய்யனார் வழிபாட்டையும் சேர்க்கலாம். பல்வேறு குழுக்களும் பல்வேறு குடிகளும் தமக்கென ஓர் அய்யனாரை வழிபட்டு வந்திருக்கின்றனர். அய்யனார் ஒரு பொதுச் சொல். ”ஐயன்”  என்னும் சொல் குறிக்கும் தலைவன் என்னும் பொருளில் வணங்கப்படுபவரே அய்யனார். தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் அய்யனார் வழிபாடு இருந்துவருகின்றது. குறிப்பிட்ட சாரார் வணங்கும் கடவுளாக அய்யனாரைக் கருதவியலாது. வேட்டுவக் குடிகள் வணங்கிய அய்யனார் பெருமளவில் காணப்படுகிறார். அய்யனார் சிற்பங்களில் காணப்பெறும் நாய் உருவம் வேட்டைக் குடிகளோடு தொடர்புடையது. மேலே, சின்ன ஆரியபட்டியில் உள்ள அய்யனார் சிற்பமும் வேட்டைக்குடியினரின் தெய்வமாகவே கொள்ளவேண்டும். வேட்டைத்தலைவனின் வேட்டை நிகழ்வுகளில் நாய் தவிர்க்க இயலாத ஓர் அங்கம். சின்ன ஆரியபட்டியில் நாம் காணும் பன்றியின் உருவம், வேட்டைப் பொருள் என்னும் அடிப்படையில் செதுக்கப்பட்டிருக்கவேண்டும். சில அய்யனார் சிற்பங்களோடு குதிரை இணைந்திருக்கும். சிலவற்றில் யானை உருவம் தொடர்பு படுத்தப்பெறும். இவையெல்லாம், தொடக்ககால அய்யனாரைப் பெருஞ்சமயத்தார் தம் சமயத்துள் இணைத்துக்கொள்ளும் முயற்சியில் காலப்போக்கில் ஏற்பட்டவை. குதிரையைச் சமணத்தாரும்(ஜைனரும்), யானையைப் பௌத்தரும் இணைத்துக்கொண்டார்கள் என்பர். பழங்குடிகளைப் பெருஞ்சமயத்தார் தம்முடன் இணைத்துக்கொள்ளும்போது அப்பழங்குடிகளின் தெய்வங்களையும் இணைத்து அவர்களைத் தக்கவைக்கும் முயற்சியின் வெளிப்பாடுகளே இவை. அய்யனாருக்கு இரு மனைவியரைப் புனைந்தாக்கியது பிற்காலத்திய சமய, பண்பாட்டு மாற்றங்களின் விளைவு எனலாம். ஆங்காங்கே, பெருவழிகளை ஒட்டி அமைந்திருந்த அய்யனார் கோயில்களில் அய்யனாரை வழிபட்ட வணிக மக்களும், அய்யனாரை அவர்களுக்கான தெய்வமாக்கினர் எனலாம். தொடக்கம் இதுதான் என்றோ, அய்யனார் இன்னாருக்குரியர் என்றோ வரையறைக்குள் கொணரவியலாப் பரவலாக வழிபடுகின்ற தெய்வமே அய்யனார். அவர் ஒரு காவல் தெய்வம் என்ற கருத்து நிலைத்துள்ளது. கால்நடைச் சமுதாயத்தில் நிரை கவர்தல், நிரை மீட்டல் ஆகிய நிகழ்வுகளின் போதும் அய்யனார் வழிபாடு இணைந்துள்ளது என்று கருதலாம். அது போன்ற ஒரு நடுகல் சிற்பக்கல்வெட்டில் - ஈரோடு மாவட்டம் ஈங்கூரில் இருந்த இச்சிற்பம் தற்போது ஈரோடு கலைமகள் பள்ளி அருங்காட்சியகத்தில் உள்ளது - ஐயன் குறிக்கப்பெறுவதை காண்கிறோம். காங்கயம் பகுதியில் – முல்லை நிலப் பண்பாடு நிலவிய பகுதி – பத்தாம் நூற்றாண்டளவிலான அய்யனார் சிற்பங்கள் நிறையக் கிடைத்துள்ளன. தஞ்சைப் பகுதியில், சுனாம்பேடு என்னும் ஊரின் குளக்கரையில் கிடைத்த அய்யனார் சிற்பமே காலத்தால் முற்பட்டது. இந்த அய்யனார் சிற்பத்தில், நாயின் உருவத்தோடு சேவலின் உருவமும் உள்ளது.

எகிப்து மம்மியில் செண்டு:
          அய்யனார், தம் கையில் செண்டு என்னும் ஓர் ஆயுதம் தாங்கியிருப்பார். இது ஒரு நீள்தண்டும், தண்டின் உச்சிப்பகுதியில் சுருள் வடிவில் சாட்டை என்று சொல்லத்தக்க ஓர் அமைப்பும் கொண்ட ஓர் ஆயுதம்.  இது அய்யனாருக்கே உரியது என்பது போல, வேறு கடவுளர் உருவங்களில் காணப்படாத ஒன்று. ஒரு சிற்றரசன் அல்லது குறுந்தலைவன் என்னும் நிலையின் குறியீடாகவே இதைக்கொள்ளவேண்டும். இந்தச் செண்டாயுதம், எகிப்திய அரசன் ஒருவனுடைய கல்லறையில் சவப்பெட்டியிலும் காணப்படுவது வியப்பை அளிக்கும் செய்தி. இது பொன்னால் செய்யப்பட்ட ஒன்று. அரசனுக்குரியதோர் ஆயுதம் என்பதுதான் பொதுக் கருத்து.

அய்யனார் சிற்பத்தின் பின்புறம்:
          சின்ன ஆரியப்பட்டி அய்யனார் சிற்பத்தின் பின்புறத்தில், மூன்று வரிகளில் பொறிக்கப்பட்ட எழுத்துகள் காணப்படுகின்றன. அதன் பாடம் கீழ் வருமாறு:

அய்யனார் சிற்பக் கல்வெட்டுப் பாடம்:
1    இராசிங்க பல்ல(வரை)
2    யந் ஏறினபோது (*)
3    நேன் வேட்கோ

          இக்கல்வெட்டில், ”ஸ்வஸ்திஸ்ரீ”  என்னும் மரபுத்தொடர் கூடக் காணப்படவில்லை. இராசிங்க பல்லவரையன் என்னும் உள்ளூர்த் தலைவன் அல்லது ஓர் அரச அதிகாரி, இப்பகுதியின் அதிகாரப் பதவியில் அமர்ந்தபோது, இச்சிற்பம் செய்விக்கப்பட்டது என்று பொருள் கொள்ளலாம். தென்னவதரையன், பல்லவதரையன் (பல்லவரையன்) என்பன அரசனின் கீழுள்ள அதிகாரிகளின் பெயர்களாக வருவதைக் கல்வெட்டுகளில் காண்கிறோம். சிற்பத்தைச் செய்வித்தவனின் பெயர் காணப்படவில்லை. பெயருக்குப் பின்னால் இன்னானேன் என்று குறிப்பிட வரும் “நேன்”  என்னும் ஒட்டுச் சொல் மட்டிலும் உள்ளது. ஆனால், அதனை அடுத்து “வேட்கோ” என்னும் ஒற்றைச் சொல் உள்ளது. இது செய்வித்தான் வேட்கோ என்னும் குயவர் குடியைச் சேர்ந்தவன் என்னும் பொருள் தருகின்றது. வேறு விரிவான விளக்கங்கள் பெறப்படவில்லை. இக்கல்வெட்டிலும், மேலே குறிப்பிட்ட நந்திச் சிற்பக்கல்வெட்டிலும் அரசர் பற்றிய குறிப்பு இன்மையால், கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் கொங்குச் சோழர் ஆட்சி முடிவின்போது – பாண்டியர் ஆட்சி அமையுமுன்னர் – ஏற்பட்ட அரசரில்லாச் சூழ்நிலையின்போது இக்கல்வெட்டுகள் வெட்டப்பட்டிருக்கக்கூடும் என்று கருதலாம்.
நந்தியின் பின்புறம் - கல்வெட்டு

முடிவுரை:
          கோவை, திருப்பூர் ஆகிய கொங்குப்பகுதியில், நாட்டுப்புறங்களில் உட்கிடையாய் அமைந்த சின்னச் சின்ன ஊர்களில் மிகுதியும் வெளிப்படாத பல வரலாற்றுச் சின்னங்களும், கல்வெட்டுகளும் இன்னும் காணக் கிடைக்கின்றன என்பது கொங்குப்பகுதியின் வரலாற்றுப்பழமைக்குச் சான்று பகர்வதாகும். ஆங்காங்கே, பரவலாகத் தொடர்ந்து கண்டறியப்படும் அய்யனார் சிற்பங்களும், கொற்றவைச் சிற்பங்களும் கொங்குப்பகுதியின் நாட்டார் பண்பாடு  மற்றும் வழிபாட்டுத் தொன்மையை எடுத்துக்கூறுவனவாய் உள்ளன என்பதில் ஐயமில்லை.



நன்றி :  திரு.பூங்குன்றன், தொல்லியல் அறிஞர் அவர்களுக்கு.




___________________________________________________________
தொடர்பு: து.சுந்தரம்
doraisundaram18@gmail.com
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.அலைபேசி :  9444939156.